Sunday, April 22, 2018

நினைவுக் குறிப்பிலிருந்து....

Posted by பால கணேஷ் Sunday, April 22, 2018
மாத நாவல்கள் - 1

1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி சானல்களும், கைபேசிகளும் நேரத்தைப் பிடுங்கிக் கொள்ளாத அந்த நாளில் அந்தத் தொடர்கதைகளைப் படித்து பைண்ட் செய்து வீட்டில் வைத்துக் கொள்வது வழக்கம். பின்னர் பதிப்பகங்களின் வெளியீடுகளாக வரும் அந்தக் கதைகளையும் சிலர் வாங்கித் தங்கள் வீட்டில் சேர்த்து வைப்பதுண்டு. ஆனாலும் பதிப்பகப் புத்தகங்கள் விலை அதிகம் என்று இருந்த காரணத்தால் (இன்றைய நம் விலைவாசியில், பதிப்பகப் புத்தகங்களின் தூக்கலான விலைக்கு நாம் பழகிவிட்ட நிலையில் அந்தப் புத்தகங்களின் தொகை நமக்கு அற்பமாகத்தான் தோன்றும்.) பலரால் வாங்க இயலாத நிலை இருந்தது.

அப்படிப் பதிப்பகப் புத்தகங்களை வாங்கி வைத்துக் கொள்ள இயலாதவர்களின் மனக்குறையைப் போக்குவதற்கு அன்றையப் பதிப்பாளர்கள் வழிவகை செய்திருந்தார்கள். பிரபலமான நூல்களை உயர்தரத்தில் வெளியிடும் அதேசமயம், அவற்றை சற்றே தரமிறங்கிய காகிதங்களில் அச்சிட்டு மலிவுப் பதிப்பு என்றும் வெளியிடுவார்கள். புத்தகத்தின் விலையில் ஏறத்தாழ பாதி விலைக்கும் குறைவாகத்தான் இந்த மலிவுப் பதிப்புகள் இருக்கும். நுங்கம்பாக்கம் ’மங்கள நூலகம்’ நிறுவனம் வெளியிட்ட கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’, எஸ்ஏபியின் ‘காதலெனும் தீவினிலே’, ராஜாஜியின் ‘வியாசர் விருந்து’, தியாகராயநகர் அருணா நிலையம் வெளியிடட்ட ‘அகநானூறு’, ‘புறநானூறு’ உள்ளிட்ட பல நூல்களின் மலிவுப் பதிப்புகளை நான் படித்திருக்கிறேன். அவற்றில் சிலவற்றின் பிரதிகள் இன்றும் என்னிடம் உண்டு.

அப்போதுதான் அறிமுகமானது ‘ராணிமுத்து’ மாதநாவல் இதழ். (வருடம் 1967 என்பதாக நினைவு.) சிறந்த படைப்பாளர்களின் புகழ்பெற்ற படைப்புகளைத் துளியும் சுருக்காமல் அப்படியே மாதம் ஒரு நாவலாகத் தருவது என்ற நோக்கத்துடன் துவங்கப்பட்டது. நியூஸ் ப்ரிண்ட் என்கிற சாணித்தாளில்தான் அச்சிடப்படும். விலை ஒரு ரூபாய்தான். அந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் அடுத்து வரவிருக்கும் நாவல் பற்றிய அறிவிப்பிலேயே தெளிவாகச் சொல்லியிருப்பார்கள். ‘ரூ.5 மதிப்புள்ள இந்த நாவல் உங்களுக்கு ரூ.1க்குக் கிடைக்கும்’, ‘ரூ.3 மதிப்புள்ள இந்த நாவல் உங்களுக்கு ரூ.1 க்குக் கிடைக்கும்’ என்று. பக்க வரையறை கிடையாது. ஒரு புத்தகம் 270 பக்கம் இருக்கும், மற்றொன்று 175 பக்கம் அல்லது 126 பக்கம்கூட இருக்கலாம்.

பேப்பர்களைப் பற்றிக் கவலைப்படாமல் எழுத்தைப் படித்து ரசிக்க விரும்பிய வாசகர்களுக்கு மிகச் சௌகரியமான இதழாக அமைந்தது. நல்ல விற்பனையையும் பெற்றது. முதல் இதழாக அகிலன் எழுதிய ‘பொன்மலர்’ நாவலை வெளியிட்டார்கள். இரண்டாவதாக அறிஞர் அண்ணா எழுதிய ‘பார்வதி பி.ஏ.’ வெளியானது. தொடர்ந்து, பானுமதி ராமகிருஷ்ணாவின் ‘மாமியார்’, மு.வ. எழுதிய ‘அந்த நாள்’, கலைஞர் கருணாநிதியின் ‘வெள்ளிக்கிழமை’, ஜெகசிற்பியனின் ‘நந்திவர்மன் காதலி’, சாண்டில்யனின் ‘ஜீவபூமி’, மாயாவியின் ‘வாடாமலர்’ லக்ஷ்மியின் ‘காஞ்சனையின் கனவு’, ரா.கி.ரங்கராஜனின் ‘ஒரே வழி’, தமிழ்வாணனின் ‘பாலைவனத்தில் பத்து நாட்கள்’ ...இப்படி கணக்கற்ற க்ளாஸிக் நாவல்கள் எளிமையான விலையில் கிடைத்தன.

பின்னாளில் க்ளாஸிக்குகளைக் கைவிட்டு புதிதாக எழுத்தாளர்களிடம் நாவல் வாங்கி வெளியிடப்பட்டது ‘ராணிமுத்து’வில். அப்போதும் 100க்குக் குறையாத பக்கங்கள் கொண்டதாக, எழுதுபவர்களுக்கு நிறைய ஸ்பேஸ் தரும் இதழாகவே இருந்தது. இப்போதைய ‘ராணிமுத்து’தான் அளவில் இளைத்து இன்றைய ‘ஜீரோ சைஸ்’ பெண்களைப் போல மிக ஒல்லியாகக் காட்சி தருகிறது.

தவிர ‘ராணிமுத்து’வுக்கு ஓராண்டு சந்தா கட்டினால் ஏதாவது ஒரு க்ளாஸிக்கை இலவசமாக அனுப்பித் தருவார்கள் என்றொரு ஸ்கீமும் இருந்தது. இன்னொரு சிறப்பம்சம், ஆரம்பம் முதலே ஓவியர் ஜெயராஜின் கை வண்ணத்தில் கலர்ஃபுல்லான அட்டைப்படங்களும், உள்ளே நான்கைந்து கறுப்பு வெள்ளைப் படங்களும் தாங்கித்தான் வெளிவரும். இப்போது அட்டைப்படம் திரை நட்சத்திரங்களைத் தாங்கி வந்தாலும், இன்றளவும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, உள் படங்கள் அதே ‘ஜெ’தான் தொடர்ந்து வரைந்து கொண்டிருக்கிறார் என்பது ‘ஜே’ போட்டுப் பாராட்ட வேண்டிய விஷயம். சாண்டில்யனின் ‘ஜீவபூமி’ அந்நாளில் திரைப்படமாக்கத் திட்டமிருந்ததால் அட்டைப்பட ஓவியத்தில் நடிகர்திலகம், பத்மியினியின் சாயலில் சாண்டில்யனின் நாயக, நாயகியை அவர் வரைந்திருந்தது இன்றும் நினைவில் பசுமையாக.

என் கல்லூரி நாட்களில் பழைய புத்தகக் கடைகளில் வாங்கித்தான் பல க்ளாசிக் நாவல்களை, குறிப்பாக சாண்டில்யனின் நாவல்களைப் படித்து ரசித்தேன். காலப் போக்கில் இரவல் வாங்கியவர்களும், வெள்ளமும் சாப்பிட்டது போக மிகச்சில பிரதிகளே நினைவுக்காக இப்போது என்னிடம் தங்கியிருக்கின்றன.

ராணிமுத்துவைத் தொடர்ந்து அதே காலகட்டத்தில் வேறு சில மாத நாவல்களும் துவங்கப்பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை பல உண்டு. 

ட்யூரோசெல் பேட்டரி விளம்பரத்தில் வரும் முயல்களைப் போல அந்த மாதநாவல்களெல்லாம் காலப்போக்கில் நின்றுவிட்டன என்றாலும், ஜெயிக்கிற முயலாக ராணிமுத்து இன்றும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த மற்ற மாதநாவல்களைப் பற்றி...


சிறிது இடைவெளி விட்டு... தொடரலாமா என்பதை நீங்கள் சொல்லுங்கள்.

Wednesday, April 18, 2018

பேரா சார் முக்கியம்..?

Posted by பால கணேஷ் Wednesday, April 18, 2018

பேருல என்ன சார் இருக்கு..? எல்லாம் எழுதி வெச்சபடிதான் நடக்கும்” என்கிற நம்பிக்கைவாதிகளும் சரி, “பேர்ல ஒண்ணுமே இல்ல, எல்லாம் நம்ம திறமைலயும் செயல்பாட்டுலயும்தான் இருக்கு“ என்கிற தன்னம்பிக்கை வாதிகளும் சரி... பெயரில்தான் பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

ஒரு நண்பர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்ததாகத் தகவல் வந்தது. பார்க்கச் சென்றேன். தலையிலும் கையிலும் பெரிய கட்டுக்களோடு படுத்திருந்தார். “என்னய்யா வரதராஜன், எப்டி இப்டி அடிபட்டுது..?” என்றேன். “என் பேராலதான்யா இவ்ளவு பெரிய அடி...” என்றார்.

பேராலயா..? என்னய்யா சொல்ற..?”

அதை ஏன்யா கேக்கற..?” என்று அவர் இழுத்தார்.

சரி, கேக்கலை விடு”

அட, கேளுய்யான்னா...” என்றார் எரிச்சலாக. “நேத்து ஈவினிங் வாக் வந்துட்டிருந்தேன். கைல மொபைல வெச்சுகிட்டு ஃபேஸ்புக்க ஓபன் பண்ணிகிட்டே என் தெருவுல நொழைஞ்சப்ப எதிர்வீட்டு பரந்தாமன் எதிர்ல வந்தான். திடீர்னு என்னைப் பார்த்து, ‘எருமை வரது’ அப்டின்னு கத்தினான். கடுப்பாய்ட்டேன் நான். ‘என்னய்யா திமிரா.? மரியாதையாப் பேசு’ அப்டின்னேன் கோபத்தோட. அவனானா கொஞ்சமும் அசராம கைய வேற நீட்டி, “யோவ், எருமை வரது”ங்கறான் மறுபடி.

இன்னொரு தடவை வாயத் தொறந்த, தொலைச்சுடுவேன்’ அப்டின்னு விரல் காட்டி வார்ன் பண்ணேன். அவ்ளவுதான்யா தெரியும். திடீர்னு பின்னால மலை மோதின மாதிரி ஒரு பீலிங். நாலடி முன்னால பறந்து அங்கருந்த ஒரு ஆட்டோல இடிச்சுகிட்டு கீழ விழறேன். தலை தரைல மோதி ரத்தம் வருது. நிமிர்ந்து பாத்தா, ஒரு எருமை என்னைத்தாண்டி ஓடுது. அந்தப் படுபாவியானா மெதுவா பக்கத்துல வந்து, ‘எருமை வரதுன்னு நான்தான் கத்தினேனேய்யா. இப்டியா கவனிக்காம எருமை மாதிரியே வருவ.?’ அப்டிங்கறான். வேற பேர் வெச்சுக்கலாமான்னு யோசனை பண்ணிட்டிருக்கேன் இப்போ.” என்று பாண்டியராஜன் ஸ்பெஷல் விழி விழித்தபடி அவர் கூற என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

ண்பரொருவரின் (ஒரு நண்பர் இல்லை, இவர் வேறு) அனுபவம் வேறுவிதமானது. பைக்கில் வந்த இவரை ஒரு ட்ராபிக் கான்ஸ்டபிள் வழிமறித்திருக்கிறார். டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் எல்லாம் சோதித்துவிட்டு “இன்சூரன்ஸ் புதுப்பிக்கலை. ஃபைன் போடணும்” என்றிருக்கிறார். “அடாடா, கவனிக்கலை சார். நாளைக்கே ரின்யூ பண்ணிடறேன். ஸாரி சார்..” என்று இவர் விதவிதமாகக் கெஞ்சியும் பிரயோஜனம் இல்லை. பைன் கட்டியே தீரணும் என்று அடம்பிடித்த கான்ஸ், ரசீது புக்கை எடுத்து வண்டி நம்பர் எழுதிவிட்டு, பேரைச் சொல்லுங்க என்றிருக்கிறார். இவர் சொன்னார் : ‘ஸ்தலசயனப் பெருமாள்’.

என்னது..? என்ன பேர் சொன்னீங்க..?”

ஸ்தலசயனப் பெருமாள்..”

அவர் தமிழில் எழுதிப் பார்த்திருக்கிறார். ஆங்கிலத்தில் எழுத முயன்றிருக்கிறார். இந்தப் பெயரை எப்படி எழுதுவதென்று தெரியவில்லை. பேய்விழி விழித்தபடி, “சரி, சரி, கிளம்புங்க. உடனே சரி ரின்யூ பண்ணிடுங்க. போங்க.” என்று விட்டு விட்டாராம். நண்பரொருவர் சொல்லிச் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார் அடுத்த ஒரு வாரத்துக்கு.

சிலபேர் தங்கள் பிள்ளைகளுக்கு மாடர்னாகப் பெயர் வைப்பதாக எண்ணிக் கொண்டு, தாங்கள் அறியாமலேயே விசித்திரமான பெயர்களை வைப்பதும் நடப்பதுண்டு. உறவினர் வீட்டு விசேஷம் ஒன்றிற்குச் சென்றிருந்தபோது, அவரின் பெயரன் துறுதுறுவென்று ஒரு இடத்தில் நிற்காமல் ஓடியாடிக் கொண்டிருந்தான். “பெயரென்ன?” என்று கேட்டதற்கு “ரேவந்த்” என்றார். “இப்டில்லாமா பேரு இருக்கு..?” என்று விழித்தேன். “இது நார்த்சைட்ல வெக்கப்படற பேர்தான்யா. நல்லாருக்குல்ல சொல்றதுக்கு..” என்றார். தலையாட்டிவிட்டு வந்த நான், பெயரகராதியில் இப்படி ஒரு பெயர் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தபோது இருந்தது. பெயருக்கான விளக்கம் இப்படி.... ‘ரேவந்த் - குதிரைகளைப் பராமரிப்பவன்’ ஹா.. ஹா.. ஹா...

இதேபோல மற்றொரு சந்தர்ப்பத்தில் ‘தேனுகா’ என்ற பெயரைக் கேள்விப்பட்டு நான் (வழக்கம்போல்) அகராதியைக் கேட்டதில் வந்த பதிலானது... ’தேனுகா - மாட்டுமந்தை’. , என் கடவுளே, அர்த்தம் புரிந்தால் இப்படிப் பெயர் வைப்பார்களோ... கலைவாணி என்று பெற்றோரால் ரசனையுடன் வைக்கப்பட்ட பெயரைப் பெரும்பாலோர் உச்சரிப்பு வழக்கில் களவாணி என்றே அழைப்பதால் பெயரையே கெஜட்டில் மாற்றிக் கொண்ட பெண்ணையும் நான் சந்தித்திருக்கிறேன்.

ஆக, கயல், யாழிசை போன்ற இனிய தமிழ்ப் பெயர்களும், ராமன், கிருஷ்ணன், சரஸ்வதி போன்ற தெய்வப் பெயர்களுமே வைப்பதற்கு உகந்தவை. எந்தக் குழப்பமும் பிரச்சினையும் வராதவை என்பதை அறிந்து தான் நம் முந்தைய தலைமுறை அத்தகைய பெயர்களைச் சூட்டியிருக்கிறது.

நம் வாத்யார் எம்ஜிஆர் கூட தன் படங்களில் கதாநாயகர்களுக்கு முருகன், ராமு, கண்ணன் என்றெல்லாம் எளிய பெயர் வைத்ததற்குக் காரணமும் அதுவே. ஆதலினால் உலகத்தீரே... உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குச் சுத்தத் தமிழ்ப் பெயரையே வைப்பீராக.

(ஹப்பாடா, சந்தடிசாக்குல ஒரு மெசேஜும் சொல்லியாச்சுப்பா. நல்ல எழுத்தாளர்ன்னுடுவாங்க. ஹி... ஹி.. ஹி...)

-‘சிருஷ்டி’ இணைய இதழில் வெளியானது.

Thursday, March 8, 2018

உதயமூர்த்தியும், உப்புமாவும்!

Posted by பால கணேஷ் Thursday, March 08, 2018

டி மாதத்து அம்மன் கோவில் ஒலிபெருக்கி போல அலறினாள் சாந்தி. “என்னது..? உன்னோட தம்பி பிரசவிச்சுட்டானா..?”
கண்களில் சலிப்புக்காட்டிப் பார்த்தான் உதயமூர்த்தி. அருகில் நெருங்கி, அவள் காதுகளிலிருந்து இயர்போன்களைப் பிடுங்கிக் கீழே போட்டான். “என் தம்பி ஊர்ல அவன் நடத்திட்டிருந்த ப்ரஸ்ஸை வித்துட்டான்னு சொன்னேன்மா. நெக்ஸ்ட் வீக் இங்க வந்து தங்கி, வேலை தேடப் போறானாம். போன் பண்ணான்”
“நோ வே. உங்க தம்பிக்கும் சேத்து வடிச்சுக் கொட்ட என்னால முடியாது. எங்கனாச்சும் உன்னோட ப்ரண்ட்ஸ் ரூம்ல தங்கிக்கச் சொல்லு...” என்றாள் கண்டிப்பாக. 
“ம்க்க்கும். உள்ளூர்ல உன் வீடு இருக்கறதால பாதி நாள் உன் தம்பிக்கு டிபன், சாப்பாடுன்னு சகலமும் இங்கருந்துதான். பத்து கிலோ அரிசிய பத்தே நிமிஷத்துல காலி பண்ற அந்த சின்டெக்ஸ் டாங்க்குக்கே வடிச்சுக் கொட்டறே... இதைச் செய்ய மாட்டியா..?”
“சாப்பாட்டு ராமன், சின்டெக்ஸ் டாங்க்... இன்னும் எப்டில்லாம என் தம்பிய மட்டம் தட்டறதா ஐடியா உனக்கு.? உன்னோட தம்பியப்போல மனசெல்லாம் வஞ்சனையா இருந்தா உடம்பு ஊசியாட்டம்தான் இருக்கும் உதயா...” என்று அவள் வரிந்து கட்டிக்கொண்டு யுத்தத்துக்குத் தயாராக, சும்மாக் கிடந்த சைரனைத் தெரியாமல் ஆன் செய்து விட்டோமே, இனி இது இப்போதைக்கு ஓயாதே என்று உ.மூர்த்தி ‘ழே’ யென்று விழிக்க, அதே செகண்டில் “அக்கா..” என்று வாசலிலிருந்து குரல் கேட்டது. பல்லெல்லாம் வாயாக எண்ட்ரியானான் சாந்தியின் தம்பி ஹரி.
கேஸ் சிலிண்டர் ஒன்றை நிறுத்தி வைத்து, அதற்குக் கை, கால்கள் கொடுத்து, அதன் மீது பூசணிக்காய் ஒன்றை வைத்து, அதில் சோவின் கண்கள் போல பெரிய கண்கள் கொண்ட ஒரு உருவத்தைக் கற்பனியுங்கள். அதுதான் ஹரி.
உள்நா(வீ)ட்டு உக்கிர யுத்தமொன்றில் உத்தரவின்றி உள்நுழைந்து விட்டதை அறியாமல் உற்சாகமாகப் (எத்தனை உ!!) பேசினான் ஹரி. “மாமா, அம்மாக்கு இன்னிக்கு உடம்பு சரியில்லாததால அக்கா வீட்லயே டிபன், சாப்பாடு சாப்ட்டுக்கோன்னு சொல்லிட்டாங்க. நான் இப்போ டயட்ல இருக்கறதால...”
“இருக்கறதால..?”
“எட்டே எட்டு தோசையோட சிம்பிளா டிபனை முடிச்சுக்கலாம்னு இருக்கேன் மாமா. அக்கா, டிபன் செஞ்சாச்சா..?” என்றபடி வைரமுத்துவை முறைக்கிற ஜீயர் போலத் தன்னை முறைத்த உ.மூ.வைக் கண்டுகொள்ளாமல் சாந்தியை நெருங்கினான்.
“காலைல எழுந்ததே லேட்டுடா. ஸண்டேதானே மெல்லப் பண்ணலாம்ங்கற நெனப்புல இன்னும் லேட்டாயிட்டுது. உங்க மாமா இருக்காரே... மத்த புருஷன்கள மாதிரி வீட்டைப் பெருக்கறாரா, காபி போடறாரா, இல்ல கிச்சன்ல காய் நறுக்கி ஹெல்ப்பாச்சும் பண்றாரா..? ஆபீஸ்ல இருக்கற மாதிரியேதான் இங்கயும் தேமேன்னு உக்காந்திருக்கார்..”
“என்னது..? மத்த புருஷன்களா..? அடிப்பாவி... எத்தனை நாளா எனக்கு துரோகம் பண்ற..?”எப்எம் ரேடியோ அறிவிப்பாளினி போல இன்ஸ்டன்ட்டாக அலறினான் உதயமூர்த்தி.
“அடச்சே... மத்த வீடுங்கள்ல இருக்கற மத்த பெண்களோட புருஷன்களைப் போலன்னு சொல்ல வந்தேன். அதுனால ஹரி.. இன்னிக்கு சிம்பிளா உப்புமா பண்ணலாம்னு இருக்கேன்.”
“ஐயையோ... உன்னோட உப்புமாவா..? போன வாரம் டிபன்பாக்ஸ்ல நீ தந்த உப்புமாவைத் தின்னுட்டு கொஞ்சத்தை எங்க தெரு நாய்க்குப் போட்டேன். அது இன்னி வரைக்கும் என்னைக் கடிக்கறதுக்கு வெறி கொண்டு துரத்திட்டிருக்கு. அதுக்குப் பயந்து ஓடியே நாலு கிலோ குறைஞ்சிட்டேன். ஆள விடுக்கா. சூர்யபவன்ல உளுந்துவடை சைசுக்கு சப்பாத்தி போடுவான். அதைச் சாப்ட்டுக்கறேன்..” என்று அலறியபடி ஓடி மறைந்தான் ஹரி.
“ஹும், சொந்தத் தம்பியே மதிக்கலன்னா மத்தவங்கள என்னத்தச் சொல்றது..?” என்றபடி சமையலறையை நோக்கி நகர முற்பட்ட சாந்தியைக் கையமர்த்தித் தடுத்தான் உதயமூர்த்தி. “நீ இன்னிக்கு அநியாயத்துக்கு என்னைச் சீண்டிட்டே. அதனால... இன்னிக்கு உப்புமாவை நானே செய்யறேன்.” என்றான்.
“ஆ... நமக்குக் கல்யாணமான நாள்லருந்து உங்கிட்ட சூடு, சொரணை, ரோஷம் எதுவும் நான் பாத்ததில்லையே...” சாந்தியின் முகம் எண்ணெயில் போட்ட பூரிபோல உப்பியது. “ஆனா, உன்னால உருப்படியா ஒரு காரியமும் செய்ய முடியாது. விட்று உதயா.”
“யார்டி சொன்னது உருப்படியா நான் ஒண்ணும் செய்ய மாட்டேன்னு?”
“போன வாரம் நம்ம வெட்டிங் அனிவர்சரிக்கு வந்த உங்க மேனேஜர்தான்...”
உக்ரமூர்த்தியானான் உதயமூர்த்தி. “ஆபீஸ்ல எல்லாரையும் அவரைப் போலவே நெனச்சுட்டார் போலருக்கு அந்தாளு...・பல்லை நறநறத்தான். 党அடியேய், இன்னிக்கு மட்டும் நான் சூப்பரா உப்புமா செஞ்சு உன்னை அசத்தல...”
“நான் கேக்கறதை வாங்கித் தரணும். டீலா.?” கையை உயர்த்தினாள் சாந்தி.
சனிபகவான் அவன் ஜாதகக் கட்டத்தில் சடுகுடு ஆடுவதை உணராதவனாய், வாராது வந்த அபூர்வ ரோஷத்துடன் பதிலுக்கு கை உயர்த்தினான் உதயமூர்த்தி. “டீல்...”
தொலைக்காட்சியில் ஆழ்ந்திருந்த சாந்தியை இழுத்தது சமையலறையில் இருந்து வந்த நெய் வாசம். என்ன செய்கிறான் இவன்..? எட்டிப் பார்த்தாள்.
“என்ன உதயா..? உப்புமா பண்றேன்னுட்டு முந்திரி வறுத்துட்டிருக்கே..?”
“இங்க பாரு... பட்டாணி வேக வெச்சு எடுத்தாச்சு. கேரட் நறுக்கி வெச்சுட்டேன். வெங்காயம் வதக்கி வெச்சாச்சு. இப்ப இந்த முந்திரியவும் சேத்து, கூடக் கொஞ்சம் நறுக்கின தக்காளியும், பொடிப் பொடியா வெட்டின பீன்சும் போட்டு, கூடக் கொஞ்சம் கறுவேப்பெலையும், பத்து துண்டு பச்சை மிளகாவும் போட்டு...”
“ஏன், முட்டைக்கோஸ், இஞ்சியெல்லாம் விட்டுட்டே...?”
“ஆ... மறந்துட்டேன். தேங்க்ஸ். அதெல்லாத்தயும்கூடப் போட்டுக் கிளறி எறக்கிக் காட்டறேன்டி. நீ பண்றதுக்குப் பேரு உப்புமாவாடி..? போய் அஞ்சு நிமிஷம் ஹால்ல டிவி பாத்துட்டிரு. முடிச்சுட்டுக் கூப்டறேன், போடி பூந்தி”
“எனக்கு வராம இருந்தாச் சரி வாந்தி..” என்றபடி வெளியேறினாள் சாந்தி.
ந்தப் பூனையின் கிடார் இசைக்கு அறையே அதிர்ந்தது. எலியானது தலையணையைக் காதில் வைத்துப் பொத்திக் கொண்டும்கூட, சத்தம் அதைத் தூக்கிப் போட, கட்டிலில் இருந்து அது கீழே விழுந்து, பூந்தொட்டி அதன் தலையில் விழுந்து தலை கிர்ரென்று சுற்ற, விழித்தது அது. 
பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த சாந்தியை இழுத்தது உள்ளேயிருந்து வந்த உ.மூ.வின் அபயக்குரல். “சாந்திம்மா, இங்க கொஞ்சம் வாயேன்...”
சமையலறையின் உள்ளே செல்ல உதயா, எக்ஸிபிஷனில் காணாமல் போன குழந்தை மாதிரி திருதிருவென விழித்தபடி நின்றிருந்தான். “என்னமோ தெரியலம்மா. எல்லாச் சமாச்சாரங்களையும், ரவையவும் போட்டு பத்து நிமிஷமாக் கௌறிட்டிருக்கேன். கெட்டியாகவே மாட்டேங்குது...”
“ஸ்டவ்வைப் பத்த வெச்சிருக்க மறந்துருப்ப. வேறென்ன..” என்று கிடைத்த சாக்கில் அவனைக் கால்வாரியபடி கவனித்தாள். அடுப்பு சரியாகத்தான் எரிந்தது. சட்டியில் எல்லாச் சமாச்சாரங்களும் கொதித்துக் கொண்டுதான் இருந்தன. பின்னே என்னவாகியிருக்கும்..? குழம்பியபடி பார்த்தவளின் பார்வையில் பட்டது ஸ்டவ்வின் அருகிலிருந்த டப்பா.
அடுத்த கணம்...
பெயரிலிருந்த அமைதியைத் தொலைத்து, கோபமாகக் கேட்டாள். “ஏய் உதயா, என்னது இது.?”
“இதுவா..? ரவை டப்பா. இதுலருந்துதான் கொட்டிருக்கேன் ரவையை...”
“அடப்பாவி...” சீறினாள் உதயா. “என்ன வேலையப் பண்ணி வெச்சிருக்கே..?” என்றபடி அவனை மொத்தத் துவங்கினாள். நான்கைந்து அடி அடித்தவள், அடுத்த கணம் குமரிமுத்துவும் பி.எஸ்.வீரப்பாவும் சேர்ந்து சிரிப்பதைப் போல வித்தியாசமான ஒரு டோனில் அடுக்கடுக்காகச் சிரிக்கத் தொடங்கினாள்.
ஒன்றும் புரியாமல் ‘ழே’ என்று விழித்தபடி பரிதாபமாகக் கேட்டான் உ.மூ. “பழைய படத்துல சிவாஜிகணேசன் பண்ற மாதிரி இப்டி கோவிச்சுக்கிட்டே சிரிச்சா எப்டி சாந்தி..? என்ன விஷயம்னு சொல்லிட்டாச்சும் சிரியேன், ப்ளீஸ்..”
“யோவ் லூசு... ஹாஹாஹா... டப்பாவைச் சரியாப் பாக்க... ஹாஹாஹா... மாட்டியா..? இது ரவை... ஹாஹாஹா.. இல்லடா. காலைல நான்.. ஹாஹாஹா... வாங்கி வெச்ச கோலமாவு...” சிரித்தபடியே கோபத்துடன் அவன் தலையில் அவள் ஓங்கிக் குத்த, ஈரேழு பதினான்கு லோகங்களும் இருமுறை சுற்றிவிட்டு நேராகி நின்றன அவனுக்கு.
அடுப்பை அணைத்தபடியே, “பாவி மனுஷா... நீ கொட்டின தக்காளி, முந்திரி, எட்செட்ரா எட்செட்ராவை மட்டும் வறுத்துத் தின்னிருந்தாலே பசி அடங்கியிருக்கும். இப்ப அத்தனையும் வேஸ்ட்டு. உன்னைச் சொல்லிக் குத்தமில்லய்யா. உங்கம்மாவோட வளர்ப்பு அப்டி...” என்று அவள் அர்ச்சனையை ஆரம்பிக்க, “ஹி.. ஹி.. ஹி..” என்று இளித்தபடி நழுவலானான் உ.மூ.
“ஏய், நில்லு...” சட்டையைப் பிடித்து இழுத்தாள். “கேவலமாக் கூட உப்புமாச் செய்ய முடியாம நீ தோத்துட்ட. ப்ராமிஸ் பண்ணா மாதிரி நான் கேக்கறதை வாங்கிக் குடுத்தாகணும் நீ...”
“ஹி... ஹி... பந்தயம்லாம் ஒரு விளையாட்டுக்குப் போட்டுக்கறது சாந்திம்மா. இதயெல்லாம் சீரியஸா எடுத்துக்கலாமா..? ஹி... ஹி...”
“மரியாதையா சொன்ன வாக்கைக் காப்பாத்தணும். இல்லாட்டி இந்த வாரம் பூரா மூணு வேளையும் உனக்கு உப்புமாதான்.”
“ரைட்டு. என்ன வேணுமோ கேளு..” தெம்பாக இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும் என்னத்தைக் கேட்டுத் தொலைப்பாளோ என்று உள்ளே குதிரைக்குட்டி உதைத்தது உ.மூ.வுக்கு.
“எனக்கு ஒரு ஆப்பிள் வாங்கித் தந்துடு...”
“செல்லாக்குட்டி..” ரிலாக்ஸானான் உ.மூ. “ஒண்ணு இல்லடா, ஒரு டஜனே வாங்கித் தரேன், போதுமா..?”
கேஸ் தீர்ந்து போன ஸ்டவ் எரிவதுபோல, பகபகவெனச் சிரித்தாள் சாந்தி. “லூசு... நான் கேட்டது திங்கற ஆப்பிள் இல்ல... ஆப்பிள் ஐபோன்”
“என்னது..?” தலை சுற்ற ஆரம்பித்தது உ.மூ.வுக்கு. “இப்ப நீ வெச்சிருக்கறதே என்னைவிட ஸ்மார்ட்டான போனாச்சே... வேற எதாச்சும் கேள்டா செல்லம்..”
“போனா இது..? பலசமயம் மக்கர். நான் பேசினா எதிர்முனைல இருக்கறவங்களுக்கு சரியாவே கேக்க மாட்டேங்குது.’‘
“அப்படியாப்பட்ட நல்ல போனைப் போய் மாத்தலாமா சாந்தி...” என்றவனை, கை நீட்டி எச்சரித்தாள். “மரியாதையா சொன்ன வாக்கைக் காப்பாத்திடு. இல்லாட்டி உன் பனிஷ்மெண்ட் ஒரு வாரம்ங்கறதை ஒரு மாசம்னு மாத்திடுவேன்...”
தலையைச் சுற்றிப் பல ராக்கெட்டுகள் பறக்க, தடாலெனத் தரையில் சரிந்தான் உதயமூர்த்தி.
• • •

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube