Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Thursday, September 11, 2014

மின்னல் திரை : மேரிகோம் (இந்தி)

Posted by பால கணேஷ் Thursday, September 11, 2014
மேரிகோம் - இந்தியாவுக்கு உலக அளவிலான பெண்கள் பாக்ஸிங் பிரிவில் ஐந்து முறை தங்கமும், ஒலிம்பிக்ஸில் ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்று தந்த வீராங்கனை. ‘மக்னிபிஷியன்ட் மேரி’ என்று விளையாட்டு ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் தன் சுயசரிதையை ‘அன்பிரேக்கபிள்’ என்ற தலைப்பில் எழுதி சென்ற ஆண்டு வெளியிட்டார். பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவுகளிலிருந்து விடுபட, நம்பிக்கை பெற, ‘பைட் கிளப்’ ஒன்றை தான் பிறந்த மணிப்பூரில் நடத்தி வருகிறார் மேரிகாம். அதனை பிரபலப்படுத்த பிராண்ட் அம்பாஸிடராக பிரியங்கா சோப்ரா இருக்க வேண்டுமென்று விரும்பித் தேர்ந்தெடுத்தார் மேரிகாம். இப்போது பிரியங்கா சோப்ராவின் நடிப்பில் அவரது வாழ்க்கை திரைப்படமாக வெளியாகி இருக்கிறது.


உண்மையின் மேல் சற்று புனையப்பட்ட இப்படக்கதையைச் சுருக்கமாகப் பார்க்கலாம். மணிப்பூரின் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த மேரிகாமுக்கு பாக்ஸிங் விளையாட்டு சிறு வயதிலிருந்தே மிகப் பிடிக்கிறது. வாலிபியான மேரிகோம் குடும்பத்திற்காக பந்தயம் கட்டும் தெருச் சண்டையில் ஜெயிக்கிறார். அங்கு அறிமுகமாகும் இளைஞனுடன் நட்பாகிறார். ஒரு சில்லறை சண்டையின் மூலம் பாக்ஸிங் கோச்சின் அறிமுகம் கிடைக்க, பாக்ஸிங் பயிற்சியைத் துவங்கி, இந்தியாவிற்காக மூன்று முறை தங்கம் வெல்கிறார். அறிமுகமான இளைஞன் இப்போது காதலாக, கல்யாணம் என்று முடிவெடுக்கையில் ’கல்யாணம் என்பது ஸ்போர்ட்ஸின் முடிவு’ என்று கோச்சின் கோபத்துக்கு ஆளாகிறார். அதை மீறி கல்யாணம் செய்து. இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார். பாக்ஸிங் ஈர்க்க, இரண்டாண்டுகளுக்குப் பின் கோச்சைச் சமாதானம் செய்து மீண்டெழுந்து வந்து பதக்கம் பெற பயிற்சி செய்கிறார். இதில் அவருக்கு வந்த தடைகள் என்னென்ன, அதை எப்படி வென்று பதக்கத்தை இந்தியாவுக்காக வென்று தந்தார் என்பதை 124 நிமிடங்களில் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

போலீஸ் அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் போன்று வாழ்கின்ற செலிப்ரிட்டிகளின் கதைகளைப் படமாக எடுக்கையில் நிஜத்தைவிட நிழலை சற்நே மிகைப்படுத்தித் தான் காட்ட வேண்டியதிருக்கும்.  இங்கே கூடீயவரை நிஜத்துடனேயே பயணித்திருக்கிறார்கள். அதனால் படத்தில் நாம் எதிர்பார்க்கும் வலிந்து திணிக்கப்படூம் திருப்பங்கள் எதுவும் இல்லாத நேரடித் திரைக்கதை சற்றே போரடிப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது - கிளைமாக்ஸ் நீங்கலாக. 

பாக்ஸிங்கிலிருந்து விலகி குடும்ப வாழ்க்கைக்குத் திரும்பி விட்டாலும் மனமெல்லாம் அது நிறைந்து ததும்பியிருக்க, தன் பழைய நியூஸ் கட்டிங்குகளை வெட்டி ஒட்டி மேரிகோம் ஆல்பம் தயாரிப்பது, தான் வென்ற மெடல்களை எடுத்து அணிந்து கொண்டு ரசிப்பது, பஸ்ஸில் பயணிக்கையில் சந்திக்கும் குட்டி ரசிகைக்கு கண்களில் நீர் திரையிட ஆட்டோகிராப் போட்டுத் தருவது என்று பல காட்சிகள் கவிதை மாதிரி அழகாக அமைந்து வசீகரிக்கின்றன. 

பிரியங்கா  சோப்ரா மேரிகோம் கேரக்டரைத் திரையில் உயிர்ப்பித்திருக்கிறார்.  ரியல் விளையாட்டு வீராங்கனைகள் பயிற்சி செய்வது போன்ற பயிற்சிகளை அவர் திரையில் செய்து காண்பிக்கையில் நமக்கு வலிக்கிறது. ஒரு காட்சியில் தலைமுடியிழந்து மொட்டை போட்டுக் கொண்டு வருகிற அளவுக்கு அந்த வீராங்கனைக்கான நடிப்பிற்கு நியாயம் செய்திருக்கிறார். செலக்ஷன் கமிட்டி மெம்பரிடம் மன்னிப்புக் கடிதம் கொடுக்க (மனமின்றி)ச் செல்ல, அங்கே அவர் பலர் முன்னிலையில் படித்துக் காட்டும்படிச் சொல்லி அவமானப்படுத்துகிற காட்சிபும் பிரியங்காவின் நடிப்பும் நன்று. அப்பா, கோச் மற்றும் கணவன் கேரக்டர்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் தங்கள் அளவிற்கு நிறைவாகச் செய்திருக்கின்றனர். என்றாலும் படம் முழுக்க வியாபித்திருப்பது மேரிகோமான பிரியங்காதான்.

இந்தியாவின் சார்பாக உலகப் போட்டிகளுக்கு வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில் எப்படி பாலிடிக்ஸும் ஈகோவும் விளையாடுகிறது என்பதைக் காட்டும் காட்சிகளை மேலாகத் தாண்டிச்  சென்று விட்டார்கள். இதை மையச்சரடாக எடுத்துக் கொண்டு இன்னும் விரிவாக அலசியிருந்தால் இன்னும் படம் உயரம் தொட்டிருக்கும், அழுத்தமாக மனதில் பதிந்திருக்கும் என்பது என் எண்ணம். ‘நான் மணிப்பூரி என்பதற்காக மறுக்கிறீர்களா?’ என்று சீறும் மேரிகாம், ‘மூன்று முறை தங்கம் வென்ற எனக்கு ஹவில்தார் வேலைதான் உங்கள் அரசு தருமா?’ என்று சீறும் மேரிகோம்... ‘கிரிக்கெட்டைக் கொண்டாடுகிற நீங்க ஏண்டா 5 தங்கம் ஜெயிச்ச எங்களை மாதிரி வீராங்கனைகளைக் கண்டுக்க மாட்டேங்கறீங்க?’ என்று ஆக்ரோஷமாகச் சீறியிருக்க வேண்டாமோ...? அதேபோன்று கிளைமாக்ஸ் காட்சியும் ஒரு டெம்ப்ளேட்டான விஷயம்தான். எதிராளியிடம் கன்னாபின்னாவென்று அடி வாங்கி கதாநாயகன்/நாயகி விழுவதும் பின் எழுந்து எதிரியை துவம்சம் செய்து ஜெயிப்பதும் காலம் காலமா பார்த்துச்  சலிச்ச விஷயங்கள்டே.... இன்னுமா....?

சஞ்சய் லீலா பன்ஸாலியின் தயாரிப்பில் ஓமங்குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் இதுபோல சின்னச் சின்னக் குறைகளைக் கண்டுபிடிக்க முடிகிறது என்றாலும் அதைத்தாண்டி நல்ல ‘ஃபீல்குட்’ படமாக வந்திருக்கிறது. அழகான ஒளிப்பதிவும், உறுத்தாத பின்னணி இசையும் துணை செய்ய  (இந்தி) மொழி புரியா விட்டாலும் கதை புரியும் வண்ணம் எளிமையாக இருப்பது சிறப்பு.

மொத்தத்தில் : நம்ம கோவை ஆவி சொன்னார்... “இதுமாதிரியான முயற்சிகளை நாமல்லாம் என்கரேஜ் பண்ணணும் ஸார்... அப்பத்தான் போகப்போக இதைவிட நிறையப் படங்கள் கிடைக்கும்.” என்று. ஆவியின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். கூடவே - பிரியங்கா சோப்ராவின் அசுர உழைப்பிற்காகவும் அவசியம் பார்க்கலாம் என்று பரிந்துரைக்கிறேன்.

Wednesday, May 14, 2014

மின்னல் திரை : யாமிருக்க பயமே

Posted by பால கணேஷ் Wednesday, May 14, 2014
நீண்ட நாட்களுக்குப் பிறகு குறை சொல்வதற்கு அதிகமில்லாமல் நிறைவாக வந்திருக்கும் ஒரு தமிழ்ப்படம் ‘யாமிருக்க பயமே’. பொதுவாக ஒரு திகில் படத்தின் இடையில் நகைச்சுவைக் காட்சிகள் வருவது படத்தின் திகிலை நீர்த்துப் போகச் செய்துவிடும். இவ்ர்கள் சற்று மாறுதலாக நகைச்சுவைக் காட்சிகளிலேயே திகிலை வரவழைக்கலாமே என்று முயன்று அதில் வெற்றியும் அடைந்துள்ளார்கள்.

கதை என்னமோ சிம்பிள்தான். கடன் கதாநாயகனின் கழுத்தை நெறிக்க, தந்தைவழி பூர்வீக சொத்தாக ஒரு பழைய பங்களா கிடைக்க, அதை ஒரு ஹோட்டலாக மாற்றி புதுப்பிக்க, அவனுக்குத் துணையாக மேனேஜரும் அவன் தங்கையும். அங்கே தங்க வரும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் மரணமடைய, கதாநாயகன் பிணங்களை மறைக்க, ஒருசமயம் தோண்டிய பிணங்கள் எதுவும் குழியில் இல்லை என்பது தெரிய, இவர்கள் அதிர, மர்ம உருவமாக நடமாடும் ஒருவனை இவர்கள் மடக்கிப் பிடிக்க, ஆவியின் (கோவை ஆவி அல்ல...) சரிதம் இவர்களுக்குப் புரிய, கதாநாயகனின் உயிருக்கு ஆவி குறிவைக்க, எப்படித் தப்புகிறான் என்பதை விளக்கி படம் நிறைவடைகிறது.

கதையை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரங்கள் நான்கு. கதாநாயகனாக வரும் கிருஷ்ணா திகில் காட்சிகளில் பயந்தும், ஆங்காங்கே அசடு வழிந்தும், சொத்துக்கு வாரிசானவனின் அதிகார தோரணையை வெளிப்படுத்தியும் படத்துக்குத் தேவையான சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். கதாநாயகியாக ரூபா மஞ்சரி அழகாக இருக்கிறார். நன்றாகவே நடித்திருக்கிறார். ஓரிரண்டு க்ளோஸப் காட்சிகளில் பயமுறுத்துகிறார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ஓவியா தன்னுடைய திறந்த நடிப்பை... ஸாரி, சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். மேனேஜராக வரும் கருணாகரனின் நகைச்சுவை கலந்த நடிப்பு படத்துக்குப் பெரிய பலம். சீரியஸான் காட்சியில் கூட, ”ஏன் பாஸ்... இவன் தலையில அடிச்சு காலி பண்ணினது மேடம்தான். இந்தக் கொலையை என் கணககில சேர்க்க மாட்டீங்கல்ல...?” என்று இவர் கேட்கையில் சிரிப்பை அடக்க முடியவில்லை. சூப்பருங்கோ!

சாதாரணமாக திகில் படங்களில் வரும் க்ளிஷேக்களான கதாநாயகி பயந்து நடுங்குகையில் பூனை தாவுவது போன்ற விஷயங்களை கவனமாகத் தவிர்த்திருக்கிறார்கள். ‘காஞ்சனா’ மாதிரி படங்களில் பேய் வரும் காட்சிகள் திகிலாகவும் மற்ற காட்சிகளை நகைச்சுவையாக அமைத்தும் இரண்டையும் மிக்ஸ் செய்வார்கள். இதில் நேர்மாறாக பேய் வருகிறது என்பதையே நகைச்சுவையாக பயன்படுத்தியிருப்பது அசத்தல்... “வாடா... வாடா... பன்னிமூஞ்சிவாயா...” என்று பேயைக் கூப்பிடும் காட்சிகளில் தியேட்டரில் கலகலப்பு. 

விசாரணைக்கு வரும் இன்ஸ்பெக்டர், ஸ்கூல் டீமை நடத்திவரும் டீசசர், மகாநதி சங்கர் போன்ற துணை கதாபாத்திரங்களும் நன்றாக நடித்துள்ளார்கள் என்றால், ஏறத்தாழ க்ளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் வரும மயில்சாமி சிக்ஸர் அடித்திருக்கிறார். கதைக்கும் நகைச்சுவைக்கும் தேவைப்படும் அவரது காரெக்டரைசேஷன் அருமை. படம் பார்க்கும் போதே இப்படி நகைச்சுவையான திகிலுக்கு என்ன மாதிரி க்ளைமாக்ஸ் அமைப்பார்கள் என்று சிந்தனை ஒருபக்கம் ஓடிக் கொண்டிருந்தது. பிரச்னையை ஆரம்பித்து வைத்த மகாநதி சங்கர் கேரக்டரை க்ளைமாக்ஸில் கொண்டு வந்து. அவர் மூலமே முடித்தும் வைத்திருப்பது அருமையான திரைக்கதை உத்தி.

பயத்தை விதைக்கும் நோக்கில் காட்சிகளை அமைக்கையில் கதாநாயகி பயந்து ஓடுவதும், வியர்வையில் நனைந்து ஈரமாகி, நெஞ்சத்தை கையால் அழுத்திக் கொண்டு பயப்படுவதும் பார்க்கையில் ‘இன்னும் கொஞ்ச நேரம் பயப்படுடி செல்லம்’ என்று பார்க்கிறவர்களுக்குத் தோன்றும் விபரீதங்கள் பல திகில் படங்களில் நேர்வதுண்டு. இதையே சாக்காகப் பயன்படுத்தி திகில் படங்களில் செக்ஸியான காட்சிகளையும் வைக்கலாம். இந்தப் படத்திலும் அந்த வசதியைப் பயன்படுத்தி (ஓவியாவின் முதுகில் பிட்நோட்டீஸே ஒட்டலாம்)  ஆங்காங்கே இரட்டை அர்த்த வசனங்களாலான நகைச்சுவை தலைகாட்டுகிறது. நல்லவேளையாக... படம் போகிற வேகத்தில் கவனிக்கப்படாமலும் போகின்றன.

டீச்சர் வைததிருக்கும் டப்பாவில் எத்தனை ஜெம்ஸ் இருக்கிறது என்று கருணாகரன் சொல்வது, அந்தப் பள்ளிக்கூட டீமில் மட்டும் யாரும் ஏன் இறக்கவில்லை என்று பார்ப்பவர் மனதில் எழும் கேள்விக்கு இன்ஸ்பெக்டர் கேரக்டர் மூலம் பதில் வைத்திருப்பது என்று ஆங்காங்கே திரைக்கதையில் புத்திசாலித்தனம் பளிச்சிடுகிறது. அந்த ப்ரைட் ரைஸ் திருடனாக வருபவர் சொல்லும் ப்ளாஷ்பேக் காட்சிகளில் பேயாக வரும் பெண் வெகு அழகாக இருக்கிறார். (நாங்கல்லாம் பேயையே சைட் அடிப்போமில்ல...) ஓவியாவை இந்த கேரக்டருக்குப் போட்டிருந்தால் டைரக்டருக்கு மேக்கப் செலவாவது மிச்சமாகியிருக்கும், ஹும்...!

 ”பம்ப்செட் பத்மினிகள் படத்தை நீங்க பார்த்ததுல வியப்பில்லை பாஸ். இவங்க எப்படிப் பாத்தாங்கன்றதுதான் ஆச்சரியம்” என்கிற கருணாகரனிடம் அசடுவழிந்து ரூபாமஞ்சரி எஸ்கேப்பாவது. “மூடிக்கிட்டு குழியை வெட்டுரா...” “நான் வாயே திறக்கலையே... ஏன் மூடச் சொல்றாரு?” ”முண்டம். அவர் சொன்னது ஜிப்பை. முதல்ல மூடு” என்கிற காட்சி என்று நிறைய நிறைய காட்சிகளில் வாய்விட்டு. மனம் விட்டுச் சிரிக்கலாம்.

படத்தின் பிண்ணணி இசை கொஞ்சமும் உறுத்தல் எதுவும் இல்லாமல் படத்திற்குத் தேவையானதை வழங்கியிருக்கிறது. (அந்த அறிமுக இசையமைப்பாளரின் பெயரைக் குறித்துக் கொள்ளத் தவறி விட்டேன். ஸாரி) இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார் கே.வி.ஆனந்தின் சிஷ்யர் டீக்கே - விறுவிறுப்பான, கலகலப்பான திரைக்கதைக்காக இவருக்குச் சொல்லலாம் ஓக்கே!

ஏதாவது ஒரு நல்ல விஷய்ம் ./ திறமை நம்மவர்களிடமிருந்து வெளிப்பட்டால் ’இது ஒரிஜினல் இல்ல... ரஷ்யப் படத்துலருந்து சுட்டது’ ‘ஜப்பான் படத்துலருந்து உருவுனது’ என்றெல்லாம் சொல்ல ஒரு கும்பலே புறப்படும். அந்த வகையில் இந்தப் படமும் ஒரு கொரியத் திரைப்படத்தை தழுவியது என்று இந்தத் தளத்தில் குற்றச்சாட்டை வீசியுள்ளனர். ஆனால் என்னைப் பொறுத்தவரை இவ்வளவு அழகாக நம் மொழிக்கு ஏற்றாற்போல் நல்ல என்டர்டெய்னரைக் கொடுக்க முடியுமென்றால் சுடுவது சுகம்!  (அட... ‘சுடுவது சுகம்’ங்கறது க்ரைம் கதைக்கு நல்ல டைட்டில் இல்ல...?)

Wednesday, March 26, 2014

மின்னல் திரை : குக்கூ

Posted by பால கணேஷ் Wednesday, March 26, 2014
ரு காதல் கதை திரைப்படமாகிறது என்றால் என்னவெல்லாம் நடக்கும்...? காதல் ஜோடியின் காதலுக்கு எதிர்ப்பு வரும். ‘எதை நம்பிடா உனக்கு பொண்ணு குடுக்கறது?’ என்ற கேள்வி வரும். . காதலி தன் வீட்டில் சத்யாக்கிரகம் செய்து காதலுக்காக போராடுவார். கதாநாயகன் கஷ்டப்பட்டு உழைத்து (பலசமயம் ஒரே பாடலில்) பணம் சம்பாதித்து விடுவார். அதைத் தந்து காதலில் வெல்வார். அல்லது அவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைத் தொலைத்து விட்டு காதலியுடன் ஊரைவிட்டு ஓடுவார் அல்லது காதல் ஜோடி தற்கொலை செய்து கொள்ளும். இவற்றுக்கிடையில் அவர்கள் காதலுக்கு பலர் உதவுவார்கள். கதாநாயகன் சிலபல சண்டைகளைச் செய்வார். கனவில் டூயட் பாடுவார். ----இவையெல்லாமே (இன்னும் நிறைய இருக்கு) பொதுவாகக் காதல் படங்களுக்கான பொதுவான ஃபார்முலா என்பதை நீங்கள் அறிவீர்கள். இவற்றில் பெரும்பான்மையை தன்னகத்தே கொண்டு, கதாநாயகனும் நாயகியும் பார்வைத்திறன் அற்றவர்கள் என்கிற வித்தியாசமான பின்புலத்தால் நல்ல படம் என்கிற பெயரைப் பெற்றிருக்கிறது ‘குக்கூ’ திரைப்படம்.

+ தன் ‘வட்டியும் முதலும்’ கட்டுரைத் தொடர்கள் மூலம் சாதாரண மனிதர்களின் உணர்வுகளைத் தொட்ட அசாதாரண எழுத்துக்களால் கவனம் ஈர்த்தவர் ராஜு முருகன். அவரின் முதல் திரைப்படமான இதில் பார்வையற்றவர்களின் உலகத்தை மிக இயல்பாகப் பதிவு செய்திருக்கிறார். நிறத்தை இளையராஜாவின் பாடல்கள் மூலம் அறிவதாக நாயகி சொல்வது, நாயகன் மற்றும் அவரின் நண்பர்களின் அனாயாசமான ஹாஸ்யப் பேச்சுகள் என்று பல விஷயங்களை நுணுக்கமாக காட்சிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.

- கதாநாயகன் தன் காதலிக்காக ரோட்டில் தாறுமாறாகச் செல்லும் வாகனங்களைப் பொருட்படுத்தாமல் (பலரின் சாவுகிராக்கி போன்ற திட்டுகளைத் தாங்கி) ஓடி எந்த வாகனத்திலும் இம்மியும் அடிபடாமல் ஓடி அவள் தொலைத்த பொருளை எடுத்துவரும் காட்சிகள் பல தமிழ்ப்படங்களில் எனக்கு எரிச்சலூட்டிய ஒன்று. இந்தப் படத்தில் பார்வையற்ற ஹீரோ அதைச் செய்கிற அரிய காட்சிதனைக் கண்ணுற என்ன புண்ணியம் செய்தனை யான்!

+ சந்திரபாபுவை நினைவுபடுத்துகிற ஒரு கேரக்டர் வடிவமைக்கப் பட்டிருக்கும் விதம. அதில் நடித்துள்ளவரின் இயல்பு மீறாத அருமையான நடிப்பு, எம்.ஜி,ஆராக நடித்தவர் படம் முழுவதும் ஒரு வசனமும் பேசாமல் நடமாடுவது (வாத்யார் வேஷம் போட்டதாலயோ என்னவோ நாயகன் கஷ்டத்தில் இருக்கும்போது தன் தங்கச்சங்கிலியை தானம் வழங்குகிறார்) இப்படி இயல்பான நடிப்பை நடித்தவர்களிடமிருந்து பெற்றிருக்கிறார் இயக்குனர். அவரே கதைசொல்லியின் கதாபாத்திரம் ஏற்று நடிததிருக்கும் உத்தியும் நன்று. நாயகனாக நடித்திருக்கும் தினேஷ் என்பவர் நன்றாகவே செய்திருக்கிறார். எனினும் நடிப்பில் அவரைவிட அதிகம் ஸ்கோர் செய்வதென்னவோ நாயகியான மாளவிகாதான்.

- 3 லட்ச ரூபாயுடன் காதலியின் அண்ணனைச் சந்திக்க வரும் நாயகனை போலீஸ் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து பின் இன்ஸ்பெக்டர் அவனை தன் பைக்கிலேயே சைதாப்பேட்டையில் நள்ளிரவில் டிராப் செய்து, அவன் பணப்பையை அவரிடத் தர, பார்வையுள்ள நமக்கே அந்தப் பணத்தை எண்ண பல நிமிடங்கள் பிடிக்கும் என்ற நிலையில் பார்வையற்ற நாயகன் அதை சில விநாடிகளிலேயே எண்ணி. “சார் அம்பதாயிரம் குறையுது” என்று கூவியபடி சிலஅடி தூரமே சென்றுவிட்ட அவரைத் துரத்துகிறான். அடாடா...! அதேபோல க்ளைமாக்சில் வேகமெடுத்து ஓடும் ரயிலிலிருந்து குதிப்பதும், பிளாட்பாரக் கடைகளில் இடித்தும்., தூணிலும் இடித்துக் கொண்டு வரும் காட்சி இருக்கிறதே... நானும் உணர்ச்சிவசப்பட்டு அருகிலிருந்த கோவை ஆவியின் தோள்களில் முட்டிக் கொண்டேன்.

+ பார்வைத்திறன் குறைந்தவர்கள் சிலரிடம் தங்களின் அந்தக் குறையைப் பயன்படுத்தி பணம் சேர்க்கும் குணம் இருக்கும். வேறு பலரிடம் தங்கள் ஊனத்துக்காக மற்றவர்கள் அனுதாபப்படுவது பிடிக்காத மிகை தன்னம்பிக்கை இருக்கும். கதாநாயகி நாயகன் செய்யும் உதவியை ஏற்க மறுப்பது. தன் கைடின் காதலி தரும் பழந்துணிகளை புறக்கணிப்பது ஆகிய காட்சிகளில் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் ராஜுமுருகன். அதேபோல் அவர்களிடம் இயல்பாகவே இருக்கும் நகைச்சுவையுணர்வை நாயகனின் நண்பனின் கதாபாத்திரத்தின் மூலம் சொல்லியிருப்பது அருமை. பல காட்சிகளில் ஸ்கோர் செய்கிறது அவரின் நகைச்சுவை. குறிப்பாக.. சர்ச்சில் ‘வொண்டர் வொண்டர்’ என்று பாதிரியார் போலவே அவர் சொல்லும் காட்சி.

- நாயகனைப் போல ஷார்ப்பான கேட்கும் திறன் தனக்கு இல்லையென்பதால் அவனுக்கு செண்ட் வாங்கித் தந்து அதன் மூலம் அவனை அடையாளம் காண நினைக்கிறாள் நாயகி. நாயகன் அந்த செண்ட்டை நண்பர்களுக்கும்., ஸ்டேஷன் மாஸ்டருக்கும் அடித்துவிட, அனைவரிடமும் அவனாக எண்ணிப் போய் பேசி ஏமாறுகிறார் நாயகி. க்ளைமாக்ஸ் காட்சியில் ரயில் நிலையத்தில் நாயகியைத் தேடியலையும் நாயகன் அவள் கிடைக்காத ஏமாற்றத்தில் படிக்கட்டில் நின்று அவர்களின் காதல் சந்திப்புக் குறியீட்டின்படி வாக்கிங் ஸ்டிக்கால் பலமாகத் தட்டுகிறான். பல கஷ்டங்களைச் சந்தித்த அந்த காதலர்கள் பிரிவதைப் பொறுக்காத வாயுதேவன் பரபரப்பான ரயில் நிலையத்தின் ஒலிகளைப் புறக்கணித்து நாயகியின் செவிகளில் அந்த ஒலியை மட்டும் கொண்டு சேர்க்கிறார். நாயகி மற்ற சப்தங்களால் துளியும் பாதிக்கப்படாமல் (க்ளைமாக்ஸ்லகூட நாயகிக்கு காது ஷார்ப்பாகலைன்னா எப்படிங்க படத்தை முடிக்கிறது?) ஒலி வந்த இடத்தைக் கண்டடைந்து நாயகனைத் தொட்டுணர்ந்து கட்டித் தழுவ, படம் முடிகிறது. (ஹப்பாடா!)

+ இயல்பான, ரசிக்கத்தக்க வசனங்கள் படத்தின் பலம். “செல்போன் இல்லாத காலத்துல காதலிச்சவன்லாம் புண்ணியம் பண்ணவங்கடா” என்கிற வசனத்திற்கு தியேட்டரில் பலத்த சலசலப்பு. இதுபோல படம் நெடுகிலும் ரசிக்க வைக்கிற வசனங்கள் அருமை. உறுத்தாத பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். நள்ளிரவில் ஹைவேஸில் தவிக்கும் கதாநாயகிக்கு ஆதரவு தந்து வேனில் அழைத்துச் செல்பவர் (இதற்குமுன் பார்த்த படங்களின் பாதிப்பில்) அவளுக்குத் தொல்லை தருபவராக மாறுவார் என்ற நம் எண்ணத்திற்கு மாறாக அவளுக்கும் நாயகனுக்கும் உதவுபவராக அவரைக் காட்டியிருக்கும் பாஸிட்டிவ் அப்ரோச் அருமை.

- “நான் போகிறேன்” என்று கோபித்துக் கொண்டு செல்லும் நாயகி அசால்ட்டாக மும்பை வரை போய் விடுவதும். அங்கே கன்னியாஸ்திரிகளுடன் சேர்ந்து சேவை செய்யும் பணி அவளுக்குக் கிடைப்பதும்., மும்பையில் அவளைப் பார்த்ததாக ராஜுமுருகன் தகவல் தந்த அடுத்த நிமிடம் நாயக்ன் மும்பை ரயிலைக் கண்டறிந்து பயணிப்பதும்.... நடைமுறையில் எத்தனை தூரம் சாத்தியமோ தெரியவில்லை...!

“மொத்தத்துல என்னதான்யா சொல்ல வர்றே?” என்று கேட்பவர்களுக்கு...! ‘இதுபோன்ற வித்தியாசமான படங்களை உற்சாகப்படுத்தினா தான் நல்ல படங்கள் நிறைய வரும்’ என்று என் நண்பரொருவர் சொன்னார். புதிய பாட்டிலிலில் பழைய கள்ளையே தந்திருப்பதை வித்தியாசம் என்று கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடில்லை. சமுதாயத்தைக் கெடுக்கிற விஷயங்களைச் சொல்லாமல் இருப்பதாலேயே, க்ளிஷேக்களைத் தவிர்ப்பதாலேயே... (அப்படியும் சொல்ல முடியாதபடி ஏகப்பட்ட அபத்தங்கள் படத்தில்) ஒரு படம் நல்ல படமாகி விடாது ஒருநாளும். ஆக, என் பார்வையில்... முதல் பாதி ஓ.கே. பின் பாதி ஐயையோ! (என்ன பார்வைடா உன் பார்வைன்னு யாரும் பாயாதீங்க. உலகசினிமாக்களைப் பார்த்து உயர்தர ரசனை வளர்த்துக் கொண்ட அறிவாளியல்ல நான். உள்ளூர் சினிமாக்களை விசிலடித்துப் பார்க்கும் பாமர ரசிகன் நான். என். பார்வை இந்த லட்சணம்தான்!.)


Saturday, March 15, 2014

சாண்டில்யனின் சரித்திர நாவல்கள் என்றாலே நினைவில் முட்டுபவை ‘கடல் புறா’வும், ‘யவனராணி’யும்தான். யவனராணியைவிடவும் கடல்புறா அவரின் சிறந்த படைப்பு என்பது என் கருத்து. அதன் நாயகன் தரைப்படைத் தளபதியான கருணாகர பல்லவன் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக மரக்கலம் (கப்பல்) செலுத்தும் கலையை அகூதா என்ற சீன கடற்கொள்ளைக்காரனிடம் கற்று தனக்கென்று ‘கடல்புறா’ என்ற மரக்கலத்தை வடிவமைத்து கடல்வீரனாக மாறி, சோழதேசத்திற்கு வெற்றி தேடித் தருவான். அந்நாளில் கடல் கடந்து சென்ற தமிழர்கள் வாணிபத்தை விஸ்தரிக்க, தமிழக மன்னர்களோ மரக்கலம் ஓட்டி போர் செய்து தங்கள் அதிகாரத்தை விஸ்தரித்தனர். தொழில்நுட்பங்கள் எதுவுமின்றி இயற்கை அனுகூலமாக இருக்கும் நேரத்தை பயன்படுத்தியும் அனுகூலமற்ற நேரங்களில் போராடியும் அந்நாளிலேயே பலநாடுகளுக்கு கப்பலில் சென்று சாதித்த இனம் தமிழினம்.

 இந்த நாவலில் சாண்டில்யன் மரக்கலத்தின் வகைகள் என்னெனன என்பதை விரிவாக விளக்கி எழுதியிருப்பார். கப்பல் தலைவன் பருவக் காற்று வீசும் தருணம் உட்பட ஒவ்வொரு அம்சத்தையும் கணக்கிட்டு செயல்படுவதை சொல்லியிருப்பார். மரக்கலத்தின் பாய்மரத் தண்டில் ஏறி நடுத்தண்டில் நின்ற வண்ணம் கருணாகர பல்லவனும் காஞ்சனா தேவியும் காதல் செய்வார்கள். அப்படி ஒவ்வொரு வரியையும் காட்சிகளையும் ரசித்து பலமுறை நான் படித்த புத்தகம் என்றால் அது ‘கடல்புறா’தான். ஒவ்வொரு முறை படிக்கையிலும் மானசீகமாக கருணாகரனாக என்னை உணர்ந்து கடல் பயணத்தின் சுகத்தை மனதில் காட்சிப்படுத்தி நுகர முயல்வேன். ஓரளவுதான் உருப்பெறும். விஷுவலாக என்னால் உணர முடியாது. அந்த அவஸ்தையைத் தீர்த்து வைத்தது நான் பார்த்த வாத்யாரின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம்.

படத்தில் வைத்தியராக இருக்கும் எம்.ஜி.ஆர். சந்தர்ப்ப சூழ்நிலையால் நாடு கடத்தப்பட்டு கடல் வீரனாக மாறுவார். கருணாகர பல்லவன் போல பாய்மரத்தில் நடுத்தண்டில் தொங்கியபடி ‘காற்று நம்மை அடிமையென்று விலக்கவில்லையெ’ என்று பாடுவார். சேந்தன் கடல்புறாவில் சுக்கான் பிடிப்பது போல படத்தில் நம்பியார் சுக்கான் பிடிப்பார். காஞ்சனாவுடன் கருணாகரன் காதல் செய்வது போல வாத்யார் ஜெயலலிதாவுடன் பாய்மர ஊஞ்சலில் தொங்கியபடி பாடுவார். அட... இதிலும் வாத்யாரின் கப்பல் சர்வாதிகாரியின் கபப்லுடன் கடல் போரில் ஈடுபடுகிறது! வாளேந்தி விளையாடுகிறார் வாத்யார்...! அந்நாளைய மரக்கலங்கள் எப்படி இருந்தன. எப்படி செலுத்தப்பட்டன என்பதை நாவலில் அந்த ஜாம்பவான் வர்ணித்திருந்ததை வண்ணத்தில் என் கண்முன் காட்சிப்படுத்தினார் இந்த ஜாம்பவான். அதன்பின் என் கப்பல் கனவுகள் கலர்ஃபுல்லாகின. அவற்றில் எனக்குப் பதில் வாத்யார்தான் தெரியத் தொடங்கினார் கதாநாயகனாக. வாத்யாருக்கு இந்தப் படம் உருவாக்கத் தூண்டுதலாக இருந்தது ஒரு ஆங்கிலப்படம் என்றாலும் என்னைப் பொறுத்தமட்டில் கடல்புறாதான் இப்படத்தின் பெயரைச் சொன்னால் மனதில் நிழலாடுகிறது.

வாத்யாரின் வெற்றிப்படங்களில் குறிப்பிடத்தக்க தனியிடம் இந்தப் படத்துக்கு உண்டு. சிவாஜியை வைத்து பல வெற்றிப் படங்களை தந்த பி.ஆர்,பந்துலு அவர்கள் ஒருசமயம் நஷ்டத்தில் இருந்து மீள ஒரு வெற்றிப்படம் தந்தேயாக வேண்டிய கட்டாயத்தில், தயக்கத்துடன் வாத்யாரை அணுக, உடனே சம்மதித்து அவர் நடித்துத் தந்த படம் இது. பின்னாளில் பத்மினி பிக்சர்ஸில் தேடிவந்த மாப்பிள்ளை, ரகசியபோலீஸ் 115 என பல வெற்றிப்படங்கள் வாத்யாரின் தோட்டத்தில் விளைய அச்சாரமிட்ட மெகாஹிட் படம் இது. மெல்லிசை மன்னர்கள் கூட்டணியில் உருவான பாடல்கள் அத்தனையும் இன்று கேட்டாலும் ரசிக்க வைப்பவை. காட்சிகளுக்கு அழகுசேர்த்த வசனங்களாலும் குறிப்பிடத்தக்க படம் இது. இன்றளவும் பதிவர்கள்/பத்திரிகைகள் பயன்படுத்தும் ‘நம்க்கு வாய்த்த அடிமைகள் மிகமிகத் திறமைசாலிகள்’ என்ற வசனமாகட்டும், ‘உங்கள அதிகாரமென்ன சிலப்பதிகாரமா? காலத்தை வென்று நிலைப்பதற்கு?’ என்கிற வீரவசனமாகட்டும், ‘சற்றுப்பொறு கண்ணே... இவருடன் விளையாடிவிட்டு வருகிறேன்’ என்ற கேலி+ஜாலியாக வாத்யார் சண்டைக்குத் தயாராகும் வசனமாகட்டும், ‘மணிமாறா... மதங்கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?’ என்று நம்பியார் கொக்கரிக்க, ‘ஏன் தெரியாமல்... சினங்கொண்ட சிங்கத்திடம் தோற்றோடும்’ என வாத்யார் அசால்ட்டாக பதிலளிப்பதாகட்டும் அத்தனையும் கைதட்டல் பெற்ற ரசிக்கத்தக்க வசனங்கள். நாகேஷின் காமெடியும் ஒரு மிகப்பெரிய ப்ளஸ்.

த்தனை சிறப்புகளுடன் என் மனதில் பசுமையாக இடம் பிடித்திருந்த இந்தப் படத்தை பார்த்து பல ஆண்டுகளாகி விட்டதால் புதிய தொழில்நுட்பத்தில் அகன்ற திரையில், துல்லிய ஒலிச்சேர்க்கையில் வருகிறது என்ற அறிவிப்பைக் கண்டவுடனேயே முதல் நாளே பார்க்கும் ஆவலில் மெட்ராஸ்பவன் சிவகுமாரைப் படுத்தியெடுத்து டிக்கெட் புக் பண்ண வைத்துவிட்டேன். ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தை ரீமிக்ஸில் இப்படி ஆர்வமாக ஓடிப்போய்ப் பார்த்து நொந்த அனுபவம் மனதின் ஓரத்தில் வந்து போனாலும்கூட வாத்யார் படம் என்பதால் எப்படி இருந்தாலும் பார்க்கலாம் என்று மனதிற்கு சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

டம் இன்ப அதிர்ச்சி தந்தது. டைட்டிலை புதிதாக கிராபிக்ஸ் வொர்க் செய்திருந்தது வெகுஜோர். அகன்ற திரையில் வாத்யாரும் நம்பியாரும் மோதும் சண்டையில் வாட்கள்கூட பளிச்சென்று காட்சி தருகின்றன. கலைச்செல்வி ஜெயலலிதா இன்றைய நஸ்ரியா போல அவ்வளவு அழகாய்த் தெரிகிறார். விஜயலக்ஷ்மி நெற்றியின் நடுவில் வைக்காமல் வலது ஓரத்தில் பொட்டு வைத்திருப்பதுகூட துல்லியமாகத் தெரிகிறது. ஹி.... ஹி.... ஹி...! இன்னொரு ப்ளஸ் நம்ம விச்சு-ராமு பேர்ட்ட ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கை எடுத்துக்கிட்டு அதைக் கெடுக்காம அழகா டிஜிட்டலைஸ் பண்ணியிருக்கறது செவிகளுக்கு மதுரம்!  படத்தை டிஜட்டலைஸ் பண்ணுவதற்காக நிறைய சிரத்தை எடுத்துக்கிட்டு அசத்தலா பண்ணியிருக்கற டீமுக்கு தரலாம் பாராட்டும் பொக்கேயும்..! (இன்னொரு முறை படத்தப் பாத்துரணும்னு முடிவு பண்ணிருக்கேன் மக்கா)

நாகேஷின் காமெடிசீன் ஒன்று மட்டும் வெட்டப்பட்டிருக்கிறது. (மண்டையோட்டை கையிலெடுத்து ‘எவனோ ஒருத்தன் சிரிச்சுக்கிட்டே செத்திருக்கான்’ என்கிற சீன்) ஆனால் அது பலமுறை இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்பதால் உறுத்தவில்லை. என் ஆச்சரியம் என்னவெனில் சென்னை போன்ற மகாநகரத்தில் எஸ்கேப் என்ற ஷாப்பிங் மாலில் அதிலும் இரவுக் காட்சியில் தியேட்டர் ஹவுஸ்ஃபுல்லானதும். வாத்யாரின் அறிமுகம், பளிச் வசனங்கள், பாடல்கள் இவற்றுக்கு அங்கும் விசிலடித்து சிலர் ரசித்ததும்தான். தலைவா... நீ இன்னும் சாகவில்லை,,!

ஆயிரத்தில் ஒருவன் - மிஸ்பண்ணக் கூடாதவன்!

Friday, December 20, 2013

மின்னல் திரை : என்றென்றும் புன்னகை

Posted by பால கணேஷ் Friday, December 20, 2013
புத்தகக் கண்காட்சிக்குத் தயாராக வேண்டிய புத்தக வேலைகள் டேபிள்முன் குவிந்து கிடந்தாலும், அவற்றைத் துறந்து தன்னுடன் படம் பார்க்க வரும்படி என்னை கதறக் கதற ஐநாக்ஸுக்கு இழுத்துச் சென்றார் கோவை ஆவி. ‘பிரியாணி’ பார்க்கலாம் என்ற அவரிடம், ‘‘கௌதமபுத்தர் வேஷம் குடுத்தாலும் கார்த்தி தெனாவெட்டாத்தான் பேசுவார். டைரக்டர் வேற தம்பியை ஓவரா புரொஜக்ட் பண்ணுவாரு... அந்தப் படம் பாக்கற அளவுக்கு அஞ்சாநெஞ்சனில்லை நான்’’ என்று அலறினேன். ‘‘ரைட்டு... ‘என்றென்றும் புன்னகை’ பாக்கலாம்’’ என்று அந்தப் படத்துக்கு டிக்கெட் வாங்கினார் அந்த நல்லவர். ஆக... படம் பற்றிய எந்த முன்ஐடியாவும் இல்லாமல் ப்ளெயினாகச் சென்றேன் தியேட்டருக்குள்.

ரொம்ப சிம்பிளான கதைதான். நாசரின் மனைவி அவரைவிட்டு ஓடிப் போக, ‘பெண்களை நம்பக் கூடாது’ என்று நாசர் புலம்புவது அவர் மகனின் மனதில் அழுத்தமாகப் பதிகிறது. பெண்களை வெறுக்கிற ஒருவனாக வளர்ந்து ஜீவாவாகிறார். தான் கல்யாணம் பண்ணப் போவதில்லை என்று தான் கெடுவதுடன் தன் ஆருயிர் நண்பர்களான வினய், சந்தானம் இருவரையும் ‘கல்யாணம் பண்ணிக்கக் கூடாது’ என்று சத்தியம் வாங்குகிறார். ஒரு கட்டத்தில் நண்பர்கள் இருவரும் கல்யாணம் செய்து கொள்ள, அவர்களைத் துறக்கிறார். அப்பா நாசரிடம் சிறு வயதிலிருந்தே பேசுவதில்லை (அதற்கும் ஒரு ப்ளாஷ்பேக் உண்டு) என்பதால் தனிமை கொல்ல... இச்சமயத்தில் தொழில்ரீதியாக அறிமுகமான த்ரிஷாவுடன் நெருக்கம் அதிகரிக்க... ஜீவா மனம் மாறினாரா இல்லையா என்பதை விளக்குகிறது படம்.

படத்தில் குறிப்பிடத்தக்க ப்ளஸ் பாயிண்ட்டுகள் நிறைய இருக்கின்றன. அவற்றை முதலில் பார்க்கலாம். முதல் ப்ளஸ் ஒளிப்பதிவு. நான் பெயர் குறித்துக் கொள்ள மறந்த சினிமோட்டோகிராபர் ஆண்ட்ரியாவை(கூட) அழகாக, கிளாமராகக் காட்டியிருக்கிறார். நண்பர்கள் கல்யாணம் செய்த வெறுப்பில் தண்ணியடிக்கும் ஜீவாவிடம் த்ரிஷா வந்து பேசுகிற காட்சி ஓவியம் போல கண்களை இழுத்துப் பிடிக்கிறது. அசத்தியிருக்கும் ஒளிப்பதிவுக்கு ஒரு ஷொட்டு!

சந்தானத்தின் நகைச்சுவை நன்றாக வந்திருப்பது பெரிய ஆறுதல். வழக்கமாக கவுண்டர் ஸ்டைலில் பனச் டயலாக்கில் மட்டுமே ஸ்கோர் செய்கிற சந்தானம், குடிக்க மாட்டேன் எனறு மனைவியிடம் ஜம்படித்து விட்டு, மூக்குமுட்டக் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் காட்சியில் பாடி லாங்வேஜிலும் (முதல்முறையாக?) ஸ்கோர் பண்ணியிருக்கிறார். டைரக்டர் இயல்பாக அங்கங்கே தெளித்திருக்கும் நகைச்சுவை வெடிகள் நன்றாகவே வெடிக்கின்றன. உதா: ‘‘ஜிமமிங்கறது யாருங்க?’’ ‘‘என் ஃப்ரெண்டு வீட்டு நாய், ஏன்?’’ ‘‘அந்த நாய் கொஞ்சம் முன்னால உங்க செல்லுல கால் பண்ணி பேசிச்சு’’ ‘‘இன்னிக்கு என்னடி டிஃபன் செல்லம்?’’ ‘‘ம்... ஒரு டம்ளர் விஷம்!’’ ‘‘நான் ஆபீஸ்ல இருந்து வர லேட்டாகும். நீ சாப்ட்டுட்டுப் படுத்துடு!’’ ‘‘என்னங்க... எங்கம்மா வீடடு நாய் நேத்து செத்துப் போச்சு. எங்கம்மாவால அதை ஜீரணிக்கவே முடியல...’’ ‘‘உங்கம்மா எதுக்குடி நாயை எல்லாம் சாப்பிடறாங்க?’’

இன்னொரு பெரிய ப்ளஸ் ஹாரிஸ் ஜெயராஜின் இசை. ஆரம்பத்தில் வரும் தோஸ்து பற்றிய பாடலும், ஹரிணி பாடியிருக்கம் ஒரு டூயட்டும் ரம்யமாக ஒலிக்கின்றன. பின்ணனி இசையிலும் அசத்தலாகப் பண்ணியிருக்கிறார் என்று நான் சொன்னால் நீங்கள் நம்பித்தானாக வேண்டும்!

மைனஸ்கள் என்றால்... ஒரு காட்சியில் கரப்பான்பூச்சி கக்கா போனமாதிரி கலர்ஃபுல் தலையுடன் வரும் விளம்பர ஏஜென்சி நிர்வாகி, ஜீவாவிடம், ‘‘உனக்குத்தான் நடிக்க வரலையே. அப்புறம் ஏன் வீணா ட்ரை பண்றே? விட்டுடு’’ என்கிறார். இதை டைரக்டர் தனக்குச் சொன்னதாக ஜீவா எடுத்துக் கொண்டு விட்டார் போலும்! அதிகம் மெனக்கெடாமல் இயல்பாக(?) நடித்திருக்கிறார். அவரைவிட அவர் நண்பனாக வரும் வினய்யின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. (அவன் ஹைட்டுக்கு முன்னால போற ஃபிகரை இங்கருந்தே ப்ரண்ட்ல பாத்துருவான்டா -சந்தானம்)

ஆன்ட்ரியா சிலபல காட்சிகளில் தோனறி தனக்குத் தரப்பட்ட க்ளாமர் வேலையை சரிவரச் செய்திருக்கிறார். மூக்கர் நாசர் வழக்கம் போல அருமை! த்ரிஷா...! சாமியில் பார்த்ததுபோலவே இன்னும் ஸ்லிம்மாக இருக்கிறார். வெளிநாட்டில் காதல் நெருக்கம் காட்டிய ஜீவா, நண்பனிடம், ‘என்கூட ப்ளைட்ல வந்தவங்க’ என்று சொல்லும் காட்சியில் முகத்தில் அதிர்ச்சியும், கண்ணீரும் காட்டி நன்றாகவே நடித்திருக்கிறார். இருந்தும்... அதிவிரைவில் அண்ணி, அக்கா கேரக்டர்களுக்கு பிரமோஷன்(?) ஆகிவிடும் சாத்தியக்கூறும் தென்படத்தான் செய்கிறது.

பெண்களை வெறுககும் தன் மகனின் மனம் மாறவேண்டும் என்பதற்காக இரண்டாம் கல்யாணம் செய்கிறார் நாசர். அதற்காகக் கோபப்பட்டு வெறுப்பைக் கொட்டுகிறான் மகன். ‘‘எனக்காக அபபாவுக்கும் பிள்ளைக்கும் சண்டை வர வேணாம். நான் போறேன்’’ என்று புதுமனைவி சொல்லிவிட்டு என்னமோ ‘கொடுத்த கால்ஷீட் முடிஞ்சிருச்சு, ப்ரொட்யூஸர் பேமெண்ட் தந்துட்டாரு. வரேன்’ என்கிற மாதிரி ஜஸ்ட் லைக் தட் போகிறார். நாசரும் ஒழிஞ்சுது சனியன் என்கிற மாதிரி அதன்பின் சமாதானப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காமல் மகனுக்காக மட்டும் ஏங்குகிறாராம். டைரக்டர்வாள்... என்னங்காணும் இது? கல்யாண பந்தத்துக்கு இவ்வளவுதானா ஓய் மரியாதை?

தனக்குப் பிடிக்காத செயலை அப்பா செய்தாலும், நண்பர்கள் செய்தாலும் தூக்கி எறிகிற, ஏறக்குறைய ஹிட்லர் அளவுக்கு வடிவமைக்கப்பட்ட ஜீவாவின் கேரக்டர் மனம் மாறுவதற்கு இன்னும் அழுத்தமான காட்சிகள் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது என் கருத்து. பின்பாதியில் படத்தின் வேல்யூவைக் குறைக்கிற விஷயம் இதுதான். அதே மாதிரி நிறையப் படங்கள் பார்த்திருக்கும் நம் அனுபவத்தின் காரணமாக நண்பர்களின் மனமாற்றத்திற்கும், திடீர் திருமணத்திற்கும் பின்னணியில் நாசர் இருப்பாரோ என்பதை யூகிததுவிட முடிவது ஒரு மைனஸ்!

படத்தில் த்ரிஷாவைத் தவிர அத்தனை பேரும் பெரும்பாலான காட்சிகளில் ‘தண்ணி’யடித்துக் கொண்டே இருக்கிறார்கள். விளைவாக... ‘மதுகுடித்தல் உடல்நலத்துக்குக் கேடு’ திரையின் கீழ் ரொம்ப நேரம் கண்ணில் மின்னுகிறது. திரையில் சின்னதாக ஒரு கட்டம் கட்டி (டைரக்டர் ஸ்ரீதர் ஸ்டைலில்) அதில் முகேஷைப் பேச வைத்துவிடுவார்களோ எனறு பயம் வருகிற அளவுக்கு ஆகிவிட்டது...! ஹி... ஹி...!

‘‘டோட்டலா என்னதான்யா சொல்ல வர்றே நீயி? படம் பாக்கலாமா, வேணாமா?’’ என்பவர்களுக்கு:

சின்ன வயசிலிருந்து நெருங்கிப் பழகி ஒன்றாகவே வாழும் நண்பர்களை மிக இயல்பாகக் காட்டியிருப்பதும், அவர்கள் தங்களுக்குள்ளும், மற்றவர்¬ளையும் கலாய்க்கும் காட்சிகளை யூத்ஃபுல்லாக அமைத்தும் முதல் பாதி வரை இயல்பான நகைச்சுவையுடன் கொஞ்சமும் போரடிக்காமல் கொண்டு சென்றதற்கும், இரண்டாம் பாதியில் சற்றே சொதப்பினாலும், ‘மோசமான படம்’ என்கிற கேட்டகரிக்குப் போகாதபடி படத்தை முடித்திருக்கும் டைரக்டர் அஹமதுக்கு தாராளமாகத் தரலாம் ஒரு வெலகம் பொக்கே!

பெரிய எதிர்பார்ப்புகள் எதுவுமின்றிச சென்றால், நிச்சயம் ரசிக்க வைக்கிற ‘ஒரு தரம் பாக்கலாம்டா’ என்று சொல்ல வைக்கிற நல்லதொரு என்டர்டெய்னர்!

Saturday, October 5, 2013

பார்த்தாலே கசக்கும்!

Posted by பால கணேஷ் Saturday, October 05, 2013
து என் பள்ளிப் பருவம். ஏழாவதோ, எட்டாவதோ படித்ததாக நினைவு (1979-80). ஒரு தீபாவளித் திருநாளில் 'நினைத்தாலே இனிக்கும்' படம் ரிலீஸான போது ஆர்வமாய் அடித்துப் பிடித்து ஓடி, பெண்கள் வரிசையில் புகுந்து (­ஹி... ஹி... ஹி...!) டிக்கெட் வாங்கிப் படம் பார்த்தேன். அதன்பின் பலமுறை தியேட்டர்களிலும், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் போதும் திரும்பத் திரும்பப் பார்த்து ரசித்திருக்கிறேன். என் எவர்க்ரீன் ஃபேவரைட் லிஸ்டில் அது இப்பவும் இருக்கிறது என்றால் அதற்குக் காரணங்கள் பல.

* அப்போதைய என் ஃபேவரிட் கதாநாயகன் கமலஹாசன் (அப்ப உலகநாயகன் இல்ல... வெறும் காதல் இளவரசன், சாக்லேட் பாய் இமேஜ்தான் அப்ப) கதாநாயகனாக நடித்திருந்தார். * சிங்கப்பூரை அழகாக விஷுவலைஸ் செய்திருப்பார்கள். (அதுதானே முக்கியம், கதை என்பது துளியூண்டு இருந்தால் போதும் என்பது இயக்குனர் கே.பி.யின் தீர்மானம்) * சுஜாதாவின் குறும்பு கொப்பளிக்கும் 'நறுக் சுருக்' வசனங்கள் * சேலை கட்டியும், கட்டாமலும் (ஐ மீன்... பேண்ட் ஷர்ட்டில்!) கதாநாயகி ஜெயப்ரதா ரொம்ப அழகாக பார்பி டால் போல இருப்பார். * 'கறுப்பன்' என்று அதுகாறும் ஏளனமாகப் பேசி கேலி செய்துவந்த ரஜினிகாந்தின் (இன்றைய சூப்பர்ஸ்டார்) நடிப்பை நான் ரசித்துக் கைதட்டிய முதல் படம். * 'இது ஒரு தேனிசை மழை' என்று விளமபரப்படுத்தப்படதற்கேற்ப எம்.எஸ்.விஸ்வநாதன அதகளப்படுத்தியிருந்த இனிமையான பாடல்கள் இப்பவும் 'கேட்டாலே இனிக்கும்!'.

'நினைத்தாலே இனிக்கும்' படத்திற்கு சில மாதங்கள் முன்னால் சுஜாதாவின் கதையான 'ப்ரியா'வை (அமெரிக்கப் பின்னணியில் அவர் எழுதியதை சிங்கப்பூராக மாற்றி, அவர் கதையைக் நிறையவே கொத்துக்கறி பண்ணி) சண்டை, சாகசங்கள் எல்லாம் சேர்த்து (பின்ன... ரஜினிகாந்த் நடிச்சா அதெலலாம் இல்லாம ஆர்ட்ஃபிலிமாய்யா எடுக்க முடியும்?) சிங்கப்பூரை கலர்ஃபுல்லா படம் பிடிச்சுக் காட்டி ஹிட்டடிச்சிருந்தாங்க. இப்பவும் கேட்டா ரசிக்கிற மாதிரி இருக்கும் அந்தப் படத்தின் பாடல்கள்ல இளையராஜாவின் இசை. அதே சுஜாதாவின் கதை வசனத்துல, அதே சிங்கப்பூர்ல, அதே ரஜினி(யோட கமலும்) வெச்சு ஒரு மியூஸிக்கல் ஹிட் குடுக்கறோம் பாருன்னு கே.பாலசந்தர் ஆசைப்பட்டு எடுத்த படம்தான் 'நினைத்தாலே இனிக்கும்' எம்.எஸ்.வி.க்கும் அப்ப 'தன்கிட்ட சரக்கு இன்னும் தீர்ந்துடலை'ன்னு நிரூபிக்கற ஒரு உந்துதல் இருந்தது. அதன் விளைவுதான்... அது 'தேனிசை மழை'யாக உருவானது.

இத்தனை ப்ளஸ்கள் உள்ள, ரசனையான படம் இப்போது டிஜிட்டலைஸ் செய்யப்பட்டு வருகிறது என்ற விஷயம் தெரிந்ததுமே முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். மெ.ப.சிவகுமாரிடம் எப்படியும் டிக்கெட் வாங்கி விடு, நாம் போயாக வேண்டும் என்று கண்டிஷன் வேறு போட்டிருந்தேன். ஆனாலும் படம் ரிலீஸான நேற்றைய தினம் சிவாவால் வர இயலாமல் போனதால், கோவையிலிருந்து வந்திருந்த ஆவியை ஸ்கூல் பையனின் உதவியுடன் பிடித்துக் கொண்டு நேற்று மாலைக் காட்சிக்கு உற்சாகமாகத்தான் போனோம். ஹும்... போகாமலே இருந்திருக்கலாம்னு இப்பத் தோணுது.

முதல்ல குறிப்பிட வேண்டிய விஷயம்... 'டிஜிட்டலைசேஷன்' அப்படின்னா என்னன்னு எனக்கு சுத்தமாப் புரியலை. இதற்குமுன் டிஜிட்டலைஸ் செய்யப்பட்டு வந்திருந்த 'கர்ணன்' 'பாசமலர்' படங்களை நான் பார்க்கத் தவறிவிட்டேன். இப்ப இந்தப் படத்தப் பார்த்தா... எம்.எஸ்.வி. இசை(ழை)த்திருந்த அழகான இசைக்கு நடுவுல சில கூடுதல் ஒலிகளை சேர்த்திருக்காங்க. அதுதான் டிஜிட்டலைஸா? படத்தோட ப்ரிண்ட்ல சில காட்சிகள்ல இப்பவும் மழை பெய்யுது. அப்ப படத்தோட ப்ரிண்ட், கலர் கரெக்ஷன் பண்றதுக்குப் பேரு டிஜிட்டலைஸா? ஒண்ணுமே புரியல ஸாமீஈஈஈஈ! எதுவா இருந்தாலும் இனிமே எந்தப் பழைய படத்தையும் டிஜிட்டலைஸ் பண்றேன் பேர்வழின்னு எவனும் புறப்பட்டுக் கெடுத்துக் குட்டிச்சுவராக்காம இருக்கணும்னு இடியாப்பேஸ்வரரை வேண்டிக்குவோம்.

படத்துல ரஜினிகாந்த் இருக்கறதால வேற நகைச்சுவைகள் தேவையில்லைன்னு டிஜிட்டலைஸ்(?) பண்ணின புண்ணியவான்கள் நினைச்சுட்டாங்க போலருக்கு. கமலின் மியூசிக் ட்ரூப்பில் வரும் 'மாமா' குடித்துவிட்டு வந்து செய்யும் அலப்பறையையும், அதை கேஸட்டில் ரெக்கார்ட் செய்து பின்னால் அவர் மனைவியிடம் நண்பன் மாட்டிவிட்டு அடிவாங்க வைக்கும் காட்சிகளும் ஸ்வாகா! 'யுவர் லவ்விங்லி' என்ற பனியன் போட்டவனை அடியுங்கள் என்று வில்லன் சொல்ல, கமலுக்குப் பதிலாக 'மாமா' அடிவாங்கிக் கதறி ஓடும காட்சியும்கூட அபேஸ்! கீதா அடுக்கு மாடிக் கட்டடத்திலிருந்து தள்ளிவிடுவது போன்ற கனவு கண்டு அலறியபடி எழுந்திருக்கும் ரஜினியின் எக்ஸ்பிரஷனைத் தொடர்ந்து நண்பர்கள் வந்து பேசும் காட்சி நோ! பாயசத்துக்கு மேல மிதக்கற அத்தனை முந்திரிகளையும் அள்ளிக் குப்பையில போட்டிருக்காங்க.

சரி, போய்த் தொலையுதுன்னு மனசைத் தேத்திக்கலாம்னா டிஜிட்டலைஸ் பண்ணின டீமுக்கு இருந்த அசுரப் பசியில ரெண்டு பாட்டுக்களையும் முழுங்கி ஏப்பம் விட்டிருக்காங்க. சிங்கப்பூர் பார்க்ல ஜெயப்ரதாவுக்காக வெயிட் பண்றப்ப கமல் கற்பனைல வர்ற, எம்.எஸ்.வி. எலக்ட்ரிக் கிதார் இன்ஸ்ட்ரூமென்ட் ஒண்ணை மட்டுமே வெச்சுக்கிட்டு அசத்தின 'காத்திருந்தேன் காத்திருந்தேன் காதல்மனம் நோகும்வரை' பாட்டு காதுல (கண்ணுலயும்) விழாமப் போச்சே! கமல் + நண்பர்களோட ஜெயப்ரதா ஊர் சுத்தற பாட்டான 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' பாட்டை யாவரும் கேளாமலிருக்கக் கடவர் என்று வெட்டி எறிந்து விட்டிருக்கிறார்கள்.

ஆக.. முந்திரிப் பருப்புகளும், திராட்சைகளும் அகற்றப்பட்டு பாயாசம்(னு நெனச்சுக்கிட்டு) இந்தப் படத்தை நமக்கு 'இனிக்கும்'னு தந்திருக்காங்க. எனக்குக் கசப்பாத்தான் இருந்துச்சு. இந்தப் படம் பார்த்ததுக்கு அதே காம்ப்ளக்ஸ்ல 'ராஜாராணி' நஸ்ரியாவைப் பார்த்து பிரசவம்... ஸாரி, பரவசம் அடைஞ்சிருக்கலாம். இல்ல... பக்கத்து தியேட்டர் காம்பவுண்ட்ல ஓடற 'ஓநாயையும் ஆட்டுக்குட்டியையும்' பாத்து ரசிச்சிருந்திருக்கலாம். ஹும்...! விதிங்க விதி! இனி டிஜிட்டலைஸ் பண்ணப்பட்டு எந்தப் படம் வெளியானாலும் அதைப் பாக்கறதில்லைங்கறது தியேட்டர்ல பாத்த ஒரு முண்டகக்கண்ணி (அம்மன்?) மேல சத்தியம்! ஹி.. ஹி...!

===================================================
டெய்ல் பீஸ் ஸாரி... தல பீஸ்!: 'நினைத்தாலே இனிக்கும்' படத்துக்கு முன்னால தல நடிக்கிற ¨ஆரம்பம்¨ பட ட்ரெய்லர் போட்டாங்க. ட்ரெய்லர்ல தல ஆக்ஷன் பண்றார். ரெண்டே ரெண்டு வசனம் பேசறாரு. அது என்னன்னுகூட கேக்க விடாத அளவுக்கு தியேட்டர்ல ஆரவாரமும் கரகோஷமும்! அது இனி வெறும் தல இல்லீங்க.... பெருந்தல!
===================================================

Monday, July 1, 2013

நோ குழந்தை - வீடு சுத்தம்!

Posted by பால கணேஷ் Monday, July 01, 2013
நோ... நோ... அப்படிப் பாக்காதீங்க. இப்படியொரு (அபத்தமான) கருத்தை நான் சொல்ல மாட்டேங்க. குழந்தைங்க இருக்கணும்.... வீடு கலகலப்பா இருக்கணும். எல்லாப் பொருட்களும் இறைஞ்சு கிடக்கணும். அதை ஒழுங்குபடுத்தணும். இல்லன்னா என்ன சுவாரஸ்யம் லைஃப்ல? இப்படி ஒரு கருத்தைச் சொன்னவர் சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்ற நம்ம கலகநாயகன்... ஸாரி, உலகநாயகன் கமலஹாசன்தான். பழைய குமுதம் இதழில் ஒரு பக்கக் கட்டுரைகள் பல வாரங்கள் இளைஞர் கமல் எழுதியிருக்கிறார். அதில் ஒரு பக்கம் இங்கே நீங்கள் படிக்க... :



ப்போது நான் திருவல்லிக்கேணி இந்து ‌ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் பால்கனியில் விளையாடும் போது சறுக்கி விழுந்து அடிபட்டு விட்டது. என்னை வீட்டில் கொண்டு வந்து விட்டு சிகிச்சையளித்தார்கள். என்னோடு படித்துக் கொண்டிருந்த டி.கே.பகவதியின் மகன் மணிவண்ணன் என் புத்தக மூட்டையை டி.கே.எஸ.ஸின் மகன் கலைவாணன் மூலம் வீட்டுக்கு அனுப்பியிருந்தான்.

என் உடம்பு தேறியதும் திரு டி.கே.எஸ்ஸின் வீட்டுக்குப் போனேன்- நன்றி தெரிவிக்க. வீட்டிலேயே அவர் ஷு சாக்ஸ் உடன் வெள்ளை வெளேரென்ற வேஷ்டியுடன் படு சுத்தமாக இருந்தார். அதைவிட அவர் லைப்ரரி கனகச்சிதமாக ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. வீடு முழுவதும் கோவிலைப் போல ஒரே ஊதுவத்தி ஸ்மெல். ரொம்ப இனிமையாக இருந்தது.

உடல் சுத்தத்தை விட மன சுத்தம் அந்தக் குடும்பத்தில் அதிகம். அனைவரிடமும் அன்பு, உரிமை, பிரியம் என்பது அந்தக் குடும்பத்தில் இருக்கிறது. இப்போதும் என் மனம் தடுமாறும் நேரங்களில் அண்ணாச்சி ரூமுக்குப் போய், சில நிமிடங்கள் நின்றுவிட்டு மானசீகமாக அவர் ஆசியைப் பெற்று வருவேன்.

சுத்தமான மனிதர் என்று கூறும்போது என் தந்தை திரு.சீனிவாசன் ஞாபகம் வருகிறது. அவருக்கு வயது அறுபத்தேழு. ஐம்பது வருஷமாக ஒரே பெண்டாட்டியுடன் குடும்பம் நடத்துகிறாரே? அத்துடன் வெற்றிலை, பாக்கு, பொடி, சிகரெட், ‘தண்ணி’ எதுவும் கிடையாது அவருக்கு. அதைவிட சுத்தம், பிள்ளைகள் விஷயத்தில் தலையிடாதது. அவர் எப்போதும் காவிக் கலர் கதர் சட்டை வேஷ்டியுடன்தான் இருப்பார். அவரைப் போல இப்போது யாரும் நடக்க முடியாது. சொல்லப் போனால் நான் அவரை இதுவரை இரண்டே தடவை தான் தொட்டுப் பார்த்திருக்கிறேன்!

வீடு சுத்தமாக இருக்கணுமானால் சின்னக் குழந்தைகள் இருக்கக் கூடாது.

மூன்று வயதிலிருந்து எனக்கு ஃபுல் பேண்ட் போட்டுக் கொள்ள ஆசை. வீட்டில் கேட்டால் வாங்கித்தர மாட்டார்கள். ‘‘நீ வளரும் பிள்ளை. முழுக்கால் சட்டை சின்னதாகப் போய்விடும். பெரியவனானதும் தைக்கலாம்’’ என்று சாக்குச் சொல்லி விடுவார்கள்.

இன்று வீட்டில் சூட் போடவே பிடிக்காது. பெரிய பார்ட்டிகள், நிகழ்ச்சிகளுக்கு மட்டும்தான் சூட் போடுவேன். கழுத்தில் டை இறுக்க, வேர்க்க விறுவிறுக்க என்ன சூட் வேண்டிக் கிடக்கிறது என்று சமயத்தில் கோபமாக வரும்.

வீட்டில் எப்போதும் நான் வெறும் டவலுடன்தான் இருப்பேன். அதிலிருக்கும் ஆனந்தம் எதிலும் கிடையாது. எனக்கென்று வீட்டில் வேஷ்டி எதுவும் கிடையாது. லுங்கி உண்டு. என் அப்பா மெட்றால் வரும்போது அவர் வேஷ்டி ஒனறு இரண்டை விட்டுப் போவார். அதைக்கூட லுங்கி மாதிரி இரண்டு பக்கமும் தைத்துத்தான் கட்டிக் கொள்வேன்.

Monday, May 27, 2013

நான் ரசித்த T.M.S.!

Posted by பால கணேஷ் Monday, May 27, 2013
Thirai isai Mannar Soundarrajan! இப்படித்தான சொல்லத் தோன்றுகிறது அந்த வெண்கலக் குரலுக்கு உரியவரை!
டி.எம்.எஸ். அவர்கள் பாடியது என்பதை அறியாமலேயே என் பள்ளிப் பருவத்தில் அவரது பாடல்களை ரசித்திருக்கிறேன் நான். அதிலும் அதிகமாக எம்.ஜி.ஆருக்காக அவர் பாடிய பாடல்களை. எல்லாமே என் ஃபேவரைட். ‘கட்டித் தங்கம் வெட்டியெடுத்து’, ‘காற்று வாங்கப் போனேன்’, ‘நான் ஆணையிட்டால்’ ‘கடலோரம் வாங்கிய காற்று’ இவை எல்லாம் அந்தச் சிறு வயதில் திரும்பத் திரும்பப் பாட வைத்து ரசிக்க வைத்த அவரின் ஹிட் பாடல்கள்.

பள்ளிப் பருவத்தில் இருந்து சற்றே வளர்ந்து உயர்நிலைப் பள்ளியை எட்டிய சமயத்தில் டி.எம்.செளந்தர்ராஜன் என்ற பாடகரின் பெயரும், அவரின் பிரபல்யமும் நன்கு புரிந்திருந்தது. அப்போது அவரின் நான் கேட்காமல் விட்ட பழைய திரைப்படப் பாடல்களைத் தேடித் தேடி கேட்கத் தொடங்கினேன். மிக ஆரம்ப காலத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பாதிப்பு டி.எம்.எஸஸின் குரலில் இருந்தது. பின்னால் அதை மாற்றி, தனக்கென தனிப் பாணி வகுத்துக் கொண்டார். அவர் பாடிய இந்த ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதடி’ பாடலைக் கேட்டீர்களென்றால் அதை நன்கு உணர முடியும்.


 பட்டினத்தார், அருணகிரிநாதர் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். இந்த இரண்டில் ஏதோ ஒரு படத்தில் முருகப் பெருமானுக்கு முன்னால் ‘முத்தைத்திரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச்சரவண முத்துக்கொரு வித்துக் குருபர எனவோதும்’ என்று ஒரு பாட்டுப் பாடுவார் பாருங்கள்... அதை அவர் பாடுகிற அதே தெளிவான உச்சரிப்புடன், அவரைப் போலவே பாட வேண்டுமென்று நானும் பலமுறை கேட்டுக் கேட்டு பாடிப் பாடிப் பார்த்ததுண்டு. இன்று வரை தோல்விதான் கிட்டியிருக்கிறது. What a Legend!

டி.எம்.எஸ்ஸின் பாடல்களை எல்லாம் புரிந்து ரசிக்கத் துவ்ங்கிய அதே காலகட்டத்தில் எனக்கு அவர் மீது சிறுபிள்ளைத் தனமாக ஒரு குறையும் இருந்தது. சிவாஜிக்கு அருமையாகப் பாடும் டி.எம்.எஸ்., அதே அளவு எம்.ஜி.ஆருக்குப் பாடவில்லையோ என்பதுதான் அது. அதை ஒரு பதிவாகவும் எழுதி குட்டு வாங்கியதுண்டு நான். அந்தப் பதிவைப் படித்துவிட்டு ஒரு நண்பர் (பேரை குறிச்சுக்க மறந்துட்டேன்) டி.எம்.எஸ். பேசிய ஆடியோவை எனக்கு அனுப்பியிருந்தார். அதில் டி.எம்.எஸ். அவர்கள் கொடுத்திருக்கும் விளக்கம் எனக்கு மிகச் சரியாகப் பட்டது. அதை இந்தப் பதிவின் இறுதியில் இணைத்திருக்கிறேன். கேட்டுப் பாருங்களேன்.... அனுப்பிவைத்த அன்பருக்கு என் மனம் நிறைய நன்றி!

எம்.பி.3 பாடல்களாக இன்று இசை கேட்கிறோம். அதற்கு முந்தைய காலகட்டத்தில் ஆடியோ கேஸட்டுகள் புழக்கத்திலிருந்தன. என் கல்லூரிப் பருவத்தில் ஆடியோ கேஸட்டுகள் அப்போதுதான் மார்க்கெட்டில் பரபரப்பாக ஆரம்பித்திருந்தன. அதற்கு முன் இசைத்தட்டுகளில்தான் பாடல்கள் கேட்போம். பெரிய சைஸ் தோசை மாதிரி இருக்கும் அந்த இசைத் தட்டை ஓடவிட்டு, ஒலிவாங்கும் ஊசியை அதன்மேல் வைத்தால் சுழன்று சுழன்று ஓடும் அதிலிருந்து பாடல்கள் கேட்பது பரமசுகம்! அப்படி ஒரு இசைத்தட்டில் முருகப்பெருமான் மீது டி.எம்.எஸ். பாடிய பக்திப் பாடல்கள் தொகுப்பு முழுவதையும் ரசித்து கண்கள் பனிக்க, மனம் உருகக் கேட்டிருக்கிறேன். ‘தித்திக்கும தேன்பாகும்’ , ‘கல்லானாலும் திருசசெந்தூரில் கல்லாவேன்’ ‘முருகனைக் கூப்பிட்டு’ போன்ற பாடல்களையெல்லாம் அவர் குரலில் கேட்கும் போதே மனதில் முருகப் பெருமானின் உருவத்தை உணர முடிந்ததுண்டு. எம்.பி.3யாக இவை கிடைக்குமா என்று தேடிக் கொண்டும்தான் இருக்கிறேன்.

சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் ‘பொன்மகள் வந்தாள்’ என்கிற டி.எம்.எஸ். பாடிய பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தார் ஏ.ஆர்.ஆர். இன்றைய பாடகரின் குரலில் ரீமிக்ஸிய அந்தப் பாடலில் ‘ராஜனாஆஆக’ ‘வீரனாஆஆக’ என்று ஹைபிட்ச் வரும் இடங்களில் டி.எம்.எஸ்ஸின் குரலையே பயன்படுத்தியிருந்தார். ‘‘ஹைபிட்ச்சில் பாட இன்னிக்கும் டி.எம்.எஸ். தான் தேவைப்படறான். இப்ப உள்ளவங்கள்ல யாருக்கும் அதைத் தொட முடியலை’’ என்று கருத்துச் சொல்லியிருந்தார் டி.எம்.எஸ். நிஜம்தான்! ‘எங்கே நிம்மதி’ என்று ஹைபிட்சில் பாடுவதானாலும் சரி, ‘யார் அந்த நிலவு’ என்று மென்மையாக இழைவதானாலும் சரி... டி.எம்.எஸ்.ஸின் குரல் எட்டுக் கட்டையைத் தொடுவதென்றாலும், இரண்டு கட்டையில் உருகுவதென்றாலும்.அனாயாசமாக சஞ்சரிக்கக் கூடியதுதான். எங்க ஊர்க்காரர் இவர் என்ற பெருமையும் எனக்குள் உண்டு.

தொலைக்காட்சிச் செய்தி அவர் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியதாகச் சொன்னது. அந்தப் பத்தாயிரம் பாடல்களும் பலப்பல வானொலிகளிலும், தொலைக்காட்சியிலும் ஒலித்துக் கொண்டே இருக்கும் வரை அவருக்கு மரணமில்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. எம்.ஜி.ஆர்., கண்ணதாசன் போன்றவர்களின் உடல் மறைந்தாலும் மக்கள் மனதில் நிலைத்திருப்பதைப் போலத்தான் டி.எம்.எஸ். பெயரும் மனதில் நிலைத்திருக்கும் என்பதே என் எண்ணம்.

1946ம் ஆண்டு தன் இசைப்பணியைத் துவங்கி மனங்களைக் கொள்ளையிட்ட அவர், 2013ல் மறைந்திருக்கிறார். ‘வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது’ என்றும், ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்றும் அவர் பாடிய பாடல்களைக் கேட்டுத்தான் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது!

சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆருக்காகப் பாடிய குரல் பற்றி டி.எம்.எஸ். சொன்‌னதை இங்கே க்ளிக்கி டவுன்லோடு செய்து கேட்கலாம் நீங்கள்!

Wednesday, May 22, 2013

கமல் மாறி விட்டா(ரா)னா?

Posted by பால கணேஷ் Wednesday, May 22, 2013
‘இதய மலர்’ பட ஷுட்டிங். ஜெமினிகணேசன் அவர்கள் டைரக்ட் செய்து கொண்டிருந்தார். மாலை 3 மணி முதல் 10 மணி வரை கால்ஷீட். ஒரு குழந்தை, விஜயகுமார், கமலஹாசன் நடிக்கும் காட்சி. இரவு 9 மணியைத் தாண்டி விட்டதால் குழந்தைக்குத் தூக்கம் வந்து விட்டது. பெரிய வசனம்! குழந்தைக்குக் குளறியது. கமலஹாசனுக்கும் தூக்கம் வந்துவிட்டதா அல்லது நாள் முழுவதும் ஷுட்டிங் செய்த அலுப்பா என்று தெரியவி்‌ல்லை... சலிப்புடன் முகத்தைச் சுளித்துக் கொண்டான். குழந்தைக்கு வசனம் சரியாக வந்தவுடன் கூப்பிடுமாறு சொல்லிவிட்டு ஒரு சோபாவில் சாய்ந்து கொண்டான்.

டைரக்டர் ஜெமினி சற்றும் சலிப்பில்லாமல், கோபம் கொள்ளாமல் குழந்தைக்கு வசனம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்- குழந்தைக்குச் சமமாக மண்டியிட்டுக் கொண்டு! இந்தக் காட்சியை சலிப்புடனும் வெறுப்புடனும் பார்த்துக் கொண்டிருந்த கமலின் முகம் திடீரென்று மலர்ந்தது. சட்டென்று எழுந்துவந்து குழந்தையை உற்சாகப்படுத்தி, அதற்கு வசனம் பேச வரும்வரை பொறுமையுடன் இருந்து காட்சியை முடித்துக் கொடுத்தான். ‘‘ஏன் இந்தப் புத்துணர்ச்சி?’’ என்று கமல் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

பதில்: புத்துணர்ச்சி அல்ல, குற்ற உணர்ச்சி! குழந்தை நட்சத்திரத்தைப் பார்த்து முகம் சுளித்த கமல், பல ஆண்டுகளுக்கு முன் ஒரு குழந்தை நட்த்திரமாக இதேபோல் பல இரவுகளில் ஷுட்டிங்கில் வசனங்களைக் குழறியிருக்கிறான். சக நடிகர்கள் யாரும் முகம் சுளித்ததாக அவனுக்கு ஞாபகம் இல்லை. மாறாக இன்முகத்துடன் உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தனர். இதே ஜெமினிகணேசன் ‘அங்கிள்’ இதே கனிவுடன் இதேபோல் முகம் சுளிக்காமல் வசனம் சொல்லிக் கொடுத்த ஞாபகம் கமலுக்கு வந்துவிட்டது. அன்று இனிமையாகப் பேசி கொஞ்சிக் கொஞ்சி நடிக்க வைக்கப்பட்ட குழந்தை நட்சத்திரம் கமல் இன்று பெரியோரின் ஆசியால் வளர்ந்துவிட்டான்.

அவனை வளர்த்தவர்கள் அதே அன்புடனும் குணத்துடனும் இருக்கிறார்கள். கமல் மாறிவிட்டானா? கர்வமா? எதுவாக இருந்தாலும் திருத்தப்பட வேண்டிய, திருத்தப்படக் கூடிய தவறுகள்தான். அவன் வந்த வழியை அவன் திரும்பிப் பார்த்தால் அவன் தவற மாட்டான். அது நிச்சயம். ஆனால் அதையும் மீறி அவன் கர்வம் கொண்டால் திருத்த வேண்டியது அவனை உருவாக்கிய பெரியோரின் பொறுப்பு.
அன்றைய கமலஹாசன்கள்! (கல்லூரி நாட்களில் என் ஃபேவரைட்)
கரம் முழுவதும் "Enter the Dragon" வியாதி பரவியிரு்கிறது. என் வயதுள்ள முக்கால்வாசிப் பேர் கராத்தே கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் முஷ்டி கறத்து, காய்த்துப் போய் விடுகிறது. இதுதான் அவர்கள் கராத்தே வீரர் என்பதற்கு அடையாளம். மற்றபடி எல்லாரையம் போலத்தான் இருக்கிறார்கள். ஒரு கராத்தேக்காரர் அடிப்பதற்கு முன்னால் ‘கீயா’ (kiah) என்ற ‌போடும் ச்த்தமே போதும் எதிரியைப் பயமுறுத்த.

கராத்தே வகுப்புக்கு என் நண்பருடன் சென்றிருந்தேன் வேடிக்கை பார்க்க. நண்பர் மெலிந்தவர். சாமானியர். சென்னை டாக்சி/ஆட்டோ டிரைவர்களிடம்கூட அவருக்குக் கோபம் வராது. அவ்வளவு சாது. கராத்தே வகுப்பில் மாணவர்கள் செய்யும் சத்தத்தைக் கேட்டு மிரண்டு விட்டார். ‘‘ஏன் தம்பி, இதுக்குப் பேரு கராத்தேயா, இல்ல, கத்தறேயா? இப்படிக் கத்தறாங்களே?’’ என்றார். ‘‘என்ன, கேலி பண்றீங்க? முடிஞ்சா அவங்க செய்யற மாதிரி செய்யுங்களேன் பார்ப்போம்’’ என்றேன். ‘‘செய்யறது பெரிய கஷ்டமில்‌லே, செஞ்சிடுவேன். ஆனா இப்ப வேணாம். என்னால இவங்க மாதிரி கத்த முடியாது. தொண்டை சரியில்லை’’ என்று மழுப்பிவிட்டார்.

சினிமா ஸ்டண்ட்காரர் ஒருவர், ‘‘இந்தக் கராத்தே எல்லாம் நம்ம தஞ்சாவூர் குத்துவரிசையும், கேரளத்துக் களரியும் ஒண்ணாச் சேர்ந்ததுதான். இந்தியாவிலிருந்து சைனா போன ஒரு புத்தபிட்சு இங்கேருந்து கொண்டுபோன வித்தைதான் கராத்தே’’ என்று சம்பந்தமில்லாமல் பழம்பெருமை பாடுகிறார். எனக்குத் தெரிந்த உண்மை: பதினேழாம் நூற்றாண்டில் ‘ரூ க்யூ’ (Ryu Kyu) என்ற ஒரு தீவுவாசிகள் ஜப்பானிய ஆதிக்கத்திலிருந்தார்கள். அந்தத் தீவின் மக்கள் யாரும் ஆயுதங்கள் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஜப்பானிய அரசாங்கம் சட்டம் போட்டிருந்தது. ஆதிக்கத்தை முறியடிக்கவும், ஆயுதுமில்லாத தற்காப்புக் கலைக்காகவும் இத்தீவு மக்கள் கண்டுபிடித்த போர் முறை கராத்தே. ‘கரா’ என்றால் வெறுமை. ‘தே’ என்றால் கை. வெறுங்கை - கராத்தே.

ஏழெட்டுச் செங்கல்களை ஒன்றாக அடுக்கி, தலையாலும் கையாலும் உடைக்கும் என் நண்பர்கள் இருக்கிறார்கள். நானும் இரண்டு ஆண்டுகளக்கு முன் கராத்தே கற்கத் தொடங்கி முடியாமல் ஓடிவந்து விட்டேன். இப்போது மீண்டும் கற்கத் தொடங்கி இருக்கிறேன். ஐந்தில் வளையாததைக்கூட வளைக்கிறார்கள் கராத்தே ஆசிரியர்கள். என்னைப் பொறுத்தவரை கராத்தே கற்றுக் கொண்டால் தைரியமாகக் கடன் கொடுக்கலாம், கடன் வாங்கலாம் - கராத்தே தெரியாதவர்களிடம்!

*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

- மேலே கொடுக்கப்பட்டிருப்பவைகள் இன்றைய கலகநாயகன்... ஸாரி, உலகநாயகன் (அன்றைய வளரும் நடிகன்) கமல் 1975ம் ஆண்டு ‘குமுதம்’ இதழில் எழுதி வந்த ஒருபக்கக் கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்டவை.

Saturday, April 20, 2013

திருமதி தமிழ்! - சுடச்சுட விமர்சனம்!

Posted by பால கணேஷ் Saturday, April 20, 2013
‘மின்னல் வரிகள்’ல சினிமா விமர்சனம்... அதுவும் புதுசா வந்த படத்துக்கு சுடச்சுட விமர்சனமான்னு ஆச்சரியப்படறீங்களா? அதுக்கு்க் காரணகர்த்தா நம்ம ‘மெட்ராஸ்பவன்’ சிவகுமார் தாங்க! போன வாரமம் நம்ம சீனு போன் செஞ்சு, ‘‘சனிக்கிழமை மதியம் நீங்க ஃப்ரீயா? நீங்க, நான், ‘கரைசேரா அலை’ அரசன், ‘அஞ்சாசிங்கம்’ செல்வின், ஸ்கூல் பையன், ஆரூர் மூனா செந்தில் எல்லாருமா சேர்ந்து படம் பாக்கலாம்னு ‘மெட்ராஸ் பவன்’ சிவா சொல்றாரு. வர்றீங்களா? டிக்கெட் வாங்கிரட்டுமா?’’ என்றார். நண்பர்களுடன் ஜாலியாகப் படம் பார்க்கும் ஆசையில் ‘‘சரி’’ என்றேன்.

தலைவன் கட்டையால அடிச்சாலும் அசராத சிவா!
சிவகுமாரும், பிலாசபி பிரபாகரனும் ராமராஜனின் ‘மேதை’ படத்தையே முதல் நாளில் படம் பார்த்து விமர்சனம் எழுதிய தைரியசாலிகள். இம்முறை பிலாசபி எதுவும் பேசாமல் பிரபாகரன் வரவில்லை என்றுவிட, சிவா எங்களனைவரையும் ஓரணியில் திரட்டினார். ‘‘படத்துல பெரிசா எதுவும் எதிர்பார்க்காதீங்க. சும்மா ஜாலியா போய் கலாய்ச்சுட்டு வரலாம்’’ என்று முதலிலேயே என்னைத் தயார்படுத்தியிருந்தார். ஆனாலும் படத்தில் நான் கிஞ்சித்தும் எதிர்பாராத விஷயங்கள் நிறைய இருக்கத்தான் செய்தது.

‘‘ஸாரே, என்டே காதலி உங்க வொய்ஃபாயிட்டு வரும். பட்சே, நின்டே வொய்ஃப் என்டே காதலியாயிட்டு வராது’’ என்று அப்பாவி(?) பாக்யராஜ் தெரியாமத்தனமா முன்ன சொல்லிட்டாரு. ‘‘உன் கழுத்துல நூறு பேரு தாலி கட்டினாலும் பரவாயில்ல... ஐ லவ் யூ சாருமதி...’’ என்று கோர்ட்டில் அனைவர் முன்பும் ‘டெரர் ஸ்டார்’ ராஜகுமாரன் (ஏன் இந்தப் பட்டம்னு யோசிக்கறீங்களா? படம் பாத்தா நீங்களே கொடுப்பீங்க) பேசும் வசனத்தைக் கேட்காவிட்டால் செவிகள் பெற்ற பாக்கியத்தை அடைய மாட்டீர்கள்!

முகத்தில் அரை லிட்டர் பவுடர் அப்பிக் கொண்டு வரும் ஹீரோ ராஜகுமாரன் காற்றில் பறந்து பறந்து பாடுவதையும், அவரை அரெஸ்ட் செய்ய வரும் போலீஸ் இன்ஸ்பெக்டரை ஏரோப்ளேன் கட்டாகக் கட்டி மரண அடி அடிப்பதையும், விண்ணில் பறந்து எதிரிகளை அவர் துவம்சம் செய்து(?) காற்றில் பறக்க வைப்பதையும் கண்ணுற்று கண்கள் பெற்றதன் புண்ணியத்தை அடைவீராக!

என்னையும் விட்டு வெக்கலீங்கோ...!
கதாநாயகியின் விருப்பமில்லாமல் அவள் பெற்றோர் திருமணம் நடத்தி வைத்து விட்டார்கள் என்பதற்காக, கோர்ட்டில் கேஸ் ஃபைல் பண்ணி, கல்யாணத்துக்கு நாதசுரம் ஊதுபவர், மந்திரம் ஓதிய ஐயர், சமையல்காரர், மைக்செட் கட்டியவர், மெல்லிசைக் குழுவினர், ஏன்... பூ விற்ற பெண்மணியைக் கூட கூண்டில் ஏற்றி, ‘‘பெண்ணின் விருப்பத்தைக் கேட்காம எப்படி நீங்க கல்யாணத்துல வேலை பண்ணினீங்க?’’ என்று லாயர் தேவையாநீ... ஸாரி, தேவயானி குறுக்குக் கேள்விகள் கேட்டு மடக்கும் மெயசிலிர்க்க வைக்கும் காட்சியைக் கண்டு கை தட்டுவதற்கு அல்லாமல் இரண்டு கைகளை நாம் எதற்காகப் பெற்றிருக்கிறோம்?

கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஹீரோவாகவும் நடி்த்திருக்கும் ராஜகுமாரனை மிகக் குறைவாக மதிப்பிட்டது என் தவறுதாங்க! ஓப்பனிங் சீன்ல, போலீஸ் அடிக்கிறதையெல்லாம் ஹீரோவா லட்சணமா வாங்கிக்கிட்டு, ‘‘எப்படிறா அடி?’’ன்னு கேட்டதும், ‘‘இது அடியில்ல, இடி’’ன்னு பதிலுக்கு எல்லாரையும் தாக்கி ஒரு ரணகள சுனாமி பண்றாரே... அது ஆச்சரியம் 1! எதிர்வீட்டு மாடியில இருக்கற கதாநாயகிக்காக தோட்டத்துல இருக்கற இரும்புக் கம்பத்தைப் பிடுங்கி, இவர் வீ்டடு பால்கனிக்கும் அவங்க வீட்டு பால்கனிக்கும் நடுவுல பாலம் அமைச்சு, கொட்டற மழையில, கால்ல ‌போட்டிருக்கற ஹீல்ஸ் ஷுவக் கூடக் கழட்டாம, கம்பத்து மேல நடந்து அவளுக்கு சாப்பாடு பார்சலைக் கொடுத்துட்டு, திரும்ப தன் வீட்டுக்கு வர்றார் பாருங்க... சலங்கை ஒலி கமல்லாம் என்னத்தக் கிழிச்சாருன்னு க‌ை தட்ட வெச்சுடுச்சு. (இந்த சீன்லதான் அவர் பேர் டைட்டில் வருது- கைதட்டல் வாங்கற ஆசையில) இது ஆச்சரியம் 2!

விசயம், அலுகை, குலந்தைன்னு கேப்டன் விஜயகாந்தைவிட மோசமாப் பேசி அவரே தேவலைப்பான்னு நினைக்க வெச்சுட்டாரு ராஜகுமாரன்! ஆச்சரியம் 3! இந்த ராமராஜன் முகத்துல பாவமே இல்லாம வசனம் பேசறாருன்னு பாவம்... அப்பாவியான அவரை திட்டிருக்கேன் ஒரு காலத்துல. காதலி பெட்டியோட வீட்டை விட்டு ஓடி வந்துட்ட சீன்ல கூட ‘டீ சாப்டியா?’ங்கற மாதிரி ‘‘பெட்டியத் தூக்கிட்டு வந்துட்டியா?’’ன்னு முகத்துல பாவமே இல்லாம (வராததுக்கு அவர் என்ன செய்வார், பாவம!) நடிச்சு ராமராஜனே தேவலைன்னு நினைக்க வெச்சுட்டாரு. ஆச்சரியம் 4! படம் பூரா தான் எழுதின வசனங்களை நல்லாவே ஒப்பிச்சிருககாருங்க ரா.கு.. அப்புறம்... ஹலோ, எல்லாத்தையும் நானே சொல்லிட்டா எப்பூடி? படத்தை நீங்களே பாத்துத் தெரிஞ்சுக்கங்க மீதிய!

இடைவேளையில், மக்கள் வெள்ளத்தினூடே நாங்கள்!
ஹீரோ ராஜகுமாரனை விடுங்கள்... இயக்குனர் ராஜகுமாரன் செமத்தியாக ஸ்கோர் பண்ணியிருக்கிறார். எல்கேஜி வயசிலிருந்து கல்லூரி வயசு வரை தேவயானியிடம், ‘‘உன் புருஷனைக் கூட்டிட்டு வாம்மா’’ என்று சொல்லும் ராதாரவி, திடீரென்று ராஜகுமாரன் ஒன்றுக்கும் உதவாதவர் என்ற ஞானோதயம் வரப்பெற்று, தேவயானியை வேறொருவருக்கு கட்டி வைப்பதன் மூலமாக மனித மனத்தின் நிலையாமைத் தன்மையை பளிச்சென்று எடுத்துக் காட்டியிருக்கிறார். பெண்ணின் சம்மதம் கேட்காமல் திருமணம் செய்வது தப்பு என்ற மெஸேஜை படம் பார்ப்பவர்கள் மண்டையில் ஆணி வைத்து சுத்தியலால் அடி்த்து இறக்காத குறையாகப் புரியவைத்து மெஸேஜ் சொல்லியிருக்கிறார். அதை விடுங்கள்... கிளைக் கதாபாத்திரமான சாருஹாசனுக்கும் வைத்தார் பாருங்கள்... ஒரு சென்டிமென்ட் பேக்ட்ராப்! சான்ஸே இல்ல...! ‘‘நாளைக்கு பத்து மணிக்கு இங்க சந்திக்கிறேன்’’ என்று சொன்ன காதலி வராததால அந்த பஸ் ஸ்டாப்பிலயே தன் வசிப்பிடத்தை(!) அமைச்சுக்கிட்டு நாப்பது வருஷமா அங்கேயே வாழ்ந்து அந்த இடத்துலயே உயிரை விடறாரு சாருஹாசன்! இத்தனைக்கும் அவர் பெரும் பணக்காரராம், சமூகத்தில் மதிப்புக்குரிய பெரிய மனிதராம்! புல்லரிக்குதா...! சரி, கொஞ்சம் சொறிஞ்சுக்கிட்டு வாங்க!

தேவயானி முதல் பாதியில ராஜகுமாரனோட காதலியாகவும், பின் பாதியில அவருக்கு உதவற லாயராகவும் (காதலியி்ன் அக்காவாக இரட்டை வேடம்) வந்து அவங்க பங்கை குறைவின்றி செய்திருக்காங்க. முதல் பாதியில அவங்களை ஸ்கூல் பெண்ணா காட்டறதுக்காக மிகை மேக்கப் போட்டு (நம்மளை) படுத்தியிருக்கறதைத் தான் சகிக்க முடியல! (மறைந்த) மலேசியா வாசுதேவன், ராதாரவி, ரோகிணி, சாருஹாசன் இவங்கல்லாம் (அ)கெளரவ வேடங்கள்ல தலைகாட்டறாங்க.

அஞ்சாத மும்மூர்த்திகள்!
படத்தோட கதைய விரிவாச் சொல்லணும்னா... சரி, எதுக்கு வம்பு? அதைத் தெரிஞ்சுக்கற விரும்பற தைரியசாலிங்க பின்னூட்டத்துல உங்க இமெயில் ஐடி கொடுங்க விரிவாக கொல்றேன், ஸாரி, சொல்றேன். படத்துல ஒரு சீன்ல ரமேஷ்கன்னா, ‘‘இவன் பேர் தமிழரசன். தமிழ்னும் கூப்பிடலாம், அரசன்னும் கூப்பிடலாம்’’ன்னு சொல்ல... நாங்க திரும்பி பக்கத்துல இருந்த அரசனைப் பார்க்க... அவரு ‘‘ஐயோ, நான் இல்லீங்க அந்த அரசன்’’ன்னு அலறினாரு பாருங்க.. அய்யோ, அய்யோ...நல்ல டமாஸு!  படத்தோட இடைவேளை எப்படா வரும்னு காத்துட்டே இருந்து ஆரூர் மூனாவும், அஞ்சாசிங்கம் செல்வினும் (அஞ்சிய சிங்கமாகி) ‌தியேட்டரை விட்டு தெறிச்சு ஓடிட்டாங்க! நானும் அரசனும் ஓடிரலாம்னு நினைச்சாலும் சிவாவோட அன்பு(!)க்கு கட்டுப்பட்டு முழுப் படத்தையும் பாத்து வெச்சோம்.

அடுத்த தடவை இந்த சிவா படம் பாக்கலாமா ஸார்ன்னு கூப்பிடட்டும்... நற! நற! நற! பின்ன என்னங்க... நானும் எவ்வளவு நேரத்துக்குத்தான் நல்லவனாவே நடிச்சுட்டிருக்கறது? ஹி... ஹி....!

Thursday, March 7, 2013

சண்டைகள் பற்றி வாத்யார்!

Posted by பால கணேஷ் Thursday, March 07, 2013

ங்கள் படங்களில் சண்டைக் காட்சிகள் ஏன் அதிகம்?

வீர உணர்ச்சிக்கு அவை தேவை என்பதால்!

டத்தில் நீங்கள் எதிரிகளுடன் சண்டை போடும்போது பத்து, இருபது பேரை ஏககாலத்தில் தனியா‌கவே நின்று சமாளிக்கிறீர்கள். அவ்வளவு பேரையும் அடித்து வீழ்த்திவிட்டு வெற்றிகரமாக வெளியே வந்து விடுகிறீர்கள். உண்மையிலேயே இது சாத்தியமானதா? நம்பக் கூடியதா?

ங்களைப் பார்த்தால் மதப்பற்று உள்ளவராகத் தெரிகிறது. புராணக் கதைகளைப் படித்திருக்கிறீர்கள் அல்லவா? அவற்றில் வருவதை நம்புகிறீர்கள் அல்லவா? மகாபாரதக் கதையில் அர்ஜுனன் அனுபவம் மிகுந்த வில் விற்பன்னர்களிடம் போரிடுகிறான். சிக்கலான விஷயத்தை மிக எளிதாக உடைத்து எதிரிகளை முறியடித்துவிட்டுத் திரும்புகிறான். நீங்கள் இதை அப்படியே மனப்பூர்வமாக நம்புகிறீர்கள். வாழ்க்கையை ஒட்டிய திரைப்படத்தில் அத்தகைய சம்பவத்தை ஏன் நீங்கள்‌ நம்பக் கூடாது? அர்ஜுனன் ‌போன்றோர் அப்படிப் பல பேரை ஒரே சமயத்தில் வென்று திரும்ப முடியுமானால் ன்ெ போன்ற திரைப்படக் கதாநாயகர்களாலும் முடியும்.

ங்கள் படங்களில் ‘ஸ்டண்ட்’ அதிகமாக இருக்கிறதே... தேவைதானா?

ஜேம்ஸ்பாண்ட் படங்கள் எப்படி இருக்கின்றன? அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அமெரிக்காவில் ஸ்டண்டுக்கு என்று தனியாகப் படம் எடுக்கிறார்கள். உணர்ச்சி நடிப்புப் படங்கள், பாட்டுக்கென்று, நகைச்சுவைக்கென்று தனித்தனியாகப் படங்கள் எடுக்கிறார்கள். அவர்களுக்கு உலகம் முழுவதும் மார்க்கெட். இங்கே குருவிக்கூடு மாதிரி உள்ள இடத்தில் எடுக்கப்படும் படங்கள் எல்லாம் கலந்த படங்களாக இருக்க வேண்டும். பாட்டு, நடிப்பு, சண்டை, நகைச்சுவை எல்லாம் ஒரே படத்தில் இருந்தால்தான் படம் ஓடும்!

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் உங்களை ‘அட்டைக்கத்தி வீரர்’ என்று முரண்டாபாகக் கூறுகிறார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

த்திரிகையிலே வந்த ஒரு செய்தியை வைத்து முடிவான பதிலைக் கூற நான் தயாராக இல்லை. ஆனால் சிறிது காலமாக ‘அட்டைக்கத்தி வீரர்’ என்று யார் யாரோ பேசுவதாகப் பத்திரிகைகளிலே செய்தி வந்து கொண்டிருப்பதை நான் கவனிக்காமல் இல்லை. பொதுவாக இந்தக் கேள்விக்கு நேரடியான பதில் சொல்ல என்னால் முடியாவிட்டாலும் ஒரு சிறு விளக்கம்தர விரும்புகிறேன். அதில் உங்கள் கேள்விக்குரிய விடை ஏதும் இருக்குமாயின் ஏற்க வேண்டும்.

சினிமாவைப் பொறுத்தவரை ஆசிரியர் எழுதிக் கொடுப்பதைத்தான் நடிக, நடிகையர் ஒப்பித்துத் தீர வேண்டும். தான் நினைப்பது போலக் கற்பனையாகப் பேசிவிட முடியாது. யாரையாவது ஆத்திரத்தோடு கோபித்துக் கொள்ளக் கூடிய காட்சியாயிருந்து அந்த நடிகன் ஆத்திரமாகத் திட்டும்போது, திட்டுகளை ஏற்றுக் கொள்ளக் கூடியவன் வேலைக்காரன் வேடத்திலிருந்தால் அவன் தன்வேடத்திற்கு ஏற்ப அந்தத் திட்டுகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, பதிலுக்குத் திட்டிவிட முடியாது. மேலும் திட்டப்படுவது பாத்திரமே தவிர, அவனல்ல. ஒரு நாடகம் அல்லது சினிமாவில் நல்லவன், கெட்டவன், கணவன், மனைவி, கடன்காரன், கடன்பட்டவன்... இவ்வாற பலவகைப்பட்ட பாத்திரங்களை ஏற்றுள்ளவர்கள் ஒரே மாதிரி நடிக்க முடியாது. கதாநாயகனும், அவனுடைய எதிரியும், ஒரு கிழவனும் வாலிபனும் ஒரே மாதிரி நடிக்க முடியாது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ‘நடிப்பதுதான் நாடகம்’ என்பது.

அடிக்க வேண்டிய காட்சிகளில் அடிபட வேண்டியவனை உண்மையாகவே அடித்து நொறுக்கிவிட முடியுமா? கொலை செய்ய வேண்டிய பாத்திரத்தை ஏற்றிருப்பவன் கொலை செய்யப்பட வேண்டியவனை உண்மையாகவே கொன்று விடுவதா? நடிப்பால்தானே உண்மை போல் நிரூபித்துக் காட்ட வேண்டும். நஞ்சை அருந்தி இறப்பதாக ஒரு பாத்திரம் வரும்போது உண்மையான நஞ்சை உபயோகித்தால் அந்த நடிகனை அப்புறம் பார்க்கவே முடியாது. சண்டைக் காட்சிகளிலும் பயிற்சியோடு நிஜமான உயிர்க் கொலை நேராமல் சண்டையிடுவார்‌களே தவிர, கொலைக்கு இடம் வைக்க மாட்டார்கள். ஆதலால் நடிப்பின் மூலம் உண்மையைப் பிரதிபலிக்கச் செய்யும் கலைதான் நாட்கம், சினிமா என்பவை. குறை கூறுபவர்கள் வேண்டுமென்றே சொல்கின்றனர். அறியாத்தனத்தால் அல்ல. தாங்கள் சொல்வது சரியல்ல என்பது அவர்களுக்கே தெரியும். ஆகவேதான் இதுபோ்ன்ற பல்வேறு விஷயங்களுக்கு நான் பதில் சொல்லாமல் விட்டுவிடுவது வழக்கம்.

சினிமாவில் எனக்கு இதுவரை அட்டைக் கத்தியை வைத்துச் சண்டை செய்து பழக்கமில்லை. அநேகமாக எனக்குத் தெரிந்த பலரும அட்டைக் கத்தியை உபயோகப்படுத்தியதில்லை. மரக்கத்தி உண்டு. ஆங்கிலப் படங்களில் பார்த்திருக்கிறேன். சினிமாவில் சண்டைக் காட்சிகளுக்கென அட்டைக் கத்தி இதுவரை உற்பத்தி செய்யப்பட்டதாகவோ, இறக்குமதி செய்யப்ப்ட்டதாகவோ நான் கேள்விப்பட்டதில்லை. பெரிய கவிஞரை சம்பந்தப்படுத்திய கேள்வி என்பதனால் ஓரளவு விளக்கம் கூற முனைந்தேன். இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்
.

============================================

ல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு வருடங்களில், பல்வேறு பத்திரிகைகளில் மக்கள் திலகம் அளித்த பேட்டிகளைத் தொகுத்து, ‘‘‘எம்.ஜி.ஆர். பேட்டிகள்’ என்று ஒரு தொகுப்பு புத்தகம் வெளியிட்டிருக்கிறார் எஸ்.கிருபாகரன் என்பவர். 208 பக்கங்களில் 130 ரூபாய் விலையில் மனோன்மணி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகம் இது. (Manonmani Pathipagam, 35/14, East Rajaveethi, Opp: Babu Suriya Hote near bus stand, Kanchipuram-631 501. Email: kirubakar08@yahoo.com) அந்த நூலிலிருந்து சண்டைக் காட்சிகள் பற்றி வாத்யார் கூறியவற்றை மட்டும் தொகுத்து இங்கு அளித்திருக்கிறேன். புத்தகம் பற்றி சுருக்கமாகச் சொல்வதென்றால்: நடிகர், அரசியல்வாதி, இசை ரசிகர், போன்ற அவரின் பல்முகங்களைத் தாண்டி எம்.ஜி.ஆர். என்ற மனிதரை உணரச் செய்கிறது இந்தப் புத்தகம்!

============================================

Monday, March 4, 2013

எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகள்!

Posted by பால கணேஷ் Monday, March 04, 2013

==============================================================
முன்குறிப்பு: ‘‌எனக்கு எம்.ஜி.ஆரைப் பிடிக்காது’ என்பவர்கள் (அப்படி எவரும் இருந்தால்) இந்தப் பதிவிலிருந்து விலகி விடவும்.
==============================================================

பி.யு.சின்னப்பாவிலிருந்து இன்றைய சூர்யா வரைக்கும் கதாநாயகர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் சண்டைக் காட்சிகள் புகழ்பெற்றவை. என்னைப் பொறுத்தவரையில் எத்தனை ஹீரோக்கள் எத்தனை விதமாக சண்டைக் காட்சிகளில் நடி்ததாலும், என் மனதில் நிற்பது அன்றும் இன்றும் என்றும் எம்.ஜி.ஆர். நடித்த சண்டைக் காட்சிகள்தான். நன்றாகக் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், ஹீரோ ஒரு குத்து விட்டதும், வில்லனின் ஆட்கள் அரைப்படி ரத்தத்தை வாய் வழியாகக் கக்கிக் கொண்டு விழுவதும், ஹீரோவின் ஒரு உதையில் முககால் கிலோமீட்டர் ஆகாய மார்க்கமாகப் பறந்து சென்று லைட் கம்பத்தைப் பெயர்த்துக் கொண்டு விழுவதும் போன்ற அபத்தமான சண்டைகளாக அவருடையது இருக்காது. அனைத்தும் ஒரு கலையழகுடன் அமைந்திருக்கும்.

ஒரு படத்தில் நான்கைந்து சண்டைக் காட்சிகள் வருகின்றன என்றால், அவற்றிற்கிடையே வித்தியாசம் காட்ட அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை அபாரமானது. உதாரணத்துக்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’  பாருங்கள். முதலில் ஆர்.எஸ்.மனோகருடன் அவர் செய்யும் கராத்தே ஸ்டைல் சண்டை, பின்னர் ஜஸ்டினுடன் செய்கிற ஸ்டைலிஷ்ஷான ஜுடோ சண்டை, அழகான பொய்ப்பல் நம்பியாருடன் செய்கிற புத்தர் கோயில் சண்டை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித ரசனையில் அமைந்திருக்கும். ‘கண்ணன் என் காதலன்’ படம் பார்த்தீர்கள் என்றால் கையில் கிடார் என்ற இசைக் கருவியை வைத்துக் கொண்டு, முழுக்க முழு்க்க கால்களை மட்டும் பயன்படுத்தி அவர் நடித்திருக்கும் சண்டைககாட்சி உதட்டை மடித்து விசிலடிக்க வைக்கும். கால்களைப் பயன்படுத்துவதில் புரட்சிக் கலைஞருக்கு அப்பவே முன்னோடி புரட்சித் தலைவர்தாங்க.

எம்.ஜி.ஆரின் ஸ்பெஷாலிட்டின்னா அது வாள் சண்டைதான். வாள் சுழற்றுவதில் இணையற்ற திறமை படைத்திருந்த அவருக்கு ஜாடிக்கேத்த மூடியா அமைஞ்சவரு வில்லன் நம்பியார். ‘கலை அரசி’ன்னு ஒரு படம். அந்தக் காலத்துலயே பறக்கும் தட்டுல பறந்து வேற கிரகத்துக்குப் போறாங்கன்னுல்லாம் கதை அமைச்ச சயன்ஸ் ஃபிக்ஷன். அதுல எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதுவாங்க பாருங்க... அந்த வாள் சண்டையில ரெண்டுபேரும் ஆக்ரோஷமா மோதி, கடைசியில நம்பியாரோட வாளைத் கீழ தட்டி நிராயுதபாணியாக்கிட்டு, ஸ்டைலா நிப்பாரு பாருங்க எம்.ஜி.ஆர். சான்ஸே இல்ல... இப்பப் பாத்தாலும் அந்த சீன் நகம் கடிக்க வைக்கும்.

‘நீரும் நெருப்பும்’ படம் டி.வி.யில அடிக்கடி போடறாங்க. அந்தப் படத்துல சிவப்பா இருக்கற அண்ணன் எம்.ஜி.ஆர். இடதுகைக் காரர். கறுப்பா இருக்கற தம்பி எம்.ஜி.ஆர். வலதுகைக் காரர். ஆக, படத்துல இடது கையால வாளைச் சுழற்றி அவர் சண்டை போடற லாகவத்தைப் பாக்க எக்ஸ்‌ட்ரா ரெண்டு கண்ணுதாங்க வேணும். க்ளைமாக்ஸ்ல ரெண்டு கைலயும் வாளை வெச்சுக்கிட்டு சுழற்றி அவர் அசோகனை வீழ்த்தற காட்சி இருக்கே... அபாரம்பா! ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அரசிளங்குமரி’, ‘நாடோடி மன்னன்’ -இப்பிடி நிறையப் படங்கள்ல அவர் வாள் சுழற்றுகிற லாகவத்தை இப்பவும் பாக்கறப்பல்லாம் ரசிச்சுக்கிட்டுதான் இருக்கேன்.

வாத்யாரின் திறமைகள்ல இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் சிலம்பாட்டம். முறைப்படி அதைக் கற்று தேர்ச்சியடைஞ்சிருந்த அவர் பல படங்கள்ல கம்பு சுத்தற அழகைப் பாத்துட்டே இருக்கலாம். ‘தாயைக் காத்த தனயன்’ படத்துல சின்னப்பா தேவரோட அவர் போடற கம்பு சண்டைய இதுவரை பாக்காதவங்க, அவசியம் தேடிப்பிடிச்சு பாத்துடுங்க. அசரடிககிற வித்தை அது. அந்த சண்டை ஆக்ரோஷமானதுன்னா... ‘ரிக்ஷாக்காரன்’ படத்துல ரிக்ஷாவை விட்டு இறங்காமலே வண்டியை ரிவர்ஸ்ல வட்டமா ஓட்டி கம்பைச் சுத்தி, ரவுடிகளை பின்னிப் பெடலெடுப்பார் பாருங்க... பாத்துடறேங்கறீங்களா? அப்ப சரி. அதே மாதிரி ‘மாட்டுக்கார வேலன்’ படத்தோட க்ளைமாக்ஸ்ல கம்பு சுத்துவாரு பாருங்க... முதல்ல ரெண்டு பேர், அதை சமாளிக்கறப்பவே இன்னும் ரெண்டு பேர், நாலு பேரையும் சமாளிக்கறப்ப இன்னும் நாலு பேர் சேந்துக்க... எட்டுக் கம்புகளையும் சூறாவளியா சுத்தி அவர் சமாளிச்சு அடிக்கிறது... கண்டிப்பா பாத்து ரசிக்க வேண்டிய ஒண்ணு. இன்னும் நிறையப் படங்கள் சொல்லிக்கிட்டே போகலாம்.

‘குமரிக்கோட்டம்’ படத்துல புத்திசுவாதீனமில்லாத ஜெயலலிதாவுக்காக காளி கோயில் முனனால ஆர்.எஸ்.மனோகரோட வாத்யார் போடற சண்டை ஒண்ணு வரும். அதுல மனோகர் ரெண்டு கைலயும் கம்பைப் பிடிச்சுட்டு அடிக்க வர... அதைத் தடுத்து அந்தக் கம்புல கைகள் இருக்க, கால்கள் ரெண்டும் வான் நோக்கியிருக்க ரெண்டு நிமிஷம் ஜிம்னாஸ்டிக் வீரர் மாதிரி அந்தரத்துலயே சுத்தி அப்புறம் கீழ இறங்கி அடிப்பாரு... இப்பப் பாத்தாலும் பிரமிச்சுத்தான் போவீங்க! சுருள் கத்தின்னு ஒரு ஐட்டம் அந்தக் காலத்துல உண்டு. ஒரு கைப்பிடியில, சில மெல்லிய தட்டையான கம்பிகள் செருகப்பட்டிருக்கும். நீளமா பாக்கறதுக்கு தென்னை விளக்குமாறு மாதிரி இருக்கற அது ஒரு அபாயமான ஆயுதம். எதிராளியை தோலைச் சீவிரும். சரியா சுத்தத் தெரியாட்டி சுத்தறவனையே அது சீவிரும். அந்த சுருள் கத்தியைக் கையாண்டு ‘ரிக்ஷாக்காரன்’ பட க்ளைமாக்ஸ்ல எம்.ஜி.ஆர். போடற சண்டைகள் இப்பவும் ஹீரோக்களுக்கு ஒரு பாடமா வைக்கலாம்.

சிங்கத்தையும், சிறுத்தையையும் சண்டையிட்டுக் கொல்ற மாதிரியான சண்டைக் காட்சிகள்லயும் அவர் நடிச்சதுண்டு. அந்த மிதமிஞ்சிய ஹீரோத்தனங்களைப் பத்தி நான் பெருமையாச் சொல்ல வரலை. நான் சொன்ன மாதிரி, மென்மையாக, கலையழகோட அவர் சண்டை போடறதுக்கு நான் இன்‌னிக்கும் ரசிகன்கறதை மட்டும் பெருமையாச் சொல்லிக்கறேன். நான் குறிப்பிட்ட சண்டைக்காட்சிகளையெல்லாம் ஒருமுறை பார்த்து ரசிச்சா நீங்களும் இதேயேதான் சொல்வீங்கங்கறது என் நம்பிக்கை!

==============================================================
ஒரு ரசிகனின் பார்வைல நான் ரசிச்ச MGR சண்டைகளைப் பத்திச் சொன்னேன். அவற்றில் நடிச்ச வாத்யார் அதைப் பத்தி என்ன சொல்றார்னு தெரிஞ்சுக்க விருப்பமுண்டா? சொன்னீங்கன்னா, அவரோட பழைய பேட்டிகள்லருந்து தொகுத்து ஒரு பதிவா தந்துடறேன். (ஹையா! இன்னொரு பதிவு தேத்த ஐடியா கிட்டிருச்சு. ஜாலி!)
==============================================================

Wednesday, February 27, 2013

பாரதிராஜாவின் சீற்றம்!

Posted by பால கணேஷ் Wednesday, February 27, 2013
புகழின் உச்சியில் இருக்கற இயக்குனர்களுக்கு அவங்க நல்ல முயற்சியில ஈடுபடறப்ப எதாவது காரணத்தால தோல்வி ஏற்பட்டுச்சுன்னா, கடுங்க‌ோபம் வரும். அந்த மேதைகள் அதுக்கான காரணங்களை ஆராயாம மக்களின் ரசனையிலதான் குறைன்னு முடிவு கட்டிடுவாங்க. ஒருமுறை பாரதிராஜா அப்படித்தான் கடும் கோபமடைஞ்சாரு. நெறையப் பேருக்கு அது தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லைன்னு தோணறதால ப்ளாஷ் பேக்குல என் மாணவப் பருவத்துக்கு உங்களைக் கூட்டிட்டுப் போய் அதைச் சொல்லப் போறேன்...!

நான் தேவகோட்டையில பள்ளி மாணவனா இருக்கறப்ப ‘நிழல்கள்’னு ஒரு படம் பாரதிராஜாவோட இயக்கத்துல வெளியாச்சு. படம் பாத்தவங்களை வெறுப்பேத்தி தோல்வியாச்சு. கதையில ஹீரோ ராஜசேகருக்கு காதல்லயும் வெற்றி கிடைக்காது; வேலை தேடி அலையற அவருக்கு கடைசி வரைக்கும் வேலையும் கிடைக்காது. இன்னொரு ஹீரோ சந்திரசேகர் சினிமா இசையமைப்பாளராகணும்கற வெறியோட படம் பூரா அலைஞ்சு வாய்ப்புக் கிடைக்காம கடைசியில சட்டையக் கிழிச்சுட்டு பைத்தியமா அலைவாரு. படம் பாத்த நாமளும் கிட்டத்தட்ட அந்த நிலையிலதான் தியேட்டரை விட்டு வெளிய வருவோம்கறது வேற விஷயம்!

நான் சொல்ல வந்தது... அந்த்ப படத்துல இளையராஜா + வைரமுத்து கூட்டணியில பாடல்கள் அத்தனையும் இப்பவும் ரசிக்க வைக்கிறவை. பாரதிராஜாவோட ரசிகர்கள்லாம் அந்த டயத்துல ‘படம் புரியவில்லைன்னு சொல்லுங்கள், பிடிக்கவில்லைன்னு சொல்லாதீர்கள்’ அப்படின்னு ‌போஸ்டர் அடிச்சு ஒட்டினது இன்னொரு ஹைலைட்டான விஷயம். அப்ப பாரதிராஜாவை ரொம்பவே சந்தோஷப்படுத்தியிருக்கும் இந்த விஷயம்னு நினைக்கிறேன். நான் குறிப்பிடற அந்தச் சீற்றம் அவருக்கு வந்த சமயத்துல ரசிகர்கள் இப்படி போஸ்டர் ஒட்டியிருந்தா கூலாகியிருப்பாரோ என்னவோ...

அதன்பிறகு பல வருஷங்கள் கழிச்சு ‘காதல் ஓவியம்’ அப்படின்னு ஒரு படத்தை எடுத்தாரு பாரதிராஜா. இந்தப் படத்துலயும் இளையராஜா + வைரமுத்து கூட்டணி அசத்துச்சு. ஒவ்வொரு பாட்டையும் இப்பக் கேட்டாலும் தலை ஆடும்; கூடவே பாடத் தோணும். படத்தோட கதையும் அப்படி ஒண்ணும் திராபைன்னு ‌சொல்லிட முடியாது. ரசிக்கிற மாதிரிதான் ‌சொல்லியிருந்தாரு பாரதிராஜா. இருந்தாலும் தமிழக மக்கள் அந்தப் படத்தைத் தோல்வியடைய வெச்சாங்க. இந்த முறை ரசிகர்கள் ‘புரியலைன்னு ‌சொல்லுங்க, பிடிக்கலைன்னு சொல்லாதீங்க’ன்னு போஸ்டர் எதும் ஒட்டலை! ‘ஒரு நல்ல படத்தையா தோல்வியடைய வெக்கறீங்க?’ அப்படின்னு இயக்குனர் இமயத்துக்குக் கடுங்கோபம் வந்துச்சு. கோபப்பட்ட அவர் என்ன செஞசாருன்னு சொல்றதுக்கு முன்னால, படம் ஏன் தோல்வியடைஞ்சுச்சுங்கற விஷயத்தைப் பாத்துடலாம்...

பின்னாட்கள்ல அவர் மகன் மனோஜை ஹீரோவா வெச்சு அவர் இயக்கின ‘தாஜ்மகால்’ங்கற படத்தைப் பார்த்திருப்பீங்க. படம் பார்க்காத பாக்கியசாலிகள் ‘ஈச்சி எலுமிச்சி, ஏண்டி கருவாச்சி’ன்னு ஒரு பாட்டையாவது டிவில போடறப்ப பார்த்துடுங்க. கருவாச்சின்னு மனோஜ் பாடற ரியா சென்னோட செவப்பு நெறத்தையும், கருவாச்சின்னு சொல்ற மனோஜோட நிறத்தையும் கண்டு அந்த நகைமுரணை வியந்து மனம் விட்டுச் சிரிப்பீங்க... இப்படி ஒரு விஷயம்தாங்க ‘காதல் ஓவியம்’ விஷயத்துலயும் நடந்தது. ஹீரோயின் அற்புதமா பரதம் ஆடறவன்னு கேரக்டரை வடிவமைச்சாரு பாரதிராஜா. அதுக்கு ராதாவை கதாநாயகியாப் போட்டிருந்தாரு. ராதா ஒரே நேரத்துல கையால உலக்கை குத்தியும், காலால சாணி மிதிச்சும் அற்புதமா பரதநாட்டியம்(?) ஆடியிருந்தாங்க. பின்னாட்கள்ல அவர் கண்டுபிடி்ச்ச ரேவதிய அப்பவே கண்டுபிடிச்சிருந்தாருன்னா படம் பொழச்சிருக்கும். சரி, ஹீரோயின் இப்படீன்னா ஹீரோ... பார்வையற்றவர் கேரக்டர்னா கண்ணை மேல்நோக்கிப் பார்த்தபடி வசனம் பேசினாப் போறும், அதான் அற்புதமான நடிப்புன்னு யாரோ அவருக்கு தப்பா சொல்லிக் குடுத்திருக்கணும். அதுவே போதும்னு நினைச்சதால அதுக்கு மேல அவர் எதுவும் மெனக்கிடலை.

இப்படியான விஷயங்கள்னால படம் தோல்வியடைஞ்சதும், அதுக்கான காரணங்களை ஆராயாம கோபப்பட்ட பாரதிராஜா, ‘‘கடை விரித்தேன்; கொள்வாரில்லை. ஆகவே, ‘சாக்கடை’ விரிக்கிறேன்’’ அப்படின்ற தொனியில பேட்டி குடுத்துட்டு தன்னோட அடுத்த (கேவலப்) படமான ‘வாலிபமே வா வா’ படத்தை எடுத்தாரு. முந்தைய படத்துல சாணி மிதிச்ச அதே ராதாவை ஹீரோயினாக்கி, எவ்வளவு கிளாமராக் காட்ட முடியுமோ அவ்வளவு கிளாமராக் காட்டினாரு. படத்தோட கதையே ‘உவ்வே’ பண்ண வைக்கிற ரகம்தான். தனக்கு ஆண்மையில்லைன்னு நம்பற கதாநாயகன் கார்த்திக், சிட்டுக்குருவி லேகியம், லாட்ஜ் விலைமாது உட்பட அத்தனை கேடுகெட்ட வழிகளிலும் அலைந்து, ஞானம் பெற்று கடைசியில் ராதாவுடன் சேர்வதுதான் கதை.

படத்தோட க்‌ளைமாக்ஸே ஹீரோயின் ராதா, ஹீரோ கார்த்திக்குக்கு வீரத்தை வரவழைக்கிற விதம்தாங்க! அதும் எப்பு்டி? கீழே இவங்களோட நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்துட்டிருக்கும் போது, மாடில ராதா, கார்த்திக்கைப் பாத்து, ‘‘உன்னால எனக்கு ஒரு குழந்தையத் தர முடியாது’’ன்னு உசுப்பேத்திவிட, அவரோட ‘வீரம்’(?) தூண்டப்பட்டு, உடனே சட்டையைக் கழற்றிவிட்டு ராதா மேல் பாய்வாரு. கீழே பெரியவர்கள் ‘மாப்பிள்ளை பெண்ணை அழைச்சுட்டு வாங்க’ன்னு சொல்ல, அழைக்க வரும் நபர், இவர்களின் உடலுறவைப் பார்த்துவிட்டு (கண்றாவி!) கீழே வந்து பெரியவர்களிடம் சொல்ல, கொஞ்சம் கூட அதிர்ச்சியடையாம, அத்தனை பேரும் ஏதோ அந்த வருடத்தின் மிகச்சிறந்த ஜோக்கைக் கேட்டுவிட்ட மாதிரி வாய்விட்டுச் சிரிப்பார்கள். ‘வணக்கம்’ கார்டு வரும்.

கேட்கறதுக்கே புல்லரிக்குதா உங்களுக்கு! டைட்டில் கார்டுல பாரதிராஜான்னு பேர் வர்றதை நம்பறதுக்கு கஷ்டமா இருக்கும். அதை கன்ஃபர்ம் பண்ணிக்கவே மறுபடி படம் பாத்தேன் நான். (‘‘டேய்ய்ய்... அந்த வயசுல ராதாவோட க்ளாமருக்காகப் பாத்தேன்னு உண்மையச் சொன்னா குறைஞ்சா போய்டுவ...?’’ ‘‘ஹய்யய்யோ... இந்த உருப்படாத மனஸ் என் இமே‌ஜை டாமேஜ் பண்ணிட்டுத்தான் ஓயும் போலருக்கே... இத வெச்சுக்கிட்டு... முடியல!’’) பின்னாட்கள்ல இ.இமயம் எடுத்த (என்னைப் பொறுத்த வரை) நல்ல படமான ‘வேதம் புதிது’ சரியானபடி ஓடாதப்ப நல்லவேளையா இவருக்கு மறுபடி சீற்றம் வரலை. வயது தந்த பக்குவமாக இருக்கும்னு எனக்குத் தோணுது.

இமயம் இப்படின்னா... சிகரம் மட்டும் சும்மாவா? இயக்குனர் பாலசந்தர் அவர்கள் ஒரு சமயம் ‘எங்க ஊர் கண்ணகி’ன்னு ஒரு படம் எடுத்தாரு. அப்பாவும், பையனும் ஒரே விலைமாது வீட்டுக்கு சேர்ந்து போற மாதிரி அவர் பாணியில புரட்சிகரமான சிந்தனைகளோட பச்சை நிறத்தில் காட்சிகளை அமைத்து படமெடுத்திருப்பாரு. அது எங்கயும் இப்ப கிடைக்காது, நீங்க பாக்கவும் முடியாதுங்கறது வேற கதை. அந்தப் படத்தைப் பத்தி இப்ப அவர்கிட்ட கேட்டீங்கன்னா, அதைப் பத்தி பேசக்கூட விரும்ப மாட்டாருன்னு நினைக்கறேன்! இயக்குனர் இமயத்துக்கும், இயக்குனர் சிகரத்துக்கும் இந்தத் திரைப்படங்கள் சரியான திருஷ்டிப் பொட்டு.


  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube