Showing posts with label என் ரசனை. Show all posts
Showing posts with label என் ரசனை. Show all posts

Tuesday, January 20, 2015

மொறு மொறு மிக்ஸர் - 27

Posted by பால கணேஷ் Tuesday, January 20, 2015
சென்னை புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடைபெற்று கிட்டத்தட்ட முடிவடையும் தருணத்தில் இருக்கிறது. ஓரிரண்டு தினங்கள் தவிர, தினம் ஒரு முறை விசிட் அடிக்கும் படி அமைந்தது எனக்கு. கடந்த இரண்டு ஆண்டுகளைவிட, இவ்வாண்டில் நான் வடிவமைத்த புத்தகங்களையும் எனக்குப் பிடித்த புத்தகங்களையும் வாங்கிக் குவித்ததில் மனதிற்கு மிக நிறைவானதொரு பு.கண்காட்சியாக அமைந்தது இந்த வருடம்.

இந்த ஆண்டு சிறுவர்களுக்கான புத்தகங்கள் அதிகம் விற்றதாக என் கணிப்பில் தெரிகிறது. முத்து-லயன் காமிக்ஸ் ஸ்டாலில் இரும்புக்கை மாயாவி காமிக்ஸ் வருகிறதென்று தெரிந்ததும் சிறுவயது நினைவுகள் உந்த, மறுபடி படிக்கும் (பார்க்கும்?) ஆவல் மீதூற, முதல் தினமே போய் விசாரிக்க, வந்த புத்தகம் அனைத்தும் விற்று விட்டது என்றார்கள். என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை என்று மறுதினம் போய்ப் பிடித்து விட்டேன். பௌன்ஸர் என்கிற அற்புதமான புதிய காமிக்ஸ் புதுவருடத்தில் வெளியிட்டும் கூட இந்த ஆண்டு காமிக்ஸ் ஸ்டாலில் அதிகம் புத்தகங்கள் விற்றது மாயாவிதான் என்கிறார் எடிட்டர் எஸ்.விஜயன். இ.கை.மாயாவிதான் காமிக்ஸ் சூப்பர்ஸ்டார்!

இதைத் தவிரவும் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கும் காமிக்ஸ் புத்தகங்கள், தமிழில் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறை படக் கதை புத்தகங்களாக ஒரு ஸ்டாலில் பார்த்தேன். இவை போன்ற புத்தகங்களை நிறையப் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வாங்கித் தந்ததையும் கவனித்தேன். இத்தகைய புத்தகங்கள் விற்பனையாவதன் மூலம் குழந்தைகளின் படிக்கும் ஆர்வம் வளர்ந்து பின்னாளில் இலக்கியத்துக்கு வருவார்கள் - தமிழ்வாணனில் ஆரம்பித்த நான் லா.ச.ரா.வையும் படிப்பதைப் போல..! இது ஒரு நல்ல விஷயமாக மகிழ்வு தந்தது!

என் கண்ணில்பட்ட மற்றொரு பரபரப்பான விற்பனைப் புத்தகம் ‘மாதொருபாகன்’. ஒரே நேரத்தில் நான்கைந்து பேர் அதை எடுத்து பில் போட நின்றதை டிஸ்கவரி ஸ்டாலிலும், மற்ற இரு ஸ்டாலிலும் காண நேர்ந்தது.  ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் எத்தனையோ குரல்கள் ஒலித்தாலும், சர்ச்சையின் மகத்துவம் புத்தக விற்பனையை எகிற வைப்பதே என்பது நிதர்சனம். ‘ஹும்... சரிதாயணத்தைக் கூட யாரை விட்டாவது எரிக்கச் சொல்லியிருக்கலாம்டா’ என்றது  மனஸ். ஹி... ஹி... ஹி...

பாரதி புத்தகலாயத்தில்... ச்சே... பாரதி புத்தகாலயத்தில் சத்யஜித் ரேயின் ‘பெலூடா’ கதைகள் மொத்தத்தையும் தனித்தனி புத்தகமாகப் போட்டிருக்கிறார்கள். எனக்குக் கிடைத்த இந்த ஆண்டின் பொக்கிஷம்! நோ.. நோ.. ஃபலூடா இல்லீங்க.. பெலூடா. ஷெர்லக் ஹோம்ஸ் மாதிரியான கேரக்டராக அதைப் படைத்து அசத்தலாக துப்பறியும் கதைகள் எழுதியிருக்காரு சத்யஜித் ரே. சிறுவர்களுக்கான கதைகள்னு போட்டிருந்தாலும் கூட எல்லா வயதுக்காரர்களும் சுவாரஸ்யமாப் படிக்கற மாதிரி ஆபாசமில்லாத, சஸ்பென்ஸை மெயின்டைன் பண்ற சூப்பரான கதைகள் ஒவ்வொண்ணும்.

கிராமத்து திருவிழாவுல வண்டி கட்டிட்டு வர்ற ஜனம் கம்பளத்தை விரிச்சு உக்கார்ந்து கட்டுச்சோறு திங்கற மாதிரி புத்தகக் கண்காட்சிக்கு வெளியில் இருக்கற பரந்த வெளியில ஜனங்க உட்கார்ந்து ஸ்னாக்ஸையும், காபியையும், டிபனையும் ஒரு கை பாத்துட்டு, குஷியா பேசிட்டு இருந்தாங்க. அந்தக் கடைகள்ல சேல்ஸைப் பார்த்தா, உள்ள வித்த புத்தகங்களின் விலையவிட அதிகமா வசூலை அள்ளியிருப்பாங்கன்றது நிச்சயம். அனேகமா சில பப்ளிஷர்கள் அடுத்த தடவை உள்ள புத்தகக் கடை வெக்கறதைவிட வெளில ஸ்னாக்ஸ் ஷாப் வெச்சா லாபம்னு இங்க மாறிருவாங்களோன்னு தோணிச்சு எனக்கு. ஹி... ஹி... ஹி...

--------------------------------------------------------------

டிசம்பர் மாத இறுதியில் நம்ம கோவை ஆவி இயக்கிய ‘காதல் போயின் காதல்’ குறும்படத்தின் ஷூட்டிங் நடந்துச்சு. அதோட திரைக்கதைய ஆவி அனுப்பி வெச்சப்ப, நல்லா இருக்கறதாப் பட்டாலும்கூட கதாநாயகி பாத்திரத்துல ஒரு உறுத்தல் இருந்தது எனக்கு. ஆவியின் கதாநாயகி ஒரு Down to Earth கேரக்டர். நிஜவாழ்க்கைல அவளை மாதிரி ஒருத்திய நான் சந்திச்சிருந்தாலும்கூட நிழல்ல அப்படிக் காட்டாம வேறவிதமா பெட்டரா காட்டினா நல்லாருக்கும்னு தோணிச்சு. ஆவிகிட்ட என் கருத்தைச் சொன்னேன். அந்தக் கதையோட பெரும்பகுதி ஒரு காபி ஷாப்ல நடக்கற மாதிரி எழுதியிருந்தாரு ஆவி.

“காபி ஷாப்ல ஷூட்டிங் நடத்த அனுமதி கேட்டா பத்தாயிரம் ரூபா கேக்கறாங்க ஸார்”ன்னாரு ஆவி. “அவ்வளவா..? ஒரு நாளைக்கு அது அதிகம்பா..”ன்னேன். “நீங்க வேற... ஒரு மணி நேரத்துக்கு அந்த ரேட் கேக்கறாங்க ஸார்”ன்னாரு ஆவி. தலை சுத்தி மயக்கமே வந்துருச்சு எனக்கு. அப்பறமென்ன... ஆவி, தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் ஸ்க்ரீன் ப்ளேல எறக்கி, கதைக் களத்தையும் நாயகி பாத்திரத்தையும்  மாத்தி மோல்ட் பண்ணி வேற ஒரு திரைக்கதை அனுப்பினாரு. படிச்சதுமே இது நிச்சயம் ரசிக்கப்படும்ங்கறது புரிஞ்சிருச்சு. ஆவிக்கு வாழ்த்து சொன்னேன். அவரும், நாங்களும் விரும்பியபடி அந்தப் படைப்பு வந்திருக்கறது கூடுதல் மகிழ்ச்சி.



படத்துக்கு நாயகன், நாயகி தேட ஆவி பட்ட பாட்டை தனிக் கட்டுரையாவே எழுதலாம். (மே..பி... ஆவி எழுதுவாரு பின்னால...) பதிவர் திருவிழா சமயத்துல சீனுவை க்ளோஸப், மிட் ஷாட்னு பல ஆங்கிள்ல பாத்துட்டு, ‘கண்டேன் கதாநாயகனை’ன்னு குதிச்சாரு ஆவி. முதலில் நடிக்கவே மாட்டேன் என்று அடம் பிடித்த சீனுப்பயலை ஆவி பேசிப் பேசி, துப்பாக்கியை நீட்டாத குறையாய் மிரட்டி தன் குறும்படத்தில் நடிக்கச் சம்மதிக்க வைத்தார். இப்போ என்னடான்னா... முதல் (குறும்)படம் வர்றதுக்கு முன்னாலயே ‘ஷைனிங் ஸ்டார்’னு பட்டமும் நிறைய ரசிகர் பட்டாளத்தையும் சேத்துக்கிட்டான் அம்ம பய... 

நாயகியா நடிக்க பலரை யோசிச்சும், முயற்சிச்சும் யாரும் செட்டாகாம ஏதேதோ காரணங்களால தள்ளிப் போனதால கொஞ்சம் வெக்ஸானாரு ஆவி. இப்படிப்பட்ட நிலையில நம்ம பதிவர் சிஸ்டர் கீதாரங்கன், கதாநாயகியைத் தந்தாங்க. மதுவந்தி! கீதாவின் உறவான இந்தப் பொண்ணு நாட்டியமும் தெரிஞ்சவளா இருந்தது கூடுதல் ப்ளஸ். முழு உற்சாகத்தோட உருவாக்கத்துக்கு ஒத்துழைப்புத் தந்து, நாங்க எதிர்பாராத பர்பாமென்ஸ்ம் தந்து அசத்திருச்சு பொண்ணு. 

அதே மாதிரி இந்த ப்ராஜக்ட்ல அசத்தின இன்னும் மூணு பேரு 1) மாஸ்டர் ரக்ஷித்! நிஜ ஸ்கூல்பையனான இவன் சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்டா சொல்றதை அப்படியே கிரகிச்சுக்கிட்டு சூப்பரான பெர்பாமன்ஸ் தந்து அசத்தினான். 2) துளசிதரன்! கதையில ஒரு கேரக்டருக்காக இவர் உருமாறி வந்ததைப் பாத்ததும் அசந்து போனேன். சின்ன கேரக்டர்னாலும் (படமே சின்னதுதானடா..!) அசத்தியிருக்காரு மனுஷன். 3) கீதா ரங்கன்! ஆவிக்கு துணை இயக்குனரா செயல்பட்டு ஒவ்வொண்ணையும் பாத்துப் பாத்து செஞ்சு... என்னத்தச் சொல்ல... ஆவி சொல்லுவாரு மீதிய...!

ஷூட்டிங்குக்கு பர்மிஷன் வாங்கலைன்னு போலீஸ்காரங்க சத்தாய்ச்சதையும், சரியான லைட்டிங் தராம மிஸ்டர் சூரியபகவான் படுத்தினதையும் மீறி, மொத்தமாப் பாக்கறப்ப ரிசல்ட் நல்லா, திருப்திகரமா வந்திருக்குது. இன்னும் சில மேம்படுத்தற வேலைகள் பாக்கி இருக்கறதால பிப்ரவரி 14ல டிரெய்லரும், அந்த மாத இறுதியில வெளியிடவும் ப்ளான் பண்ணிருக்காரு ஆவி. பாத்துட்டு வாழ்த்துங்க அவரை.

--------------------------------------------------------------

‘டெக்கமரான்’ங்கற இத்தாலியப் படம் பார்த்தேன் சமீபத்துல. கதைய விரிவாச் சொல்லப் போறதில்ல. ஒரு விஷயத்தை மட்டும் பகிர்ந்துக்க விருப்பம். கன்னியாஸ்திரீ மடத்துல செவிட்டு ஊமைன்னு பொய் சொல்லி தோட்டக்காரனா வேலைக்குச் சேர்றான் ஒருத்தன். அவனை அங்கருக்கற கன்னியா(?)ஸ்திரீகள் கையாளறாங்க. இது மதர் சுபீரியருக்குத் தெரியவர, அவங்க தன்னையும் கையாளச் சொல்ல... வெறுப்புல அவன் பேச, அவன் பேசக்கூடியவன்ங்கறது தெரியவர... உடனே வேகமா ஓடி... சர்ச் மேலருக்கற கண்டாமணிய அடிச்சு, எல்லாரையும் கூட்டி... (நீங்க நினைக்கற மாதிரி இல்ல...) ஜீசஸின் கருணையால இவனுக்குப் பேசவும் கேக்கவும் வந்துருச்சுன்னு எல்லார்கிட்டயும் அனவுன்ஸ் பண்றாங்க... ஹா.. ஹா... ஹா..! இந்துமத சாமியார்களை மோசமான காமாதூரர்களா காட்டினதைப் பல படங்கள்ல பாத்திருக்கேன். (நிஜத்துலயும் சிலர் அதைவிடக் கேவலப்பட்டாச்சு சமீப வருஷங்கள்ல)

ஆனா.. கிறிஸ்டியானிட்டிய இவ்வளவு போல்டா விமர்சிக்கற இப்படியொரு படத்தை இப்பதான் பாக்கறேன். அவங்க மதகுருமார்கள் எப்படி விட்டு வெச்சாங்கன்னு தெரியல. வொண்டர்..! ஆங்... நானும் பாத்தாகணுமே படத்தைன்னு அடம் பிடிக்கற ஆசாமிகள் ‘நீ குழாய்’ல தேடவும். கிடைக்கிறது. ‘விசேஷமான’ காட்சிகள்  படத்தில் ஆங்காங்கு கதைக்குத் தேவை(!)யென்பதால் வருவதால் நீங்கள் நல்லவராயின் பார்க்காமல் தவிர்க்கும் படியும், வல்லவராயின் தனிமையில் பார்க்கும் படியும் கோரப்படுகிறீர்கள். (இதனாலயே முதல்ல பாக்க ஓடிருவாங்களோ... -மைண்ட் வாய்ஸ். ஹி... ஹி... ஹி...)

--------------------------------------------------------------

டியும் மின்னலும் அடுத்துத் தடதடவென மழை.  சண்டை போலவே சமரஸத்திலும் அவள்தான் முதல். ஆனால், பாம்புக்குப் படம் படுத்ததால் அதன் கோபம் தணிந்ததென்று அர்த்தமில்லை. சீற்றத்தின் வாலில் தொத்தி வந்த எங்கள் சமாதானமும் மூர்க்கம்தான். உண்மையில் அது சமாதானம் அன்று. வெட்கம் கெட்ட இளமை வெறி. அப்பட்டமான சுயநலத்தின் சிகரம். சண்டை வழி நிறைவு. காணாத வஞ்சம் சதை மூலம் தேடும் வடிகால். ஊண் வெறி தணிந்ததும் மறுபடியும் தலைகாட்டுவது அவரவர் தனித்தனி என்னும் உண்மைதான். தெளிந்ததனாலாய பயன் கசப்புதான்!
-‘அபிதா’ நாவலில் லா.ச.ராமாமிர்தம்.

டைசியில் எல்லாப் பணமும் செலவழிந்து போய் செல்லாத ரூபாய்தான் மிஞ்சிற்று. அப்பொழுதுதான் செல்லாத ரூபாயாலும் ஒரு சௌகரியம் இருக்கிறது ஏன்று தோன்றிற்று. தெருவில் காய்கறிக்காரி போனால் நாலரையணாவுக்குக் கறிகாய் வாங்குகிறது. செல்லாத ரூபாயைக் கொடுத்து, “நாலரையணா எடுத்துக் கொண்டு பாக்கியைக் கொடு” என்கிறது. அவள், “செல்லாது, வேறு கொடுங்கள்” என்று திருப்பி விடுவாள். “வேறு ரூபாயில்லையே, நாளைக்கு வந்து வாங்கிக் கொள்ளேன்” என்கிறது. “சரி, அப்படித்தான் கொடுங்கள்” என்று போய் விடுவாள். ரூபாயில்லாமல் கடன் கொடு என்றால் கொஞ்சம் அவமானமாகத் தோன்றும். ரூபாயைக் கையில் வைத்துக் கொண்டு கடன் சொன்னால் அதில் ஒரு கௌரவம் இல்லையோ...? அதே மாதிரி அந்த ஒற்றை ரூபாயைக் காட்டியே பத்து ரூபாய்க்குச் சாமான்கள் கடனாய் வாங்கி விட்டோம். அந்த ரூபாய் இல்லாவிட்டால் முடியுமா..? கடன் வாங்கினாலும் அவ்வளவு கண்ணியமாய்ச் செய்திருக்க முடியுமா..?
-‘செல்லாத ரூபாய்’ சிறுகதையில் எஸ்.வி.வி.

....புதிய புத்தகங்களைப் படிப்பதை விட இப்படிப் பழைய எழுத்தாளர்களின் படைப்புகளைப் படிப்பதில் தனி சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது. புதுவரவுகளை படிக்க ஆரம்பித்து விட்டேன். என் ராசிக்கு நல்ல பலன்தான். இனி இந்த வருஷம் தொடர்ந்து இங்க செயல்படறதுன்னு முடிவும் பண்ணிட்டேன். உங்க ராசிக்கு.... ஹி... ஹி... ஹி....

Monday, June 30, 2014

தொட்டேன்... தொடர்கிறார்... கேபிள்!

Posted by பால கணேஷ் Monday, June 30, 2014
கூகிள், வலைத்தளம் என்கிற ஒரு வசதியை இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறது. வலைத்தளத்தின் உரிமையாளர்கள் அவரவர் படைப்புகளை அதில் வெளியிடுகிறார்கள். வாரப்பத்திரிகைகளைப் போல இதற்கும் ஒரு மிகப்பெரிய வாசகர் வட்டம் உண்டு. - இந்த அளவுக்கு மட்டுமே எனக்கு வலையுலகைப் பற்றித் தெரிந்த சமயம் அது. அப்போது திரு.பட்டுக்கோட்டை பிரபாகரிடம் உதவியாளராகவும், அவர் பொறுப்பாசியராக இருந்த ‘ஊஞ்சல்’ இதழின் உ.ஆ. + வடிவமைப்பாளராகவும் இருந்த காலகட்டம். “வலையுலகில் சிறப்பாக எழுதுபவர்களைப் பற்றியும் அவர்கள் தளங்களைப் பற்றியும் ஒரு தொடர் வரப்போகுது. கேபிள் சங்கர்னு பிரபலமான ஒருத்தரை எழுதச் சொல்லியிருக்கேன். மனுஷன் பின்றார்” என்றார் பி.கே.பி. என்னிடம். (கேபிளார் எதைப் பின்னினாரோ? ஹி... ஹி....) அப்படி அறிமுகமாச்சு அவரின் பெயர். பின்வந்த மாதங்களில் ஊஞ்சல் இதழ்களில் அவர் எழுதியதைத் தொடர்ந்து படித்து வந்தேன். அவரின் எழுத்து நடை பிடிச்சது எனக்கு
.
பின்னொரு சந்தர்ப்பத்துல சைதாப்பேட்டை பெட்டிக்கடை ஒண்ணுல ‘கொத்து பரோட்டா’ என்கிற கேபிள் எழுதிய புத்தகம் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். நான் உன்னிப்பதை பார்த்துட்டு, ”நம்ம ஏரியாவுலதான் ஸார் இருக்காரு கேபிள் சங்கர்”ன்னார் கடைக்காரர். என் ஏரியாவில் இருக்கும் அவரைச் சந்திக்கணும் என்ற ஆசை இருந்தாலும் வழி தெரியாம அமைதி காத்தேன். காலத்தின் கரைசல்ல சேட்டையண்ணாவின் வழிகாட்டுதல்ல நானும் ஒரு பதிவராகி சிலபேராவது அடையாளம் காணுற நிலைக்கு அடுத்த ஆறு மாசங்கள்ல வளர்ந்திருந்தேன். அதேமாதிரி கேபிளாரின் பதிவுகளைத் தொடர்ந்து படிச்சு அவர் வெரைட்டி வாரியா எழுதறதையும், அவருக்கிருந்த மிகப்பெரிய வாசகர் வட்டத்தையும் கவனிச்சு அவர் பிரபலம்கறதை புரிஞ்சு வெச்சிருந்தேன். அப்போ சென்னைல புத்தகக் கண்காட்சி வந்தது. அங்கதான் கேபிள் சங்கரை முதன்முதலில் சந்தித்தேன்.

பு.க.வைப் பொறுத்தவரை என்னென்ன ஸ்டால்களில் புத்தகங்கள் வாங்கலாம்கறதை சர்வே எடுக்க ஒரு முறையும், அவற்றை வாங்கறதுக்காக ஒரு முறையும் போறது வழக்கம். பார்ப்பதற்காகவும்... பலமுறை விசிட் அடிக்கறது உண்டு ஐ மீன் நண்பர்களைப் பார்ப்பதற்காக.... புக் சர்வேக்காக முதல்முறை போய் சுத்தி வந்துக்கிட்டிருந்தபோது டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டாலின் வாசலில் இரு நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்த கேபிளாரைக் கண்டேன். புத்தகங்களின் அட்டையில் போட்டோவாகப் பார்த்திருந்த அவரை எளிதா அடையாளம் காண முடிஞ்சது. முதல் பார்வைல நெல்லைக் கோயில் யானையை நினைவுபடுத்தினார். நோ... நோ... உருவத்தை வைச்சுச் சொல்லலீங்க... நீண்ட நேரமாய் நின்னுருப்பார் போலருக்கு கால் மாற்றிக் கால் மாற்றி நின்றபடி பேசிக் கொண்டிருந்தது எனக்கு அப்படி உருவகப்படுத்தியது. அருகில் சென்று உற்றுப் பார்த்தபடி சில நிமிடங்கன் நின்றிருந்தேன். என்னை மாதிரி ஒரு உருவம் பக்கத்துல வந்து எதுவும் பேசாம உத்துப் பாத்துட்டிருந்தா ஒண்ணு பயப்பட்டு விலகணும்... இல்ல, நெருங்கி வந்து பேசணும். ஆனா கேபிள் கொஞ்சமாச்சும் கண்டுக்கணுமே... ஊஹும்... உலகையே மறந்து அவங்களோட பேசிட்டிருந்தார். சரி... அப்பத்தானே அவர் பிரபலம்னு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டு கிட்டப் போய் வலிஞ்சு என்னை அறிமுகப்படுத்திக்கிட்டேன். முதல் அறிமுகம்ங்கற தயக்கம் எதுவுமில்லாம சகஜமாப் பேச முடிஞ்சது கேபிளாரின் பலம்!

அதுக்கடுத்து அவர் போட்ட ‘கொத்து பரோட்டா’வுல என்னை சந்திச்சதைப் பத்தி சில வரிகள் எழுதியிருந்தார். ஆனா பாருங்க... பேரைப் போடாம ’பிகேபியின் உதவியாளர்’னு போட்ருந்தார். என்னை மாதிரி ஒரு ஒலகப் பிரபலத்தோட(!) பேரை மறக்கறது ஞாயமா சொல்லுங்க... நான் கடுங்கோபமாகி பின்னூட்டப் பெட்டில அலுதுட்டே ஒரு கருத்துப் போட்டேன். அதைப் பார்த்ததும் நினைவு வந்து மைல்டா ஒரு ஸாரி சொல்லி என் பேரை பதிவுல அப்டேட்டினார். அதுக்கப்புறம் முதல் ஆண்டு பதிவர் திருவிழாவின் ஏற்பாடுகளுக்கான சந்திப்புகளில் அடிக்கடி அவரைப் பார்க்க, பழக வாய்ப்புக் கிடைத்தது. சந்திக்கற பிரபலங்கள்ட்ட இருந்து முடிஞ்சவரை திருடிக்கற பழக்கமுள்ள நான் கேபிள்ட்ட இருந்தும் திருடிக்கிட்டேன் - எதிராளி கோபமா பாய்ஞ்சாலும் நாம எப்படி கூலா டீல்பண்ணி மேட்டரை ஸ்மூத்தாக்கறது, நாலு பேர் இருக்கற இடத்துல எப்படி அனைவர் கவனத்தையும் கவருவது... சுருக்கமாச் சொன்னா, சக மனிதர்கள்ட்ட பழகுறது எப்படிங்கறதை அவர்ட்டருந்து எடுத்து(திருடி)க்கிட்டேன்.

அவர்கூட நிறையப் பேசற சந்தர்ப்பங்கள் அமைஞ்சதும், உணவகங்களை எழுதறதுல சிகரமான அவர்கூட தாய்லாந்து உணவை ருசிச்சுச் சாப்பிட்டதும், அதை என் தளத்துல நான் எழுதினதும் எனக்கு மிகமிக மகிழ்ச்சி தந்த விஷயங்கள். மெரீனா பீச்ல பாத்தீங்கன்னா... நீச்சல் கொஞ்சங்கூட தெரியாம அலையில கால் நனைச்சுட்டு குதிச்சுட்டு மேலோட்டமா கடலை தெரிஞ்சுட்டு வருவாங்க சிலர். வேற சிலரோ கடலுக்குள்ள முங்கி நீச்சல் போட்டு அடியாழம் வரை போய்ட்டு வர்ற அளவுக்கு கடலை தெரிஞ்சிருப்பாங்க. சினிமாங்கற கடல்ல நான் முதல் ரகமா இருக்கறப்ப அவர் ரெண்டாவது ரகமா இருந்தார். தொலைக்காட்சித் தொடர்கள்ல நிறைய நடிச்சும், எழுதியும் இருந்த அவர் அப்ப ரெண்டு மூணு படங்களுக்கு வசனகர்த்தாவா இருந்தார். ‘கலகலப்பு’ படத்தில் இவர் எழுதின வசனங்கள் ரொம்பப் பிடிக்கும் எனக்கு.

முதலாமாண்டு பதிவர் திருவிழாவுக்கு சிறப்பு விருந்தினரா பி.கே.பி. வர்றதா முடிவானதுப்ப கேபிள் தான் ஒரு படம் இயக்க இருப்பதாகவும் அதற்கு ‘தொட்டால் தொடரும்’ என்று தலைப்பு வெக்க விரும்பறதாவும் சொல்லி பிகேபிட்ட பேசச் சொன்னார். (அவரின் நாவல் தலைப்பு). பி.கே.பி.க்கு தர மனமில்லை. மறுத்துட்டாரு. கேபிளாரின் புரொடியூசர் டைட்டிலை ஏற்கனவே ரிஜிஸ்டர் பண்ணிட்டதால அந்தப் பேர்லயே படம் ஆரம்பமாச்சு. அப்ப கேபிள்ட்ட படத்தப் பத்திக் கேட்டேன். என்ன சப்ஜெக்ட், யார் ஹீரோ, முக்கியமா... யார் ஹீரோயின்... ஹி... ஹி... ஹி... அவர் சொன்னாரு...

இது காதல் த்ரில்லர் வகைக் கதை .முதல் பாதி லவ், ரொமான்ஸ் என்று நகரும் கதையின் மறுபாதி ஆக்‌ஷன் த்ரில்லராக வேகமெடுக்கும். ஹீரோவாக தமன், ஹீரோயினாக அருந்ததி நடித்திருக்கிறார்கள். இரண்டு முக்கியக் கதாபாத்திரங்களில் வின்சென்ட் அசோகன், ஹலோ எப்.எம். பாலாஜி நடித்திருக்கிறார்கள். விஜய் ஆம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.சி. சிவன் இசையமைத்துவருகிறார்.

அவரோட ப்ளாக்கில நிறைய பக்கப் பார்வைகள் பெறுவது சினிமா விமர்சனம். யாரோட படமா இருந்தாலும் அதோட ப்ளஸ் மைனஸை விரிவா அலசி - டெக்னிகலாவும் அலசி - விமர்சனம் எழுதுவார். வாசகர்களுக்கு அவர் நடுநிலையா எழுதறது பிடிக்கும்னாலும் எல்லாப் படத்தையும் குறை சொல்றார்னு சினிமா சைட்ல ஒரு கருத்து இருக்கறதா என் ஃபீலிங். அவர்ட்ட, ‘தலைவா... நீங்க படமெடுக்கற பட்சத்துல அதை விமர்சனம் எழுதிக் கிழிக்க ஒரு க்ரூப்பே ரெடியாயிருக்கும். எல்லாத்தையும் நொட்டை சொல்ற இந்த ஆளு படம் எடுத்தா குறையில்லாம எடுத்திருவானான்னு கேக்க நிறையப் பேரு இருப்பாங்க...’ன்னேன். அதுக்கு அவர் கூலா சொன்னார்....

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தூவார் சந்திரசேகரனே எனக்கு அப்படித்தான் கிடைத்தார். அவர் தயாரித்த ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’ படத்துக்கு நான் எழுதியிருந்த விமர்சனத்தைப் படித்துவிட்டு என்னிடம் பேசினார். பிறகு என் கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர், அப்படியானால் நீங்கள் வந்து ஒரு படம் எடுத்துக்காட்டுங்கள் பார்க்கலாம் என்றார். சண்டையிலும் விவாதத்திலும்தான் எங்கள் நட்பு தொடங்கியது.  விமர்சனம் செய்பவர்களால் நல்ல படம் எடுக்க முடியுமா என்று கேட்கிறார்கள். எல்லா நல்ல விமர்சகர்களுக்குள்ளும் நல்ல ரசிகன் இருக்கிறான். நான் பல படங்களை விமர்சனம் செய்திருக்கிறேன். பாராட்டியும் இருக்கிறேன். நல்லதை விட்டுவிட்டு கெட்டதை மட்டும் நினைவில் வைத்திருக்கிறார்கள். நான் வெறும் விமர்சகன் மட்டுமல்ல.கடந்த 15 ஆண்டுகளாகத் திரைத் துறையில், திரைப்பட விநியோகம், திரையரங்க நிர்வாகம், தயாரிப்பு, விளம்பரம், திரைக்கதை, வசனம், நாவல், சிறுகதை எனத் தொடர்ந்து இயங்கி வந்திருக்கிறேன். திரை இயக்கம் என்பது என் கனவு. என் படத்திற்கும் விமர்சனம் இருக்கும். அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் பல விஷயங்களை விமர்சிக்க முடியாதபடி என் படம் தரமும் நேர்த்தியும் நிறைந்ததாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

அப்புறமென்ன... அவர் படம் மளமளன்னு வளர்ந்து இப்ப இந்த மாசக் கடைசிலயோ, அடுத்த மாசத்துலயோ ரிலீசுக்குத் தயாரா இருக்குது. அதுக்கான ஒரு பாட்டு டீஸரா போன வாரம் வெளியாகி யூ ட்யூப்ல நிறைய ஹிட்ஸ்களை குவிச்சுட்டிருக்கு. ஒருமுறை கேட்டுப் பாப்போம்னு பாத்த என்னை பலமுறை கேக்க வெச்சிருச்சு. சாக்ஸபோன்ல ஆரம்பிக்கற அந்த இசையே முதல்ல உள்ள இழுத்திருது. உள்ள இழுத்த செவிகளை பாடல் முழுவதும் தொடர வெச்சு அசத்தியிருக்காரு இசையமைப்பாளர் பி.சி.சிவன். ரொம்பவே யதார்த்தமான அரசியல், சமூகப் பொறுப்புணர்வு, ஜாலி, கேலி கலந்த பாடல் வரிகளும் அருமை. (பாட்டை கேபிள்ஜியே எழுதினதாக் கேள்வி. நிஜமான்றதை அவர்தான் சொல்லணும்.) பாடினவர் பெயர் தெரில... (கேபிளாரே நல்லாப் பாடக்கூடியவர்தான், அவரே பாடியிருக்கலாமேன்னு தோணிச்சு) சின்னச் சின்ன கட் ஷாட்களை இணைச்சு, பிரபலங்கள்ட்ட கருத்து கேக்க வெச்சு அதையும் சேர்த்து, ஸ்க்ரீன் ப்ரஸன்ஸோட தானும் தன் டீமோட தோன்றி பாடலை சுவாரஸ்யமா காட்சிப்படுத்திருக்காரு கேபிள்ஜி. இந்தப் பாட்டை இதுவரை நீங்க பாக்கலைன்னா கீழ நான் தந்திருக்கற லிங்க்ல போய் உடனே பாத்திருங்க.

https://www.youtube.com/watch?v=RNHks79qB58

இதனால என்ன ஆபத்துன்னா... அவரோட படத்துக்கு இப்ப எதிர்பார்ப்பு எகிறிடுச்சு. அதை முழுமையா படம் நிறைவேத்தும்ங்கறதுல எனக்கு முழு நம்பிக்கை உண்டு. ஒரு படத்தை இயக்கறதுன்றது சாதாரண வேலையில்ல. ப்ரொட்யூஸரை சாடிஸ்பை பண்ணி, காமிரா, இசைன்னு அந்தந்தத் துறையில ஜாம்பவான்களை வேலை வாங்கி... அங்குசத்தை வெச்சு யானையை அடக்கற மாதிரி ரொம்பவே டென்ஷனான காரியம் அது. நம்ம ஜாதியில ஒருத்தர் (நோ...நோ... பதிவர் ஜாதிங்கறத சொல்றேன்) இயக்குனராகியிருக்கார் என்பது நமக்கெல்லாம் பெருமையான விஷயம்.

என்னைப் பொறுத்தவரைக்கும் பு.க.ல நான் முதல்முறை பார்த்த கேபிள் சங்கருக்கும். இப்ப இயக்குனராகிட்ட பிறகு பார்க்கற கேபிள் சங்கருக்கும் பழகும் முறையில துளியும் வித்தியாசமில்ல... இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை அடையணும், அடுத்தடுத்த வெற்றிகளைச் சந்திச்சு இன்னும் பல உயரங்களை அவர் எட்டணும்னு மனப்பூர்வமான மகிழ்ச்சியோட அவரை வாழ்த்தற அதே சமயத்துல எவ்வளவு உயரம் தொட்டாலும் பழகும் விதத்துல அவர் இப்ப மாதிரியே எப்பவும் இருக்கணும்னு ஒரு வேண்டுகோளையும் முன்வெக்கறேன். ஆல் த பெஸ்ட் ஃபார் த சக்ஸஸ் கேபிள்ஜி!

Monday, May 5, 2014

மொறு மொறு மிக்ஸர் - 25

Posted by பால கணேஷ் Monday, May 05, 2014
வானொலி: நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து கிருகப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிருகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள். அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!
- வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்

'பஞ்சதந்திரம்' ஷூட்டிங். உணவு இடைவேளையில் கமல் சிக்கனை 
முள் கரண்டியால் குத்திக்கொண்டு இருந்தார். அருகில் இருந்த நாகேஷ் கேட்டார், ''கோழி இன்னும் சாகலையாப்பா?''

ன்னடத் திரையுலகின் இளம் நடிகரான ரக்‌ஷித் ஷெட்டி முதல் முறையாக இயக்கி நடித்த படம் ‘உலிதவரு கண்டந்தே (Ulidavaru Kandante)  -- என்றால் ‘மற்றவர் பார்வையில்’ என்று பொருள் என்று கன்னடம் தெரிந்த நண்பர் பிரபுகிருஷ்ணா சொன்னார். சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தின் ட்ரெய்லர் பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது.
ஆனால் அந்தப் படம் புரியவில்லை, என்ன சொல்ல வருகிறார் என்பது தெரியவில்லை என்றெல்லாம் புகார்கள் எழுந்ததால் அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக படத்தின் மொத்த்த் திரைக் கதையையும் பி.டி.எப் பைலாக இணையத்தில் வெளியிட்டிருக்கிறார். பட்ம் தியேட்டர்கள்ல ஓடிட்டிருக்கும் போதே முழுத் திரைக் கதையையும் வெளியிட்ட இவங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு. இங்கே க்ளிக்கினால் கன்னடத்திலும், இங்கே க்ளிக்கினால் ஆங்கிலத்திலும் டவுன்லோடு செய்து படிக்கலாம். எனக்குக் கூடத்தான் நிறைய தமிழ்ப் படங்கள் புரிவதில்லை. அதாவது...  ஏன் எடுக்கிறார்கள் என்றே புரிவதில்லை. ஹி.... ஹி... ஹி...!
=======================================================================================
ரு கல்யாணத்தில் திரு,கிரேசி மோகனும் திரு ஏ.ஆர்.எஸ்ஸும் பேசிக்கொண்டதை ஒட்டுக்கேட்டதில்....

ஏ.ஆர்,எஸ்: “மோகன்! ஒரு நாள் வீட்டுக்கு வாயேன். பழய போட்டொவெல்லாம் காட்டறேன்! எம்ஜிஆர் வித் தொப்பிவித்தவுட் தொப்பி...”

கிரேசி: “நீங்க எங்க வீட்டுக்கு வாங்க! நானும் நிறைய போட்டோ வித்தவுட் எம்ஜிஆர் - காட்டறேன்..”
=======================================================================================
ந்தசாமிப்பிள்ளை ஆழ்ந்த சிந்தனையுடன் தலையை நிமிர்த்தி கூரையை நோக்கிய வண்ணம் உட்கார்ந்திருந்தார். “என்ன பிள்ளைவாள்... என்ன அவ்வளவு அபாரமாய் யோசிக்கிறீர்?” என்றார் முதலியார். “பொழுது விடிந்தால் கவலைப்படுவதற்கே நேரம் போதவில்லையே... பலவிதத் தொல்லை...” என்றார் பிள்ளை. “அது என்னய்யா அப்படிப்பட்ட தொல்லை? எழுந்து வாருங்காணும்... இப்படிக் காற்றாட வெளியில் போய்விட்டு வரலாம்...” என்றார் முதலியார். “ஓய்! என்னுடைய கசலையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு வரக் கூடியதல்ல...” என்றார் பிள்ளை. “பூ! அப்படிப்பட்ட கவலை என்னென்ன சொல்லும். ஒரேயடியாகக் குறைக்க வழி சொல்கிறேன்...” -முதலியார். பிள்ளை ஆரம்பித்தார், “ஸார்! பொழுது விடிந்தால் பொங்கல் பண்டிகை. சாமான் வாங்கிப் போடணும். குறைந்தது பத்து ரூபாயாவது ஆகும். என் தங்கை ஊரிலிருந்து வந்திருக்கிறாள். அவளுக்கு ஒரு நூல் புடவையாவது வாங்க ஆறு ரூபாய் வேண்டும்... கை மாற்றுக் கடனைத் திருப்ப 5 ரூபாய் தேவை. பால் பாக்கி எட்டு ரூபாய்..! பார்த்தீரா...? ஒன்றா, இரண்டா கவலைப்படுவதற்கு..?”. முதலியார்,“இவ்வளவுதானே..? இவ்வளவு காரியங்களைச் செய்வதற்கு இருபத்தொன்பது ரூபாய் வேண்டும் இல்லையா..?” என்றார். “ஆமாம்” என்ற பிள்ளையிடம், “இப்பொழுது ரூபாய் 29 வேண்டும் என்ற கவலையாயிருக்கட்டுமே. எதற்காக பாக்கி கொடுக்கணும். சாமான் வாங்கணும், புடவை எடுக்கணும் என்று பலவிதமாய் கவலைப்படுகிறீர்?” என்றார்.
--26.3,1939 விகடனில் ‘சாவி’ எழுதிய சின்னஞ்சிறு கதை
=======================================================================================
ரிரண்டு பதிவுகளுக்கு முன்னர் நான் ட்ரிபிள் செஞ்சுரியை நெருங்கிக் கொண்டு இருப்பதைக் கவனித்தேன். இதொன்றும் மார்தட்டிக் கொள்கிற அளவுக்கு பெரிய சாதனை இல்லைதான். என்றாலும் இதுவரை என்ன எழுதியிருக்கிறோம் என்ற போன வாரம் ஒருநாள் ‘பொழுதுபோகாத பொம்முவாக இருந்தபோது பெரும்பாலான பகிர்வுகளை மறுவாசிப்பு செய்தேன். எந்த ஒரு பகிர்வும் ‘இதை ஏன் எழுதினோம்?என்று வருத்தப்பட வைக்கவில்லை என்கிற மகிழ்வும், சிலவற்றை இப்போது படிக்கையில் நாம் தானா எழுதியது?என்ற வியப்பும் என்னுள் எழுந்த்து.

இந்த இரண்டுக்கும் காரணமானவர் நீங்கள். எல்லாப் புகழும் உங்களுக்கே. உங்களனைவருக்கும் மனதின் ஆழத்திலிருந்து மகிழ்வான நன்றி!

(20ம் நூற்றாண்டு நரி என்கிற ஆங்கிலப்பட நிறுவனத்தின் லோகோ எனக்கு மிகப் பிடிக்கும் என்பதால் 200க்கு போட்ட அதே படத்தை 300க்கும் மாற்றி விட்டேன். ஹி... ஹி... ஹி...!)

Monday, April 28, 2014

புத்தம் புதிய புத்தகமே..!

Posted by பால கணேஷ் Monday, April 28, 2014
மீபத்தில் விஷால் நடித்து ‘நான் சிகப்பு மனிதன்’ என்றொரு படம் வந்திருக்கிறது, பார்த்தீர்களா? அதில் ‘நார்கோலெப்சி’ என்கிற வியாதியால் பாதிக்கப்பட்டவராக அவரைக் காட்டியிருப்பார்கள். அதாவது கோபம், சந்தோஷம் போன்ற உணர்ச்சிகள் தாக்கினால் தூங்கத் தொடங்கி விடுவார். அதுபோல ‘புததகாலெப்சி’யால் பாதிக்கப்பட்ட நிறையப் பேரை நான் பார்த்திருக்கிறேன். அதாகப்பட்டது... ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு சில பக்கங்களைப் படித்தால் போதும்... கண்களைச் சுழற்றிக் கொண்டு தூக்கம் வந்து உறங்கத் தொடஙகி விடுவார்கள். சிலசமயம் அந்தப் புத்தகங்களின் மேலேயே விழுந்துகூட... இதைத்தான் ‘விழுந்து விழுந்து படிக்கிறான்’ என்று சொல்வார்களோ என்றுகூட எனக்கொரு சந்தேகம் உண்டு ஸ்வாமி. ஹி... ஹி... ஹி...!

‘அவர்கள் அப்படித் தூங்கினால் உனக்கென்னய்யா பிரச்னை?’ என்று கேட்பீராயின்... அது நான் இரவல் தந்த புத்தகமாக இருந்து என்னிடம் திரும்பி வருமபோது அதன் கதியைப் பார்த்தால் பணம் கொடுத்து வாங்கிய என் கண்ணீரில் ரத்தமே வரத்தானே செய்யும் ஐயா...? புத்தகங்கள் வாங்குவதற்கு மூக்கால் அழுது கொண்டே பணம் தந்தவர்கள் - முன்பு அண்ணி, இப்போது மனைவி - நான் கண்ணால் ஜலம் விட்டு அழுவதைச் சகிப்பரோ? அதிலும் புத்தகத்தைக் கையில் எடுத்துவிட்டால் வருகிற தூக்கமும் பறந்து விடுகிற என் குணவிசேஷத்தைப்  புரிந்தவர்களாயிற்றே...! 

இந்த இரவல் வாங்குகிற பேர்வழிகளிடம் இன்னொரு பொதுப் பழக்கமும் உண்டு. புத்தகத்துடனேயே புக் மார்க் வைத்துக் கொடுத்தாலும்கூட அதை உதாசீனம் செய்து, தான் அதுவரை படித்த பக்கத்தை முக்கோணமாக மடித்து வைத்து விட்டு பிறிதொரு சமயம் எடுத்துப் படிப்பதில் அப்படியொரு ஆனந்தம். என்னுடைய பல புத்தகங்கள் இத்தகைய ஆசாமிகளால் ஓரங்களில் ரணகாயப்பட்டு, நான் படிக்கையில் முக்கோணங்களாக உதிர்ந்து சிற்சில வார்த்தைகளும் அத்துடன் கிழிந்து போய்... போகையில் பயில்வான் ரங்கநாதன் மாதிரி ஸ்ட்ராங்கர்க இருந்த அவை திரும்புகையில் ஓமக்குச்சி நரசிம்மனாக மாறியல்லவா வருகின்றன?

“உங்களுக்கு புத்தகம் படிக்கிற பழக்கம் எப்போதிருந்து ஏற்பட்டது?” என்று யாரையேனும் கேட்டுப் பாருங்கள்... ‘காலேஜ் டேஸ்லயிருந்து’ அல்லது ‘ஸ்கூல் டேஸ்லருந்து’ என்பார்கள். உண்மையில் புத்தகம் படிக்கும் பழக்கம் இன்றைய எல்,கே,ஜி (அ) அன்றைய முதல் வகுப்பிலிருந்தேயல்லவா ஆரம்பிக்கிறது? பாடப் புத்தகங்களை எல்லாம் யாரும் புத்தகக் கணக்கில் சேர்ப்பதில்லை போலும்... என்ன கொடுமை சரவணன்? நான் சொல்ல வந்த ஒரு விஷயத்தை விண்டுரைத்துவிட்டு மற்றதற்குப் போகலாம், ஒரு புத்தகம் என்னவெல்லாம் மாயம் செய்யும் தெரியுமா...? அறிஞர் அண்ணா போன்ற மேதைகள் படித்த புத்தகங்கள் அவர்களின் அறிவை வளர்த்திருக்கின்றன... அதைப் போல இன்றும் பலர் பலன் பெற்றிருக்கக் கூடும். ஆனால் நான் சொல்வது பொதுவான வெகுஜன மக்களைப் பற்றி ஐயா... நானறிந்த வரையில் ஒரு மனிதனைப் பொய் சொல்ல வைக்க புத்தகங்களைப் போன்ற சிறந்த சாதனம் வேறு ஒன்றில்லை.

புத்தகங்களைப் படித்து ரசித்துவந்த நான் அத்துடன் நின்றிருக்கலாம். விதி யாரை ஐயா விட்டது...? ‘சரிதாயணம்’ என்ற புத்தகத்தை நாஆஆனே எழுதி வெளியிட்டேன். அதைக் கடைகளில் விறறதைத் தவிர சில வி.ஜ.பி.க்களிடமும் நண்பர்களிடமும் தந்து படித்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தேன். நண்பர்களில் சிலர் (வேறுவழி? அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கே!) படித்துவிட்டு கருத்துச் சொன்னார்கள்.. மற்றையோரெல்லாம்... “எங்க ஸார்...? டயமே கிடைக்கறதில்லை... அடுத்த மாசம் என் சித்தி பெண் கல்யாணம் வருதில்ல... அது முடிஞ்சதும் தான் படிக்கணும்...” என்றும் அடுத்த மாதம் ச்ந்தித்தால், “எலெக்ஷன் டூட்டி போட்ருக்கான் பிரதர்... நீங்க நல்லா எழுதியிருப்பீங்க(?) அதனால் இந்த அமளியெல்லாம் ஓய்ஞ்சதும் படிக்கலாம்னு இருக்கேன்” என்றும் விதவிதமாகப் பொய் சொல்கிறார்கள். மற்றும் சிலரோ... “உங்க புத்தகத்தை எங்க பெரியப்பா வாங்கிண்டு போனார். படிச்சுட்டு ரொம்ப நல்லாருக்குன்னு அவரோட ஒண்ணு விட்ட தம்பியோட மச்சினருக்கு படிக்கக் கொடுத்திருக்காராம். வந்ததும் படிக்கணும்” என்பர்.. இவ்விதம் டிசைன் டிசைனாக பொய்களைக் கேட்டாலும், இப்படியாவது என் புத்தகம் ஊர் சுற்றுகிறதே என்று (அல்ப) திருப்திப்பட்டுக் கொள்கிறேன் நான்,

எழுத்தாளர் ராஜேஷ்குமாரிடம் நண்பனாகப் பழக ஆரம்பித்த புதிதில் ஒருமுறை அவரிடம். ”உங்களோட ‘எவரெஸ்ட் தொட்டுவிடும் தூரம்தான்’ புக் ஒண்ணு கொடுங்க ஸார்... படிச்சுட்டுத் தரேன்” என்றேன். அவர். “என்கிட்ட அதோட காப்பி ஒண்ணுகூட இல்ல கணேஷ். ரிலேடிவ்ஸும் ப்ரண்ட்ஸும் படிக்க கேக்கறப்ப குடுததுடறேன். என்கிட்ட புத்தகம் வாங்கிட்டுப் போனவர்கள் வாங்கிட்டுப் போனவர்களே... ஒண்ணுகூட திரும்பி வந்ததில்லை” என்றார். புத்தகங்களைப் படிக்க வாங்கிச் சென்று அதைச் சொந்தமாக்கிக் கொள்வதில் இருக்கும் குஷி என்னவாக இருக்கும் என்பது எனக்குப் புரியத்தான் இல்லை. பின்னாளில் என்னிடம் சாண்டில்யனின் ‘நீலரதி’ நாவலை இரவல் வாங்கிச் சென்ற ஒரு நண்பரை தொடர்ந்த (அவரின்) வெளியூர்ப் பயணங்களால் அடுத்த ஆண்டுதான் சந்திக்க நேர்ந்தது. அப்போது புத்தகங்களைப் பற்றி பேச்சு வருகையில். “நல்ல நல்ல புத்தகங்கள்தான் ஸார் நம்ம சொத்து. நான் நிறையச் சேத்து வெச்சிருக்கேன், நீங்க சாண்டில்யனோட ‘நீலரதி’ படிச்சிருக்கீங்களோ... சூப்பரான கதை. என்கிட்ட இருக்கு. வேணா எடுத்துட்டுப் போயி படிங்க” என்றார் கூலாக. அவ்வ்வ்வ்! அந்த பிரகஸ்பதி புத்தகத்தை இரவல் வாங்கினதையே மறந்துடுச்சா. இல்ல... பண்ணன்டு வருஷம் (தானே?) குடியிருந்தா அவனுக்கே வீடு சொந்தம்னு சொல்ற மாதிரி ஒரு வருஷம் தன்கிட்ட இருந்ததால தன் புத்தகமா கன்வர்ட் பண்ணிக்கிச்சோ தெரியல....

இப்படி எந்தப் புத்தகத்தையும் படிக்காமலேயே படித்ததாக பீலா விட்டுக் கொள்வதற்காக இரவல் புத்தகங்களாக தன் மேஜையில் அடுக்கி வைத்திருக்கும் பேர்வழிகள் ஒரு ரகம் என்றால்... புத்தகங்களை விற்பனை செய்பவ்ர்கள் இருக்கிறார்களே... அவர்கள் தனிரகம். நிலையான ஒரு வேலை இல்லாமல் மதுரையில் வாழ்ந்த நாளில் பணப்பற்றாக்குறை நிரந்தரம் என்கிற காரணத்தால்.. நியூசினிமாவுக்குப் பின்புறம் உள்ள சந்தில் போய் பழைய புத்தகங்களை வாங்கி வாசிக்கும் பழக்கத்தை கைக்கொண்டிருந்தேன். அந்தப் புத்தகம் விற்கும் ஆசாமிகள் இருக்கிறார்களே... புததகங்களை மட்டுமா எடை போடுகிறார்கள்..? ஓரிரு முறை சென்று வந்ததிலேயே என்னைக் கண்டதும். என் ரசனைக்குத் தீனி போடும் புத்தகங்களை தனியாக எடுத்துக் கைகளில் திணிப்பார்கள். வாங்காமல் வர முடியாது உண்மையில் அரிய பல பொக்கிஷப் புத்தகங்களை அங்கிருந்து நான் கைப்பற்றியிருக்கிறேன். இன்றைக்கு அந்தக் கடைகளெல்லாம் வழக்கொழிந்து விட்டன - வாரப்பத்திரிகைகளில் தொடர்கதைகள் வழக்கொழிந்து விட்டதைப்போல! 

புத்தகங்களை இரவல் வாங்கிப் படிக்கின்ற சுகத்தை யானும் அனுபவிக்க வேண்டி நண்பர்களிடமிருந்து ஓரிரண்டு புத்தகங்களை வாங்கி வந்ததுண்டு. அதென்னமோ எனக்கென்று ஒரு ராசி பாருங்கள்... நான் கொடுக்க வேண்டியவர்களெல்லாம் கரெக்டாகக் கேட்டு வாங்கி விடுகிறார்கள்... எனக்குக் கொடுக்க வேண்டியவர்கள் மட்டும் கொடுக்கிறார்கள் - அல்வா! அவ்வ்வ்வ்!  போகட்டும்... அவர்களால் அல்லவோ ‘புத்தகத்தை வாங்கினா ஒழுங்காப் படிச்சுட்டுக் கொடுத்துடுவான் கணேஷ்’ என்கிற நற்பெயரைப் பெற்றிருக்கிறேன். அதற்காகவேனும் அவர்கள் மகாராஜன்களாக இருக்கட்டும்!

மேற்சொன்ன விஷயங்களெல்லாம் ஒருபுறம் இருக்க... புத்தகங்களால் அவை படிக்கப்படுபவருக்கு உதவுவதைத் தவிர பிஸிக்கலாக என்னென்ன உபயோகங்கள் இருக்கின்றன தெரியுமா..? சுமார் அறுநூறு பக்கங்கள் உள்ள ஒரு புத்தகத்தை அதன் மேலே துண்டை விரித்து என் நண்பர் ஒருவர் தலையணையாகப் பயன்படுத்தி அனந்த சயனத்திலிருக்கும் பெருமாள் போலப் பள்ளி கொண்டதை நான் கண்டதுன்டு. பிறிதொரு சமயம் அதேபோன்ற கனமானதொரு புத்தகத்தை ஏவுகணையாகப் பயன்படுத்தி சரிதா என்னைத் தாக்கியபோது அதிலிருந்து நான் தப்பியதுண்டு, ஒருசிலரோ... காகிதங்கள் பறக்காமலிருக்க புத்தகங்களை பேப்பர் வெயிட்டாகக் கருதி உபயோகப்படுத்தியதையும் கண்டதுண்டு. சமீபத்தில் என் நண்பரொருவர் வீட்டிற்குச் சென்றபோது புத்தகங்களின் மற்றொரு பயனையும் கண்ணாரக் கண்டு ஆனந்திக்க நேர்ந்தது ஐயா... அவர் அமர்ந்திருந்த சேருக்கு எதிரில் கம்ப்யூட்டர் இருந்த டேபிளின் நான்கு கால்களில் ஒன்றின் கீழ்ப்புறம் உடைந்து விட்டிருக்க... அதற்கு நான்கு புத்தகங்களை வைத்து அண்டைக்கொடுத்து நாற்காலியை நிமிர்த்தி வைத்திருந்தார் நண்பர்! அவ்வ்வ்வ்!

புததகங்கள் பற்றிப் பேச ஆரம்பித்தால் நாளெல்லாம் புலம்ப, ஸாரி, பேசக் கூடிய ஆசாமி நான்,. ஆனால் நீங்கள் பொறுமையிழந்து புத்தகத்தாலேயே அடிக்கக்கூடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

ஊசி (பின்) குறிப்பு : தற்சமயம் தேவன் அவர்கள் எழுதிய புத்தகம் ஒன்றைப் படித்து வருகிறேன். அதில் அவர் எழுதியிருப்பது போன்ற அக்கால நடையிலேயே ஒரு கட்டுரை எழுதிப் பார்த்தாலென்ன என்ற (விபரீத) ஆசையின் விளைவே மேலே நீங்கள் படித்தது. கான தேவனாடக் கண்ட வான்கணேஷ்! ஹி.... ஹி... ஹி...!

Friday, January 17, 2014

என்றென்றும் எம்.ஜி.ஆர்!

Posted by பால கணேஷ் Friday, January 17, 2014
வாத்யார் சொன்னவை : (தொகுத்தது: ‘நான் ஆணையிட்டால் - விகடன் பிரசுர வெளியீடு’ மற்றும் ‘எம்.ஜி.ஆர். பேட்டிகள் - மனோன்மணி பதிப்பக வெளியீடு’ இரண்டிற்கும் ஆசிரியர்: எஸ.கிருபாகரன்)

* பக்தி உள்ளவர்கள் சாமி கும்பிட வேண்டும் அல்லது வேண்டாம் என்று நான் சொல்லத் தயாராக இல்லை. ஆனால் கடவுளின் பெயரால் ஏமாற்ற நினைக்காதீர், மோசடிகள் செய்ய முயலாதீர் என்பதே என் வேண்டுகோள். ஒன்றே குலம், ஒருவனே தேவன் - இதுதான் என் கொள்கை. (மதிஒளி 15.12.1962 - மருதமலை முருகன் கோயிலில பேசியது)

* நடிக்கக் கூடியவர்கள், எழுத்துத் திறமை படைத்தவர்கள் ஆயிரக்கணக்கில் நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வவய்ப்பு இல்லை. காரணம் அவர்களுக்கு விளம்பம் இல்லை. விளம்பரம் வேண்டும் என்றால் அவர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும். அவர்கள் திறமையைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் திறமையைப் பயன்படுத்த வேண்டும் என்றால் அவர்களுக்கு விளம்பரம் இருக்க வேண்டும் என்ற நிலை. திருமணம் ஆனால்தான் பைத்தியம் தீரும், பைத்தியம் தீர்ந்தால்தான் திருமணம் ஆகும் என்ற இந்த நிலைதான் நாட்டில் இருக்கிறது. (தென்றல் திரை, 05.11.57) 


* ‘நீங்கள் விரும்புகிறபடியெல்லாம் படத்தின் கதைகளை மாற்றினால் பணம் போட்டுப் படம் எடுப்பவர்களின் கதி என்ன ஆவது?’ என்ற கேள்விக்கு, ‘‘ஒன்றும் ஆகிவிடாது. என்னுடைய ஆலோசனையைக் கேட்டு எடுத்த படங்கள் நன்றாக வெற்றி பெற்றுள்ளன. ‘மதுரை வீரன்’ படத்திள்ள பல காட்சிகளுககும், கர்ண பரம்பரைக் கதைக்கும் சம்பந்தமில்லை. பழைய கதையில் வெள்ளையம்மாள் என்ற பாத்திரம் படுமோசமாக சிருஷ்டிக்கப்பட்டிருந்தது. அதன் தயாரிப்பாளர் என் ஆலோசனைக்கு செவி சாய்த்தார். படம் வெற்றி பெற்றது. ‘மலைக்கள்ள’னிலும் இவ்வாற என் யோசனைக்கு மதிப்பு தந்தார்கள். ‘அலிபாபா’விலும் என்னுடைய யோசனைகள் உபயோகமாக இருந்தன. இதிலிருந்து என் அரசியல் கொள்கைகளை நான் நடிக்கும் படங்களில் திணிப்பதாக முடிவுகட்டி விடாதீர்கள். நான் முதலில் கலைஞன், பிறகுதான் மற்றவை என்ற ரீதியிலேயே இவற்றைக் கூறகிறேன். என் அனுபவத்தை அவர்கள் உபயோகித்துக் கொள்ள அனுமதிக்கிறேன். அவ்வளவுதானே! (தென்னிந்திய சினிமா பத்திரிகையாளர் சந்திப்பில் அளித்த பேட்டியிலிருந்து)

* உள்ளம் எந்த அளவுக்கு உறுதியாக இருக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு உடலும் உறுதியாக இருந்தால்தான் நாம் காரியங்களை நல்ல முறையில் கவனிக்க முடியும். ஆகவே நடிப்புக்காக வருகிற அன்பர்கள் உடற்பயிற்சியையும் முக்கியமாகக் கொள்ள வேண்டும். (தென்றல் திரை, 05.11.57)

* ‘உங்கள் வயதுக்கு மிகவும் குறைந்த வயது கொண்ட இளைஞனாக நீங்கள் நடிப்பது பொருத்தமாகுமா?’ என்ற கேள்விக்கு, ‘‘திரையில் நீங்கள் என்னைப் பார்க்கும்போது இளைஞனாக நான் தோன்றுகிறேனா இல்லையா என்பதுதான் என் கேள்வி. இருபது வயது இளைஞன் ஐம்பது வயதுக்காரராக நடித்தால் பாராட்டுகிறீர்கள் அல்லவா? நான் இருபது வயது வாலிபனாக நடித்தால் ஏன் பாராட்டக் கூடாது? அதற்குப் பெயர்தானே நடிப்பு?’’ (‘இதயவீணை’ படப்பிடிப்பில் எடுத்த பேட்டியிலிருந்து)

* ‘‘என் மறைவிற்குப் பிறகு என்னைப் பற்றிப் புரிந்து கொள்வார்கள் என்று பேசி இருக்கிறீர்களே, இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கூறி மனதைப் பதற வைக்க வேண்டுமா?’’ என்ற கேள்விக்கு, ‘‘தோற்றம் இருந்தால் மறைவு இருக்கும். வளர்ச்சி இருந்தால் தளர்ச்சி இருக்கும். இளமையிருந்தால் முதுமையிருக்கும். பிறப்பிருந்தால் இறப்பிருந்தே தீரும். எனவே இளைஞர்கள் ஒருவனுடைய கொள்கையிலும், அதைச் செயல்படுத்தும் முறைகளிலும் உண்மையான பற்று வைத்திருந்தார்களேயானால் அவைகளைத் தாங்களும் செயல்படுத்திக் காப்பாற்றுவதற்கு, மேலும் வளர்ப்பதற்குத் தயாராகிக் கொள்ள வண்டும் என்பதற்காக நீங்கள் சொன்ன வார்த்தைகளை வெளியிட்டேன். ஒரு மனிதன் மறைந்தாலும் கொள்கை வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கொள்கையைத் தந்த பெயரும் புகழும் காப்பாற்றப்படும். எனக்குப்பின் உங்களைப் போன்றவர்களின் நம்பிக்கையைப் பெற்றவர்கள் வேறு யாரும் இல்லை என்கிற நிலையில் கழகத்தை விட்டு வைப்பேனேயானால் அது அமரர் பேரறிஞர் அண்ணாவிற்குச் செய்கின்ற மிகப் பெரிய துரோகம் என்று நான் கருதுகிறேன்.


ன்னால் மறக்க முடியாதவர் எம்.ஜி.ஆர். செட்டுக்குள்ளே அவர் வர்றாருன்னாலே அவ்வளவு அமர்க்களப்படும். ஆனா அவர் ரொம்ப சாது. அவரைச் சுத்தி இருக்கறவங்க ஷூட்டிங் சமயத்துல ஆடோ ஆடுன்னு ஆடுவாங்க. என் மேல் எப்பவுமே எம்.ஜி.ஆருக்கு நல்ல மரியாதை உண்டு. நான் அவரை ‘மிஸ்டர் ராமச்சந்திரன்’ அப்படின்னுதான் கூப்பிடுவேன். என் குரலைக் கேட்டதும் இயல்பா புன்னகை உதிர்ப்பார். எந்தப் படம்னு எனக்குச் சரியா ஞாபகம் இல்ல. எம்.ஜி.ஆர். ஹீரோ. நான் ஹீரோயின். வழக்கம் போல நம்பியார்தான் வில்லன். அன்னிக்கு ஷூட் பண்ண வேண்டிய சீன் இதுதான்: என்னை நம்பியார் கிட்ட இருந்து காப்பாத்தறதுக்காக எம்.ஜி.ஆர். அவரோட கத்திச் சண்டை போடணும். நான் பயந்த மாதிரி உடம்பு நடுங்கணும். அன்னிக்குன்னு பார்த்து எம்.ஜி.ஆரும் நம்பியாரும் ரீடேக் வாங்கிட்டே இருக்காங்க. காட்சிக்காக நடுங்குற மாதிரி நடிச்சு நடிச்சு எனக்கு ரொம்ப வெறுப்பாயிடுச்சு. எத்தனை முறை வசனம் எதுவமே இல்லாம நடுங்குற மாதிரி நடிச்சுக்கிட்டே இருக்க முடியும்? நேரா எம்.ஜி.ஆர். கிட்டப் போனேன். ‘‘மிஸ்டர் ராமச்சந்திரன்! காலையில இருந்து கத்திச் சண்டை போட்டுக்கிட்டே இருக்கீங்க. ஆனா என்னைக் காப்பாத்த மாட்டேங்கறீங்க. பேசாம அந்தக் கத்தியை என்கிட்டக் குடுங்க. நானே என்னைக் காப்பாத்திக்கறேன். நானா, நம்பியாரான்னு ஒரு கை பாத்திடுறேன்’’ என்று போலியான எரிச்சலோடு நான் சொன்னதுதான் தாமதம்... வெள்ளிக்காசு கொட்டின மாதிரி எம்.ஜி.ஆரும், நம்பியாரும் சேர்ந்து சிரிச்சாங்க. நம்பியார் வாய்விட்டுச் சிரிச்சதை நான் அன்னிக்குத்தான் பார்த்தேன்.
-பானுமதி ராமகிருஷ்ணா
ஆ.வி.தீபாவளி மலர் 2003-ல் இருந்து...


Wednesday, December 11, 2013

பாட்டுக்(கும்)கொரு புலவன்!

Posted by பால கணேஷ் Wednesday, December 11, 2013
சுப்பிரமணிய பாரதி! மகாகவி என்ற சொல்லுக்கு மேல் ஏதாவது இருந்தால் அந்தப் பட்டத்துக்கும் தகுதியானவர். கண்ணன் கவிதைகளில், குயில் பாட்டில் தென்றலாய் வீசியவர்; தேசபக்திப் பாடல்களில் புயலாய்ச் சீறியவர்; வசன கவிதை என்ற ஒன்றை எழுதி, இன்றைய புதுக் கவிதைக்கு பிள்ளையார் சுழி போட்ட பிதாமகன்; உரைநடைத் தமிழையும் ஒரு கை பார்த்தவர். பாட்டுக்கொரு புலவன் பாரதியின் பிறந்த தினம் டிசம்பர் 11. இத்தருணத்தில் அவரது உரைநடையில் என்னைக் கவர்ந்த வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்கிறேன்.

• தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பம் விளைவிக்கத்தக்க செய்கை பாவம். தனக்கேனும் பிறர்க்கேனும் இன்பம் விளைவிக்கத்தக்க செய்கை புண்ணியச் செயல் எனப்படும்.

* எப்போதும் பாடுபடு. எப்போதும் உழைத்துக் கொண்டிரு. உழைப்பிலே சுகம் இருக்கிறது. வறுமை, நோவு முதலிய குட்டிப் பேய்கள் எல்லாம் உழைப்பைக் கண்டால் ஓடிவிடும்.
 
• உழைப்பு எப்போதும் உண்டு. இதிலே ‘நான்’ என்ற பாரத்தை நீக்கிவிட்டு உழைத்தால், வேலை கிறுகிறு என்று வேகமாகவும், பிழை இல்லாமலும் நடக்கும். தன்னைத் தூக்கித் தலையிலே வைத்துக் கொண்டு வேலை செய்தால் வேலை குழம்பும்.

* தேசாபிமானம் கற்பியாத கல்விமுறை வெறும் மண்ணாகுமேயன்றி ஒன்றுக்கும் பயன்படாது.

* அச்சமே மடமை; அச்சம் இல்லாமையே அறிவு. அன்பே தெய்வம். அன்பு இருந்தால் குழந்தையும் தாயும் சமானம்; ஏழையும் செல்வனும் சமானம்; படித்தவனும் படியாதவனும் சமானம்; அன்பு இருந்தால் மனிதனும் தெய்வமும் சமானம். அன்பு பூமியிலேயே மேலோங்கி நிற்கும்.

• அன்பே தெய்வம். அன்பு இருந்தால் குழந்தையும், தாயும் சமானம்; ஏழையும், செல்வமும் சமானம்; படித்தவனும், படியாதவனும் சமம். அன்பு இருந்தால் மனிதனும் தெய்வமும் சமானம். அன்பு பூமியிலே மேலோங்கி நிற்கும்.

* வீட்டிலும் வெளியிலும் தனிமையிலும் கூட்டத்திலும் எதிலும் எப்போதும் நேர்மை  இருக்க வேண்டும். உண்மை இருக்க வேண்டும்.

* எதற்கும் கவலைப்படாதே. கவலைப்படாது இருத்தலே முக்தி. கவலைப்படாது இருந்தால்தான் இவ்வுலகத்தில் எந்த நோயும் வராது. எவ்வித ஆபத்தும் நேராது. தவறி எவ்வித நோய் அல்லது எவ்வித ஆபத்து நேர்ந்த போதிலும் ஒருவன் அவற்றுக்குக் கவலையுறுவதை விட்டு விடுவானாயின் அவை தாமே விலகிப் போய் விடும்.
• இவ்வுலக வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமானால், அவன் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லா வற்றிலும் மிகமிக உயர்ந்த குணமாவது பொறுமை.

* மனிதனுடைய மனம் சிங்கம் போல் தாக்கும் திறனும், பாயும் திறனும் கொண்டு இருப்பது மட்டு மேயன்றி, ஒட்டகத்தைப் போல பொறுக்கும் திறனும் வேண்டும். அவ்விதமான பொறுமை பலம் இல்லாதவர்களுக்கு வராது. இவ்வுலக வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமானல் அவன் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிக உயர்ந்த குணமானது பொறுமை.

• தீராத ஆவலும், அவசரமும், ஓயாத பரபரப்பும் உள்ள ஜுர வாழ்க்கை நாகரிகம் ஆக மாட்டாது. சரியான நாகரிகத்துக்குச் சாந்தியே ஆதாரம். அடக்கம், பொறுமை. ஜீவகாருண்யம் என்ற குணங்களே உண்மையான நாகரிகத்தையும், நித்திய ஜீவனையும் விளைவிக்கும்.

* மூடன் தான் செய்த குற்றத்தை மறந்து விடுகிறான் அல்லது பிறருக்குத் தெரியாமல் மறைக்கிறான் அல்லது பொய்க் காரணங்கள் செல்லி அது குற்றம் இல்லை என்று ருஜுப்படுத்த முயற்சி செய்கிறான். குற்றத்திற்குக் காரணம் அறியாமை. அதை நீக்கும் வழி சத்சங்கமும், தைரியமும்! பிறர் குற்றங்களை ஷமிக்கும் குணம் குற்றம் இல்லாதவர்களிடத்திலேதான் காணப்படும்.

• நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி, அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டும் என்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும் வேறு வழி இல்லை.

* சொந்த பாஷை கற்றுக் கொள்ளாதவர்கள் குரங்குகளாகப் பிறப்பார்கள் அடுத்த ஜென்மத்தில்!

• யாகம் என்பதன் பொருளை நாம் மிகத் தெளிந்து கொள்ளுதல் வேண்டும். பெரியதோர் இஷ்ட சித்தியின் பொருட்டாகச் சிறிய தற்கால சுகங்களை மனம் அறிந்து வெறுத்து விடுதலே யாகம்.

* பாவத்தைச் செய்வது இல்லை என்ற தீர்மானம் உண்மையாக இருக்க வேண்டும். ஞானமே அவ்வளவுதான். அதைக் காட்டிலும் பெரிய ஞானம் இருக்க முடியாது.

* தமிழ், தமிழ், தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய புதிய செய்தி, புதிய புதிய யோசனை, புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக் கொண்டே இருக்க வேண்டும்.

* பொறுமை இல்லாதவனுக்கு இவ்வுலகில் எப்போதும் துன்பமே அன்றி அவன் ஒருநாளும் இன்பத்தைக் காண மாட்டான். ஒருவனுக்கு எத்தனைக்கு எத்தனை பொறுமை மிகுதிப்படுகிறதோ அத்தனைக்கு அத்தனை அவனுக்கு உலக விவகாரங்களில் வெற்றி உண்டாகிறது. வீட்டிலே பொறுமை பழகினால் அன்றி ஒருவனுக்கு நாட்டு விவகாரங்களில் பொறுமை ஏற்படாது.

* உண்மையான தெய்வ பக்தி இருந்தால் மனோ தைரியம் உண்டாகும். மனோ தைரியம் இருந்தால் உண்மையான தெய்வ பக்தி உண்டாகும்.

* தர்மத்தை நிலைநிறுத்தும் பொருட்டாக உலகத்தாரி்ன் நிந்தை, பழி, விரோதம், தீங்கு முதலியவற்றைக் கவனியாமல் உழைப்பவன் யக்ஞம் செய்பவன் ஆகிறான்.

• பயத்தை உள்ளே வளர்ப்பவன் பாம்பை வளர்க்கிறான்.

• ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம். ஒரு சொற் கேளீர்... சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்வீர்.

• வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர், நெஞ்சகத்து தருக்குடை நீசர்கள் -இன்னோர் தம்மொடு பிறந்த சகோதரராயினும் வெம்மையோடு ஒறுத்தல் வீரர்தம் செயலாம்.

* அகண்ட வெளிக்கண் அன்பே வாழ்க! துயர்கள் தொலைந்திடுக! தொலையா இன்பம் விளைந்திடுக! வீழ்க கலியின் வலியெலாம்! கிருத யுகம்தான் மேவுகவே!
 
=====================================================
இது ஒரு மறு ஒளிபரப்பு!

=====================================================

Wednesday, November 6, 2013

துப்பறிய வாங்க...!

Posted by பால கணேஷ் Wednesday, November 06, 2013
ன்று இணையம் நமக்கு மட்டற்ற வசதிகளை வழங்கியிருக்கிறது. இணையதளம் ஒன்றை நமக்கெனத் துவக்கி நமது சிந்தையில் முகிழ்க்கும் கவிதை, கதை, கட்டுரைகள் அனைத்தையும் பதிவேற்றி, பல நாடுகளிலிருந்தும் வாசக நட்புகள் அதைப் படித்து உடனுக்குடன் கருத்துச் சொல்லி... பின்னர் அவற்றை புத்தகமாகவும் வெளியிடும் நிலை இன்று சாத்தியம்! என்போன்றோர் கூட ஓரளவு பிரபலமாக இருக்க முடிகிறது! இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இத்தகைய வசதி எதுவுமில்லை. ஒரு எழுத்தாளன் பெயர்பெற வேண்டுமானால் பல பத்திரிகைகளில் படைப்புகள் வெளிவந்து பின்னர்தான் புகழ்பெற முடியும். அத்தகைய காலகட்டத்தில் எழுதத் துவங்கி இன்றும் தன்னுடைய புகழ்க் கொடியைப் பறக்க விட்டுக் கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளர் தன் எழுத்துலக வாழ்வைத் துவங்கிய விதத்தை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உடனே விரைந்து கடைசிப் பாராவுக்குச் செல்லாமல் அவர் யார் என்று கண்டுபிடியுங்கள் (ஆங்காங்ககே க்ளூக்கள் உண்டு) பார்ப்போம்...

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவரான அந்த இளைஞருக்கு எழுத்தாளராக வேண்டும் என்ற கனவு அப்போது இருக்கவில்லை. ‘தேன்மழை' என்ற இதழில் ஒரு புகைப்படம் பிரசுரித்து அதற்கேற்ற வாசகம் எழுதும் போட்டி வைத்திருந்தார்கள். காவியுடை அணிந்து இடுப்புக்கு மேல் ஆடையணியாமல் ருத்ராட்ச மாலைகள் அணிந்த ஒரு துறவி உட்கார்ந்திருக்க... அவர் அருகில் ஆடையணியாத சேரிச் சிறுவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள் - இதுதான் படம். பார்த்ததும் அவர் மனதில் தோன்றிய எண்ணத்தை சுருக்கமாக ‘துறந்த நிலையும், திறந்த நிலையும்' என்று எழுதி அனுப்பினார். அந்த வாசகத்துக்கு முதல் பரிசு கிடைத்தது. முதல் பரிசு என்றால் பெரிதாக எதுவும் நினைச்சுடாதீங்க. அந்த இதழின் ஒரு வருட சந்தா! அவ்வளவுதான்...! ஆனால் ‘நம்ம கிட்டயும் க்ரியேட்டிவிட்டி இருக்கு போலருக்கே...' என்று அவரை எண்ண வைத்தது அது. (இந்த க்ளூவை வைத்து அவர் யாரென்று கண்டுபிடித்திருந்தால் நீங்க 100 மார்க் வாங்கின உஸ்தாத்!)

அதன்பின் வந்த தீபாவளி சமயம்... தினத்தந்தி நாளிதழில் அப்போது பிரபலமாகியிருந்த கதாநாயகி சுஜாதாவிடம் வாசகர்கள் கேட்க விரும்பும் கேள்விகளை தீபாவளி மலருக்காகக் கேட்கலாம் என்று அறிவித்திருந்தார்கள். நம்மவர் ‘நீங்கள் நடிப்பது கலையின் மீதுள்ள ஆசையினாலா, அல்லது பணம் சேர்க்கும் நோக்கத்திலா' என்று ஒரு கேள்வி எழுதி அனுப்பினார். அதைப் பிரசுரித்ததுதான் பிரசுரித்தார்கள்... அவர் எழுதின மாதிரியே போட்டிருக்கலாமில்லையா... இவரின் கேள்வியை இப்படி மாற்றிப் போட்டிருந்தார்கள்... ‘கண்ணே சுஜாதா! நீ நடிப்பது கலையின் மீதுள்ள ஆசையாலா அல்லது பணம் சேர்க்கும் நோக்கத்திலா?' என்று! சரி, போகட்டும்... கேள்வியை மாற்றியவர்கள் பெயர், முகவரியையும் மாற்றிப் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்! இவரின் பெயர் போட்டு வந்ததால் அந்த ஊரில் பெயர் பெற்ற எஸன்ஸ் டீலரான அவரின் தகப்பனார் அதைப் பார்த்துவிட்டு... வேறு என்ன... சரமாரியாகத் திட்டுதான்! ‘என் தவறில்லை... பத்திரிகைக்காரர்கள் மாற்றி விட்டார்கள்' என்று அப்பாவை சமாதானபபடுத்த பெரும்பாடு பட்டார் அவர். (இந்த க்ளூவை வைத்து அவரைக் கண்டுபிடித்திருந்தால் 75 மார்க் உங்களுக்கு!)

அதன்பின் உஷாவாகி... ஸாரி, உஷாராகி சரியான பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதங்கள், கேள்வி பதில் என நிறைய எழுதினார் அவர். ‘டியர் மிஸடர் துக்ளக்' என்ற வாசகர் கடிதம் பகுதி இன்றும் துக்ளக்கில் பிரபலம். அதில் இவரது கடிதங்கள் பலமுறை இடம் பெற்றிருக்கின்றன. தன் பெயரைப் பல பத்திரிகைகளில் பார்த்து மகிழ்ந்து உத்வேகம் பெற்ற அவர், ‘அந்த மூன்று நாட்கள்' என்றொரு சிறுகதையை எழுதி ஆவிக்கு அனுப்பினார். (நம்ம நண்பர் ஆவி இல்லீங்க... னந்த விகடன்!) அது விகடனல் பிரசுரமான ஆண்டு 1977. அடுத்து வந்த 1978ல் அலிபாபா, சாவி என்று வேறுபல இதழ்களில் அவரின் நான்கு சிறுகதைகள் பிரசுரமாயின. தொடர்ந்து நல்ல சிறுகதைகள் படைத்ததில் ஆசிரியர் சாவியின் கவனத்தை ஈர்த்தார் நம்மவர். (இங்கே கண்டுபிடித்திருந்தால் உங்களுக்கு 50 மார்க்!)

சாவி அவர்கள் அப்போது ‘மோனா' என்று ஒரு மாதநாவல் நடத்தி வந்தார். அதில் நாவல் எழுதும் வாய்ப்பு நம்மவருக்குக் கிட்டியது. ‘அங்கே இங்கே எங்கே?' என்ற தலைப்பில் தன் முதல் நாவலை எழுதினார். (இப்போது கண்டுபிடித்திருந்தால் உங்களுக்கு 25 மார்க்!) அதன்பின் பல பத்திரிகைகளில் தொடர்கதைகளும் நாவல்களும் எழுதி தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளராகப் புகழ் பெற்றார் அவர். ‘சாவி' சார் இளைஞர் படையினரை ஆசிரியர் குழுவாக நியமித்து ‘திசைகள்' என்ற இதழைத் துவக்கினார். அதில் இவர் உதவி ஆசிரியரானார். ‘சாவியின் செல்லப் பிள்ளை' என்று பலர் குறிப்பிடும் அளவுக்கு அவருக்கு நெருங்கியவராகவும், அந்தப் பத்திரிகையில் ஏராளமான படைப்புகளை எழுதியும் குவித்தார். (இதுவரை கண்டுபிடிக்கலைன்னா... உங்களுக்கு மார்க்கே கிடையாதுங்க...!)

சாவி இதழில் ‘மிஸ் கவிதா' என்ற பெயரில் (தங்கை பெயர்) சித்திரக் கதைத் தொடர்கள் இரண்டு எழுதியிருக்கிறார் இவர் என்பது பலருக்கும் தெரியாத தகவல். அச்சமயம் வந்த சாவி இதழ் ஒன்றில் ‘பிரபா' என்ற பெயரில் ‘கறுப்புமெயில்' என்ற இவரின் சிறுகதையும், ‘மிஸ்.கவிதா' என்ற பெயரில் ‘டெவில் டேவிட்' தொடரின் அத்தியாயமும், பட்டுக்கோட்டை பிரபாகர் என்ற பெயரில் ‘நீ மட்டும் நிழலோடு' தொடர்கதை அத்தியாயமும், ஒரு பேட்டிக் கட்டுரையில் ஆர்.பிரபாகர் என்று பெயர் போட்டும் ஒரே இதழில் நான்கு படைப்புகள் வெளிவந்த சிறப்பும் இவருக்கு உண்டு.

இவ்ளோ விஷயமும் என்னப் பத்தி தாங்க!
அவர் முதல் சில சிறுகதைகளை தன் சொந்தப் பெயரான ‘ஆர்.பிரபாகர்' என்ற பெயரில்தான் எழுதியிருந்தார். அப்போது அவரின் அப்பா, ‘‘பட்டுக்கோட்டை அழகிரி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்னு ஊர் பேரை தன் பேரோட சேர்த்தவங்க அவங்களும் பிரபலமாகி, ஊருக்கும் பேர் வாங்கிக் கொடுத்திருக்காங்க. அதனால உன் பேரோட ஊரின் பேரைச் சேர்த்து ‘பட்டுக்கோட்டை பிரபாகர்’ன்னு வெச்சுக்கோ" என்று ஐடியா தந்தார். தந்தையின் வார்த்தையை மதித்த அந்தத் தனயன் அதே பெயரில் பிரபலமாகி இன்று பத்திரிகைகள் கடந்தும் தொலைக்காட்சித் தொடர், திரைப்படம் என்று பல தளங்களில் வெற்றிகரமாக இயங்கி வருகிறார். இவர் என் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் (அ) இவரின் நெருங்கிய நண்பர்களில் நானும் ஒருவன் என்பது என்றும் நினைத்தாலே இனிக்கும் விஷயம் எனக்கு!

Friday, November 1, 2013

உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி!

Posted by பால கணேஷ் Friday, November 01, 2013
தீபாவளிப் பண்டிகை ரொம்பக் கிட்டத்துல வந்தாச்சு... இன்னேரம் ‘‘புதுப் புடவைகளும் சுடிதார்களும் பர்ச்சேஸ் பண்ணப் போலாம்"னு மனைவி ஒரு பக்கம் இழுக்க, ‘‘அப்பா... புதுசா வந்துருக்கற பட்டாசு டைப் எல்லாம் வாங்கி வெடிச்சுரணும்" என்று மகன்/மகள் ஒரு புறம் இழுக்க, சராசரி குடும்பத் தலைவர்கள் விழிபிதுங்கி (தீபா)வலியுடன் இருக்கும் நேரம். தீபாவளிப் பண்டிகையைப் பத்தின சில தகவல்களை இப்ப நான் சொல்லப் போறேன்.

தீபாவளியை இந்தியா முழுக்க கோலாகலமாக் கொண்டாடறாங்க. தீபம்ங்கறது ஒளி தருகிற ஒன்று. ஆவளி-ன்னா வரிசைன்னு அர்த்தம். தீபங்களை வரிசையா ஏற்றி இருளை நீக்கும் பண்டிகைதான் தீபாவளி. அவங்கவங்க மனசுல இருக்கற இருட்டை எரிச்சு வெளிச்சமாக்கிக்கணும்கறது இதனோட உள்ளர்த்தம். மனசிலாயோ! நரகாசுரனை கிருஷ்ணர் காலி பண்ணினதால தீபாவளின்னும், சக்தியோட கேதார கௌரி விரதம் முடிஞ்சு சிவனோட அர்த்தநாரீஸ்வரரான தினம்னும் (ஸ்கந்தபுராணம்), தங்கக் கோயில் கட்டுமானப் பணி துவங்கிய நாள் இதுங்கறதால இதான் தீபாவளின்னு சீக்கியர்களும், மகாவீரர் மகாநிர்வாணம் அடைஞ்ச தினமான இதுவே தீபாவளின்னு சமணர்களும் வேறவேற விதமாச் சொன்னாலும் எல்லாரும் கொண்டாடறாங்க. ஆக... இந்தியா முழுக்க ஜாதி, மதம்னு பேதமில்லாம கொண்டாடப்படற ஒரு நாள் இது.

அதுல பாருங்க... சின்ன வயசுல எப்படா புது டிரஸ்ஸையும் பட்டாசுகளையும் கொடுப்பாங்கற பரபரப்புல... ராவெல்லாம் தூக்கமே வராது. இப்பவோ... கோழி கூவுறதுக்கு முன்னாலயே நடுராத்திரியில (நமக்கெல்லாம் காலைல 4 மணியே நடுராத்திரி மாதிரிதானே... ஹி... ஹி...!) எழுப்பி விட்டுடறாளேன்னு இல்லத்தரசி மேல (வெளிய காட்ட முடியாத) எரிச்சல்! தீபாவளி அன்னிக்கு மட்டும் உலகத்திலுள்ள எல்லாத் தண்ணீரிலும் கங்கை வியாபித்திருக்கறதா ஒரு ஐதீகமாம். அதனால எல்லாரும் ‘கங்கா ஸ்நானம் ஆசசா?'ன்னு விசாரிச்சுக்கறதை வழக்கமா வெச்சிருக்காங்க. எதிர் வீட்டு கங்காவைப் பாத்து நான் ஒரு தடவை இப்படிக் கேக்கப் போய்.... ஓ, மேலே கேக்காதீங்க!

தீபாவளி நாள்ல சேட்டுங்கல்லாம் மகாலக்ஷ்மி பூஜை செய்து, புதுக் கணக்கு எழுதவும், புது தொழில் தொடங்கவும் உகந்த நாளா கொண்டாடறாங்க. இமாசலப் பிரதேசத்துல பலவித மண்பாணடங்களை வர்ணம் பூசி அழகுபடுத்தி பிரார்த்தனை பண்ணி அதை மத்தவங்களுக்குப் பரிசாத் தந்து (எவ்ளவு நல்ல பழக்கம்!) கொண்டாடறாங்க. ராஜஸ்தான்ல ஒட்டகம், யானைல்லாம் வெச்சு அணிவகுப்பு நடத்தி, குன்றுகள்ல பெரிய தீபம் ஏத்தி, கலர்கலரா டிரஸ் பண்ணி குதூகலமா கொண்டாடறாங்க. ஒரிஸ்ஸாவுல முன்னோர்களுக்கு படையல் வெச்சு, இந்த தினத்தைக் கொண்டாடறாங்க. பீஹார்ல அரிசி மாவுல லக்ஷ்மி படம் வரைஞ்சு (சினிமா நடிகை இல்லீங்க... கடவுள்!) பட்டாசு வெடிச்சு, துளசிச் செடிக்கு முன்னால படையல் போட்டு தீபாவளியை கொண்டாடி மகிழறாங்க. நாமல்லாம்... காலைல பலகாரத்தை சாம்பிளா டேஸ்ட் பாத்து கொறிச்சுட்டு, தலயோட ஆ ரம்பம் படம் பாக்க தலதெறிக்க ஓடி தீபாவளியக் கொண்டாடப் போறோம்... ஹி... ஹி... ஹி...!

தீ
பாவளிப் பண்டிகையப் பத்தி மகாத்மா காந்தி சொன்ன கீழ்க்கண்ட வரிகளை அப்படியே உங்களுக்கு சப்மிட் பண்ணிட்டு நான் ஜுட் விட்டுக்கறேன். ஸீ.யு...!

தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பது குழந்தைகளுக்குக் குதூகலத்தை ஏற்படுத்துகிறது என்பது எனக்கு ஒன்றும் தெரியாத விஷயமல்ல. ஆனால் இந்தப் பழக்கத்தையெல்லாம் முதலில் அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது நம்மைப் போன்ற பெரியவர்கள்தானே? ஆப்பிரிக்காவில் உள்ள சிறுவர்கள் பட்டாசு வெடிக்க விரும்புவதாக நான் கேள்விப்பட்டதில்லை.

கடைகளில் விற்கப்படும் தரக்குறை வான இனிப்புகளை விட ஆரோக் கியமான விளையாட்டுகளும், உபயோகமான ஓர் இடத்துக்கு பிக்னிக் செல்வதும் எவ்வளவோ நன்மை விளைவிக்கும். ஏழைச் சிறுவர்களாக இருந்தாலும் சரி, பணக்கார வீட்டு சிறுவர்களாக இருந்தாலும் சரி, இதுபோன்ற விடுமுறை நாட்களில் வீடுகளை வெள்ளையடித்துச் சுத்தப் படுத்தக் கற்றுக் கொடுக்க வேண்டும். உழைப்பின் கெளரவத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தீபாவளியன்று கரியாக்கப்படும் பணத்தில் ஒரு பங்கையாவது மிச்சப்படுத்தி காதி இயக்கத்துக்குக் கொடுங்கள். அதில் விருப்பம் இல்லாவிட்டால் வறுமையில் வாடும் ஏழைகளுக்குச் சேவை செய்யக் கூடிய ஏதாவது ஓர் இயக்கத்துக்கு அந்தப் பணத்தைக் கொடுத்து உதவுங்கள்.


                                                                       -‘யங் இந்தியா' இதழில் காந்திஜி


Monday, October 28, 2013

மார்ஜியானா - காதல் - நான்!

Posted by பால கணேஷ் Monday, October 28, 2013
து ஒரு மிக இளமைக் காலம். நான் பணிபுரிந்து கொண்டிருந்த நிறுவனத்தில் அவளும் வேலை செய்தாள். அலுவல் நிமித்தம் நிறையப் பேச வேண்டிய சந்தர்ப்பம். அலுவல் தாண்டியும் பேச வைத்தது. அணிலையும் நேசிக்கும் அவள் உள்ளம் என்னை நேசிக்க வைத்தது; நேசிக்கப்பட்டவனாக்கியது. குடும்பத்தினர் அவளுக்கு வைத்த பெயர் வேறு. நான் வைத்த பெயரான ‘மார்ஜியானா’ என்பது அவளுக்கும் பிடித்தமானதாயிற்று. இப்படிப் பெயரிட்டு அழைத்ததற்கும் ஒரு காரணம் உண்டு.

நீங்க வாத்யார் நடித்த ‘அலிபாபாவும் 40 திருடர்களும்' பார்த்திருக்கிறீர்களா? அதில் பானுமதியின் கதாபாத்திரத்தின் பெயர் மார்ஜியானா. அரேபிய பாணியில் ‘பலூன் பேகீஸ்' என்று பேஷனாக அழைக்கப்பட்ட டிரஸ் மாதிரி தொளதொளவென்று ஒரு கால்சராயும், மேலங்கியும் அணிந்திருப்பார் பானுமதி அந்தப் படம் முழுவதிலும். நான் கண்டு ரசித்த மங்கையும் பல நாட்கள் சுடிதாருக்கு லெக்கின்ஸ் அல்லது பேண்ட் அணியாமல் பானுமதி போட்டிருப்பது போல லூஸான சராய் அணிந்து வருவாள். அதனால் வைக்கப்பட்ட காரணப் பெயர் அது. பின்னாட்களில் நான் அசந்து மறந்து அவளது சொந்தப் பேரில் அழைத்தால்கூட, ‘‘ஏன் பேரை மாத்தறே?" என்று அவளே கேட்குமளவுக்கு நான் வைத்த பெயர் பழகிப் போயிற்று.

ப்ளாக்கில் எழுதும்போது பகிர முடியாத பல விஷயங்களை முகநூலில் எளிதாகப் பகிர முடிகிறது. (தங்கைகள் பூரிக்கட்டையைத் தூக்க மாட்டார்கள் என்ற தைரியத்துடன்) அங்கே சற்று சுதந்திரமாக ‘ரெமோ’வாக உலா வரலாம். அப்படி நான் சில சந்தர்ப்பங்களில் என் காதல் தருணங்களை அங்கே பகிர்ந்தேன். அதன் நீட்சியாகத்தான் கவிதையைப் பற்றிய நினைவு வந்ததும் மார்ஜியின் நினைவும் அவளுக்காய் நான் எழுதிய கவிதையும் நினைவு வந்து போன பதிவில் தரப்பட்டது. முகநூலில் நான் பகிர்ந்த மார்ஜியுடனான காதல் துளிகள் இங்கே உங்களுக்காக ரிப்பீட்டேய்...!

============================================

மெலிதான மழைத் தூறல் வெளியில்...! பார்க்கின் ஷெல்ட்டர் ஒன்றினுள் நானும் அவளும் தனித்திருந்தோம். ‘‘என்ன அப்படிப் பாக்கறே?" என்றாள் மார்ஜியானா. ‘‘எனக்கு சூப்பரா கைரேகை பாக்கத் தெரியும்." என்றேன் நான். ‘‘அட... எங்கே, என் கையப் பாத்துச் சொல்லேன்..." என்று கையை நீட்டினாள் விரல் நகத்தைக் கூட தொடவிடாத கள்ளி! கையைப் பற்றினேன். பாலும் டிகாஷனும் ஒன்றிணைந்தது போல (கொடிபறக்குது அமலா - ரஜினி கரம் பற்றுதல் க்ளோஸ் அப்பில் வருவதை கவனத்தில் கொள்க) இரு கரங்களும் இணைந்திருந்தன. கரத்தை என் முகத்தருகில் கொண்டுவந்து பார்த்தேன். கையைத் தடவி சற்று நேரம் ரசித்தேன்.

‘‘என்ன... அப்படிப் பாத்துட்டே இருக்கே... ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறியே...?"

‘‘என்ன சொல்லணும்?"

‘‘கைரேகை பாக்கத் தெரியும்னு சொன்னியே...?"

‘‘எக்ஸாட்லி. அதான் பாத்து, ரசிச்சுட்டிருக்கேனே... பாக்கத் தெரியும்னு சொன்னேனே தவிர, பலன் சொல்லத் தெரியும்னு நான் எப்ப உன்கிட்ட சொன்னேன்?"

‘‘ய்யூ... ராஸ்கல்!" என்றபடி கை கொள்ளுமளவு தண்ணீரைப் பிடித்து என்மேல் எறிந்தாள்.
                                                              -மார்ஜியானாவுடன் ஒரு மழைக்காலத்தில்...!

============================================

‘‘பெண்கள்கிட்ட ஆண்கள் அதிகம் ரசிப்பது என்ன?" திடீரென்று கேட்டாள் மார்ஜி. எக்மோர் ஸ்டேஷன் ப்ளாட்பாரத்தில் அந்த நடுவெயில் நேரத்தில் பென்ச்சில் அமர்ந்திருந்த எங்களிருவரைத் தவிர அதிக ஜனங்களில்லை. ‘‘கண்கள்...!" என்றேன். ‘‘குட்! அப்புறம்...?" என்றாள். நான் சொன்னேன்: ‘‘வருங்காலக் குழந்தையின் ஆரம்பகால ஃபீடிங் பாட்டில்ஸ்!"

‘‘ச்சீய்...!!! ஸ்டுப்பிட்!!!" என்று தன் கைப்பையால் நிஜமாகவே கோபத்துடன் என்னை மொத்தினாள். பின் கேட்டாள்: ‘‘ஆமா... என் ஃப்ரெண்ட்ஸ்ல்லாம் நீ கணேஷ் மாதிரி புத்திசாலின்னு சொல்றாங்க. ஆனா என்கிட்ட மட்டும் ஏன்டா வஸந்த் மாதிரியே நடந்துக்கறே?"

‘‘அதுவா...? நீ ச்சீய்ன்னு நாலு மாத்திரை அளவுக்கு இழுத்துச் சொல்ற அழகை அடிக்கடி பார்த்து ரசிக்கத்தான்...!"

‘‘அப்ப உன்னைப் பாக்கறப்பல்லாம் ச்சீய்... ச்சீய்...ன்னு சொல்லிட்டே இருக்கட்டுமா?"
 
‘‘வேணாம் தாயி...! அப்புறம் என் பேரை மறந்துட்டு எல்லாம் ச்சீய், ச்சீய்ன்னே என்னக் கூப்பிட ஆரம்பிச்சிருவாங்க...!" என்றேன். கை நிறையச் சில்லறைக் காசுகளை மொசைக் ‌தரையில் எறிந்து பாருங்கள்... அது போலக் கலகலவென்று சிரித்தாள்!

                                                           -மார்ஜியானாவோடு ஒரு காதல் காலத்தில்..!

===============================================

நீண்ட நேரம் காக்க வைத்து தாமதமாய் வந்ததற்காய் மார்ஜியைக் கோபித்தேன் நான். கொஞ்சம் கடுமையாகவே பே(ஏ)சி விட்டேன் போலிருக்கிறது. அவள் கண்ணோரம் இரண்டு கண்ணீர் முத்துக்கள் திரண்டு வழிந்தன.

‘‘ஹேய்.... ப்ளீஸ்...! அழாதயேன்... நீ அழுதா என்னால தாங்க முடியாதும்மா..." என்று பதறினேன்.

கண்ணீரைத் துடைத்து விட்டுக் கொண்டு மென்சிரிப்பை உதிர்த்தாள். ‘‘என் மேல அத்தனை அன்பாடா உனக்கு?"

‘‘அதெல்லாம் இல்லடி. நீ சிரிச்சாலே ரொம்ப சுமாரா இருக்கும். அழுதயின்னா பாக்கச் சகிக்காது. அதான்..."

‘‘ச்சீஈய்ய்ய்! யூ ஸ்டிங்கிங் இடியட்!" என்று கோபமாய் என் வயிற்றில் குத்தினாள். ‘‘அவ்வளவுதானா உன் பிரியம், பாசம்லாம்?"

‘‘சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் டியர்...! ஆக்ச்சுவல்லி... நீ சொன்னா பஞ்சமா பாதங்களும்கூட நான் செய்யத் தயார்!"

‘‘ஏய்... இது உளறல்!" என்றாள். ‘‘இல்லை...! இது காதல்!" என்றேன்.

                                         -மார்ஜியானாவுடன் ஒரு மனோகரமான மாலையில்...!

===============================================

மிஸ்டர் ஆவி...! நீங்க சொன்ன மாதிரி பீரியடுக்குப் பொருத்தமான ஃபிகர் படத்தை அட்மாஸ்பியருக்கு வெச்சிட்டேன். இப்ப திருப்தியா? (ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ...?)

===============================================

Tuesday, October 15, 2013

இரண்டாம் ரகசியம்! (நாடக விமர்சனம்!)

Posted by பால கணேஷ் Tuesday, October 15, 2013
கோவையிலிருந்து வந்திருந்த ஆ.வி.யுடன் நானும் மெ.ப.சிவாவும் இணைந்து வாணிமஹாலில் ­ஒய்.ஜி.ம­கேந்ந்­தி­ரா ­கு­ழு­வி­ன­ரின் 'இரண்டாவது ரகசியம்' நாடகம் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அந்நாளில் சோவும், இந்நாளில் டி.வி.வரதராஜனும் போடுகிற மாதிரி சீரியஸான நாடகமாகவும் இல்லாமல், கிரேஸி, எஸ்.வி.சேகர் மாதிரி ஒரேயடியாக சிரிப்புத் தோரணமாகவும் இல்லாமல் ஒய்.ஜி.மகேந்திராவின் நாடகங்கள் இரண்டுங் கலந்து இருக்கும் என்பதை அறிந்ததால் நல்ல ஒரு அனுபவம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன்தான் அரங்கினுள் நுழைந்தோம்.

ரு ரயில்வே ஸ்டேஷனில் புயல் காரணமாக ரயில் தாமதமாவதால் வெயிட்டிங் ரூமில் தங்க நேரிடும் மூவர்தான் முக்கிய கதாபாத்திரங்கள். அரசியல்வாதி ஒய்.ஜி.எம்., குடும்பத் தலைவி ஒருத்தி, ஒரு இதய மருத்துவர் ஆகிய அந்த மூவரிடமும் அதே ரூமில் தற்கொலை செய்து கொண்ட ஆவி ஒன்று இரவானால் பாடும் என்று பயமுறுத்துகிறார் ஸ்டேஷன் மாஸ்டர். (ஆவி பாடும் என்றதும் என் பக்கத்து சீட்டிலிருந்த கோவை ஆவி கொஞ்சம் நெளியத்தான் செய்தாரு!) "என்னடா இது... வைதேகி காத்திருந்தாள் படத்தை உல்டாவாக நாடகமாக்கிடாங்களோ"ன்னு பயமே வந்துருச்சு. நல்லவேளை... அந்த கேரக்டர்ல நடிச்ச ஐஸ்வர்யா பாடாததால தப்பிச்சோம்டா சாமீ...! (அம்­ம­ணி­யின் ‘வெண்­க­லக்’ ­கு­ரல் ­நீங்­கள் ­அ­றிந்­த­தே...) சரி... கதைக்கு வரலாம். ஸ்டேஷன் மாஸ்டர் சொல்லியது போலவே இதயநோய் நிபுணருக்கும், குடும்பத்தலைவிக்கும் ஐஸ்வர்யா தட்டுப்படுகிறார். அங்கி­ருக்­கும் மூவரின் அந்தரங்கங்களையும் போட்டு உடைக்கிறார். ஒய்.ஜி.எம்.மின் கண்களுக்கு அவர் தெரிவதில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஒய்.ஜி.எம்.மின் கண்களுக்கு ஐஸ்வர்யா தெரியும்போது மற்ற இருவரின் கண்களுக்குப் புலப்படுவதில்லை. அனைவரும் அ­வ­ரை ‘ஆவி’யோ என்று சந்தேகிக்க, ‘நான் ஆவியல்ல. என்னைத் தொட்டுணரலாம்’ என்கிறார் ஐஸ்வர்யா. பின்னே அவர் யார்தான் என்கிற ‘இரண்டாவது ரகசியம்’ உடைகிறபோது நாடகத்தின் மெசேஜும் சொல்லப்படுகிறது.

‘‘ரொம்ப நல்ல நாடகமா இருக்கும் போலருக்கே’’ என்று தோன்றுகிறதல்லவா? உண்மை... நல்ல நாடகம்தான். நாடகம் சொன்ன மெசேஜும் அருமைதான். ஆனால் அதை முழுவதுமாக அனுபவிக்க விடாமல் பல்லிடை சிக்கிய சிறு உணவுத் துரும்பாய் நிறைய உறுத்தல்கள். நாடகத்தில் இடம்பெற்ற ஜோக்குகள் மூன்று வகைப்படும். ஒன்று... ஒய்.ஜி.எம். இளைஞராக இருந்தபோது அவரே பேசியதை இப்போது அவரே ரிப்பீட்டுகிறார். உ.ம்.கள்: * ‘‘இவன் சின்ன வயசுல வீட்ல ஊதுபத்தி ஸ்டாண்டை முழுங்கிட்டான்.’’ ‘‘ஐயையோ... என்னாச்சு?’’ ‘‘நல்லவேளையா இவங்க வீட்ல வாழைப்பழம்தான் ஊதுபத்தி ஸ்டாண்ட்’’ * ‘‘அழகான பொண்ணைப் பாத்தேன்னு அவன் சொன்னான்...’’ ‘‘அப்ப நிச்சயமா இந்தப் பொண்ணைச் சொல்லியிருக்க மாட்டான்...’’ -இப்படி ரிப்பீட்டியதில் 30% ஜோக்குகள் சலிப்புத் தந்தன.

மீதி 30% ஒய்.ஜி.எம்.முக்குத் தேவையற்ற ‘ஏ’ ஜோக்குகள். உ.ம்.கள்: * ‘‘இந்த ஊரு பேரென்ன?’’ ‘‘ஏதோ ஒக ஊருன்னு போட்ருக்கு...’’ ‘‘பேரை மாத்தச் சொல்லு, கேக்கறப்பவே வேற அர்த்தம் வருது...’’ * ‘‘என் ஃப்ரெண்ட் ஒரு பல் டாக்டர். ஆஸ்பத்திரி வாசலை பல் ஷேப்ல கட்டியிருந்தான்’’ ‘‘நான்கூட ஹார்ட் டாக்டர். என் ஹாஸ்பிடல் வாசலை ஹார்ட் ஷேப்பில கட்டியிருக்கேன்’’ ‘‘என் ஃப்ரெண்ட் ஒருத்தி கைனகாலஜிஸ்ட். அவ ஹாஸ்பிடல் வாசலை...’’ ‘‘ஐயய்யோ...’’ ‘‘ஏன் அலர்றீங்க? குழந்தை ஷேப்ல கட்டியிருந்தான்னு சொல்ல வந்தேன்’’. ஈஸ்வரா...! இப்படியான 30% ஏ ஜோக்குகள் தலைசுற்ற வைக்கின்றன. சரி போகட்டுமென்றால் மீதி 20% ஜோக்குகள்¢ ஸ்டேஷன் மாஸ்டராக நடித்த சுப்புணி என்ற நடிகரின் (அருணாசலம் படத்தில் ரஜினியை மிரட்டி, பின் ரஜினியால் மிரட்டப்படுவாரே... அவர்!) உயரக் குறைவைப் பற்றி ஒய்.ஜி.எம். அடிக்கிற ஜோக்குகள். ஒருமுறை இருமுறையல்ல.. பல முறை அவர் குள்ளம் என்பதை வைத்து மகேந்திரா ஜோக்கடிக்கும் போது சிரிக்க முடியவில்லை... எரிச்சல்தான் வந்தது! அந்த நடிகர் தன்னைக் குள்ளம் என்று எள்ளி நகையாடப்படுவதை எப்படி சகித்துக் கொள்கிறார் என்பது தெரியவில்லை.

ஆக... இந்த ஜோக்குகளையெல்லாம் தவிர்த்து ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமே வாய்விட்டுச் சிரிக்கிற நல்ல நகைச்சுவை தென்பட்டது. உ.ம்.கள் : * ‘‘கோமாளி மாதிரியும் பிரதமர் இருக்கலாம்னு தேவேகவுடா நிரூபிச்சாரு... நம்ம நாட்டுக்கு பிரதமரே தேவையில்லன்னு மன்மோகன் நிரூபிச்சுட்டாரு...’’ * ‘‘என்னை மாதிரி அரசியல்வாதி தான் நாட்­டு­ல மெஜாரிட்டி. திடீர்னுல்லாம் எதும் மாற்றம் வந்துடாது. ஏதாவது ‘மோடி’ வித்தை நடந்தாத் தான் உண்டு...!’’ அப்புறம்... ஸ்டேஷன் மாஸ்டராக வரும் நடிகர்
சுப்புணி பங்குபெற்ற நீண்ட நகைச்சுவைக் காட்சி ஒன்று.

ஒய்.ஜி.மகேந்திராவும் மற்ற கேரக்டர்களும், ஒவ்வொரு ஜோக் அடிக்கப்படும் போதும் ‘பாங்’ என்ற சப்தத்துடன் துள்ளுவது மிக மிகையாகத் தெரிந்தது. என்னதான் அதிர்ச்சியான ஜெர்க்கான ஜோக்கானாலும் இப்படியா துள்ளிக் குதிப்பார்கள்? அந்த மிகை நடிப்பை ரசிக்க முடியவில்லைதான்...! சரி... ஒரேயடியா குறையாச் சொல்லிட்டிருந்தா எப்படி? நிறைவான விஷயங்கள் இல்லையான்னு கேட்டா... இருக்கத்தான் செய்தன. நாடகம் நடைபெறும் இடம் ரயில்வே ஸ்டேஷன் வெயிட்டிங் ரூம்... தவிர, ஆஸ்பத்திரி அறை, குடும்பத் தலைவியின் வீடு என்று மூன்றே லொகேஷன்கள் என்பதால் திரையை ப்ளாஷ்பேக் வரும் சமயங்களில் இரண்டாகப் பிரித்து லொகேஷன் சேன்ஜ் செய்து காட்டிய விதம் ரசிக்க வைத்தது. அவர்கள் உரையாடல்கள் நடக்கிற சமயத்தில் ரயில்கள் கடந்து செல்வதை ஒளியமைப்பு மற்றும் சப்தம் மூலமாகவே பார்வையாளர்களை உணரச் செய்த உத்தி ரொம்பப் பிடித்தது.

முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ஒய்.ஜி.மகேந்திராவும், ஐஸ்வர்யாவும் மிகச் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தனர். ஸ்டேஷன் மாஸ்டராக நடித்த சுப்புணி என்பவரின் உயரம்தான் குறைவு... அவர் நடிப்பின் உயரம் அதிகம்! ஹார்ட் ஸ்பெஷலிஸ்டாக நடித்தவர், குடும்பத் தலைவியாக வந்த உயரமான பெண், ஃப்ளாஷ்பேக்கில் பேஷண்ட்டின் மனைவியாக வந்த அம்மணி... என்று மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களின் நடிப்பும் சிறப்பாக அமைந்து இவர்கள் மூவரின் நடிப்புக்கு பக்கவாத்தியமாக அமைந்தது. மேலே நான் குறிப்பிட்ட உறுத்தல்களைத் தவிர்த்திருந்தால் ’நல்ல நாடகம் பார்த்தோம்’ என்ற திருப்தி இருந்திருக்கும். இப்போது... ‘‘நல்­ல­வே­ளை... மோ­ச­மா­ன ­நா­ட­கத்­தைப் ­பார்ர்க்­க­வில்­லை’’ என்கிற ஆறுதல் மட்டும் எஞ்சியிருந்தது.

னோ தெரியவில்லை... முன்பு காத்தாடி ராமமூர்த்தியின் நாடகம் பார்த்தபோதும் சரி, இப்போது ஒய்.ஜி.எம்.மின் நாடகம் பார்த்தபோதும் சரி... நாடகம் முடிந்ததும் ஸ்கிரீனுக்குப் பின் சென்று நாலு வார்த்தை பாராட்டிப் பேசலாம் என்பதுதான் முடிவதில்லை. இந்த நடிகர்கள் எல்லாம் நாடகம் முடிந்ததும் பேக் செய்து கொண்டு எஸ்கேப்பாவதிலேயே குறியாக இருக்கிறார்கள். போய் இரண்டு வார்த்தை பேசினால்... ‘‘தாங்ஸுங்க’’ என்று ஒரு முத்தை உதிர்த்துவிட்டு, வேகமாக நகர்ந்து விடுகிறார்கள். (சினிமா நடிகர்களிடம்கூட எளிதாக நிறையப் பேசியதுண்டு நான்.) ஒய்.ஜி.எம்.மிடமும் இதைத்தான் பார்த்தேன். அவருடன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளவே ஆவியும், சிவாவும் கால் மணி நேரத்துக்கும் மேல் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆடியன்ஸின் பல்ஸ் பார்க்காமல் அடுத்தடுத்த நாடகங்களை எப்படி பெட்டராகப் பண்ண முடியும் என்கிற ‘ரகசியம்’ எனக்குப் புரியத்தான் இல்லை...! ஆனால் ஆவிக்கு நாடகம் பார்த்ததிலும், ஒய்.ஜி.எம்.முடன் படம் எடுத்துக் கொண்டதிலும் பரமதிருப்தி. அதனாலேயே எனக்கும் கிடைத்தது கொள்ளை மகிழ்ச்சி!
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube