Monday, April 30, 2012

கடுகு சிறுத்தாலும்....

Posted by பால கணேஷ் Monday, April 30, 2012

நேற்று 29.04.2012 அன்று ‘அப்புசாமி-சீதாப்பாட்டி அறககட்டளை’ ஏற்பாட்டில் எழுத்தாளர் அகஸ்தியன் என்கிற கடுகு என்கிற திரு.பி.எஸ்.ரங்கநாதன் அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தி, பதக்கம் அணிவித்து சிறப்பு செய்தார்கள். கூடவே ‘சாவி நினைவு முதலாம் சொற்பொழிவு’ நிகழ்வும் நடந்தது. அந்த நிகழ்ச்சியியை முழுமையாக இருந்து ரசித்தது ஒரு இனிய அனுபவம். நிகழ்ச்சியின் முடிவில் வந்தவர்கள் அனைவருக்கும் சாவி எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ புததகம் பரிசாக வழங்கப்பட்டது போனஸ் சந்தோஷம். அந்த விழாவில் நான் கேட்ட ஒவ்வொருவரின் ‌சொற்பொழிவும் விரிவாகச் சொல்லப்பட வேண்டியவை. ஆனால் பல பதிவுகள் போகுமென்பதால் அதன் ரத்தினச் சுருககம் இங்கே:

பொன்னாடை போர்த்தி மரியாதை!
முதலில் கடுகு அவர்களை வாழ்த்திப் பேசினார் ‘கலைமகள்’ ஆசிரியர் கீழாம்பூர் அவர்கள். இவர் தினமணி ஏ.என்.சிவராமன் அவர்களின் பேரன் என்பது விழாவில் நான் அறிந்த புதுத் தகவல். அவர் பேசும் போது, கடுகு ஸாரும் அவரும் கலந்து கொண்ட இலககிய விழா பற்றிச் சொன்னார். ‘‘அங்க ஒவ்வொருத்தரையும் தன்னை அறிமுகப்படுத்திக்கச் சொன்னாங்க. நான் எழுந்து, ‘நான் கீழாம்பூர், கலைமகள் ஆசிரியர்’ன்னுட்டு உட்கார்ந்தேன். எனக்கடுதது கடுகு ஸார் எழுந்து ஒரே வார்த்தையில தன் அறிமுகத்தைச் ‌சொல்லிட்டு உட்கார்ந்தார் பாருங்க... அந்த ஒரு வார்த்தையிலயே நகைச்சுவை, தன்னம்பிக்கை எல்லாம் இருந்துச்சு. அவர் சொன்னது: ‘நான் மாண்புமிகு கடுகு’ங்கறதுதான்’’ என்று பேசி அரங்கதிர கை தட்டல் பெற்றுச் சென்றார்.

பதக்கமும். பாராட்டுப் பத்திரமும்!
பின்னர் பேசிய சித்ராலயா கோபு அவர்கள், கடுகு ஸாருக்கும் அவருக்குமான நட்பின் வயது 75 என்றபோது பிரமித்தேன் நான். பல நண்பர்களை இடைக காலத்தில் ‘டச்’சில் இல்லாமல் தவறவிட்டு விடும் அனுபவம் பலருக்கும் பொதுவானதே. 25 ஆண்டு காலம் கூடவே இருக்கும் நண்பன் என்பதே பெருமிதமான விஷயம். இவர்கள் பள்ளிப் பருவத்தில் தொடங்கி, இன்றைய தினம் வரை அதே நட்போடு இருந்து வருவது எவ்வளவு பெரிய விஷயம்! சித்ராலயா கோபுவின் பேச்சில் நான் பலமுறை நினைத்த, எனக்கு மிக உடன்பாடான கருத்து ஒன்றைச் சொன்னார். ‘‘இன்றைய பத்திரிகைகளில் 40 சதவீதம் சினிமா விஷயம் வருகிறது. 30 சதவீதத்தை அரசியல் பிடித்து விடுகிறது. மீதியிருக்கும் 30 சதவீதத்தில் சிலபல மேட்டர்கள் போட்டு விட்டு ஒரு தொடர்கதையும், அரைப் பக்கமோ, ஒரு பக்கமோதான் சிறுகதைகள் வருகின்றன. அந்நாட்களில் பத்திரிகைகளில் நான்கு சிறுகதைகளுக்குக் குறைவில்லாமல் இருக்கும். இப்போதான் ‌இப்படி. கேட்டா, காலம் மாறிப்‌ போச்சுங்கறாங்க - என்னமோ... தமிழ்நாடு பூரா போய் சிறுகதை போட்டா படிக்க மாட்டீங்களான்னு கணக்கெடுப்பு எடுத்துட்டு வந்த மாதிரி...’’ என்றார். மிக நியாயம்தானே அவர் சொன்னது!

ஜ.ரா,சு, அவர்களுக்கு பொன்னாடை!
எழுத்தாளர் (அப்புசாமி புகழ்) பாக்கியம் ராமசாமி அவர்கள் அழகாய் வாழ்த்துரை வழங்கினார். ‘‘கடுகு என்பதற்கு மருத்துவ அகராதியில் ’துன்பத்திற்குத் துன்பம் தருவது’ என்பது. காயம் அல்லது கடி பட்ட இடத்தில் கடுகை அரைத்து, சூடாககி பற்றுப் போட்டால் உடனே வலி குறைந்து விடும். கடுகு இருக்கும் இடத்தில் துன்பம் இருக்காது. (கடுகு ஸாரைக் கை காட்டி) இந்தக் கடுகு இருக்கும் இடத்திலும் துன்பம் இருககாது. நகைச்சுவைதான் இருக்கும்’’ என்று பேசி அரங்கிலிருந்தவர்களின் ஏகோபித்த கையொலிகளைப் பெற்றார். ‘அப்புசாமி - சீதாப்பாட்டி அறக்கட்டளை’ நிறுவனரான அவர் கடுகு ஸாருக்கு் பதக்கம் அணிவித்துப் பாராட்ட, கீழாம்பூர், டெல்லிகணேஷ், சித்ராலயா கோபு மூவரும் பொன்னாடை போர்த்திப் பாராட்டினார்கள்.

வாழத்த வந்த கூட்டத்தின் ஒரு பகுதி!
அடுத்துப் பேச வந்த டெல்லிகணேஷ் டெல்லியில் இருந்த காலத்திலேயே கடுகு ஸாருடன் அவருககு ஏற்பட்ட நட்பைப் பற்றிப் பேசினார். அந்நாட்களில் கடுகு ஸாரின் நாடகங்களை நடித்ததைப் பற்றிச் சொன்ன அவர், அதில் ஒன்றை நடித்தே காட்டினார். ஒரு சங்கீத ஆசிரியரும், வைதீக பிராமணரும் நண்பர்கள். சங்கீத ஆசிரியரின் மனைவி சங்கீதத் தொழிலில் வருமானம் குறைவு நீ வைதிகம் படி என அவரிடம் சொல்ல, அதேநேரம் வைதீக பிராமணரின் மனைவி வைதீகத்தை விட சங்கீதத்தில் வருமானம் அதிகம் எனவே நீ சங்கீதம் படி என அவரிடம் சொல்கிறார். சங்கீத ஆசிரியரும், வைதீக பிராமணரும் சந்திக்கிறார்கள் என்பது சிச்சுவேஷன். சங்கீத ஆசிரியர் ராகம் சொல்லித் தர, அதை வைதீக பிராமணர் மந்திரம் போல உச்சரிப்பதையும், பின் அவர் வைதீக மந்திரம் கற்றுத் தர, அதை சங்கீத ஆசிரியர் ராகமெடுத்துப் பாடுவதையும் ‘மோனோ ஆக்டிங்’காக நடித்துக் காட்டி அரங்கத்தை அதிர வைத்தார் டெல்லியார்.

பின்னர் நன்றியுரை சொல்ல வந்த கடுகு அவர்கள், ஒரு ஜோக் சொன்னார். ‘‘நாலஞ்சு பசங்க விளையாடிட்டிருந்தாங்க. ஒருத்தனை இன்னொருத்தன், ‘டேய் காந்தி, இங்க வாடா’ன்னு கூப்பிட்டான். அதைப் பார்த்த பெரியவர் ஒருத்தர் அந்தப் பையனைக் கூப்பிட்டு, ‘உன் பேர் காநதியா? அந்த பேருக்குரியவரை உனக்குத் தெரியுமா?’ன்னு கேக்க, அவன் ‘தெரியாது’ன்னான். இவர் உடனே, ‘சரி, உனககு நேருவையாவது தெரியுமா?’ன்னு கேக்க... ‘ஓ! நல்லாத் தெரியுமே, என் தம்பி! டேய் நேரு, இங்க வா’ன்னு அவன கூப்பிட்டான்...’’ என்று அவர் சொன்ன ஜோக்கிற்கு எல்லாரும் சிரிக்க, ‘‘இங்கிலீஷ்ல லிங்கன்னும், வாஷிங்டன்னும் ‌போட்டிருந்தது. இப்ப நான் காந்தி, நேருன்னு மாத்திச் சொன்னா சிரிக்கறீங்க.இந்த ஜோக்கோட வயசு 150. அவ்வளவு பழைய புக்ல படிச்சேன் நான். ஜோக்ல புதுசு, பழசுன்னு எதுவும் இல்லை. தெரிஞ்ச ஜோக்கா இருந்தா பழசு. தெரியாததா இருந்தா புதுசு. அவ்வளவுதான்...’’ என்றார் கடுகு ஸார்.

பதக்கத்துடன் கடுகு ஸார்!
இன்னொன்றும் சொன்னார். ‘‘பாக்கியம் ராமசாமி எனக்கு குரு. அவர் கதை ஒண்ணில ஒருத்தன் டாக்டர் கிட்ட போயிட்டு வருவான். இன்னொருத்தன் அவன்கிட்ட எக்ஸ்ரே எடுத்தாராடான்னு கேக்க, அவன் பதிலுக்கு எக்ஸ்ரே, ஒய்ரே, இஸட் ரே, சத்யஜித் ரேன்னு எல்லா ரேயும் எடுத்துப் பார்த்துட்டார்டாம்பான். நான் ரசிச்ச இந்த ஜோக்கை என் கமலா கதைல இப்படி வெச்சேன். கமலா சொல்வா, ‘‘உங்க பக்கத்துக்கு பணம அனுப்ப மதர்ஸ் டே, சிஸ்டர்ஸ் டே, பிரதர்ஸ் டே, காபி டே... இப்படி ஏதாவது ஒரு டேயைக் கண்டுபிடிச்சிடுவீங்களேன்னு. இப்படி அவர் நகைச்சுவையை நான் காப்பியடிச்சதாலதான் குற்றமுள்ள என் நெஞ்சு ‘குரு குரு’ங்குது’’ என்று சொல்லி அனைவரின் கை தட்டலையும் அள்ளினார்.

உண்மையில் நான்கூட நகைச்சுவைக் கதைகள் எழுதும் போது என் சொந்தக கற்பனையுடன் அவரின் சில வார்த்தைப் பிரயோகங்களைக் காப்பியடித்தவன்தான். (இன்னொரு கடுகு என்பார் நண்பர் நடனசபாபதி என்னை) ஆகவே எனக்கும் குற்றமள்ள நெஞ்சு கடுகு ஸாரை ‘குரு குரு’வென்றுதான் சொல்கிறது!

அத்ன் பின்னர் எத்தனையோ எழுத்தாளர்களை உருவாக்கிய மகத்தான, மறக்க இயலாத மாமனிதர் சாவி அவர்களைப் பற்றிய தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு ’சாவி நினைவு சொற்பொழிவு’ ஆற்றினார் எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள்.

மறக்க முடியாத, இனிமையான மாலைப் பொழுதை எனக்கு வழங்கிய கடுகு ஸாருக்கும், அப்புசாமி-சீதாப்பாட்டி அறக்கட்டளையினருக்கும். விழாவில் எடுதத புகைப்படங்களை எனக்கு வழங்கி உதவிய புகைப்படக்காரர் மற்றும் எழுத்தாளரான நண்பர் ’க்ளிக்’ரவிக்கும சொல்வதற்கு ‘நனறி’ என்பதைவிடச் சிறப்பான வார்த்தை ஏதாவது இருந்தால் எனக்குச் சொல்லி உதவுங்களேன் ப்ளீஸ்...!

நான் ‘வாத்தியார்’ ஆயிட்டேன்..!

Posted by பால கணேஷ் Monday, April 30, 2012
‘‘என்னது... கணேஷ் ஆசிரியரா?’’

ன்னோட 100வது பதிவைப் படிக்க வருகை தந்த அனைவருக்கும் கரம் கூப்பிய நன்றி! எந்தப் பள்ளிக்கூடத்துல எனக்கு வேலை கிடைச்சதுன்னும், என்கிட்டப் படிககிற பிள்ளைங்கல்லாம் பாவம்னும் உங்க மனசுல இந்நேரம் எண்ணங்கள் ஓடிக்கிட்டிருக்கும். எல்லாத்தையும் ரப்பர் வெச்சு சுத்தமா அழிச்சிடுங்க. நான் ஆசிரியர் (வாத்தியார்) ஆகியிருக்கிறது இந்த வார ‘வலைச்சரம்’ தளத்துக்கு. உஙக எல்லாரோட வாழ்த்துக்களோடயும், ஆதரவோடயும் இந்த வாரத்தை சிறப்பாப் பண்ண முடியம்கற நம்பிக்கையோட... வலைச்சரத்தின் முதல் நாளான இன்று என்னைப் பத்தி...

அடிச்சுக்கிட்டிருக்கேன். இங்கே கிளிக்கிச் சென்று பார்த்துக் கருத்திடும்படி வேண்டுகிறேன். இனி... நான் படித்தவற்றில் ரசித்த மின்னல் வரிகள் சில உஙகளுக்காக...

========================================

மணலாய்க் கிடந்தது தாமிரபரணி. சித்திரம் தீட்டின மாதிரி லேசான பழுப்பில் முழுசாய் நிலா மிதந்து கொண்டிருந்தது. கை கையாய் அள்ளித் தெளித்த மாதிரி நட்சத்திரங்கள். இந்தக் குளிர் கூட இதமாய் இருந்தது. மணல் இன்னும் சூடாறிப் போகவில்லை. எங்கேயோ ஒரு சிறு குயில். தம்பூரா தந்தியைச் சுண்டி விட்ட மாதிரி திரும்பத் திரும்ப வந்து மொய்க்கும் கொசுவைக் கூட பொறுத்துக் கொள்ளலாம் என்று தோன்றியது.
        -‘வழி தவறிய வண்ணத்துப் பூச்சிகள்’ நாவலில் மாலன்.

========================================

இருள் மண்டிக் கிடந்த குசினியில் ஒரு அனுமானத்தில் பொருட்கள் எதனினும் இடங் கெடாமல் அடுப்பை நெருங்கி அதன் முன்னே குந்தி அமர்ந்தாள். கையை எதிரே நீட்டித் துளாவி அணைந்து கிடந்த விறகுத் துண்டொன்றை எடுத்து அடுப்பில் சாம்பலைப் பரபரவெனக் கிண்டினாள். இரண்டொரு சிறப்புப் பொறிகளை விசிறிக் கொண்டு பலாக் கொட்டை அளவில் ஒரு அனல் கட்டி மிதந்து வந்தது. அதைக் கண்ட பிறகுதான் செல்வி பரபரப்பு அடங்கினாள்.
        -‘நெருப்பு’ சிறுகதையில் தேவகாந்தன்.

========================================

மழை நின்று பெய்தது. மழைக்கும் அதன் அடர்வு பொறுத்துப் பெயர்கள் உண்டு. தூற்றல், தூறல், தூவானம், சர மழை, அடைமழை, பெரு மழை. சிறு தூறலை நெசவா ளர் நூறாம் நம்பர் மழை என்பார்கள் நூலின் சன்ன ரகம் என்ற பொருளில். சீராக ஓசையுடன் பெய்து கொண்டே இருந்தது. மழைக்கு மணம் மாத்திரமல்ல, ஒலியும் உண்டு.
         -‘பேச்சியம்மை’ சிறுகதையில் நாஞ்சில்நாடன்.

========================================

சுக்காய் காய்ந்த உடம்பு முழுக்க வியர்வை. உச்சந் தலையும் வியர்த்தது. முண்டாசு நமத்து அவியல் நாற்றம் எடுத்தது. நடை வேகம் கூடியது. ஈடு கொடுத்துப் பறக்க முடியாத ஒரு கிளி பாரதியின் இடது தோளில் அமர்ந்தது. கிளியின் பக்கம் பாரதி திரும்ப, மீசை மயிர், பச்சைக் கிளியின் சிவந்த அலகோடு உரசியது.
        -‘கவிஞனின் முண்டாசுக்குள் ஒரு கருநாகம்’
          சிறுகதையில் வேல ராமமூர்த்தி.

========================================

டாஞ்சூர் டெம்பிள் வெரி பிக் டெம்பிள்! டெம்பிளிலுள்ள ‘புல்’ வெரி வெரி பிக்! கோபுரத்தின் நிழல் கீழே விழாது. தினம் தினம் விழுந்து கொண்டிருந்தால் அதற்கு பலத்த காயம் ஏற்படும் என்பதற்காக சிற்பிகள் அவ்வாறு கட்டியிருக்கிறார்கள்.
        -‘வாஷிங்டனில் திருமணம்’ நூலில் சாவி

Saturday, April 28, 2012

ஹலோ... ரஜினி ஸ்பீ்க்கிங்-4

Posted by பால கணேஷ் Saturday, April 28, 2012

1978-79கள்ல ‘இதயம் பேசுகிறது’ இதழில் அப்ப வளர்ந்துக்கிட்டு வந்த ஹீரோவான ‘ரஜினிகாந்த்’திடம் தொடர் பேட்டி எடுத்து ‘ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்!’ அப்படிஙகற தலைப்பில சில வாரங்கள் வெளியிட்டாங்க. அதில் சில பகுதிகள் என்னிடம் இருக்கிறது. ‘சிவமகன்’ங்கிறவரு ரஜினி ஸார் பேசற மாதிரியான நடையிலயே அதை எழுதியிருக்காரு. அதுல இருந்து ஒரு பகுதியை இங்க உங்களோட பகிர்ந்துக்கறேன்.  

நான் பார்த்த சினிமாக்கள்!

டஙகள் பார்த்தே நான் நடிக்க வந்தேனோ, என்னவோ...

அவ்வளவு படம் பார்ப்பேன். அதுவும் பார்க்க வேண்டிய நேரத்தில் இல்ல, படிக்கப் போற நேரத்தில். படிக்கிற காலத்தில் பணம் கிடைப்பது கஷ்டம்தான். ஆனா எனக்குப் படம் பார்க்காம இருப்பது அதைவிடக் கஷ்டம்!

படம் பார்ப்பதற்காகப் பொய் சொல்லவும் தயார். ஏன், திருடவும் கூடத் தயார்தான்! வீட்டில கேட்டா அனுப்ப மாட்டாங்க- அதுவும் நான் விரும்பிக் கேட்கிற படத்துக்கு. ஏதாவது ஒரு படம் நூறு நாளைத் தாண்டி ஓடினால், அதுவும் புராணப் படமாக இருந்தால் குடும்பத்தோட நாய்க்குட்டி சகிதமாய்ப் போய்ப் பார்க்கணும். ஹோ.... படா பேஜார்!

என் இஷ்டத்துக்குப் படம் பார்க்கணும்- அவ்வளவுதான்! ஆனா பணம்..? என்னா பெருசு, சேர்த்துக்க வேண்டியதுதானே..? கடை வைச்சிருந்தாங்க எங்க வீட்டிலேயே. அதுதான் எனக்கு அக்கவுண்ட் இருக்கிற பேங்க்... ஆனா, யாருக்கும் தெரியாம பணம் ‘டிரா’ பண்ணனும். அதில எல்லாம் நான் கில்லாடி! பணம் கைக்கு வந்துடும்.

நேரம்..? ஸ்கூலுக்கு ‘கட்’!

வாத்தியாருக்கு லீவ் லெட்டர்- எங்க அப்பா எழுதின மாதிரி. லெஃப்ட் ஹேண்டால அவுங்க கையெழுத்து.

ருநாள் என் அண்ணன் கிட்டே மாட்டிக்கிட்டேன் தியேட்டர்லே. விழுந்தது அடிகள். என் வலது முழங்கையில இப்பவும் அந்த அடிகள் தந்த தழும்பு அடையாளத்தைப் பார்க்கலாம்.

அதுக்குப் பிறகு நான் படம் பார்ப்பது பாதி பாதிதான். இப்பவும் அப்படித்தான். ஸ்டார்ட் ஆன பிறகு போறேன். முடியறதுக்கு முன்னாலேயே வந்துடுறேன். அப்ப வீட்டுக்கு லேட்டா போனா, படம் பார்த்தது தெரிஞ்சு போகும்னு பயம். இப்ப ஜனங்கள் பார்ப்பாங்கன்னு பயம்!

ரு கன்னடப் படம் பார்க்க சைக்கிளில் போய், முடியறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாலேயே புறப்பட்டுப் போக என் சைக்கிள வந்து பார்த்தேன். சைககிள் இருக்கு - டைனமோ இல்லே. யாரோ அடிச்சிட்டுப் போயிட்டாங்க. அங்க சண்டை போடவும் நேரமில்லே. கம்ப்ளைண்ட் பண்ணவும் முடியல. வீட்டில டைனமோ எங்கேன்னு கேட்பாங்களேன்னு பயம். லைட் இல்லாம சந்து பொந்தெல்லாம் நுழைந்து, போலீஸை ஏமாற்றி வீடு வந்து சேர்ந்தேன்.

ஆனா, வீட்டிலே என்ன சொல்றது..? ஒரு ஐடியா தோணிச்சு. சைக்கிளை வீட்டு வாசலுக்கு முன்னால நிக்க வைச்சேன். ஒரு கல்லை எடுத்து உள்ளே இருக்கிறவங்களுக்கு நல்லாக் கேட்கிற மாதிரி ஜோரா சைக்கிள் மேலே வீசி அடிச்சேன். ‘டக்...!’

என்னமோ ஏதோன்னு ஓடி வந்தாங்க. நான் ஓரமா மறைஞ்சிக்கிட்டேன். சைக்கிளைப் பார்த்தாங்க. டைனமோ இல்ல! அவங்களே முடிவு பண்ணிட்டாங்க- கேட்ட ‘டக்’ சத்தம் யாரோ டைனமோவை எடுத்த சத்தம்ன்னு!

பரவாயில்லை... என் மூளையும் அப்போ நல்லாவே வேலை செய்தது. ஆனா, இதுபோல எல்லொருக்கும் மூளை வேலை செய்யும்னு அப்பத் தெரியல. அந்த நிகழ்ச்சி....!

து ஒரு டூரிங் டாக்கீஸ். பேரு ‘பசவேஸ்வரா’. ‌தரை நாலணா, பெஞ்சு பன்னிரெண்டனா- Entrace Fees. இருக்கிற டெண்ட்டும் பழசு, ஓடற படங்களும் பழசு.

எனக்கு ரொம்ப செளகரியம். நாலு மாதத்துக்கு ஒரு வாட்டி கேம்ப் போடுவாங்க. அங்க வேலை செய்யறவங்கதான் உலகத்திலேயே பெரிய அதிர்ஷ்டசாலிங்கன்னு என் நினைப்பு. காரணம்... அவுங்க டெய்லி படம் பார்க்கிறாங்களே..!

நானும் எங்கப்பாவும் வீட்டுக்கு வெளியேதான் படுக்கிறது. ஒன்பது மணிக்குப் படுப்போம். பத்து மணிக்கு அப்பா குறட்டை அடிப்பாரு. பத்தே கால் மணிக்குப் படம் ஆரம்பமாகும். பத்தரை மணிக்கு நான் எழுந்திருப்பேன். மூணு தலையணை வைச்சிருப்பேன் கைவசம். மனுசன் படுத்திருக்கிற மாதிரி ‌தலையணைகளை வைச்சி பெட்ஷீட்டைப் போர்த்திட்டு - அப்பா தூங்கிட்டாங்கன்னு அறிஞ்சுக்கிட்டு - மழை வராததையும் தெரிஞ்சுக்கிட்ட பிறகு என் கால்கள் டூரிங் டாக்கீஸ் பக்கம் பறந்து ஓடும்- இருட்டுல.

நாலணா கொடுத்துட்டு, யாருக்கும் தெரியாம இப்ப நான் தியேட்டருக்குள்ள நுழையிற மாதிரியே அப்பவும் நுழைவேன். யாராவது பார்த்திடுவாங்கன்னு பயந்து, இப்ப படம் பார்க்கிற மாதிரியே அப்பவும் படத்தைப் பார்ப்பேன். படம் முடியறதுக்கு முன்னாடியே ஓடிடுவேன். படதட்தை விட்டு ஜனங்க ரோட்டில இருக்கும் போது நான் என் படுக்கையில இருப்பேன்..!

இருட்டு! அமைதி... கலகல சப்தம். அப்பா எழுந்திடுச்சிடுவாரு. என் படுக்கைப் பக்கம் பார்ப்பாரு. தலையணை போயி சிவாஜிராவ் அங்கே இருப்பான். இப்படியே நடந்தது பல காலம். எதுக்கும் ஒரு முடிவு வேணுமே...

‘ஜெகதேகவீரனி கதா’ கிளைமேக்ஸ் படு இன்ட்ரஸ்‌டிங்! என்னை மறந்து பார்த்துக்கிட்டு இருக்கேன். ‘வணக்கம்’ போட்டதையும் பார்த்திட்டேன். நான் பார்த்த படங்களிலே முதல்ல ‘வணக்கம்’ பாத்து வெளில வந்தேன். லேசா மழை வந்துக்கிட்டு இருக்கு. டெண்ட்டை விட்டுப் பறந்தேன். வீட்டுக்கு வெளியே போயி விழுந்தேன்... பார்த்தேன்!

படுக்கையைக் காணோம்! எல்லாத்தையும் சுருட்டி உள்ளே கொண்டு போயிட்டாங்க- மழை வந்ததுனால. மெதுவா கதவைத் தட்டினேன். தட்டின சப்தம் எனக்கே கேட்கலை. ஆனா... உடனே கதவைத் திறந்தாங்க.

தூங்கிட்டு இருந்த குழந்தைங்க எல்லாரும் எழுந்திருச்சி உட்கார்ந்தாங்க- அடி தாங்காமல் நான் போட்ட சத்தத்திலே! அன்னையிலேருந்து இன்னிக்கி வரைக்கும் நான் வெளியே தூங்கல.

- ரஜினியின் அனுபவங்கள் நிறைவு -

Thursday, April 26, 2012

நடை வண்டிகள் - 14

Posted by பால கணேஷ் Thursday, April 26, 2012
பி.கே.பி.யும், நானும் - 6

பி.கே.பி ஸார் ஒரு PERFECTIONIST. செய்யும் வேலைகளில் 100 சதவீதம் ரிசல்ட்டை எதிர்பார்ப்பார். தாம் செய்யும் வேலைகளிலும் எதிலும் அலட்சியமின்றி அவ்விதமே இருப்பார் அவர். நான் அப்படியான ஆசாமியில்லை. நான் மனதில் வைத்திருந்த டிசைனை என்னால் செயல் வடிவத்தில் கொண்டு வர முடிந்து விட்டாலே திருப்தியாகி விடுவேன். அதில் சின்னச் சின்ன இடறல்கள இருப்பதை பெரிதுபடுத்த மாட்டேன். அதாவது... 80 சதவீதத்திலேயே திருப்தியாகி விடுகிற ஆசாமி.

அதற்கு முந்தைய இதழ் வரை நான் ப்ரிண்ட் அவுட் தர, அதை அவர் திருத்தம் செய்து தர, நான் இறுதி ப்ரிண்ட் அவுட் தருவது என்று இருந்ததால் என்னைப் பற்றிய இந்த விஷயம் அவருக்குத் தெரியாது. கணிப்பொறி முன் அமர்ந்து பணி செய்யும் போது வெளிப்படாமல் போய்விடுமா என்ன? ஒரு டிசைன் நான் செய்து முடித்து, டெக்ஸ்ட் வைத்து பக்கத்தை வடிவமைத்தேன். அப்போது எங்களுக்குள் நடந்த உரையாடல் இங்கே:

பி.கே.பி. : டிசைன் நல்லா இருக்கு கணேஷ்... இங்க பாருங்க... அந்தப் பொண்ணு முகத்துக்குப் பககத்துல சின்னதா நாலஞ்சு டாட்ஸ் இருக்கு. அதை க்ளியர் பண்ணுங்க..

நான் : டிஸைன் ஓ.கே. தானே? அந்தச் சின்ன கறுப்புப் புள்ளிகளை யார்சார் உத்துப் பாத்து கண்டுபிடிககப் போறாங்க? ஏதோ ப்ரிண்டிங்ல இங்க் கொட்டிருச்சுன்னு நினைச்சுப்பாங்க. விடுங்க...

பி.கே.பி. : என்னங்க இப்படிச் சொல்றீங்க? ட்ராஃபிக் சிக்னல்ல ‌கான்ஸ்டபிள் இல்லன்னா, ரெட் இருக்கும் போதே க்ராஸ் பண்ணிப் போய்டுவீங்களா?

நான் : நிச்சயம் போக மாட்டேன் ஸார்!

பி.கே.பி. : கடையில ஒரு பொருள் வாங்கறதுக்கு 50 ரூபாய் தர்றீங்க. கடைக்காரர் ஏதோ ஞாபகத்துல நீங்க 100 ரூபாய் கொடுத்ததா நினைச்சுக்கிட்டு பாக்கி தர்றார். சரின்னு வாங்கிட்டு வந்திடுவீங்களா?

நான்: ஒரு நாளும் செய்ய மாட்டேன் ஸார். அவர்கிட்ட விஷயத்தைச் சொல்லிட்டு மீதிப் பணத்தைக் கொடுத்துடுவேன்.

பி.கே.பி. : ஏன் அப்படிச் செய்யறீங்க? அங்கல்லாம் யாரும் பாத்துட்டா இருந்தாங்க?

நான் : யாரும் பாக்காட்டி என்ன ஸார்..? அதெல்லாம் தப்புன்னு எனக்குத் தெரியும்தானே! என் மனசு சொல்லுமே ஸார்...!

பி.கே.பி. : அதுபோலத்தானே இதுவும். இதை யாரும் பாக்காட்டி என்ன? தப்பா இருக்குன்னு உங்க மனசுக்குத் தெரியணும்தானே..! மத்தவங்க பாக்கறாங்க, பாக்கலைங்கறது பிரச்னையில்ல கணேஷ்! நம்ம கிட்டயிருந்து ஒரு விஷயம் வெளிய போகுதுன்னா, அது நமக்கு 100 சதவீதம் திருப்தியா இருக்கணும். அப்பத்தான் அதுக்கு ஒரு மதிப்பு இருக்கும்.

நான் : புரிஞ்சுது ஸார்... இதோ, சரி பண்ணிடறேன்!

இந்த விஷயம் நான் அவர்கிட்டயிருந்து எடுத்துக்கணும்னு நினைக்காமயே கூட இருந்ததால தானா எனக்குள்ள இறங்கினது. இபபவும் நான் அவர் மாதிரி 100 சதவீதம்னு மார் தட்டிக்க மாட்டேன். முன்பை விட பெட்டரா 95 சதவீதத்துல இருக்கேன்னு வேணா ‌பெருமையா சொல்லிக்கலாம். (ஏறக்குறைய இதே கருத்தை பின்னாளில் இந்திரா செளந்தர்ராஜனும் என்னிடம் ‌சொன்னார். அதுபற்றி இ.செள.ராஜனும் நானும் என்ற பகுதியை எழுதும் போது விரிவாய் விளக்குகிறேன்)

அவருடனான இந்த அனுபவத் தொடரில் நான் ஊஞ்சல் பணியைப் பத்தியும், மத்த அலுவலகப் பணிகள் பத்தியும் சொல்றதுல மாற்றி மாற்றித் தாவ வேண்டியிருக்கிறது. நீங்களும் கொஞ்‌சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு என்னோட தாவுங்க.

ஊஞ்சலின் சில சாம்பிள் டிசைன்ஸ்
புத்தகங்கள் படிக்கிற பழக்கம் ஓரளவுக்கு இருந்ததால கதைன்னா என்ன, எந்த அளவு வர்ணனைகளும், எந்த அளவு உரையாடல்களும் இருக்க வேண்டும் என்கிற விஷயம் எனக்கு சிறிதளவு தெரிந்திருந்தது. அப்போது அவர் டி.வி. தொடர் ஒன்றுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதும் பணியை ஏற்றுக் கொண்டிரு்ந்ததாலும், திரைப்பட வசனப் பணியிலும் ஈடுபட்டிருந்ததால் அலுவலகம் பிஸியாகவே இருக்கும். கதை என்றால் என்ன என்று தெரிந்திருந்த எனக்கு திரைக்கதை என்றால் என்ன, வசனம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை‌யெல்லாம் தெளிவாக எடுத்துரைத்த கலங்கரை விளக்கம் பி.கே.பி. ஸார்.

மிகைப்படுத்தலாகச் சொல்‌கிறேன் என்று தோன்றுகிறது இல்லையா..? பொதுவாக ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனராக இருந்தவர்களைக் கேட்டுப் பாருங்கள்... தனியாக உட்கார வைத்து, கதையில் இந்தத் தவறு, இப்படித் திருத்த வேண்டும், வசனத்தை இப்படி மாற்ற வேண்டும் என்றெல்லாம் குழந்தைக்குச் சொல்லித் தருவது போல சொல்லித் தர மாட்டார்கள் எந்த இயக்குனர்களும். அவர் வேலை செய்யும் விதத்தையும், எதை எப்படிச் செய்கிறார்கள் என்பதையும் கவனித்தும் தான் தொழில் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் வகுப்பறையில் மாணவனுக்குச் ‌சொல்லித் தரும் ஆசிரியரைப் போல காரண, காரியங்களோடு விளக்கி இதை இப்படி மாற்ற வேண்டும் என்று தெளிவாய் எனக்குக் கற்றுத் தந்த குரு என் நண்பர்!  என் இடத்தில் நீங்கள இருந்தால் இன்னும் புகழ்வீர்கள் என்பது திண்ணம்!

டி.வி. தொடருக்கான கதையை விவாதித்து, காட்‌சிகளாகப் பிரித்து, வரிசைப்படுத்தி எபிஸோடுகள் எழுதியபின், கதையையும், வசனங்களையும் தெளிவான குரலில் பாவத்துடன் பேசி காஸட்டில் பதிவு செய்வார் அவர். அதை வாக்மேனில் போட்டு காதில் கேட்டு டைப் செய்வேன் நான். (பெரும்பாலும் நானும் சிறுபாலும் என்னுடனிருந்த மற்றொரு உதவியாள நண்பரும்). டைப் செய்ததை அவர் பார்த்து, பிழைகள் திருத்தி, வசனங்களை இன்னும் மெருகேற்றி, பின் பிரி்ண்ட் அவுட் எடுத்து, தயாரிப்பு நிறுவனத்திற்கு அவை செல்லும்.

இப்படி சுவாரஸ்யமாக நாட்கள் சென்றதில் என் சொந்தக் கவலைகளை மறந்து உற்சாகமாகியிருந்தேன்.

சில மாதங்கள் இப்படி சுவாரஸ்யமாகச் சென்றபின் டி.வி. தொடர் விஷயத்திலும், ஊஞ்சல் விஷயத்திலும் அடுத்தடுத்து திருப்பங்கள் நிகழ்ந்தன. சில காரணங்களினால் டி.வி. தொடரிலிருந்து விலகும்படியான சூழல் பி.கே.பி. ஸாருக்கு ஏற்பட்டது. அவர் பக்கம் நியாயம் இருந்ததால் டி.வி. தொடர்களே தனக்கு இனி வேண்டாம் என்று உறுதியான முடிவெடுத்தார். அதே சமயத்தில் என் நண்பர் ஆரோக்கிய தாஸ் ‘ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயார்ப்படுத்தும் பயிற்சி’க்குப் போக வேண்டியிருந்ததால் பி.கே.பி. ஸாரிடம் பணியை விட்டு விலகினார். இந்த இரண்டு திருப்பங்களும் எனக்குக் கூடுதல் பொறுப்பைத் தந்தன. அவை பற்றி...

-தொடர்கிறேன்.

Monday, April 23, 2012

பல்லியென ஒல்லியான கில்லி - சரிதா!

Posted by பால கணேஷ் Monday, April 23, 2012

கொஞ்ச நாளாகவே ஒரே கவலைமயமாக இருந்தாள் சரிதா. சமீபத்தில் ஒரு கல்யாணத்திற்குப் போயிருந்தபோது அவள் தோழிகள் எல்லோரும் வந்திருக்க, அவர்கள் வீட்டு வாண்டுகள் ‘குண்டு மாமி’ என்று இவளைக் கூப்பிட்டதும், தரையை சரியாக கவனிக்காமல் நடந்து, விரிப்பில் கால் இடறி இவள் தோழியின் மேல் விழுந்து வைக்க... அவள் தசைப்பிடிப்பினால் அவதிப்பட்டு ஒரு வாரமாக இவளை போனில் வறுத்தெடுத்ததும்தான் காரணம். ‘‘என்னங்க... உண்டான போதுகூட நான் இவ்வளவு குண்டானதில்லை. எப்படியாவது உடனே வெயிட்டைக் குறைச்சே ஆகணு்ம். என்ன பண்ணலாம் சொல்லுங்க...’’ என்று கேட்டாள்.

எதை அடக்காவிட்டாலும் ‘நாக்கை’ அடக்க வேண்டும் என்று தெய்வப் புலவர் சொன்னதை நன்கறிந்தவனாக இருந்தும் அது சமயத்தில் எனக்கு அடங்குவதில்லை. ‘‘ரொம்ப ஸிம்பிள் சரி... திருநீர்மலை கோயிலுக்குப் போகணும்னு சொல்லிட்டிருந்தியே... போகும்போது படி ஏறிப் போயிட்டு, வரும்போது படியில உருண்டுகிட்டே கீழ வந்தேன்னா, ஈஸியா உடம்பு குறைஞ்சிடும்’’ என்றேன்.

கொடூரமாக முறைத்தாள் என்னை. ‘‘எனக்கு ஒரு கஷ்டம்னா உங்களுக்கு அல்வா சாப்பிடற மாதிரி இருக்குமே... சரி, நானே இதுக்கு வழி கண்டுபிடிச்சுக்கறேன்... இன்னும் ஒரே மாசத்துல கில்லி மாதிரி எக்ஸர்ஸைஸ் பண்ணி பல்லி மாதிரி ஒல்லியாகிக் காட்டறேன் பாருங்க...’’ என்றாள்.

‘‘டிவிடியில விஜய டி.ஆர் படத்தைப் பாத்துத் தொலைக்காதேன்னா கேட்டத்தானே... பேசற ஸ்டைலே மாறிடுச்சே உனக்கு...’’ என்று தலையிலடித்துக் கொண்டேன்.

முதல் முயற்சியாக, ஸ்கிப்பிங் ரோப் வாங்கிக் கொண்டு வந்து காலையில் குதித்தாடத் தொடங்கினாள். ஒரு நாள்தான் குதிகக முடிந்தது-  பக்கத்து ப்ளாட்காரர் சண்டைக்கு வந்து விட்டதால். ‘‘என்னங்க இது... தரை அதிருது, பூகம்பம் வந்துடுச்சுன்னு என் பொண்டாட்டி, புளளைங்க அலறிட்டு வீட்டை வி்ட்டுத் தெருவுக்கு வந்துட்டுது. பூகம்பம்னா எல்லாரும் சிரிக்கறாங்க. அப்புறம்தான் உங்க வீட்டுலருந்து வர்ற எஃபெக்ட்னு தெரிஞ்சது. இப்படி என் குடும்பத்தை தெருவுல நிறுத்தி எல்லாரும் சிரிக்கும்படி பண்ணிட்டிங்களே...’’ என்று சீறினார் பக்கத்து ப்ளாட் பரமானந்தம். சரிதா என்னை பரிதா-பமாகப் பார்க்க, அவரை ஒரு வழியாய் சமாதானம் அனுப்பினேன்.

ன் முயற்சியில் சற்றும் மனம் தளராத சரிதா அடுத்த நாளே என்னிடம் வந்தாள். ‘‘என்னங்க... உடனே போயி நல்ல, சுத்தமான தேன் ஒரு பாட்டில் வாங்கிட்டு வாங்க...’’ என்றாள்.

‘‘தேனா... பலாச்சுளைய அதுல ஊற வெச்சுக் குடுக்கப் போறியா எனக்கு? என்ன இருந்தாலும் என் மேல உன்க்குத்தான் எவ்வளவு அன்பு!’’ என்றேன்.

‘‘ஆசையப்பாரு... இது எனக்குங்க! நீங்க வைச்சிருக்கற பழைய ‘கல்கண்டு’ இதழ்த் தொகுப்புல ஒரு துணுக்கு படிச்சேன். தினம் தேன் குடிச்சா உடம்பு இளைக்குமாம். அதான்...’’ என்றாள்.

பல இடங்களில் தேடி அலைந்து அசல் மலைத்தேனாக வாங்கி வந்தேன். தொடர்ந்து பத்துப் பதினைந்து நாட்கள் பாலில் கலந்து குடித்தாள். என்னமோ தெரியவில்லை... நிறையப் பசிக்கிறது என்று அடுத்த ஒரு வாரத்துக்கு பகல் முழுவதும் நொறுக்குத் தீனிகளாக கொறித்துக் கொண்டே இருந்தாள். விளைவு...  உடம்பு மேலும் பெரிதானதே தவிரக் குறைந்த பாடில்லை.

‘‘என்னங்க இது... புக்ல தப்பாப் ‌போட்டிருககானே...’’ என்றாள். ‘‘எந்தப் புத்தகம், காட்டு...’’ என்ற நான் அவள் காட்டிய துணுக்கைப் படி்த்ததும் தலையில் தட்டிக் கொண்டு சிரித்து விட்டேன். ‘‘அடியே... இதுல என்ன போ்ட்டிருககான்னு சரியாப் படிச்சியா? தேனைத் தண்ணில கலந்து குடிச்சா உடம்பு இளைக்கும், அதுவே பாலில கலந்து குடிச்சா உடல் பெருக்கும்னுல்ல போட்டிருக்கு. சரியாப் படிக்காம உல்டாவாப் பணணித் தொலைச்சுட்டியே...’’ என்றேன் மதன்பாப் போல சிரித்தபடி.

‘‘ஹி... ஹி... படிச்சப்ப சரியாதாங்க படிச்சேன். தேன் வாங்கிட்டு வந்தப்புறம் நினைவில்லாம மாத்திப் பண்ணிட்டேன் போலருக்கு...’’ என்று வழிந்தாள்.

சரிதா இல்லங்க இது ச்சும்மா..!
டுத்த இரண்டாவது நாள் கிளப்பிலிருந்து வரும்போது ஒரு பிளாஸ்டிக் பையில் கயிறுகளுடன் வந்தாள். ‘‘அடியேய்... மறுபடி கயிறை வெச்சு்கிட்டு குதிககப் போறியா?’’ என்றேன் கவலையுடன். ‘‘இது ஸ்கிப்பிங் கயிறு இல்லைங்க, எக்ஸர்ஸைஸ் ரோப்! இந்தக் கொக்கியை ஜன்னல்ல மாட்டிட்டு, இந்த கைப் பிடியில கையையும், இந்தக் கைப்பிடியில (கால் பிடியில்?) காலையும் மாட்டிக்கிட்டு அசைச்சுககிட்டே இருந்தா உடம்பு குறையுமாம். எங்க செகரட்டரி சுந்தரி மேடம் இப்படித்தான் குறைச்சாங்களாம். அதான் வாங்கிட்டு வந்தேன்’’ என்றாள்.

றுதினம் காலையில் பேப்பர் படித்துக் ‌கொண்டிருந்த நான், ‘‘என்னங்க... சீக்கிரம் ஓடி வாங்களேன்...’’ என்ற சரிதாவின் அலறல் கேட்டு என்னமோ ஏதோ‌வென்று ஓடிச் சென்றால்... ஜன்னலின் அருகே கயிறு உடம்பில் கன்னாபின்னாவென்று சுற்றிக் கிடக்க, கட்டிப் போட்ட யானை மாதிரி மல்லாந்து விழுந்து கிடந்தாள். குபீரென்று நான் சிரித்துவிட, முறைத்தாள் என்னை.

வாயை மூடிக் கொண்டு ‌போய், கால்மணிநேரம் போராடி சிககலைப் பிரித்து விட்டேன். கை மற்றும் கால்களை எப்படி அசைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளாததால் கண்ட மேனிக்கு அசைத்து, கயிறு சிக்கலாகி உடம்பைச் சுற்றி முறுக்கிக் கொண்டிருக்கிறது. அன்றோடு அந்தக் கயிறுக்கு ஒரு கும்பிடு போட்டு திருப்பிக் கொடுத்து விட்டாள்.

‘ஹப்பாடா’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன் நான். அற்ப ஆயுள் அதற்கு. ‘‘என்னங்க... அரிசி உணவு சாப்பிடறதாலதான் வெயிட் போடுதாம். அதை நிறுத்திட்டு காய்கறிங்களை மட்டும் சாப்பிட்டா வயிறும் ‌ரொம்பும், பசியும் குறையுமாம்’’ என்றாள் அடுத்த நாள்.

‘‘யார்றி சொன்னது உனக்கு இப்படி அரிய யோசனைல்லாம்?’’ என்றேன்.

‘‘என் ஃப்ரெண்டு ராதிகாதான் சொன்னா... அவளுக்கு இது ஒர்க்அவுட் ஆச்சாம்...’’ என்றாள்.

‘‘அடியேய்..! அவளோட புருஷன் மார்க்கெட்ல காய்கறி்க் கடை வெச்சிருக்கான். அதனால அவளுக்கு காய்கறியாத் தின்ன வொர்ககவுட் ஆகும். இன்னிக்கு காய்கறி விக்கிற விலையில நான் காய்கறியா வாங்கிட்டு வந்தா, நீ இளைக்கறதுக்கு முன்னாடி என் பேங்க் பாலன்ஸ் இளைச்சிடும்டி’’ என்றேன்.

‘‘எனக்குன்னா செலவு பண்ண யோசிப்பிங்க. பர்ஸ் இளைக்கும்பீங்க. இதுவே...’’ என்று அவள் ஆரம்பிக்க... வேகமாக அவள் வாயை மூடினேன் -கையால்தாங்க! ‘‘சரி விடு.... உடனே காய்கறி வாங்கிட்டு வர்றேன்...’’ என்றேன்.

‘‘ராதிகா வீட்டுக்காரர் கடையிலயே வாங்குங்க... விலை கம்மியாப் போட்டுத் தருவாராம்’’ என்றாள். பிஸினஸை வளர்‌க்கக சந்தடி சாக்கில் கெடா வெட்டிய அந்தத் தோழி மட்டும் என்‌ கையில் கிடைத்தால்.... பல்லைக் கடித்துக் கொண்டே போனேன்.

தன்பின் பத்துப் பதினைந்து நாட்கள் காய்கறிகளை வேகவைத்தும், வைக்காமலும் விதம் விதமாகத் தின்றாள்- என்னைப் பெருமூச்சுடன் பார்க்க வைத்துக் கொண்டே. பதினைந்து நாளுககு மேல் அவளால் இந்த உணவில் தாக்குப் பிடிகக முடியவில்லை. தோல்வியை ஒத்துக் கொண்டு பழைய சாப்பாட்டு முறைக்கு மாறி விட்டாள். ஆனாலும் காய்கறிகள் நிறையத் தின்பது பிடித்து விட்டதால்... அதையும் விட்டு விடாமல் நிறைய சேர்த்துக கொண்டாள். விளைவு...உடம்பு குறைந்த பாடில்லை, முன்பைவிட கூடத்தான் செய்தது.

அதோடு விட்டிருந்தாலாவது பரவாயில்லை... பக்கத்து வீட்டு பத்து மாமி சொன்னாளென்று ஜீரகம், மிளகு, திப்பிலி, கறிவேப்பிலை என்று என்னென்னமோ இலை தழைகளையெல்லாம் சேர்த்து ஒரு லேகியம் தயார் பண்ணினாள். ‘‘இந்த லேகியத்தைச் சாப்பிட்டா, நல்லா பசி எடுக்குமாம். பசி எடுத்ததும் கொஞ்சமா சாப்பிட்டா உடம்பு குறைஞ்சிடுமாம்’’ என்றாள்.

லேகியம் பாதிப் பங்கு வேலையை சரியாகச் செய்து தொலைத்தது சரிதாவுக்கு. அதாவது... நன்றாகப் பசி எடுத்தது. ‘கொஞ்சம் சாப்பிடுவது’ என்றால் எவ்வளவு என்று பத்து மாமி சரிதாவுக்குச் சொல்லவில்லையாதலால் பெரிய தட்டில் ‘கொஞ்சம்’ உணவைப் போட்டுக் கொண்டு யானைக் கவளமாகச் சாப்பிட்டு ‘அற்ப ஆகாரம்’ (அவள் பாஷையில்) செய்தாள் சரிதா. கடைசியில் என்ன ஆனதென்றால்...

ந்த மாதத்தின் முடிவில் எடை பார்த்தபோது... 70 கிலோ இருந்த அவள் இப்போது 88 கிலோ இருப்பதாகக் காட்டியது அது. ‘‘என்னங்க இது... எடை குறையறதுக்குப் பதிலா கூடியிருக்குதே...’’ என்றாள் கவலையுடன்.

‘‘இல்ல சரிதா... எடை குறைஞ்சிதான் இருக்கு...’’ என்றேன்.

‘‘என்ன சொல்றீங்க..?’ என்று ஆச்சரியமாகப் பார்த்தாள் என்னை.

‘‘ஆமா... இதோ பாரு... போன மாசம் என்னோட எடை 65 கிலோவா இருந்துச்சு. இப்ப எடை பாக்கறப்ப 45 கிலோ காட்டுது. உன் டயட்டினால என்னோட எடை குறைஞ்சுதான் போயிருக்குது. ஹி... ஹி...’’ என்றேன்.

‘‘அட... ஆமால்ல... அப்ப இந்த மாசம் பூரா நீங்க டயட்ல இருங்க. நான் பண்ணினதெல்லாம் நீங்க பண்ணனும். அப்ப, அடுத்த மாசம் என்னோட எடை குறைஞ்சிடும். எப்பூடி என் ஐடியா...’’ என்று பெருமையாய் என்னைப் பார்த்தாள் சிரித்தபடி.

என்னது...? மறுபடி தேன், காய்கறின்னு செலவா...? தலை சுற்றியது எனக்கு!

‘டொம்..!’ என்ன சத்தம்னு பாக்கறீங்களா..? நான் மயங்கி விழுந்த சத்தம்தான் அது!

Saturday, April 21, 2012

ஹலோ, ரஜினி ஸ்பீக்கிங்! - 3

Posted by பால கணேஷ் Saturday, April 21, 2012

1978-79கள்ல ‘இதயம் பேசுகிறது’ இதழில் அப்ப வளர்ந்துக்கிட்டு வந்த ஹீரோவான ‘ரஜினிகாந்த்’திடம் தொடர் பேட்டி எடுத்து ‘ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்!’ அப்படிஙகற தலைப்பில சில வாரங்கள் வெளியிட்டாங்க. அதில் சில பகுதிகள் என்னிடம் இருக்கிறது. ‘சிவமகன்’ங்கிறவரு ரஜினி ஸார் பேசற மாதிரியான நடையிலயே அதை எழுதியிருக்காரு. அதுல இருந்து ஒரு பகுதியை இங்க உங்களோட பகிர்ந்துக்கறேன்.

ந்திரப்பா!

ஆளு சிகப்பு. ஒரு முறை பார்த்தா மறுபடியும் பார்க்கணும்னு தோணும். ஒரு தடவை அவரோடப் பேசினா இன்னொரு தடவை பேசணும்னு தோணும். அது என்ன கவர்ச்சியோ தெரியாது..!

ராமகிருஷ்ண பரமஹம்சரோட பக்தர். வயது 48. எனக்கும் அவருக்கும் ஒரு ஆறு வருஷ பந்தம். ஆமா! நான் வேலை செய்யற பஸ்ஸிலேதான் அவரை முதல் தடவையாகப் பார்த்தேன். ரொம்ப எக்கச்சககமான சந்திப்பு!

அவர் ஃபேமிலியோட வந்திருந்தார். டிக்கெட் கேட்டார். டிக்கெட்டைக் கொடுத்து என் தொழிலை ஆரம்பிச்சேன! தெரியுமே, திருடறதுதான்... அவரோ சிரிச்சுக்கிட்டே இருக்காரு. நல்ல மனிதர்னு நினைச்சேன். அவங்க கிட்டயும் டிக்கெட்டை திருப்பி வாங்கிடலாம்னு திட்டம் போட்டேன். எறங்கும்போது அவர்கிட்ட டிக்கெட்டைக் கேட்டேன். முடியாதுன்னு சொல்லலை... சிரிச்சுக்கிட்டே கொடுத்துட்டுப் ‌போனாரு. அப்புறம்தான் தெரிஞ்சுது... அவர் யாருன்னு! அவர்தான் பெங்களூர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ்லே அஸிஸ்டெண்ட் சூபர்வைஸர்! அதாவது செக்கிங் அதிகாரி!

செக்கிங் இன்ஸ்பெக்டர் கிட்டயே கை வரிசை! மறுநாள் வழக்கம் போல டிப்போவுக்குப் போனேன். ஒரு செய்தி: ஏ.டி.‌எஸ். சந்திரப்பாவை டியூட்டி முடிச்சிட்டுப் போய்ப் பார்க்கணும்னு! ஒண்ணுமே புரியலை. டியூட்டி முடிச்சிட்டு அவர் ஆபீஸுக்குப் போனேன். உள்ளே போய்ப் பார்த்தா... நான் டிக்கெட்டை திருப்பி வாங்கிய அதே மனிதர்தான் இங்க ஏ.டி.எஸ். சந்திரப்பா!

இப்பவும் சிரிச்சாரு. அதே சிரிப்பு, அதே பார்வை! அந்த டிக்கெட் விவகாரம் பத்திக் கேட்பாருன்னு நினைச்சேன். கேக்கலை. காப்பி வேணுமான்னு கேட்டாரு. ஆர்டர் பண்ணினாரு. காப்பி வந்தது. சாப்பிட்டேன். ‘‘போயிட்டு வர்றேன்’’ன்னு கிளம்பினேன். ‘‘சரி’’ன்னாரு. போறதுக்குக் கதவைத் திறககும் போது, ‘‘ஒரு நிமிஷம்...’’ன்னாரு.

‘‘என்ன ஸார்?’’ன்னு பயந்து வளைந்து நெளிந்து கேட்டேன். ‘‘நீ மத்தவங்களை ஏமாத்து, பரவாயில்லை. ஆனால் உன்னையே நீ ஏமாத்திக்காதே’’ன்னு சொன்னாரு. இப்பவும் எப்பவும் அந்த வார்த்தை எனக்குள்ளே சுத்திக்கிட்டே இருக்கு.

அதற்கப்புறம் நானும் அவரும் சினேகிதர்களாகி விட்டோம். நானும் அவரைப் போல ராமகிருஷ்ண பரமஹம்சரோட பக்தன்.

தீபாவளிக்கு நான் போயிருந்தபோது அவரைப் பார்த்தேன். இப்பவும் அதே சிரிப்பு, அதே பார்வை, அதே உபசரிப்பு.

ஒண்ணு கேட்டாரு - ‘‘ஒரு உதவி பண்ணுவியா?’’ன்னு. அவர் கேட்டா ஒண்ணா... ஓராயிரம் உதவி பண்ண நான் தயார். ஆனா அவருக்கு நான் என்ன உதவி பண்ண முடியும்..?  என்ன எதிர்பார்க்கிறாருன்னு தெரியல, புரியல. ஏன்னா, அவரு சொல்லலை. ‘‘நேரம் வரும் போது கேட்பேன்’’ன்னு சொன்னாரு. இது எனக்கு ஒரு பிரச்சனை. ஏன்னா இதுவரைக்கும் யார் கிட்டேயும் எதுவும் கேட்டுத் தொந்தரவு பண்ணும் பழக்கம் அவருக்குக் கிடையாது.

அது எல்லாருக்கும் தெரியும்.

என் கிட்ட மட்டும்..?

கேட்டுக்கிட்டே இருக்கேன்...

-அடுத்த பகுதியுடன் ‘ஹலோ, ரஜினி ஸ்பீக்கிங்’ நிறைவடைகிறது.

டியர் ஃப்ரெண்ட்ஸ்... புதுசா ஏதாவது மேட்டர் எழுதி உங்ககூட பகிர்ந்துக்கலாம்னு நினைச்சேன். ஆனா பாருங்க... இந்த கற்பனைக் குதிரை பயங்கரமா சண்டித்தனம் பண்ணிச்சு. வாலை முறுக்கி, மூஞ்சில குத்திக் கூட பாத்துட்டேன். நகர மாட்டேன்னுடுச்சு... சரி, வாயில்லா ஜீவனை துன்புறுத்த வேணாமேன்னு விட்டுட்டு, ஸ்டாக்ல இருந்த சூப்பர் ஸ்டார் மேட்டரை எடுத்து ‘மினி’ பதிவா போட்டுட்டேன் -மெஸ்லயெல்லாம் டிபன் தீர்ந்துட்டா உப்புமாவை வெச்சு சமாளிக்கற மாதிரி. ஹி... ஹி... ரெண்டு நாள் கழிச்சு சந்திக்கறேன்.  ஸீ யு!

Wednesday, April 18, 2012

நடை வண்டிகள் - 13

Posted by பால கணேஷ் Wednesday, April 18, 2012
பி.கே.பி.யும் நானும் - 5

தெரிந்தோ, தெரியாமலோ ஒருத்தன் கோர்ட் படியை மிதிக்க வேண்டி வந்துட்டா, எவ்வளவு செலவாகும் என்பது உங்களுக்கெல்லாம் ந்ன்றாவே தெரிந்திருக்கும். நிறையச் சொத்து பத்து இருக்கறவர்களுக்கே அதெல்லாம் கரைஞ்சு போயிடும். ‌சொத்து எதுவும் இல்லாத எனக்கு..? அந்தப் பிரச்னையிலருந்து நான் மீண்டு வந்தப்ப, எனக்குள் தப்பித்துவிட்ட நிம்மதி இருந்ததே தவிர, ஃபைனான்ஷியல் லெவலில் கையிருப்பெல்லாம் கரைஞ்சு போய் கிட்டத்தட்ட 0 லெவலில்தான் இருந்தேன்.

அடுத்த வேலைக்கு ட்ரை பண்ணலாம்னு நினைத்த போதுதான் அதற்கு முந்தின மாதம் சந்தித்தபோது பி.கே.பி. ஸார் சொன்னது நினைவுக்கு வந்தது. அப்போது ஸ்ரீனிவாஸ் பிரபு அரசு வேலைக்குச் சென்று விட்டதால் அவருடன் இல்லை. ‘‘எனக்கு ஒரு உதவியாளர் தேவைப்படுது கணேஷ். கதை, கட்டுரைன்னு எழுதத் தெரியாட்டாலும், நிறையப் படிக்கிறவங்களா கதைன்னா என்னன்னு தெரிஞ்சவங்களாகவாவது இருக்கணும். உஙகளை மாதிரியான ஒரு இன்ட்ரஸ்ட் உள்ள ஆளா உங்க சர்க்கிள்ல யாராவது இருந்தாச் சொல்லுங்க...’’ என்றிருந்தார். என் நண்பர்கள் வட்டத்தில் அப்படிக் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு யாரும் இல்லை அப்போது.

இப்போது அது நினைவுக்கு வந்ததும் அவரின் வீட்டிற்குச் சென்றேன். சிறிது நேரம் பேசிய பிறகு, ‘‘போன முறை சந்திச்சப்ப ஒரு உதவியாளர் வேணும்னு சொல்லியிருந்தீங்க ஸார்... அது...’’ என்று இழுத்தேன். உண்மையில் அவரிடம் ‘‘என்னைச் சேர்த்துக் கொள்கிறீர்களா ஸார்?’’ என்று அவரிடம் கேட்கக் கூச்சமாக இருந்தது. பிறரின் மனதைப் புரிந்து கொள்ளாதவர் எழுத்தாளராக இருக்க முடியுமா? அவர் சட்டென்று புரிந்து கொண்டவராகச் சொன்னார். ‘‘கணேஷ்! அந்த ஆஃபர் இன்னும் வேலிடாத்தான் இருக்கு. நீங்க விரும்பினா எனக்கு உதவியாளராகச் செயல்படலாம்!’’ என்றார். மனநெகிழ்வுடன் சம்மதம் தெரிவித்தேன். மறுநாளிலிருந்து திருவான்மியூர் அலுவலகத்துக்கு வரச் சொன்னார். விடைபெற்றேன்.

நன்றி: ஓவியர் அனில் கார்த்திக்!
றுதினம் திருவான்மியூர் அலுவலகம் வந்தபோது எனக்கு நன்கு அறிமுகமான தாஸும், அதிகம் பழகியிராத மற்ற இரண்டு உதவியாளர்களும் இருந்தனர். பி.கே.பி. ஸார் சொன்னார். ‘‘கணேஷ்! முதல்ல கொஞ்ச நாளைக்கு நாங்க கதைய டிஸ்கஸ் பண்ணும் போது நீங்க எதுவும் குறுக்கிட்டுப் பேச வேண்டாம். நல்லா கவனிங்க. உங்க கிட்டருந்து அவுட்புட்டை எப்ப வாங்கிக்கணும், எப்படி வாங்கிக் கணும்னு எனக்குத் தெரியும். ‌ஸோ... பேசாம கவனிச்சுட்டே வாங்க...’’ என்றார். தொலைக்காட்சித் தொடர்களுககான கதை வசன விவாதம் தினமும் நடக்கும். பி.‌கே.பி. ஸார் உதவியாளர்களுடன் விவாதி்த்து கதையை மெருகேற்று வதையும், கேரக்டர்களை வடிவமைப் பதையும் கவனித்து வந்தேன். ஏறக்குறைய முதல் ஒரு மாதம் முழுவதும் வேலையே செய்யாமல் அவரிடம் சம்பளம் பெற்றேன்.

அவர் சொன்னது போலவே நான் தானாகத் தலையிடாமல் இயல்பாகவே அவர்களுடன் இணைந்து கொண்டது நடந்தது. மெல்ல மெல்ல விவாதங்களிலும், பின் அவர் சொல்லும் டயலாக்குகளை டைப் செய்யும் பணியிலும் ஈடுபட்டு, அலுவலகத்தில் செட்டிலானேன்.  அலுவலகத்தில் செயல்படும் நேரங்களில், விவாதங்களின் போது ஒரு ‘பாஸ்’ ஆக நடந்து கொள்வார். நானும் அதற்கேற்றாற் போல செயல்படுவேன். அலுவலக நேரம் தவிர்த்த நேரங்களில் நல்ல நண்பராக நடந்து கொள்வார், வெளிப்படையாகப் பேசுவார். நானும் அவ்விதமே. எந்த நிலையிலும் அலுவலகத்தையும், தனிப்பட்ட நட்பையும் நானும், அவரும் கலந்து கொண்டு குழப்பிக் கொண்டதில்லை. இப்படி எனக்குக் கிடைத்தது போல Friendly Boss எல்லாருக்கும் அமைந்து விடுவார்களா என்ன?

நான் பட்ட காயத்தின் ரணம் ஆறாமல் உள்ளே வலித்துக் கொண்டிருந்த காலகட்டமல்லவா அது! அலுவலக நேரத்தில் நான் சரியாகப் பணி செய்து வந்தாலும், மனதுக்குள் எனக்குள்ளிருந்த வேதனையின் கனத்தை அவர் நன்றாகவே உணர்ந்து கொண்டிருந்தார். (உண்மையான நண்பராயிற்றே...) என்னை அவர் செல்லும் சினிமாக்களுக்கு அழைத்துச் செல்வார். பார்த்த படங்களைப் பற்றி விமர்சிககச் சொல்வார். அவரின் விமர்சனத்தையும் சொல்லுவார். கூர்மையான அவரின் திரைக்கதை அறிவை அருகிலிருந்து பார்த்து நான் வியந்திருக்கிறேன் பல முறை. எப்போதாவது மலையாளம், தெலுங்குப் படங்களையும், பெரும்பாலும் தமிழ்ப் படங்களையும் பார்த்து கிணற்றுத் தவளையாக இருந்து வந்த எனக்கு உலக சினிமா என்று ஒன்று இருப்பதை அறிமுகப்படுத்தி விசாலமான அந்தக் கதவைத் திறந்து விட்டவர் பி.கே.பி. ஆங்கிலப் படங்களையும், ஈரானிய, ஃப்ரெஞ்ச் படங்கள் என்று மொழி வேறுபாடில்லாமல் அவருடன் சேர்ந்து பார்த்து ரசிக்க என்னால் முடிந்தது.

நான் பார்த்து ரசித்த படங்களுக்கு விமர்சனங்களும் எழுதியிருக்கிறேன் பின்னாளில் ஊஞ்சலில். இப்ப‌ோது சற்று ஊஞ்சல் இதழைப் பற்றிப் பேசிவிட்டு மீண்டும் பி.‌கே.பியின். அலுவலகத்துக்கு வரலாம். அதுவரையில் ஊஞ்சல் இதழுக்கான கதையை டைப் செய்து, பிழைத் திருத்தம் செய்து, என் வீட்டில் வைத்துத்தான் டிசைனிங் செய்வேன். பின் அவர் அலுவலக கம்ப்யூட்டரில் போட்டுக் காட்டி, அவர் சொல்லும் திருத்தங்களைச் செய்து முடித்ததும், முடிவான வடிவத்தை தெளிவான ப்ரிண்ட் அவுட்டுகளாக எடுத்து அவரிடம் ஒப்படைத்து வருவேன். இதுதான் நடைமுறையாக இருந்தது.

இப்போது அவருடனேயே பணி செய்ததால், வடிவமைப்பு முழுவதையும் அலுவலகத்திலேயே செய்து விடலாமே என்றார் அவர். என்னிடம் எப்போதுமே அவர் சொல்லிற்கு மறுப்பு இருந்ததில்லை. (அப்போது நான் ஊஞ்சல் இதழின் வடிவமைப்பாளன் மட்டுமே, உதவி ஆசிரியராக இல்லை). ஆக, முதல் முறையாக முழுமையான வடிவமைப்பையும் அவரை அருகில் வைத்துக் கொண்டே செய்யத் தொடங்கினேன். அந்தச் சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்து மற்றுமொரு விஷயத்தை நான் கைக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த நல்ல பழக்கத்தைப் பற்றி...

                                                                           -தொடர்கிறேன்!

பின்குறிப்பு : பல நண்பர்களின் (என்னுடையதும்) விருப்பத்தின்படி நண்பர் ‘சேட்டைக்காரன்’ மீண்டும் பதிவு எழுத ஆரம்பித்துள்ளார். விரும்புபவர்கள் இங்கே க்ளிக்கி அவரின் நகைச்சுவையை ரசித்துச் சிரிக்கலாம்.

Monday, April 16, 2012

லகப் பொதுமறை என்றும் தமிழ்மறை என்று பலவாறாக தமிழர்களால் போற்றிக் கொண்டாடப்படும் திருக்குறளில் திருவள்ளுவர் இயற்றிய குறளொன்று...

யான் நோக்குஙகால் நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும் (குறள் 1094)

‘‘நீ என்னை நேருக்கு நேராகப் பார்ப்பதாக இல்லையே. நான் உன்னைப் பார்த்தால் நீயோ மண்ணைப் பார்க்கிறாய். நான் ஆகாயத்தைப் பார்த்தால் அப்போது என்னைப் பார்ககிறாயே’ என்பது இந்தக் குறளின் பொருள். ‘வாழ்க்கைப் படகு’ங்கிற படத்துல கவிஞர் இதையே...

‘உன்னை நான் பார்க்கும் போது மண்ணை நீ பார்க்கின்றாயே...
விண்ணை நான் பார்க்கும் போது என்னை நீ பார்க்கின்றாயே...’’

என்று அழகாக குறளின் சாரத்தை திரைப்பாடலில் இறக்கி இருந்தார். ‌அந்தப் பொல்லாத கவிஞர் இதை மட்டுமா செய்தார்? ‘குறுந்தொகை’ நூலில் பதுமனார் என்ற புலவர் பாடியுள்ள இந்தப் பாடலில்...

நள்ளென்றன்றே யாமம், சொல் அவிந்து
இனிது அடங்கினரே மக்கள்; முனிவு இன்று
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர்யான் மன்ற துஞ்சா தானே

தலைவன் பொருள் தேடச் சென்றதால் தனியே இருக்கும் தலைவி, ‘‘இதோ ஊர் முழுவதும் உறங்குகிறது. இரவுப்‌ பொழுதும் (நள்ளென்று எந்த ஒலியுமற்று) உறங்குகிறது. அனைத்து உயிர்களும் இனிமையாகத் துயில்கின்றன. இந்த உலகில் தூங்காதிருப்பவள் நான் ஒருத்தி மட்டுமே...’’ என்று பாடுவதாகப் பொருள். இந்தப் பாடலின் கருத்தைச் சாறு பிழிந்து,

பூ உறங்குது, பொழுதும் உறங்குது
நான் உறங்கவில்லை நிலவே...
கானுறங்குது காற்றும் உறங்குது
கண்ணுறங்கவில்லை...

என்று ‘தாய் சொல்லைத் தட்டாதே’ படப் பாடலில் கொடுத்திருந்தார். சீவக சிந்தாமணியில் ஒரு பாடல் வரும :

சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் தோற்றம் போல்
மெல்லவே கருவிருந்து ஈன்று மேலவார்
செல்வமே பேநால்தலை நிறுவித் தேர்ந்தநூல்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காயத்தவே

‘‘நற்கல்வி கற்ற சான்றோர்கள் நன்கு விளைந்த நெற்கதிரைப் போல தலைசாய்நது அடக்கமாக இருப்பார்கள். அதிலும் பச்சைப் பாம்பு கரு தாங்கியது போல சூலுற்று நெற்கதிராக வெளிவந்து கற்றவர் போலத் தலைசாய்ந்து இருக்கிறது’’ என்பது பாடலின் பொருள். இந்தப் பாடலின் சாற்றைப் பிழிந்து...

தரையைப் பாத்து நிக்குது நல்ல கதிரு - தன்
குறையை மறந்து மேலே பாக்குது பதரு - அதுபோல்
அறிவு .உள்ளது அடங்கிக் கிடக்குது வீட்டிலே
எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் பண்ணுது ரோட்டிலே

என்று ‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தில் ‘மனுஷனை மனுஷன் சாப்பிடறான்டா’ என்ற திரைப்பாடலில் எழுதினார் கவிஞர். குறுந்தெகையில் பெண்ணின் ஏக்க உணர்வாக வரும் ஒரு பாடல்...

யானே ஈண்டையேனே; என் நலனே
ஆனா நோயோடு கானலகத்தே
துறைவன் நம் ஊரானே
மறை அவர்ஆகி மன்றத்தஃதே

‘காதலனே, நானோ இந்தக் கடற்கரையில் இருக்கிறேன். நீயோ கடல்மேல் சென்றுள்ளாய். என் மனமோ நாம் சந்தித்த கடற்கரைச் சோலையிலேயே இருக்கிறது. நம் காதலைப் பற்றிய செய்தியோ இந்த ஊர் முழுவதும் பரவி உள்ளதே’ என்று வருந்திப் பாடுகிறாள் தலைவி. இந்தப் பாடலினை அப்படியே உருமாற்றி...

என்னை எடுத்து தன்னைக் கொடுத்து
போனவன் போனான்டி - தன்னைக் கொடுத்து
என்னை எடுக்க வந்தாலும் வருவான்டி...
போனவன் போனான்டி

என்று ‘படகோட்டி’ படத்தின் பாடலில் அழகுறத் தந்திருந்தார் கவிஞர்.

ப்போது எதற்கு இந்த திரைப் பாடல்களின் ஆராய்ச்சி என்று நினைக்கிறீர்கள், இல்லையா... காரணம் இருக்கிறது. சென்ற வாரம் பேருந்தில் நான் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது எதிரில் ஒருவர் தன் ஐந்து வயதுக் குழந்தையை தோளில் சுமந்தபடி நின்று கொண்டிருந்தார். அந்தக் குழந்தை அருகிலுளளவர்களைப் பார்த்து சிரித்தது, பேசியது. பின் ‘வொய் திஸ் கொலை வெறிடி’ என்று தமிங்கிலீஷில் பாடியது. 

திடுக்கிட்டுப் போன எனக்கு, சங்ககாலப் பாடல்களை திரை இசையுடன் கலந்து கொடுத்த அந்த மகத்தான கவிஞர்களின் நினைவு வந்தது. இன்றைய திரை இசை இருக்கும் ஸ்டைலில் இப்படி சங்கப் பாடல்களின் சாறைக் கலந்து கொடுக்க வாய்ப்பு இல்லா விட்டாலும், நல்ல தமிழிலாவது எழுதித் தொலைக்கலாமே... ஏன் இப்படி ரணகொடூரமான தமிங்கிலீஷில் எழுதி வதைக்க வேண்டும், என்ற வருத்தம்தான் என்னுள். (உங்களைத் தவிர) யாரிடம் சொல்லி அழ...?

இதுபோன்ற பாடல்களைக் கேட்டு வளரும் பிற்காலத் தலைமுறைக்கு ‘நேத்து ராத்திரி யம்மா...’ என்ற போன தலைமுறைக் குத்துப்பாடல்கூட இலக்கியமாகத் தோன்றுமோ என்னமோ... ஒண்ணும் சொல்றதுக்கில்ல...!

Saturday, April 14, 2012

ஹலோ, ரஜினி ஸ்பீக்கிங்..! - 2

Posted by பால கணேஷ் Saturday, April 14, 2012

1978-79கள்ல ‘இதயம் பேசுகிறது’ இதழில் அப்ப வளர்ந்துக்கிட்டு வந்த ஹீரோவான ‘ரஜினிகாந்த்’திடம் தொடர் பேட்டி எடுத்து ‘ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்!’ அப்படிஙகற தலைப்பில சில வாரங்கள் வெளியிட்டாங்க. அதில் சில பகுதிகள் என்னிடம் இருக்கிறது. ‘சிவமகன்’ங்கிறவரு ரஜினி ஸார் பேசற மாதிரியான நடையிலயே அதை எழுதியிருக்காரு. அதுல இருந்து ஒரு பகுதியை இங்க உங்களோட பகிர்ந்துக்கறேன்.


‘அமுதைப் பொழியும் நிலவே’
பாட்டு வந்தா நிறுத்திடுவேன்!


‘‘அமுதைப் பொழியும் நிலவே... நீ அருகில் வராததேனோ...’’

எனக்குப் பிடித்த பாட்டு. எப்ப வந்தாலும் விரும்பிக் கேட்பேன். எந்தப் படத்துப் பாட்டுன்னு எனக்குத் தெரியாது அப்ப. ஆனா அந்தப் பாட்டை அடிக்கடி பாடுகிற ஒரு பொண்ணை மட்டும் எனக்குத் தெரியும். அப்பவும், இப்பவும் அழகான பொண்ணு. தாவணி போட்டிருப்பாள். ரெண்டு சடை! குண்டு முகம்! சிவப்பு நிறம்! உயரம்னு சொல்ற அளவுக்கு உருவம். நெத்தியில பொட்டு, கன்னத்தில் புன்னகை. பேசினா பாடுகிற மாதிரி இருக்கும். பாடினா கேட்கிற மாதிரி இருக்கும்.

ஆமா! இனிமையான குரல். சுவையான பேச்சு. அழகுக்கு ஏற்ற அடக்கமான குணம்.

பேசுவா, சரியாக் கேட்காது. பாடுவா, சரியாப் புரியாது. முகத்தைக் காண்பிப்பாள், சரியா தெரியாது. அவ்வளவு நளினம். அதுக்குத்தானோ பெயர் பெண்மை! (சில பெண்களைப் பார்த்தா அப்படித்தான். கையெடுத்துக் கும்பிடணும்னு தோணும். சில பெண்களைப் பார்த்தா..?) ஆமா! மறந்துட்டேன். அது என் உறவுக்காரப் பொண்ணு.

பலவாட்டி, பல பேர் அந்தப் பொண்ணுகிட்ட சொல்றதைக் கேள்விப் பட்டிருக்கேன். ‘‘உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறவன் அதிர்ஷ்டசாலி’’ன்னு.

எங்க அண்ணிக்கு ஆசையாம்- அந்தப் பொண்ணை எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு. எனக்குத் தெரியாது.

ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டுக்கு படிக்க மெட்ராஸ் புறப்படும் போது என்னை வாழ்த்தி அனுப்பினாள். அடடா! இன்னும் கண்ணு முன்னாலேயே இருக்கு. குண்டு முகம்! ரெண்டு சடை! சிகப்பு நிறம்1 நெத்தியில பொட்டு! கன்னத்தில புன்னகை! அதே பார்வை.

மூணு மாதம் கழிச்சிப் பெங்களூர் போனேன். அவங்க அப்பாவுககு டிரான்ஸ்ஃபர் வந்து மைசூர் போயிட்டாங்கன்னு சொன்னாங்க. மெட்ராஸ் வந்து ஆறு மாதம் கழிச்சிப் போனேன். ‘அந்தப் பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கிறியா’ன்னு வீட்டுல கேட்டாங்க. ‘முடியாது’ன்னு சொன்னேன். நான் அந்தப் பொண்ணை பொண்டாட்டியா பார்த்ததும் இல்ல, நினைச்‌சதும் இல்ல. வீட்டில சொன்னாங்க... அவ நினைச்சிருக்காளாம். நான் நினைக்கலியே..?

மெட்ராஸ் வந்து ஒன்பது மாதம் கழிச்சிப் போனேன். அந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் ஆயிடுச்சின்னு சொன்னாங்க. ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனா எங்கேயோ ஒரு மூலையில லேசா குத்துகிற மாதிரி இருந்தது. ஏன்னு எனக்கே தெரியாது.

மூணு வருஷம் கழிச்சி, மைசூர் பிரிமியர் ஸ்டுடியோவுக்கு ஒரு கன்னடப் பட ஷுட்டிங்குக்குப் போயிருந்தேன். ஓட்டல் சுஜாதாவில என் ரூமுக்கு போன் வந்தது. பேசினேன் - ஒரு பெண் குரல். எங்கேயோ கேட்ட குரல். எப்பவோ எங்கேயோ அடிக்கடி கேட்ட குரல். ஆமா... அந்தப் பொண்ணு குரல்தான். ‘‘உங்களைப் பார்க்க வர்றோம்’’ன்னு சொன்னாங்க. சந்தோஷமா வரச் சொன்னேன்.

கதவைத் தட்டுகிற சப்தம். திறந்தேன். ஒரு ஆண், கூட ஒரு அம்மா, இடுப்பில ஒரு குழந்தை, கையில ஒரு குழந்தை. இன்னொரு குழந்தை எங்கேயோ ஓடிச்சி. அவரு குழந்தையைப் பிடிக்க ஓடினாரு. அந்தப் பொண்ணு உருவம் மட்டும் என் முன்னால.. அதே பொண்ணு!

பார்த்தேன், ஸ்தம்பித்து நின்னேன். குண்டு முகம் நீளமாயிருக்கு. இரண்டு சடை ஒண்ணா இருக்கு. பொட்டு மாறி குங்குமம் வந்து அதுவும் கலங்கி இருக்கு. தாவணி போயி புடவை வந்திருக்கு. நான் பார்த்த குழந்தை தாயா இருக்கா. அவள் பார்த்த சிவாஜிராவ், ரஜினிகாந்த்தாயிருக்கான்! அதே பார்வை, ஆனால் அந்த அழகு இல்லை. அதே புன்னகை, ஆனா அந்தக் கவர்ச்சி இல்லை. அந்த ரெண்டு பிரகாசமான கண்கள் ஒளி குறைந்து என்னைக் குற்றவாளின்னு சொல்ற மாதிரி இருக்கு. நான் குற்றவாளின்னு நெஞ்சில குத்தற மாதிரி இருக்கு.

திரும்பிப் பார்த்துக்கிட்டு இருந்தேன்- என் வாழ்க்கையை. எவ்வளவு நேரம் அப்படியே நின்னேன்னு எனக்கே தெரியாது. குழந்தை அழற சப்தம் கேட்டது. தொடர்ந்து ஒரு குரல் கேட்டது. ‘‘என் பெயர் கணேஷ்... இவளோட புருஷன்...’’

பல பேர் சொன்னாங்களே... ‘அவளைக் கட்டிக்கப் போறவன் அதிர்ஷ்டசாலி’ன்னு. பார்த்தேன், அந்த அதிர்ஷ்டசாலியை. உன்னைக் கட்டிக்கிறவன் அதிர்ஷ்டசாலின்னு அவகிட்ட சொன்னாங்களே ஒழிய, அதிர்ஷ்டசாலியை நீ கட்டிக்கப் போறேன்னு அவங்க சொல்லல..!

‘அமுதைப் ப‌ொழியும் நிலவே!’ இப்ப அந்தப் பாட்டு ரேடியோவில வந்தா கேட்க மாட்டேன். உடனே நிறுத்திடுவேன்.

========================================================

நிரஞ்சனா - எனக்கு நெருங்கிய உறவு. ’அங்கிள், பழைய புத்தகங்களை வெச்சுக்கிட்டு கதைய ஓட்டிட்டிருக்கீங்க... நான்லாம் எழுத வந்தா உங்களைத் தூக்கிச் சாப்ட்டிருவேன்...’ என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாள். சென்ற மாதம் ப்ளாக் ஆரம்பித்துக் கொடுத்தேன். தங்கை ஸாதிகா வலைச்சர ஆசிரியராக இந்தபோது என் பதிவோடு சேர்த்து அவ பதிவையும் அறிமுகப்படுத்தினாங்க. அவ்வளவு தான்... ’நீங்க இவ்வளவு எழுதினப்பறம்தான் அறிமுகம் ஆறீங்க. என்னை இப்பவே கவனிச்சுட்டாங்க பாத்தீங்களா...’ன்னு கலாய்க்க ஆரம்பிச்சுட்டா. என் ஜன்னலுக்கு வெளியே -ன்னு அவ எழுதற தளத்துக்குப் போய் தலையில ‘ணங்’குன்னு ரெண்டு குட்டு வெச்சுட்டு வாங்க ப்ரண்ட்ஸ்... அப்பத்தான் அந்தப் புள்ள அடங்கும்!

Friday, April 13, 2012

நடை வண்டிகள் - 12

Posted by பால கணேஷ் Friday, April 13, 2012

பி.கே.பி.யும் நானும் - 4

பி.கே.பி. ஸாருடன் இணைந்து ஊஞ்சல் இதழுக்கு வடிவமைப்பாளராக நான் பணி செய்து கொண்டிருந்த காலங்களில் நான் ‘கல்யாணமாலை’ இதழி்ன் வடிவமைப்பாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். ‘கல்யாணமாலை’ நான் சேரும் போது மாதம் ஒரு இதழ் வந்து கொண்டிருந்தது, சில காலத்திலேயே நல்ல வளர்ச்சி பெற்று மாதமிரு முறை இதழாகி, பின் வார இதழாக வெளிவந்து கொண்டிருந்தது. ‘ஊஞ்சல்’ ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் வரும் இதழாக முதலி்ல துவங்கப்பட்டதாலும், பி.கே.பி. ஸார் வேலைகளைப் பட்டியலிட்டுக் கொடுத்ததாலும் அந்தப் பணியையும் நல்ல முறையில் செய்ய முடிந்தது.

ஊஞ்சல் இதழில் ஒரு சமயம் நான் சின்னஞ்சிறு கதை ஒன்றை எழுதினேன். இங்கே ‘க்ளிக்’கினால் படிக்கலாம். கதையின் ஆரம்ப வரியையே இறுதி வரியாக நான் அமைத்திருந்த உத்தியை பி.கே.பி. ஸார் ரசித்துப் பாராட்டினார். ஊஞ்சல் இதழில் நான் நிறைய எழுதுவதற்கு பின்னாட்களில் களம் அமைத்துக் கொடுத்தார். அதுபற்றி விரிவாகச் சொல்வதற்கு முன்...

கல்யாணமாலை இ‌தழின் பணியைப் பற்றி சிறிது சொல்லியாக வேண்டும். 80 சதவீதம் வரன்களின் அறிமுகமும், 20 சதவீதம் கட்டுரைகளும் அடங்கிய இதழாக (இப்போதும்) வந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான வரன்கள் போட்டோவுடன் இருக்கும். ஒரே பெயரில், ஒரே இன்ஷியலில் பலர் பதிவு செய்திருக்கும் வாய்ப்புண்டு. சரியான நபர் போட்டோவை வைத்து அதற்கெதிரில் அவரைப் பற்றிய சரியான விவரங்கள் இருக்க வேண்டும். போட்டோவோ, தகவலோ இடம் மாறிவிட்டால் பெரிய பிரச்சனையாகி விடும்.

சமயங்களில் புத்தகம் தயாராகி அச்சுக்கு அனுப்புவதற்கு முன் யாராவது போன் செய்து, ‘‘கல்யாணம் நிச்சயமாகி விட்டது. எங்கள் விளம்பரத்தை எடுத்து விடுங்கள்’’ என்றால், அதை நீககிவிட்டுத்தான் அச்சுக்கு அனுப்ப வேண்டும். இப்படியான சந்தர்ப்பங்களில் கூடுதல் கவனமுடன் வேலை செய்ய வேண்டியிருக்கும்.

அந்த ரிஸ்க்கான பணியை மிகச் சரியாகத்தான் மூன்றாண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றி வந்தேன். ‘கல்யாணமாலை’யின் அதிபர் மோகன் அவர்களும், இதழின் ஆசிரியர் திருமதி. மீரா நாகராஜனும் என்மீது மிகுந்த அன்பு செலுத்தி வந்தார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் என் சொந்த வாழ்வில் புயல் ஒன்று வீசியது. என் நண்பர்களில் ஒருவன் எனக்குத் துரோகம் செய்துவிட, நான் கோர்ட்டுக்கும் வீட்டுக்குமாக அலைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. நாம் நிரபராதி என்றாலும் இறைவனின் விளையாட்டில் சிலசமயம் பகடைக்காய்கள் ஆகி விடுகிறோம். அப்படியான ஒரு கடின காலகட்டத்தைச் சந்தித்தேன் நான். (நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் மிகமிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற பாடத்தைக் கற்றுத் தந்தான் அந்த நல்லவன்)

கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலுவல கத்துக்குமாக அலைந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் நான் முன்பு சொன்னது போல மிக கவனத்துடன் செய்ய வேண்டிய ‘கல்யாணமாலை’ பணியைச் செய்வது சாத்தியப்படாது, என் கவனம் சிதறுகிறது என்பது என் மனதுக்கு நன்கு தெரிந்ததால் திரு.மோகனை அணுகி வேலையை ராஜினாமா செய்வதாகச் சொன்னேன். அவர் ஒப்புக் கொள்ளவில்லை. ‘‘பேசாம வேலையப் பாருங்க...’’ என்று உரிமையாய் அதட்டி, என் ராஜினாமாக் கடிதத்தை ஏற்க மறுத்து விட்டார். அவரின் அன்புக்குக் கட்டுப்பட்டு வேலையைத் தொடர்ந்தேன்.

ஆனால், அந்த நிகழ்வு ஏற்பட்ட இரண்டு மாதங்கள் கழித்து வந்த ‘கல்யாணமாலை’ இதழ் ஒன்றில் ஒரு வரனைத் தூக்கி விட்டு வேறு ஒருவரை வைக்க வேண்டிய இடத்தில் நான் தவறு செய்தேன். விளைவாக... அந்தப் பக்கம் முழுவதுமே வரன்களும், போட்டோவும் மாறி விட்டன.

அச்சமயம் மோகன் ஸார் ‘கல்யாணமாலை’ படப்பிடிப்புக்காக டெல்லியில் இருந்தார். நிகழ்ந்த தவறு அவரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. தவறு நிகழ்ந்த அந்தப் பக்கத்தைக் கிழித்துவிட்டு பிரதிகளை விற்பனைக்கு அனுப்பும்படி சொல்லி விட்டு, இரண்டு நாட்கள் கழித்து சென்னை வந்தார். வந்தவுடன் என்னை அழைத்து, நிகழ்ந்த தவறுக்கு மிகவும் ‘பாராட்டி’ விட்டு, வேலையை விட்டுச் சென்று விடும்படி பணித்தார். நான் கோரியபோதே அதைச் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், அல்லவா...! அதைச் செய்யாமல் இப்படி ஒன்று நிகழ்ந்தபின் தான் எனக்கு ‘சைக்கோ’ என்ற பட்டத்தையும் அளித்து நான் கேட்டதைச் செய்தார் அந்த விந்தை மனிதர்!

எனக்குப் பிரச்சனை ஏற்பட்டதிலிருந்து இரண்டு மாதங்கள் கழித்து ‘கல்யாணமாலை’ இதழிலிருந்து வெளிவந்தேன். அதனபின் வந்த மாதத்தில் எங்கும் வேலைக்குச் செல்லாமல் பொழுது போனது. இந்த மூன்று மாதங்களில் இறைவனருளால் கோர்ட் சிககல்களிலிருந்து விடுபட்டிருந்தேன். மிகமிக நிம்மதியாக உணர்ந்தேன்.

இப்போது மீண்டும் ஏதாவது பணிக்குச் செல்லலாம் என்று நினைத்த சமயத்தில் முதலில் நினைவுக்கு வந்தது நண்பர் பி.கே.பி. ஸார் தான். என் வாழ்வின் எல்லாப் பக்கங்களையும் அறிந்தவர் அவர். பொதுவாக நாமெல்லாம் நான்கைந்து முகமூடிகள் அணிந்துதான் மற்றவர்களுடன் பழகுவோம். ஒரு முகமூடி கழற்றிய முகம் நண்பர்களுக்கு, இரண்டு முகமூடி கழற்றிய முகம் மனைவிக்கு, ஒரு மூகமூடியுடன் இருக்கும் முகம் பெற்றோருக்கு, முகமூடிகளற்ற முகம் நமக்கு மட்டுமே என்பதுதான் வாழ்வில் பெரும்பாலானோரின் நிலை. எந்த முகமூடியுமின்றி நான் பழகும் ஒருவர் பி.கே.பி. அவரும என்னிடம் அப்படியே.

 ‘கல்யாணமாலை’யை விட்டு வெளியே வருவதற்கு முந்தைய காலகட்டத்தில் அவரைச் சந்தித்த போது அவர் சொல்லியிருந்த ஒரு ‘விஷயம்’ நினைவுக்கு வர, உடனே அவரின் வீட்டைத் தேடி ஓடினேன். அவரிடம் ‘அதை’ப் பற்றிப் பேசி, இப்போது நான் ‘அதை’ச் செய்ய முடியுமா என்று கேட்டேன். அவர் பெருந்தன்மையுடன், மகிழ்வுடன் சம்மதித்தார். அந்த ‘அது’ என்ன என்று கேட்கிறீர்கள்தானே... சொல்லிடலாம்னா ‘தொடரும்’ போடற இடம் வந்துடுச்சே... எனவே....

-தொடர்கிறேன்!

அனைவருக்கும் என் இதயம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Tuesday, April 10, 2012

ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்!

Posted by பால கணேஷ் Tuesday, April 10, 2012

லைப்பைப் படிச்சதும் எங்க ‘ரஜினியும், நானும்’ன்னு எழுதி, சூப்பர்ஸ்டாரும் என் நண்பர்ன்னு சொல்லிடுவேனோன்னு பயந்துட்டீங்கதானே...! இல்லீங்க. அதுல ஒரு விஷயம் என்னன்னா... ரஜினிகாந்த்தை எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும். ஆனா பாவம்... அவருக்குத் தான் என்னைத் தெரியாது. ஹி... ஹி....

1978-79கள்ல ‘இதயம் பேசுகிறது’ இதழில் அப்ப வளர்ந்துக்கிட்டு வந்த ஹீரோவான ‘ரஜினிகாந்த்’திடம் தொடர் பேட்டி எடுத்து ‘ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்!’ அப்படிஙகற தலைப்பில சில வாரங்கள் வெளியிட்டாங்க. அதில் சில பகுதிகள் என்னிடம் இருக்கிறது. ‘சிவமகன்’ங்கிறவரு ரஜினி ஸார் பேசற மாதிரியான நடையிலயே அதை எழுதியிருக்காரு. அதுல இருந்து ஒரு பகுதியை இங்க உங்களோட பகிர்ந்துக்கறேன். உங்களுக்கு ரஜினியைப் பிடிக்கும், தொடர்ந்து படிக்க விருப்பம்னா இன்னும் சில பகுதிகள் வெளியிட உத்தேசம்!

இப்போ... உங்ககூட இன்றைய சூப்பர் ஸ்டாரான அன்றைய ரஜினிகாந்த் பேசுகிறார்:

நான் முதன்முதலா நடிச்ச ‘அபூர்வ ராகங்கள்’ படம் ஒரு வருஷம், ஒண்ணரை வருஷம் கழிச்சுத்தான் ‌பெங்களூர் பக்கம் வரும். நண்பர்கள்கிட்ட கொஞ்சம் ‘ரீல்’ விடலாம்னு நினைச்சேன்.

எனக்கு ஒரு கெட்ட பழக்கம். தெரிந்த விஷயத்தைக் கொஞ்சம் எக்ஸாஜரேட் பண்ணிச் சொல்லுவது. எதுக்குன்னா Only to attract, not to cheat them.

‘‘படத்தில் முதல்ல இருந்து கடைசி வரை நான்தான் First Hero’’ன்னு அங்க உள்ளவங்களை ‘ப்ளீஸ்’ பண்ணுவதற்காகச் ‌சொன்னேன். என்னுடைய துரதிர்ஷ்டம், ‘அபூர்வ ராகங்கள்’ படத்தை சீக்கிரமா ரிலீஸ் பண்ணிட்டாங்க. நண்பர்களுக்கு ஆர்வம், பரபரப்பு! ‌எனக்கோ பயம், தர்ம சங்கடம்!

என்னை வரவேற்க ஏற்பாடுகள் நடந்தது. எப்படி? பலூன்களோட... மிட்டாய்களோட...

திரைப்பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஒண்ணா, ரெண்டா... நாலு டிசைன்ஸ்! ஒரு டிசைன்லகூட என் படம் இல்லை. சொல்லியிருக்கிறதோ மெயின் ரோலு - போஸ்டரிலோ முகம் இல்லை. அங்க மறுபடி ஒரு ‘ரீல்’ விட்டேன். ‘‘நட்சத்திரம்னாதான் போஸ்டர்ல போடுவாங்க. புதுமுகத்தை எப்படிப் போடுவாங்க?’’ -அப்படி ஒரு சமாளிப்பு.

ரிலீஸ் தேதி வந்தது. தியேட்டருக்குப் போனாங்க. அங்க வைச்சிருக்கிற போட்டோ கார்டில தேடினாங்க. ஒரே ஒரு போட்டோவில்தான் நான் இருந்தேன்- அதுவும் அவங்க கண்ணில படலை. தியேட்டரில் உட்கார்ந்தாங்க. எப்படி..? பலூனை ஊதிக் கையில வைச்சிக்கிட்டு... நான் திரையில் வந்தவுடன் அதை அடிச்சி, உடைச்சி என்னை வரவேற்க! முதலிலேயே ஸ்வீட் கொடுக்கப்பட்டு விட்டது- பால்கனியில இருககிறவங்களுக்கு. என்னன்னு சொல்லிக்கிட்டு..? ‘‘இந்தப் படத்தில் வர்ற ஹீரோ நம்ம ஃபிரண்டுதான்’’னு...!


படம் ஆரம்பமானது. ‘சிவாஜிராவைக் காணுமே...?’ டைட்டிலில் தேடுறாங்க. அங்க ரஜினிகாந்த்துன்னு இருக்கிறது அவங்களுக்குத் தெரியாது. ‘வருவான், வருவான்’னு எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்க- அடிக்கிறதுக்கு. (பலூனை!)

படம் ஓடிக்கிட்டே இருக்கு. பலூன் காத்தும் போயிகிட்டே இருக்கு. நான் திரையில் வரவே இல்லை. இன்டர்வல் வந்திடுச்சி. வெளியே வந்தாங்க. நான் அப்ப அங்கே இல்லே. பெல் அடிச்சது. உள்ளே போனாங்க. திட்டவட்டமான முடிவு பண்ணிட்டாங்க- ‘நான் படத்திலே இல்‌லே’ன்னு! ஆனா படம் நல்லா இருக்கு, பாத்திட்டுப் ‌போகலாம்னு உட்கார்ந்தாங்க. இப்ப காத்துப் போன பலூன் ஜோபியில இருக்கு. நான் ‘ரீல்’ விட்டது தெரிஞ்சு போச்சு.

இன்டர்வெல் முடிந்து படம் ஆரம்பமானது. அப்போது திரையில்... இரண்டு கேட்டையும் தள்‌ளித் திறந்து்கிட்டு ஒருவன் வந்து நின்னான்.ந லோ ஆங்கிளில் ஷாட் (Low Angle Shot). எல்லாரும் நிமிர்ந்து உட்கார்ந்தாங்க. எங்கோ பார்த்த முகம் மாதிரி இருந்தது அவங்களுக்கு. கொஞ்சம் நேரம் கழிஞ்ச பிறகு அந்த மனிதன்தான் நான்னு தெரிஞ்சது. எடுத்தாங்க ஜோபில இருந்த பலூனை... ஊதினாங்க காத்தை... அடிச்சாங்க பலூனை..! ‘டப்... டப்... டப்...’

அப்ப திரையில கமலஹாசன் முகம் வந்திருந்தது. கமலோட வரவுக்குக் காத்திரந்து சரியாக, அவுங்க அடிச்சது போல் இருந்தது. எல்லாருக்கும் ஆச்சரியம்... ‘என்னடா கமலஹாசனுக்கு இப்ப பலூனை உடைச்சி வரவேற்கறாங்களே’ன்னு..! அவுங்களுக்கு எப்படித் தெரியும்... எனக்காக அடிச்சாங்கன்னு!

படம் முடிஞ்சது. வீட்டுக்கு வந்தாங்க- என்னை அடிக்க! நான் அங்க இல்லே... ரயில்வே ஸ்டேஷனில் இருந்தேன்- மெட்ராஸுக்கு வருவதற்கு!

Sunday, April 8, 2012

நான் இருக்கிறேன் அம்மா..!

Posted by பால கணேஷ் Sunday, April 08, 2012

ன்றைக்கு காலையில் அலுவலகத்துக்குப் புறப்படும் போதுகூட எனக்குள் அந்தத் திட்டமில்லை. ஏனோ திடீரென்று அம்மாவைப் பார்க்க வேண்டும் போல உள்மனம் அடித்துக் கொண்டது. சந்திராவுக்கு போன் பண்ணிக்கூடச் சொல்லாமல் உடனே கிளம்பி விட்டேன். ‌சொன்னால் ‘போக வேண்டாம்’ என்று தடுக்கத்தானே பார்ப்பாள். எங்களுக்குக் கல்யாணமான நாளிலிருந்தே தன் மாமியாரை வெறுக்கிறவளாகத்தானே அவள் இருந்து வந்திருக்கிறாள்.

எனக்குக் கல்யாணமானதும் பேரக் குழந்தையைக் கொஞ்சலாம் என்று எதிர்பார்த்திருந்த அம்மாவுக்கு அது தாமதமானதால் மன வருத்தம் ஏற்பட்டு ஒரு சொல் ‌சொல்லிவிட... அன்றிலிருந்து அம்மாவை எதிரியாகப் பாவித்து தினமும் சண்டை பிடிக்க ஆரம்பித்தாள் சந்திரா. அலுவலகம் விட்டு வந்தால் அம்மாவைச் சமாதானம் செய்வதா, மனைவியை அட்ஜஸ்ட் செய்வதா என்று தெரியாமல் நான் தலையைப் பிய்த்துக் கொண்ட நாட்கள் அனேகம். கடைசியில் வேறு வழியில்லாமல்தான் அப்படி ஒரு முடிவெடுக்க வேண்டியதாயிற்று.

ஊ:ரிலிருந்த வீட்டையும் அங்கிருந்த சொற்ப நிலத்தையும் பார்த்துக் கொண்டு அம்மாவை அங்கேயே இருக்கச் சொல்லி விட்டேன். ‘‘எனக்கெதுக்குடா இதெல்லாம்...?’’ என்று அம்மா மறுத்தாலும் கேட்காமல், டி.வி., ஃப்ரிட்ஜ் என நவீன வசதிகள் அனைத்தையும் அம்மாவுக்கென்று ஏற்படுத்தி வைத்திருந்தேன்.  செல்போன் ஒன்று வாங்கித் தந்து, தினமும் அம்மாவுடன் பேசலாம் என்றால், ‘‘போடா... இத்தனை வயசுக்கப்புறம் இதை எப்படி பயன்படுத்தறதுன்னு நான் கத்துக்கணுமாக்கும்? வேண்டாம்...’’ என்று விட்டாள் அம்மா.

அதன் பிறகு இரண்டு வருடம் கழித்து, எங்களுக்குக் குழந்தை பிறந்து அம்மா பேரனைப் பார்த்து மகிழ்ந்தாள். என்னுடன் சென்னையிலேயே தங்கிவிடும்படி அம்மாவிடம் கேட்டேன். ‘‘இல்ல சரவணா... சந்திராவோட மனசுல கசப்பு படிஞ்சு போச்சு. என்னை எதிரியாவே பாக்கறா. நான் இங்க இருந்தா நீ நிம்மதியா இருக்க முடியாது. அதனால நான் கிராமத்துலயே இருந்துடறேன். நீ அடிக்கடி வந்து என்னைப் பாத்துக்கிட்டா போதும்...’’ என்று விட்டாள். ஊருக்குப் போன கையோடு நான் வாங்கித் தந்திருந்த ஃப்ரிட்ஜையும், டிவியையும் தேவையில்லையென்று சென்னைக்கு அனுப்பி விட்டாள்.

விளைவு...  நான் மட்டும் அம்மாவை கிராமத்திற்குப் போய் பார்த்துவிட்டு ஒன்றிரண்டு நாள் தங்கி விட்டு வருவேன். மாதம் ஒரு முறை அம்மாவைப் பார்க்கப் போவது என்றிருந்தது சில மாதங்களுக்கு ஒருமுறை, வருடத்துக்கு ஒரு முறை என்று தேய்ந்து கொண்டே வந்து இப்போது நான் அம்மாவைப் பார்த்தே மூன்று வருஷத்துக்கு மேலாகி விட்டது.

ன் ஊர் இந்தச் சின்ன இடைவெளிக்குள் சில மாற்றங்களைச் சந்தித்திருந்தது. மேலத்தெரு திருப்பத்தில் இருந்த அரசமரத்தைக் காணோம். அங்கே ஒரு பெரிய துணிக்கடை முளைத்திருந்தது. ஒன்றிரண்டு செல்போன் கடைகளும், ஷாப்பிங் காம்ப்ளக்சுமாக நல்ல முன்னேற்றம்தான். ஆனால் எங்கள் தெருவும், அங்கிருந்த வீடுகளும் மாற்றம் எதுவுமின்றி அப்படியேதான் இருந்தன. தெருவின் துவக்கத்தில் ராஜு அண்ணாவின் பெட்டிக் கடைகூட அப்படியே இருந்தது. ராஜு அண்ணா தெருவை வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். ‘‘ராஜுண்ணா! சவுக்கியமா?’’ என்றபடி எதிரே போய் நின்றேன். அவர் பதிலேதும் சொல்லாமல் வேறு திசையில் பார்த்தார். என்மேல் என்ன கோபம் அவருக்கு? புரியாத நிலையிலேயே ‘சரி, அம்மாவைப் பார்த்துவிட்டு வந்து இவரிடம் பேசலாம்’ என்று முடிவுகட்டி வீட்டை நோக்கி நடந்தேன்.

வீட்டை நெருங்க நெருங்க என் பரபரப்பு அதிகமாகியது. அம்மா! சின்ன வயதில் கதைகள் நிறையச் சொல்லித் தந்த அம்மா! ஊர்க் கிணற்றி்ல நீச்சல் கற்றுத் தந்த அம்மா! எதற்கும் எங்கும் பயப்படக் கூடாதென்று தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் ஊட்டி வளர்த்த அம்மா! இப்படி பல வடிவங்களில் என் அம்மா மனதிற்குள் ஸ்லைட் ஸ்லைடாக வந்து போனாள். பார்த்து எவ்வளவு நாளாயிற்று! என்ன தப்பிதம் செய்துவிட்டேன் நான்? பரபரப்பு தொற்றிக் கொண்ட மனதுடன் உள்நுழைந்தேன்.

அம்மா பக்கத்து வீட்டு மீனாக்ஷி அக்காவுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். அம்மாவுக்கு ஒரு சர்ப்ரைஸ் தர விரும்பியவனாய், பூனைப் பாதம் ‌வைத்துச் சென்று கூடத்திலிருந்த தூணின் பின்புறம் மறைந்து நின்று கொள்கிறேன். பேச்சினூடே என் பெயரும் அடிபடவே, உன்னிப்பாக காதைக் கொடுக்கிறேன்.

‘‘இந்தத் தள்ளாத வயசுல வீட்டு வேலை பாக்கற செல்வியை மட்டும் துணையா வெச்சுக்கிட்டு நீங்க எதுக்கு கஷ்டப்படணும் மாமி? எப்பப் பாத்தாலும் சோகமாவே இருககீங்க... சரவணன்தான் மெட்ராஸ்ல கை நிறைய சம்பாதிக்கிறான்ல... அவன்கூடப் போய் இருக்க வேண்டியதுதானே...? இப்படி எந்த வசதியும் இல்லாம இந்த ஊர்ல கஷ்டப்படணுமா?’’ என்று கேட்டாள் மீனாக்ஷியக்கா.

‘‘இல்லடி... என் மருமக நான் பக்கத்துல இல்லாட்டி அவன்கிட்ட அன்பாத்தான் நடந்துக்கறா. நான் அங்க போய் அவங்களுக்குள்ள வீணாப் பிரச்சனைய உருவாக்க விரும்பலை. அவன் நல்லா இருந்தாச் சரி. அவன் டிவி வாங்கித் தரணும், ஃப்ரிட்ஜும், செல்போனும் வாங்கி்த் தரணும்னா நான் எதிர்பார்த்தேன்? எனக்கு என் பிள்ளைய அடிக்கடி பாத்துட்டிருந்தாப் போதும்டி. வருஷக்கணக்கா அவன் வரலையேங்கறதுதான் என்னோட சோகம். ஒரு தடவை அவன் என் முன்னாடி வந்து ‘‘அம்மா, நல்லாயிருக்கியா’’ன்னு கேட்டுட்டா மாசம் பூரா சிரிச்சுட்டே இருப்பேனேடி... ஹும்...!’’ என்று பெருமூச்சு விடுகிறாள் அம்மா. வெற்று முதுகில் சுளீரென்று சவுக்கடி வாங்கியது மாதிரி வலிக்கிறது எனக்கு!

‘‘அவன் எப்பத்தான் வருவானோ... என்னமோ போங்க மாமி...’’ என்றபடியே மீனாக்ஷி அக்கா செல்ல, கண்ணீர் நிரம்பிய விழிகளுடன் அம்மாவின் எதிரில் போய் நிற்கிறேன். ‘‘அம்மா... என்னை மன்னிச்சிடும்மா. நான் பண்ணின தப்பை உணர்ந்துட்டேம்மா. இனி உன்னை விட்டு எங்கயும் போக மாட்டேம்மா...’’ என்று கதறுகிறேன். அம்மாவின் பார்வை என்னையும் தாண்டி வாசலை வெறி்த்துக் கொண்டிருக்கிறது. ‘‘அம்மா... பேசும்மா... கோபமா இருந்தா அடிச்சுடும்மா. இப்படி சைலண்ட்டா இருக்காதம்மா... ப்ளீஸ்!’’ என்று அலறுகிறேன் நான். அம்மாவோ சலனமில்லாத முகத்துடன் உள்ளே செல்லத் திரும்புகிறாள்.

என்ன சொல்லி அம்மாவைச் சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் நான் திகைத்து நின்றிருக்கிறேன். அப்போது வாசல் பக்கமிருந்து, ‘‘அம்மா...’’ என்று சத்தமாக யாரோ அழைக்கிறார்கள். அம்மா திரும்பிப் பார்க்கிறாள். தபால்துறை ஊழியர் உள்ளே நுழைந்து, ‘‘உங்களுக்குத் தந்தி வந்திருக்கும்மா...’’ என்று அம்மாவிடம் கையெழுத்தை வாங்கிக் கொண்டு தந்தியைத் தருகிறார். பிரித்துப் படித்த அம்மா அலறுகிறாள். ‘‘தெய்வமே... என்ன கொடுமை இது! ஐயோ....’’ என்று. ஓவென்று அழுகிறாள்.

அம்மாவின் உச்சபட்ச அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்து மீனாக்ஷியக்கா பதறி ஓடி வருகிறாள். ‘‘என்னாச்சு மாமி? ஏன் அழறீங்க?’’ என்ற பதைக்கிறாள். பேச வாயெழாமல் தந்தியை அவளிடம் நீட்டுகிறாள் அம்மா. தந்தியைப் படித்த மீனாக்ஷியக்காவின் முகத்தில் திக்பிரமை நிலவுகிறது..‘‘மா... மி... இதென்னது..? சரவணன் ஆபீஸ் போற வழியில லாரி ஒண்ணு மோதினதுல ஸ்பாட்லயே இறந்துட்டதாகவும், உங்களை உடனே வரச் சொல்லியும்ல சந்திரா தந்தி குடுத்திருக்கா... ஐயோ சரவணா...’’ என்கிறாள். ‘‘கடவுளே.... கல்லாட்டமா என்னை வெச்சுக்கிட்டு, வாழ வேண்டிய என் பிள்ளையப் பறிச்சிட்டயே... ஐயா சரவணா...’’ என்று மார்பிலும் முகத்திலும் அறைந்து கொண்டு அலறி அழுகிறாள் அம்மா.

‘‘என்னது.... நான் இறந்துட்டேனா? இல்லம்மா... நான் இங்கதானே இருக்கேன். உன்னை விட்டுப் பிரியக் கூடாதுன்னு முடிவு பண்ணித்தானே வந்திருக்கேன். அழாம என்னைப் பாரும்மா... அழாதம்மா...’’ என்று கதறித் துடிககிறேன் நான். ஊஹும்... அம்மாவின் காதில் என் புலம்பல் விழுந்தால்தானே!

Friday, April 6, 2012

மொறு மொறு மிக்ஸர் - 6

Posted by பால கணேஷ் Friday, April 06, 2012

ஹாய்... ஹாய்... ஹாய்...! நல்லா இருக்கீங்களா? இந்த முறை நான் புதிர் போடப் போறதில்ல. இப்ப நாம ஒரு விளையாட்டு விளையாடப் ‌போறோம். நான் சொல்ற சின்னக் கணக்கை நீங்க அங்க போடுவீங்களாம். அதோட விடைய நான் இங்கருந்தே சொல்வேனாம்... சரியா?

‘‘அவசரம்! வேகமாப் போங்க டிரைவர்!’’
ஒரு பேப்பரும் பேனாவும் எடுத்துக்கங்க. 1லருந்து 9க்குள்ள ஏதாவது மூணு எண்களை எழுதுங்க. அந்த எண்கள் அதிக மதி்ப்பிலிருந்து குறைந்த மதிப்புக் கொண்ட வரிசையா அமையணும்கறது மட்டும்தான் கண்டிஷன்! உதா: 742 -இப்படி. எழுதியாச்சா..? அதுக்குக் கீழே அதே எண்ணை ‘உல்டா’ பண்ணி எழுதுங்க. உதா: 247. இப்ப முதல் எண்லருந்து ரெண்டாவது எண்ணைக் கழியுங்க.

கழிச்சாச்சா? விடையா வர்ற எண்‌ணோட உல்டாவை அதுக்குக் கீழே எழுதுங்க. இப்ப ரெண்டையும் கூட்டுங்க.

கூட்டியாச்சா?  உங்களுக்கு வந்திருக்கிற விடை என்னங்கறதை பதிவோட இறுதியில நான் சொல்றேன். சரியான்னு பாருங்க...

===========================================

ரங்களிலேயே சுற்றுப்புறத்துக்கு அதிக நலன்தரும் மரத்தை ‘அரச மரம்’ என்கிறார்கள். இதற்கு போதி மரம் என்றும் பெயர் இருக்கிறது. புத்தருக்கு ஞானம் ‘போதி’த்த மரம் என்பதால் போதி மரம் என்று சொன்னதாகச் சொன்னாலும், பூதேவியின் மரம் என்பதால் போதி மரம் என்ற பெயர் என்றும் நம்பிக்கை. 

‘‘ஹாஸ்பிட்டல் வந்தாச்சா?’’
அரச மரத்தை ‘கல்ப தரு’ என்று சொல்லி வணங்கினார்கள். இன்று Global Warning பிரச்சனையை எதிர்கொள்ள மேலை நாட்டு விஞ்ஞானிகள் சொல்வது- மரங்களை நடுங்கள்... அதுவும், அரச மரங்களை!

கலியுகத்தில் செடி, மரம் நடுவது, பூங்கா அமைப்பது, குளம் தோண்டுவது ஆகியவை குறையும். அதனால் இயற்கையின் சீ்ற்றம் அடிக்கடி ஏற்படும் என்று சிவபுராணத்தில் (பாடல் 11.1.23) அன்றே சொல்லி வைத்திருக் கிறார்கள் என்பது ஆச்சரியம்!
                                                                            -‘திரிசக்தி’ மாத இதழிலிருந்து.

===========================================

‘ஆய கலைகள் அறுபத்து நான்கு’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த அறுபத்துநான்கு கலைகள் என்னென்ன என்பதைத் தெரிந்தவர்கள் மிகக் குறைவே. என் நண்பர் இந்திரா செளந்தர்ராஜன் அவர்களிடம் ஒருமுறை கேட்டபோது அந்த அறுபத்து நான்கு கலைகளையும் பட்டியலிட்டுச் சொன்னார். பிரமிப்பாக இருந்தது எனக்கு. உங்களுக்காக அவற்றை இங்கே தருகிறேன்.

1. ‌முதலில் எழுதப் பழகும் மொழியின் அட்சரங்கள், 2. லிகிதம், 3. கணிதம், 4. வேதம், 5. புராணம், 6. வியாகரணம், 7. ஜோதிடம், 8. தர்ம சாஸ்திரம், 9. யோக சாஸ்திரம், 10. நீதி சாஸ்திரம்,

11. மந்திர சாஸ்திரம், 12. நிமித்த சாஸ்திரம், 13. சிற்ப சாஸ்திரம், 14. வைத்ய சாஸ்திரம், 15. சாமுத்ரிகா லட்சணம், 16. சப்தப் பிரம்மம், 17. காவியம், 18. அலங்காரம், 19. வாக்கு வன்மை, 20. கூத்து,
தலை தெறிக்க ஓடி...

21. நடனம், 22. வீணை இசை, 23. புல்லாங்குழல் வாசிப்பு, 24. மிருதங்க இசை, 25. தாளம், 26. ஆயுதப் பயிற்சி, 27. ரத்னப் பரீட்சை, 28. கனகப் பரீட்சை (தங்கம் எது என அறிதல்), 29. யானை ஏற்றமும் ஜாதி அறிதலும், 30. குதிரை ஏற்றமும் ஜாதி அறிதலும்,

31. ரத சாஸ்திரம், 32. பூமியறிதல், 33. போர்முறை சாஸ்திரம் மற்றும் தந்திரம், 34. மற்போர் சாஸ்திரம், 35. வசீகரித்தல், 36. உச்சாடனம், 37. பகை மூட்டுதல், 38. காம சாஸ்திரம், 39. மோகனம், 40. ஆகர்ஷணம்,

41. ரஸவாதம், 42. கந்தர்வ ரகசியம், 43. மிருக பாஷையறிவு, 44. துயர் மாற்றுதல், 45. நாடி சாஸ்திரம், 46. விஷம் நீக்கும் சாஸ்திரம், 47. களவு, 48. மறைந்துரைதல், 49. ஆகாயப் பிரவேசம், 50. விண் நடமாட்டம்,

51. கூடு விட்டுக் கூடு பாய்தல், 52. அரூபமாதல், 53. இந்திர ஜாலம், 54. மகேந்திர ஜாலம், 55. அக்னி ஸ்தம்பனம், 56. ஜல ஸ்தம்பனம், 57. வாயு ஸ்தம்பனம், 58. கண்கட்டு வித்தை, 59. வாய் கட்டும் வித்தை, 60. சுக்கில ஸ்தம்பனம், 61. சுன்ன ஸ்தம்பனம், 62. வாள் வித்தை, 63. ஆன்மாவைக் கட்டுப்படுத்துதல், 64. இசை.

===========================================

லையாள மெகாஸ்டார் மம்முட்டி சொல்கிறார்:

‘‘நான் அமிதாப்பச்சனுடன் பங்கெடுத்த நிகழ்ச்சியை வாழ்நாளில் மறக்க முடியாது. பச்சனும் நானும் பக்கத்து பக்கத்தில் அமர்ந்திருந்தோம். சினிமாவில் புகழ்பெற்ற பலரும் வணங்கி மரியாதை செலுத்தியபடி எங்களைக கடந்து போனார்கள். யார் வந்தாலும் சிரிப்புடன் நெஞ்சில் கை வைத்து மரியாதை செலுத்தினேன். ஆனால் அமிதாப்பச்சன் பெண்கள் வந்தபோது அவர்களுடைய வயதுக்குத் தகுந்தாற்போல் நாற்காலியிலிருந்து எழுந்து மரியாதை செலுத்தினார். நான் மிகவும் வெட்கப்பட்ட தருணமாயிருந்தது அது.

அவரோட அவசரம் அவருக்கு..!
மலையாளிகளாகிய நாம் பெண்களுக்கு மரியாதை செலுத்துவதில்லை என்பது மட்டுமல்ல; ஆண்கள் வரும்போது பெண்கள் எழுந்திருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறோம். பேருந்துகளில் பெண்களின் இருக்கைகளில் நாம் உட்கார்ந்திருந்தாலும் எழுந்து இடம் கொடுக்க யோசிப்போம். ஆனால் படிப்பறிவில்லாத வட இந்தியனோ, தமிழனோ, தெலுங்கனோ பெண்களுக்காக எழுந்திருப்பான்.’’

-‘அம்ருதா’ மாத இதழிலிருந்து.

===========================================

‘நிலா நிலா ஓடி வா’ என்று நிலாவைக் காட்டிச் சோறூட்டுவார்களாம் குழந்தைகளுக்கு. பெண்களை நிலாவுடன் ஒப்பிடுவது கவிஞர்களின் வழக்கம். எல்லோரும் ரசிக்கும் இந்த நிலாவுக்கு எத்தனை வேறு பெயர்கள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? எண்ணிக்கோங்க...: 

நிலவு, பிறை, குபேரன், அம்புலி, தண்ணவன், மருவு, சுதாகரன், சந்திரன், சோமன், கலையினன், அலவன், நசரகரன், குரங்கி, அல்லோன், ஆலோன், களங்கன், உடுவின் வேந்தன், சசி, கிரணன், மதி, விது, முயலின் கூடு, நிசாபதி, கலாநிதி, திங்கள், சாநவ்தன், இந்து, பசுங்கதிர்.
பழைய ‘சாவி’ இதழிலிருந்து...

இத்தனை பெயர்களும் நிலவுக்கு உண்டுன்னு சொல்றது நான் இல்லீங்கோ... ‘சூடாமணி நிகண்டு’ங்கற புத்தகமுங்கோ!

===========================================

ம்புலன்ஸ் ஜோக்கை வரைந்தவர் என் நண்பர் ஜி.ஆரோக்கியதாஸ்.

===========================================

ப்ப உங்களுக்குக் கிடைச்சிருக்கிற விடை : 1089. எப்பூடி! ‌கரெக்ட்டாச் சொல்லிட்டேன்ல... வேற ஏதாவது நம்பர் காம்பினேஷன் முயன்று பாருங்க...

அப்புறம் ‘கணேஷ் விடையச் சொன்னா, அது ராங்காப் போறதில்ல’ன்னு பாட்டே பாடுவீங்க!

Tuesday, April 3, 2012

நடை வண்டிகள் - 11

Posted by பால கணேஷ் Tuesday, April 03, 2012

பி.கே.பி.யும், நானும் - 3

பி.கே.பி. ஸாரின் திருவான்மியூர் அலுவலகத்துக்கு நான் சென்றபோது, அவரது உதவியாளர்கள் நால்வரையும் எனக்கும், என்னை அவர்களுக்கும் அறிமுகப்படுத்தினார். அனைவருக்கும் ‘ஹாய்’ சொன்ன நான், ‘‘ஸ்ரீனிவாஸ் பிரபுங்கற உங்க பேர் மட்டும் எனக்குப் பரிச்சயம். உங்களோட சிறுகதைத் தொகுதி ஒண்ணை ஜீயே ஸார் ஆபீஸ்ல வேலை பாத்தப்ப படிச்சிருக்கேன்...’’ என்றேன் ஏறக்குறைய என்னுடைய உடல்வாகில் இருந்த அவர்களில் ஒருவரிடம். மகிழ்வுடன் புன்னகைத்தார் அவர். ஸ்ரீனிவாஸ் பிரபு இப்போது அரசு அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். மயங்க வைக்கும் தமிழில் ரசிக்க வைக்கும் கவிதைகளும், சுவாரஸ்யம் குன்றாத சிறுகதைகளும் படைத்து வரும் ஆர்வமிக்க படைபபாளி அவர்.
ஸ்ரீனிவாஸ் பிரபு

நிறையப் பேர் நமக்கு அறிமுகமானாலும், சிலர்தான் மனதிற்கு நெருக்கமாக வருவார்கள். அப்படித்தான் அன்று பி.கே.பி. ஸார் அறிமுகப்படுத்திய ஸ்ரீனிவாஸ் பிரபுவும், ஆரோக்கிய தாஸும் இன்று வரையிலும் இனி என்றும் என் மனதுக்கு நெருக்கமான நண்பர்கள். ஜி.ஆரோக்கிய தாஸ் அழகாய் படம் வரைவார். நான் அளித்த பல மிக்ஸர்களில் அவர் கைவண்ணத்தைப் பார்த்திருப்பீர்கள். இப்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நியூஸ் எடிட்டராக பணியாற்றி வருகிறார் தாஸ். பூக்கூடை என்ற பெயரில் வலைத்தளம் துவங்கி தன் எண்ணங்களைப் பகிர்ந்து வருகிறார். (என்னைப் போல் ஜோக்குகளும், மொக்கைகளும் அவரிடம் இருக்காது. சீரிய சிந்தனைகள் மட்டுமே அந்தத் தளத்தில் இருக்கும்.)

ஜி.ஆரோக்கிய தாஸ
பி.கே.பி. ஸார் என்னை அழைத்த விஷயத்தை விரிவாகச் சொன்னார். சுபாவும் அவரும் கூட்டாக ‘உங்கள் ஜுனியர்’, ‘உல்லாச ஊஞ்சல்’ ஆகிய மாத இதழ்களை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்திற்குப் பின் திரைத் துறையிலும் தொலைக்காட்சித் துறையிலும் இரண்டு (மூன்று?) எழுத்தாளர்களும் பிஸியாகிவிட, தொடர்ந்து பத்திரிகையில் கவனம் செலுத்த முடியாமல், ‘உங்கள் ஜுனியர்’ இதழை எஸ்.பி.ராமு ஸாரும், ‘உல்லாச ஊஞ்சல்’ இதழை ஜி.அசோகன் ஸாரும் வெளியிட்டார்கள். சில காலம் வந்தபின் அந்த இரு இதழ்களும் நின்று விட்டன. இப்போது ஒரு பதிப்பாளர் ‘ஊஞ்சல்’ இதழை வெளியிட முன்வந்திருப்பதாகச் சொன்னார் பி.கே.பி.

‘‘144 பக்கங்கள்ல புத்தகத்தைக் கொண்டு வர்றதா ப்ளான் பண்ணியிருக்கோம். அதில சுமாரா 60லருந்து 65 பக்கங்கள் என்னோட நாவல் வந்துடும். மற்ற பக்கங்கள்ல வெரைட்டி மேட்டர்ஸ் தரணும். படிக்கிற வாசகர்களுக்கு ஒரு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி கிடைக்கணும்னு நான் விரும்பறேன்’’ என்றார் பி.கே.பி. ஸார். அவர் பொறுப்பாசியராகவும், தாஸும், பிரபுவும் உதவி ஆசிரியர்களாகவும், நான் வடிவமைப்பாளராகவும் ஒரு குழு அமைத்திருக்கும் விஷயத்தை அவர் சொன்னபோது மகிழ்ச்சியுடன் சற்றுக் கவலையும் இருந்தது எனக்கு.

காரணம்... முன்பு சுபாவும், பி.கே.பி.யும் இணைந்து நடத்திய ‘உங்கள் ஜுனியரும்’, ‘உல்லாச ஊஞ்ச’லும் குமுதம் கிட்டத்தட்ட சைஸுக்கு இருக்கும். இப்போது திட்டமிட்டுள்ளதோ ‘க்ரைம் நாவல்’ போல அகலம் குறைவாகவும், உயரம் அதிகமாகவும் இருக்கும் ஒரு வடிவம். இந்த மாதிரி வடிவத்தில் கவிதைகள், ஜோக்குகள் இவற்றுக்கெல்லாம் படங்கள் வைத்து ரசனையுடன் வடிவமைப்பு செய்வது சற்று சவாலான பணிதான். அதை எண்ணித்தான் சற்றே கவலை. என்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், மகிழ்வுடன் அவரிடம் சம்மதம் சொல்லிவிட்டு முதல் இதழுக்காக டைப்செட் செய்யச் ‌சொல்லி அவர் தந்த நாவலையும் பெற்றுக் கொண்டு விடைபெற்றேன்.

ஆனால் ஊஞ்சல் இதழ் லேஅவுட் செய்யத் தொடங்கியபோது மிக எளிதாகவே இருந்தது. ஸ்ரீனிவாஸ் பிரபுவும், தாஸும் லேஅவுட் செய்யும் போது என்னுடன் இருந்தார்கள். பிரபுவுக்கு டிசைனிங்கில் நிறையவே இன்ட்ரஸ்ட் இருந்ததால் நிறைய ஐடியாக்களைத் தந்து என் வேலையை எளிதாக்கினார். கேள்வி பதில், சினிமா விமர்சனம், நிறைய வாசகர்களின் கவிதைகள், ஜோக்கு களைத் தாங்கி வெளிவந்த ஊஞ்சல் எங்களுக்குப் பிடித்திருந்ததைப் போலவே வாசகர்களுக்கும் பிடித்திருந்தது. ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் புத்தகத்தைக் கொண்டு வருவதாகத்தான் ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டு துவங்கப்பட்டது. பின்னாளில் அது மாத இதழானது.

ஒரு மாத இதழுக்கான வேலைகளை முடித்து ப்ரிண்டிங் அனுப்பி விட்டு, அந்த இதழ் பிரிண்ட் ஆகி வந்ததும் அடுத்த இதழ் வேலைகளைத் திட்டமிட்டு ஆரம்பிக்க வேண்டும். பி.கே.பி. ஸார் அற்புதமான நிர்வாகி. எப்போது நாவல் டைப் செய்து முடிக்க வேண்டும், எப்போது லேஅவுட் வேலைகளை ஆரம்பித்து, எப்போது முடிக்க வேண்டும், பப்ளிஷரிடம் எப்போது தர வேண்டும் என்று எல்லாவற்றையும் தேதிவாரியாக அழகாக டேபிள் போட்டுத் தந்து விடுவார். இந்தத் திட்டமிடல் பண்பு அவரிடம் எனக்குப் பிடித்த இரண்டாவது விஷயம். அவரிடமிருந்து நான் ‘சுட்ட’ இரண்டாவது விஷயமும் இதுவே!

சிதம்பரத்திலிருந்து இன்னொரு தபூசங்கர் போல காதல் கவிதைகளாக எழுதித் தள்ளும் சிவபாரதி என்ற வாசகர், வேலூரிலிருந்து ஜோக்குககள் மற்றும் கவிதைகள் நிறைய அனுப்பும் முத்து ஆனந்த் என்ற வாசகர் இப்படிப் பல புதியவர்களின் படைப்புகளைப் படித்து ரசிக்கவும், லேஅவுட் செய்யவும் வாய்ப்புக் கிடைத்தது ஊஞ்சலில் பணி செய்தபோது. அப்போதெல்லாம் நான் வியந்த ஒரு வாசகரும் உண்டு. மாதம் மூன்று அல்லது நான்கு கவர்களாவது அவரிடமிருந்து வரும். ஒவ்வொன்றிலும் 40, 50 ஜோக்குகளை மழையாகப் பொழிந்திருப்பார். ஒருசில ஜோக்குகள் ஜோக்காக இல்லாமல் வார்த்தை விளையாட்டுகளாக அமைந்திருக்கும்.  ஆனால் நிறைய ஜோக்குகள் படித்துச் சிரிக்கும்படி இருக்கும். அவரின் அந்த ஆர்வம் என்னைப் போலவே பி.கே.பி. ஸாருக்கும் மிகப் பிடித்திருந்தது.

ஒரு இதழில் அவரின் ஜோக்குகளை மட்டுமே ஆறு பக்கங்கள் வெளியிட்டு, ‘சிக்ஸர் அடிக்கிறார் சென்னிமலையார்’ என்று தலைப்பு வைத்து வெளியிட்டிருந்தோம். இப்போ புரிஞ்சிருக்குமே அவர் யார்ன்னு... ‘அட்ரா சக்க’ என்ற தளத்தில் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் சி.பி.செந்தில்குமார்தான் அந்த வாசகர்! அவரின் தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டுத்தான் எழுதுவார் என்பதால் போனிலும் பேசினேன். ‘ஊஞ்சல்’ இதழ் தந்த இன்னொரு நல்லறிமுகம் அவர்! 

-தொடர்கிறேன்...
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube