Monday, November 12, 2012

சரிதாவின் ‘இலவச’ தீபாவளி!

Posted by பால கணேஷ் Monday, November 12, 2012

விடுமுறை நாட்கள் என்றால் பெரும்பாலான இல்லத்தரசர்கள் சோம்பலாக இருப்பார்கள்; இல்லத்தரசிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள்- கணவர்களை வேலை வாங்குவதில்!

‘காலைல பத்து மணி வரைக்கும் குளிக்காம அப்படி என்னதான் டி.வி. பார்த்தாகறதோ?’ ‘இப்படி ஒரு எழுத்து விடாம பேப்பர் படிக்கற நேரத்துல உருப்படியா வீட்டுக்கு ஒட்டடை அடிச்சாத்தான் என்னவாம்?’ -இப்படியெல்லாம் கேள்விப் பந்துகள் பவுன்ஸாகி கணவர்கள் முகத்தில் வந்து மோதும். இவையெல்லாம் சராசரி மனைவிகளுக்கான லட்சணங்கள் என்றால் சரிதா அதற்கும் ஒருபடி மேலாச்சே.. அவள் பற்றாதென்று தீபாவளி சமயத்தில் மகளைப் பார்க்க வந்த அவள் அம்மாவும் சேர்ந்து கொண்டதில்... நான் ‘‌‌ஙே’ ஆனேன்.

‘‘என்னங்க.. இந்த முறை தீபாவளிக்கு ஸ்வீட்டும் காரமும் எங்கம்மாவே பண்ணிடறேங்கறாங்க. உடனே போய் அவங்க எழுதற லிஸ்ட் படி மளிகை சாமான்லாம் வாங்கிட்டு வந்துடுங்க...’’ என்று அருகில் வந்து ஐஸ் குரலில் சொன்னாள் சரிதா. கணினியில் கதை ஒன்றை டைப் செய்து ‌கொண்டிருந்த நான் ‘திடுக்’ வாங்கி நிமிர்ந்தேன்.

‘‘ஹய்யய்யோ... சமைக்கற விஷயத்துல நீயே நல்லாப் பண்ணுவ. உங்கம்மா பண்ணினா டேஞ்சராச்சே! தலைதீபாவளி சமயத்துலயே உங்க வீட்டுக்குப் போனப்ப உங்கம்மா பண்ணின ஹல்வாவை வாயில போட்டதுல நாக்கே மேலண்ணத்துல ஒட்டிக்கிட்டு ‘ழே ழே’ன்னுல்ல உளற வேண்டியதாய்டுச்சு. நல்லவேளையா... காராபூந்தில ஆந்திரா ஸ்டைலயும் தாண்டி ஆங்காரமா காரம் போட்டிருந்ததால‘ ‘ஹா ஹா’ன்னு அலறி எட்டு டம்ளர் தண்ணி குடிச்சதுல நாக்கு சரியாச்சு. அதனால பிழைச்சேன். இப்ப இந்த ரிஸ்க் தேவைதானா சரி?’’ என்று மெல்லிய குரலில் கேட்டேன்.

‘‘பேசாதீங்க! அம்மா எவ்வளவு ஆசையா மாப்ளைக்கும் உனக்கும் நான் பண்ணித் தர்றேன்னு சொல்றாங்க. உங்களுக்கு எப்பவுமே எங்கம்மான்னா தொக்குதான். உங்க தங்கை வீட்லருந்து வந்த ஸ்வீட், காரத்தோட லட்சணத்தை நான் தனியாச் சொல்லணுமா என்ன...? அந்த மைசூர் பாக்குல...’’

‘‘சரி சரி... நான் கடைக்கு உடனே போறேன் சரி, லிஸ்ட்டைக் ‌குடு...’’ என்று நான் எழுந்த நேரம் பார்த்துத்தானா கரண்ட் கட்டாக வேண்டும்? கும்மிருட்டு. தடுமாறியபடி என் செல்போனைத் தேடி நான் நடந்த நேரம், சரிதாவும் மெழுகுவர்த்தியைத் தேடி கைகளை நீட்டியபடி நடந்திருக்கிறாள் போலிருக்கிறது...அவளின் விரல் என் கண்ணில் பட்டு விட்டது. (நல்லவேளை... நகம் வளர்க்கும் பழக்கம் அவளுக்கில்லை).

‘‘ஆ...! என் கண்ணு! என் கண்ணு!’’ என்று புலம்பியபடி நான் கண்ணைப் பிடித்துக் கொள்ள... ‘‘போங்க மாப்ளை! நான் இருக்கும் போதே இப்படி என் மகளைக் கொஞ்சறீங்களே, எனக்கு வெக்கமா இருக்கு...’’ என்று குரல் கொடுத்தார் என் மாமியார் சமையல்கட்டிலிருந்து.

‘‘ஐயோ... ஐயோ...’’ என்று தலையிலடித்துக் கொண்டு குத்துமதிப்பாக ஹால் அலமாரியை அடைந்து துழாவினேன். செல் அகப்பட்டது. டார்ச்சைப் போட்டேன்.

ஃப்ரிட்ஜின் கதவைத் திறந்து அலமாரிக் கதவு என்று நினைத்து உள்ளே துழாவிக் கொண்டிருந்த சரிதா ‘‌ஙே’ என்று விழித்தாள் அவசரமாக அதன் கதவை மூடிவிட்டு வந்து அலமாரியிலிருந்து மெழுகுவர்த்திகளை எடுத்து ஏற்றினாள்.

காய்கறிகள் வாங்குவதைப் போலவே வீட்டுக்கு மளிகை சாமான்கள் சரியாக வாங்கி வருவதும் ஒரு கலைதான். எனக்கு அதில் சாமர்த்தியம் போறாது என்பது சரிதாவின் கணிப்பு. (எதில்தான் இருக்கிறதென்று ஒப்புக் கொண்டிருக்கிறாள்?) அவள் சொன்னபடி நான் வாங்கி வந்த மளிகை சாமான்களின் பேக்கிங்குகளைப் பிரித்தபடி கமெண்ட் அம்புகளை வீசிக் கொண்டிருந்தாள்.

‘‘நான் என்ன வாங்கறேன், என்ன பண்றேன்னு ஒரு தடவையாவது சமையல்கட்டுப் பக்கம் வந்திருந்தா தெரிஞ்சிருக்கும்... மிளகாய்ன்னு எழுதினா நீள மிளகாய் வாங்காம இப்படி குண்டு மிளகா வாங்கிட்டு வந்துட்டீங்களே.... இதை வெச்சு எப்படிச் சமைக்கிறதாம்? ’’

‘‘சரி, அடுத்த தடவை மிளகாய் வாங்கணும்னா உன்னைப் போல இருக்கக் கூடாதுன்றதை மனசுல வெச்சுக்கறேன்....’’ என்று சொல்லிவிட்டு உடனே குனிந்தேன். என் தலைக்கு மேல் பறந்த டம்ளர் சுவரில் மோதி விழுந்தது. ஹ! எந்த வார்த்தைக்கு என்ன ரியாக்ஷன் வரும்னு நமக்குல்லாம் அத்துப்படில்ல!

“என்னங்க இது...?” என்று கையில் எடுத்துக் காட்டினாள். “அதுவா...? குளியல் சோப்பு. அதுக்கென்ன..?” என்றேன்.

”நான் தேய்ச்சுக் குளிக்கற சோப் பிராண்ட் ------ தானே? இதை ஏன வாங்கினீங்க?” என்றாள் கோபமாக,

“அதுவா..? அதுல லெமன் ப்ளேவர் இல்லன்னான். அதான் சாதா வாங்கிட்டேன். ஒரே கம்பெனி தானே. விடு...” என்றேன்.

“என்னங்க இது.... இவ்வளவு அஸால்ட்டா சொல்றீங்க? நான் அந்த சோப்பைத்தான் ரெண்டு வருஷமா தேய்ச்சுக் குளிச்சுட்டிருக்கேன, தெரியுமா?” என்றாள் கோபமாக,

“எனக்குல்லாம் ஒரு சோப்பு ஒரு மாசம்தான்டி வருது. நீ எப்படி அதே சோப்பை ரெண்டு வருஷமா தேய்ச்சுக் குளிச்ச?” என்று அப்பாவியாக (முகத்தை வைத்துக் கொண்டு) கேட்டேன்.

உக்ரமானாள் சரிதா. “மாத்தி வாங்கறதையும் வாங்கிட்டு நக்கலா உங்களுக்கு? முதல்ல போய் இந்த ரெண்டு ஐட்டத்தையும் மாத்திட்டு வாங்க....” என்று அவள் கத்த. (வேறு வழியின்றி) மீண்டும் கடைக்குக் கிளம்பினேன் நான்.

மீண்டும் நான் வீடு திரும்பியபோது சரிதா வாசலிலேயே நின்று ஆர்வமாக என்னை எதிர்கொண்டாள். ‘‘என்னங்க... என் தம்பி போன் பண்ணினான். தீபாவளி முடிஞ்ச கையோட அவன் வைஃப் வீட்ல காசி டூர் போகப் போறாங்களாம். அம்மாவையும் கூட்டிட்டுப் போறேன்னு உடனே அனுப்பி வெக்கச் சொன்னான்’’ என்றாள்.

‘ஹையா... மாமியாரின் பலகாரத் தொல்லையிலருந்து தப்பிச்சுட்டோம்’ என்று நிம்மதி முகத்தில் படர, ‘‘இன்னிக்கு கெளம்பறதுக்கு பஸ், டிரெய்ன் எல்லாம் ஃபுல்லாயிருக்குமே சரிதா. ட்ரை பண்ணிப் பாக்கறேன்...’’ என்றேன். ‘‘வேண்டாங்க. நீங்க அம்மாவுக்கு ப்ளைட் டிக்கெட் புக் பண்ணிடுங்க...’’ என்றாள். பகீரென்றது எனக்கு. ‘‘அடியேய்... சென்னைலருந்து மதுரைக்கு ப்ளைட் டிக்கெட் என்ன செலவாகும் தெரியுமா? தீபாவளி போனஸ்ல கிரைண்டர் வாங்கணும்னு சொல்லிட்டிருந்தியே... அது பணால்தான்!’’ என்றேன்.

‘‘அதான் இல்ல... கிரைண்டர் கம்பெனில அதோட விலை அளவுக்கு ஏர் டிக்கெட்ல தள்ளுபடி தர்றாங்க. நமக்கு அந்தப் பொருள் இலவசமா கிடைச்ச மாதிரி ஆச்சு, ப்ளைட் டிக்கெட்டுக்கும் பாதி செலவுதானே ஆகும்னு எங்கம்மாதான் ஐடியா கொடுத்தாங்க...’’ என்றாள். ‘‘நாசமாப் போச்சு. பிஸினஸ் ட்ரிக் புரியாம பேசறியே... நான் இப்ப கிரைண்டருக்கும் செலவு பண்ணி, ப்ளைட் டிக்கெட்டுக்கும் செலவு பண்ணியாகணும்...’’ என்றேன் கோபமாக.

என் மாமியார், ‘‘சரி விடுடி சரிதா. நான் குடுத்து வெச்சது அவ்வளவுதான். ஒவ்வொருத்தர் மனைவியைச் சேர்ந்தவங்கன்னா எப்படித் தாங்கறாங்க தெரியுமா? நம்ம மூணாவது வீட்டு முரளி இருக்கானே....’’ என்று எடுத்துக் கொடுக்க, ‘‘ஆமாம்மா. இவருக்கு இவங்கம்மாவுக்குச் செய்யறதுன்னா மலை ‌போனாலும் தெரியாது. நமக்குன்னா இலை போறதும் தெரிஞ்சிடும்...’’ என்று ஆலாபனை செய்து பெண்களின் மிகச் சக்தி வாய்ந்த ஆயுதத்தை (கண்ணீர்) என்மீது பிரயோகித்தாள்.

‘இந்த ஆஃபர் குடுக்கற கம்பெனிக்காரன் மட்டும் கைல கிடைச்சான்...’ என்று மனதினுள் சபித்தபடி, வழக்கம் போல் பின்வாங்கி, ‘‘சரி... சரி... உடனே அரேன்ஜ் பண்ணிடறேன் சரி...’’ என்றேன். மாமியார் சமையலறையினுள் போய்விட, சரிதா அருகில் வந்து, ‘‘டோண்ட் வொர்ரி. இந்த முறை டபிள் ஸ்வீட் பண்ணி அசத்திடறேன்...’’ என்று வெற்றிக் களிப்பில் சிரித்தாள்.

‘அதெப்படித்தான் ஒரே நிமிடத்தில் சிரிக்கவும் அடுத்த நிமிடத்தில் அழவும் இவர்களால் முடிகிறதோ?’ என்று எப்போதும் தோன்றும் வியப்போடு அவளிடம் சொன்னேன். ‘‘சரி... என் பக்கத்துல வந்து நின்னுட்டு, நான் சொல்றதைத் திருப்பிச் சொல்லு...’’ என்றேன்.

‘‘என்னங்க?’’ என்று அருகில் வந்து நின்றாள். ‘‘‌வாசிக்கும் அனைவருக்கும்...’’ என்று நான் சொல்ல... ‘‘புரிஞ்சு போச். நான் திருப்பிச் சொல்ல வேணாம். உங்களோட சேர்ந்து ஒரே குரல் சொல்லிடறேன்...’’ என்று விட்டு உற்சாகமாக ‘‘ஒன் டூ த்ரீ’’ என்று எடுத்துக் கொடுத்தாள்.

                         ‘‘வாசிக்கும் அனைவருக்கும் நேசமுடன் எங்களின்
                          இதயம் கனிந்த தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்!’’




Saturday, November 10, 2012

சுவை மிக்க சுட்ட பழங்கள்!

Posted by பால கணேஷ் Saturday, November 10, 2012

ரு பெண்மணி மிகப்பெரிய அலுவலகத்தில் பொறுப்பான பணியில் இருந்தார். சிறியதும் பெரியதுமாக அவ்வப்போது தவறுகள் செய்து மேலதிகாரியிடம் திட்டு வாங்குவார். ஒவ்வொரு முறையும் திட்டு வாங்கிக் கொண்டு கலங்கிய கண்களுடன் வந்து தன் இருக்கையில் அமரும் போது தன் கைப்பையைத் திறந்து ஒரு படத்தை எடுத்துப் பார்ப்பார். அவர் முகத்தில் புன்னகை ததும்பும். சுறுசுறுபபாக வேலை பார்க்க ஆரம்பித்து விடுவார்..

இதை நெடுநாட்களாக கவனித்து வந்த பக்கத்து இருக்கைப் பெண்மணி ஒருநாள் மானேஜரிடம் திட்டு வாங்கிக் கொண்டு அந்தப் பெண்மனி புகைப்படத்தை எடுக்கும்போது எழுந்து வந்து விட்டார், “இப்படி கஷ்டமான நேரங்களில் எல்லாம் உங்களை உற்சாகப்படுத்தும் படம் எந்தக் கடவுளுடையது என்று தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டபடி அவர் கையிலிருந்த படத்தைக் குனிந்து பார்த்தார். வியந்து போனார், அது அந்தப் பெண்மணியின் கணவரின் படம்,

“அட. கடவுளின் படத்தைப் பார்த்து ஆறுதலடைவதைவிட கணவரின் படத்தைப் பார்த்து ஆறுதலடைகிறீர்களா? கடவுளைவிடக் கணவர்தான் பெரிது போலிருக்கிறது” என்று உருகிச் சொல்ல. திட்டு வாங்கிய பெண் இடைமறித்துச் சொன்னாள், “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, அவர் என்னைத் திட்டும் வசவு வார்த்தைகளுடன் ஒப்பிடும் போது இங்கு வாங்கும் திட்டெல்லாம் சர்வ சாதாரணம். ஒவ்வொரு முறை திட்டு வாங்கி மனம் சஞ்சலப்படும் போதும் அவர் படத்தை எடுத்துப் பார்ப்பேன், அப்போது இதெல்லாம் ஒன்றுமேயில்லை என்று மனம் சமாதானமாகி விடும்.” என்றாள். இந்தப் பெண் ‘ஙே!’

============================================

“ஏம்ப்பா ஆபரேஷன் தியேட்டர்லருந்து தலைதெறிக்க இப்படி ஓடி வர்ற?”

”நர்ஸ் ஆறுதல் சொன்னாங்க - சின்ன ஆபரேஷன் தானே... பயப்படாதீங்க. சுலபமாப் பண்ணிடலாம் - அப்படின்னு...”

“நல்லதைத்தானே சொல்லியிருக்காங்க?  அதுக்கு ஏன்டா இப்படி ஓடி வர்ற?”

“அட்,. நீங்க வேற... அவங்க ஆறுதல் சொன்னது எனக்கில்லைங்க. டாக்டருக்கு. அவருக்கு இது முதல் ஆபரேஷனாம்...”

============================================

மெரிக்காவில் நாய்களுக்கான உணவு தயாரிக்கும பெரிய நிறுவனம் ஒன்றின் விற்பனை சரியாக இல்லை. எனவே விற்பனைப் பிரதிநிதிகளுக்கு உத்வேகமூட்டுவதற்காக ஒரு சுயமுன்றேற்றப் பயிற்சியாளர் அழைக்கப்பட்டார். அவர் விற்பனைப் பிரதிநிதிகளின் மனதில் நிறுவனம் பற்றிய பெருமித உணர்வைத் தூண்டிவிட வேண்டும் என்று திட்டமிட்டு கேள்வி கேட்டார்.

“அமெரிக்காவில் நாய் உணவு தயாரிப்பில் மிகப் பெரிய நிறுவனம் எது?” பதில் வந்தது - “நாம்தான்”

”நாய் உணவுத் தயாரிப்புக்கு அதிகமான அளவில் விளம்பரம் செய்பவர்கள் யார்?” பதில் வந்தது - ”நாம்தான்”

“நாய் உணவில் வசீகரமான சலுகைகளைத் தருபவர்கள் யார்?” பதில வந்தது - “நாம்தான்”

பயிற்சியாளர் கேட்டார்  “அப்படியானால் நாம் ஏன் நம் தயாரிப்பை இன்னும் நன்றாக விற்பனை செய்யவில்லை?” பலத்த அமைதிக்குப் பின் ஒரு குரல் எழுந்தது. “ஐயா. இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் நமக்குத தெரியும், நாய்களுக்குத தெரியாது, அவற்றுக்கு நம் தயாரிப்புகள் பிடிக்காததால் முகர்ந்து பார்த்துவிட்டு நகர்ந்து விடுகின்றன”, பயிற்சியாளர் ‘ஙே’ என்று விழித்தார். தரத்தில் கவனம் செலுத்தாத தயாரிப்புகளுக்கு எத்தனை விளம்பரங்கள் செய்தாலும் எடுபடுமா என்ன?

============================================

திருவாரூரில் கிருபானந்த வாரியார் பாரதக் கதை சொல்லிக் கொண்டிருந்தார், சகாதேவன் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார், “சகாதேவன் கடைசிப் பிள்ளை, அவன் சிறந்த ஞானி. பொதுவாகவே கடைக் குட்டிகள் சிறந்த ஞானியாக இருப்பார்கள், காரணம் அப்பனுக்கு ஞானம் வந்த பிறகு பிறக்கிறவன் கடைக்குட்டிப் பிள்ளை, அல்லது இவன் பிறந்த பிறகு அப்பன் ஞானியாகி விடுவான், என்ன ஞானம்? இனிமேல் குழந்தை பெறவே கூடாது என்ற ஞானம்,”

இப்படி விளக்கிய வாரியார். “இங்கே யாராவது கடைக்குட்டிப் பிள்ளைகள் இருக்கிறீர்களா?” என்று கேட்டார், பத்துப் பதினைந்து சிறுவர் சிறுமிகள் கை தூக்கினார்கள். வாரியார் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துவிட்டு. “உக்காருங்க... யார் எந்த விஷயத்துல முடிவு செய்யறதுன்னு விவஸ்தையே கிடையாதா? அப்பா அம்மா என்ன முடிவுல இருக்காங்களோ? வீட்டுக்குப் போய் உதை வாங்காதீங்கப்பா...” என்றார், கூட்டடத்தினர் அனைவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.

============================================

சிரியர் : “நான் வரும் வழியில் ஒரு வண்ணான் தன் கழுதையைப் போட்டு அடிச்சுக்கிட்டு இருந்தார். நான் கஷ்டப்பட்டு அவரைத் தடுத்து நிறுத்தினேன். என் கிட்ட இருந்த பண்புக்கு என்ன பெயர் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்,

மாணவர் : சகோதர பாசம் அல்லது இனப்பற்று சார்!

============================================

மேலே நீங்கள் படித்த அனைத்தும் “சொன்னார்கள... சொன்னார்கள்... சொன்னார்கள்..!” என்ற புத்தகத்திலிருந்து சுடப்பட்டவை. எழுதியவர் : சுகி சிவம்,

============================================

Friday, November 9, 2012

இதயக்கோயிலில் குடியேறிய ஈசன்!

Posted by பால கணேஷ் Friday, November 09, 2012

வர் பரம ஏழை. ஆனால் சிவபக்தியில் செல்வந்தர். உடல் முழுவதும் திருநீறைப் பூசுவதனால் அவரின் இயற்பெயரே மறைந்து ‘பூசலார்’ என்ற பெயரே நிலைத்து விட்டது. ஈசனுக்கு ஒரு ஆலயம் எழுப்பிட வேண்டுமென்பதை தன் வாழ்நாள் லட்சியமாக எண்ணியிருந்தார் அவர். பலரிடமும் நிதி கேட்டு இறைஞ்சினார். அவருக்கு உதவிட எவரும் முன்வரவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது. பூசலார் ஒரு முடிவுக்கு வந்தார். அதாவது...தன் சித்தத்தில் உறையும் சிவனுக்கான ஆலயத் திருப்பணியை தன் மனதிலேயே நடத்தி தன் அபிலாஷையைப் பூர்த்தி செய்து கொள்ளத் தீர்மானித்தார்.

நல்ல நாள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, ஒரு மரத்தடியில் தியானத்தில் அமர்ந்தார். மூடிய கண்களுக்குள் முழுமையாக வாழத் தொடங்கினார். ஆகம விதிகளின் படி ஆலயம் அமையத் திட்டமிட்டார்; பாவனையிலேயே கல் தச்சர்களை வரவழைத்து கலை நயம் மிக்க சிற்பங்களை உருவாக்கினார்; பிராகாரங்களை எழுப்பினார்; தச்சர்களை வரவழைத்து ஆலயத்தின் கதவுகளை செதுக்கினார். இரவு, பகல் பாராமல் இருதயத்திலேயே கோயில் எழுப்பும் இனிய பணியில் ஈடுபட்டார். இறுதியில் கும்பாபிஷேகத்துக்கான நாள் குறித்து, கைலைநாதனை அங்கே குடியேறுமாறு மனம் குவித்து வேண்டுகோள் விடுத்தார்.

தே நேரத்தில்... நகரங்களில் சிறந்த காஞ்சியில் கைலாசநாதரின் கோயிலை அழகுறக் கட்டி முடித்திருந்தான் ராஜசிம்ம பல்லவன். கும்பாபிஷேகத்திற்காக நகரமே விழாக்கோலம் பூண்டிருக்க அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவன்- தான் அதே தினத்தில் திருநின்றவூரில் பூசலார் என்ற பக்தர் எழுப்பும் ஆலயத்தில் உறையப் போவதாகவும், வேறொரு நாளில் பல்லவ்ன கும்பாபிஷேகம் நடத்தட்டும் என்றும் கூறி மறைந்தார். கண் விழித்த பல்லவனுக்கு மனமெல்லாம் வியப்பு. பல ஆண்டுகள் இரவு பகல் பாராது உழைத்து தான் நிர்மாணித்த ஆலயத்தைவிட திருநின்றவூர் ஆலயத்தில் அப்படியென்ன சிறப்பு இருக்கிறது என்று இறைவன் அங்கு செல்லத் தீர்மானித்தார் என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் தன் ஆலய கும்பாபிஷேகத்தை நிறுத்திவிட்டு ஆன்‌றோர் புடைசூழ திருநின்றவூர் வந்தான்.

ஹ்ருதயாலீஸ்வரர்
என்ன ஆச்சர்யம்! கும்பாபிஷேகம் நடக்கும் ஊர் மாதிரி எந்தப் பரபரப்புமில்லாமல் ஊர் அமைதியாக இருந்தது. அங்குள்ளவரிடம் விசாரித்தான் மன்னன். ‘‘பூசலாரா? அவர் சிவனேன்னு மரத்தடில உக்காந்து தியானம் பண்ணிட்டிருக்காரே தவிர, கோயில் எதும் கட்டின மாதிரி தெரியலையே’’ என்று பதில் கிடைத்தது. பூசலார் இருந்த மரத்தடியை அடைந்த மன்னனும் மற்றையோரும் அங்கு ஓர் அதிசயக் காட்சியைக் கண்டனர். கண்மூடி அமர்ந்திருந்த பூசலாரின் இதயப் பகுதியில் தெய்வீக ஒளி வெள்ளம். அங்கே மானசீகமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த ஆலயத்தில் வேள்வியும், மற்ற மங்கலச் சடங்குகளும் மனதளவில் நடந்தேறுவதை அனைவரும் காண முடிந்தது. உரிய நேரத்தில் தனக்கான சந்நிதியில் நமச்சிவாயன் அனைவரும் பார்க்க குடியேறினான். கைலாசநாதனைக் கண்குளிரத் தரிசித்து மன்னனும் மற்றையோரும் பேறு பெற்றனர். படைபலம் மிக்க பல்லவன், எளியவரான பூசலாரின் கால்களில் விழுந்து, பணிந்து அவர் இதயத்தில் எழுப்பிய அதே கோயிலை நிஜத்திலேயே நிர்மாணித்துத் தர அனுமதி கேட்டான்.

பூசலார் புளகாங்கிதம் அடைந்தார். அவர் அருளாசியுடன் திருநின்றவூரில் (சென்னையிலிருந்து 33 கி.மீ. தூரம்) ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. பூசலாரின் இதயத்தில் எழுந்தருளிய காரணத்தால் ஈசன், இருதயாலீஸ்வரன் என்று பெயர் கொண்டு இவ்வாலயத்தில் எழுந்தருளினார்.

லய தரிசனம செய்வதற்கு முன்பு இந்த ஆலயத்தின் சிறப்பொன்றைச் செப்பிட விழைகின்றேன். இருதயாலீஸ்வரர் எழுந்தருளியிருக்கும் கருவறையின் மேற்கூரையில் இதய வடிவில் நான்கு பிரிவுகளுடன் இதயக் கமலம் செதுக்கப்பட்டுள்ளது. இதய நோயால் துன்புற்றிருப்பவர்கள் இங்கு வந்த இறைவனை மனமுருக வேண்டி பிரார்த்தனை செலுத்தினால் அந்நோய்களிலிருந்து விடுபடுகிறார்கள் என்பது மற்றொரு சிறப்பு. இப்போது ஆலயத்தினுள் நுழைவோம்.

லயம் மூன்று பிராகாரங்களைக் கொண்டுள்ளது. கிழக்குக் கோபுரம் வழியே நுழைந்ததும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கொடிமரம். அடுத்து பலிபீடம். அதையடத்து சிறு தனி மண்டபத்தில் நந்திதேவரின் திருவுருவம். விநாயகரும், வேலவனும் இருபுறமும் வாசம் செய்ய, நேர் எதிரில் இறைவனின் இனிய சன்னிதி. கருவறை வாயிலில் மற்றொரு நந்தி மற்றும் பலிபீடம் இருக்கின்றன. விரும்பி வழிபட்ட பக்தனின் இதயத்தில் குடியேறிய இருதயாலீஸ்வரன் இங்கே லிங்க ரூபத்தி்ல் காட்சி அருள்கிறார்.

ஈசனை இதயபீடத்தில் அமர்த்தி கும்பாபிஷேகமே நடத்திப் பார்த்த பூசலாருக்கு கருவறையிலேயே இடம் அளிக்கப்பட்டுள்ளது. இறைவனுக்கு இடதுபுறம் நின்றிருக்கிறார் பூசலார். லிங்கமே அவர் பக்கம் சற்று சாய்ந்திருப்பது போல் தோற்றம் தருகிறது. லிங்கத்தின் நெற்றியில் மூன்று பட்டையாகத் திருநீறு. சரவிளக்குகளில் பூத்திருக்கும் தீச் சுடர்கள். பூசலாரின் வலது கரத்தில் சின் முத்திரை, இடது கரம் இதயத்தின் அருகில் இருக்க, அதி்ல சிறு லிங்கமாக இருதயாலீஸ்வரன்.
பூசலார்

உமாபதியை வணங்கி, சந்நிதியை வலம் வருகையில் அது கஜபிருஷ்டம் என்கிற அரைவட்ட வடிவில் அமைந்துள்ளதை உணர முடிகிறது. சந்நிதியின் வெளிச் சுவரில் தென்புறத்தில் திருமுகத்தில் குமிழ் சிரிப்புடன் தக்ஷிணாமூர்த்தி, மேற்கில் மகாவிஷ்ணுவின் பிம்பம். அடுத்திருப்பது சிருஷ்டிக் கடவுள் பிரம்மன். வடபுறத்தில் துன்பங்களைத் துரத்தி அடிக்கும் அன்னை துர்க்கை ‌குடி கொண்டிருக்கிறாள்.

மூலிகை வண்ணங்களால் எழுதப்பெற்ற ஆலயத்தின் மேற்கூரையிலுள்ள ஓவியங்களை ரசித்தபடி கடந்து வந்தால், சந்நிதியின் தென்மேற்கு மூலையில் ஸ்தல விநாயகர், வடமேற்கு மூ‌லையில் வள்ளி-தெய்வானையுடன் வரம்தரும் சிவசுப்ரமணியர். வடக்கில் சிவகாமி சமேதராக விளங்கும் நடராஜருக்கான தனி அறை. அருகிலேயே பள்ளியறை. அதையடுத்து ஸ்ரீ பைரவர். வெளியே வந்ததும் இவ்வாலயத்தை நிர்மாணித்துத் தந்த ராஜசிம்ம பல்லவனின் சிற்பம் கைகூப்பிய நிலையில் அழகுற மிளிர்கிறது.

இருதயாலீஸ்வரரின் ஆலயத்தில் மரகதாம்பிகை என்ற பெயரில் தனிச் சந்நிதியில் அன்னை உறைகிறாள். தென்திசை நோக்கிய நின்ற திருக்கோலம். நான்கு திருக்கரங்கள். மேல் இரு கரங்களில் மலரும், பாசமும். கீழ் இரு கரங்களில் அபயஹஸ்த முத்திரை, வலது கரத்தில் அன்போடு வீற்றிருக்கும் கிளி. அன்னைக்கு அர்ச்சித்த மலர்களும், குங்குமமும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன. ‌பொதுவாக ஈசானிய மூலையில் காணப்படும் நவக்கிரகங்கள் இந்த ஆலயத்தில் அக்னி மூலையில் அமைக்கப்பட்டுள்ளன.

த்தனை பிராகாரங்களையும் இறைச் சிற்பங்களையும், கலை நுணுக்கமுடன் மனதிலேயே அமைத்து வழிபட்டு, இறைவனருள் பெற்ற பூசலார் நாயனாரைக் குறித்து மனதினுள் வியக்காமல் இருக்க முடியவில்லை. பல்லவன் பாங்குறப் படைத்த இந்த ஆலயத்தை தரிசித்து முடிந்து இல்லம் திரும்புகையில் மனமெங்கும் மகிழ்வும் அமைதியும் வியாபித்திருக்கும். ஒரு முறை சென்று தரிசித்து, உணர்ந்து பாருங்கள்.

Wednesday, November 7, 2012

நான் உயிரோடு இருக்கிறேனா?

Posted by பால கணேஷ் Wednesday, November 07, 2012

ன்ஷுரன்ஸ் கம்பெனியிலிருந்து வந்த கடிதம் இந்தச் சந்தேகத்தைக் கிளப்பியது நான் உயிரோடிருப்பதை இத்தனாம் தேதிக்குள் ஒரு டாக்டரின் அத்தாட்சியடன் அவர்களுக்குத் தெரிவிக்கக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு மாதாமாதம் இன்ஷுரன்ஸ் கம்பெனியிலிருந்து வந்து கொண்டிருந்த ரூபாய் இருநூறு கொஞ்ச நாளாக வரவில்லை. சரி, ஏனோ நிறுத்தி விட்டார்கள் போலிருக்கிறது, 200 ரூபாயை விசாரித்து அலைந்து திரிவானேன் என்று சும்மா இருந்து விட்டேன். அந்தச் சமயத்தில்தான் ‘நான் உயிரோடு இருக்கிறேனா?’ என்று கேட்டு கடிதம் வந்தது.

எல்.ஐ.சி. விவகாரம் தெரிந்த என் உறவினரிடம் விஷயத்தைச் சொன்னேன். ‘‘நீங்கள் உயிரோடு இருக்கும் வரை மாதம் 200 ரூபாய் கிடைக்க எல்.ஐ.சி.யுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஆபீஸில் வேலை செய்து கொண்டிருந்தபோது உங்கள் கிராஜுவிடி தொகையிலிருந்து மாதம் கொஞ்சமாக இன்ஷுரன்ஸ் கம்பெனிக்குப் பணம் செலுத்தியிருக்கிறார்கள். நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு உங்கள் ஆயுள் பரியந்தம் மாதாமாதம் 200 ரூபாய் தர ஒப்பந்தமாகியிருக்கிறது. ஆகவேதான் நீங்கள் உயிரோடு இருக்கிறீர்களா என்று கேட்டிருக்கிறார்கள். ஒரு டாக்டரிடமிருந்தோ, அரசு அதிகாரியிடமிருந்தோ நீங்கள் உயிரோடு இருப்பபதற்குச் சான்றுப் பத்திரம் (எக்ஸிஸ்டன்ஸி சர்டிபிகேட்) வாங்கி அனுப்ப வேண்டும். அதைத்தான் அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.’’

அவர் சொன்னவாறே செய்தேன். ஃபாரத்தைப் பூர்த்தி செய்துகொண்டு எல்.ஐ.சி. போனேன். ஆனால் நான் உயிரோடிருப்பதை அவர்கள் நம்பத் தயாராய் இல்லை. நானே ‌நானா என்று எனக்குச் சந்தேகம் ஏற்படுகிற அளவு சந்தேகப்பட்டார்கள். எல்.ஐ.சி.க்கு எந்த ஜென்மத்திலோ நான் தந்த பாஸ்போர்ட் போட்டோவில் என் முகமண்டலத்தில் தாடி, மீசை இல்லை. அந்தக் காலத்தில் பிளேடுகள் கூர்மையாகவும் மலிவாகவுமிருந்தன. எனக்குத் தினமும் ஷேவ் செய்து கொள்வது பிடிக்கும். ஆகவே பழைய பாஸ்போர்ட் படத்தில் கன்னங்கள் மழமழவென்றிருந்தன.

ஆனால் இப்பொழுதுதான் ரிடையர்ட் கேஸாச்சே... ‘நம்ம முகரக்கட்டையை யார் வந்து பார்க்கப் போகிறாங்க அல்லது யார்கிட்டே கொண்டு போய் காட்டப் போகிறோம்’ என்று அஸால்ட்டாக இருந்ததால் தேன்கூடு கணக்காக மொசமொசவென்று என் முகத்தில் தாடி தொங்கிக் கொண்டிருந்தது. எனக்கே என்னை அடையாளம் தெரியாத அளவு தாடி பெருகியிருந்தது. தலையில் எவ்வளவு இடம் காலியாக இருக்கு? மேல்தளம் பூரா மொஸைக் போட்டாற் போல் ஜம்மென்று இருக்கிறது. அங்கே போய் நூறு ஐம்பது உட்காராதுகளோ? எல்லா முடியும் மோவாயைச் சுற்றியே ஸெட்டிலாகி விட்டன. வெயில் கருதியும், வழுக்கை கருதியும் எப்போதும் தலையில் ஒரு தொப்பி போட்டிருப்பேன்.

நாளடைவில் அது தலையிலிருந்து கழற்றவே முடியாத அளவு தலையோடு ஒட்டிக் கொண்டு விட்டது. (எனக்குத் தலைக்கனம் கூடி அதனால் தொப்பி இறுகியிருக்கலாம் என்ற வாதத்தை நான் ஏற்கவில்லை.) எனது ஆதி அடையாள அட்டையிலுள்ளது போல் நான் மறுபடி புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பினால் எனது புனித தாடி, மீசையை நீக்கிக் கொள்ள வேண்டும். எனது சொந்தப் பிரச்னையில் அந்நியத் தலையீடாக அது எனக்குத் தோன்றியது. ‘‘மூணு நாலு வருஷத்து அரியர்ஸ் பணம் கணிசமாக வருமேடா’’ என்றார் உறவினர்.

சபலமாயிற்று. சலூனுக்குப் போய்த் தாடியை கஞ்சாச் செடிகளை ஈவிரக்கமில்லாமல் போலீஸ் அழிப்பது போல் அழித்தே விட்டேன். ஆறு வயசில் எனக்கொரு பயல் இருக்கிறான். அவன் என்னைச் சில சமயம் டாடி என்றும், சில சமயம் தாடி என்றும் கூப்பிட்டு வந்தான். என் முகத்தில் தாடி இல்லாமல் அவன் என்னைப் பார்த்ததே கிடையாது.

ஆகவே அவன் மதியம் பள்ளியிலிருந்து வந்தபோது அவனது தாயாருடன் (அதாவது தாலிகட்டிய என் பெண்சாதியுடன்) நான் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து, ‘‘அப்பா! அப்பா! அம்மா எந்த மாமா‌வுடைய கன்னத்தையோ தொடறாள்!’’ என்று கத்தியவாறு புழக்கடையில் நான் கீரைப் பாத்தியிடம் இருப்பேன் என நினைத்து ஓடினான். ‘நானே நான்’ என்று அவனுக்கு என்னை நிரூபிக்க ரொம்பக் கஷ்டமாகப் போய் விட்டது. எனது பழைய பாஸ்போர்ட் ஸ்கூல் சர்ட்டிபிகேட், பழைய அடையாள அட்டை, வாக்குச் சீட்டு, ரேஷன் கார்ட் எல்லாம் காட்டி ‘நான் தாண்டா இது’ என்று நிரூபிக்க வேண்டியிருந்தது.

நண்பன் நாராயணன் கரெஸ்பாண்டன்ஸ் கோர்ஸில் படித்து பி.ஏ. பரீட்சை எழுத ஷெனாய் நகரில் உள்ள ஒரு பள்ளிக்குப் போயிருந்தான். பரீட்சை எழுத பல வயதுகளில் பலதரப்பட்ட மாணவர்கள் கூடியிருந்தார்கள். பெயிண்டர், தையல்காரர், மெக்கானிக் என்பதாகப் பல ரகம். ஒரொரு ஹாலிலும் ஐம்பது பேர் பரீட்சை எழுதினார்கள். நாராயணனுடைய ஹாலை நிர்வ்கித்த அதிகாரி ரொம்பக் கறார், கண்டிப்பானவர். மாணவர்களில் பலர் மாணவர்களாக இல்லாமல் வயசாளிகளாக இருந்தனர்.

ஒரு ஆசாமி முரடராகத் தோற்றம் தந்தார். பரீட்சை அதிகாரியை, ‘‘யோவ்! மணி அடிச்சாச்சு, பேப்பர் குடுய்யா’’ என்று உரக்க அதட்டினார்- டெஸ்க்கையும் பெரிசாகத் தட்டியவாறு. ஏதோ ஒரு கெட்ட வார்த்தை வேறு- தொட்டுக் கொள்ள ஊறுகாய் மாதிரி- அவர் வாயில் வந்து விழுந்தது. கிழவரான பரீட்சை அதிகாரி அந்த ஆசாமியை முறைத்துப் பார்த்துவிட்டு, அவனருகில் வந்தார். அவனைக் கோபமாகப் பார்த்தார். பிறகு அவனுக்கு மட்டும் கேள்விப் பேப்பர் தராமல் மற்றவர்களுக்குக் கொடு்த்து விட்டு நாற்காலியில் போய் அமர்ந்து விட்டார்.

அந்த முரட்டு ஆசாமி மேலும் முரட்டுத்தனமாக, ‘‘யோவ்! இன்னாயா நீ பாட்டுக்கு உட்கார்ந்துட்டே. எனக்கு கேள்விப் பேப்பர் தரலியே!’’ என்று கத்தினான். அவர், ‘‘நீ மாணவனே அல்ல. வேறு யாரோ. ராங் அய்டென்டிடி! நீயாக ஹாலை விட்டு வெளியேறுகிறாயா, வாட்ச்மேனை விட்டு வெளியேற்றவா?’’ என்றார். அவன் மிரண்டு போய், ‘‘நான்தான் சார். நானே நான் சார்!’’ என்றான் சுருதி இறங்கி. அவனுடைய அய்டென்டிடி சர்டிபிகேட்டில் ஒட்டியிருந்த போட்டோவில் அவன் தாடி வைத்திருந்தான். இப்போது மழமழவென்று மழித்து விட்டிருந்தான். ஆனாலும் அவன்தான் என்று அடையாளம் தெரிந்தது.

ஆனால் அவன் ‘யோவ்’ போட்டு அவமரியாதையாக ‌எக்ஸாமினரை அழைத்ததால் அவர் கோபம் கொண்டு அவனது அடையாளத்தை சந்தேகப்பட்டு பேப்பர்தர மறுத்து விட்டார். ‘‘போய் பிரின்ஸிபாலிடம் சொல்லு. அவர் ஓ.கே. சொன்னால் உனக்கு பேப்பர் தருவேன்’’ என்று வம்பு பண்ணினார். அவன் பரீட்சையே எழுதாமல் திறந்த பேனாவை டெஸ்க் மீது ஓங்கிக் குத்திவிட்டு வெளியேறி விட்டான்.

நீதி : வாக்குச் சீட்டிலோ, அடையாள அட்டையிலோ உங்கள் தோற்றம் எப்படி உள்ளதோ அதைப் போலவே நீங்கள் இருப்பது உத்தமம். (நல்ல குணம் கூட மாறாமல் பழையபடியே இருந்தால் இன்னும் உத்தமம்!)

-‘சிரிக்காத மனமும் சிரிக்கும்’ (நகைச்சுவைக் கட்டுரைகள்) நூலிலிருந்து. எழுதியவர் : திரு.பாக்கியம் ராமசாமி. வெளியீடு : வானதி பதிப்பகம். விலை : ரூ.60

=======================================
என் நண்பர் கவிஞர் மதுமதி தன் தளத்திற்கு என்னை விருந்தினராக அழைத்து சிறப்பு செய்திருக்கிறார். அங்கே என் மொக்கையை வாசிக்க இங்கே க்ளிக்கவும்.
=======================================

Monday, November 5, 2012

பேசக் கூடாது...!

Posted by பால கணேஷ் Monday, November 05, 2012
 
பேசுவது என்பதே ஒரு கலைதான். நான் மேடைப் பேச்சைக் குறிப்பிடவில்லை. சாதாரணமாக வாய் படைத்த அனைவரும் பேசுவதைத்தான் குறிப்பிடுகிறேன். தேவையான வார்த்தைகளை விட தேவையற்ற வார்த்தைகளைப் பேசுபவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். நீங்கள் சென்னையைச் சேர்ந்தவர். நெரிசல் மிகுந்த பஸ்ஸில் அல்லது ஜனம் பிதுங்கும் ரயிலில் பயணிக்கிறீர்கள். பின்னாலிருந்து ஒருவர் அருகில் வருவார். ‘‘ஸார், இறங்கப் போறீங்களா?’’ என்பார் உங்களிடம். நீங்கள் என்போல் விவகாரம் பிடித்த ஆசாமியாக இருந்தால், ‘‘இல்லங்க. பாய் போட்டு உறங்கப் போறேன்’’ என்பீர்கள். அவர் கடுப்பாகி, ‘‘வழி விடுங்க ஸார். நான் இறங்கணும்’’ என்பார். ‘‘அறிவுகெட்ட முண்டம்! முதல்லயே இதைக் கேக்க வேண்டியதுதானே? நான் எங்க இறங்கினா உனக்கென்னய்யா? தேவையானதைப் பேசித் தொலைய மாட்டீங்களே’’ என்று மனதிற்குள் திட்டியபடியே, முகத்தில் மென்னகையுடன் நகர்ந்து வழி விடுகிறீர்கள். சரிதானே...?

இன்னும் சிலருக்கு வார்த்தைகளைப் பிரயோகிக்கும் விதம் தெரியாது. என் அத்தை வீட்டிற்குப் போனால், ‘‘காபி நேரத்துக்கு வந்திருக்கியேடா? குடிச்சுட்டியா? போடணுமா?’’ என்று கேட்பாள். நான் தன்னியல்பாக, ‘‘குடிச்சாச்சு அத்தே’’ என்று விடுவேன். ஆனால் என் அத்தை பாசக்காரி. ஆனால் வார்த்தைகளில் சொல்லத் தெரியாது... அவ்வளவுதான்! இப்படி தேவையான வார்த்தைகளை விடுத்து தேவையற்றதைப் பேசுகிறதைப் போலவே விஷயம் அதிகமற்ற வெட்டிப் பேச்சுகளிலும் தமிழர்கள்தான் வல்லவர்களாக இருக்கிறோம்.

‘பேச்சைக் குறை; செயலில் ஈடுபடு’ என்று முதுமொழி ஒன்று உண்டு. ஆனால் நாமனைவரும் ‘செயலைக் குறை; பேச்சில் ஈடுபடு’ என்கிற அளவுக்கு அதிகம் பேசுகிறவர்களாக ஆகிப்‌போனோம். நேரில் சந்தித்து அரட்டையடிப்பது போல தொலைபேசியிலும் மணிக்கணக்கில் அரட்டை அடிப்பது சகஜமான நிகழ்வாகிப் போய்விட்டது இன்று. உலக அளவில் செல்பேசி உபயோகிப்பவர்களில் இந்தியாவுக்கு முதலிடம் என்கிறது புள்ளி விவரம். அதிலும் தமிழ்நாட்டில் அதன் பங்களிப்பு அதிகம் இருக்கும் என்பது என் யூகம்.

ஒருவரைச் சந்திக்க நேரம் வாங்கியிருந்து, அதை கேன்சல் செய்ய வேண்டியிருந்தால், ‘‘சார்... உங்க வீட்டுக்கு வரலாம்னுதான் கெளம்பிட்டே இருந்தேன். திடீர்னு ஊர்லருந்து என் சித்தப்பா வந்துட்டாரு. வராத மனுஷன், ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்காரேன்னு தவிர்க்க முடியலை. கூட இருந்து ஊர் சுத்திக்காட்ட வேண்டியிருக்குது. நான் நாளைக்கு உங்களைச் சந்திக்கட்டுமா?’’ என்று பேசுவார்கள். உங்கள் வீட்டுக்கு யார் வந்தார்கள், அவருடன் என்ன செய்யப் போகிறீர்கள் போன்ற விவரங்கள் அவருக்குத் தேவையா என்ன? இத்தனை வார்த்தைகளை விரயம் செய்வதற்குப் பதிலாக சுருக்கமாக, ‘‘சார்! எதிர்பாராம கெஸ்ட் வந்துட்டாங்க வீட்டுக்கு. இஃப் யூ டோண்ட் மைண்ட், நாளைக்கு சந்திக்கிறேன்’’ என்று சொல்லலாம்தானே!

அதிலயும் பெண்கள் பேச ஆரம்பிச்சுட்டா நிறுத்தறதே இல்லிங்க. ஒருமுறை பஸ்ல பயணிச்சப்ப ஒரு பெண் கிண்டியிலருந்து கோயம்பேடு வரை - ஏறத்தாழ 45 நிமிஷம் - மொபைல்ல பேசிட்டே வந்ததைப் பார்த்து வியந்திருக்கேன், பெண்கள் எப்படி அரட்டையடிப்பார்கள் என்பதை அருகிலிருந்து கவனிககும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது சமீபத்தில், ஒருநாள் சரிதாவுக்கு செல்பேசி அழைப்பு வந்தபோது அவள் பேசுவதைக் கவனித்தேன், நோ... நோ... ஒட்டுக் கேட்கும் ரகமில்லை நான். ஏதாவது நல்ல விஷயம் கிடைத்தால் உங்களுக்கும் சொல்லலாமேன்ற பொதுநல நோக்கத்துலதான்... ஹி... ஹி...

‘‘ஹலோ... சரிதாவா..? நான் இந்திரா பேசறேன்...’’

‘‘ஹாய் இந்தூ...! என்ன ரொம்ப நாளா போனையே காணோம்?’’

‘‘அதுவா? ஃபாமிலி டூரா காசிக்குப் போயிட்டு வந்தேன்டி. போறதுக்கு முன்னாலயே போன் பண்ணி சொன்னேனே... மறந்துட்டியா/’’

‘‘சொன்னதா நினைவில்லையே... மறந்துட்டேன் போலருக்கு. ஸாரிடி. காசிப் பயணம் எப்படி இருந்தது?’’

‘‘ஃபைன். காசியில நம்ம ஊர் மாதிரி தள்ளி நின்னு சாமி தரிசனம் பண்ண வேண்டியதில்லை தெரியுமோ? சாமியை நாமே கையால தொட்டு அபிஷேகம் பண்றவரை அனுமதிக்கறா. பனியில, நதிக்கரை ஸ்நான அனுபவம் இருக்கே...  அனுபவிச்சுதான் தெரிஞ்சுக்கணும். அப்புறம்...’’

-இப்படி பத்து நிமிடங்கள் பேசியபின்....

‘‘ஆமாண்டி. சூர்யா அவ்வளவு கஷ்டப்பட்டு நடிச்சும் மாற்றான் எனக்குப் பிடிக்கலை இந்து. அதுசரி, உன் ஹஸ்பெண்டுக்கு கை முறிஞ்சு கட்டுப் போட்டிருந்தாங்களே... இப்ப சேர்ந்துடுச்சா?’’

‘‘என் ஹஸ்பெண்டுக்கு கைல கட்டா...? அவர் போய்ச் சேர்ந்து 5 வருஷம் ஆச்சே? என்ன உளர்றே?’’

‘‘ஹல்லோ... நீங்க இந்திரா சந்திரசேகர்தானே?’’

‘‘இல்லை. நான் இந்திரா செல்வகுமார் . நீங்க சரிதா ராஜேந்திரன்தானே?’’

‘‘இல்லீங்க. நான் சரிதா கணேஷ். ஸாரி... நம்பரைப் பாக்காம உங்ககூட பேசிட்டே இருந்துட்டேன். உங்க குரல்கூட என் ஃப்ரண்டு இந்திரா குரல் மாதிரி இனிமையா இருககுது.’’

‘‘ஸாரிங்க. நானும் அப்படித்தான். உங்க பேச்சு ரொம்ப சுவாரஸ்யமா இருக்கறதுல என்ன நம்பர் போட்டேன்னு கவனிக்கலை. அதுசரி, நீங்க எந்த ஏரியாவுல இருக்கீங்க?’’

-இப்படித் தொடர்ந்து இன்னும் இருபது நிமிடங்கள் பேசிவிட்டுத்தான் வைத்தாள். ராங் நம்பரிலேயே 30 நிமிடங்கள் பேச முடிந்ததென்றால் சரியான நம்பர் போட்டிருந்தால்... எத்தனை மணி நேரம் பேசியிருப்பாளோ? எனக்குத் தலைசுற்றி விட்டது.

செந்நாப்போதார் சொன்னபடி நா காவாமல், ‘‘ராங் நம்பர்கிட்ட கூடவாடி 30 நிமிஷம் பேசுவ? செல் பில் ஏன் எகிறாது பின்ன?’’ என்று நான் சொன்னது தப்பாகி விட்டது. ‘‘ஆமாங்க. இன்கமிங் காலை நான் பேசினதுக்கு உங்களுக்கு பில் எகிறும்தான். இதே உங்க அம்மாவு்க்கும், தங்கைக்கும் கால் போட்டு, கால் மணி நேரத்துக்கு மேல நீங்க பேசறது ஃப்ரீ தானே? உங்க வீட்லன்னா செடி கொடி நல்லா வளர்ந்துச்சான்னுகூட விசாரிப்பீங்க. அவ்வளவு பாஆஆசம்! அதுலயும் உங்க தங்கைக்காரி இருககாளே...’’ -இதன்பின் அவள் 15 நிமிடங்களுக்கு இடைவிடாமல் சஹஸ்ரநாம அர்ச்சனை செய்த விஷயம் நமக்குள் இருக்கட்டும். இங்கு நான் சொன்னால் என் மதிப்பு குறைந்து விடும்.

அதற்காக எல்லாரும் மணிரத்னம் பட டயலாக் மாதிரி, ‘நிப்பாட்டணும்’ ‘எப்படி இருக்க?’ என்று இரண்டு வார்த்தைகளாக கஞ்சத்தனமாகப் பேச வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. தேவையற்ற வார்த்தைகளைக் குறைக்கலாம் என்பதுதான் என் கட்சி. பொதுவாகவே நான் அளவாகப் பேசுபவன். இந்த அறிவுரையை மற்றவர்களுக்குச் சொல்வதற்கு முன், நாமே கடைப்பிடித்தால்தானே நன்றாயிருக்கும் என்று சென்ற வருடத்தில் மிகச் சுருககமாகவே நேரிலும் ‌தொலைபேசியிலும் பேசினேன். வார்த்தைகளைக் குறைத்துப் பேசியதில் மனம் அமைதியாக இருந்தது. அமைதியை அனுபவித்தேன்.

எல்லாம் சில நாட்கள்தான். அன்றைக்கு வீட்டுக்கு வந்த என் சித்தி, ‘‘என்னடா ஆச்சு உனக்கு? முன்னல்லாம் பத்து வார்த்தையாவது பேசிட்டிருந்த? இப்ப நாலு வார்த்தை பேசறதுக்கே காசு கேப்பே ‌போலருக்கே? அப்பப்ப போன் பண்ணி எப்படியிருக்கீங்க, என்னன்னு கேட்டு கொஞ்சநேரம் பேசினா முத்தா உதிர்ந்துடும்? உறவுன்றது பின்ன எதுக்குடா இருககு? நாலு வார்த்தை ஒட்டியும் ஒட்டாமலும் வேண்டா வெறுப்பாப் ஏதோ கடனுக்குப் பேசற மாதிரியே இருக்கு நீ பேசறது... அன்பா ஒரு பத்து நிமிஷம் பேச முடியாதபடி அவ்வளவு பிஸியாயிட்டியா?’’ என்று ஆரம்பித்து கடுமையாக டோஸ் விட்டார். ‘ஙே’யென்று விழித்து அசடு வழிந்து சமாளித்தேன்.

இ‌தேதடா வம்பாப் போச்சு. வளவளவென்று பேசினால் நேர விரயம். சுருககமாகப் பேசினால் உம்மணாமூஞ்சி, ஜடமா? பின்ன மனுஷன் எப்படித்தான்யா பேசறது? சரி... உறவுகள், நட்புகள் கிட்ட கொஞ்சம் வார்த்தைகளை விரயம் செஞ்சே பேசலாம். மற்ற எல்லாரிடமும் சுருககமாய்ப் பேசலாம் என்று முடிவெடுத்து அதை செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஆனால் மனக்குரல் மட்டும், ‘‘இப்படி பேசத் தெரியாம யோசிச்சு மண்டை காஞ்சு அலையறதுக்கு பேசாம மெளன விரதம்னு சொல்லி, பேசாமலேயே இருந்துடலாம்’’ என்கிறது. யப்பா... ஒரே கன்ஃப்யூஷன்!
 

Thursday, November 1, 2012

சிரித்திரபுரம் - 7

Posted by பால கணேஷ் Thursday, November 01, 2012
மன்னிக்கவும்.

சிரித்திரபுரம் இப்போது நாவல் வடிவம் பெறுவதால்
இங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது. 

பொறுத்தருள்க.
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube