Friday, October 2, 2015

பேரன்(பேத்தி?)புடையீர்...

நிகழும் மன்மத ஆண்டு புரட்டாசி 24ஆம் நாள் உத்திர நட்சத்திரமும் சதுர்த்தசியும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9 மணி முதல்...

என்னங்க... உங்களை ஏதோ என் வீட்டுக் கல்யாணத்துக்கோ காதுகுத்துக்கோ அழைக்கப் போறேன்னு நினைச்சீங்களா... இல்லவே இல்லீங்க. அக்டோபர் 11ம் தேதி ஞாயித்துக் கிழமை காலை 9 மணியில் துவங்கி கோலாகலமாக (பெப்ஸிகலமாக?) நடக்கவிருக்கும் நம்முடைய பதிவர் சந்திப்பைத் தூய தமிழ்ல சொல்லி அழைச்சேன். அவ்வளவுதேங்.

புதுக்கோட்டை நண்பர்கள் முழு மூச்சாகக் களத்துல இறங்கி தனித் தனிக் குழுக்களா அமைச்சுகிட்டு, ஒவ்வொரு அம்சத்தையும் பாத்துப் பாத்து திட்டமிட்டுக்கிட்டிருக்கற இந்த நம்முடைய விழாவிற்கான அழைப்பிதழ் இதோ இங்கே உங்களுக்காக....



பிறகென்ன... நம்ம வீட்டுத் திருவிழாவுல நீங்க அனைவரும் தவறாம கலந்துக்கிட்டு அதை என்னென்னிக்கும் நினைவில் நிற்கிற ஒரு நிகழ்வாகச் செய்துவிட வேண்டும் என்று இருகரம் கூப்பி, மகிழ்வுடன் வேண்டிக்கறேனுங்க. விழா அரங்கில் சந்திக்கலாம்.

Wednesday, September 16, 2015

ந்த 2015ம் ஆண்டுக்கான வலைப்பதிவர் சந்திப்பு புதுக்கோட்டையில் அக்டோபர் 11ல் நிகழ இருப்பதையும், அதற்காக முத்துநிலவன் அவர்களின் தலைமையில் நண்பர்கள் பரபரக்க வேலை செய்வதையும் நீங்கள் நன்கறிந்திருப்பீர்கள். (நீ தூங்கி வழிஞ்சிட்டு லேட்டா பகிர்ந்தா நாங்க என்னய்யா செய்யறதுன்னு உங்க மை.வா. கேக்குது. ஹி... ஹி....) பதிவர் சந்திப்புக்கென்றே உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் தளத்தில் அந்த நாளை எதிர்நோக்கி உருகிக் கரைந்து கொண்டிருக்கின்றன விநாடிகள். பார்க்கையில் மகிழ்ச்சியும் படபடப்பும் கூடிக் கொண்டே வருகிறது.

புதுக்கோட்டை நண்பர்களின் உற்சாகமான ஏற்பாட்டில் பலப்பல புதிய விஷயங்கள் இம்முறை அரங்கேறப் போகிறது என்பதைக் காண்கையில் மகிழ்ச்சி கரை உடைக்கிறது. முதலில் குறிப்பிட வேண்டியது வலைப் பதிவர்கள் பற்றிய குறிப்புகளுடன் வெளிவர இருக்கும் கையேடு. மிகச் சிறப்பான, வரவேற்கத்தக்க இந்த முயற்சியில் உங்களைப் பற்றிய விவரங்களை இதுவரை அனுப்பவில்லையெனில் உடன் இங்கு விரைந்து 20ம் தேதிக்குள் அனுப்புங்கள். இந்தப் புத்தகத்திற்கென விளம்பரமும் சேகரித்துக் கொண்டுள்ளார்கள். உள் அட்டை முதல் பக்கத்திற்கு அப்பாதுரையும், கடைசிப் பக்க வெளி அட்டைக்கு விசுஆவ்ஸமும் பங்களித்துள்ளனர். உங்களால் இயன்றதை நீங்களும் செய்தால் சிறப்பு. (விசு ஆவேசம் என்று பதிவில் பார்த்ததும் மிரண்டுதான் போனேன். வேலூர்ல நாம பாத்தப்ப சாந்தமா தானே இருந்தார், ப்ளாக்கர் மீட்னதும்தான் அவர் ஆவேசமாயிட்டாரோ? ஹி.. ஹி... ஹி..)


அப்புறமென்ன... “சிவபெருமான் கிருபை வேண்டும்னா கேக்கப் போறேன்? பணம்தான் ஸார் வேணும். அது பத்தும் செய்யும்னுவாங்க. அது மாத்திரம் என் கைல இருந்துட்டா நான் பதினொண்ணும் செய்வேன்” அப்டின்னு நாகேஷ் சும்மாவா சொன்னார்..? நாம் ஒவ்வொருவரும் நம்மளால முடிஞ்ச நிதிப் பங்களிப்பை செஞ்சு புதுக்கோட்டை நண்பர்களின் கரத்தை வலுப்படுத்திட்டா, அவங்க பன்னெண்டும் செய்வாங்கன்றதுல சந்தேகமில்லை. நிதிஉதவி செய்ய விரும்புவோர் NAME - MUTHU BASKARAN N,, SB A/c Number - 35154810782, CIF No. - 80731458645, BANK NAME - STATE BANK OF INDIA, PUDUKKOTTAI TOWN BRANCH, BRANCH CODE - 16320, IFSC - SBIN0016320 என்ற வங்கிக் கணக்கில் உங்கள் பங்களிப்பைச் செய்யுங்கள்.

இவை யாவற்றையும் விட முக்கியமானது  நமக்காக இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய போட்டிகள். வலைப்பதிவர் திருவிழா - 2015 - புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக்கழகம் இணைந்து நடத்தும் உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் இடம்பெற்றுள்ளன.  ஐந்து தலைப்புகள்! ஒரு போட்டிக்கு பத்தாயிரம் வீதம் இதன் மொத்தப் பரிசுத்தொகை ரூ.50,000/-  போட்டிவிவரம் :

வகை-(1) கணினியில் தமிழ்வளர்ச்சி - கட்டுரைப் போட்டி- கணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள்  -ஏ4 பக்க அளவில் 4பக்கம்.  இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்.

வகை-(2)   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி -சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வ யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்.

வகை-(3)    பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி -பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும்.

வகை-(4)    புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு.

வகை-(5)    மரபுக்கவிதைப் போட்டி-  இளைய சமூகத்திற்கு நம்பிக்கை யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24 வரி. அழகொளிரும் தலைப்போடு.

இதன் விதிமுறைகள் மற்றும் இன்னபிற மேல்/பீமேல் விவரங்களை அறிந்து கொள்ள இங்கே விரையவும்.

போட்டியில கலந்துக்கிட்டு அவங்க தர்ற பரிசுக் கேடயம் நிறைய பரிசுத் தொகைய அள்ளணும்னு ஆசை ஆசையா வருது... ஆனா எல்லாம் சீரியஸ் சப்ஜெக்டாச்சே, நமக்கு என்ன தெரியும்னு நெனக்கறப்ப வர்ற ஆசையும் அடங்கிப் போகுது. ஆ... அபிராமி... அபிராமி.. எனக்கில்லை... பரிசு எனக்கில்லைன்னு தருமி மாதிரி புலம்பத் தோணுது. (இருந்தாலும் நானும் எதையாவது கிறுக்கியே ஆகணும்னு வலைச்சித்தர் உத்தரவு போட்டிருக்கார். நாரதர் கலகம் நன்மைல முடியும்பாங்க. இவர் கௌப்பிவிட்டது என்னாவப் போவுதோ..? ஹி... ஹி...) சிறப்பான எழுத்துத் திறமை படைத்த நீங்கள்  இதில் ஆர்வமுடன் கலந்துக்கிட்டு உங்களோட பங்களிப்பைச் செலுத்தி பரிசுகளை அள்ளிச் செல்லுங்கள். இப்பவே அட்வான்ஸா என்னோட நல்வாழ்த்துகள்.

Monday, August 24, 2015

விடுமுறை விபரீதம்..!!!

Posted by பால கணேஷ் Monday, August 24, 2015
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் எழுந்திரிப்பது என்பது மட்டும் ராஜ ரமேஷால் முடியாத காரியம். மற்ற நாட்களில் எழுந்து கிழித்து விடுவானா என்று கேட்டால்.. ஹி… ஹி… ஹி...! அந்த ஞாயிறின் அதிகாலை 9 மணிக்கு (அவனுக்கு சார்) "பர்ர்ர்..." என்றது அழைப்பு மணி. "யார்?" என்றான் ராஜ ரமேஷ். "பார்..." என்றாள் சபிதா அவன் முதுகில் ஒன்றுவைத்து. வேகமாய் எழுந்துபோய்க் கதவைத் திறந்தான். வெளியில் நின்றிருந்தவள் அவனைப் பார்த்துச் சிரித்தாள். அவளைப் பார்த்து அவன் அதிர்ந்து போய் ‘ழே‘ என்று விழித்தான். நெற்றிச் சுட்டியும், காதுகளில் அகன்ற வளையங்களும், பளிச்சென்ற மூக்குத்தியும், நாலணா அளவுக்குப் பொட்டும் அணிந்து சாண்டில்யனின் கதையிலிருந்து நேரே குதித்துவந்த ஓவியப் பெண் போல இருந்தாள். என்ன... சாண்டில்யனின் நாயகி சுரிதார் அணிய மாட்டாள்; இவள் அணிந்திருந்தாள்.

யாரும்மா நீங்க..? என்ன வேணும்..? என்றான். என்னையா யாரென்று கேட்கிறாய் பார்த்திபேந்திர பல்லவா… உன் தலையைக் கொய்யாமல் விட மாட்டேன்.. என்றவள் குமரிமுத்துவின் சிரிப்பு டெஸிபலில் பாதி வருகிற அளவுக்கு ஹாஹாவெனச் சிரித்தாள். அப்போதுதான் கவனித்தான். ஐயோ...! சிரிக்கையில் வாயில் இரண்டு கடைவாய்ப் பற்களும் சற்றே நீண்டிருப்பது போலில்லை? அந்தப் பற்களின் நுனியில் அதென்ன… தக்காளி சாஸா, இல்லை ரத்தமா..? பார்த்த டிராகுலா சினிமாவும் பேய்ப்படங்களும் இன்ஸ்டன்ட்டாய் நினைவுக்கு வந்து வயிற்றைக் கலக்க, பார்வையைச் சற்று கீழிறக்கியபோதுதான் அதைக் கவனித்தான். அவள் கையில் ஒரு கத்தி! கன்பர்ம்டாக அதில் சொட்டிக் கொண்டிருந்தது ரத்தம்தான்!

நானில்ல.. நீங்க அட்ரஸ் மாறி வந்துட்டீங்க.. என்றவன், அவள் கத்தி பிடித்த கையை உயர்த்த, உளறிக் கொட்டி, கிளறி மூடி அலறியடித்து உள்ளே ஓடி, கட்டிலில் கிடந்த சபிதாவின் அருகில் விழுந்தான். அலறினான். "ஐயோ.. பேய்... பேய்...!". எரிச்சலாய் எழுந்து  'பளார்' என்று முதுகில் ஒரு அறை வைத்தாள். "ய்யூ ராஸ்கல்! ராத்திரி பூரா என்னை தேவதைன்னு கொஞ்சிட்டு, இப்ப பொழுது விடிஞ்சதும் பேய்ங்கறியா..? கெட் லாஸ்ட்" என்றாள். ஐயோ, உன்னையில்லடி. நெஜம்மாவே ஹால்ல ஒரு பேய் வந்து நிக்குதுடி. உடனே வாயேன்… என்றான். ஹாலிடேல கூட தூங்கவிடாம ஏன்யா படுத்தற..? என்றபடி ஹாலுக்கு அவள் செல்ல, அவள் புடவைத் தலைப்பைப் பிடித்தபடி பின்னால் போனான் அவன்.

அவள் இப்போது சோபாவில் ஒய்யாரமாகச் சாய்ந்து படுத்து, டீபாயிலிருந்த சபிதாவின் செல்போனை ஆராய்ந்து கொண்டிருக்க, சபிதா கோபமானாள். ஏய், யார்றி நீ? என்ன வேணும் உனக்கு? என்று அவன் கேட்டதையே அட்சரம் பிசகாமல் கேட்டாள். குதித்தெழுந்த அவள், உன் கணவனின் உயிரை வாங்கவே யாம் வந்திருக்கிறோம் இளவரசி.. என்றாள். நான் ஒருத்தி இருக்கற வரைக்கும் அது உன்னால முடியாதுடி.. என்றாள் சபிதா. ஆமாம். அதை இவளே வாங்கிடுவா. உனக்குல்லாம் விட்டுத் தருவாளா? என்று ரமேஷ் முனக, கும்மென்று அவன் இடது கன்னத்தில் குத்தினாள் சபிதா. கன்னத்தைப் பிடித்தபடியே சட்டென்று ஆங்கிலத்துக்கு மாறினான். Sabi, I think she is mad. Please dial to kilpauk என்றவனின் வலது கன்னத்தில் கத்தி பிடிக்காத மற்றொரு கரத்தால் கும்மென்று குத்தினாள் வந்தவள். You Idiot!! How dare you say that? I’m not mad என்றாள்.  என்னாங்கடி ஆளாளுக்குக் குத்தறீங்க…? அவ்வ்வ்… என்று புலம்பியபடி சோபாவில் சரிந்தான் ராஜரமேஷ். என்னங்க… நெஜமாச் சொல்லுங்க. இவள உங்களுக்குத் தெரியாதுதானே..? என்று சபிதா கத்தினாள்.

நீ வேறடி… மொதல்ல அவளப் புடி என்று அலறியபடி வாசலைப் பார்த்தவன் பிரகாசமானான். ரங்குவும் பொடியனும் வந்து கொண்டிருந்தனர். ரங்கநாதன் பாலசந்திரன் என்று அவன் நண்பன் பெயரைச் சொல்வதைவிட ரங்கு என்றால் அனைவருக்கும் தெரியும். அப்படியே ரித்விக் பிரணவன் என்கிற அவன் நண்பன் பெயரைச் சொன்னால் தெரிவதைவிட பொடியன் என்கிற அவன் புனைபெயர் வெகு பிரபலம். இப்போது சபிதா, அந்த வினோதள் கையிலிருந்த கத்தியைப் பிடுங்க போராடிக் கொண்டிருக்க, அதை புதிராகப் பார்த்தபடி ரமேஷின் அருகில் வந்தார்கள் எழுத்தாள நண்பர்கள்.

என்ன சார், புத்தகக் கண்காட்சிக்குப் போகலாம்னு எங்களை வரச் சொல்லிட்டு இங்க ஏதோ சண்டைக் காட்சிக்கு ஒத்திகை நடக்குது போலத் தெரியுதே..? உங்க குறும்பட ஸ்க்ரிப்ட் ரெடியாய்டுச்சா? இவங்கதான் ஹீரோயினா? என்றான் ரங்கு. அடேய்… குறும்படத்துல ஹீரோவா நடிச்சு பர்னிங் ஸ்டார்னு பட்டம் வேற வாங்கினப்பறம் உன் ரவுசு தாங்கலடா… பாக்கறதெல்லாம் குறும்படமா? இது கொடும்படம்டா. நான் பல்லவ இளவரசனாம். என்னக் கொலை பண்ணியே தீருவேன்னு ஒத்தக் கால்ல நிக்கறாடா.. என்று அலறினான் ரமேஷ். ரங்கு ஏறிட்டுப் பார்க்க, சபிதாவைக் கீழே சாய்த்து ஒற்றைக் காலில் நின்றபடி தள்ளிக் கொண்டிருந்தாள் அவள். சரியாத்தான் சொல்றீங்க சார் என்றான் ரங்கு மூக்குக் கண்ணாடியை மேலேற்றியபடி. கோபமாக அவன் தலையில் தட்டி, அடேய்... முதல்ல போய் சபிதாவக் காப்பாத்துடா என்று ரமேஷ் அலற, அவளை நோக்கிப் பாய்ந்தான் ரங்கு.

சார், மென்டலாய்ட்டாலும்கூட மனசுல பதிஞ்ச எடத்துக்குத்தான் போகத் தோணும். நீங்க இவங்கள எப்பவோ சந்திச்சு எதோ செஞ்சிருப்பீங்களோன்னு தோணுது. நல்லா யோசிச்சுப் பாருங்க… ஒரு அனுபவக் கதையே பின்னால இருக்கும்.. என்றான் பொடியன். அடேய், சந்திக்கற அனுபவத்துலல்லாம் கதையத் தேட உன்னாலதான்டா முடியும். நான் ஒரு மண்ணும் தெரியாத அப்பிராணிடா. காலேஜ் டேஸ்ல லவ்கூடப் பண்ணினது கெடையாது. நீ பாட்டுக்கு எதையாவது பேசி குடும்பத்துல கும்மியடிச்சிராதடா என்று பதறியவனாக பொடியனின் வாயைப் பொத்தினான் ரமேஷ்.

இப்போது சபிதாவும் ரங்குவுமாக அவளைச் சமாளித்து கட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்கள். அவள் கையைப் பின்னால் பிடித்து மடக்கியபடி கத்தியைப் பறித்துவிட்டுக் கேட்டான் ரங்கு. சொல்லுலே… எதுக்கு கத்தியோட அலையுத? அரிமர்த்தன பாண்டியரின் துணைவி யான். என் கணவரின் சிரத்தைச் சதிசெய்து கொய்த சோழன் செழியனை யாம் சற்றுமுன்தான் கொன்றோம். அவன் தோழனான இந்தப் பல்லவனின் சிரத்தைத் துண்டிக்கா விட்டால் எம் கணவரின் ஆத்மா அமைதியுறாது. விடுங்கள் என்னை என்று திமிறினாள் அவள்.

தபாரு… சாருக்கு பல்லு கொஞ்சம் பெரிசுதான். அதுக்காக வாய்க்கு வாய் அவரைப் பல்லவன்னு சொன்னா மிதிபடுவ.. என்று ரங்கு அலற, அவள் அவன் கையை உதற, பொடியன் இப்போது அவளைப் பிடிக்க உதவிக்கு வர, உங்களுக்கு அறிவே கெடையாதா? செல்லை எடுத்து போலீசைக் கூப்புடுங்க.. என்று சபிதா அலற, ரமேஷ், அதிவேகமாக செல்லைக் கையிலெடுத்து டயல் செய்யத் தொடங்க.. ஸ்டாப் இட். டயல் பண்ணாதீங்க சார்… என்று வாசலில் அதிகாரமான ஒரு குரல் கேட்டது. ரமேஷ் நிமிர்ந்து பார்க்க, மற்றவர்கள் திரும்பிப் பார்க்க, அங்கே காவி நின்றிருந்தான்.

காரைக்குடி வினாயகராஜன் என்கிற அவன் பெயரை முழுதாகச் சொன்னால் அனைவரும் ‘ழே‘ என்றுதான் விழிப்பார்கள். ஆனால் பெயரின் முதலிரண்டு எழுததுக்களைக் கோர்த்து அவன் வைத்துக் கொண்டிருக்கும் காவி என்கிற பெயரானது ஜகப்பிரசித்தம். டேய் காவி, எப்படா காரைக்குடிலருந்து வந்த..? இங்க என்ன நடக்குது தெரியுமா…? என்று ஆரம்பித்த ரமேஷைக் கையமர்த்தினான் காவி. இந்த சீனுக்கு நான்தான் சார் டைரக்டர். எனக்குத் தெரியாதா என்ன..? டேய், ரங்கு… அவள விடுடா. இதான் சாக்குன்னு அமுக்காத. அவ என் அடுத்த குறும்பட ஹீரோயின் வினோதினி என்றான் காவி. ஹாய் அங்க்கிள் என்றது அந்த வினோதினி. என்ன.. குறும்படமா… கதாநாயகியா…? என்று துண்டு துண்டாய் வியந்த ரமேஷிடம் விளக்கினான் காவி.

என் அடுத்த குறும்படத்தோட சப்ஜெக்டே வினோதமா ஒரு கேரக்டர் வீட்ல புகுந்து அட்டகாசம் பண்ணா வீட்ல இருக்கறவங்களோட ஆக்டிவிடீஸ் என்னவா இருக்கும்ங்கறதுதான். நேத்து ஈவினிங் இந்தப் பொண்ணை ஹீரோயினா பிக்ஸ் பண்ணப்பதான் இந்த ஐடியா வந்துச்சு. ரிகர்சல்னு தனியா வெக்காம ப்ராக்டிகலாவே பண்ணிப் பாத்தா என்னன்னு மனசுல பட்டதும் உங்க நெனைப்புதான் வந்துச்சு. நான் மறைஞ்சு நின்னு உங்க ரெண்டு பேரோட எக்ஸ்பிரஷனையும் கவனிச்சுட்டிருந்தேன். இவங்க ரெண்டு பேரும் குறுக்க வருவாங்கன்றது நான் எதிர்பாக்காதது…. ஹி.. ஹி… ஹி. ஸாரி ஸார்… என்றான் காவி.

கடைசில எல்லாம் உங்க வேலையா காவியண்ணா? என்று சபிதா சிரிக்க, கடைசில இல்லம்மா.. ஆரம்பத்துலருந்தே என் வேலைதான் என்று காவியும் சிரிக்க, அதைக் கண்டு கடுப்பாகி, அடேய் குறும்படம் எடுக்கற குரங்குப்பயலே… (நன்றி: ரா.பார்த்திபன்) நீ காவியே இல்லடா… பாவி, படுபாவி!! என்று பல்லைக் கடித்துக் கையை ஓங்கியபடி ராஜரமேஷ் காவியை அடிக்கப் பாய, கூடவே பாய்ந்தனர் ரங்குவும், பொடியனும்.


பி.கு. : இந்தக் கதை முழுக்க முழுக்க கற்பனைக் கதைதான் மக்களே... உங்களுக்குத் தெரிந்த நபர்களை கதை மாந்தர்களாக நீங்களே கற்பனை செய்து கொண்டு படித்தால் அதற்குக் கம்பெனி பொறுப்பில்லை..!!

Wednesday, July 22, 2015

ர்... ரா.. ராதிகா மிஸ்..!!!

Posted by பால கணேஷ் Wednesday, July 22, 2015
கார்த்திக் சரவணன் என்கிற ஸ்கூல்பையன் நேற்று முன்தினம் தன் தளத்தில் ஷர்மிலி மிஸ் என்று ஒரு அனுபவக் கதையை வெளியிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியை எழுதி ஷர்மிலி மிஸ்! என் பொண்ண ஏன் அடிச்சீங்க? என்று ஒரு பதிவை நேற்று வெளியிட்டிருந்தார் நம்ம டி.என்.முரளிதரன். கூடவே குறும்படம் எடுக்கிற பதிவர்கள் இதைப் பயன்படுத்தவும்னு கோரிக்கையும் வெச்சிருந்தாரு. அதைப் பார்த்ததுமே குறும்பு பண்ற என் புத்தி, இதை வேற ஸ்டைல்ல எழுதியே ஆகணும்னு அடம் புடிச்சது. விளைவு... இப்ப நீங்க படிக்கப் போற ‘ராதிகா மிஸ்’.

ராதிகா மிஸ்ஸை உடனே பார்த்து, அவள் கன்னத்தில் ‘ரப்’பென்று ஒரு அறை விடவேண்டும் போல கோபம் பொங்கிக் கொண்டிருந்தது எனக்குள். அதைப் பற்றிச் சொல்வதற்கு முன் ராதிகா மிஸ்ஸை நீங்கள் சந்திக்க வேண்டும். என் மகளை நேரடியாக எல்.கே.ஜியில் சேர்க்கச் சென்ற போதுதான் ராதிகா மிஸ் எனக்கு அறிமுகமானாள். இரண்டு குண்டு பன்களை ஒட்ட வைத்தது போன்ற கன்னம், ஜெய்சங்கருக்கிருப்பது போன்ற சின்னக் கண்கள், அதற்குப் பொருந்தாத பெரிய கண்ணாடி, அறிவின் அடையாளமாய் பரந்த நெற்றி, தடித்த உதடுகள், குள்ளமான, குண்டான உருவம் என்று மொத்தமாக அவளைப் பார்த்த போது சற்றே பெரிய சைஸ் பூசணிக்காய் கை கால் முளைத்து வந்தது போல் தோற்றமளித்தாள். தன் கையிலிருந்த லிஸ்டைப் பார்த்துவிட்டு ‘‘உங்க பொண்ணு பேர் என்ன மாநந்தியா..?’’ என்று கேட்டாள். நான் திடுக்கிட்டுப் போய் அவள் கையிலிருந்த லிஸ்டை எட்டிப் பார்த்தேன். 

‘‘சரியாப் போச்சு போங்க... எம்.ஆனந்திங்க அது. என் பேர் முரளி’’ என்றேன். ‘‘ஆபீஸ்ல இருக்கறவங்க புள்ளி வெக்க மறந்துட்டாங்க போல. ஸாரி ஸார்’’ என்று சிறிதும் வருந்தாத குரலில் கூறி இலவச இணைப்பாக குமரிமுத்துவின் சிரிப்பை ஆல்டர் செய்தது போலச் சிரித்தாள். நான் கடுப்பாகி, ‘‘என் பக்கத்து வீட்டு மூவேந்தன் தன் பொண்ணு தேவிய இங்க சேக்கலாம்னு இருந்தான். நல்லவேளை... வேற ஸ்கூலுக்குப் போய்ட்டான்..’’ என்க, நான் சொன்னது புரியாமல் ‘ழே‘ என்று விழித்தபடி நின்றிருந்தாள். தலையிலடித்துக் கொண்டு வீடு திரும்பினேன்.

என்ன அவசரமாக இருந்தாலும் என் மகளைப் பள்ளியில் விடுவது நான்தான். அதை மட்டும் அவளுக்கு விட்டுத்தரவே மாட்டேன். மாலையில் போய் அழைத்து வருவது என் மனைவி ஜெயாதான். குழந்தைகள் வகுப்பு முடிந்து வருவதற்குள் பாகுபலியின் பிரம்மாண்டத்திலிருந்து மெகாசீரியலின் வில்லிகள் வரை எல்லா சப்ஜெட்டுகளையும் அலசி முடித்திருப்பார்கள் அங்கு காத்திருக்கும் தாய்மார்கள். இப்படி என் மனைவிக்கு நிறையத் தோழிகள் அங்கே. எப்போதாவது மற்ற சப்ஜெக்ட்டுகள் போரடித்தால் குழந்தைகளின் படிப்பு பற்றியும் பேசிக் கொள்வார்கள் நேரிலும் சிலசமயம் கைபேசி மூலமும். 

இப்படி நான் நினைத்திருந்தது மகாத்தப்பு என்பது அலுவலகத்துக்கு மட்டம் போட்ட ஒரு தினத்தின் மாலையில் ஆனந்தியை அழைத்துவரப் போயிருந்தபோது தெரிந்தது. மகள் வரும்வரை கைபேசியில் முகநுலில் திரிந்து கொண்டிருந்த எனக்குப் பின்னால் அவர்கள் மெல்லிய குரலில் பேசியது கேட்டது. ‘‘ஏய்.. அவர்தாண்டி ஜெயா வீட்டுக்காரர்..’’ ‘‘இவரா..?’’ ‘‘ஆமாடி. எப்பப் பாரு ஃபேஸ்புக்ல மேஞ்சுட்டிருப்பாருன்னு சொன்னால்ல..?’’ ‘‘கதைல்லாம் எழுதுவாருன்னு சொன்னா. ஆளப் பாத்தா சேட்டு வீட்டுப் பிள்ளை மாதிரில்ல இருக்காரு...’’ ‘‘மெதுவாப் பேசுடி. காதுல விழுந்துரப் போவுது.’’ ‘‘அதெல்லாம் விழாது. நாளைக்கு நீ ஜெயாட்ட நான் இப்டிச் சொன்னேன்னு மாட்டிவுடாம இருந்தாச் சரி..’’ திரும்பி, பேசியவளை முறைக்கலாம் என்று ஆசை துடித்தாலும், வாலண்டியரா வண்டில ஏறாதடா என்று அறிவு தடுத்ததால் பேசாமல் ஆனந்தியை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினேன். அன்றிலிருந்து வீட்டில் சும்மாவே இருந்தாலும்கூட மகளை அழைத்துவர நான் போவதில்லை. ஹி.. ஹி... 

நான் சொல்லவந்தது ராதிகா மிஸ்ஸின் மீது எனக்கு வந்த கோபம் பற்றித்தான் இல்லை..? அதைப் பேசலாம். இரண்டு நாட்களுக்கு முன் நான் ஏகப்பட்ட ஆணிகள் பிடுங்கிய அலுப்பில் அலுவலகத்திலிருந்து வந்து உடை மாற்றுவதற்கு முன்பே, ‘‘அப்பா, ஸ்கூல்ல என்னை மிஸ் அடிச்சுட்டாங்க..’’ என்றாள். ‘‘நீ க்யூட் பேபி இல்லையா...? அதான் கிஸ் அடிச்சிருப்பாங்க. விடும்மா..’’ என்றேன். ‘‘ஐயோ அப்பா.. மிஸ்... மிஸ்... அடிச்சுட்டாங்கன்னு சொல்றேன்..’’ என்றாள் சலிப்பாக. ‘‘அவ யார் அடிக்க?’’ என்று நான் கேட்க, ‘‘இவ என்ன செஞ்சான்னு கேளுங்க மொதல்ல’’ என்றாள் ஜெயா. ‘‘நீ என்ன செஞ்ச கண்ணூ?’’ ‘‘மிஸ் உக்கார வெச்ச எடத்துல உக்காராம மாறி உக்காந்துட்டேன்னு அடிச்சிட்டாங்கப்பா’’ 

எனக்கு கோபம் தலைக்கேறியது. என் மகள் பிறந்ததிலிருந்தே சேட்டைக்காரிதான். அடம் பிடித்து எங்களை நிறையத் தொந்தரவு செய்திருக்கிறாள். என்றாலும் ஒரு நாள் கூட அவளைக் கைநீட்டி அடித்ததில்லை, அவள் முகத்தைப் பார்த்தால் அடிக்கவும் மனசு வராது. ஸ்கூல் மிஸ், அதுவும் ரெண்டு மாசம் கூட ஆகவில்லை, அதற்குள் அவளுக்குக் கைநீட்டுமளவு தைரியம் வந்துவிட்டதா? என் முகத்தின் கோபத்தைப் படித்த ஜெயா, ‘‘ஏன் இப்டி டென்ஷனாகறீங்க..? மிஸ் லேசாத்தான் கன்னத்துல தட்னாங்களாம். அவ அடிச்சதா சொன்னதும் பதறிட்டாங்க. உங்ககிட்ட சொல்ல வேணாம்னு சொன்னாங்க.’’ ‘‘அதான் மறக்காம சொல்லிட்டியாக்கும்..? ஆனந்தி என்ன நினைச்சிருப்பா? இதுக்குத்தான் அம்மா அப்பா நம்மளை அழஅழ ஸ்கூல்ல தள்றாங்க போலன்னு நினைச்சிருக்க மாட்டா? இந்த அடிக்கிற வேலையெல்லாம் வேணாம்னு அவளத் திட்டறத விட்டுட்டு எனக்கு அட்வைஸ் வந்துட்டா பெரிசா..’’ ஜெயா கூலாக ‘‘நாய்னா கடிக்கறதும், மிஸ்னா அடிக்கறதும் சகஜம்தாங்க. சின்ன வயசுல நான் வாங்காத அடியா..? விட்டுட்டு வேலயப் பாருங்க.’’ என்றாள். அதற்கு மேல் அவளை எதிர்த்துப் பேசுவது ஆபத்து என்பதை அனுபவ அறிவு உணர்த்தியதால் மவுனமானாலும், ‘இதச் சும்மா விடக்கூடாது’ என்று மனதினுள் முடிவு செய்தேன்.

றுதினம் காலை சீக்கிரமாகவே பள்ளிக்குச் சென்று விட்டேன். ஆனந்தியை வகுப்பில் அமர வைத்துவிட்டுக் காத்திருக்க, பூசணிக்காய்க்குப் பதில் காற்றில் பறந்து விடுகிற உடல்வாகில் ஒரு முருங்கைக்காய் வந்தது. ‘‘ராதிகா மிஸ்..?’’ ‘‘அவங்க லீவ் ஸார். நீங்க போங்க நான் பாத்துக்கறேன்’’ என்றது. அடுத்த தினமும் காத்திருப்பு, மு.காயின் வருகை, நான் திரும்புதல் என்று டிட்டோ. ரெண்டு நாள் பாக்காட்டா கோபத்தின் சதவீதம் குறைந்துவிடுமே என்று அதை அவ்வப்போது ஊதிவிட்டுக் கொண்டேன். மூன்றாம் தினமும் அதே மு.காய் வர, ‘‘ராதிகா மிஸ் வரலையா..? என்னாச்சு..?’’ என்று கேட்டே விட்டேன். வந்த பதில் என்னை அதிரச் செய்தது. ‘‘திடீர்னு அவங்களுக்குக் கல்யாணம் ஆய்டுச்சு சார். அதனால இன்னும் ரெண்டு நாள் கழிச்சுத்தான் வருவாங்க’’ என்றது அந்தப் பெண் வெட்கமாக. ‘அதுக்கு இவ எதுக்கு வெட்கப்படணும்’ என்ற கேள்வியுடன் திரும்பி விட்டேன்.

ன்றிலிருந்து மூன்றாவது தினம் தான் ராதிகா மிஸ் வந்தாள். என்னைப் பார்த்ததுமே அடையாளம் கண்டு கொண்டாள். ‘‘நீங்க ஆனந்தியோட அப்பா இல்ல..?’’ ‘‘என் மகளை அடிச்சீங்களாமே..?’’ என்றேன் கோபத்தைக் குரலில் வரவழைத்துக் கொண்டு. ‘‘அடிக்கல்லாம் இல்ல. கொஞ்சம் குறும்பு பண்ணினா. அதான் லேசாத் தட்டினேன். அவங்கம்மாட்ட கூட ஸாரி கேட்டேனே..?’’ ‘‘நீங்க ஸாரி கேட்டா என்ன, வேஷ்டி கேட்டா என்ன.? ஆயிரக்கணக்குல பீஸ்கட்டி நாங்க குழந்தையப் படிக்க அனுப்பினா அடிப்பீங்களோ..? என்ன நெனச்சுட்டிருக்கீங்க மனசுல..?’’ முகத்தைக் கடுகடுவென மாற்றிக் கொண்டு கோபமாக நான் இரைய, கையைக் கொண்டு வாயைப் பொத்திக் கொண்டாள் ராதிகா மிஸ். பயந்துவிட்டாள் போலும்! 

‘‘குழந்தை தப்பு பண்ணா எங்ககிட்டதான் சொல்லணுமே தவிர நீங்க அடிக்கக் கூடாது. குழந்தைகளை அடிக்கறதுக்குப் பெத்தவங்களுக்கே உரிமை இல்லைங்கறப்ப நீங்க எப்படி அடிக்கலாம்? சைல்ட் சைகாலஜியப் படிக்காமயா வேலைக்கு வந்தீங்க..? நான் பிரின்சிபால் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவேன். அவர் கேக்கலைன்னா சி.இ.ஓ. கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணுவேன், உங்க வேலை போயிரும்.’’ ‘‘பெரிய கவர்மெண்ட் வேல... போங்க ஸார் வெளையாடிக்கிட்டு...’’ என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு வகுப்பறையினுள் ஓடிவிட்டாள். சில விநாடிகளில் அங்கிருந்து சிரிப்பொலி கேட்க, நான் குழப்பமாக என் வாகனத்தைக் கிளப்பினேன்.

ன்றிரவு வீடு திரும்புகையில் ஆனந்திக்கு மிகப் பிடித்த ப்ளாக் பாரஸ்ட் கேக்கும், பெரிய டெடிபியர் பொம்மையையும் வாங்கி வந்திருந்தேன். வழக்கமாக என் வண்டி நிற்கும் சத்தத்துக்கே ஓடிவரும் ஆனந்தி இன்றைக்கு காணோம். சரி, கேம்ஸ்ல பிஸியா இருப்பா போல என்று நினைத்தபடி உள்ளேறினேன். காபி தந்த ஜெயாவிடம் ‘‘ஆனந்தி எங்க..? அவளுக்காக என்னல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு..? அவளக் கூப்பிடு’’ என்றேன். ‘‘அதென்னமோ சாயங்காலம் ஸ்கூல்லருந்து வந்ததுலருந்தே உம்முன்னு இருக்கா. என்ன கேட்டாலும் பதிலே இல்ல. அப்டியே அடம் அப்பனைப் போல..’’ சந்தடிசாக்கில் அவள் எனக்கொரு பஞ்ச் விட, நான் ‘ழே’ என்று விழிக்க ‘வரச் சொல்றேன் இருங்க. ரொம்பதான் செல்லம் கொடுத்துக் கெடுத்து வச்சுருக்கீங்க’’ என்று அம்மாக்களின் வழக்கமான டயலாக்கை பேசிவிட்டுப் போனாள்.

அப்போதும் ஆனந்தி வரவில்லை நான் அவள் ரூமுக்குள் நுழைந்தேன். கட்டிலின் மூலையில் உம்மென்று உட்கார்ந்திருந்தது என் செல்லம்.. நான் போனதும் முகத்தை திருப்பிக் கொண்டாள். "ஏண்டா செல்லம்? என்ன கோவம் உனக்கு? .டாடி உனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு... உனக்குப் புடிச்ச ப்ளாக் கரண்ட் கேக், பொம்மை.." பதிலில்லை. ஒருவேளை நான் வந்தும் அந்த குண்டு பூசணிக்காய் என் மகளைத் திட்டியிருக்குமோ..? "கண்ணூ... நான் கோவிச்சுக்கிட்டதுக்காக மிஸ் உன்னைத் திட்டினாங்களா..? சொல்றா.. அவள ஒரு வழி பண்ணிடறேன். என்ன நெனச்சுட்டிருக்கா அவ மனசுல..?" என்றபடி அவள் கையில் பொம்மையைத் தர கோபத்துடன் தூக்கி எறிந்தாள் ஆனந்தி. 

‘‘போங்க டாடி.. உங்களை யார் காலைல மிஸ்ஸைத் திட்டச் சொன்னது..? உங்களால எனக்கு பெரிய இன்சல்ட்டாப் போச்சு’’ என்றாள் கோபமாக. ‘‘இன்சல்ட்டா..? என்னம்மா சொல்ற..?’’ நான் வழக்கம்போல பாக்யராஜ் முழி முழிக்க, அவளே தொடர்ந்தாள். ‘‘அமுல் பேபி மாதிரி உங்க மூஞ்சி இருக்காம். அதுல நீங்க கஷ்டப்பட்டு கோவத்தை வரவழைச்சுகிட்டதப் பாத்ததும் ராதிகா மிஸ்க்கு சிரிப்பை அடக்க முடியலையாம். கையால வாயப் பொத்தி கஷ்டப்பட்டு அடக்கிருந்திருக்காங்க. நீங்க போனதும் க்ளாசுக்குள்ள வந்து விழுந்து விழுந்து சிரிக்கறாங்க. அவங்க சொன்னதக் கேட்டு என் ப்ரண்ட்ஸ்லாம் கூடச் சிரிச்சுட்டாங்க. எனக்கு அவமானமாப் போச்சு தெரியுமா..’’ என்று அவள் கோபமாகச் சொல்ல, நான் திகைத்தேன். ‘ழே’ என்று விழித்தேன். அடிப்பாவி... நான் குண்டுப் பூசணிக்காய் என்று அவளுக்குப் பட்டப் பெயர் வைத்தால் இப்படியா எனக்கு அமுல்பேபி என்று பட்டப் பெயர் வைத்து குழந்தைப் பிள்ளைகள் முன்னால் மானத்தை வாங்குவாள்..? அவ்வ்வ்வ்... ‘இனி ஆனந்தியை பள்ளியில் விடப் போனால் தலையில் போட்ட ஹெல்மெட்டைக் கழற்றாமல் அப்படியே திரும்பி ஓடி வந்துவிடத்தான் வேணும்.’ மனதிற்குள் சொல்லியபடியே திரும்ப, அறை வாசலில் நின்று என்னைக் கேலியாகப் பார்த்த ஜெயாவின் பார்வையை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை..!!!

Saturday, July 4, 2015

குறும்(பட) பயண அனுபவம்!!

Posted by பால கணேஷ் Saturday, July 04, 2015
வனைச் சேர்ந்தவர்கள் குறும்படங்களில் நடிப்பதையும் இயக்குவதையும் ரசித்துப் பார்த்துக் கொண்டும், இயன்ற சமயங்களில் பங்களிப்புச் செய்து கொண்டும் இருந்த இவனுக்குக்கூட குறும்படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தார் துளசிதரன். (என்னா தெகிரியம்!) சரி, அவரே துணிஞ்சப்பறம் நமக்கு என்ன வந்தது என்கிற அசட்டுத் துணிச்சலில் இவன் சம்மதித்தான். சேரநன்நாட்டின் வளமையை, செழுமையை …ஹலோ, இயற்கையைக் குறிப்பிடுகிறேன்… ரசிக்கலாமென்கிற சபலம்தான் இவனுக்கு. சம் என்று சொல்லி மதம் என்று முடிப்பதற்கு முன்னேயே பாலக்காடுக்கு போக, வர மின்வண்டி பயணச்சீட்டை புக் செய்து தந்து அசத்தினார் சகோதரி கீதா ரங்கன். (என்னா திட்டமிடல்!!). சரி, நமக்கு சின்னப் பாத்திரம், இரண்டே வசனங்கள்தானே, சமாளிச்சிரலாம்னு இவனும் புறப்பட்டு சென்னை மத்திய ரயில் நிலையத்திற்கு வந்தாயிற்று.

மின்வண்டிப் பயணங்களில் மேல் இருக்கைதான் பெரும்பாலும் கிடைக்கும் இவனுக்கு. அருகிலேயே மின்விசிறி இருப்பதால் அது வசதி என்றும் தோன்றும். ஆனால் பக்க மேல் படுக்கை வாய்க்கப் பெறுபவர்கள் அபாக்கியவான்கள் என்றொரு திடமான நம்பிக்கை இவனிடம் உண்டு. கால் நீட்டவும் வசதிக் குறைவாய், மின்விசிறிக் காற்றும் எட்டாமல், கழிவறைக்குப் போகிற வருகிற பயணிகள் சத்தத்தையும் சகித்துக் கொண்டு… பெருந்துன்பம்! துரதிர்ஷ்டவசமாக அன்று இவன் அபாக்கியவானாக ஆனான். பக்க மேல் படுக்கையா.. என்று நொந்து கொண்டே கட்டையைச் சாய்த்தால் உறக்கமும் வரவில்லை, மின்வண்டி கிளம்பியும் எதிர் இரண்டு மேல் படுக்கைகளுக்கு ஆட்களும் வரவில்லை.

கட்பாடி.. ஸாரி, காட்பாடி ரயில் நிலையத்தில் வண்டி நின்றபோது இரண்டு சேரநன்நாட்டிளம் பெண்கள் வந்து மேல் படுக்கைகளை ஆக்ரமித்தனர். இவன் கண்படும்படி எதிரே இருந்தவளின் பெயர் ஆஷா என்று மற்றவள் அழைத்ததிலிருந்து தெரிந்தது. மலையாளத்தில் அம்சா என்றால் அம்சை, உஷா என்றால் உஷை என்று அழைப்பார்கள். அப்படிப் பார்த்தால் ஆஷை!!! ஹா.. ஹா… ஹா.. இரண்டு மனோஹரமாய பெண்குட்டிகளும் நான்ஸ்டாப் மலையாளத்தில் மூக்கால் சம்சாரித்துக் கொண்டிருக்க, இவன் ரசித்து, பின் சற்றே யோசித்து, நிங்ஙள் எவிட இறங்குன்னது? என்று கேட்க, ஒரு மாதிரியாகப் பார்த்தபடி ட்ரிவாண்ட்ரம் அங்கிள் என்றது ஆஷை. எனிக்கு ஒரு சகாயம் வேண்டே. சப்போஸ் ஞான் உறங்கிட்டெங்கில் என்னை பாலக்காட்டில் இறப்பிக்குமோ..? இதானு பர்ஸ்ட் டைம் ட்ராவல் என்றான் இவன். கண்டிப்பாச் சொல்றேன் அங்கிள்.. அதுக்காக தயவுபண்ணி மலையாளத்தைக் கொல்லாதீங்க ப்ளீஸ் என்று ஆஷை ஸ்பஷ்டமாகத் தமிழில் சொன்னதும் முகத்தில் லிட்டர் கணக்கில் அசடு வழியப் படுத்துறங்கி விட்டான் இவன்.

வாக்குத் தவறாத அந்த வனிதை, சரியாக காலை நான்கு மணிக்கு எழுப்பி விட்டாள் - இதான் பாலக்காடு ரயில்நிலையம் அங்கிள் என்று. நன்றி சொல்லி இறங்கி வெளியே வந்தால், பாலக்காடு இவன் நினைத்த மாதிரி பெரிய ஸ்டேஷன் இல்லை. தம்மாத்தூண்டாக இருந்தது. (ஊரே பெரிய சைஸ் கிராமம் போல்தான் என்று பிறகு சொன்னார்கள்). ஸ்டேஷனை விட்டு இறங்கியதும் கோவை ஆவியின் தொலைபேசிக்கு அழைத்தான் இவன். அவன்தான் வந்து இவனை அழைத்துச் செல்வதாக ஏற்பாடு. எங்கே அவன் நம் ‘இலக்கியக் காட்டாறு போல ஒலிக்கும் தொலைபேசியைக் கவனிக்காமல் விட்டால் என்ன செய்வது என்றொரு பயம் இவனுள் இருந்தது. நல்லவேளையாக ஆவி, உடனே எடுத்துப் பேசினான். இதோ கிளம்பிட்டன் என்றான். பொழுதைப் போக்க எதிரிலிருந்த கடையில் ஒரு குளம்பி பருகினான் இவன்.

பத்து நிமிடங்களின் இறப்பில் இவனின் கைபேசி ஆவி அழைப்பதாகச் சொல்ல, உயிர்ப்பித்தான் இணைப்பை. சார், நான் வந்துட்டேன். எங்க இருக்கீங்க? என்றான் ஆவி. ஸ்டேஷன் வாசல்லயேதானடா இருக்கேன்.. என்றான் இவன். ஓ… அந்தப் பக்க கேட்ல எறங்கிட்டீங்க போல.. இருங்க, சுத்தி வரேன் என்றான் ஆவி. காத்திருப்பில் கழிந்த இரண்டு நிமிடங்களின் பின் இவன் ஆவியை அழைத்து, எங்கடா இருக்க..? இவ்ளவு நேரமா இந்த கேட்டுக்கு வர..? என்று கேட்க, ஸார், இங்க இருக்கற ரெண்டு கேட்டையும் பாத்தாச்சு. நீங்க இல்ல… பக்கத்துல எதாவது லாண்ட் மார்க் சொல்லுங்க.. என்று ஆவி சலித்துக் கொள்ள, இவன் கண்ணில் பட்ட அருகாமை லாட்ஜ் பெயரைச் சொல்லி, அழைப்பைத் துண்டித்தான். இரு நிமிடத்தில் மீண்டும் ஆவியின் அழைப்பு. ஸார், அப்டி ஒரு லாட்ஜே இங்க இல்லங்கறாங்க. நான் ஆலுக்காஸ் ஜ்வல்லரி பக்கத்துல நிக்கறேன். விசாரிச்சு வாங்க.. என்று வைத்துவிட்டான்.

என்னடா இது..? நாம்தான் ராங்சைடில் இறங்கிட்டோமோ என்று இவன் பயந்து நிலையத்தின் படிகளில் ஏறி மறுபுறம் சென்று பார்க்க, அங்கே ஒரு மைதானமும் முட்டுச் சந்தும் போல இருக்க, சாலையே இல்லை. நொந்து கொண்டே மீண்டும் படிகளேறி இந்தப் புறம் மீண்டும் வந்து ஆலுக்காஸை விசாரித்தால் அவிட அந்தக் கடை இல்லையென்றனர். இந்தச் செயல்பாடுகளில் மேலும் ஐந்து நிமிங்கள் கரைந்திருக்க, இந்தத் தடியன் இப்படிப் படுத்தறானே..? என்று சலித்துக் கொண்டான் இவன். எலேய்… நீரென்ன நாகேஷ் மாதிரி ஒடம்புன்னு நெனப்பா..? இந்நேரம் அவனும் உம்மை தடியர்னு திட்டிட்டிருப்பான் வேய் என்று மனஸ் கொக்கரிக்க, அதன் தலையில் பலமாகத் தட்டி அடக்கினான் இவன்.


இப்போது மீண்டும் கைபேசியை எடுத்து ஆவியை அழைத்தான். அழைப்பு போய்க் கொண்டிருக்க, தான் குளம்பி பருகிய கடையின் போர்டை எதேச்சையாக நிமிர்ந்து அப்போதுதான் கவனித்த (வழக்கமாக சம்சாரத் தாக்குதல் பெறும்) இவன் இப்போது மின்சாரத் தாக்குதல் பெற்றான். போர்டில் ‘ஒலவக்கோடு’ என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. அழைப்பை ஏற்ற ஆவியிடம், என்னவோ தப்பு நடந்திருக்குடா. இங்க ஸ்டேஷன் வாசல் கடைல போர்டுல ஒலவக்கோடுன்னு இருக்கு. தப்பான ஸ்டேஷன்ல எறங்கிட்டனோ? என்று புலம்பவாரம்பித்தான் இவன். இல்ல ஸார். நானும் இங்க டவுட் வந்து விசாரிச்சேன். கோவைலருந்து வர்ற ரயில்லாம்தான் நான் இருக்கற ஸ்டேஷன்ல நிக்குமாம். இது சிட்டி ஸ்டேஷனாம். சென்னைல இருந்து வர்ற வண்டிங்க ஒலவக்கோட்லதான் நிக்கும்னாங்க. இப்ப அங்கதான் வந்துட்டிருக்கேன். என்றான் ஆவி.

அடப்பாவிகளா… இப்படி இரண்டு நிலையங்களை வைத்துக் கொண்டு ஏனடா படுத்துகிறீர்கள்..? என்று சலித்துக் கொண்டு இவன் காத்திருக்க மேலும் ஏழு நிமிடங்கள் கழித்து ஆவியானவன் வந்து சேர்ந்தான். நடந்த கூத்துகளை இருவரும் பரிமாறிக் கொண்டு, சிரித்து, மேலும் ஒரு குளம்பி பருகி, தங்க வேண்டிய விடுதியை அடைந்தபோது மணி ஐந்தரையை நெருங்கி இருந்தது. கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நிமிடங்கள் கண்ணாமூச்சு விளையாட்டில் பலியாகி இருந்தன. அறையில் ஒரு குட்டி உறக்கம் போட்டுப் பின் கிளம்பலாம் என்றிருந்த இவன் திட்டத்தில் மண். அவ்வ்வ்வ்… நடந்ததை கீதாவிடமும், இவர்களின் இயக்குனர் துளசியிடமும் விவரிக்க துளசியின் சிரிப்பைப் பார்க்க வேண்டுமே… தெய்வீகச் சிரிப்பையா அவருடையது. படப்பிடிப்பிற்குச் சென்ற இடங்களையும், அங்கே நடந்த சுவாரஸ்யங்களையும் துளசி அவரின் தளத்தில் விரிவாக எழுதிவிட்டார்.

குறும்படத்தில் இவனை நடிக்க வைக்க அவர் பட்ட பாட்டைத்தான் எழுதவில்லை அவர். இவன் சிகையைக் குறுக்கில் சீவி, அதில் சற்றே நீட்சியாக சிறுமுடிகளை இணைத்து நம்பூதிரி ஸ்டைலில் கொண்டையிட்டு, வாளைக் கையில் தந்து குடந்தையாரைக் கொல்லடா என்றால் வசனத்தைச் சரியாகத்தான் பேசிவிட்டு, வாளைச் செருகினான் இவன். கோபமாப் பாத்து கத்தியால குத்துங்க சார். முகத்துல சிரிப்பு வந்துடுது. அது இருக்கக் கூடாது என்றார் துளசி. சிரித்த முகமாகவே வாழ்ந்து பழகிவிட்ட இவனுக்கு முகத்தில் சினத்தை வரவழைப்பது பெரும்பாடாக ஆயிற்று. இப்படியாக இரண்டு மூன்று டேக்குகள் எடுத்தபின் ஓகே சொன்னார். மறுதினமும் ஒருமுறை அதே ஷாட்டை எடுத்துப் பார்க்கலாம் என்று ட்ரை பண்ண, அப்போது செய்தது தான் சரியாக ஓகே ஆனது. (அதன் காரணம் ஆவிக்கு மட்டுமே தெரியும். ஹா.. ஹா.. ஹா..)

பாலக்காட்டில் துளசி படப்பிடிப்பை நடத்திய இடங்கள் யாவும் பசுமை போர்த்தியிருந்தன. இயற்கையின் வனப்பை ரசித்தபடி இரு தினங்கள்!! இரண்டாவது தினத்தில் இரவுப் படப்பிடிப்பை நடத்தித்தான் முடிக்க வேண்டிய நிலையை மழை உண்டாக்கிவிட, சென்னை திரும்ப வேண்டிய கட்டாயத்தினால் குடந்தையூரானும் இவனும் மட்டும் குழுவினரிடம் விடைபெற்று விடுதி அறைக்குத் திரும்பினார்கள். சரவணர் ரயிலுக்கு நேரம் குறைவாக இருந்ததால் உடனே கிளம்பிவிட, இவன் சற்று சிரமபரிகாரம் செய்து கொண்டு, ஒன்றரை மணி நேரம் கழித்து ஒலவக்கோடு சென்று மின்வண்டியைப் பிடித்தான். இரண்டு நாள் வேலை செய்த அசதியில் கண்கள் சொக்க, தன் இருக்கையைத் தேடி இவன் அடைந்தபோது, இப்போதும் நீ அபாக்கியவான் தானடா என்று கூறி உரக்கச் சிரித்தது விதி. எதிர் மேல் இருக்கையில் இப்போது ஆஷைக்குப் பதிலாக ஒரு ட்ராக்டர் படுத்துக் கொண்டு மூன்றாவது கியரில் ஓடிக் கொண்டிருக்க, விதியின் கூற்றை ஆமோதித்து அவ்வ்வ்வ்வியபடி சென்னை திரும்பினான் இவன்.

POET THE GREAT என்கிற அந்தக் குறும்படம் காண… இங்கே க்ளிக்குக.



Monday, June 22, 2015

ந்நாளில் வாழ்ந்த மன்னர்கள், வருங்காலச் சந்ததியினர் தங்களின் சாதனைகளையும் வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற தொலைநோக்குடன் ஆலயங்களின் சுவர்களிலும் கல்வெட்டுகளிலும் தங்கள் ஆட்சியின் சாதனைகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளைப் பொறித்து வைத்தார்கள். அத்தகைய ஆதாரங்களின் அடிப்படையில் மன்னர்கள் வாழ்ந்த காலம், நிகழ்வுகள் முதலியவை சரித்திர ஆராய்ச்சியாளர்களால் குறிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டவையாகத் திகழ்ந்து வருகின்றன.

பின்னாளில் சரித்திரக் கதைகள் என்கிற ஒரு பிரிவு தமிழ்ப் படைப்புகளில் ஏற்பட்டபோது இந்தக் குறிப்புகளின் அடிப்படையில் கதாசிரியர்கள் தங்கள் கற்பனைக் குதிரையை ஓட்டி, சுவையான பல கதைகளைப் படைத்தார்கள். கரிகாலன் தன்னைவிடப் பெரிய படை வலிமையைக் கொண்டிருந்த சேர, பாண்டிய, வேளிர் மன்னர்களை வென்றான் என்பது சரித்திரத்தில் கூறப்பட்ட உண்மை. அதை அவன் எப்படிச் சாதித்திருப்பான் என்று எழுதியது நாவலாசிரியரின் கற்பனை. சரித்திர ஆதாரங்கள் என அந்த நாவலாசிரியர்கள் குறிப்பிடுவது தங்கள் கதைக்கு வலு சேர்க்கத்தானே தவிர, எந்த நாவலாசிரியரும் கரிகாலனுடனோ, பாண்டியன் நெடுஞ்செழியனுடனோ வாழ்ந்தவர்கள் அல்லர். எனவே சரித்திரக் கதைகள் அனைத்தையும் உண்மையின் பேஸ்மெண்டில் எழுந்த கற்பனைக் கதைகள் என்று கொள்வதே சாலச் சிறந்தது. பக்கத்துக்குப் பக்கம் ஆதாரங்கள் தராவிட்டால் சரித்திரக் கதையல்ல என்பது சரியல்ல.

ப்போது இதைச் சொல்லக் காரணம்.. சமீபத்தில் வெளியான ‘காலச்சக்கரம் நரசிம்மா’ எழுதிய ‘பஞ்சநாராயண(க்) கோட்டம்’ என்கிற நாவலைப் படிக்க நேர்ந்ததுதான். ஹொய்சள சரித்திர ஏடுகள், இராமானுஜரின் வாழ்க்கைச் சரிதம், சமண மத நூல்கள், சோழர்களின் சரித்திரம், பஞ்சநாராயண தல புராணங்கள், பெங்களூரு அருங்காட்சியக செப்பேடுகள் என்று பலவற்றைத் தேடி ஆராய்ந்து இந்த நாவலை எழுதியதாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளாரே தவிர, பக்கத்துக்கு பக்கம் அடிக்குறிப்பாக கல்வெட்டுத் தகவல்கள் கொடுத்து, படுத்தவில்லை.

யதிராஜர் இராமானுஜர் திருஅவதாரம் செய்து ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைகின்ற இவ்வேளையில் அவர் இக்கதையில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக வருவது சிறப்பு. பேளூர் மற்றும் ஹளபேடு ஆலயங்களில் செதுக்கப்பட்டுள்ள  சிற்ப அதிசயங்களை எழுத்தாளர் நரசிம்மா ரசித்துப் பார்த்தபோது அங்கே இருந்த நான்கு சிற்பங்கள் மற்றவற்றில் இருந்து வேறுபட்டு இருப்பது அவர் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தச் சிற்பங்கள் ஆலயத்தில் எதற்கு வைக்கப்பட்டன? இவை எதுவும் செய்தியைத் தெரிவிக்கின்றனவா, எனில் யாருக்காயிருக்கும்..? கோட்டத்தை எழுப்பிய பிட்டிதேவனுக்காக இருக்குமோ? எனில் சிலைகளைச் செய்து வைத்தது யார்? இப்படியான… இன்னும் பல கேள்விகள் அவருக்குள் எழும்பியிருக்க வேண்டும். தன் கற்பனைத் திறத்தால் ஹொய்சாளர் காலத்து நாவலாக இதைப் படைத்து அந்தச் சிற்பங்களுக்கு ஓர் அர்த்தத்தைக் கொடுத்துள்ளார்.

ஹொய்சள மன்னன் பிட்டிதேவன் ஒரு வைணவப் பெண்ணை விரும்புகிறான். அவன் அன்னை அவனுக்காக ஒரு சமணப் பெண்ணைப் பார்க்கிறாள். இருவரையும் மணக்கிறான் பிட்டிதேவன். அவன் பிரியத்துக்குரிய வைணவ அரசி முதலில் கருவுற்றுவிட, வைணவம் ஓங்குவதா என்று சமணம் பொறும, சதிகள் நடக்கின்றன. அவற்றின் விளைவுகள் என்ன, அந்த வைணவ அரசி பெற்ற பிள்ளை என்னவானது, மன்னன் பிட்டிதேவன் எத்தகைய தருணத்தில் சமண சமயத்தில் இருந்து இராமானுஜரால் ஆட்கொள்ளப்பட்டு வைணவனாக (விஷ்ணுவர்த்தனன்) மாறினான் ஆகியவற்றையும், இராமானுஜரின் விருப்பப்படி ஐந்து நாராயணர் ஆலயங்களை எழுப்ப விஷ்ணுவர்த்தனன் ஆணையிடுவதும், (நம்பி நாராயணம் –தொண்டனூர், கீர்த்தி நாராயணம் – தலக்காடு, செல்வ நாராயணம் – மேல்கோட்டை, விஜயநாராயணம் – வேளாபுரி(எ) பேலூர், வீரநாராயணம் – கதக்(வடகர்நாடகா) அந்த ஆலயப் பணி நிறைவேறக் கூடாது என்பதற்கான சதிகள், இடைஞ்சல்கள் ஆகியவற்றையும் அவற்றைத் தாண்டி எப்படி ஆலயம் எழும்பியது என்பதையும் விவரிக்கிறது ‘பஞ்சநாராயணக் கோட்டம்’ நாவல். ஆலயங்களின் காலம் கி.பி.1102 – 1140.

சரித்திர நாவலை எளிமையான நடையில் ஒரு துப்பறியும் நாவலுக்கு ஈடான விறுவிறுப்புடன் தர முடியும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் நரசிம்மா. •வைணவ அரசி லட்சுமிப்பிரபாவிற்குப் பிறந்த குழந்தை என்னவானது? •பிட்டிதேவனின் மகளைப் பிடித்த பிரம்ம ராட்சஸி யார்? •அந்த பிரம்ம ராட்சஸியின் நோக்கம்தான் என்ன? •பிட்டிதேவன் ஏன் விஷ்ணுவர்த்தனனாக மாறினான்? •இளவரசி வகுளாதேவி சிற்பங்களின் மூலம் தன் தந்தைக்குத் தெரிவித்த செய்தி என்ன? இப்படி அடுத்தடுத்து பல முடிச்சுகளை இடுவதும், ஒரு முடிச்சு அவிழும் தருணத்தில் அடுத்த முடிச்சுக்கான இறுக்கத்தைப் போடுவதுமான அவர் எழுத்து 720 பக்கங்களையும் ஒரே மூச்சில் படித்து விட்டுத்தான் கீழே வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

நிகழ்காலச் சம்பவங்களில் துவங்கி, சரித்திரத்திற்கு அழைத்துச் சென்று ஒவ்வொரு கோட்டம் பற்றிய கதை முடிந்ததும் நிகழ்காலத்துக்கு மீண்டும் வந்து, பின் மீண்டும் சரித்திரத்தினுள் செல்வது என்று நூலாசிரியர் கையாண்டுள்ள உத்தி வெகு அழகு. நாவலின் விறுவிறுப்புக்குத் துணை நிற்கிறது. சிரவணபெலகோலா கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள தகவல்களின் படி கதாசிரியர் அமைத்திருக்கும் பிட்டிதேவனின் (சமண) பட்டத்தரசி ஷாந்தலாவின் பாத்திரப் படைப்பு பிரமாதம். அதேபோல் நபும்சகி(அரவாணி)யான இந்திரசேனாவின் கதாபாத்திரமும் மனதில் நிற்கும். இந்தக் கோட்டங்களை எழுப்பிய சிற்பி ஜெக்கன்னாவின் கதையும் ரசிக்க வைக்கிறது. ‘முருக்கல் அல்லது முருங்கல்’ என்றொரு வார்த்தையை சங்கத்தாராவில் பிடித்து அசத்தியது போல ‘கப்பைக்கு கராவெந்தரே நாரிகே சிரவல்லவே?’ என்றொரு வார்த்தையில் இந்த நாவலையும் பொதித்திருப்பது ரசனைக்கு உத்தரவாதம்.

நாவலைப் படிக்கையில் எனக்குள் இரண்டு நெருடல்கள் எழுந்தன. ஒன்று இத்தனை சதிகளை அறிந்தும் ஏன் ஷாந்தலாவையே தன் பட்டத்தரசியாக பிட்டிதேவன் வைத்திருந்தான் என்பது. அதற்கு நாவலின் இறுதியில் விடை கிடைத்து விட்டது. மற்றொரு நெருடல் கதையின் முன்னுரையில் சரித்திரக் கதைக்கான நடை என்று நல்ல தமிழில் நீளநீள வாக்கியங்கள் எழுதுவதைக் குறிப்பிட்டு எழுதி, தான் அப்படி எழுதுபவனல்ல என நரசிம்மா சொல்லியிருப்பது.

நீளநீள வாக்கியங்களை சாண்டில்யன் அமைத்த காலத்தில்தான் எளிமையான சிறு வாக்கியங்களை அமைத்த கல்கியும் இருந்தார். எளிமை தமிழில் அகிலன், விக்கிரமன் போன்றோர் எழுதிய சமயத்தில்தான் அழகு இலக்கணத் தமிழில் கோவி.மணிசேகரன் எழுதினார். இரண்டு சுவைகளும் எப்போதும் இருப்பவைதாமே…? எது உயர்த்தி, தாழ்த்தி என்றெல்லாம் நூலாசிரியர் ஏன் இப்படி வாலன்டியராக விளக்கம் தரவேண்டும் என்று தோன்றியது. இதற்கு ஒரு விளக்கத்தை கீதா சாம்பசிவம் அவர்கள் எழுதிய பதிவில் நரசிம்மா தந்திருக்கிறார். (முதல்ல படிச்சு முடிச்சவன் நான். ஆனா விமர்சனம் எழுதறதுல என்னை முந்திட்டாங்க அவங்க. கர்ர்ர்ர்.) 

நரசிம்மாவுக்கு ஒரு வேண்டுகோள்… நாவலில் தேவையான இடங்களில் ஒற்றுக்கள் வராமலும் தேவையற்ற இடங்களில் ஒற்றுக்கள் இடப்பட்டும் படிப்பதற்கு சற்று இம்சை தருகின்றன. கவனிக்கவும்.

மொத்தத்தில் ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் ஐந்தாவது முறையும் செஞ்சுரி அடித்திருக்கிறார் நரசிம்மா. (அடுத்த நாவல் இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சா ஸார்?) 720 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை 300 ரூபாய் விலையில் நல்ல ஹார்ட்பவுண்ட் அட்டையில் சிறப்பான அச்சுத்தரத்தோட 23, தீனதயாளு தெரு, தி.நகரில் இருக்கும் வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்காங்க.


Friday, February 27, 2015

சுவாரஸ்ய சுஜாதா

Posted by பால கணேஷ் Friday, February 27, 2015
• என் நண்பன் தேவேந்திர கோயல் போன வாரம் வரை நன்றாக இருந்தான். திடீரென்று கல்யாணம் செய்து கொண்டு விட்டான். கோத்ரேஜ் அலமாரி அப்புறம் ரேடியோ, ரெப்ரிஜிரேடர்,டெரிலின் சூட் கொடுக்கிறார்கள் என்று கல்ணாயம் பண்ணிக் கொண்டானாம். கூட ஒரு பெண்ணையும் கொடுக்கிறார்கள் என்று பிற்பாடுதான் தெரிந்தது. லேட்!

• டெல்லியில் வடக்கத்திக் கல்யாணம் வினோதமானது. காலை எட்டு மணி வரைக்கும் இந்த வீட்டிலா கல்யாணம் நடக்கப் போகிறது என்றிருக்கும். திடீரென்று புயல்போல் சர்தார்ஜி வருவார், ஒரு லாரியில் நாற்காலிகளுடன். இன்னொரு சர்தார் சமைத்த கோழிகளுடன் வந்து இறங்குவார். பின்னால் ஒருவர் பந்தல் துணியுடன் வருவார். அவர் பின்னால் ஸ்வாகத் போர்டு, சக்கர கலர் விளக்கு கம்பிகள் இவற்றோடு எலெக்ட்ரீஷியன் சர்தார்ஜி. ‘பீப் பீப்’ என்று சத்தம் கேட்டு எல்லாரும் ஒதுங்குவார்கள். பாண்டு கோஷ்டி வந்து நிற்கும்.

அப்புறம் ஒரு வெள்ளைப் பெண் குதிரை நொந்துபோய் வரும். அதன் மேல் பூக்களால் ஆன ஒரு குழப்பம். அதுதான் பையன். பையன் பெண்ணின் முகத்தைப் பார்க்கவே மாட்டான். எல்லாவற்றையும் மூடி வைத்திருப்பார்கள். சிறு பையன்களுடன் தடி ஆண்பிள்ளைகள் டுவிஸ்ட் ஆடுகிறேன் என்று சுளுக்கெடுத்து உள்ளே ஒரு எலும்பு மளுக்கென்று ஒடிகிற வரைக்கும் ஆடுவார்கள். பிறகு எல்லோரும் கொக்கோகோலா சாப்பிடுவார்கள். நிறைய ஸ்வீட் வினியோகம் செய்வார்கள். இந்த ஊர் மாப்பிள்ளைகள் பெண்ணுக்குத் தாலி கட்டுவது இல்லை. அப்படி ஒரு வழக்கம் இல்லாதது நல்லதுதான். மற்ற சில்லறை அமர்க்களத்தில் அது மறந்துபோய் விடுமல்லவா?

• மெஸ்ஸில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் என் நண்பர் ஸ்ரீ திடீரென்று தேசபக்தி மிஞ்சிப் போய் ஜவான்களுக்கு ரத்தம் கொடுக்க வெலிங்டன் ஆஸ்பத்திரிக்குச் சென்றார். அவருக்கு ரத்தம் கொடுத்து அனுப்பி விட்டார்கள்.

• டில்லி கரோல்பாக்கில் உள்ள ஏராளமான மதறாசி ‘மெஸ்’களில் ஒன்றில் நுழைகிறோம். எல்லா மெஸ்களுக்கும் பொதுவான சில விஷயங்கள் : பஜனை சமாஜ நோட்டீஸ், ப்ரொப்ரைட்டரின் போட்டோ, ரீகல் தியேட்டரில் ஞாயிறு காலை தமிழ் சினிமா விளம்பரம், ஊதுபத்தி, காதில் பூ வைத்த ராயர், பேரேடு கணக்கு நோட்டு, ‘தோஸ்ஸை’ (இன்றைய ஸ்பெஷல்) அப்புறம்... ஸ்டெனோகிராபர்கள்.

• நம் தமிழ் வார, மாதப் பத்திரிகைகளின் தரத்தைப் பற்றி வருத்தப்பட வேண்டியது படித்தவர்களின் பொறுப்பு. ஒரு முக்கியமான தமிழ்ப் பத்திரிகையில் வெளியான சிறுகதையின் ஆரம்பம் இப்படி!

‘சாப்பிட்ட களைப்பால் சோபாவில் சாய்ந்திருந்த சேகரை மெல்லத் தொட்டாள் உஷா. தொடர்ந்து “இந்தாருங்கள்” என்று அழைத்தாள்.‘

உஷா மேலே என்ன செய்தாள் என்று நமக்கு ஆர்வம். இத்துடன் ஒரு ஆங்கிலக் கதையின் ஆரம்பத்தை ஒப்பிடலாம்.

‘தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த அந்த ஆசாமிக்கு ஒரு தலை இல்லை...’

இந்த ஆரம்பம் திடீரென்று நம்மைக் கவர்கிறது. மேலே அவசரப்பட்டு படிக்கிறோம். இம்மாதிரி துவங்கி எப்படி ஆசிரியர் தப்பிக்கப் போகிறார்  என்று. இப்படித் தப்பிக்கிறார்: “தலை இல்லை என்றா சொன்னேன்? மன்னிக்கவும், எனக்கு ஞாபக மறதிஅதிகம். ஒரு கை இல்லை அவனுக்கு.”
எப்படியோ, உங்களை கதைக்குள் இழுத்து விட்டார். தமிழில் நல்ல சிறுகதைகளே இல்லை என்று சொல்ல வரவில்லை. என் வருத்தம் ஏன் இப்போது கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’, கு.ப.ராஜகோபாலனின் ‘விடியுமா’ போன்ற கதைகள் வருவதே இல்லை என்பதுதான்.

• காற்று வாங்கப் போனேன் - ஒரு
கழுதை வாங்கி வந்தேன் - அதைக்
கேட்டு வாங்கிப் போனான் - அந்த
வண்ணான் என்ன ஆனான்?... ஆ.... (காற்று)

தமிழ் சினிமாப் பாட்டுகளை இம்மாதிரி கொஞ்சம் மாற்றிப் போட்டுப் பாடுவதில் உற்சாகமிருக்கிறது. மற்றொரு உதாரணம் :

பாலிருக்கும் பழமிருக்கும், பசியிருக்காது. பஞ்சணையில் தூக்கம் வரும், காற்று வராது.

நீங்கள் வேறு உதாரணங்கள் யோசிக்கலாம்.

• அச்சுப் பிழைகளில் நகைச்சுவை இருக்கிறது. ‘சம்போ கந்தா’ என்பதை ‘சம்போகந் தா’ என்று அச்சடித்தவர் தன்னையறியாமல் நகைச்சுவை நாஸ்திகராகிறார். சென்ற இதழில் சில சுவாரஸ்யமான பிழைகள் இருந்தன. சுவையுள்ள புத்தகம், சுமையுள்ள புத்தகமானது. “அத்தா, உனை நான் கண்டுகொண்டேன்” என்ற ஆழ்வார் வரி, “அத்தான் உனை நான் கண்டுகொண்டேன்” என்று சினிமாப் பாட்டாக மாறியது. நான் இவைகளை எடுத்துரைப்பதில் என் நோக்கம் இதில் உள்ள ஹாஸ்யத்தைச் சொல்றதற்கே.  அச்சகத்தார் மன்னிக்கவும். அவர்கள் தொழிலில் உள்ள எடினத்தை நான் அறிவேன்.

• இந்த இதழின் மற்றொரு பக்கத்தில் சுஜாதாவின் 6961 என்கிற கதை ஆரம்பிக்கிறதாம். இதற்கு என்ன இத்தனை அல்லோலம்? வருகிறது, வருகிறது என்று இரண்டு மாதமாக பயங்காட்டி, புதுமை, புரட்சி, அது இது என்று புரளி பண்ணி - எனக்கு என்னவோ இந்த எழுத்தாளரைச் சற்று அதிகமாகவே தூக்கி வைக்கிறார்கள் என்று படுகிறது. இதில் ஒரு ஆபத்து - அதிகமாக உயர, உரய இறுதியில் கீழே விழும்போது வலியும் அதிகமாக இருக்கும்.

-ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்ற பெயரில் சுஜாதா எழுதிய கணையாழியின் கடைசிப் பக்கங்களிலிருந்து.

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube