கூகிள், வலைத்தளம் என்கிற ஒரு வசதியை இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறது. வலைத்தளத்தின் உரிமையாளர்கள் அவரவர் படைப்புகளை அதில் வெளியிடுகிறார்கள். வாரப்பத்திரிகைகளைப் போல இதற்கும் ஒரு மிகப்பெரிய வாசகர் வட்டம் உண்டு. - இந்த அளவுக்கு மட்டுமே எனக்கு வலையுலகைப் பற்றித் தெரிந்த சமயம் அது. அப்போது திரு.பட்டுக்கோட்டை பிரபாகரிடம் உதவியாளராகவும், அவர் பொறுப்பாசியராக இருந்த ‘ஊஞ்சல்’ இதழின் உ.ஆ. + வடிவமைப்பாளராகவும் இருந்த காலகட்டம். “வலையுலகில் சிறப்பாக எழுதுபவர்களைப் பற்றியும் அவர்கள் தளங்களைப் பற்றியும் ஒரு தொடர் வரப்போகுது. கேபிள் சங்கர்னு பிரபலமான ஒருத்தரை எழுதச் சொல்லியிருக்கேன். மனுஷன் பின்றார்” என்றார் பி.கே.பி. என்னிடம். (கேபிளார் எதைப் பின்னினாரோ? ஹி... ஹி....) அப்படி அறிமுகமாச்சு அவரின் பெயர். பின்வந்த மாதங்களில் ஊஞ்சல் இதழ்களில் அவர் எழுதியதைத் தொடர்ந்து படித்து வந்தேன். அவரின் எழுத்து நடை பிடிச்சது எனக்கு
.
பின்னொரு சந்தர்ப்பத்துல சைதாப்பேட்டை பெட்டிக்கடை ஒண்ணுல ‘கொத்து பரோட்டா’ என்கிற கேபிள் எழுதிய புத்தகம் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். நான் உன்னிப்பதை பார்த்துட்டு, ”நம்ம ஏரியாவுலதான் ஸார் இருக்காரு கேபிள் சங்கர்”ன்னார் கடைக்காரர். என் ஏரியாவில் இருக்கும் அவரைச் சந்திக்கணும் என்ற ஆசை இருந்தாலும் வழி தெரியாம அமைதி காத்தேன். காலத்தின் கரைசல்ல சேட்டையண்ணாவின் வழிகாட்டுதல்ல நானும் ஒரு பதிவராகி சிலபேராவது அடையாளம் காணுற நிலைக்கு அடுத்த ஆறு மாசங்கள்ல வளர்ந்திருந்தேன். அதேமாதிரி கேபிளாரின் பதிவுகளைத் தொடர்ந்து படிச்சு அவர் வெரைட்டி வாரியா எழுதறதையும், அவருக்கிருந்த மிகப்பெரிய வாசகர் வட்டத்தையும் கவனிச்சு அவர் பிரபலம்கறதை புரிஞ்சு வெச்சிருந்தேன். அப்போ சென்னைல புத்தகக் கண்காட்சி வந்தது. அங்கதான் கேபிள் சங்கரை முதன்முதலில் சந்தித்தேன்.
பு.க.வைப் பொறுத்தவரை என்னென்ன ஸ்டால்களில் புத்தகங்கள் வாங்கலாம்கறதை சர்வே எடுக்க ஒரு முறையும், அவற்றை வாங்கறதுக்காக ஒரு முறையும் போறது வழக்கம். பார்ப்பதற்காகவும்... பலமுறை விசிட் அடிக்கறது உண்டு ஐ மீன் நண்பர்களைப் பார்ப்பதற்காக.... புக் சர்வேக்காக முதல்முறை போய் சுத்தி வந்துக்கிட்டிருந்தபோது டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டாலின் வாசலில் இரு நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்த கேபிளாரைக் கண்டேன். புத்தகங்களின் அட்டையில் போட்டோவாகப் பார்த்திருந்த அவரை எளிதா அடையாளம் காண முடிஞ்சது. முதல் பார்வைல நெல்லைக் கோயில் யானையை நினைவுபடுத்தினார். நோ... நோ... உருவத்தை வைச்சுச் சொல்லலீங்க... நீண்ட நேரமாய் நின்னுருப்பார் போலருக்கு கால் மாற்றிக் கால் மாற்றி நின்றபடி பேசிக் கொண்டிருந்தது எனக்கு அப்படி உருவகப்படுத்தியது. அருகில் சென்று உற்றுப் பார்த்தபடி சில நிமிடங்கன் நின்றிருந்தேன். என்னை மாதிரி ஒரு உருவம் பக்கத்துல வந்து எதுவும் பேசாம உத்துப் பாத்துட்டிருந்தா ஒண்ணு பயப்பட்டு விலகணும்... இல்ல, நெருங்கி வந்து பேசணும். ஆனா கேபிள் கொஞ்சமாச்சும் கண்டுக்கணுமே... ஊஹும்... உலகையே மறந்து அவங்களோட பேசிட்டிருந்தார். சரி... அப்பத்தானே அவர் பிரபலம்னு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டு கிட்டப் போய் வலிஞ்சு என்னை அறிமுகப்படுத்திக்கிட்டேன். முதல் அறிமுகம்ங்கற தயக்கம் எதுவுமில்லாம சகஜமாப் பேச முடிஞ்சது கேபிளாரின் பலம்!
அதுக்கடுத்து அவர் போட்ட ‘கொத்து பரோட்டா’வுல என்னை சந்திச்சதைப் பத்தி சில வரிகள் எழுதியிருந்தார். ஆனா பாருங்க... பேரைப் போடாம ’பிகேபியின் உதவியாளர்’னு போட்ருந்தார். என்னை மாதிரி ஒரு ஒலகப் பிரபலத்தோட(!) பேரை மறக்கறது ஞாயமா சொல்லுங்க... நான் கடுங்கோபமாகி பின்னூட்டப் பெட்டில அலுதுட்டே ஒரு கருத்துப் போட்டேன். அதைப் பார்த்ததும் நினைவு வந்து மைல்டா ஒரு ஸாரி சொல்லி என் பேரை பதிவுல அப்டேட்டினார். அதுக்கப்புறம் முதல் ஆண்டு பதிவர் திருவிழாவின் ஏற்பாடுகளுக்கான சந்திப்புகளில் அடிக்கடி அவரைப் பார்க்க, பழக வாய்ப்புக் கிடைத்தது. சந்திக்கற பிரபலங்கள்ட்ட இருந்து முடிஞ்சவரை திருடிக்கற பழக்கமுள்ள நான் கேபிள்ட்ட இருந்தும் திருடிக்கிட்டேன் - எதிராளி கோபமா பாய்ஞ்சாலும் நாம எப்படி கூலா டீல்பண்ணி மேட்டரை ஸ்மூத்தாக்கறது, நாலு பேர் இருக்கற இடத்துல எப்படி அனைவர் கவனத்தையும் கவருவது... சுருக்கமாச் சொன்னா, சக மனிதர்கள்ட்ட பழகுறது எப்படிங்கறதை அவர்ட்டருந்து எடுத்து(திருடி)க்கிட்டேன்.
அவர்கூட நிறையப் பேசற சந்தர்ப்பங்கள் அமைஞ்சதும், உணவகங்களை எழுதறதுல சிகரமான அவர்கூட தாய்லாந்து உணவை ருசிச்சுச் சாப்பிட்டதும், அதை என் தளத்துல நான் எழுதினதும் எனக்கு மிகமிக மகிழ்ச்சி தந்த விஷயங்கள். மெரீனா பீச்ல பாத்தீங்கன்னா... நீச்சல் கொஞ்சங்கூட தெரியாம அலையில கால் நனைச்சுட்டு குதிச்சுட்டு மேலோட்டமா கடலை தெரிஞ்சுட்டு வருவாங்க சிலர். வேற சிலரோ கடலுக்குள்ள முங்கி நீச்சல் போட்டு அடியாழம் வரை போய்ட்டு வர்ற அளவுக்கு கடலை தெரிஞ்சிருப்பாங்க. சினிமாங்கற கடல்ல நான் முதல் ரகமா இருக்கறப்ப அவர் ரெண்டாவது ரகமா இருந்தார். தொலைக்காட்சித் தொடர்கள்ல நிறைய நடிச்சும், எழுதியும் இருந்த அவர் அப்ப ரெண்டு மூணு படங்களுக்கு வசனகர்த்தாவா இருந்தார். ‘கலகலப்பு’ படத்தில் இவர் எழுதின வசனங்கள் ரொம்பப் பிடிக்கும் எனக்கு.
முதலாமாண்டு பதிவர் திருவிழாவுக்கு சிறப்பு விருந்தினரா பி.கே.பி. வர்றதா முடிவானதுப்ப கேபிள் தான் ஒரு படம் இயக்க இருப்பதாகவும் அதற்கு ‘தொட்டால் தொடரும்’ என்று தலைப்பு வெக்க விரும்பறதாவும் சொல்லி பிகேபிட்ட பேசச் சொன்னார். (அவரின் நாவல் தலைப்பு). பி.கே.பி.க்கு தர மனமில்லை. மறுத்துட்டாரு. கேபிளாரின் புரொடியூசர் டைட்டிலை ஏற்கனவே ரிஜிஸ்டர் பண்ணிட்டதால அந்தப் பேர்லயே படம் ஆரம்பமாச்சு. அப்ப கேபிள்ட்ட படத்தப் பத்திக் கேட்டேன். என்ன சப்ஜெக்ட், யார் ஹீரோ, முக்கியமா... யார் ஹீரோயின்... ஹி... ஹி... ஹி... அவர் சொன்னாரு...
இது காதல் த்ரில்லர் வகைக் கதை .முதல் பாதி லவ், ரொமான்ஸ் என்று நகரும் கதையின் மறுபாதி ஆக்ஷன் த்ரில்லராக வேகமெடுக்கும். ஹீரோவாக தமன், ஹீரோயினாக அருந்ததி நடித்திருக்கிறார்கள். இரண்டு முக்கியக் கதாபாத்திரங்களில் வின்சென்ட் அசோகன், ஹலோ எப்.எம். பாலாஜி நடித்திருக்கிறார்கள். விஜய் ஆம்ஸ்ட்ராங் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.சி. சிவன் இசையமைத்துவருகிறார்.
அவரோட ப்ளாக்கில நிறைய பக்கப் பார்வைகள் பெறுவது சினிமா விமர்சனம். யாரோட படமா இருந்தாலும் அதோட ப்ளஸ் மைனஸை விரிவா அலசி - டெக்னிகலாவும் அலசி - விமர்சனம் எழுதுவார். வாசகர்களுக்கு அவர் நடுநிலையா எழுதறது பிடிக்கும்னாலும் எல்லாப் படத்தையும் குறை சொல்றார்னு சினிமா சைட்ல ஒரு கருத்து இருக்கறதா என் ஃபீலிங். அவர்ட்ட, ‘தலைவா... நீங்க படமெடுக்கற பட்சத்துல அதை விமர்சனம் எழுதிக் கிழிக்க ஒரு க்ரூப்பே ரெடியாயிருக்கும். எல்லாத்தையும் நொட்டை சொல்ற இந்த ஆளு படம் எடுத்தா குறையில்லாம எடுத்திருவானான்னு கேக்க நிறையப் பேரு இருப்பாங்க...’ன்னேன். அதுக்கு அவர் கூலா சொன்னார்....
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தூவார் சந்திரசேகரனே எனக்கு அப்படித்தான் கிடைத்தார். அவர் தயாரித்த ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’ படத்துக்கு நான் எழுதியிருந்த விமர்சனத்தைப் படித்துவிட்டு என்னிடம் பேசினார். பிறகு என் கருத்துக்களை ஏற்றுக் கொண்டவர், அப்படியானால் நீங்கள் வந்து ஒரு படம் எடுத்துக்காட்டுங்கள் பார்க்கலாம் என்றார். சண்டையிலும் விவாதத்திலும்தான் எங்கள் நட்பு தொடங்கியது. விமர்சனம் செய்பவர்களால் நல்ல படம் எடுக்க முடியுமா என்று கேட்கிறார்கள். எல்லா நல்ல விமர்சகர்களுக்குள்ளும் நல்ல ரசிகன் இருக்கிறான். நான் பல படங்களை விமர்சனம் செய்திருக்கிறேன். பாராட்டியும் இருக்கிறேன். நல்லதை விட்டுவிட்டு கெட்டதை மட்டும் நினைவில் வைத்திருக்கிறார்கள். நான் வெறும் விமர்சகன் மட்டுமல்ல.கடந்த 15 ஆண்டுகளாகத் திரைத் துறையில், திரைப்பட விநியோகம், திரையரங்க நிர்வாகம், தயாரிப்பு, விளம்பரம், திரைக்கதை, வசனம், நாவல், சிறுகதை எனத் தொடர்ந்து இயங்கி வந்திருக்கிறேன். திரை இயக்கம் என்பது என் கனவு. என் படத்திற்கும் விமர்சனம் இருக்கும். அதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். ஆனால் பல விஷயங்களை விமர்சிக்க முடியாதபடி என் படம் தரமும் நேர்த்தியும் நிறைந்ததாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.
அப்புறமென்ன... அவர் படம் மளமளன்னு வளர்ந்து இப்ப இந்த மாசக் கடைசிலயோ, அடுத்த மாசத்துலயோ ரிலீசுக்குத் தயாரா இருக்குது. அதுக்கான ஒரு பாட்டு டீஸரா போன வாரம் வெளியாகி யூ ட்யூப்ல நிறைய ஹிட்ஸ்களை குவிச்சுட்டிருக்கு. ஒருமுறை கேட்டுப் பாப்போம்னு பாத்த என்னை பலமுறை கேக்க வெச்சிருச்சு. சாக்ஸபோன்ல ஆரம்பிக்கற அந்த இசையே முதல்ல உள்ள இழுத்திருது. உள்ள இழுத்த செவிகளை பாடல் முழுவதும் தொடர வெச்சு அசத்தியிருக்காரு இசையமைப்பாளர் பி.சி.சிவன். ரொம்பவே யதார்த்தமான அரசியல், சமூகப் பொறுப்புணர்வு, ஜாலி, கேலி கலந்த பாடல் வரிகளும் அருமை. (பாட்டை கேபிள்ஜியே எழுதினதாக் கேள்வி. நிஜமான்றதை அவர்தான் சொல்லணும்.) பாடினவர் பெயர் தெரில... (கேபிளாரே நல்லாப் பாடக்கூடியவர்தான், அவரே பாடியிருக்கலாமேன்னு தோணிச்சு) சின்னச் சின்ன கட் ஷாட்களை இணைச்சு, பிரபலங்கள்ட்ட கருத்து கேக்க வெச்சு அதையும் சேர்த்து, ஸ்க்ரீன் ப்ரஸன்ஸோட தானும் தன் டீமோட தோன்றி பாடலை சுவாரஸ்யமா காட்சிப்படுத்திருக்காரு கேபிள்ஜி. இந்தப் பாட்டை இதுவரை நீங்க பாக்கலைன்னா கீழ நான் தந்திருக்கற லிங்க்ல போய் உடனே பாத்திருங்க.
https://www.youtube.com/watch?v=RNHks79qB58
இதனால என்ன ஆபத்துன்னா... அவரோட படத்துக்கு இப்ப எதிர்பார்ப்பு எகிறிடுச்சு. அதை முழுமையா படம் நிறைவேத்தும்ங்கறதுல எனக்கு முழு நம்பிக்கை உண்டு. ஒரு படத்தை இயக்கறதுன்றது சாதாரண வேலையில்ல. ப்ரொட்யூஸரை சாடிஸ்பை பண்ணி, காமிரா, இசைன்னு அந்தந்தத் துறையில ஜாம்பவான்களை வேலை வாங்கி... அங்குசத்தை வெச்சு யானையை அடக்கற மாதிரி ரொம்பவே டென்ஷனான காரியம் அது. நம்ம ஜாதியில ஒருத்தர் (நோ...நோ... பதிவர் ஜாதிங்கறத சொல்றேன்) இயக்குனராகியிருக்கார் என்பது நமக்கெல்லாம் பெருமையான விஷயம்.
என்னைப் பொறுத்தவரைக்கும் பு.க.ல நான் முதல்முறை பார்த்த கேபிள் சங்கருக்கும். இப்ப இயக்குனராகிட்ட பிறகு பார்க்கற கேபிள் சங்கருக்கும் பழகும் முறையில துளியும் வித்தியாசமில்ல... இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை அடையணும், அடுத்தடுத்த வெற்றிகளைச் சந்திச்சு இன்னும் பல உயரங்களை அவர் எட்டணும்னு மனப்பூர்வமான மகிழ்ச்சியோட அவரை வாழ்த்தற அதே சமயத்துல எவ்வளவு உயரம் தொட்டாலும் பழகும் விதத்துல அவர் இப்ப மாதிரியே எப்பவும் இருக்கணும்னு ஒரு வேண்டுகோளையும் முன்வெக்கறேன். ஆல் த பெஸ்ட் ஃபார் த சக்ஸஸ் கேபிள்ஜி!