Wednesday, September 24, 2014

அரசன் தந்த பரிசு !

Posted by பால கணேஷ் Wednesday, September 24, 2014
மேலைமங்கலம் முழுவதும் ஒரே விஷயத்தைத்தான் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருந்தது. சற்றுமுன்  பறையறிவித்துச் சொல்லப்பட்ட செய்திதான் அது.

“நம் மன்னர் பெரிதாய் ஒரு சிவன் கோயில் கட்டப் போவதாகவும், அதற்கு பொதுமக்கள் அனைவரும் அவரவரால் முடிந்த  பணத்தைக் கொடுக்கலாமென்றும், பேரமைச்சரிடம் ஒரு பணம் கொடுத்தாலுங்கூட அவர்களின் பெயர் கோயில் திருப்பணிக் கல்வெட்டில் பொறிக்கப்படுமென்றும் சொல்கிறார்களே... என்ன ஆச்சரியம்..! அரசாங்க கஜானாவில் இல்லாத பணமா ?” என்றான் ஒருவன்.

“அப்படியல்லடா. ஒரு நல்ல காரியத்தில் அனைவரின் பங்கும் இருக்க வேண்டுமென்று அரசர் விரும்புகிறார். அவர் நினைத்தால் ஒரு புதிய வரியை விதித்து. அதில் வரும் பணத்தைக் கொண்டு கோயில் கட்டுவது மிக எளிதாயிற்றே...? எதற்கு இப்படிப் பறையறிவிக்க வேண்டும்?” என்றான் மற்றவன்.

“நீ சொல்வதுதான்  சரியென்று தோன்றுகிறது. இன்றே என்னால் முடிந்த பணத்தை நான் பேரமைச்சரிடம் கொடுக்கப் போகிறேன்” என்றான் இன்னொருவன். பேசியபடியே அவர்கள் நகர்ந்தார்கள்.

“ஏனடி, உன் புத்தி கெட்டு விட்டதா என்ன..? நாமெல்லாம் பணம் கொடுத்து, அதை பேரமைச்சர் ஏற்றுக் கொள்வதா? நடக்கும் விஷயமாகப் பேசடி...” என்றாள் மோகனவல்லி.

“ஏனம்மா... தேவதாசிகள் என்றால் கோயில் திருப்பணிக்குப் பணம் கொடுக்கக் கூடாதென்று எதுவும் சட்டம் இருக்கிறதா என்ன? இந்த நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் என்ன உரிமை இருக்கிறதோ, அது எனக்கும் உண்டுதானே? நிச்சயமாக நான் கோயில் திருப்பணிக்காக ஆயிரம் பொன்னைப் பேரமைச்சரிடம் கொடுக்கத்தான் போகிறேன்.”

“வேண்டாமடி. இதனால் வீண் பிரச்னைகள்தான் வரும் என்று எனக்குத் தோன்றுகிறது.  அனாவசியமாக வம்பை விலை கொடுத்து வாங்காதே...” மோகனவல்லியின் குரலில் பதற்றம் இருந்தது.

“எந்த வம்பும் இல்லையம்மா... என்னுடைய காலத்துக்குப் பின்பும் என் பெயர் சொல்லுமளவு ஏதேனும் ஒரு விஷயம் இருக்க வேண்டுமென்று விரும்புகிறேன். அதற்குக் கிடைத்திருக்கும் இந்தப் பொன்னான வாய்ப்பை நான் இழந்துவிட விரும்பவில்லை. நாளையே நான் பேரமைச்சரைப் பார்க்கத்தான் போகிறேன்...”  என்றாள் அபரஞ்சி திடமான குரலில்.

பேரமைச்சர் அம்பலவாணரின் முகம் செக்கர்வானமெனச் சிவந்திருந்தது. “விளையாடுகிறாயா அபரஞ்சி? நமது மன்னர் ரணதீரர் எழுப்பும் இந்த ஆலயம் காலம் உள்ளளவும் நிலைத்து நின்று அவரது நல்லாட்சியைப் பறைசாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பிரம்மாண்டமாக எழுப்பப் போகிறார். இப்படியான ஒரு பெரும் பணியில் தம் பெயர் மட்டுமல்லாது, குடிமக்கள் ஒவ்வொருவரின் பெயரும் இடம்பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் அவர் இப்படி ஒரு அறிவிப்பைச் செய்துள்ளார். அதற்காக...?  உன்னிடமிருந்து நான் ஆயிரம் பொன் என்ன... பத்தாயிரம் பொன் கொடுத்தாலும் பெற்றுக் கொள்ள முடியாது.”

“ஏன் பெற்றுக் கொள்ளக் கூடாது பேரமைச்சரே... குடிமக்கள் ஒவ்வொருவரின் பெயரும் இடம்பெற வேண்டும் என்று மன்னர் விரும்பினார் என்றால் நானும் குடிமக்களில் ஒருத்தியல்லவா? நான் கொடுத்தால் என்ன?”

“ஆலயச் சுவர்களில் ஒரு விவசாயி கொடுத்தது இவ்வளவு பணம், ஒரு வியாபாரி கொடுத்தது இவ்வளவு பணம் என்று பொறிக்கும் போது, தேவதாசி கொடுத்தது இவ்வளவு பணம் என்றா உன் பெயரைப் பொறிக்க முடியும்? வருங்கால சந்ததியினர் இதைப் படித்தால் எள்ளி நகையாட மாட்டார்களா? ஒரு நற்பணிக்குக் களங்கம் கற்பித்தது போல் ஆகிவிடுமே... இந்த எண்ணத்தைத் துறந்து நீ இங்கிருந்து போய்விடு...” என்றார் அம்பலவாணர் கண்டிப்பான குரலில்.

தாசி அபரஞ்சியிடம் இன்னும் பலவிதமாக அவர் எடுத்துக் கூறியும், அவள் ஏற்க மறுத்துவிடவே, சினமடைந்த அவர் அவளை வெளியே தள்ளும்படி வீரர்களை அழைத்து உத்தரவிட்டார். சினத்தின் உச்சிக்குப் போன அபரஞ்சி கூச்சலிட்டாள். “பேரமைச்சரே... என்னை அவமதித்து விட்டீர். நான் இப்போதே மன்னரிடமே சென்று திருச்சபையில் (நீதிமன்றத்தில்) நீதி கேட்கிறேன். அதற்கு நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்” என்றபடியே சென்றாள்.

திருச்சபையில் பேரமைதி நிலவியது. மன்னன் ரணதீரன், சலனமில்லாத முகத்தோடு அபரஞ்சியை ஏறிட்டான். “உன் வழக்கைச் சொல்லம்மா...”
“மன்னா... காலமெல்லாம் தங்கள் பெயர் சொல்லும் வண்ணம் நீங்கள் கட்டும் ஆலயத்தில் என் பெயரும் இடம்பெற வேண்டுமென்று நான் மிகவிரும்பி ஆலயத் திருப்பணிக்காக பேரமைச்சரிடம் ஆயிரம் பொன் கொடுத்தேன். அவர் ஏற்க மறுத்து, என்னையும் அவமதித்து விட்டார்....” என்றாள் அபரஞ்சி.

அவையில் பெரும் சலசலப்பு எழுந்தது. ஒவ்வொருவரும் தங்களுக்குள் பேச முற்பட்டதால் எழுந்த அந்த சலசலப்பை மன்னரின் ஒரு கையசைப்பு அமைதிப்படுத்தியது. 

“அம்பலவாணரே... ஏன் அபரஞ்சி கொடுத்ததை ஏற்க மறுத்தீர்கள்?” என முகத்தில் ஒரு குறுஞ்சிரிப்பு தவழ, வினவினான் மன்னன்.

“எப்படி மன்னவா ஏற்க முடியும்? இவள் தாசிக் குலத்தில் பிறந்தவள். நாட்டில் பல ஆண்களின் மோகத்தீயை அணைத்தவள் அல்லவா?” என்றார் அம்பலவாணர்.

“உம்மையும் சேர்த்துத்தானே..?” என்று மன்னன் இடக்காகக் கூறவும், பேரமைச்சர் குரல் எழும்பாமல் திகைத்துப் போய் அமைதியானார்.

“மன்னர் இவ்வாறு பேசுவது தகாது. ஆலயத்தின் சுவரில் ஒரு தேவதாசியின் பெயரை எவ்விதம் பொறிக்க இயலும்? பின்னாளில் வரலாறு நம்மை இகழாதா? பேரமைச்சர் நடந்து கொண்டதில் தவறில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது” என்றார் அரசவைப் புலவர்.

“புலவரே... உயர்ந்தவர் - தாழ்ந்தவர், பணக்காரர் - ஏழை, குலமகள் - தேவதாசி என்ற பாகுபாடெல்லாம் உம்மையும் அமைச்சரையும் போன்றோருக்குத்தான். அரசனாகிய எனக்கு என் குடிமக்களில் ஒவ்வொருவரும் சரிசமமே. புரிகிறதா...? தேவதாசியென்றால் அவ்வளவு கேவலமா என்ன? நீரும் நானும் வணங்கும் சிவபெருமானே, தன் அடியவர் சுந்தரமூர்த்தி நாயனாருக்காக பரவையார் என்ற தேவதாசியின் வீட்டுக்கு நடையாய் நடந்தாரே... தன் அடியவருக்கு அவளைத் திருமணம் செய்விக்கும் பொருட்டு தன் நிலையிலிருந்து இறங்கி வந்த சிவபெருமானைக் கேவலமாய்ச் சொல்வீரா? இறைவனையே கணவனாக வரித்து ஆலயத்தில் நடனமாடி இறைவனுக்குப் பணி செய்வதையே வாழ்க்கையாகக் கொண்ட தேவதாசிக் குலத்தை எம்மைப் போன்ற அரசர்களும், உம்மைப் போன்ற அரசவை உறுப்பினர்களுமாகச் சேர்ந்தல்லவா இப்படி மாற்றினோம்? அவர்கள் செய்வது பாவம் எனில் செய்யத் தூண்டிய பாவிகள் நாமல்லவோ..? அவர்கள் குற்றமுள்ளவர்கள் என்றால் அதில் நமக்கும் பங்கு உண்டில்லையா?”

மன்னன் ரணதீரனின் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார் அரசவைப் புலவர். பேரமைச்சர் அம்பலவாணர் தன்னைச் சுதாரித்துக் கொண்டு பேசினார். “மன்னவா... நீங்கள் சொல்லும் வாதங்களை ஏற்றுக் கொள்ள முடிகிறது. நியாயங்களை உணர முடிகிறது. என்றாலும்... சற்று யோசியுங்கள்... ஆலயத்தின் கல்வெட்டில் தேவதாசி என்றா பொறிப்பது? பின்னர் வரும் சந்ததியினருக்கு அது கேலியாகி விடுமே... என்னவென்று இவள் பெயரைப் போடுவது என்பதுதானே பிரச்சினை? அதனால்தான் இவள் தந்த ஆயிரம் பொன்னை ஏற்க மறுத்தேன். நீங்கள் இவளை ஆதரித்துப் பேசுவதனால் இதற்கொரு முடிவை நீங்களே சொல்லி விடுங்கள். நாங்கள் மனமொப்பி ஏற்றுக் கொள்கிறோம்...” என்றார்.

மன்னன் சற்று நேரம் அமைதியாக இருந்தான். புருவங்கள் முடிச்சிட கண்களை மூடி சில நிமிடம் யோசித்தான். பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய் நிமிர்ந்தான். “சரி பேரமைச்சரே... தேவதாசியென்று பெயர் பொறித்தால்தானே கேவலம்? இன்னாருடைய அன்னை என்று பெயர் பொறித்தால் தவறில்லையே... இந்த அபரஞ்சியை இந்த நிமிடம் முதல் என் வளர்ப்புத்தாயாக ஏற்றுக் கொள்கிறேன். ஆடற்கலையில் வல்லவனாகிய நடராஜப் பெருமானுக்கு ஒரு ஆடல் மண்டபம் எழுப்பி, அதில் மன்னன் ரணதீரனின் வளர்ப்புத்தாய் அபரஞ்சியின் உபயம் என்று பெயர் பொறிக்கச் சொல்லுங்கள்...” என்றான் சிம்மாசனத்திலிருந்து கம்பீரமாக எழுந்து நின்று. 

அவை ஸ்தம்பித்தது. அபரஞ்சி கண்ணீர் மல்கியவளாய் அரசரின் காலில் விழப்போனாள். “என்னம்மா இது? நானல்லவா தங்கள் காலில் விழுந்து வணங்க வேண்டும்? தாயே, இனி பேரமைச்சரிடம் நீங்கள் ஆயிரம் பொன்னைத் தரலாம். மனமகிழ்வுடன் நாங்கள் பெற்றுக் கொள்கிறோம். உங்கள் பெயரும் காலம் உள்ளளவும், இந்த ஆலயம் உள்ளளவும் நிலைக்கும். போய் வாருங்கள்...” என்றான்.

அவையினர் அனைவரும் சுய உணர்வு பெற்றவர்களாய், “மன்னர் ரணதீரர் வாழ்க” என்று மன்னனை வாழ்த்தி உரத்துக் குரல் எழுப்பினர். மகிழ்ச்சியின் அலைகள் அரசனின் அந்த திருச்சபையை நிறைத்தது.

Saturday, September 20, 2014

விருது வாங்கலையோ... விருது..!

Posted by பால கணேஷ் Saturday, September 20, 2014
லையுலகில் இப்போது விருது வழங்கும் சீசன் மீண்டும் ஆரம்பமாகி இருக்கிறது. THE VERSATILE BLOGGER என்கிற விருதானது எங்கிருந்தோ துவங்கி, ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடித்தவர்களுக்கு வழங்கி, விருது பெற்றவர்கள் நன்றிகூறி மற்றவர்களுக்கு அதைப் பகிர்ந்து... என்று வலையுலகம் சுறுசுறுப்பாகி இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் THE VERSATILE BLOGGER, AWSOME BLOGGER என்று விருதுகள் மழை அனைவரின் தளத்திலும் பொழிந்து ஓய்ந்திருந்தது.

எனக்குக் கிடைத்த பல விருதுகளை நான் என் தளத்தில் ஒட்டி அலங்கரிக்கவில்லை. அதற்குக் காரணம் இவை பற்றி எனக்கிருந்த மாறுபட்ட கருத்துக்களே.  அவற்றை விரித்துரைப்பதால் பலர் மனம் புண்படக் கூடுமே என்பதால் அப்போது நான் எதுவும் சொல்லவில்லை. இப்போதும் அப்படியே இருந்துவிடலாம் என்று எண்ணினாலும் மனசு கேட்கவில்லை. மாறி மாறி வரும் + மற்றும்- சிந்தனைகளின் ஊசலாட்டத்தின் ஊடேதான் இப்போது டைப்பிக் கொண்டிருக்கிறேன்.

+ விருதுகள் பகிரப்படறதனால பதிவர்களுக்கு உற்சாகம் கிடைக்குதா இல்லையா...? நம் படைப்புக்கான அங்கீகாரத்துக்கு ஏங்கித்தானே நாமல்லாம் எழுதவே செய்யறோம். அதுமாதிரி நாம நல்லா செயல்பட்டுட்டிருக்கோம்கறதுக்கு இந்த விருது ஒரு சாட்சியில்லையா...?

- விருதுங்கறது என்ன...? ஏதாவது ஒரு துறையில சாதனை பண்ணினவங்களுக்கோ, இல்ல தனித்திறமை படைச்சவங்களுக்கோ அவங்களைப் பாராட்டி வழங்கப்படறது. இங்க ஒரு விருதை எடுத்துக்கிட்டு பெருமாள் கோயில் புளியோதரை மாதிரி ஆளாளுக்கு பகிர்ந்துட்டிருந்தா அந்த விருதுக்கு என்ன  மரியாதை? அத்தனை பேர் ப்ளாக்லயும் இந்த விருது ஒட்ட வைக்கப்பட்டிருந்தா அதுக்கு என்ன வேல்யூ? ஒரு ஊர்ல இருக்கறவன் பூரா ரஜினிகாந்தா இருந்துட்டா ரஜினிக்கே வேல்யூ கிடையாதே....?

+ நான் விருதைக் குடுத்தவங்க அதை இன்னொரு அஞ்சு பேருக்கு பகிர்ந்தா, அந்த அஞ்சு பேர்ல எனக்கும் தெரியாதவங்க யாராச்சும் இருந்தா இப்ப அறிமுகமாயிடுவாங்கல்ல... இப்படி தொடர்ந்து போற சங்கிலியக் கவனிச்சா நிறையப் பதிவர்களோட அறிமுகம் கிடைச்சு வலையுலகத் தொடர்புகள் விரிவாகி இன்னும் நெருக்கமாத்தானே ஆகும்...? அது நல்லது தானே!

- ஏதாவது ஒரு போட்டி வெச்சு, அதுல ஜெயிக்கறவங்களுக்கு விருதுன்னு பண்ணினா, அதுல கலந்துக்கறவங்க லிஸ்டை வெச்சே நிறைய நட்பு வட்டம் பெருகுமே... அப்படி ஆண்டுக்கு நாலஞ்சு பேர் ஜெயிச்சால்ல அந்த விருதுக்கே சிறப்பு...? இல்ல, சிறப்பா செயல்படற ப்ளாக்கர்னு சிலரை நாமினேட் பண்ணி மத்த ப்ளாக்கர்ஸ் ஓட்டுப் போட்டு செலக்ட் பண்ணின ப்ளாகர்ஸ்க்கு கொடுத்தாலாவது நியாயம்..? இப்படி எல்லாரும் எல்லாருக்கும் சாக்லெட் தர்ற மாதிரி தர்றது என்ன நியாயம்...?

+ விருது கொடுக்கப்படுதுன்னா அதுக்குப் பின்னால அதை உனக்குத் தர்றவங்க உன் மேல வெச்ச அன்பும் மரியாதையும் இருக்கறது உன் கண்ணுக்குத் தெரியலயா...? அதை எப்படிக் குறை சொல்ல முடியும்...? உன்னை யாருக்காவது பகிரச் சொன்னாலும் அப்படி நீ அன்பு வெச்சிருக்கறவங்களுக்குத் தானே பகிர்வே...?

- விருதுகளை இப்படி அன்பின் காரணமா வழங்கறது சரிதானா...? இதுக்கு தங்களுக்குப் பிடிச்ச அன்பும் மரியாதையும் உள்ளவங்களுக்கு ஏதாச்சும் பட்டம் கொடுத்துப் பாராட்டலாம் இல்லையா..? சினிமாக்காரங்க புரட்சிங்கற வார்த்தைய அவனவன் விதவிதமா தன் பேருக்கு முன்னால சேர்த்துக்கற மாதிரி ப்ளாக் சம்பந்தப்பட்ட அடைமொழிகளைக் குடுத்துக்கிட்டா சிம்பிளா முடிஞ்சு போகுமே விஷயம்..!

ப்படி மாறிமாறி சிந்தனைகள் சுழன்று கொண்டுதான் இருக்கின்றன. அதனாலதான் என் தங்கை மைதிலி கஸ்தூரிரங்கனும், அன்பு நண்பர் மதுரைத் தமிழனும் வழங்கிய இந்த விருதை நான் இன்னும் யாருக்கும் பகிரவில்லை. இந்த இரண்டு அன்புள்ளங்களும் என்னைச் சரியாகப் புரிந்து கொண்டு மன்னிப்பார்கள் என்ற நம்பிக்கை  எனக்கு உண்டு. அந்த நம்பிக்கையுடன் அவர்களுக்குக் காட்டும் அன்பின் வெளிப்பாடாக இதை என் தளத்தில் வைக்கிறேன் சிலகாலம். இந்த விஷயத்தில் நான் ஒரு தெளிவுக்கு வர உங்களின் கருத்துக்கள் கலங்கரை விளக்காக வழிகாட்டும் என்று நம்பிக்கையுடன் வரப்போகும் கருத்துகளுக்காக ஆவலுடன் என் காத்திருப்பு. நன்றி.

Monday, September 15, 2014

மதுரைக்குப் போகலாம், வாரீகளா...?

Posted by பால கணேஷ் Monday, September 15, 2014
னைவருக்கும் வணக்கம். மதுரையில் அடுத்த மாதம் 26ம் தேதி நடக்க இருக்கும் மூன்றாமாண்டு வலைப்பதிவர்  திருவிழாவிற்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் நடந்து வருகின்றன. தமிழ்வாசி பிரகாஷ், திண்டுக்கல் தனபாலன் மற்றும் என் தளத்தில் பதிவர்களின் வருகையை உறுதி செய்து கொள்ளும்படியான படிவம் ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதனைப் பூர்த்தி செய்து இன்றைய தினம் வரையில் தங்களின் வருகையை உறுதி செய்திருக்கும் பதிவர்களின் பட்டியல் இதோ...

1. சிதம்பரம் என்ற சீனா (வலைச்சரம்), 2) தமிழ்வாசி பிரகாஷ் (தமிழ்வாசி), 3. பொன். தனபாலன் (திண்டுக்கல் தனபாலன்), கவிஞர். 4. திருமலை சோமு (thirumalaisomu.blogspot.com), 5. பகவான்ஜி (ஜோக்காளி), 5. பாலகணேஷ் (மின்னல் வரிகள்), 6. கவியாழி (கவியாழி), 7. sithayan sivakumar (விழிப்புணர்வு), 7. சங்கர இராமசாமி (கனிச்சாறு), 8. செல்வின் (அஞ்சாசிங்கம்), 9.வேணுகோபாலன் (சேட்டைக்காரன்), 10. சசிகுமார் (வந்தேமாதரம்), 11. ஜீவானந்தம் (கோவை நேரம்), 12. சித்தூர் முருகேசன் (அனுபவஜோதிடம்) , 13. கருப்பணன் (karuppanan), 14. நா.முத்துநிலவன் (வளரும் கவிதை), 15. சுரேஷ்குமார் (கடல் பயணங்கள்), 16. பாலாஜி (அநியாயங்கள்), 17. மு.கீதா (தென்றல்), 18. கா.ந.கல்யாணசுந்தரம் (கவிதைவாசல்), 18. முருகன் (gurumurugan.blogspot.com), 19.கருண்குமார் (வேடந்தாங்கல்), 20. யானைக்குட்டி (http://yanaikutty.blogspot.in), 20. கோவை ஆவி (பயணம்), 21. செல்வி ஷங்கர் (பட்டறிவும் பாடமும்), 21. வியபதி (ஏதாவது எழுதுவோம்), 22. இராய செல்லப்பா (செல்லப்பா தமிழ் டயரி), 23. முகமதுநவாஸ்கான் (99Likes (Tamil Computer Tips), 24. கரந்தை ஜெயக்குமார் (கரந்தை ஜெயக்குமார்), 25. கேபிள் சங்கர் (கேபிள் சங்கர்), 26. ஜெய் (பட்டிகாட்டான் பட்டணத்தில்), 27. இ.வரதராஜபெருமாள் (குமாரபாளையம் குடமுருட்டி), 28. திலிப் நாராயணன் (அழகிய நாட்கள்), 29. J. நிஷா (யாமிதாஷா), 30. புலவர் இராமாநுசம் (புலவர் குரல்), 31. மதுமதி (மதுமதி.காம்), 32. வெங்கட் நாகராஜ் (சந்தித்ததும் சிந்தித்ததும்), 33. ம.கோகுல் (கோகுல் மனதில்), 34. விமலன் (சிட்டுக்குருவி), 34. ஆர்.வி.சரவணன் (குடந்தையூர்) 35. முனைவர் துரை.மணிகண்டன் (மணிவானதி), 36. துளசி கோபால் (துளசிதளம்), 37. விஜயன் துரை (கடற்கரை), 38. சி.வெற்றிவேல் (இரவின் புன்னகை), 39. சரவணன் (ஸ்கூல் பையன்), 40. கவி. செங்குட்டுவன் (கல்விக்கோயில்), 41. எஸ்.விஜயநரசிம்மன் (svijayanarasimhan.blogspot.in), 42. ஸபி (சக்கரக்கட்டி), 43. சம்பத்குமார் (தமிழ் பேரண்ட்ஸ்), 44. முனைவர் நா.சிவாஜி கபிலன் (தூரிகை கபிலன்), 45. அரசன் (கரைசேரா அலை), 46. ரூபக் ராம் (சேம்புலியன்), 47. தி தமிழ் இளங்கோ (எனது எண்ணங்கள்), 48. வெ.கோபாலகிருஷ்ணன் (மதுரகவி), 49. அ.ரா.சங்கரலிங்கம் (உணவு உலகம்), 50. அகிலா (சின்ன ச்சின்ன சிதறல்கள்), 51. கோவிந்தராஜ்.வா (தமிழன்), 52. பொய்யாமொழி (தமிழ் கம்ப்யூட்டர் நண்பன்), 53. அறிவு விக்னேஷ்குமார் (தோழன்), 54. சிவபார்கவி (சிவபார்கவி), 55. வஹாப் ஷாஜஹான் (டாஸ்மாக் செய்திகள்), 56. நிவாஸ் (medimiss), 57. நக்கீரன்.ஜெ (நாய் நக்ஸ்), 58. சைதை அஜீஸ் (saidaiazeez), 59. பரமேஸ்வரன் (கொங்குதென்றல்).

இதுவரை பதிவு செய்து கொள்ளாத நண்பர்கள் கீழ்வரும் இணைப்புகளில் சென்று தங்கள் வருகையைப் பதிவு செய்து கொள்ளவும். 




எத்தனை பேர் வருவார்கள் என்பதை உத்தேசமாகக் கணக்கிட முடிந்தால்தான் சிறப்பாக வரவேற்பதற்கும் நிகழ்ச்சியைத் திட்டமிடவும் ஏதுவாக இருக்கும். ஆகவே, இதைத் தவறாமல் செய்யவும்.



நேற்று புலவர் இராமாநுசம் ஐயா அவர்களின் வீட்டில் சென்னைப் பதிவர்கள் (சிலர் வர இயலவில்லை) சந்தித்து மதுரை விழாவிற்குச் செல்வது பற்றிப் விவாதிக்கப்பட்டது.  ஒரு பேருந்தை அமர்த்திக் கொண்டு விழா நடப்பதற்கு முதல் நாள் மதுரையில் இருக்கும்படி புறப்படலாம் என்பது திட்டம். கீழ்க்காணும் பதிவர்களின் அனைவரும் சென்னையிலிருந்து பேருந்தில் புறப்படுவது தீர்மானமாகி இருக்கிறது.

1) புலவர் இராமாநுசம், 2) மதுமதி, 3) கே.ஆர்.பி.செந்தில், 4) பாலகணேஷ். 5) மெட்ராஸ்பவன் சிவகுமார், 6) வேணுகோபாலன் (சேட்டைக்காரன்), 7) கவியாழி கண்ணதாசன், 8) இராய செல்லப்பா, 9) சீனு, 10) சரவணன் (ஸ்கூல் பையன்), 11) ஆர்.பி.ஆதித்யா (போலி பன்னிக்குட்டி). 12) அஞ்சாசிங்கம் செல்வின், 13) பிலாசபி பிரபாகரன். 14) சரவணன் (உண்மைத்தமிழன்). 15) வேடியப்பன் (டிஸ்கவரி).

சென்னைப் பதிவர்களில் சிலர் தங்கள் வருகையை உறுதி செய்ய காலஅவகாசம் கேட்டுள்ளனர். நேற்றைய சந்திப்புக்கு வர இயலாத சிலரையும் தொடர்பு கொண்டு பேச வேண்டியிருக்கிறது. ஆகவே, எண்ணிக்கை நிச்சயம் இன்னும் கூடும். நேற்றைய கூட்டத்திற்கு வராத, சென்னையிலிருந்து எங்களுடன் கிளம்பிவர விருப்பம் உள்ள பதிவர்கள் அனைவரும் bganesh55@gmail.com என்கிற என் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் ஒப்புதலைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.  சரியானபடி திட்டமிடுவதற்கு  அது உறுதுணையாக இருக்கும். நன்றி.

Thursday, September 11, 2014

மின்னல் திரை : மேரிகோம் (இந்தி)

Posted by பால கணேஷ் Thursday, September 11, 2014
மேரிகோம் - இந்தியாவுக்கு உலக அளவிலான பெண்கள் பாக்ஸிங் பிரிவில் ஐந்து முறை தங்கமும், ஒலிம்பிக்ஸில் ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்று தந்த வீராங்கனை. ‘மக்னிபிஷியன்ட் மேரி’ என்று விளையாட்டு ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் தன் சுயசரிதையை ‘அன்பிரேக்கபிள்’ என்ற தலைப்பில் எழுதி சென்ற ஆண்டு வெளியிட்டார். பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவுகளிலிருந்து விடுபட, நம்பிக்கை பெற, ‘பைட் கிளப்’ ஒன்றை தான் பிறந்த மணிப்பூரில் நடத்தி வருகிறார் மேரிகாம். அதனை பிரபலப்படுத்த பிராண்ட் அம்பாஸிடராக பிரியங்கா சோப்ரா இருக்க வேண்டுமென்று விரும்பித் தேர்ந்தெடுத்தார் மேரிகாம். இப்போது பிரியங்கா சோப்ராவின் நடிப்பில் அவரது வாழ்க்கை திரைப்படமாக வெளியாகி இருக்கிறது.


உண்மையின் மேல் சற்று புனையப்பட்ட இப்படக்கதையைச் சுருக்கமாகப் பார்க்கலாம். மணிப்பூரின் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த மேரிகாமுக்கு பாக்ஸிங் விளையாட்டு சிறு வயதிலிருந்தே மிகப் பிடிக்கிறது. வாலிபியான மேரிகோம் குடும்பத்திற்காக பந்தயம் கட்டும் தெருச் சண்டையில் ஜெயிக்கிறார். அங்கு அறிமுகமாகும் இளைஞனுடன் நட்பாகிறார். ஒரு சில்லறை சண்டையின் மூலம் பாக்ஸிங் கோச்சின் அறிமுகம் கிடைக்க, பாக்ஸிங் பயிற்சியைத் துவங்கி, இந்தியாவிற்காக மூன்று முறை தங்கம் வெல்கிறார். அறிமுகமான இளைஞன் இப்போது காதலாக, கல்யாணம் என்று முடிவெடுக்கையில் ’கல்யாணம் என்பது ஸ்போர்ட்ஸின் முடிவு’ என்று கோச்சின் கோபத்துக்கு ஆளாகிறார். அதை மீறி கல்யாணம் செய்து. இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார். பாக்ஸிங் ஈர்க்க, இரண்டாண்டுகளுக்குப் பின் கோச்சைச் சமாதானம் செய்து மீண்டெழுந்து வந்து பதக்கம் பெற பயிற்சி செய்கிறார். இதில் அவருக்கு வந்த தடைகள் என்னென்ன, அதை எப்படி வென்று பதக்கத்தை இந்தியாவுக்காக வென்று தந்தார் என்பதை 124 நிமிடங்களில் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

போலீஸ் அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் போன்று வாழ்கின்ற செலிப்ரிட்டிகளின் கதைகளைப் படமாக எடுக்கையில் நிஜத்தைவிட நிழலை சற்நே மிகைப்படுத்தித் தான் காட்ட வேண்டியதிருக்கும்.  இங்கே கூடீயவரை நிஜத்துடனேயே பயணித்திருக்கிறார்கள். அதனால் படத்தில் நாம் எதிர்பார்க்கும் வலிந்து திணிக்கப்படூம் திருப்பங்கள் எதுவும் இல்லாத நேரடித் திரைக்கதை சற்றே போரடிப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது - கிளைமாக்ஸ் நீங்கலாக. 

பாக்ஸிங்கிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கைக்குத் திரும்பி விட்டாலும் மனமெல்லாம் அது நிறைந்து ததும்பியிருக்க, தன் பழைய நியூஸ் கட்டிங்குகளை வெட்டி ஒட்டி மேரிகோம் ஆல்பம் தயாரிப்பது, தான் வென்ற மெடல்களை எடுத்து அணிந்து கொண்டு ரசிப்பது, பஸ்ஸில் பயணிக்கையில் சந்திக்கும் குட்டி ரசிகைக்கு கண்களில் நீர் திரையிட ஆட்டோகிராப் போட்டுத் தருவது என்று பல காட்சிகள் கவிதை மாதிரி அழகாக அமைந்து வசீகரிக்கின்றன. 

பிரியங்கா  சோப்ரா மேரிகோம் கேரக்டரைத் திரையில் உயிர்ப்பித்திருக்கிறார்.  ரியல் விளையாட்டு வீராங்கனைகள் பயிற்சி செய்வது போன்ற பயிற்சிகளை அவர் திரையில் செய்து காண்பிக்கையில் நமக்கு வலிக்கிறது. ஒரு காட்சியில் தலைமுடியிழந்து மொட்டை போட்டுக் கொண்டு வருகிற அளவுக்கு அந்த வீராங்கனைக்கான நடிப்பிற்கு நியாயம் செய்திருக்கிறார். செலக்ஷன் கமிட்டி மெம்பரிடம் மன்னிப்புக் கடிதம் கொடுக்க (மனமின்றி)ச் செல்ல, அங்கே அவர் பலர் முன்னிலையில் படித்துக் காட்டும்படிச் சொல்லி அவமானப்படுத்துகிற காட்சிபும் பிரியங்காவின் நடிப்பும் நன்று. அப்பா, கோச் மற்றும் கணவன் கேரக்டர்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் அளவிற்கு நிறைவாகச் செய்திருக்கின்றனர். என்றாலும் படம் முழுக்க வியாபித்திருப்பது மேரிகோமான பிரியங்காதான்.

இந்தியாவின் சார்பாக உலகப் போட்டிகளுக்கு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில் எப்படி பாலிடிக்ஸும் ஈகோவும் விளையாடுகிறது என்பதைக் காட்டும் காட்சிகளை மேலாகத் தாண்டிச்  சென்று விட்டார்கள். இதை மையச்சரடாக எடுத்துக் கொண்டு இன்னும் விரிவாக அலசியிருந்தால் இன்னும் படம் உயரம் தொட்டிருக்கும், அழுத்தமாக மனதில் பதிந்திருக்கும் என்பது என் எண்ணம். ‘நான் மணிப்பூரி என்பதற்காக மறுக்கிறீர்களா?’ என்று சீறும் மேரிகாம், ‘மூன்று முறை தங்கம் வென்ற எனக்கு ஹவில்தார் வேலைதான் உங்கள் அரசு தருமா?’ என்று சீறும் மேரிகோம்... ‘கிரிக்கெட்டைக் கொண்டாடுகிற நீங்க ஏண்டா 5 தங்கம் ஜெயிச்ச எங்களை மாதிரி வீராங்கனைகளைக் கண்டுக்க மாட்டேங்கறீங்க?’ என்று ஆக்ரோஷமாகச் சீறியிருக்க வேண்டாமோ...? அதேபோன்று கிளைமாக்ஸ் காட்சியும் ஒரு டெம்ப்ளேட்டான விஷயம்தான். எதிராளியிடம் கன்னாபின்னாவென்று அடி வாங்கி கதாநாயகன்/நாயகி விழுவதும் பின் எழுந்து எதிரியை துவம்சம் செய்து ஜெயிப்பதும் காலம் காலமா பார்த்துச்  சலிச்ச விஷயங்கள்டே.... இன்னுமா....?

சஞ்சய் லீலா பன்ஸாலியின் தயாரிப்பில் ஓமங்குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் இதுபோல சின்னச் சின்னக் குறைகளைக் கண்டுபிடிக்க முடிகிறது என்றாலும் அதைத்தாண்டி நல்ல ‘ஃபீல்குட்’ படமாக வந்திருக்கிறது. அழகான ஒளிப்பதிவும், உறுத்தாத பின்னணி இசையும் துணை செய்ய  (இந்தி) மொழி புரியா விட்டாலும் கதை புரியும் வண்ணம் எளிமையாக இருப்பது சிறப்பு.

மொத்தத்தில் : நம்ம கோவை ஆவி சொன்னார்... “இதுமாதிரியான முயற்சிகளை நாமல்லாம் என்கரேஜ் பண்ணணும் ஸார்... அப்பத்தான் போகப்போக இதைவிட நிறையப் படங்கள் கிடைக்கும்.” என்று. ஆவியின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். கூடவே - பிரியங்கா சோப்ராவின் அசுர உழைப்பிற்காகவும் அவசியம் பார்க்கலாம் என்று பரிந்துரைக்கிறேன்.

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube