Monday, April 28, 2014

புத்தம் புதிய புத்தகமே..!

Posted by பால கணேஷ் Monday, April 28, 2014
மீபத்தில் விஷால் நடித்து ‘நான் சிகப்பு மனிதன்’ என்றொரு படம் வந்திருக்கிறது, பார்த்தீர்களா? அதில் ‘நார்கோலெப்சி’ என்கிற வியாதியால் பாதிக்கப்பட்டவராக அவரைக் காட்டியிருப்பார்கள். அதாவது கோபம், சந்தோஷம் போன்ற உணர்ச்சிகள் தாக்கினால் தூங்கத் தொடங்கி விடுவார். அதுபோல ‘புததகாலெப்சி’யால் பாதிக்கப்பட்ட நிறையப் பேரை நான் பார்த்திருக்கிறேன். அதாகப்பட்டது... ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு சில பக்கங்களைப் படித்தால் போதும்... கண்களைச் சுழற்றிக் கொண்டு தூக்கம் வந்து உறங்கத் தொடஙகி விடுவார்கள். சிலசமயம் அந்தப் புத்தகங்களின் மேலேயே விழுந்துகூட... இதைத்தான் ‘விழுந்து விழுந்து படிக்கிறான்’ என்று சொல்வார்களோ என்றுகூட எனக்கொரு சந்தேகம் உண்டு ஸ்வாமி. ஹி... ஹி... ஹி...!

‘அவர்கள் அப்படித் தூங்கினால் உனக்கென்னய்யா பிரச்னை?’ என்று கேட்பீராயின்... அது நான் இரவல் தந்த புத்தகமாக இருந்து என்னிடம் திரும்பி வருமபோது அதன் கதியைப் பார்த்தால் பணம் கொடுத்து வாங்கிய என் கண்ணீரில் ரத்தமே வரத்தானே செய்யும் ஐயா...? புத்தகங்கள் வாங்குவதற்கு மூக்கால் அழுது கொண்டே பணம் தந்தவர்கள் - முன்பு அண்ணி, இப்போது மனைவி - நான் கண்ணால் ஜலம் விட்டு அழுவதைச் சகிப்பரோ? அதிலும் புத்தகத்தைக் கையில் எடுத்துவிட்டால் வருகிற தூக்கமும் பறந்து விடுகிற என் குணவிசேஷத்தைப்  புரிந்தவர்களாயிற்றே...! 

இந்த இரவல் வாங்குகிற பேர்வழிகளிடம் இன்னொரு பொதுப் பழக்கமும் உண்டு. புத்தகத்துடனேயே புக் மார்க் வைத்துக் கொடுத்தாலும்கூட அதை உதாசீனம் செய்து, தான் அதுவரை படித்த பக்கத்தை முக்கோணமாக மடித்து வைத்து விட்டு பிறிதொரு சமயம் எடுத்துப் படிப்பதில் அப்படியொரு ஆனந்தம். என்னுடைய பல புத்தகங்கள் இத்தகைய ஆசாமிகளால் ஓரங்களில் ரணகாயப்பட்டு, நான் படிக்கையில் முக்கோணங்களாக உதிர்ந்து சிற்சில வார்த்தைகளும் அத்துடன் கிழிந்து போய்... போகையில் பயில்வான் ரங்கநாதன் மாதிரி ஸ்ட்ராங்கர்க இருந்த அவை திரும்புகையில் ஓமக்குச்சி நரசிம்மனாக மாறியல்லவா வருகின்றன?

“உங்களுக்கு புத்தகம் படிக்கிற பழக்கம் எப்போதிருந்து ஏற்பட்டது?” என்று யாரையேனும் கேட்டுப் பாருங்கள்... ‘காலேஜ் டேஸ்லயிருந்து’ அல்லது ‘ஸ்கூல் டேஸ்லருந்து’ என்பார்கள். உண்மையில் புத்தகம் படிக்கும் பழக்கம் இன்றைய எல்,கே,ஜி (அ) அன்றைய முதல் வகுப்பிலிருந்தேயல்லவா ஆரம்பிக்கிறது? பாடப் புத்தகங்களை எல்லாம் யாரும் புத்தகக் கணக்கில் சேர்ப்பதில்லை போலும்... என்ன கொடுமை சரவணன்? நான் சொல்ல வந்த ஒரு விஷயத்தை விண்டுரைத்துவிட்டு மற்றதற்குப் போகலாம், ஒரு புத்தகம் என்னவெல்லாம் மாயம் செய்யும் தெரியுமா...? அறிஞர் அண்ணா போன்ற மேதைகள் படித்த புத்தகங்கள் அவர்களின் அறிவை வளர்த்திருக்கின்றன... அதைப் போல இன்றும் பலர் பலன் பெற்றிருக்கக் கூடும். ஆனால் நான் சொல்வது பொதுவான வெகுஜன மக்களைப் பற்றி ஐயா... நானறிந்த வரையில் ஒரு மனிதனைப் பொய் சொல்ல வைக்க புத்தகங்களைப் போன்ற சிறந்த சாதனம் வேறு ஒன்றில்லை.

புத்தகங்களைப் படித்து ரசித்துவந்த நான் அத்துடன் நின்றிருக்கலாம். விதி யாரை ஐயா விட்டது...? ‘சரிதாயணம்’ என்ற புத்தகத்தை நாஆஆனே எழுதி வெளியிட்டேன். அதைக் கடைகளில் விறறதைத் தவிர சில வி.ஜ.பி.க்களிடமும் நண்பர்களிடமும் தந்து படித்துவிட்டு கருத்துச் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தேன். நண்பர்களில் சிலர் (வேறுவழி? அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கே!) படித்துவிட்டு கருத்துச் சொன்னார்கள்.. மற்றையோரெல்லாம்... “எங்க ஸார்...? டயமே கிடைக்கறதில்லை... அடுத்த மாசம் என் சித்தி பெண் கல்யாணம் வருதில்ல... அது முடிஞ்சதும் தான் படிக்கணும்...” என்றும் அடுத்த மாதம் ச்ந்தித்தால், “எலெக்ஷன் டூட்டி போட்ருக்கான் பிரதர்... நீங்க நல்லா எழுதியிருப்பீங்க(?) அதனால் இந்த அமளியெல்லாம் ஓய்ஞ்சதும் படிக்கலாம்னு இருக்கேன்” என்றும் விதவிதமாகப் பொய் சொல்கிறார்கள். மற்றும் சிலரோ... “உங்க புத்தகத்தை எங்க பெரியப்பா வாங்கிண்டு போனார். படிச்சுட்டு ரொம்ப நல்லாருக்குன்னு அவரோட ஒண்ணு விட்ட தம்பியோட மச்சினருக்கு படிக்கக் கொடுத்திருக்காராம். வந்ததும் படிக்கணும்” என்பர்.. இவ்விதம் டிசைன் டிசைனாக பொய்களைக் கேட்டாலும், இப்படியாவது என் புத்தகம் ஊர் சுற்றுகிறதே என்று (அல்ப) திருப்திப்பட்டுக் கொள்கிறேன் நான்,

எழுத்தாளர் ராஜேஷ்குமாரிடம் நண்பனாகப் பழக ஆரம்பித்த புதிதில் ஒருமுறை அவரிடம். ”உங்களோட ‘எவரெஸ்ட் தொட்டுவிடும் தூரம்தான்’ புக் ஒண்ணு கொடுங்க ஸார்... படிச்சுட்டுத் தரேன்” என்றேன். அவர். “என்கிட்ட அதோட காப்பி ஒண்ணுகூட இல்ல கணேஷ். ரிலேடிவ்ஸும் ப்ரண்ட்ஸும் படிக்க கேக்கறப்ப குடுததுடறேன். என்கிட்ட புத்தகம் வாங்கிட்டுப் போனவர்கள் வாங்கிட்டுப் போனவர்களே... ஒண்ணுகூட திரும்பி வந்ததில்லை” என்றார். புத்தகங்களைப் படிக்க வாங்கிச் சென்று அதைச் சொந்தமாக்கிக் கொள்வதில் இருக்கும் குஷி என்னவாக இருக்கும் என்பது எனக்குப் புரியத்தான் இல்லை. பின்னாளில் என்னிடம் சாண்டில்யனின் ‘நீலரதி’ நாவலை இரவல் வாங்கிச் சென்ற ஒரு நண்பரை தொடர்ந்த (அவரின்) வெளியூர்ப் பயணங்களால் அடுத்த ஆண்டுதான் சந்திக்க நேர்ந்தது. அப்போது புத்தகங்களைப் பற்றி பேச்சு வருகையில். “நல்ல நல்ல புத்தகங்கள்தான் ஸார் நம்ம சொத்து. நான் நிறையச் சேத்து வெச்சிருக்கேன், நீங்க சாண்டில்யனோட ‘நீலரதி’ படிச்சிருக்கீங்களோ... சூப்பரான கதை. என்கிட்ட இருக்கு. வேணா எடுத்துட்டுப் போயி படிங்க” என்றார் கூலாக. அவ்வ்வ்வ்! அந்த பிரகஸ்பதி புத்தகத்தை இரவல் வாங்கினதையே மறந்துடுச்சா. இல்ல... பண்ணன்டு வருஷம் (தானே?) குடியிருந்தா அவனுக்கே வீடு சொந்தம்னு சொல்ற மாதிரி ஒரு வருஷம் தன்கிட்ட இருந்ததால தன் புத்தகமா கன்வர்ட் பண்ணிக்கிச்சோ தெரியல....

இப்படி எந்தப் புத்தகத்தையும் படிக்காமலேயே படித்ததாக பீலா விட்டுக் கொள்வதற்காக இரவல் புத்தகங்களாக தன் மேஜையில் அடுக்கி வைத்திருக்கும் பேர்வழிகள் ஒரு ரகம் என்றால்... புத்தகங்களை விற்பனை செய்பவ்ர்கள் இருக்கிறார்களே... அவர்கள் தனிரகம். நிலையான ஒரு வேலை இல்லாமல் மதுரையில் வாழ்ந்த நாளில் பணப்பற்றாக்குறை நிரந்தரம் என்கிற காரணத்தால்.. நியூசினிமாவுக்குப் பின்புறம் உள்ள சந்தில் போய் பழைய புத்தகங்களை வாங்கி வாசிக்கும் பழக்கத்தை கைக்கொண்டிருந்தேன். அந்தப் புத்தகம் விற்கும் ஆசாமிகள் இருக்கிறார்களே... புததகங்களை மட்டுமா எடை போடுகிறார்கள்..? ஓரிரு முறை சென்று வந்ததிலேயே என்னைக் கண்டதும். என் ரசனைக்குத் தீனி போடும் புத்தகங்களை தனியாக எடுத்துக் கைகளில் திணிப்பார்கள். வாங்காமல் வர முடியாது உண்மையில் அரிய பல பொக்கிஷப் புத்தகங்களை அங்கிருந்து நான் கைப்பற்றியிருக்கிறேன். இன்றைக்கு அந்தக் கடைகளெல்லாம் வழக்கொழிந்து விட்டன - வாரப்பத்திரிகைகளில் தொடர்கதைகள் வழக்கொழிந்து விட்டதைப்போல! 

புத்தகங்களை இரவல் வாங்கிப் படிக்கின்ற சுகத்தை யானும் அனுபவிக்க வேண்டி நண்பர்களிடமிருந்து ஓரிரண்டு புத்தகங்களை வாங்கி வந்ததுண்டு. அதென்னமோ எனக்கென்று ஒரு ராசி பாருங்கள்... நான் கொடுக்க வேண்டியவர்களெல்லாம் கரெக்டாகக் கேட்டு வாங்கி விடுகிறார்கள்... எனக்குக் கொடுக்க வேண்டியவர்கள் மட்டும் கொடுக்கிறார்கள் - அல்வா! அவ்வ்வ்வ்!  போகட்டும்... அவர்களால் அல்லவோ ‘புத்தகத்தை வாங்கினா ஒழுங்காப் படிச்சுட்டுக் கொடுத்துடுவான் கணேஷ்’ என்கிற நற்பெயரைப் பெற்றிருக்கிறேன். அதற்காகவேனும் அவர்கள் மகாராஜன்களாக இருக்கட்டும்!

மேற்சொன்ன விஷயங்களெல்லாம் ஒருபுறம் இருக்க... புத்தகங்களால் அவை படிக்கப்படுபவருக்கு உதவுவதைத் தவிர பிஸிக்கலாக என்னென்ன உபயோகங்கள் இருக்கின்றன தெரியுமா..? சுமார் அறுநூறு பக்கங்கள் உள்ள ஒரு புத்தகத்தை அதன் மேலே துண்டை விரித்து என் நண்பர் ஒருவர் தலையணையாகப் பயன்படுத்தி அனந்த சயனத்திலிருக்கும் பெருமாள் போலப் பள்ளி கொண்டதை நான் கண்டதுன்டு. பிறிதொரு சமயம் அதேபோன்ற கனமானதொரு புத்தகத்தை ஏவுகணையாகப் பயன்படுத்தி சரிதா என்னைத் தாக்கியபோது அதிலிருந்து நான் தப்பியதுண்டு, ஒருசிலரோ... காகிதங்கள் பறக்காமலிருக்க புத்தகங்களை பேப்பர் வெயிட்டாகக் கருதி உபயோகப்படுத்தியதையும் கண்டதுண்டு. சமீபத்தில் என் நண்பரொருவர் வீட்டிற்குச் சென்றபோது புத்தகங்களின் மற்றொரு பயனையும் கண்ணாரக் கண்டு ஆனந்திக்க நேர்ந்தது ஐயா... அவர் அமர்ந்திருந்த சேருக்கு எதிரில் கம்ப்யூட்டர் இருந்த டேபிளின் நான்கு கால்களில் ஒன்றின் கீழ்ப்புறம் உடைந்து விட்டிருக்க... அதற்கு நான்கு புத்தகங்களை வைத்து அண்டைக்கொடுத்து நாற்காலியை நிமிர்த்தி வைத்திருந்தார் நண்பர்! அவ்வ்வ்வ்!

புததகங்கள் பற்றிப் பேச ஆரம்பித்தால் நாளெல்லாம் புலம்ப, ஸாரி, பேசக் கூடிய ஆசாமி நான்,. ஆனால் நீங்கள் பொறுமையிழந்து புத்தகத்தாலேயே அடிக்கக்கூடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

ஊசி (பின்) குறிப்பு : தற்சமயம் தேவன் அவர்கள் எழுதிய புத்தகம் ஒன்றைப் படித்து வருகிறேன். அதில் அவர் எழுதியிருப்பது போன்ற அக்கால நடையிலேயே ஒரு கட்டுரை எழுதிப் பார்த்தாலென்ன என்ற (விபரீத) ஆசையின் விளைவே மேலே நீங்கள் படித்தது. கான தேவனாடக் கண்ட வான்கணேஷ்! ஹி.... ஹி... ஹி...!

Wednesday, April 23, 2014

அமைதியின் பின்னே....

Posted by பால கணேஷ் Wednesday, April 23, 2014
“என்னங்க...” ஜன்னலோர சீட்டில் மெலிதாய் கண்ணயர்ந்திருந்த செல்வத்தின் தோளில் விரல்களால் கொத்தினாள் கவிதா. “பின்னாடி சீட்ல இருக்கற ஆளு தன் காலால என் காலல உரசுறான். என்னன்னு கேளுங்க...”

“விடு கவி... பஸ்ல இந்த மாதிரி மேல படறதுல்லாம் சகஜம்டா!. இதைல்லாம் கேட்டா. ‘நீ ஆட்டோ புடிச்சுப் போறதுதானே... எதுக்கு பஸ்ல வர்ற?’ன்னு எடக்காதான் பதில் வரும். விட்று...”

பின்னால் திரும்பி அவனை முறைத்தாள் கவிதா. பார்ப்பதற்கு கல்லூரி மாணவன் போல் தோற்றமளித்த அவன் ‘ஈ’யென்று வாயை அகலமாகத் திறந்து கோரமாக இளித்தான். பார்க்கச் சகிக்காமல் மீண்டும் முன்புறம் பார்வையைத் திருப்பினாள் கவிதா.

இரண்டு நிமிடக் கரைசலுக்குப் பின் மீண்டும் செல்வத்தின் தோளைக் கொத்தினாள். “தோ பாருங்க... அவன் கால் தெரியாமல்லாம படலை. இப்பவும் மறுபடி காலை நீட்டி உரசறான். ஆம்பளையா லட்சணமா அவனை மிரட்டிக் கேளுங்க...”

“கோபப்படறதால பிரச்னை நமக்குத்தான் வரும் கவி. காலை மேல தூக்கி வெச்சுக்கோ... இல்ல கால மடிச்சு உக்காந்துக்கோ... ப்ளீஸ்...”

‘ஹும்... முன்னல்லாம் என்னை இம்ப்ரஸ் பண்றதுக்காக என்னென்ன ஹீரோத்தனம்லாம் ட்ரை பண்ணினாரு இவரு. இபப என்னடான்னா பொறுமையா இருக்கச் சொல்லி அட்வைஸு... வீரம்லாம் பொண்ணுங்க கிடைக்கற வரைக்கும்தான் போலருக்கு...‘ என்று மனதுக்குள் புலம்பியபடி அவன் சொன்னதைச் செய்தாள் கவிதா.

பயனில்லாமல் போயிற்று. அடுத்த ஐந்தாவது நிமிடம், சட்டென இருக்கையை விட்டு எழுந்து பட்டெனத் திரும்பி, மின்னல் வெட்டென கரத்தைச் சுழற்றி பின்னிருக்கை ஆசாமியின் கன்னத்தில் ஓயவிட்டாள் கவிதா. “யூ ராஸ்கல்...! ஏதோ தெரியாம கால் பட்ருச்சாக்கும்னு பொறுமையா இருந்தா... என்ன கொழுப்பு இருந்தா இடுப்புல கிள்ளுவ...? உன்னை....”

அந்த இளைஞன் அதிர்ந்து போய் எழுந்தான். இதற்கு மேலும் செல்வம் சும்மா உட்கார்ந்து இருந்துவிட முடியுமா என்ன...? அவனும் கோபமாக எழுந்து இரண்டொரு ‘சென்னை ஸ்பெஷல்’ வசவுகளை உதிர்த்து அவன் முகத்தில குத்தினான். இதுமாதிரி சந்தர்ப்பங்களில்... கூட்டமாக இருக்கையில்... நமது பொது ஜனங்களுக்கு எழும் வீர(?) உணர்ச்சியால் உந்தப்பட்டு சுற்றியிருப்பவர்களும் அவனுக்குத் தர்ம அடியை வினியோகிக்க ஆரம்பித்தனர்,

ஒரு கட்டத்தில் “நிறுத்துங்கப்பா... ஓவரா அடிச்சு அவனுக்கு ஏதாச்சும் ஆயிரப் போவுது... டிரைவர்.. வண்டிய போலீஸ் ஸ்டேஷனுக்கு விடுங்க... இவனல்லாம் முட்டிக்கு முட்டி தட்டி உள்ள தள்ளினாதான் சரியா வரும்..” என்று கையில் சொம்பு தூக்காத நாட்டாமையாக மாறிக் குரல் கொடுத்தார் ஒரு பெரிசு.

“இல்ல... வேணாங்க... வயசுத் திமிர்ல பண்ணிட்டான். பாத்தா காலேஜ் ஸ்டூடண்ட் மாதிரி இருக்கான். போலீஸ்லாம் வேணாம்... இவன் லைஃபே ஸ்பாயிலாயிடும். இங்க வாங்குன அடிகளை அவனால மறக்கவே முடியாது. அதுவே பெரிய தண்டனைதான். போலீஸ் வரைக்கும் போக வேணாம்...” என்றான் செல்வம்.

“பார்ரா கய்தே... அவரு இன்னா  மாதிரி பெருந்தன்மையா உன் லைப் பாழாயிடக் கூடாதேன்னு கவலைப்படறாரு... இனிமயாச்சும் ஒயுங்கா நடந்துக்கோ....” என்றபடி அவனை பஸ்ஸிலிருந்து வெளியே உதிர்த்தார் நடத்துனர். சின்னச் சின்ன சலசலப்பு பேச்சொலிகளுடன் பஸ் நகர்ந்தது. இரண்டொருவர் கை குலுக்கி செல்வத்தின் பெருந்தன்மையைப் பாராட்டினார்கள்.

டுத்த இரண்டாவது நிறுத்தத்தில் செல்வமும். கவிதாவும் இறங்கினார்கள். “நீங்க இப்படி நடந்துக்குவீங்கன்னு நான் நினைச்சே பார்க்கலை செல்வம். என்மேல ஒருத்தன் கைய வெக்கிறான். அவனை உண்டு இல்லன்னு பண்ணுவீங்கன்னு பார்த்தா... புத்தாவதாரம் எடுத்து அட்வைஸ் பண்றீங்களே...” -வெடித்தாள் கவிதா.

கோபமாய் அவளை ஏறிட்ட செல்வம் அடிக்குரலில் சீறினான். “அறிவுகெட்டவளே...! அவனை அடிச்சதும் என்ன நடந்ததுன்னு கவனிச்சேதானே... தர்ம அடி கொடுக்கும் போதே ஒரு பெரிசு போலீஸ் ஸ்டேஷனுக்கு வண்டிய விடச் சொல்றாரு... அதை எதிர்பார்த்துதான் உன்னை அடங்கிப் போகச் சொன்னேன். போலீஸ் ஸ்டேஷன் போனா அனாவசியமா விசாரனை அதுஇதுன்னு போயி... விஷயம் உன் புருஷனுக்கோ..... இல்ல, என் பொண்டாட்டிக்கோ தெரிஞ்சி போச்சுன்னா.... விளைவுகளை யோசிச்சுப் பாருடி,,,-” 

==========================================================
டி.,என்.முரளிதரன் -  மூங்கில் காற்று என்கிற தளத்தில் எழுதிவரும் இவரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. கதை, கவிதை, கட்டுரை என்று எல்லா ஏரியாவிலும் ஒரு கை பார்க்கும் இவர் நகைச்சுவைப் பேட்டையில் மட்டும் ஒதுங்கவில்லையே என்ற சிறு மனக்குறை எனக்கிருந்தது.. இப்போ என் பேட்டையிலயே பூந்து ‘எம்.பி.ஆகிறாள் சரிதா’ என்கிற கதையின் மூலம் வூடு கட்டி அடித்து அந்தக் குறையைப் போக்கி விட்டார். முரளியிடமிருந்து நகைச்சுவையை எதிர்பார்க்காததாலோ என்னவோ... சரியான விடையை எவரும் தரவில்லை. எனவே நான் அறிவித்த புத்தகப் பரிசு முரளிதரனுக்கே உரித்தாகிறது. உஙகளின் படைப்பை என் மேடையில் அரங்கேற்றி மகிழ வாய்ப்புத் தந்தமைக்கு என் நெகிழ்வான நன்றிகள் முரளி! உங்கள் அனைவரின் பாராட்டையும் பெற்ற அந்தக் கதைக்காக மீண்டும் ஒருமுறை கை தட்டி முரளியைப் பாராட்டுங்கள்...!
==========================================================
போனஸ் நியூஸ் : இப்போது கடைகளில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் ‘குமுதம்’ இதழில் நம் முரளிதரன் எழுதிய சிறுகதை இடம் பெற்றுள்ளது. வாங்கி வாசித்துக் கருத்திட்டு அவரை உற்சாகப்படுத்துங்கள். இன்னும் இன்னும் நிறைய வெற்றிகளைக் குவிக்க என் நல்வாழ்த்துகள் முரளி!
==========================================================
ஒரு (அவசியமான) பின்குறிப்பு : முரளிதரனைப் பாராட்டுகிற சுவாரஸ்யத்தில் நீங்கள் படித்த இந்தக் கதையை ரசித்தீர்களா இல்லையா என்பதைக் குறிப்பிட மறந்துடாதீஙக மக்களே... ஹி... ஹி... ஹி...!
==========================================================

Monday, April 21, 2014

எம்.பி.ஆகிறாள் சரிதா!

Posted by பால கணேஷ் Monday, April 21, 2014
லைப்பைப் படித்ததும் ஒருகணம் புருவத்தை உயர்த்தி ஆச்சர்யித்தீர்கள்தானே...? உங்களுக்கென்னங்க... தூரத்திலிருந்து கொண்டு ஆச்சர்யப்படலாம். நான் அடுக்கடுக்காய் அனுபவித்த அவஸ்தைகள் எனக்குத்தானே தெரியும்...? வழக்கம்போல் என் கம்ப்யூட்டரில் ஒரு புத்தக அட்டைப்படம் வடிவமைத்துக் கொண்டிருந்த நேரம்... புயலென அருகில் வந்தாள் சரிதா. “என்னங்க... நீங்க இப்ப நடக்கப்போற எலக்ஷன்ல நின்னு ஜெயிச்சு எம்.எல்.ஏ. ஆகணும்...

திகைத்தேன். ‘ழே என்று விழித்தேன். “அதுநடக்கற காரியமில்ல சரி! திடீர்னு ஏனிந்த ஆசை?"

“அது நடக்கற காரியமில்ல... நிக்கிற காரியம்னு எனக்கும் தெரியும். என் பிரண்டு ஜெயந்தியோட ஹஸ்பென்ட் எலக்ஷன்ல நிக்ககறாராம். அவ பெருசா பீத்திக்கறா. என் ஹஸ்பெண்டை எலக்ஷன்ல நிக்கவச்சு அவளோட ஹஸ்பெண்டை  விட ஒரு ஒட்டாவது அதிகம் வாங்கிக் காமிப்பேன்னு சபதம் போட்டுட்டு வந்திருக்கேன்  ஏன்   நீங்க நிக்கக் கூடாதா? ஜெயிச்சு எம். எல்.ஏ ஆக முடியாதா?

சரிதாக் கண்ணு! கோபப்படாதே... நீ ஒக்காந்திருக்கும்போது கூட நான் எப்பவுமே நின்னுக்கிட்டுதானே இருக்கேன். இப்ப நடக்கறது எம்.பி எலெக்ஷன்மா..! இதுல ஜெயிச்சு எம்.எல்.ஏ.வா ஆகமுடியாதும்மா. அதைத்தான் சொன்னேன்.

 சரிதா முறைத்தாள்... “இந்த கேலிக்கு ஒண்ணும் குறைச்சலில்ல. ஓட்டுப் போடற வயசுகூட வராத ஸ்கூல் பையன்ங்க கூடல்லாம் சகவாசம் வச்சுக்கிட்டா இப்படிதான் இருக்கும்... என்க, ‘நல்ல வேளைடா... இவ ஆவிய, சீனுவ மறந்துட்டா போல இருக்கு””குஷியானது மனஸ்.

அதில்ல சரி... நான் எந்த கட்சியில நிக்க முடியும்? எனக்கு யாரும் சீட்டு தர மாட்டாங்களே..?

“நீங்க அம்மாவுக்கு போன் போடுங்க. நான் கேக்கறேன்...

“ஒரு மாசம் இங்க தங்கிட்டு நேத்துதானே  உங்க அம்மா  ஊருக்கு போனாங்க. இன்னும் ஊருக்குக்கூட போய்ச் சேர்ந்திருக்க மாட்டாங்களே! அதுக்குள்ள எதுக்கு போன்?"

 ஐயோ... ஐயோ... உங்களை மாதிரி தத்தியை வச்சுகிட்டு என்ன பண்றது? நான் புரட்சித்தலைவி அம்மாவுக்கு டயல் பண்ண சொன்னேன்...

நான் (வழக்கம்போல) ‘ழேஎன்று விழிக்க... சரிதாவே, அம்மாவுக்கு போன் செய்தாள். “வணக்கம்மா..!  போனில் பேசும்போதே முதுகை வளைத்து அவள் வணக்கம் சொன்னது வேடிக்கையாக இருந்தது.... ஆச்சர்யமாகவும் கூட! சரிதாவால் இவ்வளவு வளைய முடியுமா..?. ஆஹா... அம்மா கிட்டபோன்லே பேசும்போதே  என்னா பவ்யம்!சபாஷ் சரிதா... நீ அரசியல்ல தேறிருவஎன்றது மனஸ்.

“அப்படியா... அப்படியா... அப்படியா... போன் எதிர்முனையில் வைக்கப்பட்டாலும்கூட சூரியன் பட கவுண்டமணி போல பில்டப் தந்து நிறையப் பேசிவிட்டு... “அம்மா அடுத்தமுறை அவசியம் சீட் தர்றதா சொல்லிட்டாங்க. இப்ப நீங்க கலைஞர் நம்பரை தேடிக் கொடுங்க என்றாள்.

நிறைய மெனக்கெட்டு நம்பரைத் தேடித்தர, கலைஞருக்கு கால் போனபோது அவள் தெரியாமல் ஸ்பீக்கரை ஆன் செய்ய... “ஹலோ, கலைஞர்  தாத்தாவா? நான் சரிதா பேசறேன். எனக்கு ஒரு எம்.பி சீட் வேணும்... என்று ஏதோ குடும்ப உறுப்பினர் போல் அவள் உரிமையாக கேட்க... “எந்த சரிதா? நம்ம குடும்பத்துல எல்லாருக்கும் சீட்டு குடுத்திட்டேனே. உன்னை மறந்திட்டன் போல இருக்கு  வயசாகிடிச்சா! அத்தனை பேரையும் ஞபகம் வச்சுக்க முடியலம்மா. முன்னாடியே வந்து கேக்கக் கூடாதா. இப்போதைக்கு என் மனசுலதாம்மா  இடம் கொடுக்க முடியும்" என்று கலைஞர் சொல்வது தெளிவாக கேட்டது.

 சே! என்று சலிப்பாக முனகியபடி இப்படியும் அப்படியுமாக நடந்து கொண்டிருந்தாள். “சரி, நான் வேணும்னா காங்கிரஸ்ல கேட்டுப் பாக்கட்டுமா?என்றேன். “சே! காங்கிரஸ்லாம் வேணவே வேணாம். நான் வீசற பூரிக்கட்டையைவே சமாளிக்கத் தெரியாது உங்களுக்கு. அங்க போனீங்கன்னா... சண்டைல வேட்டியென்ன டவுசரே கிழிஞ்சிடும் உங்களுக்கு... என சரிதா சொல்ல... ‘சரிதாவே காங்கிரசை வேணாம்னு சொல்லற அளவுக்கு மோசமாயிடுச்சே காங்கிரஸ் மீது பரிதாபமே வந்துவிட்டது எனக்கு.

“சரி... அப்ப மோடியை காண்டாக்ட் பண்ணி சீட் கேப்பமா..?

“அது சரிப்படாதுங்க. அப்புறம் என்னோட பாய் பிரெண்ட்ஸ் எல்லாம் ஓட்டு போட மாட்டாங்க

“என்னது..? உனக்கு பாய் பிரெண்ட்ஸா..? அதிர்ந்தேன் நான். “அடச்சே! நீங்க நினைக்கறதில்ல... எனக்கு முஸ்லீம் பெண்கள் நிறையப் பேர் பிரெண்டுங்க இல்லயா..? அதைத்தான் சொன்னேன்.  அவங்க ஓட்டு  BJP க்கு  கிடைக்காது.

நான் நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். அதற்கு ஆயுள் கம்மி. “சரிங்க... அர்விந்த் அகர்வாலுக்கு போன் பண்ணுங்க...

“எனக்கு முன்ன சோனியா அகர்வால்... இப்ப காஜல் அகர்வால் தெரியும். ஹி... ஹி... அரவிந்த் அகர்வால் யாரு?

“கடவுளே... இப்படி பாலிடிக்ஸ்ல பூஜ்யமா இருக்கற உங்களப்போய் நம்பி சவால் விட்டுட்டு வந்தேனே... என்னைச் சொல்லணும்! அதாங்க... டெல்லியில உண்ணாவிரதம் இருந்தாரே... இப்பகூட ஆட்டோ டிரைவர்ட்ட அறை வாங்கினாரே... அவர்தாங்க...

“நாசமாப் போச்சு! அவர் அகர்வால்  இல்லம்மா... அர்விந்த் கெஜ்ரிவால்! ஆம் ஆத்மிங்கற கட்சியோட தலைவர்

ஏதோ ஒரு வால்! சீக்கிரம் டயல் பண்ணிக் குடுங்க நான் ஹிந்தியில பேசி உங்களுக்காக சீட் கேக்கறேன்...என்க., டயல் செய்து தந்தபின் அவள் பேசிய ஹிந்தியாவது :

“ஹலோ ஜி! நான் சென்னை மாம்பலம் சுயஉதவிக் குழு தலைவி சரிதா பேசறேன்ஹை! மை ஹஸ்பன்ட்ஜிக்கு எம்.பி சீட் வேணும் ஹை

‘என்னது...? சுய உதவியா? பல் தேய்க்கற பிரஷ்ல இருந்து குளிக்கறதுக்கு சோப்பு டவல் வரை நான்ல்ல எடுத்து வைக்கணும் இவளுக்கு. அவ்வ்வ்வ்!என அலறியது மனஸ்.

.......................

“அவர் பக்கா ஆம்ஆத்மிஹை! நான் என்னா சொன்னாலும் ஆம் ஆம் சொல்லற  ஆத்மி ஹை! அவர். உங்க கட்சிக்கு பொருத்தமா இருப்பாரு ஜி

.......................””

க்யா? அடிக்கடி உண்ணாவிரதம் இருக்கணுமாஜி?  அதெல்லாம் இருப்பார்... நான் பாதிநாள் சமூக சேவை செய்யறதுக்கு வெளிய போய்டுவேன்ஜி.  அப்ப அவரு உண்ணாவிரதம்தான் ஹை”

எப்பூடி...? ‘‘ஜி’’யும் “ஹையும் சேர்த்துக்கிட்டா அதுதான்   ஹிந்தின்னு அவ புரிஞ்சுக்கிட்டது சக‘வாச‘ தோஷத்தாலதான்! ஒருமுறை டெல்லி போனபோது சரிதாவுக்கு வாசன் ஹிந்தி கற்றுக் கொடுத்த லட்சணம் அப்படி!. ரெண்டு பேர் வாயிலும் சிக்கி ஹிந்தி படாத பாடு பட்டது  நினைவுக்கு  வந்தது. கெஜ்ரிவாலுடன் பேச்சு வார்த்தை அனுமார் வால் மாதிரி நீளமாக போய்... கடைசியில் கோபத்துடன் போனைத் தூக்கி எறிந்தாள். (பணம் கொடுத்து வாங்கியது நானல்லவா? அவ்வ்வ்!)

‘ஒருவழியா தப்பிச்சிட்டோம்டா... சிஷ்யப் பிள்ளை சீனுப்பய வேற தெனாலிராமன் படத்துக்கு டிக்கெட் வாங்கிட்டு காத்துக்கிட்டு இருப்பானே... சரிதாவை சமாளிச்சு எப்படிக் கிளம்பறதுன்னு  தெரியலையே...என்று மனஸ் புலம்ப... தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத சரிதா, “ஏங்க... நான் இங்க நாயா பேயா உங்களுக்காக கத்திக்கிட்டிருக்கேன். நீங்க என்னடான்னா இஞ்சி தின்ன எதுவோ மாதிரி முழிச்சிக்ட்டிருக்கீங்க!

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் நான் வாசல் பக்கம் பார்க்க அங்கே சீனுவின் தலை தெரிந்தது. அடப்பாவி! நான் வர்றதுக்கு லேட்டானதால் வீட்டுக்கே வந்துட்டான் போல இருக்கே.... அதிர்ந்த நான். ‘சீனு! அப்படியே போயிடு...என்று ஜாடை காட்ட... அதை உள்ளே வா என்பதாகப் புரிந்து கொண்டு உள்ளேயே வந்துவிட்டான்.

“அடடே... சீனுவா? வாப்பா... என சரிதா வரவேற்றது ஆச்சர்யமாக இருந்தது . அவங்க வீட்டு ஆட்களை தவிர வேறு யார் வந்தாலும் பத்ரகாளியாக மாறி விடும் சரிதாவா இது? நம்ப முடியவில்லை. ஒருவேளை இது சரிதாவின் அரசியல் பாடமோ..?

“டேய் சீனு! சரிதா கோவத்துல இருக்கா... உடனே ஓடிரு...”என்று நான் அடிக்குரலில் சொல்ல... சீனு தன் டிரேட் மார்க் புன்னகையை உதிர்த்து ரகசியத்தை ரகசியமாய் சொன்னான் : “ஸார்! நான் போன தடவை வந்தபோது உங்க வீட்டில சாப்பிட்டனே ஞாபகம் இருக்கா? அப்பவும் அண்ணி கோபமா இருந்தாங்கள்ல... அவங்க வச்ச சுண்டக்கா சொத்தக் குழம்பை - சாரி வத்தக் குழம்பை ரொம்ப ரொம்ப சூப்பர்னு சொன்னேனே! அப்ப எனக்கு பாராட்டும் உங்களுக்கு அடியும் கிடைச்சதே மறந்து போச்சா? இப்பவும் அப்டி சமாளிச்சுருவேன் என்றான் .

சரிதா,“சீனு! உன் வாத்தியாரை எலக்ஷன்ல சுயேச்சையா நிக்க வெக்கலாம்னு இருக்கேன். எவ்வளவு நாள்தான் வெட்டியா மின்னல் வரிகள், ஜன்னல் கரிகள்னு பத்து பைசாவுக்கு  பிரயோசனம் இல்லாம எழுதிக்கிட்டிருக்கிறது? நீதான் இவருக்காக பேஸ்புக்கு,  பேஸ் நோட்டுன்னு எல்லாத்துலயும் பிரச்சாரம் பண்ணனும். இப்ப அதுதானே ட்ரென்ட்?”

 "அண்ணி! சூப்பர் ஐடியா! ஆனா ஒரு சின்னத் திருத்தம்...! சாருக்கு பதிலா நீங்களே நிக்கணும். அவரைவிட நீங்கதான் பேமஸ். உங்களை வச்சுதான் அவரே பேரு வாங்கி இருக்கார்...?

தெனாலிராமன் படத்தைவிட இங்கு நடப்பது சுவாரசியமாக இருந்ததால் சினிமாவுக்கு கூப்பிட வந்ததையே மறந்தவனாக சீனு என்னை வைத்து காமெடி பண்ணிக் கொண்டிருக்க, நான் கோபமாய் முறைக்க... சீனுப்பயல் அதைக் கண்டுகொள்ளாமல் சீரியசாக கலாய்த்துக் கொண்டிருந்தான்.  “கணேஷ் சார்  எழுதின ‘‘சரிதாயணம்’ கதைகள்ல நீங்கதான் ஹீரோயின்! நான், என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் உங்களோட ரசிகர்கள்தான். உங்களுக்குத்தான் அவரைவிட அதிக ஓட்டு கிடைக்கும், தையும் தவிர. அவருக்கு எழுத தெரியுமே தவிர அதிரடியா பேசல்லாம் தெரியாது. அதுக்கு நீங்கதாங்க சரி” என்று உசுப்பேற்றிக் கொண்டிருந்தான்.

“அடப்பாவி! உன்னைப் பத்தின கதைகள்னு மட்டும்தானே சரிதாட்ட சொல்லி வச்சிருக்கேன். இவனால சரிதாயணத்தை முழுசா அவ படிச்சா என் கதி என்னவாகு? பயபுள்ள தெரிஞ்சே பத்த வைக்கிறானே என்று ப(க)தறியது மனஸ். சீனு அசால்ட்டாய் தொடர்ந்தான். “அண்ணி! அற்புதமா தேர்தல் அறிக்கை ஒண்ணு தயார் பண்ணனும்! நீங்க இணையத்துல பேமஸா இருகறதால நெட்டை யூஸ் பண்ற அத்தனை பேரோட வோட்டும் கிடைக்கற மாதிரி இலவசங்களை அறிவிக்கலாம்

சரிதா உற்சாகமானாள். “அட. நல்லா இருக்கே ஐடியா... சாம்பிளுக்கு ஒண்ணு சொல்லு பாக்கலாம்

“பேஸ் புக்கில போடற ஸ்டேடஸ்க்கு 1000 லைக் இலவசமா போடப்படும், ப்ளாக்ல எழுதற ஒவ்வொருவருக்கும் 100  விலையில்லா பாராட்டு  பின்னூட்டம் போடப்படும். இலவச இன்டர்நெட் வசதி செய்து தரப்படும்... என்று தொடர்ந்து சீனு அள்ளி விட... “எக்சலன்ட் சீனு! இதெல்லாம் ஏன் இவருக்கு தோணவே மாட்டேங்குது? ரைட்டு... எப்ப வேட்பு மனு தாக்கல் பண்ணலாம்?”

இப்பவே பண்ணலாம். ஆனா வேட்பு மனு தாக்கல் பண்ண ரெண்டு பேர் போகக்கூடாது கூட்டமா போகணும்

கூட்டத்துக்கு எங்க போறது?”

“கவலைப்படாதீங்க... இப்ப வரவழைச்சிட்றேன்.

பயபுள்ள மொபைலில் அடுத்த விநாடியே மெசேஜ் அனுப்ப... ஸ்கூல் பையன், கோவை ஆவி, மெ.ப.சிவா, ரூபக்ராம், டி.என்.முரளிதரன், குடந்தையூர் சரவணன், அரசன், மதுமதி, பிரபாகரன், செல்வின், ஆரூர்மூனா, சேட்டைக்காரன், கே,ஆர்,பி,செந்தில், மதுரைத்தமிழன், தமிழ்வாசி பிரகாஷ் என ஒரு பெரும் படையே சில நிமிடங்களில் கூடிவிட்டது. ஒருசில நிமிடங்களில் பெருங்கூட்டத்தை கூட்டிய சீனுவின் திறமையைக் கண்டு, தன் சபதம் நிறைவேறிவிடும் என்று சரிதா சந்தோஷமானாள். “சீனு... இவரோட தங்கைகள் ராஜி. சசிகலா. பிரியா இவங்களுக்கெல்லாம் போன் போடு. அவங்க மத்தவங்களக் கூப்ட்டு ஒரு மகளிர் அணிக் கூட்டத்தையே சேர்த்துடுவாங்க. நாம உடனே கிளம்பலாம்...’என்றாள் குஷியாக.

அதற்குள் நான்கைந்து கார்கள் வாசலில் வந்து நின்றன. எல்லாம் இந்த உத்தமவில்லன் சீனுவின் ஏற்பாடாகத்தான் இருக்க வேண்டும். பயபுள்ளக்கி என்னைய மாட்டிவிடுறதுன்னா எப்பவும் ஸ்பீடுதான்! “அண்ணி கார்லாம் வந்துடுச்சி... வாங்க போகலாம்... போற வழில மகளிரணிய பிக்கப் பண்ணிக்கலாம்.என்க, சரிதா என்னைப் பார்த்து, “வீட்டை பாத்துக்கோங்க. நான் தம்பிங்ககூட போய் வேட்பு மனு தாக்கல் பண்ணிட்டுவரேன். அதுக்குள்ள எனக்காக உருப்படியா பேனர் கட் அவுட்டையாவது  டிஸைன் பண்ணி வைங்க

நான் அந்தக் கும்பலை முறைக்க கண்டு கொள்ளாமல் அனைவரும் புறப்பட்டனர். எலே சீனு! குருவையே காமெடி  பீசாக்கிட்டியே... நீல்லாம் நல்லா வருவ லேய்... என்று நொந்து கொண்டே, காலையில் இருந்து பிரிக்கப் படாமல் இருந்த அன்றைய பேப்பரை எடுத்துப் பிரித்தேன்.  அதில் தலைப்பு செய்தியாக நேற்றோடு வேட்பு மனு தாக்கல் முடிந்ததுஎன்றிருந்தது. அதைப் படித்ததும் சந்தோஷமாக இருந்தாலும் சரிதா கோபமாகித் திரும்பி வருவதால் விளையும் பின்விளைவுகளை எண்ணியதும் சற்று கலக்கமாக  இருப்பதால் ‘ழே என்று விழித்தபடி அமர்ந்திருக்கிறேன் நான்.
=========================================================
,இந்தச் சிறுகதையை எழுதியது நானல்ல... சரிதாயணத்தின் ரசிகரான நம் வலையுலக நண்பர் ஒருவரின் கைவண்ணம் இது. சற்றே என் பாணிக்கு மாற்றி வெளியிட்டிருக்கிறேன். எழுதியவரின் பெயர் பதிவிலேயே இருக்கிறது. அவர் யார் என்பதைச் சரியாகச் சொல்லும் முதல் மூன்று பேருக்கு என்னிடமிருந்து புத்தகப் பரிசு நிச்சயம்.
=========================================================

Monday, April 7, 2014

சரிதாவும் செல்போனும்..!

Posted by பால கணேஷ் Monday, April 07, 2014
‘லை டிடெக்டர்’ என்று ஒரு கருவி இருக்கிறதாம். அது பொய் பேசுகிறவர்களைக் கண்டுபிடித்து விடுமாம். அதென்ன பெரிய விஷயம் ஐயா....?. மனிதர்களைப் பொய் பேச வைக்கும் கருவி ஒன்றிருக்கிறது... தெரியுமா உங்களுக்கு...? அசோக் பில்லரில் இருக்கும்போதே,  ”சைதாப்பேட்டை வந்துட்டேன். இன்னும் அஞ்சே(?) நிமிஷத்துல வந்துருவேன்” என்று பல்லாவரத்தில் நின்றிருப்பவரிடம் புளுகுவதில் தொடங்கி இந்தக் கருவி வயது பாகுபாடில்லாமல் அனைவரையும் பொய் பேசவைக்கிறது. ‘செல்போன்’ என்பது அதன் பெயர். சரி, இந்தக் கருமத்தை விட்டொழிச்சுட்டு இருந்துடலாம்னாலும் முடியல... எத்தனை தொல்லை தந்தாலும் மனைவிகளைச் சகிச்சுக்கிட்டு வாழற மாதிரி இதோடயும் வாழறது பழகிப் போய்டுச்சு. ஸாரி... சென்ற வாக்கியத்தில் ‘மனைவிகள்’ என்றிருப்பதை ‘மனைவி’ என்று திருத்தி வாசிக்கவும். ஹி... ஹி... ஹி...!

மேற்கண்ட பாராவில் இருப்பது நான் சொல்கிற பொன்மொழிகள் அல்ல... சரிதாவின் ‘பெண்மொழி’கள்தான் அவை - கடைசி இரண்டு வரிகளைத் தவிர... ஹி... ஹி... ஹி...!. செல்போன்கள் அறிமுகமாகி பேஸிக் மாடல் வகையைப் பயன்படுத்த நான் பழகிய நாளிலிருந்து ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் இன்றைய தினம் வரை “உனக்கும் ஒரு செல்போன் இருந்தா நல்லது. வாங்கிக்கம்மா...” என்று நான் பலமுறை வற்புறுத்தியபோதும் மறுத்து வந்தவள் சரிதா. “அதெதுக்கு வீணா தொல்லை...? உங்களுக்கு போன் பண்வறன்லாம் ஒண்ணு குளிக்கும் போது பண்றாங்க... இல்ல, சாப்பிடும் போது பண்றாங்க... நானாவது நிம்மதியா இருக்கேனே...” என்பாள். சரி... அதுவும் சரிதான் என்று நாளது வரை நான் நிம்மதியாகவே இருந்து வந்தேன். 

பெரிய பவுன்ஸரை வீசப் போகிறாள் என்று நாம் எதிர்பார்க்கும் சமயம் நோபால் வீசுவதும், நோபாலை எதிர்பார்க்கும் சமயம் பவுன்ஸரை நம்மிடம் பிரயோகிப்பதுமான மனைவி இனத்தின் வாடிக்கைப்படி ஒரு (அ)சுப தினத்தின் காலையில் என்னிடம் நெருங்கி வந்தாள் சரிதா.
“என்னங்க... நேத்து என் ஃப்ரண்ட் தமிழ் பேசினா...”

“ஓ... முந்தாநாள் வரைக்கும் உன் ஃப்ரண்ட் தெலுங்குல பேசிட்டிருந்தாளா...?”

“ஐயோ... கடவுளே... நான் சொன்னது என் ஃப்ரண்ட் தமிழரசி பேசினாங்கறதை...”

“அப்புடித் தெளிவாச் சொல்லு... புடவை கட்டின நவீன நாரதராச்சே உன் தமிழரசி!” இப்போ என்ன கிளப்பி விட்டிருப்பாளோ என்று சந்தேகாபஸ்தமாக சரிதாவைப் பார்த்தேன்.

“என்னங்க... எனக்கு உடனே ஒரு செல் வாங்கித் தரணும் நீங்க...”

“வாங்கிட்டாப் போச்சு... டார்ச் லைட்டுக்கா இல்ல வால் கிளாக்குக்கா?”

“ஈஸ்வரா... நான் சொன்னது பேட்டரி செல் இல்லீங்க... செல்போன்...”

“என்னது? நீயா செல்போன் கேக்கறே? ஆச்சரியமாயிருக்கே...?”

“அது ஒண்ணுமில்லீங்க... தமிழ் புதுசா ஒரு செல் வாங்கியிருக்காளாம். சும்மா சும்மா போன் பண்ணி ரொம்பத்தான் பீத்திக்கறா. எனக்கு ஒரு மொபைல் உடனே வாங்கியாகணும்...”

“சரி, வர்ற ஸண்டே உனக்கு ஒரு ஸ்மார்ட் போனாவே வாங்கிரலாம்...”

“வேணாம்... போனாவது ஸ்மார்ட்டா இருக்கட்டுமேன்னுதான் நீங்க ஸ்மார்ட் போன் வாங்கிக்கறதை நான் கண்டுக்கலை. எனக்கு சிம்பிளான போன் போதும்” என்ற சரிதாவை நான் முறைக்க... (வழக்கம் போல) கண்டுகொள்ளாமல் சமையலைறை நோக்கிச் சென்றாள் அவள்.

செல்போன் வாங்கி வந்த கையோடு அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை என்னை விவரிக்கச் சொல்லி பொறுமையாக கேட்டுக் கொண்டாள். நான் லைன் போட்டுக் கொடுக்க, அவள் தோழிகளிடமெல்லாம் புது போன் வந்த சரித்திரத்தை(!) சொல்லி, தன் நம்பரையும் பரப்பி... ஞாயிற்றுக்கிழமை நன்றாகவே போனது. முக்கியமான நம்பர்களை ‘ஸ்பீட் டயல்’லில் போட்டு எப்படி அழைப்பது என்பதையும் விரிவாக விளக்கியிருந்தேன்.

டுத்த தினம் நான் அலுவலகத்தில் முக்கியமான ஆணி ஒன்றை பிடுங்கிக் கொண்டிருந்த சமயம் ‘சம்சாரம் என்பது வீணே... ஸாரி... வீணை’ என்று பாடி அழைத்தது என் மொபைல். சரிதா அழைக்கிறாள் முதல்முறையாக1

“சொல்லும்மா...”

“ஒண்ணுமில்லீங்க... புதுபோன்ல உங்ககிட்ட பேசணும்னு தோணிச்சு. அதான் கூப்ட்டேன்...”

 “நல்லாக் கூப்ட்டே...! மத்தியானம் லன்ச் டயம்ல கூப்டிருக்கலாம்ல? இப்படியா பிஸியான வொர்க்கிங் ஹவர்ல் சும்மா கூப்பிடுவ..? வைடி போனை..” என்று (ஆங்)காரமாகச் சொல்லிவிட்டு போனை கட் பண்ணினேன். ஆனாலும் பாருங்கள்... முக்கியமான ஆணிகளைப் பிடுங்கி, சற்றே ஃப்ரீயானதுமே, ‘ஆசையா மொததடவையாக் கூப்பிடறவ கிட்ட இப்படியா எரிஞ்சு விழுவ?’ என்று படுத்த ஆரம்பித்தது மனஸ். அவளுக்கு டயல் செய்தால்... ‘இந்த எண் அழைப்பு எல்லைக்கு அப்பாலுள்ளது அல்லது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது’ என்கிற மறுமொழி கிடைத்தது. அந்த தினத்தின் லன்ச் அவரிலும் மாலையிலும் தன் முயற்சியில் மனந்தளராத விக்ரமாதித்தன் போல நான் மீண்டும் மீண்டும் முயற்சிக்க, கிடைத்ததென்னவோ அதே பதில்தான். என்னவாயிற்று இவளுக்கு ஏன்ற குழப்பத்துடனேயே வீடு திரும்பியவனை கோபமாக வரவேற்றாள் சரிதா.

“ஏங்க... நான் ஸ்மார்ட் போன் வேணாம்னு சொன்னது வாஸ்தவம்தான். அதுக்காக இப்படியா மட்டமான போனா வாங்கித் தர்றது. உங்ககிட்ட போன் பண்ணிட்டு கட் பண்ணதுமே ஆஃப் ஆயிடுச்சு. திரும்ப ஆன் பண்ணி, தமிழ்கிட்ட பேசிட்டு வெச்சா மறுபடி ஆஃப் ஆயிடுது. வந்த எரிச்சல்ல அப்படியே போட்டுட்டேன். ஒரொருத்தர் பொண்டாட்டிக்குன்னு உருகி உருகி(?) செய்யறாங்க. நீங்களும் இருக்கீங்களே...” என்று அவள் பேச்சை (வழக்கம்போல்) நான் ஸ்டாப்பாகத் தொடர்ந்து கொண்டிருக்க, நான் அவள் போனை எடுத்து ஒரு கால் செய்து முடித்தேன். சரியாகத்தானே இருக்கிறது?

“சரி, சரியாத்தானே இருக்கு உன் போன்?”

“என்னத்த சரியா இருக்குது? இப்படிக் குடுங்க...” என்று வாங்கி தன் தோழிக்கு கால் செய்து பேசினாள். அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த நான் ஒரு குட்டித் தூக்கமே போடும்ளவுக்கு ‘கொஞ்ச நேரம்’ பேசிவிட்டு காலை கட் செய்தாள். இருங்கள்.... நியாயமாக அதை கட்ட்ட்ட்ட் செய்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். காலை கட் பண்ணுவதற்கு ரெட் பட்டன் மேல் வைத்த விரலை எடுக்காமலேயே வைத்திருந்தால் ஸ்விட்ச் ஆஃப் ஆகாமல் என்னவாகும் ஸ்வாமீ? அய்யோ... அய்யோ... என்று வடிவேலு மாடுலேஷனில் சொல்லிக் கொண்டு அவளுக்கு பொறுமையாக எடுத்துச் சொன்னேன்.

“இப்படித் தெளிவா முதல்லயே சொல்லிக் கொடுத்திருக்கலாம்ல? நான்னா எதுலயும் உங்களுக்கு அலட்சியம்தான்” என்று சரிதா சரியாக அதற்கும் பழியை என்மீது போட்டாள். அவ்வ்வ்வ்வ்!

ப்படியாகத்தானே செல்போனுடன் பழகி அதன் மூலம் ரேடியோ கேட்கவும், பாடல்கள் கேட்க/பார்க்கவும் இதன் முக்கிய பயன்பாடான பேசுதலை அவ்வப்போதும் செய்து வந்து கொண்டிருந்தாள். நானும் நிம்மதியாக அலுவலகம் சென்று வந்து கொண்டிருந்தேன். அதற்கும் ஆப்ப்டிக்க வந்து சேர்ந்தான் என் ஆஸ்தான வில்லன. அன்று மாலை நான் வீடு திரும்புகையில் பல்லெல்லாம் வாயாக வரவேற்றாள் சரிதா. “என்னங்க.. உங்க போனைக் குடுங்க...” என்று வாங்கி, சரியாக ஸ்வைப் செய்து ஒரு கால் பேசிவிட்டு வைத்தாள். நெட் கனெக்ஷனை ஆன் செய்து ‘மின்னல் வரிகள்’ தளத்தை ஓபன் செய்து காண்பித்தாள். ‘ழே’ என்று விழிக்க ஆரம்பித்தேன் நான்.

“எப்படி சரி.. எப்படி இதெல்லாம்...?” என்று வியந்த அதேநேரம். “நான்தான் அக்காவுக்குக் கத்துக் கொடுத்தேன் அத்திம்பேர். ஆனாலும் நீங்க ரொம்ப மோசம்... இதெல்லாம் நின்னு சொல்லித்ர நேரமில்லாம ஓடிட்டிருக்கீங்க” என்று உள்ளறையிலிருந்து வந்தபடி சிரித்தான் வாசன் என்கிற அந்த உத்தம வில்லன்.

சரிதா என்னை ஏறிட்டாள். “என்னங்க... நெட்ல ப்ரவுஸ் பண்ண... போட்டோ எடுக்க... எத்தனை வசதி இருக்குது? உடனடியா எனக்கு இந்த ஸண்டே ஒரு ஐ போன் வாங்கிக் குடுத்துடுங்க...” என்றாள். இரட்டை டவரை மோதிய விமானம் நேரே என்னை வந்து தாக்கிய மாதிரி இருந்தது எனக்கு.

 ஐபோனுக்கு ஆகக்கூடிய செலவை நினைத்ததுமே லேசாக தலை சுற்றத் தொடங்கியது. சரி, அதையாவது சமாளித்து விடலாம். அதன் மூலம் சரிதா நெட்டில் உலவினால்...? ஐயையோ... அந்த விபரீதத்தை நினைத்ததுமே அட் எ டைம் நான்கைந்து ரோலர் கோஸ்டரில் பயணித்துவிட்டு வந்த மாதிரி தலை மேலும் சுழலவாரம்பித்தது துதைப் படிக்கிற நீங்க எல்லாரும் நல்லவங்க, வல்லவங்க (ஐஸ்!. அதனால உங்க அனுபவத்துலருந்து இதைத் தடுகக ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்க ஐயாமார்களே... அம்மாமார்களே..!

Tuesday, April 1, 2014

ஏன் இந்த வேகம்...?

Posted by பால கணேஷ் Tuesday, April 01, 2014
சில விஷயங்களை திரும்பத் திரும்பச் சொல்ல நேர்கையில் சற்றே அயற்சியாகத்தான் இருக்கிறது. ஆனாலும் சொல்லியாக வேண்டிய கட்டாயத்தைத் தவிர்க்க முடிவதில்லை. நேற்று காலை ஆ.வி.அலுவலகம் சென்றுவிட்டு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தேன். ஜெமினி ப்ரிட்ஜின் மத்தியப் பகுதியை பஸ் நெருங்குகையில் எதிர் சாரியில் வாகனங்கள் தேங்கி நிற்பதைக் காண முடிந்தது. என்னவெள்று பார்த்தால்... விபத்து! மோட்டார் பைக்கில் அதிவேஏஏஏகமாக வந்த ஒரு ஆசாமி மற்றொரு வாகனத்தை முந்த முயன்று ஸ்கிட் ஆகி விழுந்திருக்கிறான். வாகனம் ஒருபுறம் குப்பையாக விழுந்து கிடக்க, உணர்வற்று கண்கள் செருகிக் கிடந்த அவனை மூன்று பேர் சேர்ந்து துக்கி அருகிலிருந்த ஆட்டோவில் ஏற்ற முயன்று கொண்டிருந்தார்கள். அச்சமயம் ஆட்டோவை நான் பயணித்த பஸ் நெருங்க... ஐயையோ... அந்த ஆசாமியின் முகமெல்லாம் ரத்தத்தில் குளித்திருந்தது. ஜன்னல் ஓரமிருந்து க்ளோஸப்பில் பார்க்க நேர்ந்தது வயிற்றைப் பிசைந்தது.

சென்னை சாலைகளில் பைக்கில் செல்லும் ஆசாமிகள் பெரும்பாலரிடம் இந்த கண்மூடித்தனமான வேகத்தை நான் பார்க்கிறேன். பைக் விற்கும் கம்பெனிகள் ‘எங்க பைக்ல 80 கிமீ வேகம் போகலாம்’ ‘எங்க பைக்ல 90 கி,மீ, வேகம் போகலாம்’னுல்லாம் விளம்பரம் பண்ணி விக்கறானுங்க. இவர்களும் அத்தனை வேகம் நம் நகர நெரிசலில் சாத்தியமா என்பதை கிஞ்சித்தும் நினையாமல் அவசர வேலை என்று சொல்லிக் கொண்டோ... இல்லை, ஒரு த்ரில் கருதியோ... ப்ளைட் ஓட்டுவது போல ஸும் என்று சவுண்டுடன் வளைந்து வளைந்த பலரை ஒவர்டேக் பண்ணி... கடைசியில் இப்படி ரத்தமுகமாகிறார்கள். சற்றே யோசித்துப் பாருங்கள். இப்படி தலைதெறிக்க பைக்கில் செல்வதால் அதிகம் போனால் பத்து நிமிடங்கள் அவனுக்கு மிச்சமாகியிருக்குமா...? இப்போது... ஆஸ்பத்திரிக்கு தெண்டச் செலவு செய்து கொண்டு குறைந்தது ஒரு வாரத்துக்கேனும் தன் வேலைகள் அனைத்தையும் கெடுத்துக் கொண்டு வெற்றாக படுத்திருக்கப் போகிறான்.

என் மூஞ்சூறு வாகனத்தில் செல்கையில் என்ன அவசரம் எனினும் நான் 30 கி..மீ. வேகத்திற்கு மேல் போனதில்லை. (அது 50 கி,மீ, வேகத்திற்கு மேல போக அனுமதிக்காதுன்றது வேற விஷயம். ஹி... ஹி...) இந்த விபத்தை நான் பார்த்தவரையில் உங்களிடம் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்றுதான். அடிபட்ட அந்த ஆசாமி தலைக்கவசம் அணிந்திருந்தால் இப்படி ரத்தமுகமமாகி இருக்கமாட்டார் என்பதை அவதானித்தேன். ஆகவே... என் இனிய தமிழ் மக்களே... 1) கண்மூடித்தனமான வேகம் வேண்டாம்... 2) அப்படித்தான்யா போவேன் என்று அடம்பிடித்தீரெனில்... தலைக்கவசத்தை மறக்க வேண்டாம் என்கிற விஷயத்தை மறுமுறையும் வலியுறுத்தி உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

• • • • • • • • • •

நான் எப்போதாவது தொலைக்காட்சிப் பக்கம் பார்வையைத் திருப்பும் ஆசாமி. இன்று எதேச்சையாக ‘ஆதித்யா’ நகைச்சுவைச் சேனல் வைத்தபோது ஒரு நிகழ்ச்சியின் ப்ரோமோ ஓடிக் கொண்டிருந்தது இங்கே நீங்கள் பார்க்கும் படத்தைக் காட்டி நான்கைந்து இளைஞிகளிடம் “இவர் யார் தெரியுமா?” என்று கேட்கிறார் நிகழ்ச்சித் தொகுப்பாளர். ஒரு பெண்குட்டி, “சார்லி சாப்ளின் மாதிரி இருக்காரு?”ங்குது. இன்னொண்றோ... “எங்க தாத்தா மாதிரி இருக்காது” என்கிறது. அனைவரும் கெக்கெக்கே என்று சிரிக்கிறார்கள். நிகழ்ச்சிக்குப் பேரு ‘தமிழ் பேசுங்க தலைவா’வாம் அடக் கருமாந்தரம் பிடிச்சதுங்களா..!. ப்ள்ளிப் படிப்புல இவரைப் பத்தி எதுவும் படிக்கலையா...? இல்ல... இந்த மாதிரி நிகழ்ச்சில இப்படி கோக்குமாக்காத்தான் பேசணும்னு பேசிக் சிரிக்குதுங்களா? அப்டின்னா கேலி செய்யறதுக்கு தமிழறிஞர்தானா கெடைச்சார்? அஜீத், விஜய்ன்னு எத்தனை நடிகனுங்க இருக்கானுங்க. அவங்களக் காட்டி கேலி பண்ண வேண்டியதுதானே... இந்தக் கழுதைங்களுக்கு அவனுங்களைல்லாம் நல்லாவே தெரிஞ்சிருக்கும்.

இதேமாதிரி கூத்தை இமான் அண்ணாச்சி எனபவர் நடத்தும் இன்னொரு நிகழ்விலும் காணக் கிடைத்தது. ‘இந்தியாவின் தற்போதைய ஜனாதிபதி யார்?’ என்று அவர் கேட்கும் கேள்விக்கு, ’பிரதீபா பாட்டில்’ என்கிறது ஒரு ஜந்து. இன்னொரு ஜந்து அழுத்தம் திருத்தமாக ‘ராஜீவ்காந்தி’ என்கிறது. பிறிதொரு ஜந்துவோ, ‘வி.பி.சிங்’ என்று பதிலிறுத்து பல்லிளிக்கிறது. இந்த பிரகஸ்பதிகள் விட்டால் ஜைல்சிங், ராஜ்நாராயணன் என்று பின்னோக்கிப் போய் மகாத்மா காந்திதான் என்று பதில் சொன்னாலும் சொல்லும்கள் போல...! நிஜமாவே ஜனங்க இவ்வளவு முட்டாள்களா... இல்லை காமிரா முன்னால முட்டாள் மாதிரி நடிக்கறாங்களான்னுதான் எனக்குப் புரியலை. தொலைக்காட்சில முகம் வரணும்கறதுக்காக இப்படிப் பேசறாங்கன்னா... அந்த நிகழ்ச்சியை உங்க உறவு, நட்புகளோட சேர்ந்து பாக்கறப்ப கொஞ்சமாச்சும் மானம், ரோஷம், வெக்கம்... இதுமாதிரியான உணர்ச்சிகள் எட்டிப் பார்க்காதா என்ன? சற்திரபாபுவின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. “ஒண்ணுமே புரியலே உலகத்துலே...!”

• • • • • • • • • •

கூல்...! இப்போ கொஞ்சம் ஜாலியா விளையாடலாம் நாம. கீழே நான்கு எழுத்தாளர்களோட படைப்புகள்லருந்து சில வரிகள் தந்திருக்கேன். நடையை வைத்து எழுத்தாளர்கள் யார் என்பதைக் கண்டுபிடியுங்க பார்க்கலாம். தெரியலன்னா நாளைக்கு விடையை அப்டேட் பண்ணுவேன். அப்ப பாத்துக்கலாம்.


1) “அவதானா” மைதிலி சமையலறைப் பக்கம் ஜாடையாகப் பார்க்கிறாள். அவளேதான்... அந்தக் கண்ணும், மூக்கும், அச்சில் வார்த்தாற் போன்ற முகமும் யாருக்கு வரும்? அலையலையாய் முதுகில் புரளும் கூந்தலும் அவள் மாயவரம் சந்நிதித் தெரு அபயம்தான் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. ஆனால்... பசுமை படர்ந்த முகமும், நெற்றியில் பளிச்சிடும் குங்குமமும்தான் மைதிலியின் சந்தேகத்திற்குக் காரணம்.

2) நான் உங்களை மாதிரியில்லே சார். இன்னமும் பழைய பஞ்சாங்கம். திணறத் திணற ஜீன்ஸ் எல்லாம் போடுவது கிடையாது. சுத்தமான மல்வேட்டி, கிளாக்ஸோ ஜிப்பா, தோளில் கதர்த்துண்டு (இதையெல்லாம் பார்த்து என் வயசைப் பற்றி சந்தேகப்பட்டால் உங்களுக்கு விமோசனமே கிடையாது. யெங் மேன்! இப்பதான் பெண் பார்க்க பூனாவுக்குப் போகிறேனாக்கும்) சிகரெட், சுருட்டு பழக்கமெல்லாம் நோ. அதனால்தான் என் மூச்சு சீராக முழுசாக ஆரோக்கியமாக இருக்கும். ஆல்கஹால் சேர்ந்தது என்கிற ஒரே காரணத்துக்காக என்னதான் இருமல் வந்தாலும் சிரப்பைக்கூட சாப்பிட மாட்டேன். அவ்வளது இது... சுத்தம்!


3) நீரும் நானும் ஐஸ்வர்யா ராயும், கிளிண்டனும், சோனியா காந்தியும் உறவுதான். அதை நிரூபிக்கும் ஆவணங்கள்தான் நம்மிடம் இல்லை. ராஜாக்களுக்கும் அரச குலத்தவர்களுக்கும் ஓரளவு இருக்கிறது. அண்மையில் ராஜராஜசோழரின் வம்சத்தவர் ஒருவர் தஞ்சாவூர் அருகில் எஸ்.டி.டி. பூத் வைத்திருப்பதாகச் செய்தி படித்தேன். இதை நம்ப எனக்குத் தயக்கமே இல்லை. இந்த சிந்தனையை விரிவுபடுத்தினால் மேலும் வினோதங்கள் எழும். நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் ஒருசில மனிதர்களே இருந்தனர். அவர்களிடமிருந்துதான் உலகின் மக்கள் அனைவரும் கிளைத்தோம். விதிவிலக்கே இல்லை.

4) குறை நிலா மேகத்தை சல்லாத் துணியாகப் போர்த்தியிருந்தது. நட்சத்திரங்கள் முறை வைத்து மின்னிக் கொண்டிருந்தன. சென்னை துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சியிருந்த கப்பல்களின் வெளிச்சங்கள் ‘கடலில் வைரங்கள் கொட்டப்பட்டதைப் போல்’ என்று உபமானங்கள் யோசிக்க வைத்தன. சரம் சரமாக விளக்குகள் போட்டு மண்டை மண்டையாக மைக்குகள் கட்டி சுற்றுவட்டாரக் குடியிருப்புகளில் யாரையும் தூங்கவிடாமல் ‘எதிர்க்கட்சி’ நண்பர்களுக்கு மைக்கில் தேர்தல் சவால்கள் விட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்த நாலு  பேர் : 1.அனுராதா ரமணன், 2.ராஜேந்திரகுமார், 3.சுஜாதா, 4.பட்டுக்கோட்டை பிரபாகர்.

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube