Wednesday, March 21, 2012

நடை வண்டிகள் - 9

Posted by பால கணேஷ் Wednesday, March 21, 2012

PKPயும் நானும் - 1

PKP என்று சுருக்கமாக, அன்பாக வாசகர்களால் அழைக்கப்படும் திரு.பட்டுக்கோட்டை பிரபாகருக்கு நான் இதுவரையில் ஒரு வாசகர் கடிதம் கூட எழுதியதில்லை. மாத நாவல்கள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலத்தில், வித்தியாசமான அவரது வர்ணனை நடையாலும், பரத்-சுசிலா கேரக்டர்களி்ன் வார்ப்பினாலும் ஈர்க்கப்பட்டு தொடர்ந்து அவரது எல்லாப் படைப்புகளையும் படித்துக் கொண்டிருந்தேன். ஆனாலும் ஏனோ சுபாவிற்கும், ராஜேஷ்குமாருக்கும் எழுதியது போல அவருக்கு வாசகர் கடிதம் எழுதும் எண்ணம் வரவில்லை.

பின்னாளில் சென்னையில் வசிக்கத் தொடங்கிய பிறகு சுபாவின் வீட்டுக்குச் சென்று வரும் சமயங்களில் ஒன்றிரண்டு முறை அவர் என்னை எதிர்ப்பட்டுக் கடந்து சென்றதுண்டு. ஒரு புன்னகையுடன் கடந்து சென்று விடுவேன். பேசத் தோன்றியதில்லை. (கடிதம் எழுதியிருக்கலாம், முன்பே பேசியிருக்கலாம் என்ற எண்ணங்களெல்லாம் பின்னர் தோன்றின.) சுபாவின் சிறுகதைகளை டைப் செய்யும் பணியில் இருந்தபோது என் நண்பன் ஸ்ரீதரன் PKPயி்ன் தீவிர வாசகன் என்பதால் அவன் அவரைச் சந்திக்க விரும்பியதால், அவனுடன் சென்று முதல் முறையாக அவரைச் சந்தித்தேன்.

அந்த முதல் சந்திப்பில் குறிப்பிடத்தக்க விசேஷம் எதுவுமில்லை. சுபாவின் நண்பன் நான் என்பதை அறிந்திருந்த அவரிடம் என்னைப் பற்றிய சுருக்கமான சுய அறிமுகம் செய்து கொண்டு, நண்பனை அறிமுகம் செய்து வைத்தேன். அவரது படைப்புகள் குறித்து சற்று நேரம் பேசினோம். அவரது ‘கனவுகள் இலவசம்’ நாவல் எனக்குப் பிடித்த நாவல் என்று ஸ்லாகித்துப் பேசியதால் அதை ஆட்டோகிராஃபிட்டு எனக்கு அன்பளித்தார். அப்போதுதான் அவர் ‘ரம்யாப்ரியா க்ரியேஷன்ஸ்’ என்று ஒரு பதிப்பகம் துவங்கி அவரது ‘கனவுகள் இலவசம்’, ‘பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்’ நாவல்களை பதிப்பித்திருக்கிறார் என்ற புதிய தகவலை அறிந்து கொள்ள முடிந்தது. மகிழ்வுடன் விடைபெற்றுக் கிளம்பினோம்.

சுபா வீட்டுக்குச் செல்லும்போது அவ்வப்போது அவரைப் பார்த்ததுண்டு என்று சொன்னேனில்லையா... அப்படியிருந்த நாட்களில் ‘குங்குமம்’ பத்திரிகையில் ‘கோமாளி’ என்று ஒரு சிறுகதை எழுதியிருந்தார் அவர். அதன் கதைக் கருவும் அவர் கையாண்டிருந்த விதமும் அசத்திவிட்டது என்னை. உடனே தொலைபேசியில் அழைத்து பத்து நிமிடங்கள் பாராட்டிப் பேசினேன். ‘டச்ல இருங்க’ என்றார் அவர். ஆனால் நான் அப்படி இருக்கவில்லை. பழையபடி என் வேலை உண்டு, சுபா உண்டு என்றுதான் இருந்தேன். அதற்குப் பின் ஒன்றரை மாதம் கழித்து, ‘ஆனந்த விகடன்’ இதழில் ‘ஒரு ஊரில் நான்’ என்ற அவரது சிறுகதையைப் படித்ததும் மீண்டும் பிரமிப்பு. ஒரு எளிமையான கதைக் கருவை எடுத்துக் கொண்டு, மிகமிக வித்தியாசமான ஸ்டைலில் சொல்லியிருந்தார். உடனே ‘ஆத்மா ஹவுஸ்’ ஓடினேன்.

நான் சென்ற நேரம் வெளியே கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தார். ஓடிச் சென்று, ‘‘கை கொடுங்க ஸார்’’ என்று கேட்டு கை குலுக்கினேன். ‘‘ஸார்! ஓவியங்கள்ல அழகான ஓவியங்கள், மாடர்ன் ஆர்ட் ஓவியங்கள்ன்னு ரெண்டு டைப் பாத்திருக்கேன். மாடர்ன் ஆர்ட் ஓவியங்கள் எதையோ உணர்த்தி நம்மை சிந்திக்க வைக்கும். அந்த மாதிரி சிறுகதைகள்ல ‘மாடர்ன் ஆர்ட் சிறுகதை’ன்னு ஒண்ணை இப்பத்தான் பாக்கறேன்...’’ என்று துவங்கி ‘ஒரு ஊரில் நான்’ சிறுகதையை பாராட்டினேன். சுருக்கமாகத்தான். அவர் வெளியே கிளம்பிக் கொண்டிருந்த அந்த அவசரத்திலும் மிக மகிழ்வுடன் என் பாராட்டுக்களை ஏற்றுக் கொண்டார். ‘‘சுபாவுக்கு டிடிபி பண்றதா சொன்னீங்க இல்ல...’’ என்றார். ‘‘ஆமாம் ஸார்... உங்க கூடவும் ஒர்க் பண்ண ஆசை...’’ என்றேன். ‘‘உங்களை எப்படி பயன்படுத்திக்கறதுன்னு நான் ப்ளான் பண்ணிட்டுச் சொல்றேன்...’’ என்றுவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

நான் அதன்பின் அதைப் பற்றி நினைக்காமல் என்‌ வேலை‌களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் PKP வீணாய் வார்த்தைகளை வீசுபவரல்ல என்பது அவருடன் நன்கு பழகிய பின்னால்தான் எனக்குத் தெரிந்தது. அவர் என்னிடம் ‌சொன்னதை மறக்காமல் சுமார் இரண்டு மாதங்கள் கழித்து அழைத்தார். ‘ரம்யாப்ரியா க்ரியேஷன்ஸ்’ சார்பாக மேலும் நான்கு புத்தகங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகச் சொல்லி அதற்கான வேலைகளைத் துவங்கச் சொன்னார். அவர் செலக்ட் செய்து கொடுத்த கதைகளை வாங்கி வந்து டைப் செய்து ப்ரிண்ட் அவுட் தர, அவரது உதவியாளர்கள் படித்து, பிழை திருத்தி மீண்டும் என்னிடம் தர, பிழைகள் நீக்கிக் கொண்டிருந்தேன்.

புத்தக வடிவமைப்புக்காக அவருடன் பணி செய்தபோதுதான் அவருக்குள் ஒரு ரசனை மிகுந்த வடிவமைப்புக் கலைஞனும் இருப்பது தெரிந்தது எனக்கு. நான் அழகாய் செய்ததை தன் யோசனைகளால் மிக அழகாக்கினார் அவர். எல்லாம் முடிந்து அவர் ஓ.கே. சொன்ன பிறகு, ‘‘நாளைக்கு காலையில இதை ப்ரிண்ட் அவுட் போட்டுக் குடுத்துடுங்க. எப்பத் தருவீங்க?’’ என்றார். நான் பிரிண்ட் போடும் கடை பத்து மணிக்குத்தான் திறப்பார்கள் என்பதால் ‘‘பத்தரை மணிக்கு தந்துடறேன் ஸார்...’’ என்று விட்டு விடைபெற்றேன்.

பி.கே.பி. அவர்களிடமிருந்து நான் கற்றதும் பெற்றதும் மிக அதிகம். மறுதினம் காலையில் நான் சொன்ன நேரத்தில் அவரைச் சந்தித்து ப்ரிண்ட் அவுட்டைத் தர இயலாமல் போயிற்று. அப்போதுதான் அவரிடமிருந்து என்னை மேம்படுத்தும் முதல் விஷயத்தைக் கற்றுக் கொண்டேன். அதைப் பற்றி...

                                                                                                                   -தொடர்கிறேன்.

63 comments:

  1. Replies
    1. ரசித்துக் கருத்திட்டமைக்கு என் மனமார்ந்த நன்றி நண்பா!

      Delete
  2. கேட்கலாமா கூடாதா என்று சங்கடத்தோடு இருந்தேன். PKP என்றால் யாரென்ற மர்மத்தை விடுவித்தீர்கள்.. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா... கமெண்ட்டுன்னா இதான் கமெண்ட். பேஷ்... பேஷ்... ரொம்ப்ப நன்னாயிருக்கு. மிக ரஸித்தேன். தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  3. வணக்கம்! தொடருங்கள்! நானும் உங்களைத் தொடர்ந்து வருகின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் தொடரும் ஆதரவிற்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  4. அந்த இடம்தான் முக்கியம். சீக்கிரம் தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அதிகம் காக்க வைக்காமல் உடன் தொடர்ந்து விடுகிறேன். நன்றி ஸார்!

      Delete
  5. நான் சிறு வயதில் பார்த்து படித்து வியந்த அனைத்து எழுத்தாளர் களின் தொடர்பும் கொண்டு இருக்கிறீர்.வாழ்த்துகள்.இன்னும் வரும் அல்லவா....

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி. இன்னும் தொடர்கிறேன்...

      Delete
  6. அதிசய மனைதரை இந்தப் பதிவில் பார்க்கிறேன். உங்களைத்தான் சொல்கிறேன் கணேஷ். வெகு சுவாரஸ்யம்.

    ReplyDelete
  7. மன்னிக்கணும் மனிதரை என்று படிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. அதிசய மனிதன் இல்லம்மா... வாழ்க்கைப் பாதையில் அன்றாடம் நீங்கள் இடறுகிற சாதாரண மனிதர்களில் ஒருவன்தான். என்ன... நல்ல நட்புகள் கிடைக்கப் பெற்றதில் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி. அவ்வளவே! தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  8. வணக்கம் எப்படியிருக்கிறீர்கள்..ரொம்ப நாட்களாகிவிட்டது..கணிப்பொறி பக்கமே வர முடியாமல் போனது.பதிவுகளும் இடமுடியவில்லை. கருத்துரைகளும் இடமுடியவில்லை.சுபாவை போய் ப.கோ.பி வந்துட்டாரா? தவற விட்ட முந்தைய பதிவுளை கட்டாயம் வாசிக்கிறேன்..ப.கோ.பி யோடு தங்களது அனுபவங்கள வாசிக்க ஆவலாக இருக்கிறேன்..மீண்டும் நடை வண்டியில் ஏறிக் கொள்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் கவிஞரே... ஐ மிஸ்ட் யூ வெரிமச்! உங்களின் ‘உ.தி.பசியாறு’ பாதியில் நிற்கிறது. தொடருங்கள்... நடைவண்டிப் பயணத்தில் உங்களுக்கெனத் தனியிடம் உண்டே... எப்போ வேணுமானாலும் சேர்ந்து கொள்ளலாம். தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  9. நல்ல பகிர்வு நண்பரே.... நீங்கள் சந்தித்த எழுத்தாளர்களின் பட்டியல் பிரமிக்க வைக்கிறது.... அடுத்த பகுதிக்காய் ஆவலுடன்.....

    ReplyDelete
    Replies
    1. இன்னும் இரண்டு பேர் உண்டு. அவ்வளவே... ஆவலுடன் காத்திருக்கும் நண்பருக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  10. பிரமிக்க வைக்கிறீர்கள் ஃப்ரெண்ட்.கர்வமில்லாத உங்கள் குணம்தான் இத்தனை உயர்ந்த நட்புக்களைத் தேடித் தந்திருக்கிறது உங்களுக்கு!

    ReplyDelete
    Replies
    1. மகிழ வைத்த பாராட்டுக்கு மனம் நிறைந்த நன்றி!

      Delete
  11. நான் சிறுவயதில் எல்லா எழுத்தாளர்களின் எழுத்தை படித்து மகிழ்ந்ததுண்டு. ஆனால் உங்களின் மூலம் அவர்களின் மறுபக்கத்தை பார்க்க முடிகிறது. அதுவும் தென்றலாக வரும் உங்கள் எழுத்து நடையில் படிக்க மிக இன்ரெஸ்டிங்காக இருக்கிறது..தொடருங்கள்.


    உங்களிடம் பழகும் போது மிக கவனமாக பார்த்து பழக வேண்டும் காரணம் வருங்காலத்தில் MTG(MaduraiTamilGuy)யும் நானும் என்று எழுத்தாளர்களை ப்ற்றி எழுதிய நீங்கள் இந்த பதிவாளர்களை பற்றியும் எழுத தொடங்குவிர்கள் என்பதால்தான்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்பவே சரியாச் சொன்னீங்க... நான் பழகற சில பதிவர்களைப் பத்திக்கூட சில காலம் கழிச்சு எழுதலாம்- அவங்க கிட்ட கத்து்க்கிட்ட நல்ல விஷயங்களையும், பாஸிட்டிவ் பக்கங்களையும். அதனால... Be Happy! நன்றி!

      Delete
  12. Replies
    1. எனக்காக காத்திருக்கும் தங்களின் அன்புக்கு இதயம் நிறை நன்றி!

      Delete
  13. கற்றதை பெற்றதை அனைவரும் அறிந்துகொள்ளும்படியாக
    மிக நேர்த்தியாகச் சொல்லிப் போகும் தங்கள் பதிவுகள்
    அனைவருக்கும் அதிகம் பயனுள்ளவை
    மனம் கவர்ந்த பதிவு
    தொட்ர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து படித்து கருத்திட்டு என்னை உற்சாகப்படுத்தும் தங்களின் அன்பிற்கு மனமகிழ்வுடன் கூடிய என் நன்றி!

      Delete
  14. பி கே பி யை பற்றிய நினைவலைகளை ஆரம்பித்தாயிற்றா?வெரி குட்.பரத் சுசீலா கேரகடர் எவ்வாறு உருவாகியது என்பதைப்பற்றி அவரிடம் கேட்டு எழுதலாமே?

    ReplyDelete
    Replies
    1. இதுவரை கேட்டதில்லை. இப்போது கேட்டு விட்டு சரியான இடத்தில் அதை நுழைத்து விடுகிறேன் சிஸ்டர். நன்றி.

      Delete
  15. அருமை ! தொடருங்கள் சார் !

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து எனக்கு ஊக்கம் அளிக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  16. எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் பற்றிய தகவல்கள் மிகவும் சுவாரஸ்யம்!

    எழுபதுகளின் பிற்பகுதியில் அவரின் ' நீ மட்டும் நிழலோடு ' படித்த போது ஒரு தரமான எழுத்தாளரை கண்டு விட்ட மகிழ்ச்சி ஏற்பட்டது. அவரின் 'தொட்டால் தொடரும் ' நாவல் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. என் தோழியரிடையே அதைப்பற்றி மிகுந்த விவாத‌ங்களே ஏற்பட்டதுண்டு. கல்கி, அகிலன், கிருஷ்ணா, நா.பார்த்தசாரதி வரிசையில் வந்து சேர ஒரு தரமான எழுத்தாளர் உதயமாகி விட்டார் என்று நினைத்திருந்த நிலையில் படிப்படியாக அவரது மர்ம நாவல்க‌ள், திரைப்பிரவேசம், வியாபார சிந்தனைகளில் அந்த பழைய பிரபாகர் காணாமல் போய் விட்டார் என்றே சொல்ல வேண்டும். இப்போதும்கூட ஒரு அருமையான எழுத்தாளரை இழந்து விட்ட வருத்தம் எனக்கிருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. கனவுகள் இலவசம், ஜன்னல் கைதிகள், திண்ணை வைத்த வீடு, கனவுப் புதையல் உட்பட பின்னாட்களிலும் பல நல்ல சமூக நாவல்கள் தந்திருக்கிறார். இருப்பினும் க்ரைம் நாவல்கள் ஒரு சிறந்த எழுத்தாளரை காணாமல் அடித்து விட்டதோ என்ற உங்கள் ஏக்கத்தை உணர்கிறேன். அவரிடம் சேர்ப்பிக்கிறேன். தங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  17. நம்முடைய ஒவ்வொரு நாளும் புதியது..
    நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் புதியவர்கள்.
    அவர்களிடம் நாம் கற்றுக்கொள்வது எவ்வளோவோ இருக்கிறது.
    எழுத்துலக மன்னர்களுடன் நீங்கள் பயணிக்கும் இந்த
    நடைவண்டி இன்று மோகனமாய் இருந்தது நண்பரே..

    ReplyDelete
    Replies
    1. மோகனமாய் ரசித்த உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி மகேன்!

      Delete
  18. டிடிப ஒர்க் பண்ணிப் பண்ணி உங்க எழுத்து நடையும் அழகாயிடுச்சு இல்லே. பிகேபி யுடனான உங்களது அனுபவம் சுவையானது. உயர்ந்த மனிதர்களிடமிருந்து உயர்ந்த குணங்களை கற்றுக் கொள்ளலாம் இல்லையா? அருமையான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. டிடிபி ஒர்க் பண்ணினதால எழுத்து அழகாயிடலை துரை. அதற்கான காரணம் பி.கே.பி.யும் நானும் பகுதி முடியறதுக்குள்ள உங்களுக்கே புரிஞ்சிடும். நல்ல மனிதர்களிடமிருந்து நல்ல குணங்களை உறிஞ்சிக் கொள்வதுதான் நல்லது. நன்றி துரை!

      Delete
  19. அப்பல்லாம் ரொம்ப அழக்கா இருந்திருக்கீங்க இல்லே?!!...போட்டோ அருமை.

    தமஓ 12

    ReplyDelete
    Replies
    1. அழகாவா..? தொப்பை இருந்திருக்கு அப்பவே... நீங்க சொன்னது எனக்கு ஆறுதல் பரிசு!

      Delete
  20. //மறுதினம் காலையில் நான் சொன்ன நேரத்தில் அவரைச் சந்தித்து ப்ரிண்ட் அவுட்டைத் தர இயலாமல் போயிற்று.//

    காரணத்தை அறிய ஆவலோடு இருக்கிறேன்.அதோடு தாங்கள் PKP அவர்களிடம் கற்றதையும் பெற்றைதையும் அறிய ஆவல்.

    ReplyDelete
    Replies
    1. அனைத்தையும் விரிவாகப் பகிர்ந்து கொள்கிறேன் நண்பரே... மிக்க நன்றி!

      Delete
  21. சுவாரஸ்யம்.தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. சுவாரஸ்யம் என்று பாராட்டி உற்சாகம் தந்த உங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  22. அவரிடமிருந்து என்னை மேம்படுத்தும் முதல் விஷயத்தைக் கற்றுக் கொண்டேன்.
    >>>>
    ஒவ்வொரு மனிதர்களிடத்திலிருந்து நாம் ஒவ்வொரு புது நல்ல விஷயம் கற்றாலே நம் வாழ்க்கை நல்லபடியா அமையும் போல.

    ReplyDelete
    Replies
    1. நூறு சதவீதம் சரியான வார்த்தைகள்ம்மா. ஒவ்‌வொரு மனிதரிடமும் நாம் கற்றுக் கொள்ள நல்ல விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. அவை நம் வாழ்வையும் செம்மைப்படுத்துகின்றன. நன்றி!

      Delete
  23. சுவாரசியமாக இருந்தது சார். தாங்கள் அதிர்ஷ்டசாலி தான். அவரிடமிருந்து கற்றுக் கொண்ட விஷயத்தை தெரிந்து கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சுவாரஸ்யம் என்று எனக்கு உற்சாகம் ஊட்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

      Delete
  24. You look good...-:)

    தொடருங்கள்... நானும் தொடர்ந்து வருகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர் ஆதரவுக்கு என் இதய நன்றி!

      Delete
  25. மர்மக்கதைகள் எழுதும் மன்னர்களோடு இவ்வளவு
    தொடர்பு கொண்டுள்ள நீங்களே விரைவில் ஒர் மர்மத்
    தொடர்கதை எழுத என் வேண்டுகோள்!
    முடியும் உங்களால்!
    முன்வருக! உடன் தருக!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. இந்த நடை வண்டிகள் தொடர் முடிந்த உடனேயே தங்களின் விருப்பப்படி ஒரு மர்மத் திகில் கதை எழுதுகிறேன் ஐயா... உற்சாகம் தரும் உங்களி்ன் கருத்துக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  26. //இந்த நடை வண்டிகள் தொடர் முடிந்த உடனேயே தங்களின் விருப்பப்படி ஒரு மர்மத் திகில் கதை எழுதுகிறேன் ஐயா... உற்சாகம் தரும் உங்களி்ன் கருத்துக்கு என் இதயம் நிறை நன்றி!//

    வெயிட்டிங் கணேஷ்!!

    ReplyDelete
    Replies
    1. எனக்காகக் காத்திருக்கும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே!

      Delete
  27. PKP வீணாய் வார்த்தைகளை வீசுபவரல்ல என்பது அவருடன் நன்கு பழகிய பின்னால்தான் எனக்குத் தெரிந்தது. அவர் என்னிடம் ‌சொன்னதை மறக்காமல் சுமார் இரண்டு மாதங்கள் கழித்து அழைத்தார்.// நட்பை மேம்படுத்தி கூறிய விதம் அருமை . ஆவல் கூடுகிறது ஒவ்வொரு பதிவிலும் . கணினி கோளாறு காரணமாக தாமதம் மன்னிக்க வேண்டும் வசந்தமே .

    ReplyDelete
    Replies
    1. என்ன தென்றல் இது என்கிட்ட போய் மன்னிப்பெல்லாம் கேட்டுக்கிட்டு? நீங்க எப்ப வேணும்னாலும் வரலாம். என்னை உற்சாகப்படுத்தும் நற்கருத்தைத் தரலாம். தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  28. எழுத்தாளர்களுக்கு இது போன்ற உதவிகளை செய்து அவர்கள் எழுத்தை வெளிவருவதற்கு முன்பே படிப்பதில் உள்ள த்ரில் மிகவும் அலாதிதான். எனக்கு மிக மிக பிடித்த செயல் இது.
    அருமையான தொடக்கம். பட்டுகோட்டை பிரபாகருடன் தொடர்ந்த உங்கள் அனுபவத்தை மேலும் படிக்க இன்னும் ஆவலுடன் இருக்கிறேன். தொடருங்கள். தொடர்கிறேன்.

    தாமதமான பின்னூட்டதிற்கு மன்னிக்கவும்!

    ReplyDelete
    Replies
    1. மன்னிப்பெல்லாம் வேண்டாம்... எப்ப வேணும்னாலும் நீங்க படிச்சு ரசிக்கலாம். உங்கள் நண்பனின் இடம்ல்லவா... ரசித்து உற்சாகம் தந்ததற்கு நன்றி.

      Delete
  29. நான் வாசித்து மகிழும் எழுத்துக்களின் பிதாமகர்களை நேரிலே சந்தித்து உரையாடி நட்பு பாராட்டும் பாக்கியம் பெற்றிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் சார்


    எனக்கு கூட இவர்களை சந்தித்து மகிழும் வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி சரவணன்! இவர்கள் அனைவருமே பழகுவதற்கு எளியவர்கள். எப்போது நீங்கள் தொடர்பு கொண்டாலும் நேரம் கேட்டுக் கொண்டு பேசி மகிழலாம்.

      Delete
  30. கணேஷ் உங்களைப்பார்த்து பொறாமையா இருக்கு. அதே நேரம் சந்தோஷமாகவும் இருக்கு.எவ்வளவு நல்ல எழுத்தாளர்கள் கூட பழகும் வாய்ப்பு கிடைச்சிருக்கு உங்களுக்கு.

    ReplyDelete
    Replies
    1. நல்ல எழுத்தாளர்கள் என்பதைவிட நல்ல மனிதர்கள் என்பதில் மகிழ்வு எனக்கு. அவர்களிடம் நான் கற்றதையும் பெற்றதையும் பகிர்வதிலும் திருப்தி எனக்கு. உங்களின் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றி!

      Delete
  31. இந்த தொடர்கள் மூலம் எழுத்தாளர்களுக்குள் இருக்கும் மனிதர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துகிறீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. உண்மை! அத்துடன் அவர்களிடமிருந்து நான் ‌எடுத்துக் கொண்ட விஷயங்களையும் சொல்லி வருகிறேன். தங்களுக்கு என் இதய நன்றி!

      Delete
  32. // என் வேலை உண்டு, சுபா உண்டு என்றுதான் இருந்தேன். //
    விவரிக்க வார்த்தைகள் இல்லை.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube