Tuesday, December 23, 2014

ஒரு சோதனை முயற்சி..!

Posted by பால கணேஷ் Tuesday, December 23, 2014

திப்புரை.காம் என்ற தளத்தில் நீங்க ரெஜிஸ்டர் செய்து, விமர்சனம் எழுத விரும்பும் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். உங்கள் மதிப்புரை வெளியிடப்படும் அதே நேரம் அந்தப் புத்தகம் உங்களுக்கே உடைமையாகி விடும். நான் அங்கு எழுதிய மூன்று மதிப்புரைகளில் ஒன்றை சற்றே வித்தியாசமாக கவிதை(?) நடையில் படைத்திருந்தேன். என்னுடைய தளத்தில் அதைப் பகிர்ந்து என் பதிவுகளை மீண்டும் துவக்குகிறேன் நண்பர்களே... 

        செங்கிஸ்கான்

பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தனர் மங்கோலியர் என்ற ஓரினம்
தனித்தனி குழுக்களாய் வாழ்ந்து தம்முள்ளேயே மோதினர் தினந்தினம்
கூடாரமிட்டு பருவந்தொறும் இடமாறிய அவருக்கிலையோர் ஆரிஜின்
அவ்வினங்களை ஓரரசாய் தனிப் பேரரசாய் மாற்ற வந்துதித்தார் டெமுஜின்!
தலைவனான தந்தை இறந்ததும் சிதறியோடியதவர் கூட்டம்
இலையளவும் டெமுஜின் கொள்ளவில்லை மனதில் வாட்டம்!
அகவை பத்திலேயே தன்னினிய குடும்பத்தின் தலைவரானார்
தகவை யிழந்து பிறிதோர் கூட்டத்திடம் சிக்கி அடிமையுமானார்!
நல்லோரொருவர் உதவ தப்பினார் அக்கூட்டத்தின் பிடியிலிருந்து
வல்லோனாக வேண்டுமென உறுதி கொண்டார் அடிமனதிலிருந்து!
நல்நண்பனாய் அவருக்கு அமைந்தனன் ஜமுக்கா என்பான்
வல்லரசுக் கனவை அன்னவன் டெமுஜினுக்குள் விதைத்தான்!
இந்நாளைய சச்சினைப்போல் அகவையில் மூத்த கன்னியை
அந்நாளில் டெமுஜின் சந்தித்தார்; அவளை மனதில் நன்னினார்!
நல்முகூர்த்த நாளொன்றில் அவளை மணமுடித்தார் மனமெலாம் மகிழ்வாம்
வல்லூறென வேறோர் கூட்டம் கவர்ந்து சென்றதோர் அவலமான நிகழ்வாம்!
காதல் மனையாளை மீட்க அவருக்கு படைதந் துதவினார் சிற்றரசர் ஆங்கான்
முதல் போரில் எதிரிகளை வென்றார் டெமுஜினுக்கோர் இணையிலைகாண்!
டட்டாரெனும் ஓரினத்தை அழித்திட ஆங்கான் வேண்டுகோள் விடுத்தார்
பட்டாரெனச் சென்று எதிரிகளைக் கொன்றெடுத்தார்; போரை வென்றெடுத்தார்!
மெல்ல மெல்லப் பெருகி வந்தது மக்கள் ஆதரவு டெமுஜினின் கூட்டணியில்
நல்ல நண்பன் ஜமுக்காவும் வளர்ந்து நின்றிருந்தான் எதிரியின் படையணியில்!
கூட்டத்தை வளர்க்க தடையாய் நண்பனே எதிர்நின்றதோர் பெருஞ்சோதனை
வாட்டத்தை உதறி வென்றார்; அவன் விரும்பியபடியே கொன்றார் நண்பனை!
பேரரசாய் முடிசூடிய டெமுஜினுக்கிடப்பட்ட பெயர்தான் செங்கிஸ்கான்
ஓரரசாய் மங்கோலிய இனத்தை மாற்ற தொடர்ந்து போர்செய்தா ரவர்காண்!
இட்டப்பட்ட பெண்ணை திருடும் மங்கோலிய வழக்கத்தை மாற்றியது கானின் ஆட்சி
சட்டத்தின் முன் அனைவரும் சமமே என்றுரைத்திட்டது செங்கிஸ்கானின் உயர்மாட்சி!
படைகளைத் திரட்டி ஒழுங்காக அணியணியாய் பிரித்திட்டார்
கடைக்கோடி வீரன்வரை தானும் நெருக்கமாய்ப் பழகிட்டார்!
உலகையே ஓர்குடைக்கீழ் கொணர விரும்பினான் அலெக்சாந்தர்; அன்னானுக்கு
பலகாலம் முன்பே கான் அக்கனவை படையினரிடம் விதைத்திட்ட முன்னோன்!
போர்களிலேயே வாழ்நாளைக் கழித்திட்டது கானின் பெருமை
பார்புகழும் மன்னரென்றாலும் வாராமல் நின்றிடாதே முதுமை!
தந்தைக்குப் பின் ஆரென்று அடித்துக் கொண்டது வாரிசுகளின் பிழைதான்
சிந்தை மிகக்குலைந் தவர்க்குள் ஒற்றுமைசெய முயன்றது கானின் மனந்தான்!
உலகை வெல்லும் கனவை வாரிசுகளிடம் ஈந்து மரித்ததவர் உடலம்
பலகாலம் அதன்பின் மங்கோலியப் பேரரசின் புகழ் மங்காப் படலம்!
கான் மறைந்தபின் கிளைகிளையாய் பெருகியது மங்கோலியப் பேரரசு
சீனத்திலிருந்து இந்தியாவின் மூக்குவரை நீண்டு வளர்ந்ததவ் வல்லரசு!
செங்கிஸ்கான் மரணதேவனை முத்தமிட்டது ஆயிரத் திருநூற் றிருபத்தாறாம் ஆண்டு
மங்கிடாப் புகழுடன் மங்கோலியப் பேரரசு அதன்பின் விளங்கியது ஓர் நூற்றாண்டு!
தகவலாய்ப் பள்ளியில் படித்திட என்றும் கசந்திடும் ஒன்று வரலாறு
கலகலவென கதையாய்ப் படித்தால் மனதில் இறங்கிடும் ஒருவாறு!
கதையென கானின் வரலாற்றை உரைத்திட்ட முகிலின் கைவண்ணம்
இதைப் படிப்போரெல்லாம் வியந்து பாராட்டிடுவர்; இது திண்ணம்!


வாசகர்கூடத்தில இப்போது.... எம்.ஜி.ஆர்.

Thursday, October 30, 2014

பதிவர் சந்திப்புகள் இனி தேவையா..?

Posted by பால கணேஷ் Thursday, October 30, 2014
கடந்த இரண்டு வருஷங்களா சென்னையிலயும், இந்த வருஷம் மதுரையிலயும் பதிவர் திருவிழா என்ற பெயரில் ஒரு நாள் நிகழ்வுகள் நடந்து முடிஞ்சாச்சு. எல்லாம் முடிஞ்சு யோசிக்கறப்பத்தான் இதையெல்லாம் நடத்தறதால என்ன பிரயோஜனம் இருக்கு... ஏன் இந்த எழவுக்கு இத்தனை மெனக்கெடணும் அப்படின்னுதான் தோணுது.

வெறும் பதிவர்கள் அறிமுகமாயிட்டு கூடிக் கும்மியடிக்கற நிகழ்வா இல்லாம ஒரு நாள் விழாவா வெச்சு மூத்த பதிவர்களுக்கு ஷீல்டு கொடுத்து மரியாதை பண்ணி, சிறப்பு அழைப்பாளரின் நல்ல ஆலோசனை தரும் பேச்சை அனைவரும் கேட்கணும், கவியரங்கம் நடத்தணும்னு எல்லாம் திட்டமிட்டு புலவர் இராமாநுசம் ஐயா தலைமையில நடத்தினப்ப சில மூத்த பதிவர்கள் தங்களை உரிய மரியாதை(?)யோட அழைக்கலைன்னு பஞ்சாயத்து பண்ணாங்க. எந்த நாட்டாமைங்களும் இங்க இல்லாததால ஒருத்தர் மேல ஒருத்தர் சேத்தை வாரி இறைச்சுக்கிட்டு ஓஞ்சு போனதுதான் மிச்சம்.

ரெண்டாவது வருஷம் நடத்தினப்ப, விழா ஏற்பாட்டுக் குழுவுல இருந்த ஒருத்தரே அங்க தென்பட்ட சில குறைகளை லென்ஸ் வெச்சு தேடிக் கண்டுபிடிச்சு, இதெல்லாம் ஒரு விழாவான்னு மல்லாந்து படுத்துக்கிட்டு எச்சில் துப்பினாரு. அதையும் சகிச்சுக்க வேண்டியதாயிடுச்சு. அப்பவும் பதிவுகள், பின்னூட்டம்னு ஒரே சண்டை, சர்ச்சை மயம்தான்...

இப்ப மூணாவது சந்திப்பை மதுரைல நடத்திட்டு, அதுல தொழில்நுட்ப பதிவர்களை கௌரவிச்சட்டு, அது வெற்றிகரமா நடந்திட்டுதுன்னு நமக்கு நாமே மாலை போட்டுகிட்டு. ஒருத்தன் முதுகை ஒருத்தன் தட்டிக் கொடுத்துக்கறது நிறையப் பேர் கண்ணை உறுத்தியிருக்கு. பேஸ்புக் தோன்றி ட்விட்டர் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த ப்ளாக்கர்ஸான எங்களை, எங்க சந்திப்பை எல்லாம் மதிச்சு நீங்க ஒண்ணும் பண்ணலையேன்னு கொடி புடிச்சுட்டு வர ஆரம்பிச்சுட்டாய்ங்க... அதுக்கு சப்போர்ட் பண்ணி வாதாட அறிவிற் சிறந்த ஒரு சீனியர் பிளாக்கர்ஸ் டீமும் தயாராயி களத்துல இறங்கியாச்சு.

ப்ளாக் அப்படின்னு ஒண்ணு தமிழ்ல பிரபலமாக ஆரம்பிச்ச காலத்துலருந்து எழுதி, இன்னிக்கு ஆயிரத்துக்கும் மேல பதிவுகள் கண்ட துளசி கோபால் டீச்சர் நம்ம சந்திப்புகளுக்கு தவறாம வந்து ஊக்கம் தர்றாங்க. அதுமாதிரி இவங்களும் வந்து கலந்துக்க வேணாம், ஆலோசனைகள் தர வேணாம்... அட்லீஸ்ட் கல்லெறியாமலாவது இருந்து தொலையலாம்ல....? வேணும்னா எங்களை மாதிரி வெரைட்டியான நிகழ்ச்சிகளோட. பெண்களும் கலந்துக்கற மாதிரி ஒரு நிகழ்வை நீங்க நடத்திக் காட்டிட்டு அப்பறம் வந்து பேசுங்கப்பா நியாயம்.  இன்றைய பதிவர்கள் எங்கயும் எல்லாத்து கூடயும் ஒத்துழைக்கத் தயாரானவர்கள்ன்றத நான் பெருமையா சொல்லுவேன்.

தொட்டுத் தொடரும் பிளாக்கர் பாரம்பரியத்துல வருங்கால ப்ளாக்கர் யாராவது சந்திப்பு நடத்திட்டு என் பேரையும் சீனு பேரையும் சொல்லாட்டி எங்களுக்கு வலிக்குமாம். நானும் சீனுவும் என்ன அவங்கவங்க அப்பன் சொத்தை வித்தா நடத்தினோம் இதை எங்களுக்கு வலிக்கறதுக்கு...? ஊர் கூடி இழுத்த தேர் இது. எங்க பேரே வரலைன்னாலும் நாங்க கவலைப்படப் போறதில்ல.. வருங்காலப் பதிவர்கள் எங்களை மறக்கக் கடவார்களாகுக...

இனி சந்திப்பு நடத்தறதா இருந்தா ரிடயர்மெண்ட்ல இருந்துட்டு இன்னிக்கு திடீர்னு கண்ணு முழிச்சுட்டு குதிக்கற இந்த ப்ளாக்கர்ஸ்க்கு சிலைத் திறப்பு விழாவோ, இல்ல படத் திறப்பு விழாவோ நடத்திட்டு அப்பறம் ஏற்பாடு பண்ணுங்கப்பா.  இல்லாட்டி உம்மாச்சி கண்ணக் குத்திடும். என்னையப் பொறுத்தவரை நான் யார் யாரை சந்திக்க விரும்பறேனோ, பர்சனலா போய் சந்திச்சுக்கறேன். நிம்மதியாவது மிஞ்சும். இந்த விழாவுலல்லாம் தலையிடறதா இல்லை. ஆள வுடுங்க சாமிகளா....

எல்லாருக்கும் பொழப்புக்கு ஒரு தொழில் இருக்கு. குடும்பம் இருக்கு. பகுதி நேரத்துல எழுத வந்த எடத்துல பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு, அசிங்கப்பட்டுக்கிட்டு... தேவையா இதெல்லாம். போங்கய்யா.. போய் புள்ள குட்டிங்களப் படிக்க வையுங்க....

பி.கு. : கீழ கருத்துப் பெட்டியில ஆதரிக்கறவங்களும், காறித் துப்புறவங்களும்.... கேரி ஆன். நான் எதுக்கும் பதில் சொல்றதா இல்ல. ஏன்னா நான் சொல்ல வேண்டியத மேல சொல்லிட்டேன். இனி தொடர்ந்து நிறையப் பதிவுகள் எழுதுவேன், நிறையப் பேருக்கு கருத்திடுவேன். பொங்கறவங்க, திட்டறவங்க இந்த ஏரியாவுக்கு வரவேணாம்யா. என்னப் புரிஞ்சுக்கிட்ட ஒரு சிறு நண்பர்கள் குழுவே எனக்கு நிறைவானது. நன்றி.

Monday, October 20, 2014

தீபாவளித் திருநாள் என்கிற தீபஒளித்  திருநாள் வெகு அருகாமையில் வந்துவிட்டது. ஜஸ்ட் 45 மணி நேரங்கள்தான் நமக்கும் தீபாவளிக்கும் இடையில் இப்போது. ஜாதி, மத பேதமில்லாமல் நாடு முழுவதும் கொண்டாடப்படும் இந்த மகிழ்வான திருவிழாவைக் கொண்டாட கோலாகலமான (அ) பெப்ஸிகலமான ஏற்பாடுகளைச் செய்துவிட்டுக் காத்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் என் மகிழ்வான, இதயம் நிறைந்த, இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.

சின்ன வயதில் அதிகாலையில் எழுந்து புத்தாடை எப்போது தருவார்கள், பட்டாசு எப்படா வெடிக்கலாம் என்று ஆர்வமாய், வெறியாய் காத்திருந்த தருணங்களும், இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே தீபாவளிக்கான கவுண்ட் டவுனை ஆரம்பித்து உற்சாகமாய்க் காத்திருந்ததும் நினைவில் நிழலாடுகின்றன. அந்த மாணவப் பருவ வாழ்க்கையும், தீபாவளிகளும் மறக்க முடியாதவை.


தீபாவளியைக் கொண்டாடி முடித்த கையோடு நாமெல்லாரும் சந்தித்து மதுரையில் மற்றொரு தீபாவளியைக் கொண்டாட இருக்கிறோம் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. அதற்கும் தயாராகி விட்டிருப்பீர்கள் என்பதை நான் அறிவேன். 26ம் தேதியன்று நாம் சந்திக்கும் நாளில் நிகழவிருக்கும் நிகழ்வுகளின் பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் மாற்றம் இருப்பின் (பெரும்பாலும் இருக்காது) அதுவும் பின்னர் பகிரப்படும்.



இந்த, நம்முடைய இரண்டாவது தீபஒளித் திருநாளையும் சிறப்பிக்க தவறாமல் வந்துடுங்க மக்களே..!

பி.கு.: சென்ற ஞாயிற்றுக்கிழமை என் சரிதாயணம் + நான் இருக்கிறேன் அம்மமா புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற்றது. அது பற்றிய விவரங்களும், புகைப்படங்களும் என் நினைவுக்காக பதிவாக வெளியிட எண்ணியிருந்தேன். தீபாவளி முடிந்ததும் வெளியிடுகிறேன்.

Wednesday, September 24, 2014

அரசன் தந்த பரிசு !

Posted by பால கணேஷ் Wednesday, September 24, 2014
மேலைமங்கலம் முழுவதும் ஒரே விஷயத்தைத்தான் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்தது. சற்றுமுன்  பறையறிவித்துச் சொல்லப்பட்ட செய்திதான் அது.

“நம் மன்னர் பெரிதாய் ஒரு சிவன் கோயில் கட்டப் போவதாகவும், அதற்கு பொதுமக்கள் அனைவரும் அவரவரால் முடிந்த  பணத்தைக் கொடுக்கலாமென்றும், பேரமைச்சரிடம் ஒரு பணம் கொடுத்தாலுங்கூட அவர்களின் பெயர் கோயில் திருப்பணிக் கல்வெட்டில் பொறிக்கப்படுமென்றும் சொல்கிறார்களே... என்ன ஆச்சரியம்..! அரசாங்க கஜானாவில் இல்லாத பணமா ?” என்றான் ஒருவன்.

“அப்படியல்லடா. ஒரு நல்ல காரியத்தில் அனைவரின் பங்கும் இருக்க வேண்டுமென்று அரசர் விரும்புகிறார். அவர் நினைத்தால் ஒரு புதிய வரியை விதித்து. அதில் வரும் பணத்தைக் கொண்டு கோயில் கட்டுவது மிக எளிதாயிற்றே...? எதற்கு இப்படிப் பறையறிவிக்க வேண்டும்?” என்றான் மற்றவன்.

“நீ சொல்வதுதான்  சரியென்று தோன்றுகிறது. இன்றே என்னால் முடிந்த பணத்தை நான் பேரமைச்சரிடம் கொடுக்கப் போகிறேன்” என்றான் இன்னொருவன். பேசியபடியே அவர்கள் நகர்ந்தார்கள்.

“ஏனடி, உன் புத்தி கெட்டு விட்டதா என்ன..? நாமெல்லாம் பணம் கொடுத்து, அதை பேரமைச்சர் ஏற்றுக் கொள்வதா? நடக்கும் விஷயமாகப் பேசடி...” என்றாள் மோகனவல்லி.

“ஏனம்மா... தேவதாசிகள் என்றால் கோயில் திருப்பணிக்குப் பணம் கொடுக்கக் கூடாதென்று எதுவும் சட்டம் இருக்கிறதா என்ன? இந்த நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் என்ன உரிமை இருக்கிறதோ, அது எனக்கும் உண்டுதானே? நிச்சயமாக நான் கோயில் திருப்பணிக்காக ஆயிரம் பொன்னைப் பேரமைச்சரிடம் கொடுக்கத்தான் போகிறேன்.”

“வேண்டாமடி. இதனால் வீண் பிரச்னைகள்தான் வரும் என்று எனக்குத் தோன்றுகிறது.  அனாவசியமாக வம்பை விலை கொடுத்து வாங்காதே...” மோகனவல்லியின் குரலில் பதற்றம் இருந்தது.

“எந்த வம்பும் இல்லையம்மா... என்னுடைய காலத்துக்குப் பின்பும் என் பெயர் சொல்லுமளவு ஏதேனும் ஒரு விஷயம் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அதற்குக் கிடைத்திருக்கும் இந்தப் பொன்னான வாய்ப்பை நான் இழந்துவிட விரும்பவில்லை. நாளையே நான் பேரமைச்சரைப் பார்க்கத்தான் போகிறேன்...”  என்றாள் அபரஞ்சி திடமான குரலில்.

பேரமைச்சர் அம்பலவாணரின் முகம் செக்கர்வானமெனச் சிவந்திருந்தது. “விளையாடுகிறாயா அபரஞ்சி? நமது மன்னர் ரணதீரர் எழுப்பும் இந்த ஆலயம் காலம் உள்ளளவும் நிலைத்து நின்று அவரது நல்லாட்சியைப் பறைசாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பிரம்மாண்டமாக எழுப்பப் போகிறார். இப்படியான ஒரு பெரும் பணியில் தம் பெயர் மட்டுமல்லாது, குடிமக்கள் ஒவ்வொருவரின் பெயரும் இடம்பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் அவர் இப்படி ஒரு அறிவிப்பைச் செய்துள்ளார். அதற்காக...?  உன்னிடமிருந்து நான் ஆயிரம் பொன் என்ன... பத்தாயிரம் பொன் கொடுத்தாலும் பெற்றுக் கொள்ள முடியாது.”

“ஏன் பெற்றுக் கொள்ளக் கூடாது பேரமைச்சரே... குடிமக்கள் ஒவ்வொருவரின் பெயரும் இடம்பெற வேண்டும் என்று மன்னர் விரும்பினார் என்றால் நானும் குடிமக்களில் ஒருத்தியல்லவா? நான் கொடுத்தால் என்ன?”

“ஆலயச் சுவர்களில் ஒரு விவசாயி கொடுத்தது இவ்வளவு பணம், ஒரு வியாபாரி கொடுத்தது இவ்வளவு பணம் என்று பொறிக்கும் போது, தேவதாசி கொடுத்தது இவ்வளவு பணம் என்றா உன் பெயரைப் பொறிக்க முடியும்? வருங்கால சந்ததியினர் இதைப் படித்தால் எள்ளி நகையாட மாட்டார்களா? ஒரு நற்பணிக்குக் களங்கம் கற்பித்தது போல் ஆகிவிடுமே... இந்த எண்ணத்தைத் துறந்து நீ இங்கிருந்து போய்விடு...” என்றார் அம்பலவாணர் கண்டிப்பான குரலில்.

தாசி அபரஞ்சியிடம் இன்னும் பலவிதமாக அவர் எடுத்துக் கூறியும், அவள் ஏற்க மறுத்துவிடவே, சினமடைந்த அவர் அவளை வெளியே தள்ளும்படி வீரர்களை அழைத்து உத்தரவிட்டார். சினத்தின் உச்சிக்குப் போன அபரஞ்சி கூச்சலிட்டாள். “பேரமைச்சரே... என்னை அவமதித்து விட்டீர். நான் இப்போதே மன்னரிடமே சென்று திருச்சபையில் (நீதிமன்றத்தில்) நீதி கேட்கிறேன். அதற்கு நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்” என்றபடியே சென்றாள்.

திருச்சபையில் பேரமைதி நிலவியது. மன்னன் ரணதீரன், சலனமில்லாத முகத்தோடு அபரஞ்சியை ஏறிட்டான். “உன் வழக்கைச் சொல்லம்மா...”
“மன்னா... காலமெல்லாம் தங்கள் பெயர் சொல்லும் வண்ணம் நீங்கள் கட்டும் ஆலயத்தில் என் பெயரும் இடம்பெற வேண்டுமென்று நான் மிகவிரும்பி ஆலயத் திருப்பணிக்காக பேரமைச்சரிடம் ஆயிரம் பொன் கொடுத்தேன். அவர் ஏற்க மறுத்து, என்னையும் அவமதித்து விட்டார்....” என்றாள் அபரஞ்சி.

அவையில் பெரும் சலசலப்பு எழுந்தது. ஒவ்வொருவரும் தங்களுக்குள் பேச முற்பட்டதால் எழுந்த அந்த சலசலப்பை மன்னரின் ஒரு கையசைப்பு அமைதிப்படுத்தியது. 

“அம்பலவாணரே... ஏன் அபரஞ்சி கொடுத்ததை ஏற்க மறுத்தீர்கள்?” என முகத்தில் ஒரு குறுஞ்சிரிப்பு தவழ, வினவினான் மன்னன்.

“எப்படி மன்னவா ஏற்க முடியும்? இவள் தாசிக் குலத்தில் பிறந்தவள். நாட்டில் பல ஆண்களின் மோகத்தீயை அணைத்தவள் அல்லவா?” என்றார் அம்பலவாணர்.

“உம்மையும் சேர்த்துத்தானே..?” என்று மன்னன் இடக்காகக் கூறவும், பேரமைச்சர் குரல் எழும்பாமல் திகைத்துப் போய் அமைதியானார்.

“மன்னர் இவ்வாறு பேசுவது தகாது. ஆலயத்தின் சுவரில் ஒரு தேவதாசியின் பெயரை எவ்விதம் பொறிக்க இயலும்? பின்னாளில் வரலாறு நம்மை இகழாதா? பேரமைச்சர் நடந்து கொண்டதில் தவறில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது” என்றார் அரசவைப் புலவர்.

“புலவரே... உயர்ந்தவர் - தாழ்ந்தவர், பணக்காரர் - ஏழை, குலமகள் - தேவதாசி என்ற பாகுபாடெல்லாம் உம்மையும் அமைச்சரையும் போன்றோருக்குத்தான். அரசனாகிய எனக்கு என் குடிமக்களில் ஒவ்வொருவரும் சரிசமமே. புரிகிறதா...? தேவதாசியென்றால் அவ்வளவு கேவலமா என்ன? நீரும் நானும் வணங்கும் சிவபெருமானே, தன் அடியவர் சுந்தரமூர்த்தி நாயனாருக்காக பரவையார் என்ற தேவதாசியின் வீட்டுக்கு நடையாய் நடந்தாரே... தன் அடியவருக்கு அவளைத் திருமணம் செய்விக்கும் பொருட்டு தன் நிலையிலிருந்து இறங்கி வந்த சிவபெருமானைக் கேவலமாய்ச் சொல்வீரா? இறைவனையே கணவனாக வரித்து ஆலயத்தில் நடனமாடி இறைவனுக்குப் பணி செய்வதையே வாழ்க்கையாகக் கொண்ட தேவதாசிக் குலத்தை எம்மைப் போன்ற அரசர்களும், உம்மைப் போன்ற அரசவை உறுப்பினர்களுமாகச் சேர்ந்தல்லவா இப்படி மாற்றினோம்? அவர்கள் செய்வது பாவம் எனில் செய்யத் தூண்டிய பாவிகள் நாமல்லவோ..? அவர்கள் குற்றமுள்ளவர்கள் என்றால் அதில் நமக்கும் பங்கு உண்டில்லையா?”

மன்னன் ரணதீரனின் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார் அரசவைப் புலவர். பேரமைச்சர் அம்பலவாணர் தன்னைச் சுதாரித்துக் கொண்டு பேசினார். “மன்னவா... நீங்கள் சொல்லும் வாதங்களை ஏற்றுக் கொள்ள முடிகிறது. நியாயங்களை உணர முடிகிறது. என்றாலும்... சற்று யோசியுங்கள்... ஆலயத்தின் கல்வெட்டில் தேவதாசி என்றா பொறிப்பது? பின்னர் வரும் சந்ததியினருக்கு அது கேலியாகி விடுமே... என்னவென்று இவள் பெயரைப் போடுவது என்பதுதானே பிரச்சினை? அதனால்தான் இவள் தந்த ஆயிரம் பொன்னை ஏற்க மறுத்தேன். நீங்கள் இவளை ஆதரித்துப் பேசுவதனால் இதற்கொரு முடிவை நீங்களே சொல்லி விடுங்கள். நாங்கள் மனமொப்பி ஏற்றுக் கொள்கிறோம்...” என்றார்.

மன்னன் சற்று நேரம் அமைதியாக இருந்தான். புருவங்கள் முடிச்சிட கண்களை மூடி சில நிமிடம் யோசித்தான். பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய் நிமிர்ந்தான். “சரி பேரமைச்சரே... தேவதாசியென்று பெயர் பொறித்தால்தானே கேவலம்? இன்னாருடைய அன்னை என்று பெயர் பொறித்தால் தவறில்லையே... இந்த அபரஞ்சியை இந்த நிமிடம் முதல் என் வளர்ப்புத்தாயாக ஏற்றுக் கொள்கிறேன். ஆடற்கலையில் வல்லவனாகிய நடராஜப் பெருமானுக்கு ஒரு ஆடல் மண்டபம் எழுப்பி, அதில் மன்னன் ரணதீரனின் வளர்ப்புத்தாய் அபரஞ்சியின் உபயம் என்று பெயர் பொறிக்கச் சொல்லுங்கள்...” என்றான் சிம்மாசனத்திலிருந்து கம்பீரமாக எழுந்து நின்று. 

அவை ஸ்தம்பித்தது. அபரஞ்சி கண்ணீர் மல்கியவளாய் அரசரின் காலில் விழப்போனாள். “என்னம்மா இது? நானல்லவா தங்கள் காலில் விழுந்து வணங்க வேண்டும்? தாயே, இனி பேரமைச்சரிடம் நீங்கள் ஆயிரம் பொன்னைத் தரலாம். மனமகிழ்வுடன் நாங்கள் பெற்றுக் கொள்கிறோம். உங்கள் பெயரும் காலம் உள்ளளவும், இந்த ஆலயம் உள்ளளவும் நிலைக்கும். போய் வாருங்கள்...” என்றான்.

அவையினர் அனைவரும் சுய உணர்வு பெற்றவர்களாய், “மன்னர் ரணதீரர் வாழ்க” என்று மன்னனை வாழ்த்தி உரத்துக் குரல் எழுப்பினர். மகிழ்ச்சியின் அலைகள் அரசனின் அந்த திருச்சபையை நிறைத்தது.

Saturday, September 20, 2014

விருது வாங்கலையோ... விருது..!

Posted by பால கணேஷ் Saturday, September 20, 2014
லையுலகில் இப்போது விருது வழங்கும் சீசன் மீண்டும் ஆரம்பமாகி இருக்கிறது. THE VERSATILE BLOGGER என்கிற விருதானது எங்கிருந்தோ துவங்கி, ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடித்தவர்களுக்கு வழங்கி, விருது பெற்றவர்கள் நன்றிகூறி மற்றவர்களுக்கு அதைப் பகிர்ந்து... என்று வலையுலகம் சுறுசுறுப்பாகி இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் THE VERSATILE BLOGGER, AWSOME BLOGGER என்று விருதுகள் மழை அனைவரின் தளத்திலும் பொழிந்து ஓய்ந்திருந்தது.

எனக்குக் கிடைத்த பல விருதுகளை நான் என் தளத்தில் ஒட்டி அலங்கரிக்கவில்லை. அதற்குக் காரணம் இவை பற்றி எனக்கிருந்த மாறுபட்ட கருத்துக்களே.  அவற்றை விரித்துரைப்பதால் பலர் மனம் புண்படக் கூடுமே என்பதால் அப்போது நான் எதுவும் சொல்லவில்லை. இப்போதும் அப்படியே இருந்துவிடலாம் என்று எண்ணினாலும் மனசு கேட்கவில்லை. மாறி மாறி வரும் + மற்றும்- சிந்தனைகளின் ஊசலாட்டத்தின் ஊடேதான் இப்போது டைப்பிக் கொண்டிருக்கிறேன்.

+ விருதுகள் பகிரப்படறதனால பதிவர்களுக்கு உற்சாகம் கிடைக்குதா இல்லையா...? நம் படைப்புக்கான அங்கீகாரத்துக்கு ஏங்கித்தானே நாமல்லாம் எழுதவே செய்யறோம். அதுமாதிரி நாம நல்லா செயல்பட்டுட்டிருக்கோம்கறதுக்கு இந்த விருது ஒரு சாட்சியில்லையா...?

- விருதுங்கறது என்ன...? ஏதாவது ஒரு துறையில சாதனை பண்ணினவங்களுக்கோ, இல்ல தனித்திறமை படைச்சவங்களுக்கோ அவங்களைப் பாராட்டி வழங்கப்படறது. இங்க ஒரு விருதை எடுத்துக்கிட்டு பெருமாள் கோயில் புளியோதரை மாதிரி ஆளாளுக்கு பகிர்ந்துட்டிருந்தா அந்த விருதுக்கு என்ன  மரியாதை? அத்தனை பேர் ப்ளாக்லயும் இந்த விருது ஒட்ட வைக்கப்பட்டிருந்தா அதுக்கு என்ன வேல்யூ? ஒரு ஊர்ல இருக்கறவன் பூரா ரஜினிகாந்தா இருந்துட்டா ரஜினிக்கே வேல்யூ கிடையாதே....?

+ நான் விருதைக் குடுத்தவங்க அதை இன்னொரு அஞ்சு பேருக்கு பகிர்ந்தா, அந்த அஞ்சு பேர்ல எனக்கும் தெரியாதவங்க யாராச்சும் இருந்தா இப்ப அறிமுகமாயிடுவாங்கல்ல... இப்படி தொடர்ந்து போற சங்கிலியக் கவனிச்சா நிறையப் பதிவர்களோட அறிமுகம் கிடைச்சு வலையுலகத் தொடர்புகள் விரிவாகி இன்னும் நெருக்கமாத்தானே ஆகும்...? அது நல்லது தானே!

- ஏதாவது ஒரு போட்டி வெச்சு, அதுல ஜெயிக்கறவங்களுக்கு விருதுன்னு பண்ணினா, அதுல கலந்துக்கறவங்க லிஸ்டை வெச்சே நிறைய நட்பு வட்டம் பெருகுமே... அப்படி ஆண்டுக்கு நாலஞ்சு பேர் ஜெயிச்சால்ல அந்த விருதுக்கே சிறப்பு...? இல்ல, சிறப்பா செயல்படற ப்ளாக்கர்னு சிலரை நாமினேட் பண்ணி மத்த ப்ளாக்கர்ஸ் ஓட்டுப் போட்டு செலக்ட் பண்ணின ப்ளாகர்ஸ்க்கு கொடுத்தாலாவது நியாயம்..? இப்படி எல்லாரும் எல்லாருக்கும் சாக்லெட் தர்ற மாதிரி தர்றது என்ன நியாயம்...?

+ விருது கொடுக்கப்படுதுன்னா அதுக்குப் பின்னால அதை உனக்குத் தர்றவங்க உன் மேல வெச்ச அன்பும் மரியாதையும் இருக்கறது உன் கண்ணுக்குத் தெரியலயா...? அதை எப்படிக் குறை சொல்ல முடியும்...? உன்னை யாருக்காவது பகிரச் சொன்னாலும் அப்படி நீ அன்பு வெச்சிருக்கறவங்களுக்குத் தானே பகிர்வே...?

- விருதுகளை இப்படி அன்பின் காரணமா வழங்கறது சரிதானா...? இதுக்கு தங்களுக்குப் பிடிச்ச அன்பும் மரியாதையும் உள்ளவங்களுக்கு ஏதாச்சும் பட்டம் கொடுத்துப் பாராட்டலாம் இல்லையா..? சினிமாக்காரங்க புரட்சிங்கற வார்த்தைய அவனவன் விதவிதமா தன் பேருக்கு முன்னால சேர்த்துக்கற மாதிரி ப்ளாக் சம்பந்தப்பட்ட அடைமொழிகளைக் குடுத்துக்கிட்டா சிம்பிளா முடிஞ்சு போகுமே விஷயம்..!

ப்படி மாறிமாறி சிந்தனைகள் சுழன்று கொண்டுதான் இருக்கின்றன. அதனாலதான் என் தங்கை மைதிலி கஸ்தூரிரங்கனும், அன்பு நண்பர் மதுரைத் தமிழனும் வழங்கிய இந்த விருதை நான் இன்னும் யாருக்கும் பகிரவில்லை. இந்த இரண்டு அன்புள்ளங்களும் என்னைச் சரியாகப் புரிந்து கொண்டு மன்னிப்பார்கள் என்ற நம்பிக்கை  எனக்கு உண்டு. அந்த நம்பிக்கையுடன் அவர்களுக்குக் காட்டும் அன்பின் வெளிப்பாடாக இதை என் தளத்தில் வைக்கிறேன் சிலகாலம். இந்த விஷயத்தில் நான் ஒரு தெளிவுக்கு வர உங்களின் கருத்துக்கள் கலங்கரை விளக்காக வழிகாட்டும் என்று நம்பிக்கையுடன் வரப்போகும் கருத்துகளுக்காக ஆவலுடன் என் காத்திருப்பு. நன்றி.

Monday, September 15, 2014

மதுரைக்குப் போகலாம், வாரீகளா...?

Posted by பால கணேஷ் Monday, September 15, 2014
னைவருக்கும் வணக்கம். மதுரையில் அடுத்த மாதம் 26ம் தேதி நடக்க இருக்கும் மூன்றாமாண்டு வலைப்பதிவர்  திருவிழாவிற்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் நடந்து வருகின்றன. தமிழ்வாசி பிரகாஷ், திண்டுக்கல் தனபாலன் மற்றும் என் தளத்தில் பதிவர்களின் வருகையை உறுதி செய்து கொள்ளும்படியான படிவம் ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதனைப் பூர்த்தி செய்து இன்றைய தினம் வரையில் தங்களின் வருகையை உறுதி செய்திருக்கும் பதிவர்களின் பட்டியல் இதோ...

1. சிதம்பரம் என்ற சீனா (வலைச்சரம்), 2) தமிழ்வாசி பிரகாஷ் (தமிழ்வாசி), 3. பொன். தனபாலன் (திண்டுக்கல் தனபாலன்), கவிஞர். 4. திருமலை சோமு (thirumalaisomu.blogspot.com), 5. பகவான்ஜி (ஜோக்காளி), 5. பாலகணேஷ் (மின்னல் வரிகள்), 6. கவியாழி (கவியாழி), 7. sithayan sivakumar (விழிப்புணர்வு), 7. சங்கர இராமசாமி (கனிச்சாறு), 8. செல்வின் (அஞ்சாசிங்கம்), 9.வேணுகோபாலன் (சேட்டைக்காரன்), 10. சசிகுமார் (வந்தேமாதரம்), 11. ஜீவானந்தம் (கோவை நேரம்), 12. சித்தூர் முருகேசன் (அனுபவஜோதிடம்) , 13. கருப்பணன் (karuppanan), 14. நா.முத்துநிலவன் (வளரும் கவிதை), 15. சுரேஷ்குமார் (கடல் பயணங்கள்), 16. பாலாஜி (அநியாயங்கள்), 17. மு.கீதா (தென்றல்), 18. கா.ந.கல்யாணசுந்தரம் (கவிதைவாசல்), 18. முருகன் (gurumurugan.blogspot.com), 19.கருண்குமார் (வேடந்தாங்கல்), 20. யானைக்குட்டி (http://yanaikutty.blogspot.in), 20. கோவை ஆவி (பயணம்), 21. செல்வி ஷங்கர் (பட்டறிவும் பாடமும்), 21. வியபதி (ஏதாவது எழுதுவோம்), 22. இராய செல்லப்பா (செல்லப்பா தமிழ் டயரி), 23. முகமதுநவாஸ்கான் (99Likes (Tamil Computer Tips), 24. கரந்தை ஜெயக்குமார் (கரந்தை ஜெயக்குமார்), 25. கேபிள் சங்கர் (கேபிள் சங்கர்), 26. ஜெய் (பட்டிகாட்டான் பட்டணத்தில்), 27. இ.வரதராஜபெருமாள் (குமாரபாளையம் குடமுருட்டி), 28. திலிப் நாராயணன் (அழகிய நாட்கள்), 29. J. நிஷா (யாமிதாஷா), 30. புலவர் இராமாநுசம் (புலவர் குரல்), 31. மதுமதி (மதுமதி.காம்), 32. வெங்கட் நாகராஜ் (சந்தித்ததும் சிந்தித்ததும்), 33. ம.கோகுல் (கோகுல் மனதில்), 34. விமலன் (சிட்டுக்குருவி), 34. ஆர்.வி.சரவணன் (குடந்தையூர்) 35. முனைவர் துரை.மணிகண்டன் (மணிவானதி), 36. துளசி கோபால் (துளசிதளம்), 37. விஜயன் துரை (கடற்கரை), 38. சி.வெற்றிவேல் (இரவின் புன்னகை), 39. சரவணன் (ஸ்கூல் பையன்), 40. கவி. செங்குட்டுவன் (கல்விக்கோயில்), 41. எஸ்.விஜயநரசிம்மன் (svijayanarasimhan.blogspot.in), 42. ஸபி (சக்கரக்கட்டி), 43. சம்பத்குமார் (தமிழ் பேரண்ட்ஸ்), 44. முனைவர் நா.சிவாஜி கபிலன் (தூரிகை கபிலன்), 45. அரசன் (கரைசேரா அலை), 46. ரூபக் ராம் (சேம்புலியன்), 47. தி தமிழ் இளங்கோ (எனது எண்ணங்கள்), 48. வெ.கோபாலகிருஷ்ணன் (மதுரகவி), 49. அ.ரா.சங்கரலிங்கம் (உணவு உலகம்), 50. அகிலா (சின்ன ச்சின்ன சிதறல்கள்), 51. கோவிந்தராஜ்.வா (தமிழன்), 52. பொய்யாமொழி (தமிழ் கம்ப்யூட்டர் நண்பன்), 53. அறிவு விக்னேஷ்குமார் (தோழன்), 54. சிவபார்கவி (சிவபார்கவி), 55. வஹாப் ஷாஜஹான் (டாஸ்மாக் செய்திகள்), 56. நிவாஸ் (medimiss), 57. நக்கீரன்.ஜெ (நாய் நக்ஸ்), 58. சைதை அஜீஸ் (saidaiazeez), 59. பரமேஸ்வரன் (கொங்குதென்றல்).

இதுவரை பதிவு செய்து கொள்ளாத நண்பர்கள் கீழ்வரும் இணைப்புகளில் சென்று தங்கள் வருகையைப் பதிவு செய்து கொள்ளவும். 




எத்தனை பேர் வருவார்கள் என்பதை உத்தேசமாகக் கணக்கிட முடிந்தால்தான் சிறப்பாக வரவேற்பதற்கும் நிகழ்ச்சியைத் திட்டமிடவும் ஏதுவாக இருக்கும். ஆகவே, இதைத் தவறாமல் செய்யவும்.



நேற்று புலவர் இராமாநுசம் ஐயா அவர்களின் வீட்டில் சென்னைப் பதிவர்கள் (சிலர் வர இயலவில்லை) சந்தித்து மதுரை விழாவிற்குச் செல்வது பற்றிப் விவாதிக்கப்பட்டது.  ஒரு பேருந்தை அமர்த்திக் கொண்டு விழா நடப்பதற்கு முதல் நாள் மதுரையில் இருக்கும்படி புறப்படலாம் என்பது திட்டம். கீழ்க்காணும் பதிவர்களின் அனைவரும் சென்னையிலிருந்து பேருந்தில் புறப்படுவது தீர்மானமாகி இருக்கிறது.

1) புலவர் இராமாநுசம், 2) மதுமதி, 3) கே.ஆர்.பி.செந்தில், 4) பாலகணேஷ். 5) மெட்ராஸ்பவன் சிவகுமார், 6) வேணுகோபாலன் (சேட்டைக்காரன்), 7) கவியாழி கண்ணதாசன், 8) இராய செல்லப்பா, 9) சீனு, 10) சரவணன் (ஸ்கூல் பையன்), 11) ஆர்.பி.ஆதித்யா (போலி பன்னிக்குட்டி). 12) அஞ்சாசிங்கம் செல்வின், 13) பிலாசபி பிரபாகரன். 14) சரவணன் (உண்மைத்தமிழன்). 15) வேடியப்பன் (டிஸ்கவரி).

சென்னைப் பதிவர்களில் சிலர் தங்கள் வருகையை உறுதி செய்ய காலஅவகாசம் கேட்டுள்ளனர். நேற்றைய சந்திப்புக்கு வர இயலாத சிலரையும் தொடர்பு கொண்டு பேச வேண்டியிருக்கிறது. ஆகவே, எண்ணிக்கை நிச்சயம் இன்னும் கூடும். நேற்றைய கூட்டத்திற்கு வராத, சென்னையிலிருந்து எங்களுடன் கிளம்பிவர விருப்பம் உள்ள பதிவர்கள் அனைவரும் bganesh55@gmail.com என்கிற என் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் ஒப்புதலைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.  சரியானபடி திட்டமிடுவதற்கு  அது உறுதுணையாக இருக்கும். நன்றி.

Thursday, September 11, 2014

மின்னல் திரை : மேரிகோம் (இந்தி)

Posted by பால கணேஷ் Thursday, September 11, 2014
மேரிகோம் - இந்தியாவுக்கு உலக அளவிலான பெண்கள் பாக்ஸிங் பிரிவில் ஐந்து முறை தங்கமும், ஒலிம்பிக்ஸில் ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்று தந்த வீராங்கனை. ‘மக்னிபிஷியன்ட் மேரி’ என்று விளையாட்டு ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் தன் சுயசரிதையை ‘அன்பிரேக்கபிள்’ என்ற தலைப்பில் எழுதி சென்ற ஆண்டு வெளியிட்டார். பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவுகளிலிருந்து விடுபட, நம்பிக்கை பெற, ‘பைட் கிளப்’ ஒன்றை தான் பிறந்த மணிப்பூரில் நடத்தி வருகிறார் மேரிகாம். அதனை பிரபலப்படுத்த பிராண்ட் அம்பாஸிடராக பிரியங்கா சோப்ரா இருக்க வேண்டுமென்று விரும்பித் தேர்ந்தெடுத்தார் மேரிகாம். இப்போது பிரியங்கா சோப்ராவின் நடிப்பில் அவரது வாழ்க்கை திரைப்படமாக வெளியாகி இருக்கிறது.


உண்மையின் மேல் சற்று புனையப்பட்ட இப்படக்கதையைச் சுருக்கமாகப் பார்க்கலாம். மணிப்பூரின் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த மேரிகாமுக்கு பாக்ஸிங் விளையாட்டு சிறு வயதிலிருந்தே மிகப் பிடிக்கிறது. வாலிபியான மேரிகோம் குடும்பத்திற்காக பந்தயம் கட்டும் தெருச் சண்டையில் ஜெயிக்கிறார். அங்கு அறிமுகமாகும் இளைஞனுடன் நட்பாகிறார். ஒரு சில்லறை சண்டையின் மூலம் பாக்ஸிங் கோச்சின் அறிமுகம் கிடைக்க, பாக்ஸிங் பயிற்சியைத் துவங்கி, இந்தியாவிற்காக மூன்று முறை தங்கம் வெல்கிறார். அறிமுகமான இளைஞன் இப்போது காதலாக, கல்யாணம் என்று முடிவெடுக்கையில் ’கல்யாணம் என்பது ஸ்போர்ட்ஸின் முடிவு’ என்று கோச்சின் கோபத்துக்கு ஆளாகிறார். அதை மீறி கல்யாணம் செய்து. இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார். பாக்ஸிங் ஈர்க்க, இரண்டாண்டுகளுக்குப் பின் கோச்சைச் சமாதானம் செய்து மீண்டெழுந்து வந்து பதக்கம் பெற பயிற்சி செய்கிறார். இதில் அவருக்கு வந்த தடைகள் என்னென்ன, அதை எப்படி வென்று பதக்கத்தை இந்தியாவுக்காக வென்று தந்தார் என்பதை 124 நிமிடங்களில் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

போலீஸ் அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் போன்று வாழ்கின்ற செலிப்ரிட்டிகளின் கதைகளைப் படமாக எடுக்கையில் நிஜத்தைவிட நிழலை சற்நே மிகைப்படுத்தித் தான் காட்ட வேண்டியதிருக்கும்.  இங்கே கூடீயவரை நிஜத்துடனேயே பயணித்திருக்கிறார்கள். அதனால் படத்தில் நாம் எதிர்பார்க்கும் வலிந்து திணிக்கப்படூம் திருப்பங்கள் எதுவும் இல்லாத நேரடித் திரைக்கதை சற்றே போரடிப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது - கிளைமாக்ஸ் நீங்கலாக. 

பாக்ஸிங்கிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கைக்குத் திரும்பி விட்டாலும் மனமெல்லாம் அது நிறைந்து ததும்பியிருக்க, தன் பழைய நியூஸ் கட்டிங்குகளை வெட்டி ஒட்டி மேரிகோம் ஆல்பம் தயாரிப்பது, தான் வென்ற மெடல்களை எடுத்து அணிந்து கொண்டு ரசிப்பது, பஸ்ஸில் பயணிக்கையில் சந்திக்கும் குட்டி ரசிகைக்கு கண்களில் நீர் திரையிட ஆட்டோகிராப் போட்டுத் தருவது என்று பல காட்சிகள் கவிதை மாதிரி அழகாக அமைந்து வசீகரிக்கின்றன. 

பிரியங்கா  சோப்ரா மேரிகோம் கேரக்டரைத் திரையில் உயிர்ப்பித்திருக்கிறார்.  ரியல் விளையாட்டு வீராங்கனைகள் பயிற்சி செய்வது போன்ற பயிற்சிகளை அவர் திரையில் செய்து காண்பிக்கையில் நமக்கு வலிக்கிறது. ஒரு காட்சியில் தலைமுடியிழந்து மொட்டை போட்டுக் கொண்டு வருகிற அளவுக்கு அந்த வீராங்கனைக்கான நடிப்பிற்கு நியாயம் செய்திருக்கிறார். செலக்ஷன் கமிட்டி மெம்பரிடம் மன்னிப்புக் கடிதம் கொடுக்க (மனமின்றி)ச் செல்ல, அங்கே அவர் பலர் முன்னிலையில் படித்துக் காட்டும்படிச் சொல்லி அவமானப்படுத்துகிற காட்சிபும் பிரியங்காவின் நடிப்பும் நன்று. அப்பா, கோச் மற்றும் கணவன் கேரக்டர்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் அளவிற்கு நிறைவாகச் செய்திருக்கின்றனர். என்றாலும் படம் முழுக்க வியாபித்திருப்பது மேரிகோமான பிரியங்காதான்.

இந்தியாவின் சார்பாக உலகப் போட்டிகளுக்கு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில் எப்படி பாலிடிக்ஸும் ஈகோவும் விளையாடுகிறது என்பதைக் காட்டும் காட்சிகளை மேலாகத் தாண்டிச்  சென்று விட்டார்கள். இதை மையச்சரடாக எடுத்துக் கொண்டு இன்னும் விரிவாக அலசியிருந்தால் இன்னும் படம் உயரம் தொட்டிருக்கும், அழுத்தமாக மனதில் பதிந்திருக்கும் என்பது என் எண்ணம். ‘நான் மணிப்பூரி என்பதற்காக மறுக்கிறீர்களா?’ என்று சீறும் மேரிகாம், ‘மூன்று முறை தங்கம் வென்ற எனக்கு ஹவில்தார் வேலைதான் உங்கள் அரசு தருமா?’ என்று சீறும் மேரிகோம்... ‘கிரிக்கெட்டைக் கொண்டாடுகிற நீங்க ஏண்டா 5 தங்கம் ஜெயிச்ச எங்களை மாதிரி வீராங்கனைகளைக் கண்டுக்க மாட்டேங்கறீங்க?’ என்று ஆக்ரோஷமாகச் சீறியிருக்க வேண்டாமோ...? அதேபோன்று கிளைமாக்ஸ் காட்சியும் ஒரு டெம்ப்ளேட்டான விஷயம்தான். எதிராளியிடம் கன்னாபின்னாவென்று அடி வாங்கி கதாநாயகன்/நாயகி விழுவதும் பின் எழுந்து எதிரியை துவம்சம் செய்து ஜெயிப்பதும் காலம் காலமா பார்த்துச்  சலிச்ச விஷயங்கள்டே.... இன்னுமா....?

சஞ்சய் லீலா பன்ஸாலியின் தயாரிப்பில் ஓமங்குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் இதுபோல சின்னச் சின்னக் குறைகளைக் கண்டுபிடிக்க முடிகிறது என்றாலும் அதைத்தாண்டி நல்ல ‘ஃபீல்குட்’ படமாக வந்திருக்கிறது. அழகான ஒளிப்பதிவும், உறுத்தாத பின்னணி இசையும் துணை செய்ய  (இந்தி) மொழி புரியா விட்டாலும் கதை புரியும் வண்ணம் எளிமையாக இருப்பது சிறப்பு.

மொத்தத்தில் : நம்ம கோவை ஆவி சொன்னார்... “இதுமாதிரியான முயற்சிகளை நாமல்லாம் என்கரேஜ் பண்ணணும் ஸார்... அப்பத்தான் போகப்போக இதைவிட நிறையப் படங்கள் கிடைக்கும்.” என்று. ஆவியின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். கூடவே - பிரியங்கா சோப்ராவின் அசுர உழைப்பிற்காகவும் அவசியம் பார்க்கலாம் என்று பரிந்துரைக்கிறேன்.

Saturday, August 30, 2014

இந்த ஆண்டு இரண்டு தீபாவளிகள்..!

Posted by பால கணேஷ் Saturday, August 30, 2014
மிழ்ப் பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்...

கடந்த 2012ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ம் நாள் அன்றும், 2013 செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அன்றும் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர் சந்திப்புகளை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. விழாவின் இனிய நினைவுகளை நண்பர்கள் பகிர, முதல் ஆண்டில் கலந்து கொள்ள இயலாமல் போன அனேக பதிவர்கள் ஆர்வமுடன் இரண்டாம் ஆண்டின் சந்திப்பில் பங்கேற்று அசத்தினார்கள். அதே போல் மூன்றாம் ஆண்டிலும் அசத்துவதற்கு இப்போதிருந்தே தயாராகுங்கள் நண்பர்களே..!



மூன்றாம் ஆண்டு பதிவர் சந்திப்பிற்கான வேலைகள் கோலாகலமாக ஆரம்பித்து விட்டன... சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்து மங்காப் புகழ் பெற்ற மதுரை நகரில் இம்முறை நம் மூன்றாமாண்டு சந்திப்பு நடைபெற உள்ளது.

நாள் : அக்டோபர் 26-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை

இடம் : மாரியம்மன் தெப்பக்குளம் மேலவீதியிலுள்ள கீதா நடனகோபால நாயகி மந்திர், மதுரை.

அக்டோபர் 23ம் நாள் உலகெங்கும் மக்கள் அனைவரும் மகிழ்வுடன் கோலாகலமாகக் கொண்டாடும் தீபாவளித் திருநாள். அதைத் தொடர்ந்து மூன்று தினங்களில் 26ம் தேதியன்று வலைப்பதிவர்களான நம் அனைவருக்குமான மற்றொரு தீபாவளித் திருவிழாவாக அமைய இருக்கிறது இந்தப் பதிவர் சந்திப்பு. அந்தப் பண்டிகையைக் கொண்டாடிய அதே உற்சாகத்தை விடாமல் பற்றிக் கொண்டு, அலைகடலெனத் திரண்டு வந்து மதுரையில் இன்னொரு சித்திரைத் திருவிழா ஆரம்பித்து விட்டதோ என்று மதுரைவாசிகள் வியக்கும் வண்ணம் அசத்த வேண்டும் நாம்... வாருங்கள் வலைப்பதிவர்களே..!

விழா நிகழ்வு என்றும் நினைவில் நிற்கும் ஒன்றாக அமையவும், வேறு சில இனிய ஆச்சர்யங்களை உங்களுக்கு விழா நாளன்று வழங்கவும் மதுரை வலைப்பதிவர்களின் குழு சுறுசுறுப்பாகச் செயல்படத் தொடங்கி விட்டனர்.  இந்த வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவில் பங்கேற்கும் பதிவர்கள் அனைவரும் கீழுள்ள படிவத்தை நிரப்பி உங்களின் வருகையை உறுதிசெய்ய அன்புடன் வேண்டுகிறோம்...


படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் 15.10.2014 ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலோ, மேலும் விவரங்கள் தேவைப்பட்டாலோ தொடர்புக்கு:- திண்டுக்கல் தனபாலன் - 9944345233 - dindiguldhanabalan@yahoo.com தமிழ்வாசி பிரகாஷ் -9080780981 - thaiprakash1@gmail.com

நூல் வெளியீடு : பதிவர்கள் தங்களின் நூல்களை இந்த மாபெரும் நிகழ்ச்சியில் வெளியிடலாம். அவ்வாறு நூல் வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 10.10.2014க்குள் விவரங்களை கீழ்கண்ட நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள். சீனா ஐயா (வலைச்சரம்)திண்டுக்கல் தனபாலன் - 9944345233 - dindiguldhanabalan@yahoo.com

அன்பளிப்பு : இந்தச் சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெற பொருளாதாரம் மிக முக்கியமானது. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பதிவர்கள், திண்டுக்கல் தனபாலன் மற்றும் தமிழ்வாசி பிரகாஷ் அலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும். பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்துத் தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும்.

மேலும் விரிவான தகவல்கள் மற்றும் விபரங்கள் அடுத்தடுத்த பதிவுகளில் வெளியிடப்படும். பதிவுலக நண்பர்கள் அனைவரும் இந்த விபரங்கள் அனைத்தையும் தங்களது வலைப்பதிவில் எழுதி உங்கள் நட்பு வட்டத்திற்கும், அனைத்து பதிவர்களுக்கும் விஷயத்தை எடுத்துச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி. சந்திப்போம்..!

=================================================================

விழா நடைபெறும் இடத்தை நான் க்ளிக்கிய படம் இது. இந்த ஹால் விசாலமாகவும் நிறைய ஜன்னல்களுடனும் இருப்பதால் நல்ல காற்றோட்டம். தவிர, விழா நடக்கும் ஹாலைச் சுற்றி அனைத்துப் பதிவர்களும் யானையில் வந்தால்கூட கட்டுவதற்குத் தேவையான அளவு விசாலமான பார்க்கிங் வசதி இருக்கிறது. அதுவும் தவிர, நிழலில் நின்று பதிவர்கள் கலந்துரையாடி மகிழ போதிய இடமும் இருக்கிறது. ஆகவே... அனைவருக்கும் நிறைவைத் தரும் வண்ணம் இந்த ஆண்டின் நிகழ்வுகள் அமையும் என்பது திண்ணம்.

=================================================================

Monday, August 11, 2014

ராமலக்ஷ்மியின் ‘அடைமழை’

Posted by பால கணேஷ் Monday, August 11, 2014
முத்துச் சரம் நமக்குத் தொடுத்து அளிக்கும் ராமலக்ஷ்மி ராஜன் அவர்களைத் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை.  பத்திரிகைகளில் (தளத்தில்) பேனாவால் கவிதை எழுதுவார், தன் காமிராவினாலும் அதை எழுதுவார், கச்சிதமாய் சிறுகதைகளும் எழுதுவார், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு அழகாக மொழிபெயர்ப்பும் செய்வார். மொத்தத்தில் பொறாமை கொள்ளச் செய்கிற பன்முகப் படைப்பாளி. அவர் எழுதிய ‘அடைமழை’ என்கிற சிறுகதைத் தொகுப்பை சென்ற புத்தகக் கண்காட்சியில் வாங்கி, அடுத்து வந்த மாதத்தில் வாசித்து முடித்து விட்டேன். என்றாலும் அதைப் பற்றிப் பேச  இப்போதான் சந்தர்ப்பம் கிடைத்தது.

ராமலக்ஷ்மி  இயற்கை வர்ணனை, கதாபாத்திர வர்ணனை என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாது, நம்மை நேரடியாகக் கதைக்குள் இழுத்துச் சென்று விடுகிற எளிமையான எழுத்து நடை கைவரப் பெற்றிருக்கிறார். அவர்தம் கதை மாந்தர்களும் 90 சதம் அடித்தட்டு மக்களாகவே அமைந்து விடுவது இப்படியான எழுத்து நடைக்கு கூடுதல் வேகத்தை அளிக்கிறது. ‘அடைமழை’ தொகுப்பில் இடம் பெற்றுள்ள 13 கதைகளின் மையச்சரடாக அமைந்திருப்பது மனிதம்தான். சக மனிதர்களின் மீதான அக்கறை, சமூகத்தின் மீதான அக்கறை என்று நாம் கவனிக்க வேண்டிய, கவனிக்கத் தவறுகிற விஷயங்களின் மீது விரல் நீட்டுகின்றன இவரின் கதைகள். அவற்றைச் சில வரிகளில் பார்த்து விடலாம்....

முதல் சிறுகதை ‘வசந்தா’ குழந்தைத் தொழிலாளர்கள் எப்படி உருவாகிறார்கள். அதைப் பற்றிய விழிப்புணர்வு பரவி விட்டதாக நாம் நினைக்கும் இன்றையச் சூழலிலும் எவ்விதத்தில் அது நம்முடன் இருக்கிறது என்பதை அழகாகச் சொல்கிறது. இரண்டாவது கதையான ‘பொட்டலம்’ வசதிக் குறைவான பெற்றவர்கள் நல்ல கல்வியை விரும்பி பெரிய பள்ளியில் தங்கள் மகனைப் படிக்க வைப்பதால் அந்தச் சிறுவனுக்கு எழும் மனவியல் பிரச்னையையும் கூடவே ஆசிரியைகள் நடந்து கொள்ளும் விதத்தையும் கண்முன் படம் பிடிக்கிறது. மூன்றாவது கதை ‘வயலோடு உறவாடி’ விவசாய நிலங்களை மறந்து. துறந்து வாழும் நம்மை கையைப் பிடித்து அங்கே இழுத்துச் சென்று அதன் அருமையை மனதில் உணரச் செய்கிறது.

நான்காவது சிறுகதை ‘ஈரம்’ எனக்கு மிகப் பிடித்திருந்தது. கணவனின் விருப்பத்திற்காக வேலையை விட முடியாமல் குழந்தையை ‘க்ரச்’சில் விட்டுவிட்டுச் செல்லும் ஒரு பெண்ணின் குடும்ப, அலுவலகச் சூழல்கள் இவரின் எழுத்தில் ஒரு குறும்படமாய் மனதில் விரிகிறது. அந்தப் பெண்ணின் உணர்வுகள் படிப்பவரையும் தொற்றிக் கொள்கிறது. ஐந்தாவது சிறுகதை ‘அடையாளம்’ தன் பெயரை எவரும் விசாரிக்கக் கூட செய்யாமல் வாழும் ஒரு எளியவனின் மன உணர்வுகளைப் பிரதிபலிக்கிற சிறந்த சிறுகதை. ஆறாவது சிறுகதை ‘பயணம்’ கூட்டுத் தொழில் செய்யும் நண்பன் திட்டியதால் மன உளைச்சலுடன் ரயிலில் பயணிக்கும் ஒருவனுக்கு ஏற்படும் திடுக் அனுபவத்தை விளக்கி எதிர்பாராத முடிவினால் புன்னகைக்க வைக்கிறது. 

ஏழாவது சிறுகதை ‘ஜல்ஜல் எனும் சலங்கையொலி’ அவரது தளத்தில் படிக்கையிலேயே மனதில் தனியிடம் பிடித்த ஒன்று. படித்து முடிக்கையில் சுப்பையாத் தாத்தாவிடம் கதை கேட்க வேண்டுமென்ற ஏக்கம் என் மனதிலும் வந்தது. அவர் ஏன் அந்த ‘ஜல்ஜல் மாட்டுவண்டி’க் கதையை கடைசிவரை சொல்லவே இல்லை என்பதை நீங்கள் படித்துத் தெரிந்து கொண்டால்தான் சிறப்பு. எட்டாவது சிறுகதை ‘அடைமழை’யை நட்சத்திரக் கதை என்றே சொல்லலாம். தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் ஒருவன். போலீஸ்காரர் ஒருவரால் துரத்தப்பட்டு, அவமானமடைந்து வாழ்க்கையின் முன்னேற சபதம் செய்து போராடுகிறான். சற்றே வளர்ந்துவிட்ட நிலையில் நாணயத்தின் மற்றொரு பக்கத்தைப் பார்ப்பது போல அந்தப் போலீஸ்காரரின் கோணத்தில் அவர்கள் வாழ்வை அவன் பார்க்க நேரிடுகிறது. அங்கே மனிதம் மலர்கிறது.

ஒன்பதாவது சிறுகதை ‘சிரிப்பு’ உம்மணாமூஞ்சியான ஒருவனை சிரிக்கச் செய்வது எது என்பதை விவரித்து நம் உதடுகளிலும் புன்னகையை ஒட்டுகிறது. பத்தாவது சிறுகதை ‘பாசம்’ பிற்பட்டோருக்கான கோட்டாவில் ஸ்காலர்ஷிப்பில் மகனை பெரிய படிப்பு படிக்க அனுப்பிவிட்டு அவ்வப்போது அவன் கேட்கும் பணத்தை அனுப்ப அந்தப் பாசமுள்ள பெற்றோர் படும் பாட்டை ரத்தமும் சதையுமாக வர்ணிக்கிறது. இச்சிறுகதையின் முடிவு கண்களை வேர்க்கச் செய்து விடுகிற ஒன்று. பதினொன்றாவது சிறுகதை ‘உலகம் அழகானது’ எனக்கு மிகப் பிடித்தமான சிறுகதை. பார்க்கில் காலை நடைபயிலும் இரண்டு நண்பர்கள் அருகம்புல் விற்கும் வியாபாரிகளிடம், தன் மகனைப் படிக்க வைப்பதற்காக அதே தொழில் நடத்தும் ஒருவனுக்காகப் பரிந்து பேச, அவர்களுடன் தகராறு செய்ய நேரிடுகிறது. பின்னர் அந்த வியாபாரிகளின் மனமாற்றம் நேர்ந்து அந்த வியாபாரிக்கும் ஓரிடம் கிடைக்கிறது அங்கு. இந்தச் சிறுகதையின் உள்ளீடான மனிதநேயமும், பாஸிட்டிவ் அப்ரோச்சும் சேர்ந்து ராமலக்ஷ்மியின் மிகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக்கி விடுகிறது இதை.

பன்னிரண்டாவது சிறுகதை ‘இதுவும் கடந்து போகும்’ கூட பாஸிட்டிவ் அப்ரோச் கொண்ட கதைதான். ‘தானே’ புயலின் விளைவாக ஏற்பட்ட பாதிப்புகளின் பின்ணணில் துவங்கி உணர்வுகளைப் பேசும் கதை. படித்துத்தான் அதை நீங்கள் அனுபவிக்க முடியும். பதிமூன்றாவது சிறுகதை ‘அடைக்கோழி’ மருமகளின் விருப்பத்துக்கு மாறாக மாமியார் வளர்க்கும் கறுப்பி என்கிற கோழியையும் மாமியார்  உடல்நிலை மோசமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட பின் அந்த அடைக்கோழி என்னாகிறது என்பதையும் விவரிக்கிறது. இதுவும் நுட்பமான உணர்வுபூர்வமான கதைகளில் ஒன்றாகக் குறிப்பிட வேண்டியது.

நான் தமிழில் ‘சுதாரித்துக் கொண்டு’ என்று வார்த்தை இருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறேன். புத்தகம் பூராவிலும் ‘சுதாகரித்துக் கொண்டு’ என்றே வருகிறது. (சுதாரி - சரியா, சுதாகரி - சரியா?) பேச்சு வழக்கில் எது சரியான சொல் என்பது சரியாகத் தெரியவில்லை. யாராவது தமிழ் அறிஞர்களிடம் கேட்டுத்தான் தெளிவு பெற வேண்டும். பார்க்கலாம்...

மொத்தத்தில் ‘அடைமழை‘ தொகுப்பைப் படித்து முடிக்கையில் உங்களுக்கு ஒரு மனநிறைவும், கூடவே லேசாய் மனதில் கனமும் ஏற்படுவதும், சிந்தனைகள் கிளறப்படுவதும் நிச்சயம் நடக்கக் கூடிய விஷயங்கள். என்னைப் பொறுத்த வரையில் இதுபோன்ற நல்ல கதைகள் சிலவற்றை நாமும் எழுதியாகணும் என்று மனம் உறுதி கொண்டது. தொப்பிகள் இறக்கப்பட்டன (ஹாட்ஸ் ஆஃப்-க்கு தமிழ்.. ஹி... ஹி...) ராமலக்ஷ்மி மேடம்!

Thursday, August 7, 2014

மொறு மொறு மிக்ஸர் - 26

Posted by பால கணேஷ் Thursday, August 07, 2014
ண்பர்கள் தினத்தன்று சென்னைக்கு வந்திருந்த, விமர்சன உலகம் என்ற தளத்தில் எழுதிவரும் மாக்னேஷ்-ஐ நான், சீனு, ஸ்.பை. மூவரும் சந்திக்க நடேசன் பார்க் சென்றோம். பார்க் வாசலை நாங்கள் அடைந்த நேரம் சிவப்பாக ‘மொபைல் போலீஸ் ஸ்டேஷன்’ என்று பெயர் பொறித்த பெரிய வேன் ஒன்று பார்க் வாசலில் வந்து நின்றது. ‘மொபைல் கோர்ட்’ பாத்திருக்கிறோம்... இதென்ன மொபைல் போலீஸ் ஸ்டேஷன் என்கிற வியப்புடன் பார்த்தோம்.  “சரிதான்... ரோட்ல பிடிக்கறவங்களை ஸ்டேஷன் வரைக்கும் கொண்டு போறதுக்குக் கூட பொறுமையில்லாம வேன்லயே வெச்சு வெளுக்கப் போறாங்களா?”என்றேன் நான். பார்க்கினுள் சென்று சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்த சமயம்... அந்த போலீஸ் வேனிலிருந்து மெகாபோன் வைத்து பேசுவது மாதிரி சத்தம் கேட்க, பொதுஜனங்கள் நிறையப் பேர் வேனின் அருகில் சென்று நிற்பதையும் பார்க்க முடிந்தது. வாசலுக்கு வந்தோம்.


அட.. வேனின் பின்புறத்தில் ஒரு ஸ்கிரீன் கட்டி, ப்ரொஜக்டர் வைத்து படம் காட்டிக் கொண்டிருந்தார்கள். கொலை மற்றும் கொள்ளைக் கேஸ் ஹிஸ்டரிகள் மூன்றை குறும்படமாக எடுத்து, எப்படியெல்லாம் குற்றவாளிகளுக்கு நம் இயல்பான பேச்சின் மூலம் க்ளூ கொடுக்கிறோம், எப்படியெல்லாம் தனியே இருக்கும் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் விதமாக காட்டிக் கொண்டிருந்தார்கள். நடுநடுவே நடிகர் நாஸர் தலைகாட்டி அட்வைஸிக் கொண்டிருந்தார்.

டாகுமெண்ட் படம்தானே என்று ஏனோதானோ என்று எடுக்காமல் விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் பார்ப்பது போன்ற உணர்வு வரும்படி சிரத்தையாக எடுத்திருந்தார்கள் குறும்படத்தை. ஒரு பெண் போலீஸ் அதிகாரி படத்தைப் பற்றிய கருத்தை எழுதித் தரும்படி லெட்ஜர் ஒன்றை நீட்டினார். நானும் சீனுவும் எங்கள் கருத்தைப் பதிந்தோம். ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்று சொல்லப்படும் வாசகத்தை மெய்ப்பிக்கும் விதமாக மக்களுடன் நெருங்கி வந்து காவல்துறை செய்திருக்கும் இந்த ஏற்பாடு எங்களுக்கு ரொம்பவே பிடித்திருந்தது.

====================================================

“நான் இன்று கதை சொல்ல வரவில்லை. தமிழில் உள்ள சிறுகதை இலக்கியத்தைப் பற்றிச் சொல்லத்தான் வந்திருக்கிறேன். அதற்கு பூர்வ பீடிகையாக சிறுகதை என்றால் என்ன என்பதைச் சிறிது கவனித்துக் கொள்வோம். சிறுகதையின் முக்கிய அம்சம், அதில் ஒரேயொரு சம்பவம்தான் இருக்க வேண்டும். அந்தச் சம்பவத்தை வெறும் வளர்த்தல் இல்லாமல், வேறு சம்பந்தமற்ற விஷயங்களுக்குப் போகாமல் நேரே நெடுகச் சொல்லிக் கொண்டு போனால் அது நாலு வரியாக இருந்தாலும் சிறுகதை தான்; நாற்பது பக்கங்கள் வந்தாலும் சிறுகதைதான்....”

-ஆனந்த விகடன் 1939ம் ஆண்டு இதழில் இப்படிச் சொல்பவர் கல்கி அவர்கள்.

====================================================

ரம்ப தினங்களில் பக்கங்களை ப்ளாக் எடுத்து ஓட்டி புத்தகம் தயாராகும். பின்னாளில் ஈயத்தில் எழுத்துக்களைக் கோர்த்து கம்போஸ் செய்து அச்சாகின. அதன்பின் கம்ப்யூட்டரில் ப்ரிண்ட் அவுட் எடுத்து, அதை வெட்டி ஒட்டி பிரிண்டுக்கு அனுப்பும் நிலை. இப்யோதைய நவீன கம்ப்யூட்டர்களினால் வெட்டி ஒட்டுகிற வேலை இல்லாமல் மொத்தப் பக்கங்களும் கம்ப்யூட்டரிலேயே வடிவநைத்து ப்ரிண்டிங்கிற்கு அனுப்பிவிட முடிகிறது. இத்தனை முன்னேறிய நிலையில் புத்தகங்கள் தயாராகி நம்மை வந்தடைந்து கொண்டிருக்க இதன் அடுத்த பரிணாமம் ஒன்றும் தற்போது அரங்கேறியுள்ளது.

புத்தகத்தைத் தயாரித்து அதை அச்சிடாமல் ஈபுக் என்ற பெயரில் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் போனில் படிக்கும் விதமாக எளிய கட்டணத்தில் வழங்குவது என்ற முறைதான் அது. பேப்பர் மிச்சம், அச்சிடும் செலவு மிச்சம் என்பதால் பெரிய பெரிய புத்தகமாக இருந்தாலும் குறைந்த விலையில் தரமுடியும் இந்த முறையில். அப்படி அரவிந்த் சச்சிதானந்தம் என்பவர் எழுதிய ‘தட்பம் தவிர்’ என்ற க்ரைம் நாவலை சமீபத்தில் வாங்கி (மொபைலிலேயே) படித்தேன். கொலை, விசாரணை, மர்மம், அடுத்த கொலை என்று விறுவிறுப்பாகக் கொண்டு சென்று ஏமாற்றாத முடிவுடன் அமைந்த அந்தக் கதையை ஒரே நாளில் படித்து முடித்து விட்டேன். இங்கே க்ளிக்கி நீங்களும் வாங்கிப் படிக்கலாம். ஹாட்ஸ் ஆஃப் டு மிஸ்டர் அரவிந்த் சச்சிதானந்தம். இதைப் படிச்சதும் நாமளும் இப்படி ஈ புத்தகம் தயாரிச்சு வெளியிட்டா என்னன்னு ஆசை வந்துடுச்சு. முதாலாவதா சீனு வைத்த காதல் கடிதப் போட்டிக்கு வந்த சுவாரஸ்ய கடிதங்களைத் தொகுத்து பளிச்சென்று கலர் ஈ புத்தகமாக வெளியிடலாம் என்று எனக்கு ஆசை. சீனுவும். அப்பாதுரை ஸாரும் பச்சைக்கொடி காட்டினால் தயாராகிடும்.

====================================================

சீனாவின் நான்ஜிங் நகரத்தில் இருக்கிறது அழுகாச்சி கடை. அங்கே போனால் நீங்கள் உங்கள் பிரச்னைகளை நினைத்து உங்கள் இஷ்டத்துக்கு கத்திக் கதறி அழுதுவிட்டு வரலாம். கையில் கிடைத்ததை தூக்கிப் போட்டு உடைத்து உங்கள் கோபத்தையும் வெளிப்படுத்தலாம். இதற்காக ஒரு மணி நேரத்துக்கு ஆறு டாலர் வசூலிக்கிறார்கள். அழுகாச்சி கடைகளைக் கண்டுபிடித்தவர் லுவோ ஜன் என்பவர். இப்போது இந்த ஐடியா சீனாவில் வேகமாகப் பரவி வருகிறது. ஆங்காங்கே ஓரிரு அழுகாச்சி கடைகள் இதேபோல் வந்து விட்டன. லுவோ ஜன் அழுகாச்சி கடை ஆரம்பித்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் வர ஆரம்பித்தது. இப்போது நல்ல காசு. (அதனால அவர் மட்டும் அழுகாச்சி இல்லாம சிரிச்சுட்டிருப்பாரு போலருக்கு....)

-ப்ரஸன்னா எழுதிய ‘பணமே ஜெயம்’ நூலிலிருந்து...

Monday, August 4, 2014

அன்னப்பட்சி செய்த ஜாலம்..!!!

Posted by பால கணேஷ் Monday, August 04, 2014
ன்னால் சுலபமாக எழுத வராத ஒன்று என்பதாலேயே கவிதைகளையும் கவிஞர்களையும் பிடிக்குமெனக்கு. நேரடியாகப் பொருளுணர்த்தும் கவிதைகள், மறைபொருளாய் நம்மை உணரச் செய்யும் கவிதைகள், எதுவும் புரிபடாது – அந்தக் காரணத்தாலேயே – சிறந்த கவிதைகளோ என எண்ண வைப்பவை, உரைநடையை அடுத்தடுத்த வரிகளாக உடைத்துப் போடுகிற கவிதைகள் (என்று சொல்லப்படுபவை) என்று எல்லா எல்லா ரகங்களையும் படித்திருக்கிற படியால் நல்ல கவிதைகளின் தொகுப்பு கையில் கிடைக்கையில், படித்து முடிக்கையில் மனம் நிறைந்து விடும். அத்தகையதொரு நிறைவை சமீபத்தில் எனக்கு வழங்கியது திருமதி தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின் ‘அன்ன பட்சி’ கவிதை நூல்.

நானறிந்த வரையில் தேனக்காவே ஒரு அன்னப்பட்சிதான். சந்திக்கிற எல்லா மனிதர்களிடமும் ஏதாவது நல்ல விஷயத்தைக் கண்டெடுத்து அதை மட்டுமே போற்றுகிற அன்னப்பட்சி அவர். நெற்றிப் பொட்டில்லாத பெண் மாதிரி ஒற்று இல்லாமல் அன்ன பட்சி என்று தலைப்பு வைத்திருந்தது எனக்கு கொஞ்சம் உறுத்தல்தான். அதுசரி…. இப்பல்லாம் எந்தப் பொண்ணுய்யா நெற்றிப் பொட்டு வைக்குது? புருவப் பொட்டும். மூக்குப் பொட்டும் தானே வைக்குது என்கிறீர்களா…? அதுவும் சரிதேங். பட்… இங்க பேச வந்த விஷயம் கவிதைகளைப் பற்றி.



இந்தத் தொகுப்பில் இருக்கும் எல்லாக் கவிதைகளுமே எனக்குப் பிடித்திருந்தன. அவற்றில் ஒன்றிரண்டைப் பற்றி மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். (பின்ன... முழுசாக் குறிப்பிட்டா தேனக்காவோ, இல்லை அகநாழிகை வாசுதேவனோ என்னைக் ‘கவனிச்சுட’ மாட்டாங்களா என்ன...?) குழந்தைகள் பொம்மை வைத்து விளையாடுவதை ரசிக்காதவர் இருக்க முடியாது. கவிதை படைத்தால் குழந்தையின் பார்வையில் படைப்பது வழக்கம். இவர் பொம்மையின் பார்வையில் கவிதை தந்திருக்கிறார் இப்படி : கடைக்கு வந்தாய் | எல்லா பொம்மைகளிலும் | சொல்பேச்சு கேட்பது போலிருந்த | என்னைத்தான் விரும்பினாய் என்று துவங்கி கனவிலாவது விட்டு | விடுதலையாகும் எண்ணத்தோடு | குப்புறப்படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறாய் | தூங்கப் படைக்கப்படாத நான் | உன் விழிப்புக்காய்க் காத்திருக்கிறேன் | நீ எழுந்தவுடன் விளையாட என்று முடிக்கையில் நம் ரசனைப் புருவங்கள் உயரத்தான் செய்கின்றன.

இந்தத் தொகுப்பில் ‘கடவுளை நேசித்தல்’ என்றொரு கவிதை இருக்கிறது. அது எனக்கு மிகமிகப் பிடித்தமான கவிதை. சற்றே பெரியதாக இருப்பதால் இங்குக் குறிப்பிட முடியவில்லை. ஆனால் படித்தீர்களேயானால் ‘அட... நாமும் இப்படித்தானே’ என்று உங்களில் பெரும்பாலோர் சொல்வீர்கள். ‘சிகண்டியின் சாம்பலும் அமிர்தமும்’ என்கிற கவிதையின் கருப்பொருளும் சொல்லாடலும் தந்த பிரமிப்பு இன்னும் என்னுள்.

இந்நூலில் இயற்கையை ரசிக்கிறார், செல்லப் பிராணியைப் போற்றுகிறார், விவசாயிக்காய் வருந்துகிறார், குழந்தையுடன் கொஞ்சுகிறார், காதலுக்காய் ஏங்குகிறார், படிப்பவருடன் பேசுகிறார், அறிவுரைக்கிறார்... இப்படி எல்லாப் பரிமாணங்களிலும் கவிதைக் குழந்தைகளை நிரப்பியிருக்கிறார் நூலாசிரியர். ஹாட்ஸ் ஆஃப் தேனக்கா..!

தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தை ஊன்றிக் கவனித்து இயற்கையையும் மனிதர்களையும் நேசிப்பவர்கள் அழகிய கவிதைகளையும் நேசிக்கக் கூடியவர்களாகத்தான் நிச்சயம் இருப்பார்கள். நீங்கள் நல்ல ரசனையாளர். கவிதைகளை ரசிப்பவர் என்பதால் இந்த கவிதைத் தொகுப்பையும் நிச்சயம் ரசிப்பீர்கள். வாங்கி அல்லது (இரவல்) வாங்கி எவ்வாறேனும் படித்தீர்களெனில் நான் எழுதியவை எதுவும் மிகையில்லை என்பதை நிச்சயம் உணர்வீர்கள். புத்தகம் விலை என்ன, எங்க கிடைக்கும்னு கேக்கறவங்க உடனே இங்க க்ளிக்கி தேனக்காவோட தளத்துக்கு ஓடுங்கோ....!

பி.கு.: நான் படித்து, எழுதாமல், நீண்ட நாளாக வெயிட்டிங்கில் இருந்த நமது பதிவர்களின் புத்தகங்கள் அனைத்தையும் விமர்சனம்/அறிமுகம் செய்யவிருக்கிறேன் இந்த மாதத்தில். அடுத்தடுத்த பகிர்வுகளுக்கிடையில் அவைகளும் வரும்.

---------------------------------------------------------------------------------------------------
இப்போது வாசகர்கூடத்தில் : தமிழ்பேசுகிறார் ஹாரிபாட்டர்
---------------------------------------------------------------------------------------------------


Monday, July 28, 2014

ஓவியக் கதாநாயகர்கள்...!

Posted by பால கணேஷ் Monday, July 28, 2014
சிறுவர்களின் உலகம் கதாநாயகர்களால் நிரம்பியிருப்பது. விவரம் தெரிய ஆரம்பிக்கிற வயதில் தன் அப்பா செய்வதை போல பேப்பர் படிப்பது, சைக்கிள் ஓட்ட முயற்சிப்பது என்று குழந்தை சிறுவனாக முயற்சிக்கிற வயதில் முதல் ஆதர்ஸ ஹீரோ அப்பாதான். அதன்பின் பள்ளி செல்லத் துவங்கி, உலகத்தை சற்றே அறிமுகம் செய்து கொள்கிற பருவத்தில் டீச்சர், பிறகு திரையில் பார்த்து ரசிக்கும் கதாநாயகர்கள் என்று உருவங்கள் மாறலாம். மாறாதது கதாநாயகன் என்கிற பிம்பம்.

வீட்டில் அப்பாவோ அம்மாவோ நிறையப் படிக்கிற பழக்கத்தை மேற்கொண்டிருந்து, குழந்தைகளையும் அவர்களின் வயதுக்கேற்ற புத்தகங்களைப் படிக்கப் பழக்குகிற பெற்றோர்களைப் பெற்ற குழந்தைகள் பாக்கியவான்கள். அவர்கள் புத்தகங்கள் மூலமும் தங்களுக்கான கதாநாயகர்கள் கிடைக்கப் பெறுவார்கள். மதுரையில் இவன் தன் ஏழாவது வயதிலேயே அப்பாவை இழந்து விட்டதால் அண்ணனும் இவனும் படித்து வளர்வதே போராட்டமாக இருந்த சூழ்நிலையில் இவன் வீட்டினர் புத்தகங்கள் எதுவும் வாங்குகிற நிலையில் இல்லை. டி.வி.எஸ். நகரில் இருந்த சமயம் சமவயதில் பக்கத்து வீட்டில் இருந்த ஆனந்த் பழக்கமானான். அவன் அப்பா கிருஷ்ணாராவ் அவனுக்காக வீட்டில் நிறைய (பெரும்பாலும் தமிழ், கொஞ்சம் ஆங்கிலம்) காமிக்ஸ் புத்தகங்களை வாங்கிக் குவித்திருப்பார். வண்ண வண்ணமாக அழகு கொஞ்சுகிற படங்களுடன் இருக்கும் அந்தப் புத்தகங்களைப் புரட்ட ஆரம்பித்த பொழுதில்தான் இவனுக்குள்ளிருக்கும் வாசகன் விழித்துக் கொண்டான். ஆதர்ஸ கதாநாயகர்களும் மனதினுள் நுழைந்தார்கள்.

அப்பாவுடனும் அப்பா இறந்த பின்னர் தனியாக மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பார்த்த படங்களின் மூலமும் இவன் மனதில் அதுவரை இருந்த ஒரே கதாநாயகன் எம்.ஜி.ஆர்.தான்ஆனந்தின் வீட்டில் படித்த காமிக்ஸ்கள் மூலம் ரசனைக்கு உத்தரவாதமளிக்கும் அடுத்தடுத்த கதாநாயகர்கள் அணிவகுத்தனர். கதாநாயகர்களைப் பற்றிச் சொல்வதற்கு முன்... அந்தக் காமிக்ஸ் புத்தகங்களைப் படிக்கப் போனால் ஆனந்து ரொம்பவே அலட்டிக் கொள்வான். ஹோம் ஒர்க் பண்ணணும், அப்பா திட்டுவாரு, புறப்படு என்று விரட்டப்பட  நேரிடும். ஆனந்தை ஆனந்தப்படுத்தி விட்டுத்தான் இவன் ஓசிப் புத்தகம் படித்து ரசிக்க வேண்டிய நிலை. கொடுமைடா சாமி!

மந்திரக் குகை மர்மம், இடியின் மைந்தன் போன்ற மாயாஜால காமிக்ஸ்கள் மனதைக் கவரத்தான் செய்தன. அவற்றில் இடம் பெறும் வீரர்கள் நினைத்தபடி உருமாறும், மின்னலைக் கட்டுப்படுத்தும் போன்ற சாகசங்கள் செய்வது பிரமிப்பைத் தந்தன. (இதையே கொஞ்சம் சஸ்பென்ஸ் சேர்த்துச் சொன்னா அதான் ஹாரிபாட்டர். அதுக்குத் தாத்தால்லாம் தமிழ்ல உண்டுங்க.). ஆனாலும் அந்தந்த கதையுடன் முடிந்து விடுவதால் மனதில் அழுத்தமாக சிம்மாசனமிட்டு அமரவில்லை அவை என்பதே நிஜம். கல்கியில் அப்போது வாண்டுமாமா எழுதும் சரித்திரம் சாகஸம் நிரம்பிய காமிக்ஸ் கதைகளும். ‘நந்து சுந்து மந்துபோன்று சிறுவர்களை வைத்து எழுதிய கலகல துப்பறியும் கதைகளும் அப்படித்தான்.

முதலில் மனதில் பதிந்த கதாநாயகர் இரும்புக் கை மாயாவி. தன்னுடைய இரும்புக் கரத்தை ஏதாவது ஒரு பிளக் பாயிண்டில் செருகி மின்சாரத்தைத் தனக்குள் பாய்ச்சிக்  கொண்டார் என்றால் அவர் உருவம் கண்ணுக்குத் தெரியாது. இரும்புக் கை மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும். இந்த வசதியைப் பயன்படுத்தி அவர் ஈடுபட்ட சாகசங்கள் அடங்கிய ஒவ்வொரு காமிக்ஸும் பித்துப் பிடித்த மாதிரி துரத்தித் துரத்தி (ஆனந்திடம் கெஞ்சி ஓசிவாங்கி) படிக்க வைத்தன இவனை. (இப்போ வாங்கலாம்னு ஆசைப்பட்டாலும் இவன் குறிப்பிடற ஹீரோக்களோட காமிக்ஸ்ல ஒரு பிரதி கூட பழைய புத்தகக் கடைல கூடக் கிடைக்கலை. அவ்வ்வ்வ்வ்).

மாயாவிக்கு அடுத்தபடியாக மனதில் இடம் பிடித்த கேரக்டர்கள் லாரன்ஸ் அண்ட் டேவிட். லாரன்ஸ் என்பவர் ஜேம்ஸ்பாண்டாக நடித்த ரோஜர் மூர் மாதிரி கம்பீரமாக இருப்பார். டேவிட் என்பர் அதிபலசாலியாக மொட்டைத் தலையுடன் நம்மூரு எஸ்..அசோகன் மாதிரி இருப்பார். உளவுத் துறை இவர்கள் இருவரையும் சேர்ந்துதான் கேஸைக் கவனிக்கச்  சொல்லும். ‘பாஸ்என்று லாரன்ஸை அழைக்கும் டேவிட் பின்னாளில் இவன் படித்து ரசித்த, இன்றளவும் ரசித்துக் கொண்டிருக்கும் கணேஷ்-வஸந்த்துக்கு முன்னோடியாக இவன் மனதில் பதிந்த ஹீரோக்கள். ஒருவர் புத்திசாலியாக துப்பறிபவர், மற்றவர் அதிரடியாக ஆக்ஷனில் களமிறங்குபவர்கள் என்ற இந்த ஜோடி மிகப் பிடித்தமான ஒன்றாகிப் போனது.

தன்பின் தினமணி கதிரில் வெளிவந்த ரிப்கெர்பி என்கிற துப்பறிவாளர் மனதைப் பறித்தவர். படிய வாரிய தலையும், இன்னாளில் இவன் அணிந்திருப்பது போன்ற கண்ணாடியும், வாயில் எப்போதும் புகையும் பைப்புமாக ஒரு கல்லூரிப் பேராசிரியர் போலத் தோற்றமளிக்கும் இவர் தான் துப்பறியும் கதைகளில் நிறைய சாகசங்களும் செய்வார். காமிக்ஸாக தமிழிலும் நிறைய வந்திருக்கின்றன.
தற்கு அடுத்தபடியான மற்றொரு கதாபாத்திரம் சாகச வீரர் ஜானி நீரோ. ஜேம்ஸ்பாண்ட் படங்கள் போலதமிழில் அந்த வயதில் பார்த்த சில ஜெய்சங்கர் படங்கள் போல அடுத்தடுத்து சாகசங்கள் தூள் பறக்கும் காமிக்ஸ் கதாநாயகனான இந்த ஜானி நீரோ மனதில் தனியிடம் பிடித்துக் கொண்டார்.

இப்படி மனதில் இடம் பிடித்த காமிக்ஸ் கதாநாயகர்கள் அனைவரைப் பற்றியும் எழுத முற்பட்டால் தொடர்பதிவுகளாக நீளும் அபாயம் உண்டு என்பதால்தான் மனதை அதிகம் ஆக்ரமித்த இந்தக் கதாநாயகர்களை மட்டும் இவன் குறிப்பிடுகிறான். இந்த நான்கு (ஐந்து?) கதாநாயகர்களும் கல்லூரி செல்லும் காலம் வரையிலும் கூட மனதில் நிலைத்திருக்கத்தான் செய்தனர். இப்போதும் நினைத்துப் பார்க்கையில் இவனுக்கு இளம் பருவத்தில் ஓர் இனிய உலாச் சென்று வந்த திருப்தி கிடைக்கத்தான் செய்கிறது. பருவங்கள்தோறும் கதாநாயகர்கள் மாறிக் கொண்டிருந்தாலும், படிக்கிற அவர்களே பின்னாளில் கதாநாயகர்களாக உருவெடுத்தாலும்கூட இளம் வயதில் மனதில் பதிந்த கதாநாய பிம்பங்கள் மாறுவதேயில்லை.

காமிக்ஸ் கதாநாயகர்களை ரசிக்கையில் சினிமாவில் பார்த்து ரசித்த கதாநாயகனையே காமிக்ஸிலும் ரசிக்க முடிந்ததென்றால் அது டபுள் குஷிதானே... அப்படித்தான் அமைந்தது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். துப்பறிவதாக வந்த காமிக்ஸ், அதேபோல வாலிப வயதில் கணேஷ் மட்டும் துப்பறிந்த சுஜாதாவின் முதல் நாவலானநைலான் கயிறுநாவலை வஸந்த் கேரக்டரை சேர்த்து படக் கதையாக வந்த ஒரு மாதநாவல் புத்தகம். இவை இரண்டையும் படித்து, ஓவியங்களைப் பார்த்து ரசிக்கையில் கிடைத்த மகிழ்ச்சி இருக்கிறதே... வார்த்தைகளில் கொண்டுவர முடியாத வர்ணஜாலமான ஒன்று.

படித்து ரசித்து சேமித்து வைத்திருக்கும் புத்தகங்களில் பலவற்றை காலத்தின் ஓட்டத்தில் நாம் இழந்து விடுவது அனைவரின் வாழ்விலும் நடக்கிற ஒரு விஷயம். அதுபோல பழைய பொக்கிஷங்களில் இவன் தொலைத்த லிஸ்டில் இந்த காமிக்ஸ்களும் அடக்கம். பின்னாளில் ஊர் ஊராக பழைய புத்தகக் கடைகளில் வேட்டையாடிய போதும் இவை சிக்கவில்லை. அந்த வேட்டைகளின் பலனாக வேறு பல அரிய பொக்கிஷப் புத்தகங்கள் இவனுக்குச் சிக்கின என்பது வேறு விஷயம்.

சில நாட்களுக்கு முன் இணையதளம் ஒன்றில் வாத்யார் துப்பறிந்த அந்த காமிக்ஸ் புத்தகத்தைக் கண்டதும் இவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இவன் பெற்ற இன்பத்தை நீங்களும் அடைய இங்கே க்ளிக்கி அந்தப் புத்தகத்தைத் தரவிறக்கிப் படித்து, பார்த்து ரசியுங்கள். சினிமாவில் பார்த்த வாத்யாரின் சாகஸங்கள் படக்கதையாகப் பார்க்கையில் கிடைப்பது தனி சுகம். கணேஷ் வஸந்த் துப்பறிந்த அந்த படக்கதை புத்தகம் இப்படிக் கிடைக்குமா, இல்லை... கடைசிவரை நினைவுகளில் மட்டுமே தங்கிவிட்ட ஒன்றாகிவிடுமா தெரியவில்லை..!
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube