Tuesday, April 30, 2013

கொ(கோ)டைக் கா(ண)ல் - 6

Posted by பால கணேஷ் Tuesday, April 30, 2013
வேனிலிருந்து இறங்கியதும் எதிரே பசும் புல்வெளி சூழ்ந்த ஒரு மேடான பிரதேசமும், அங்கே ஒரு கோயிலும தெரிந்தது. ‘‘இதான் பூம்பாறையா பாஸு’’ என்று நண்பரிடம் நான் கேட்டதற்கு, வேனிலிருந்து அப்போதுதான் இறங்கி வந்து கொண்டிருந்த ஓட்டுனரிடமிருந்து பதில் வந்தது. ‘‘இல்ல ஸார். பூம்பாறைக்கு பாதி தூரம்தான் வந்திருக்கோம். இங்க நீங்க பாக்கறது மகாலக்ஷ்மி கோயில். அழகா இருக்கும், எல்லாரும் போய்ப் பாத்துட்டு வரட்டுமேன்னுதான் நிறுத்தினேன்’’ என்றார். ‘‘ரைட்டுங்க. பூம்பாறைல என்ன விசேஷம்?’’ என்று கேட்க, ‘‘அங்க ஒரு முருகன் கோயில் இருக்குது சார். குழந்தை வேலப்பர்னு பேரு. ரொம்ப அழகா இருக்கும் சாமி...’’ என்றார் சக்தி. அட, இன்னிக்கு ஆலய தரிசனம் வரிசையா அமையுதே என்ற வியப்புடன் மேலேறினோம்.

வேனிலிருந்து மஹாலக்ஷ்மி கோயில் வ்யூ!
மேலேறிச் சென்று பார்க்கையில் அவர் சொன்னது போலவே சிறிய கோயிலாக இருந்தாலும் அழகாக இருந்தது. புகைப்படக் கருவியை எங்கள் கைகளில் கண்டதுமே, ‘‘ஸார் கோயிலையும், கோயிலச் சுத்தியும் படமெடுத்துக்குங்க. அம்மனை படம் எடுக்கக் கூடாது’’ என்றார் அங்கிருந்த ஊழியர். அவர் அப்படிச் சொல்லாவிட்டால், சிறியதாக இருந்தாலும் அழகாக புன்னகை முகத்துடன் இருந்த அம்மனின் சிலையை நாங்கள் படம் எடுத்து விட்டிருப்போம். சொல்லி விட்டதால் வேறு வழியின்றி ஆலயத்தைச் சுற்றியிருந்த இயற்கையை ரசித்து, படங்களை சுட்டுக் கொண்டு கிளம்பினோம் அங்கிருந்து.

ஞானும் பின்னே  இயற்கையெனும் இளையகன்னியும்!
இதுவரை ஏற்றப் பாதையாய் இருந்தது மகாலக்ஷ்மி கோயில் தாண்டி சற்று தூரம் சென்றதுமே இறங்கு பாதையாக மாறியது. சுற்றிச் சுற்றி இறங்கி சுமார் 10 கி.மீ. தூரம் போனதும் பூம்பாறை கிராமம் வந்தது. வேனிலிருந்தபடியே அந்த கிராமத்தைப் பார்க்கையில் மதுரை நகர அமைப்பு மாதிரி குழந்தை வேலப்பர் ஆலயமும் அதைச் சுற்றிய சில தெருக்களும் அமைந்திருப்பதை அவதானிக்க முடிந்தது. குழந்தை வேலப்பர் ஆலய வாசலில் வேனை நிறுத்தி உட்செல்ல, அங்கே கூட்டம் அதிகம் இல்லை. சிறிய ஆலயம். ஆனால் சுற்றிலும் நிறைய இடப்பரப்பு இருந்ததால் பார்க்க ரம்யமாகவே இருந்தது. உள்ளே சென்று முருகப் பெருமானை தரிசித்தோம். என்ன அழகு! ராஜ அலங்காரத்தில் அம்சமாய் நின்றிருந்தார். இங்கே எப்போதுமே ராஜ அலங்கார தரிசனம்தான் என்று அங்குள்ளவர்கள் சொன்னார்கள். நகருங்க, நகருங்க என்று விரட்ட யாரும் இல்லாமல் நிம்மதியான தெய்வதரிசனம் கிட்டியது மனதுக்கு மகிழ்வாக இருந்தது.

ஆலய வாசலில் இவர் விற்பது அசல் மலைப்பூண்டுங்க!
வழக்கம் போல கேமராவைக் கையிலெடுத்தால் உதை விழும் என்று எச்சரிக்கப்பட்டதால் படம் எடுக்க முடியாமல் போயிற்று.ஆனாலும் சென்னை வந்ததும் கூகிளாண்டவரிடம் வேண்டித் தேடியதில் நான் அங்கு கண்ட முருகப் பெருமானின் ராஜ அலங்காரப் படம் கிடைத்தது. அது இங்கே உங்கள் பார்வைக்கு. சிறிது நேரம் அந்தக் கிராமத்துத் தெருக்களில் நடந்து, தாக சாந்தி (ஐமீன்... கூல்ட்ரிங்ஸ்) செய்து கொண்டு, கொஞ்சம் ஸ்னாக்ஸும் வாங்கிக் கொண்டு வேனில் ஏறினோம். மீண்டும் ஏற்றம் மறுபடி இறக்கம் என்று வாழ்க்கையின் தத்துவத்தைப் போதித்தது பூம்பாறையிலிருந்து கொடைக்குச் செல்லும் சாலை.

மனசைக் கவர்ந்த குழந்தை!
 கொடைக்கு வந்ததும், ‘‘சார், சாக்லெட்ஸ், தைலம்லாம் வாங்கணும்னு சொல்லிடிருந்தீங்களே... எனக்குத் தெரிஞ்ச நல்ல கடை இருக்கு. போலாமா?’’ என்றார் ஓட்டுனர். காலையிலிருந்து இரண்டு முறை இந்த விஷயத்தைக் கேட்டுவிட்டார். ஏனென்றுதான் தெரியலை. தலைவர் ‘‘ஓ.கே. போங்க’’ என்க, வேன் சிலபல தெருக்கள் கடந்து, ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்றின் வாயிலில் நின்றது.

ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் என்றால் பெரிய மல்ட்டிஸ்டோரி பில்டிங்குகளை நினைத்துவிட வேண்டாம். ‘ப’ வடிவத்தில் வரிசையாகக் கடைகள் இருந்த தரைத்தள காம்பளக்ஸ்தான் அது. கடைக்குள் போனதுமே அங்கிருந்தவர்கள் அருமையாக கேன்வாஸ் செய்ய ஆரம்பித்தார்கள். சுத்தமான மலைத்தேன் பாட்டிலில் அடைக்கப்பட்டிருந்ததை சாம்பிள் காண்பித்தார்கள். தேனின் விலைதான் திகிடுதம்பாக இருந்தது. தலைவலித் தைலம், மூட்டுவலிக்கான தைலம், மூலிகை ஹேர் ஆயில் என இன்ன பிறவற்றின் விலையும் அப்படியே. சாக்லெட்தான் விலை குறைவாக இருந்தது. ‘‘எப்பவோ ஒரு தரம் வர்றோம். வாங்கலாம் பாஸ்!’’ என்றபடி நண்பர்கள் நிறைய வாங்கிக் குவித்தார்கள். (நாங்கள் சொந்தப் பணத்தை செலவு செய்த ஒரே இடம் இதுதானே!) நான் கொஞ்சம் வாங்கிவிட்டு வேனுக்கு வந்துவிட்டேன்.

ஷாப்பிங் செய்வதற்கு முன்! (லிஸ்ட் போடுகிறார் சீனியர்)
அனைவரும் ஷாப்பிங் முடித்துவிட்டு வேனுக்கு வர நீண்ட நேரமாயிற்று. எல்லோரும் வந்து அவரவர் இருக்கையில் அமர்ந்தும் ஓட்டுனரைக் காணவில்லை. அவர் சற்றுப்‌ பொறுத்தே கடையிலிருந்து வந்து வேனைக் கிளப்பினார். இதற்குள் மதிய உணவு நேரம் தாண்டியிருக்க, காட்டேஜ் சென்று உணவருந்தலாம் என்ற குரல் அனைவரிடமிருந்தும் வந்தது. மதிய உணவாக இன்று மீன் குழம்பும், சிக்கன் ப்ரையும் செய்திருந்தார்கள். மீன் குழம்புடன் சேர்த்து ஒரு மீனையும் சாப்பிட்டுப் பார்த்தேன். வெகு பிரமாதம்! இன்னுமிரண்டு பீஸ் ஃபிஷ்‌ஷை விழுங்கிவிட்டு காட்டேஜ் பொறுப்பாளரை பார்த்துப் பாராட்டினால், அவர் முன்பு ஒரு நட்சத்திர ஓட்டலில் தான் செஃப் ஆக இருந்ததாகக் கூறினார். அட்றா சக்க.. அட்றா சக்க... அதான் இவ்வளவு சூப்பர் சமையலாவென்று வியந்து பாராட்டிவிட்டு, அவரவர் அறைகளுக்குள் நுழையுமுன், ‘‘ஈவ்னிங் போட்டிங் போகணும். எல்லாரும் ரெடியாகி வந்திருங்க’’ என்றார் தலைவர்.

குழுவாகச் செல்கையில் எப்போதும் நேரத்தை சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும். (குழுவாக இல்லாவிட்டாலும் நேரத்தைக் கடைப்பிடிப்பதே உத்தமமானது என்பது வேறு விஷயம்). ஆனாலும் 12 பேர் வெவ்வேறு அறைகளில் உறங்கிய பின், மீண்டும் எழுந்து, தயாராகி வருவது என்கிற நடைமுறை விஷயத்தில் யாரேனும் ஒருவர் தாமதம் செய்தாலும் அனைவரின் நேரமும் வீணாகத்தான் போய் விடுகிறது. அன்று மாலையிலும் இதே விஷயம்தான் நடந்தது. அனைவரும் கிளம்புகையில் மணி ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது. வேன் ஏரியை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் தலைவருக்கு போன் வந்தது. ‘‘அப்படியா? சரி... சரி... அப்ப நாளைக்கு காலைலயே ஆறு, ஆறரைக்கெல்லாம் கிளம்பி அங்க வந்துடறேன். நீங்க மத்த எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிடுங்க’’ என்று பேசிவிட்டு வைத்தார். அவர் மெதுவான குரலில்தான் போன் பேசுவார் என்றாலும் இந்த ஏரிப் பயணத்தின்போது நான் அவர் அருகாமை சீட்டில் இருந்ததால் அவர் பேசியது கேட்டது. பின் உரத்த குரலில் அறிவித்தார்- ‘‘ஃப்ரண்ட்ஸ்1 இப்ப ஏரியில சுத்தறதோட நம்ம கொடை ட்ரிப் முடியுது. நாளைக்குக் காலையில ஆறு மணிக்கெல்லாம் எல்லாரும் எழுந்து ரெடியாயிடுங்க. நாம இங்கருந்து கிளம்பறோம்’’ என்று!

எல்லாரும் கசமுசவென்று பேசிக் கொள்ளத் துவங்க, ‘‘காலையில எங்க கிளம்பிப் போறோம் தலைவரே?’’ என்று மெல்லப் போட்டு வாங்க முயன்றேன். தலைவர் க.மீனில் ந. மீன்! ‘‘கொஞ்சம் சர்ப்ரைஸா இருக்கட்டும் ஸார்! காலையில சொல்றேன்’’ என்றார். அதற்கு மேல் அவரிடமிருந்து விஷயத்தை உரிக்க முடியாது என்பது எனக்கு அனுபவப் பாடம் என்பதால் எதுவும் கேட்கவில்லை. ஏரிக்கரை அருகில் வேனை பார்க் செய்ததும், அங்கே வரிசையாக ஸ்வெட்டர் விற்றுக் கொண்டிருந்த வியாபாரிகளிடம் பேரம் பேசி ஆளுக்கொரு ஸ்வெட்டர் வாங்கிக் கொண்டோம். இதில் சற்று நேரம் ஓடிவிட, ஏரிக்குச் சென்றால், படகு சவாரிக்கான நேரம் முடிந்து விட்டது என்றார்கள். அடடா... என்னவொரு ஏமாற்றம்!

                                                                                                                     -தொடர்கிறேன்....

Saturday, April 27, 2013

மொறுமொறு மிக்ஸர் - 17

Posted by பால கணேஷ் Saturday, April 27, 2013
பார்த்தது : ‘‘ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்துல ஒரு காட்சி வரும். வில்லன் ஒரு சர்வாதிகாரியான மன்னன். அவரோட அரசவையில வைத்தியரான எம்.ஜி.ஆரை கைது செஞ்சு கொண்டு வருவாங்க. சர்வாதிகாரி, தைரியமாப் பேசற எம்.ஜி.ஆரைப் பார்த்து, ‘என்னோட அதிகாரம் என்னன்னு உனக்குத் தெரியுமா/’ என்பான். அதற்கு அவர், ‘உன் அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா? - அது காலத்தை வென்று நிற்பதற்கு!’ என்று பதிலளிப்பார். என்னைய மாதிரி வாத்தியாருங்க பசங்களுக்கு மணிக்கணக்கா பாடம் சொல்லி சிலப்பதிகாரத்தோட சிறப்பை விளக்க வேண்டியிருக்கும். ஆனா இந்த ரெண்டு வரி வசனத்தால இன்னும் நிறையப் பேரோட மனசுகள்ல சிலப்பதிகாரத்தோட சிறப்பு போய்ச் சேர்ந்தது. அதாங்க சினிமாவோட சக்தி...’’

-தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று சேனல் சேனலாகத் தாவி (கொஞ்ச நேரம்) தொலைக்காட்சி பார்த்தபோது ஏதோ ஒரு சானலி்ல முனைவர் கு.ஞானசம்பந்தன் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தார். நிஜம்தான்! சினிமா என்கிற அந்த மகத்தான மீடியாவின் சக்தியே அலாதிதான், அதை சரியாகப் புரிந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தில் எம்.ஜி.ஆருக்கு இணையாக யாரையும் சொல்லிவிட முடியாது என்கிற எண்ணம் என் மனதிலும் எழுந்தது.

==================================================
 
ரசித்தது :  நமது சக பதிவர் கோவை மு.சரளாதேவி எழுதிய காதல் கவிதைகளைத் தொகுத்து ‘காதலின் சாரல்’ என்ற தலைப்பில் விஜயா பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள். காதல் சுமந்த கவிதைகள் ரசனைக்குரியவை. அதிலும் சரளாவின் சொக்க வைக்கும் தமிழில் இன்னும் சிறப்பாக ஜொலித்து ரசனை‌க்குத் தீனியாக அமைந்திருக்கின்றன ஒவ்வொரு பக்கங்களும்.

ஸ்பாட் லேமினேஷன் செய்த அழகிய முகப்புடன், ரசனைகூட்டும் படங்கள் வைத்து லேஅவுட செய்யப்பட்டு ஒரே மூச்சில் படிக்கும் உந்துதலை ஏற்படுத்துகிறது புததகம். 64 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை கோயமுத்தூரில் ராஜவீதியில் 20ம் எண்ணில் இருக்கும் விஜயா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறார்கள். கையைக் கடிக்காத வண்ணம் 30 ரூபாய் விலையில் வெளியிட்டிருப்பது இன்னும் ஒரு கூடுதல் சிறப்பு. இயன்றவர்கள் வாங்கிப் படித்து ரசியுங்கள்!

==================================================

கேட்டது : சமீபத்தில் பத்திரிகை உலக நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது பத்திரிகைகளில் தமிழ்க் கொலை நடப்பது பற்றியும், எழுத்துப் பிழைகள் பற்றியும் ஒரு பாட்டம் புலம்பி, என் சர்வீஸில் நான் பார்த்த மகத்தான பத்திரிகை எழுத்துப் பிழைகளைப் பகிர்ந்து கொண்டேன். ரசித்துச் சிரித்த அவர் பின் சொன்னார்: ‘‘எழுத்துப் பிழையாவது பரவால்ல கணேஷ். சில சமயம் சொல்ல வர்றதை சரியான வார்த்தைகள்ல சொல்லாததால வர்ற பிழை இன்னும் அபாயமானது. ஒரு விஷயம் கேளுங்க... சொன்னா நம்ப மாட்டீங்க...’’ என்று ஆரம்பித்து சொன்னார். அவர் சொன்னதை பெயர்கள் மாற்றிச் சொல்கிறேன் நான்.

அது ஒரு குறிப்பிட்ட ஜாதிச் சங்கத்தினர் நடத்தும் பத்திரிகை. பத்திரிகை உலக அனுபவங்கள் எதுவும் இல்லாத, சங்கத்தின் தலைவர், செயலாளர் போன்றோரே ஆசிரியர்கள், நிருபர்கள் எல்லாம். உதவி ஆசிரியராக இருந்த செயலாளர் ராகவன் சங்க உறுப்பினர் ரங்கசாமி என்பவர் இறந்துவிட்டதாகவும், அவரது பத்தாம் நாள காரியங்கள் ----- தேதி நடைபெறும் என்றும் ஒரு இதழில் அஞ்சலி விளம்பரம் வெளியிட்டிருந்தார். அந்தத் தேதியில் ரங்கசாமியின் வீட்டிற்குச் சென்றவர்கள் அவரை நேரில் கண்டு அதிர்ச்சியானார்கள். இறந்தது தன் மகன் சீனிவாசன் என்று சொல்லி அவர் அழ... பத்திரிகை விளம்பரம் கண்டு அவர் இறந்ததாக எணணி வந்ததாக வந்தவர்கள் அழ... கடைசியில் கோபமான ரங்கசாமி பத்திரிகை அலுவலகம் வந்து உண்மையை விளக்கிச் சென்றார்.

பத்திரிகை ஆசிரியரான சங்கத்தலைவர் நடந்த தவறை விளக்கி ஒரு மறுப்புச் செய்தி வைக்கும்படி உதவி ஆசிரியரான செயலாளரிடம் சொல்ல, அவர் இப்படி மறு விளம்பரம் வெளியிட்டார் அடுத்த இதழில்: ‘‘சென்ற இதழில் திரு.ரங்கசாமி இறந்துவிட்டதாக வந்த செய்தி தவறானது. இறந்தது அவர் மகன் சீனிவாசன் தான். ரங்கசாமி இறக்கவில்லை என்பதை வருத்தத்‌துடன் தெரிவித்துக் கொள்கிறோம்!’’ எப்பூடி....!

==================================================

வந்தது : அந்த 7 வயதுச் சிறுவன் கோர்ட் கூண்டில் நின்றிருந்தான். தன் பெற்றோர் தன்னை அடித்து இம்சிப்பதாக அவன் ‌போன் செய்து புகார் தந்ததுதான் வழக்கு. வழக்கை விசாரித்த நீதிபதி, அவன் உறவுகளைப் பறறிக் கேட்டறிந்தபின் சொன்னார்; ‘‘நீ உன் அத்தைகூட இருந்துக்கறியா?’’ பையன் அலறினான். ‘‘ஐயய்யோ...! அத்தை இவங்களை விட அதிகமா அடிப்பாங்க ஸார்...’’ ஜட்ஜ் சற்று யோசித்து விட்டுக் கேட்டார். ‘‘சரி, அப்ப... உன் தாத்தாகிட்ட இருந்துக்கறியா? தீர்‌ப்பெழுதிடட்டுமா?’’ என்று. பையனோ, ‘‘அது வேண்டாம் ஸார்... இவங்களாவது அடிப்பாங்க. தாத்தாவுக்குக் கோபம் வந்துடுச்சுன்னா, நறுக்குன்னு கிள்ளுவார். சமயத்துல ரத்தமே வந்துடும். அவர்கூட இருகக என்னால ஆகாது!’’

நீதிபதி சற்றே கோபமாக, ‘‘என்னதான் வேணுங்கற நீயி?’’ என்று கேட்க, ‘‘யாரு அடிக்காதவங்களோ அவங்களோட இருந்துக்கதான் எனக்கு விருப்பம்’’ என்றான் பையன். சிறிது நேரம் யோசித்த நீதிபதி பின்னர் யாரும் எதிர்பார்க்காத அந்த தீர்ப்பைச் சொன்னார். ‘‘இந்தப் பையனை நல்லதொரு குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்க வேண்டும். அப்படியொன்றை தேடிக் கண்டுபிடிக்கும் வரை இவனை ‘டெல்லி டேர்டெவில்ஸ்’ அணியின் கட்டுப்பாட்‌டில் இருக்க உத்தரவிடுகிறேன். பையன் சொல்கிற மாதிரி ‘அடிக்காதவர்கள்’ அவர்கள் மட்டும்தான்’’ என்று தீர்ப்பளித்தார். எப்பூடி இந்தத் தீர்ப்பு?

-இது எனக்கு ஈமெயிலில் நண்பர் ஸ்ரீனிவாஸ் பிரபு ஆங்கிலத்தில் அனுப்பியிருந்தது. எழுத்துக் கூட்டிப படித்ததும் குபீரென்று சிரிப்பை வரவழைத்தது என்னிடம். என்னால் இயன்றவரை நன்றாக(?) முழி பெயர்த்திருக்கிறேன்.

==================================================

படித்தது : அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் அவசரங்கள் என்னும் சிந்தனையே உதிக்காத உலக உத்தமர்கள் பங்குபெற்ற ஊர்வலம். வெய்யில் அடிக்கிறதா? சரி! போக்குவரத்து முடங்கி விட்டதா? சரி! பின்னால் வரும் வாகனங்கள் ஹாரன் அடிக்கின்றவனா? சரி. எதிர்ப்புற டிராபிக்கும் கெடுகிறதா? சரி. ஆட்டத்தின் ஆதிதாளம் மாறக் கூடாது. அவசரப்பட்டு ஃபரன்ஸ, மோரா என்று முத்தாய்ப்புக்கும் போய்விடக் கூடாது. ஊர்வலம் பிரதான சாலையில் போய்க் கொண்டிருந்தது என்றாலும் இது தன்னிலை மறந்த ஞானகர்ம சன்னியாச யோகத்துக்கான பைபாஸ் சாலைப் பயணம். சாமானியர்களுக்கு அவ்வளவாகப் புரியாது.

 ஏ! மனிதனே! இக வாழ்க்கை அவசரங்களை நினைத்து ஏன் பரிதவித்து்க் கொண்டிருக்கிறாய்? இதோ இறந்து கிடக்கும் இந்த மனிதனைப் பார். இவனை நாங்கள் பரவாழ்க்கைப் பயணத்துக்கு பார்சல் பண்ணிக் கொண்டிருக்கிறோம். பயணத்துக்கான பாஸ்போர்ட்டில் இவனுடைய அடையாளம் தமிழன் என்று எழுதப்பட்டிருக்கிறது. எனவே, பொது வெளியை நாறடிப்பது பிறப்புரிமை ஆகிவிடுகிறது. நின்ற இடத்தில் துப்பி, நடந்தவாக்கில் ஒன்றுக்கடித்து, ஒன்வேயில் வண்டி ஓட்டி, பிளாக்கில் டிக்கெட் வாங்கி, லாரியில் பொதுக்கூட்டத்துக்குப் போய், வாங்கிய பிரியாணிப் பொட்டலத்தில் பாதியைச் சாப்பிட்டு விட்டு மீதியை வீதியில் போட்டு, பாக்கெட் குடிநீரை பல்லால் கடித்து இழுத்து, மேலுக்குக் கொஞ்சம் துப்பிக் கொண்டு, மிச்சத்தை உள்ளுக்குத் தள்ளி விட்டு....

அனைத்தையும் சரியாகச் செய்து முடித்து விட்டு அடங்கியிருக்கிறான் இம்மனிதன் இது இறுதிப் பயணம். இறந்தவனைக் கெளரவிப்பது முக்கியம். டிராஃபிக்கை நிறுத்தி, வெடித்தாளும், பூக்களுமாக சாலையை நாறடித்து, ஒலிக்கழிவால் காற்றை நிரப்பி வழியனப்பி வைத்தலே சரியான மரியாதை. நீங்கள் காத்திருக்கலாம், தப்பில்லை!

-சமீபத்தில் படித்து ரசித்தது. எழுதியவர்: பா.ராகவன். புத்தகம்: அன்சைஸ்.

சாலையின் குறுக்கே டிராக்ஃபிக்கை ஸ்தம்பிக்க வைத்துச் செல்லும் இறுதி ஊர்வலங்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குள் கடுங்கோபம் எழும். அதே கோபத்தை என்ன அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறார் பா.ரா. எழுத்தில்!

==================================================

சமீபத்திய மின்னல் : வலையுலகுக்குப் புது வரவான ப்ரியா என்கிற தோழி தன் தளத்தில் அருமையான கவிதைகளை எழுதி வருகிறார். எனக்கு இவரின் கவிதைகள் பிடித்திருக்கின்றன. இன்னும் நிறையப் பேரைச் சென்றடைய வேண்டிய நல்ல எழுத்துக்கள் என்பது என் கருத்து. நேரமிருந்தால் இங்கே க்ளிக்கி படித்துப் பாருங்கள்!

Thursday, April 25, 2013

கொ(கோ)டைக் கா(ண)னல் - 5

Posted by பால கணேஷ் Thursday, April 25, 2013
சென்னையில் தினம் காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து வாக்கிங் செல்லும் பழக்கம் இருப்பதால், இரவு தாமதமாகப் படுத்தபோதிலும், நல்ல அசதி இருந்தபோதிலும் காலை 6 மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விட்டது. மற்ற ரூம்மேட்கள் எழாத வண்ணம் கதவு திறந்து சோம்பல் முறித்தவாறு ஸிட்டவுட்டில் வந்து பார்த்தால்... ஸர்ப்ரைஸ் விசிட்டாக நேற்றெல்லாம் காணாமல் போயிருந்த மிஸ்டர் சூரியபகவான் தரிசனம் தந்தார்! உற்சாகமாய் அறையினுள் சென்று பல் துலக்கி முகம் கழுவி வெளியே வர, பக்கத்து அறை நண்பர்கள் இருவர் எழுந்து வெளியில் நின்றபடி சூரிய வெப்பத்தை ரசித்துக் கொண்டிருந்தனர். மூவருமாக காபி அருந்தும் உத்தேசத்தில் காலை வாக் கிளம்பினோம். டீக்கடை நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தள்ளி இருந்தது.

நேற்று சூரியன் இல்லாததாலும், இரவு மழையினாலும் சரியாகக் கவனிக்காத பாதையை இப்போது நன்றாகப் பார்க்க முடிய... பகீரென்றது!. குறுகிய வளைவுகள், இரண்டு ஹேர்பின் திருப்பங்கள், அருகிலேயே சரிவான பள்ளத்தாக்கு! வேன் டிரைவர் கொஞ்ச்சம் அசந்திருந்தாலும் வேன் உருண்டு.... நினைக்கவே மலைப்பாக இருந்தது. ஓட்டுனர் ‘சக்தி’யை வாழ்த்தியபடி காபி குடித்துத் திரும்பினோம். மற்றவர்கள் நிதானமாக எழுந்து தயாரானது, நாங்கள் டிபன் சாப்பிட்டது போன்ற ரிபீட் விஷயங்களைத் தவிர்ததால்... காலை எங்கள் வேன் கிளம்பியபோது மணி ஒன்பதரை.

‘கோக்கர்ஸ் வாக்’கில் எங்களின் வாக்!œ
தசாரதி தலைவரிடம், ‘‘கோக்கர்ஸ் வாக் முதல்ல போயிரலாம்’’ என்றார். ‘‘‌கோக்கர்ஸ் வாக்ன்னா கையில ‘கோக்’ வெச்சுட்டு வாக் பண்ணனுமா தலைவா? போற வழியில வாங்கிட்டுப் போயிரலாமா?’’ என்று ‘கடி’த்தேன். முறைத்தார் தலைவர்! ‘‘ஏங்க இப்புடி? 1872ம் வருஷத்துல கோக்கர்ங்கற ஆளு உருவாக்கினது இந்த நடைபாதை. இ‌தோட நீளம் சுமார் ஒரு கிலோமீட்டர். நேத்து மாதிரி மேகமூட்டமா இல்லாம இன்னிக்கு சூரிய வெளிச்சம் இருக்கறதால அங்கருந்து பெரியகுளம், மதுரை மாதிரி ஊருங்களை பறவைப் பார்வைல நம்மால பாக்க முடியும்’’ அப்படின்னாரு.  கொடைக்கானல் பஸ் ஸ்டாணட்லருந்து அரை கிலோமீட்டர் தூரத்துலயே ‘கோக்கர்ஸ் வாக்’ இருக்கறதால நாங்க பேசிட்டிருக்கற நிமிஷங்கள்ல வேன் அதை அடைந்து விட்டது.

கோ.வா. புல்வெளியில் சற்றே ஓய்வு!
நாங்கள் அனைவரும் வேனிலிருந்து இறங்கியதும், ஓட்டுனர் வேனைச் செலுத்திக் கொண்டு போயே போய்விட்டார். ‘‘என்ன தலைவா?’’ என்று கேட்க, ‘‘இந்த நடைபாதையோட எண்ட்ல செயின்ட் பீட்டர்ஸ் சர்ச் வரும். அங்க வேனை நிறுத்திட்டு வெயிட் பண்ணுவார். வாங்க, நாம நடககலாம்’’ என்றார். சிமெண்ட் தளம் போடப்பட்டு, ஓரங்களில் புல்வெளி வளர்க்கப்பட்டிருந்த கோக்கர்ஸ் வாக் ரம்மியமாக இருந்தது. நிறையக் கடைகள் வழி நிறைய. கண்ணில் பட்ட இயற்கை அழகையும், அவற்றி்ன் பின்னணியில் எங்களையும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். தலைவர் ‌சொன்னது மிகச் சரி! மேலேயிருந்தபடி கீழே தூஊஊஊரத்தில் தெரியும் நகரங்களைப் பார்க்கையில் பிரமிப்பாகவும் மகிழ்வாகவும் இருந்தது.

தடுப்புக் கம்பிகளைத் தாண்டிப் பார்ததால்.. தன்னிகரற்ற இயற்கை எழில்!

நடைபாதையிலிருந்து வெளிவந்ததும் தலைவர் சொன்னது போலவே வேன் தயாராக இருந்தது. ‘‘அடுத்து எங்க போறோம் தலைவரே?’’ என்று கேட்க, ‘‘பேரிஜம் ஏரின்னு 24 ஹெக்டேர் பரப்பளவுள்ள பெரிய ஏரி ஒண்ணு இருக்கு. அதை உள்ள போய் பாக்கறதுக்கு கவர்மென்ட் பர்மிஷன் வாங்கணும். பேசி வெச்சிருக்கேன். அதனால அங்கயே போலாம்’’ என்றார். வேனில் ஏறியதும் வழக்கம் போல எங்களின் பாட்டும் கூத்தும் நடந்து கொண்டிருக்க... வழியில் ‘குணா குகை’ அருகில் டிராபிக் ஜாம் ஏற்பட்டதால் வண்டி தேங்கி நின்றது. ‘‘குணா குகைக்குள்ள போய்ப் பாத்துட்டு வரலாமா?’’ என்று குழுவின் இளையவன் கேட்க, ‘‘குகையில கமல் மாதிரி நின்னுக்கிட்டு கத்தலாம்னு நினைச்சா ஏமாந்துடுவடா. அந்த இடத்துக்குல்லாம் போக அலவ்ட் இல்ல. தள்ளியே நின்னு பாத்துட்டு வரலாம். அதுக்குத்தான டிக்கெட்’’ என்றார் உதவி ஆசிரிய நண்பர்.

குகையப் பாக்காம போயிட்டாங்களே அபிராமி!
‘‘சினிமாப் புகழ்‌ பெற்ற ஸ்தலம்ங்கறதால டிக்கெட் போடறாங்களா இங்க?’’ என்றேன் நான். ‘‘ஆமா.... இதென்ன பெரிய காசி, ராமேஸ்வரமா ஸ்தலம்னு சொல்ல? உமக்குன்னு வார்த்தை கிடைக்குது பாரு...!‘‘ என்று கிண்டலித்த உ.ஆ. தொடர்ந்து, ‘‘இந்த இடத்துக்கு ஆக்சுவலா பழைய பேரு ‘டெவில்ஸ் கிச்சன்’ங்கறதுதான். பிசாசின் சமையலறையா இருந்த இந்த இடம், கமல்ஹாசனால இப்ப குணா குகைன்னு பேர் வாங்கிருச்சு...’’ என்று மற்றொரு தகவலை அவிழ்த்தார். ‘‘தூரத்துல நின்னு இடத்தை வெறுமனே தரிசனம் பண்றதுல என்ன த்ரில் இருக்கு. நான் வரலை’’ என்று நானும் மற்றும் மூவரும பின்வாங்க, தலைவரும் எங்கள் அணியில் சேர, மெஜாரிட்டியின் காரணத்தால் குணா குகையைப் புறக்கணித்து மேலே பயணத்தைத் தொடர்ந்தோம்.

‘‘என் பக்தன் குணாவோட குகையப் பாக்காம வந்துட்டீங்களேடா பாவிங்களா...’’ அப்படீன்னு அபிராமி எங்க மேல கோவிச்சுக்கிட்டிருப்பாங்க போலருக்கு.... பேரிஜம் ஏரியின் நுழைவு வாயில்ல வேன் போய் நின்னதும், தலைவரும், பயணப் பொறுப்பாளரும் போய் கேட் கிட்ட பேசறாங்க. செல்லுல போன் பண்றாங்க. மறுபடி பேசறாங்க... என்னவோ நடந்துச்சு. பின்ன பேசாம திரும்பி வந்துட்டாங்க. தலைவர் முன் அனுமதி வாங்கியிருந்தும் ஏதோ குழப்பம் காரணமாக ‘பர்மிஷன் கிடைககல’ என்பதுதான் நெட் ரிசல்ட். அடுத்து எங்க போகலாம்னு அவங்கல்லாம் கூடி யோசிச்சுட்டிருக்க, நாங்க அங்க வித்துட்டிருந்த சூடான வேர்க்கடலைகளை வாங்கிச் சுவைத்தோம். பெரிய பாக்கெட்டாக இருந்ததால், ‘‘மிஸ்டர் சுடலை! இந்தாங்க, கடலை’’ என்று நண்பரின் கையில் பாதியைக் கொட்டினேன். ‘‘சுடலையாவது...! செமத்தியா சுடுதுங்க’’ என்று அலறினார் நண்பர் சுடலை.

பாறை லேசாச் சுட்டாலும், அதுவும் நல்லாத்தேன் இருந்துச்சுங்க!

இதற்குள் ‘‘எல்லாரும் வேன்ல ஏறுங்க. கிளம்பலாம்...’’ என்றார் ப.பொறுப்பாளர். ‘‘எங்க சார்?’’ என்று கேட்டோம். அருகில் இருந்த வழிகாட்டிப் பலகையைக் காட்டினார். ‘‘பூம்பாறை 23 கி.மீ.’’ என்றது அந்த போர்டு. வேனில் ஏறியதும், ‘‘பூம்பாறைங்கற இடத்துல என்ன விசேஷம்? அதப்பத்தி உங்களுக்குத் தெரியுமா?’’ என்று நான் கேட்க, அனைவரும் ஒருவரையொருவர் கேட்க, யாருக்கும் அதைப் பற்றித் தெரிந்திருக்கவில்லை. வேன் செல்லும் வழியில் அழகான பாறைச் சரிவு ஒன்று அனைவர் கவனத்தையும் இழுக்க, எங்களின் மொத்த கோஷ்டியும், அந்தப் பாறைச் சரிவில் சாய்ந்து நின்று (வைட்லென்ஸ் எதுவும் போடாமலே) படம் எடுத்துக் கொண்டோம்.

 வேன் புறப்பட... முன்னால் சென்ற கல்லூரி பஸ்ஸை முந்த... நாங்கள் கூச்சலிட... அவர்கள் விரைவெடுத்து முந்த... அவர்கள் கூச்சலிட... இப்படி மாற்றி மாற்றி கூச்சலும் விரைவுமாகச் சென்ற பயணம் சட்டென்று முடிவுககு வந்தது போல வேன் நின்றது. ‘‘இறங்குங்க எல்லாரும்...’’ என்றார் தலைவர். ‘‘என்னது...? அதுக்குள்ள 23 கிலோமீட்டர் வந்துட்டமா?’’ என்று வியந்தபடியே வேனிலிருந்து இறங்கினேன் நான்.

                                                                                                   -தொடர்கிறேன்....

Saturday, April 20, 2013

திருமதி தமிழ்! - சுடச்சுட விமர்சனம்!

Posted by பால கணேஷ் Saturday, April 20, 2013
‘மின்னல் வரிகள்’ல சினிமா விமர்சனம்... அதுவும் புதுசா வந்த படத்துக்கு சுடச்சுட விமர்சனமான்னு ஆச்சரியப்படறீங்களா? அதுக்கு்க் காரணகர்த்தா நம்ம ‘மெட்ராஸ்பவன்’ சிவகுமார் தாங்க! போன வாரமம் நம்ம சீனு போன் செஞ்சு, ‘‘சனிக்கிழமை மதியம் நீங்க ஃப்ரீயா? நீங்க, நான், ‘கரைசேரா அலை’ அரசன், ‘அஞ்சாசிங்கம்’ செல்வின், ஸ்கூல் பையன், ஆரூர் மூனா செந்தில் எல்லாருமா சேர்ந்து படம் பாக்கலாம்னு ‘மெட்ராஸ் பவன்’ சிவா சொல்றாரு. வர்றீங்களா? டிக்கெட் வாங்கிரட்டுமா?’’ என்றார். நண்பர்களுடன் ஜாலியாகப் படம் பார்க்கும் ஆசையில் ‘‘சரி’’ என்றேன்.

தலைவன் கட்டையால அடிச்சாலும் அசராத சிவா!
சிவகுமாரும், பிலாசபி பிரபாகரனும் ராமராஜனின் ‘மேதை’ படத்தையே முதல் நாளில் படம் பார்த்து விமர்சனம் எழுதிய தைரியசாலிகள். இம்முறை பிலாசபி எதுவும் பேசாமல் பிரபாகரன் வரவில்லை என்றுவிட, சிவா எங்களனைவரையும் ஓரணியில் திரட்டினார். ‘‘படத்துல பெரிசா எதுவும் எதிர்பார்க்காதீங்க. சும்மா ஜாலியா போய் கலாய்ச்சுட்டு வரலாம்’’ என்று முதலிலேயே என்னைத் தயார்படுத்தியிருந்தார். ஆனாலும் படத்தில் நான் கிஞ்சித்தும் எதிர்பாராத விஷயங்கள் நிறைய இருக்கத்தான் செய்தது.

‘‘ஸாரே, என்டே காதலி உங்க வொய்ஃபாயிட்டு வரும். பட்சே, நின்டே வொய்ஃப் என்டே காதலியாயிட்டு வராது’’ என்று அப்பாவி(?) பாக்யராஜ் தெரியாமத்தனமா முன்ன சொல்லிட்டாரு. ‘‘உன் கழுத்துல நூறு பேரு தாலி கட்டினாலும் பரவாயில்ல... ஐ லவ் யூ சாருமதி...’’ என்று கோர்ட்டில் அனைவர் முன்பும் ‘டெரர் ஸ்டார்’ ராஜகுமாரன் (ஏன் இந்தப் பட்டம்னு யோசிக்கறீங்களா? படம் பாத்தா நீங்களே கொடுப்பீங்க) பேசும் வசனத்தைக் கேட்காவிட்டால் செவிகள் பெற்ற பாக்கியத்தை அடைய மாட்டீர்கள்!

முகத்தில் அரை லிட்டர் பவுடர் அப்பிக் கொண்டு வரும் ஹீரோ ராஜகுமாரன் காற்றில் பறந்து பறந்து பாடுவதையும், அவரை அரெஸ்ட் செய்ய வரும் போலீஸ் இன்ஸ்பெக்டரை ஏரோப்ளேன் கட்டாகக் கட்டி மரண அடி அடிப்பதையும், விண்ணில் பறந்து எதிரிகளை அவர் துவம்சம் செய்து(?) காற்றில் பறக்க வைப்பதையும் கண்ணுற்று கண்கள் பெற்றதன் புண்ணியத்தை அடைவீராக!

என்னையும் விட்டு வெக்கலீங்கோ...!
கதாநாயகியின் விருப்பமில்லாமல் அவள் பெற்றோர் திருமணம் நடத்தி வைத்து விட்டார்கள் என்பதற்காக, கோர்ட்டில் கேஸ் ஃபைல் பண்ணி, கல்யாணத்துக்கு நாதசுரம் ஊதுபவர், மந்திரம் ஓதிய ஐயர், சமையல்காரர், மைக்செட் கட்டியவர், மெல்லிசைக் குழுவினர், ஏன்... பூ விற்ற பெண்மணியைக் கூட கூண்டில் ஏற்றி, ‘‘பெண்ணின் விருப்பத்தைக் கேட்காம எப்படி நீங்க கல்யாணத்துல வேலை பண்ணினீங்க?’’ என்று லாயர் தேவையாநீ... ஸாரி, தேவயானி குறுக்குக் கேள்விகள் கேட்டு மடக்கும் மெயசிலிர்க்க வைக்கும் காட்சியைக் கண்டு கை தட்டுவதற்கு அல்லாமல் இரண்டு கைகளை நாம் எதற்காகப் பெற்றிருக்கிறோம்?

கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஹீரோவாகவும் நடி்த்திருக்கும் ராஜகுமாரனை மிகக் குறைவாக மதிப்பிட்டது என் தவறுதாங்க! ஓப்பனிங் சீன்ல, போலீஸ் அடிக்கிறதையெல்லாம் ஹீரோவா லட்சணமா வாங்கிக்கிட்டு, ‘‘எப்படிறா அடி?’’ன்னு கேட்டதும், ‘‘இது அடியில்ல, இடி’’ன்னு பதிலுக்கு எல்லாரையும் தாக்கி ஒரு ரணகள சுனாமி பண்றாரே... அது ஆச்சரியம் 1! எதிர்வீட்டு மாடியில இருக்கற கதாநாயகிக்காக தோட்டத்துல இருக்கற இரும்புக் கம்பத்தைப் பிடுங்கி, இவர் வீ்டடு பால்கனிக்கும் அவங்க வீட்டு பால்கனிக்கும் நடுவுல பாலம் அமைச்சு, கொட்டற மழையில, கால்ல ‌போட்டிருக்கற ஹீல்ஸ் ஷுவக் கூடக் கழட்டாம, கம்பத்து மேல நடந்து அவளுக்கு சாப்பாடு பார்சலைக் கொடுத்துட்டு, திரும்ப தன் வீட்டுக்கு வர்றார் பாருங்க... சலங்கை ஒலி கமல்லாம் என்னத்தக் கிழிச்சாருன்னு க‌ை தட்ட வெச்சுடுச்சு. (இந்த சீன்லதான் அவர் பேர் டைட்டில் வருது- கைதட்டல் வாங்கற ஆசையில) இது ஆச்சரியம் 2!

விசயம், அலுகை, குலந்தைன்னு கேப்டன் விஜயகாந்தைவிட மோசமாப் பேசி அவரே தேவலைப்பான்னு நினைக்க வெச்சுட்டாரு ராஜகுமாரன்! ஆச்சரியம் 3! இந்த ராமராஜன் முகத்துல பாவமே இல்லாம வசனம் பேசறாருன்னு பாவம்... அப்பாவியான அவரை திட்டிருக்கேன் ஒரு காலத்துல. காதலி பெட்டியோட வீட்டை விட்டு ஓடி வந்துட்ட சீன்ல கூட ‘டீ சாப்டியா?’ங்கற மாதிரி ‘‘பெட்டியத் தூக்கிட்டு வந்துட்டியா?’’ன்னு முகத்துல பாவமே இல்லாம (வராததுக்கு அவர் என்ன செய்வார், பாவம!) நடிச்சு ராமராஜனே தேவலைன்னு நினைக்க வெச்சுட்டாரு. ஆச்சரியம் 4! படம் பூரா தான் எழுதின வசனங்களை நல்லாவே ஒப்பிச்சிருககாருங்க ரா.கு.. அப்புறம்... ஹலோ, எல்லாத்தையும் நானே சொல்லிட்டா எப்பூடி? படத்தை நீங்களே பாத்துத் தெரிஞ்சுக்கங்க மீதிய!

இடைவேளையில், மக்கள் வெள்ளத்தினூடே நாங்கள்!
ஹீரோ ராஜகுமாரனை விடுங்கள்... இயக்குனர் ராஜகுமாரன் செமத்தியாக ஸ்கோர் பண்ணியிருக்கிறார். எல்கேஜி வயசிலிருந்து கல்லூரி வயசு வரை தேவயானியிடம், ‘‘உன் புருஷனைக் கூட்டிட்டு வாம்மா’’ என்று சொல்லும் ராதாரவி, திடீரென்று ராஜகுமாரன் ஒன்றுக்கும் உதவாதவர் என்ற ஞானோதயம் வரப்பெற்று, தேவயானியை வேறொருவருக்கு கட்டி வைப்பதன் மூலமாக மனித மனத்தின் நிலையாமைத் தன்மையை பளிச்சென்று எடுத்துக் காட்டியிருக்கிறார். பெண்ணின் சம்மதம் கேட்காமல் திருமணம் செய்வது தப்பு என்ற மெஸேஜை படம் பார்ப்பவர்கள் மண்டையில் ஆணி வைத்து சுத்தியலால் அடி்த்து இறக்காத குறையாகப் புரியவைத்து மெஸேஜ் சொல்லியிருக்கிறார். அதை விடுங்கள்... கிளைக் கதாபாத்திரமான சாருஹாசனுக்கும் வைத்தார் பாருங்கள்... ஒரு சென்டிமென்ட் பேக்ட்ராப்! சான்ஸே இல்ல...! ‘‘நாளைக்கு பத்து மணிக்கு இங்க சந்திக்கிறேன்’’ என்று சொன்ன காதலி வராததால அந்த பஸ் ஸ்டாப்பிலயே தன் வசிப்பிடத்தை(!) அமைச்சுக்கிட்டு நாப்பது வருஷமா அங்கேயே வாழ்ந்து அந்த இடத்துலயே உயிரை விடறாரு சாருஹாசன்! இத்தனைக்கும் அவர் பெரும் பணக்காரராம், சமூகத்தில் மதிப்புக்குரிய பெரிய மனிதராம்! புல்லரிக்குதா...! சரி, கொஞ்சம் சொறிஞ்சுக்கிட்டு வாங்க!

தேவயானி முதல் பாதியில ராஜகுமாரனோட காதலியாகவும், பின் பாதியில அவருக்கு உதவற லாயராகவும் (காதலியி்ன் அக்காவாக இரட்டை வேடம்) வந்து அவங்க பங்கை குறைவின்றி செய்திருக்காங்க. முதல் பாதியில அவங்களை ஸ்கூல் பெண்ணா காட்டறதுக்காக மிகை மேக்கப் போட்டு (நம்மளை) படுத்தியிருக்கறதைத் தான் சகிக்க முடியல! (மறைந்த) மலேசியா வாசுதேவன், ராதாரவி, ரோகிணி, சாருஹாசன் இவங்கல்லாம் (அ)கெளரவ வேடங்கள்ல தலைகாட்டறாங்க.

அஞ்சாத மும்மூர்த்திகள்!
படத்தோட கதைய விரிவாச் சொல்லணும்னா... சரி, எதுக்கு வம்பு? அதைத் தெரிஞ்சுக்கற விரும்பற தைரியசாலிங்க பின்னூட்டத்துல உங்க இமெயில் ஐடி கொடுங்க விரிவாக கொல்றேன், ஸாரி, சொல்றேன். படத்துல ஒரு சீன்ல ரமேஷ்கன்னா, ‘‘இவன் பேர் தமிழரசன். தமிழ்னும் கூப்பிடலாம், அரசன்னும் கூப்பிடலாம்’’ன்னு சொல்ல... நாங்க திரும்பி பக்கத்துல இருந்த அரசனைப் பார்க்க... அவரு ‘‘ஐயோ, நான் இல்லீங்க அந்த அரசன்’’ன்னு அலறினாரு பாருங்க.. அய்யோ, அய்யோ...நல்ல டமாஸு!  படத்தோட இடைவேளை எப்படா வரும்னு காத்துட்டே இருந்து ஆரூர் மூனாவும், அஞ்சாசிங்கம் செல்வினும் (அஞ்சிய சிங்கமாகி) ‌தியேட்டரை விட்டு தெறிச்சு ஓடிட்டாங்க! நானும் அரசனும் ஓடிரலாம்னு நினைச்சாலும் சிவாவோட அன்பு(!)க்கு கட்டுப்பட்டு முழுப் படத்தையும் பாத்து வெச்சோம்.

அடுத்த தடவை இந்த சிவா படம் பாக்கலாமா ஸார்ன்னு கூப்பிடட்டும்... நற! நற! நற! பின்ன என்னங்க... நானும் எவ்வளவு நேரத்துக்குத்தான் நல்லவனாவே நடிச்சுட்டிருக்கறது? ஹி... ஹி....!

Thursday, April 18, 2013

‘கொசு’வநாத புராணம்!

Posted by பால கணேஷ் Thursday, April 18, 2013
மிஸ்டர் ‘கொசு’வை உங்களுக்குத் தெரியுமா? தினம் இரவில் உங்கள் கைகளிலோ அல்லது பிற பாகங்களிலோ தன் ஆன்டெனாவால் இன்ஜெக்ஷன் போட்டு ரத்தத்தை உறிஞ்சுகிற அற்ப ஜந்துவைச் சொல்லவில்லை நான்! விஸ்வநாதன் என்று பெயரிடப்பட்டு, விசு என்று சுருக்கி அழைக்கப்பட்டு, பிறகு நண்பர்களால் ‘கொசு’வநாதன் என்று நாமகரணம் சூட்டப்பட்டு, அதுவும் சுருங்கி இப்போது விசுவுக்குப் பதில் கொசு என்று அழைக்கப்படும் மே.மாம்பலம் விஸ்வநாதனைப் பற்றித்தான் நான் குறிப்பிட்டேன். அவர் ஏன் அப்படி அழைக்கப்படுகிறார் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முன் மே.மாம்பலம் கொசுக்களைப் பற்றி நீங்கள் நன்கறிந்து கொண்டாக வேண்டும்.

எங்கள் பகுதியில் மொட்டை மாடியில் படுத்திருந்தீர்களென்றால், ‘இவன் நம்மைக் கடிக்க சான்ஸே தர்றதில்லையே..’ன்னு கான்டான கொசுக்கள் பத்து இருபது ஒன்று சேர்ந்துச்சுன்னு வைங்க...  எல்லாம் ஒண்ணு கூடிச்சுன்னாக்க உங்களையே தூக்கிக் கொண்டு பறந்து நான்காவது வீட்டு மொட்டை மாடியில் போட்டுவிடும் அளவுக்கு ஊட்டமானவை இந்தப் பகுதி கொசுக்கள். சில ஆண்டுகளுக்கு முன் விஸ்வநாதன் இங்கே குடிவந்ததும் முதலில் சந்தித்த பெரிய பிரச்னைகளே இரவானால் முற்றுகையிடும் கொசுக்களின் கடிதான்! மனைவியின் கடியையே இருபதாண்டுகளாய்த் தாங்கி வருபவரால் கொசுவின் கடியை இரண்டு நாள்கூட தாங்க முடியவில்லை. அவற்றை வீட்டினுள் வரவிடக் கூடாது என்று முடிவெடுத்தார். முடிவெடுத்தவர் என்ன பண்ணினார்ன்னா...

ஹாலில் ஏறத்தாழ முக்கால் வாசியளவு அடைக்கிற மாதிரி பெரிய கொசுவலை, அதற்குள் இன்னொரு சிறிய கொசுவலை என்று இரண்டடுக்குப் பாதுகாப்பு செய்து, தன் குடும்ப உறுப்பினர்களுடன் அதனுள்ளே படுத்தார் முதல் கட்டமாக! ஓரிரண்டு நாட்கள் கொசுவிடமிருந்து தப்பித்ததென்னவோ நிஜந்தான். அதன்பின் காலையில் அவர் மடித்து வைத்த கொசுவலைக்குள் சுண்டெலியார் ஒரு சிறு ஓட்டை போட்டுவிட, மூன்று நாளாக முற்றுகையிட்டுத் தோற்ற ஆவேசமோ என்னவோ... கொசுக்கள் நறுக்கென்று கடிக்கலாயின. வலையைத் தைத்து மறுபடி படுத்தார். மறுபடி சிற்றெலியார் கைவரிசை காட்ட... இனி எலிகளை விரட்டும் வரை கொசுககளை வலைமூலம் அடக்க முடியாது என்பதை உணர்ந்தார் விசு. முதல் முயற்சி தோல்வி.

வர் மனைவி குமுதம் (குமுதவல்லியின் சுருக்!) ‘‘ஏன்னா... கொசுவர்த்திச் சுருள் வாங்கிட்டு வந்து கொளுத்தி வெச்சா அந்தப் புகைக்கு எந்தக் கொசுவும் அண்டாது’’ என்றாள். அத்தோடு நிறுத்தியிருககலாம் அவள்... ‘‘‌காய்ஞ்ச வேப்பிலைகளை எரிச்சா அந்த மணத்துக்கும் கொசுங்க கிட்ட அண்டாதுங்க...!’’ என்று தான் எப்போதோ ‌புத்தகத்தில் படித்த ‌ஹெல்த் டி‌ப்ஸையும் நினைவு கூர்ந்தாள். ஆரம்பித்தது வினை! ‘‘ஆஹா... லைஃப்ல முதல் தடவையா நல்ல ஐடியா குடுத்திருக்கேடி...!’’ என்று விரைந்தோடிச் சென்று உடனே முப்பது பாககெட் வாங்கி வந்தார். வந்தவர் அன்று மாலையே எல்லா ஜன்னல்களையும், கதவையும் அடைத்துவிட்டு, ‘‘கொஞ்ச நேரம் புகை வீட்டுக்குள்ளயே சுத்தினப்புறம் கதவைத் திறந்தா கொசுவெல்லாம் இந்தத் திசைலயே அண்டாது. இதுலயெல்லாம் கஞ்சத்தனமே கூடாதுடி’’ என்று தாராளப் பிரபுவாய் ஒரு அறைக்கு நான்கு பத்திகளை ஏற்றி வைத்தார். கூடவே எங்கிருந்தோ பொறுக்கி வந்திருந்த முற்றிய வேப்பிலைகளையும் கொளுத்தினார்.

அடுத்த சில நிமிடங்களில் வீட்டின் கதவு உடைப்பதுபோல் இடிக்கப்பட... வேகமாய்ப் போய்க் கதவைத் திறந்தவரின் முகத்தில் பளீரென்று அடித்தது தண்ணீர்! ‘ஹா’வென்று அலறி விழுந்தார். அப்புறம்தான் புரிந்தது... தீயணைப்புப் படையினரின் ஹோஸில் இருந்து பீறிட்ட நீர் அது என்று! பக்கத்து வீட்டுக்காரன் இவர் வீட்டின் ஜன்னல் மற்றும் கதவு மூலம் கசிந்த புகையைக் கண்டு உள்ளே தீப்பிடித்து விட்டதாய் எண்ணியதன் விளைவு! ஃபயர் சர்வீஸ்காரர்களிடம் விசு கன்னாபின்னாவென்று திட்டு வாங்கி, அசடு வழிந்ததும், பக்கத்து வீட்டுக்காரன் பழி சண்டை போட்டதும்தான் நிகரலாபமே தவிர இரண்டாவது முயற்சியும் படுதோல்வி தாங்க...!

ன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விசு, வேறொரு ஐடியாவைப் பிடித்தார். ஒரு குறிப்பிட்ட க்ரீமைத் தடவிக் கொண்டு படுத்தால் கொசு அண்டாது என்ற விளம்பரத்தைப் பார்த்ததும் அதில் ஒரு டஜன் ட்யூபுகளை வாங்கி வந்து தனக்கும், மனைவி குழந்தைகளுக்கும் தாராளமாக ஆயில் மசாஜ் செய்வது மாதிரி உடம்பு பூராவும் தேய்த்து விட்டுப் படுக்கச் செய்தார். ஊஹும்! ‌அந்தக் கீரிமின் நாற்றத்தாலேயே தூக்கம் வரவில்லை என்று மனைவி, குழந்தைகள் கோபாவேசமானதாலும், ரெண்டே நாளில் க்ரீமைப் பழகிக் கொண்ட கொசுக்கள், அதை அலட்சியம் செய்து ‘மவனே, எங்களையாடா ஒழிக்கப் பாத்தே?’ என்று முன்னிலும் உக்கிரமாய்‌க் கடிக்க ஆரம்பித்ததாலும் ஆஸ் யூஷுவல் இதுவும் ‌ஃபெய்லியர்!

விசுவைக கடிச்ச கொசு!
ந்த முயற்சிகளெல்லாம் ஒவ்வொன்றாய் நடந்து கொண்டிருந்த காலச்சதுரத்தில் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும், ‘‘இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலடா நாராயணா’’ என்கிற ரீதியில் இவர் புலம்பித் தள்ளி, ஆலோசனை கேட்க, முன்பே நான் குறிப்பிட்டதுபோல இவரின் பெயர் ‘விசு’விலிருந்து ’கொசு’வாக மாறியதுதான் மிச்சம். அப்போதுதான் அவரின் ‘நண்பேன்டா’ நரசிம்மன் ஐடியா தந்தார். ‘‘டேய் கொசு! ச்சே... விசு! இப்ப புதுசா மார்க்கெட்ல எலக்ட்ரானிக் பேட் ஒண்ணு வந்திருக்காம்,. அதை சார்ஜ்ல போட்டுட்டு கொசு வர்றப்ப வீசினா, பட் பட்னு எலக்ட்ரிக் ஷாக் பட்டு எல்லாக் கொசுவும் செத்து விழுந்துருதாம்...’’ என்றார். எத்தைத் தின்றால் கொசு ஒழியும் என்று காத்திருந்த விசு உடன் அதை வாங்கிக் ‌கொண்டு வீட்டிற்கு வந்து குமுதத்திடம் ‘டெமோ’ செய்து ‌காட்டினார்.

காற்றில் அந்த பேட்டை வீசி, ‘பட் பட்’டென்ற ஒலியுடன் கொசுக்கள் செத்து விழ, பெருமை ‌பொங்க மனைவியைப் பார்த்தார். ‘‘எப்பூடிடி?’’ குமுதம் சற்றும் அசராமல், ‘‘ஆமா... பெரிய லியாண்டர் பெயஸ்! சர்வீஸ் ஷாட் அடிச்சுட்ட மாதிரி போஸைப் பாரு...! எத்தனை நேரம் இதை வீசிட்டே இருப்பீங்கன்னு பாக்கறேன். நாங்க படுத்துக்கறோம். கொசு எங்களை அண்டாம, ராப்பூரா நீங்க பேட்டால அடிச்சுட்டே இருங்கோ...’’ என்றுவிட்டு நிம்மதியாகத் தூங்கினாள். பாவம்... கொசுவநாதன், ஸாரி, விசுவநாதன்தான் அணியணியாகத் திரண்ட கொசுக்களுக்கு முன் பேட்டைச் சுழற்றியே ஓய்ந்து போனார்.

‘‘ஏங்க... இந்தக் கொசுத் தொல்லைய ஒழிக்க வேற வழியே கிடையாதா?’’ என்று மறுநாள் மனைவி கேட்ட போதாவது இவர் வாயை மூடிக் கொண்டிருந்திருக்கலாம்...! காக்கை வாகனர் ஸெவன் அண்ட் ஹாஃபாக நாவில வந்து அமர, ‘‘ஒரு வழி இருக்குடி. கொசுக்கள்லயே கடிக்கறது பெண் கொசுக்கள்தான்னு ஒரு மெடிக்கல் மேகஸின்ல படிச்சேன். பாத்தியா... கொசுக்கள்லகூட பிடுங்கறது பெண் கொசுக்கள்தான். நீ என்ன பண்றே...? ஆண் கொசுக்களைல்லாம் கண்டுபிடிச்சுக் கொன்னுடு. அந்த வருத்தத்துலயே பெண் கொசுக்களும் செத்துடும். கொசுத் தொல்லையிலயிருந்து நிரந்தர ரீலிஃப்!’’ என்றார். இதுபோதாதோ...? குமுதம் பத்ரகாளியாக அவதாரமெடுத்து, இவரை அன்பாக(!) ரெண்டு தட்டுத் தட்டி வராண்டாவில் தள்ளிக் கதவைச் சாத்தித் தாழிட்டுவிட்டு குழந்தைகளுட்ன் நிம்மதியாகத் தூங்கினாள். வராண்டாவில் இரவு முழுவதும் கொசுக்களுடன் யுத்தம் செய்த மிஸ்டர் விசு அதன்பின் குமுதத்தை என்ன... ஆனந்தவிகடன், கல்கியைக் கூட எதிர்த்துப் பேசுவதில்லை என்று முடிவுகட்டி விட்டார்.

போன வாரம் அவரைப் பார்த்தபோது... ‘‘ஹாய் கொசு, ஸாரி... விசு! இப்பல்லாம் நீங்க கொசுத் தொல்லையப் பத்தி யார்கிட்டயும் புலம்புறதில்லையாமே.. ப்ராப்ளம் சால்வ்டா?’’ என்று கேட்டேன். ‘‘ஆமாப்பா... அதுக்கு ரெண்டு காரணம் இருக்கு... முதலாவது, இப்பல்லாம் பாதி ராத்திரி கரண்ட் இருக்கறதில்லைங்கறதால கொசுக்களுக்கும் கண் தெரியறதில்லையோ என்னவோ... அவ்வளவா தொந்தரவில்லை. ரெண்டாவது கொசுக் கடியத் தாங்கிண்டு தூங்கறதுங்கறது இப்ப பழகிப் போயிடுத்து... வொய்ஃபோட பேச்சையே தாங்கிண்டு நாமல்லாம் தூங்கலையா என்ன?’’ என்று கேட்டுவிட்டு ‘ஈ’யென்று அத்தனை பற்களும் தெரியச் சிரித்தார் கொசு! ‘‘ஓய்..! அப்படிச் சிரிக்காதேயும்...! உம்ம பல்வரிசையப் பாத்தாலே குலை நடுங்கறது!’’ என்றேன். கப்பென்று வாயை மூடினார்! நான் அவரிடமிருந்து எஸ்கேப்பாகி ஓடினேன்!

பின்குறிப்பு: வைரமுத்து ஸார் மட்டும்தான் காவியம், காப்பியம்னுல்லாம் கதைகளுக்குப் பேர் வெக்கணுமா என்ன? நாம ஏன் ஒரு புராணத்தை எழுதக்கூடாதுன்னு நினைச்சப்பத்தான் இந்த ‘கொசுவநாத’ புராணம் உற்பத்தியாச்சு. ரசிச்சீங்களான்னு ஒரு வார்த்தை சொல்லிப்போட்டுப் போங்க!

Monday, April 15, 2013

கொ(கோ)டைக் கா(ண)னல் - 4

Posted by பால கணேஷ் Monday, April 15, 2013
ங்கள் குழுவில் ஒருவர் பார்ட்டைமாக இசைக் குழுவில் வாசிப்பவர்/பாடுபவர் என்று முன்பே குறிப்பிட்டிருந்தேன். அந்த ஆசாமி இரண்டு சிறிய டிரம்ஸையும் குச்சிகளையும் கொண்டு வந்திருந்தார். தலைவர் அவரைப் பார்த்து, ‘‘டேனியல்! நீங்க பீட் அடிங்க. நம்ம ஆளுங்க ஒவ்வொருத்தரா டான்ஸ் பண்ணுவாங்க இப்ப...’’ என்றார். என்னது...? டான்ஸா, நாமளா? பேரதிர்ச்சியாக இருந்தது எனக்கு. தலைவரிடம் ‘அப்ஜெக்ஷன் மை லார்ட்’ என்று கை உயர்த்தி மறுக்க நான் முயல்வதற்குமுன் நண்பர் ட்ரம்ஸை அடிக்க ஆரம்பிக்க, ஸ்டெப்ஸ் வைத்து ஆட ஆரம்பித்து விட்டான் குழுவில் இருந்த ஒரு இளைய ப(பு)யல்! அதை நியாயப்படி டான்ஸ் என்று சொல்லுதல் தகாது. சவ ஊர்வலங்களுக்கு முன்னால் ‘ஃபுல்’லாக ஒரு கோஷ்டி ஆடிவருவதை கவனித்ததுண்டா நீங்கள்? அதைப் போன்ற ஸ்டெப்ஸ்கள் அவை. பார்த்ததுமே வயிற்றைக் கலக்கியது எனக்கு.

அவன் நிறுத்த... அடுத்து யார் ஆடுவது என்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க... சட்டென்று முன் வந்த உதவி ஆசிரிய நண்பர் ஒருவர் செம குத்து குத்தினார். பின் ஒவ்வொருவராக ஆட (குதிக்க...?) ஆரம்பித்தனர். கடைசியாக தலைவர் என் முகத்தைப் பார்க்க பலி பீடத்தின் முன் நிறுத்தப்பட்ட ஆடு போல, (அல்லது) கேப்டனின் முன்னால் நிற்கும் பத்திரிகையாளர் போல பேய்முழி முழித்தேன். ‘‘இல்ல தலைவரே... என்னாலல்லாம் ஆட முடியாது’’ என்று நான் சொல்ல, ‘‘இவங்கல்லாம் கத்துட்டா வந்து ஆடினாங்க. சும்மா வாங்க... கமான் கணேஷ்... கமான்...’’ என்று கிண்டியில் ஓடிய குதிரைகளைக் கூப்பிடுவது மாதிரி உற்சாகமாகக் கூப்பிட்டார் தலைவர். ‘‘இல்ல தலைவா... நாம இருக்கறது ஃபர்ஸ்ட் ப்ளோர். நான் ஆடி பில்டிங் ஏதாவது டாமேஜ் ஆயிட்டுதுன்னா... இன்சார்ஜ் சும்மா விடமாட்டாருங்களே..’’ என்றேன் நான். நான் சொன்னதற்கு அவர் பயந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும், நான் மிகத் தயங்கியது அவரை யோசிக்க வைத்ததோ என்னவோ... ‘‘சரி, நீங்க ஆட வேணாம், ஏதாவது பாடுங்க...’’ என்றார்.

2ம் நாள் காலை என் அறையிலிருந்து. ‘என்ன பண்றாங்க இவங்க?’

அதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்று உடனே அஸ் யூஷுவல் மக்கள் திலகத்தின் பாடல் ஒன்றைப் பாடினேன். பல்லவி பாடி முடிப்பதற்குள்ளேயே... ‘‘கணேஷ் பாடச் சொன்னா பாடணும், ஒப்பிக்கக் கூடாது’’ என்று கலாய்த்தார் உ.ஆ. நண்பர். அதற்குள் ட்ரம்ஸ் டேனியல், ‘‘ஃபாஸ்ட் பீட்டா ஒண்ணு பாடுங்க தலைவா...’’ என்றார். சட்டென்று ரெண்டுக்கும் ஏத்த மாதிரி ரூட்டைமாத்தி, ‘‘ஒரு Girlஐப் பார்த்து Moonஐப் பார்த்தேன். Moonல் Chilness இல்லை, அவள் Eyesஐப் பார்த்து Flowerஐப் பார்த்தேன். Flowerல் Brightness இல்லை’’ என்று வேகமான பீட்டில் வாத்யார் பாட்டைப் பாட, ட்ரம்மர் செம தட்டுத் தட்ட, அனைவரும் கைகளைத் தட்ட, உற்சாகம் தூள் பறந்தது. இந்த இடை நேரத்தில் அப்படி இப்படியென்று ஒரு மணி நேரம் ஓடிவிட்டிருக்க, ‘‘சரி, புறப்படலாம்’’ என்றார் தலைவர். ஹப்பாடா!

ஆறே முக்காலுக்கு வேன் தியேட்டரை நோக்கிச் செல்ல, நானும் மற்றொருவரும் காபி குடிக்க வேண்டும் என்க, அனைவரும் ஆமோதிக்க ஒரு டீக்கடை அருகில் வேன் நிறுத்தப்பட்டது. காபியும், டீயும் ஆர்டர் செய்யப்பட்டு, கிடைதததும் குடிக்க ஆரம்பித்தோம். என்னுடன் காபி குடித்த நண்பன், ‘‘காபில பால் ரொம்ப கம்மியா ஊத்திட்டார். ஒரே டிகாஷனா இருக்கு’’ என்றான். ‘‘கடைக்காரரைப் பாத்தயில்ல... மலையாளி. பாலக்காட்டுக்காரரா இருப்பார்..’’ என்றேன். ‘‘எப்படிச் சொல்றீங்க?’’ என்று அவன் கேட்க, ‘‘பாலக்காட்டார் என்பதால தான் காபிலகூட பாலக் காட்டாம குடுத்துட்டாரு...’’ என்றேன். இந்த வார்த்தையை நான் முனைவர் கு.ஞானசம்பந்தனின் புத்தகத்திலிருந்து உருவினேன் என்பது தெரியாததால் சுற்றியிருந்த மூன்று நண்பர்களும் சிரித்தனர்.

கொடைக்கானலின் ஒரே தியேட்டர் மிகப் புராதனமாயிருந்தது. டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் வாங்கியதும், டிக்கெட் கிழிப்பவர் அதைப் பெற்றுக் கொண்டு உள்ளே அனுமதிக்கிறார். வேறு உள்நுழைவு வாயில் கிடையாதாம். தியேட்டரின் உள்ளே போனதும் அது சுதந்திரப் போராட்ட காலத்தில் கட்டப்பட்டதாக இருக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றியது. அவ்வளவு பழமை! ‘பரதேசி’ படம் ஓடத் துவங்கி பத்து நிமிஷங்கள் கழித்து அந்தத் தியேட்டரின் ஸ்பீக்கர்களின் சவுண்ட் சிஸ்டம் காதுக்குப் பழகிய பிறகுதான் என்ன வசனம் பேசுகிறார்கள் என்பதையே புரிந்து கொள்ள முடிந்தது. அதுவரை ஏதோ வழவழா கொழகொழாவென்று ஏதோ பேசுவதாகத்தான் புரிந்ததே தவிர, என்ன பேசுகிறார்கள் என்பதே புரியலையே...! கொடுமைடா சாமி!

‘பரதேசி’ படத்தின் விமர்சனத்தைப் பலரும் எழுதியதை பல தளங்களில் படித்திருப்பீர்கள் என்பதால் நான் அதிகம் சொல்லப் போவதில்லை. பாலாவின் ‘நான் கடவுள்’ படம் பார்த்தபின் என்னுள் எழுந்த ஒருவிதமான ‘அவெர்ஷன்’ நீங்கவே பலநாள் ஆனது என்பதால் நானாக விரும்பி பரதேசிக்குப் போயிருக்க வாய்ப்பேயில்லை. ஆனாலும் கூட்டிச் சென்ற தலைவருக்கு நன்றி. பாலா வழக்கமாக தன் படங்களில் காமெடி வைக்கிறேன் என்று அபத்தமாக ஏதாவது காட்சி அல்லது பாடல் வைத்து சோதிப்பார். இந்தப் படத்தில் அந்த சமரசம் கூட இல்லாமல் மிக அருமையாகச் செய்திருந்தார். A Neat Film! என்னைப் பொறுத்தவர‌ை பாலாவின் படங்களில் இதுதான் ‘தி பெஸ்ட்!’ கொரிய நாட்டுத் திரைப்படங்களைப் பார்க்கும் போதெல்லாம், ‘‘என்னமா ஃபீலிங்ஸை காட்சிப்படுத்தறாங்க. மனசைப் பாதிச்சிடுது இந்தப் படங்கள். தமிழ்ல யாரும் இப்படி ட்ரை பண்றதில்லையே’’என்று ஒரு வருத்தம் என்னுள் எழும். அந்தக் குறையைப்‌ போக்கிய, உலக சினிமாக்களுக்கு ஒரு மாற்றும் குறையாத தமிழ்த் திரைப்படம் ‘பரதேசி’ என்பேன்.

நம்ம மனஸ் இருக்கே...  அதுக்கு எப்பவுமே புத்திசாலித்தனமா படத்தை க்ரிட்டிசைஸ் பண்ணி ஆழமா கேள்வில்லாம் கேக்கத் தெரியாது. ரொம்ப பாமரத்தனமா கேக்கும் கேள்விகளை... உதாரணத்துக்கு ரெண்டு இங்க. 1) இந்த பாலா ஏன் எந்தப் படமா இருந்தாலும் ஹீரோவோட தலையை மாடு மேஞ்ச மாதிரி ஒரு கிராப் பண்ணி வெக்கறாரு? 2) அந்த வெள்ளைக்கார துரை எஸ்டேட்ல ஒரு பொண்ணை கை வெக்கறாரு- கணவனாக காப்பாத்த முடியாத நிலையில - ஆக்சுவலி அந்தப் பொண்ணைவிட கூட நிக்கற தன்ஷிகாவே அழகா இருக்கா. அவ மேல கை வைக்கணும்னு ஏன் வெள்ளக்காரனுக்குத் தோணலை? பாத்தீங்களா ஸார்/மேடம்... இந்த சின்னப்புள்ள மனஸை என்ன சொல்லி அடக்கறது? ‘‘இ‌‌தோபாரு...சின்னச் சின்னதா நிறைய குறை கண்டுபிடிக்கறதையெல்லாம் இந்த மாதிரி நல்ல படங்களைப் பொறுத்தவரை நிறுத்திக்க. பாஸிடிவ் பாயிண்ட்டை மட்டும் பாத்து படத்தை ஓடவெச்சாதான் நிறையப் பேருக்கு இதுமாதிரி முயற்சிக்க தைரியம் வரும்’’ன்னேன்.

தியேட்டரை விட்டு வெளியே வந்தால் மெல்லிய சாரல் மழை பொழிந்து கொண்டிருந்தது. ஆளாளுக்கு கிடைத்த ஷெல்டரில் ஒண்டிக் கொள்ள... தொலைவில் நிறுத்தியிரு்ந்த எங்கள் ரதத்தை எடுத்துவர ஓடினார் ரதசாரதி! அப்போது எங்களைக கடந்து சென்றவர்கள் பேசியதைக் கவனித்தேன். இரண்டு கான்ட்ராஸ்டான விமர்சனங்கள் காதில் விழுந்தது. 1) ‘‘பாலா இந்தப் படத்தை எடுத்ததுக்கு்ப் பதிலா பேசாம ஒரு குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புறப் படுத்துத் தூங்கியிருக்கலாம்டா...’’ 2) ‘‘மனசை உலுக்கிடுச்சு மாப்ளே... இன்னிக்கு நைட்டு சுத்தமாத் தூக்கம் வராது...!’’ இந்த இரண்டில் விமர்சனங்களில் உங்களின் ஓட்டை எந்த விமர்சனத்திற்குப் போடுவீர்கள்?

ஊருக்கு சற்றே ஒதுக்குப்புறமாக இருந்த எங்கள் காட்டேஜுக்குச் செல்ல, குறுகிய பாதைகள்/ வளைவுகளைக் கடந்து செல்ல வேண்டும். மெயின் ரோடுகளைத் தாண்டியதும் பார்த்தால் மழை + பனியில் கண்ணாடிக்கு வெளியே சாலையே தெரியவில்லை. டிரைவர் மிக மெதுவாக வண்டியை ஓட்டியபடி துணி மற்றும் பேப்பர்களை வைத்துத் துடைத்தும் மிக மங்கலாகத் தெரிந்தது. வேனுக்கு வெளியே தலையை நீட்டி... ஸாரி, பாதி உடம்பையே நீட்டி சாலையைக் கவனி்த்தபடி வாகனத்தை மிக மெதுவாக ஓட்டிச் சென்று எங்களை காட்டேஜில் சேர்த்தார் டிரைவர். ‘ஹப்பாடா... ஒரு வழியா வந்தாச்சுப்பா...’’ என்று ஆசுவாசப்படுத்தியபடி முதல் தின நிகழ்ச்சிகளின் முடிவாக, அவரவர் அறையில் சென்று இரண்டு கம்பளிகளைப் போர்த்திக் கொண்டு உறங்கத் துவங்கினோம்.

                                                                                                                  -தொடர்கிறேன்...

Friday, April 12, 2013

சரிதா, லட்டு தின்ன ஆசையா?

Posted by பால கணேஷ் Friday, April 12, 2013
புதிய வீட்டிற்குக் குடி வந்த ஒருமாத காலமாக வீட்டை ரசித்து, அதன் புகழ் பாடிக் கொண்டிருந்தாள் சரிதா. ‘‘அடடா... என்னமா காத்து வருது இங்க ஜன்னலத் திறந்தா...! அந்த வீட்ல ஜன்னலத் திறந்தாலும் காத்து வருவேனாங்கும்! அங்க இங்க அலையத் தேவையில்லாம எல்லாக் கடைகளும் பக்கத்துலயே அமைஞ்சிருக்கு...  இதல்லவா வீடு’’ என்றாள். அவளின் சந்தோஷத்துககு உலை வைககும் விதமாக வந்து சேர்ந்தது அந்தக் கடிதம்!

‘‘அடேய் கணேஷ்...! நீ செய்த பாவத்துக்கு விலை கொடுக்கத் தயாராக இரு...! சீக்கிரம் சந்திககிறேன்!’’ இவ்வளவுதான் அந்தக் கடிதத்தில் இருந்த வரிகள்.  எதுவும் அட்ரஸ் மாறி வந்துவிட்டதோ என்று கவரை மீண்டும் பார்த்தேன். பெயரில் மட்டும் இனிஷியல் தப்பாக ஆர்.கணேஷ் என்றிருந்தது. மற்றபடி வீட்டு எண், தெரு, ஏரியா பெயர் ‌எதிலும் தவறில்லை.

‘‘என்னங்க அது லெட்டர்...?’’ என்று வாங்கிப் படித்த சரிதா என்னை சந்தேகமாகப் பார்த்தாள். ‘‘அதுசரி... நீங்க என்ன பாவம் பண்ணினீங்க?’’ என்றாள். ‘‘ஐயையோ...! பிளாக் எழுதறதைத் தவிர நான் வேற எந்தப் பாவமும் பண்ணினதில்லை சரிதா...! என்னை நம்பு...!’’ என்றேன் பரிதாபமாக.

‘‘ஸ்கூல் டேஸ்ல உங்களுக்கு எதும் லவ்வு உண்டா?’’ என்றாள். ‘‘ஏகப்பட்ட லவ்வு உண்டு- நான் பண்ணினது. என்னை எந்தப் பொண்ணும் லவ் பண்ணினதில்லைம்மா’’ என்றேன். ‘‘ஏதாச்சும் இருக்கணும். இல்லாமலா லெட்டர் வரும்?’’ என்று கோபமாகப் பொரிந்து விட்டு உள்ளே போனாள். நான் ‘ழே’ என்று விழித்தபடி நின்று கொண்டிருந்தேன். ஹவுஸ் ஓனரிடம் கேட்கலாம் என்றால் அவர் குடும்பத்தோடு திருப்பதி போயிருக்கிறார்.

சற்று நேரத்தில் கொஞ்சம் சாந்தமாகி வந்த என் சகதர்மிணி, ‘‘எதுக்கும் நம்ம தெருக்கோடி வீட்ல குடியிருக்கற கான்ஸ்டபிள் கந்தசாமி கிட்ட லெட்டரைக் காட்டி ஒரு வார்த்தை சொல்லிடுங்க...’’ என்றாள். உடனே அவரைப் பார்க்கப் போனோம். எக்ஸ்ட்ராவாக கஞ்சியெல்லாம் போட்டு சலவை செய்ததில் பேப்பர் ரோஸ்ட் போல மொடமொடவென்றிருந்த யூனிஃபார்மை மாட்டிக் கொண்டு, விருமாண்டி கமல் போல நின்ற கந்தசாமி மீசை துடிக்க, லெட்டரைப் படித்துவிட்டு சந்தேகமாக என்னைப் பார்த்தார். ‘‘நீங்க ஏதாவது சட்டத்துக்கு விரோதமா கடத்தல் கிடத்தல் எதும் பண்றீங்களா? அதுமாதிரி ஆசாமிகளுக்குத்தான் இப்படி லெட்டர் வரும்’’ என்றார். விட்டால் என்‌னை பின்லேடன் ரேஞ்சுக்குக் கொண்டுபோய் விடுவார் போலிருந்தது. ஒருவழியாக அவரைச் ‘சரிக்கட்டி’ உதவிக்கு வரும்படி வேண்டுகோள் வைத்துவிட்டு வந்தோம்.

டுத்த இரண்டு நாட்கள் கண்ணில் படுபவரை எல்லாம் சந்தேகாபஸ்தமாகப் பார்த்தபடி அலுவலகம் சென்று வந்தேன் நான். எதுவும் நிகழவில்லை. அன்று ஞாயிற்றுக்கிழமை! கம்ப்யூட்டரில் பிஸியாக டைப்பிக் கொண்டிருந்த என்னிடம் வந்தாள் சரிதா. ‘‘என்னங்க... ஸ்டேஷனுக்குப் போய் நாணாவைக் கூட்டிட்டு வரணும்னு நேத்தே சொன்னேனே... புறப்படுங்க...’’ என்றாள்.

‘‘என்னது...? ஸ்டேஷனுக்கா? நான் ஒரு தப்பும் பண்ணலையே...!’’

‘‘அந்த நினைப்புலருந்து இன்னும் மீளலையா நீங்க? நான் சொன்னது ரயில்வே ஸ்டேஷன்ங்க!’’

‘‘யாரந்த நாணா..?’’ என்று கேட்டேன். ‘‘எங்கம்மாவோட நாத்தனாரோட ஓரகத்தியோட ஹஸ்பெண்டோட ஷட்டகர் மகன்ங்க’’ என்றாள்.

‘திக்’கென்று விழித்தேன். தலையை உதறிக் கொண்டேன். ‘‘என்ன உறவோ... சுத்தமாப் புரியலை...! நான் அவரைப் பாத்திருக்கேனோ?’’ என்றேன்.

‘‘பாத்திருக்கீங்க. கல்யாண சமயத்துல நம்ம பக்கத்துல நின்னு அடிக்கடி தும்மினதுக்காக சண்டைகூடப் போட்டீங்க...’’ என்றாள். நினைவுக்கு வந்துவிட்டது!  பீரங்கியின் குழலைப் பார்த்திருக்கிறீர்கள்தானே...! அப்படி இரண்டு பீரங்கிக் குழல்களை அருகருகே ஒட்ட வைத்த மாதிரி பிரம்மாண்டமான பருத்த மூக்கு அவருக்கு. ‘ஹச்’ என்று ஒரு தும்மல் போட்டு, ‘ஸாரி’ என்று சொல்லி முடிப்பதற்குள் மற்‌றொரு ‘ஹச்!’. இப்படியே தன் சைனஸ் மூக்கினால் அருகில் இருப்பவரை ஈரமாக்கி விடுபவர் மனிதர்.

நாணாவின் மூக்கு! (மாடல்தான்)
‘‘ஞாபகம் வந்துடுச்சு சரி! எல்லாருக்கும் மூஞ்சில மூக்கு இருந்தா, இவருக்கு மூக்குக்குப் பின்னால கொஞ்சூண்டு மூஞ்சி இருக்குமே.. ஆமா, அவர் பேரு என்ன?’’

‘‘பம்மல் நாராயணன்ங்க...!’’

‘‘தும்மல் நாராயணன்னே கூப்பிடலாம் நீ! அந்த தும்மல், ஸாரி, பம்மல் நாராயணன் இப்ப எதுக்கு வர்றாராம்?’’ என்று கேட்டேன்.

‘‘ஒரு கல்யாணத்தை அட்டெண்ட் பண்ண குடும்பத்தோட வர்றார். ரெண்டு நாள் இங்க தங்கிட்டுப் போயிடுவாங்க...’’ என்றாள். ‘‘குடும்பம்னா..? யாரெல்லாம்?’’ என்றேன்.

‘‘பம்மல் நாணா, அவர் வொய்ப் சந்திரகலா, பையன் சூர்ய கலாதர், பொண்ணுங்க சசிகலா, மேகலா, புஷ்கலா எல்லாரும் வர்றாங்க..’’ என்றாள்.

‘‘சரியான சகல‘கலா’வல்லவன் உங்கப்பாவோட கஸின்! தபாரு... நிறைய வேலை இருக்கு எனக்கு இன்னிக்கு. நீ ஒரு ஆட்டோ வெச்சுட்டுப் போய் கூட்டிட்டு வந்துடேன். ப்ளீஸ்! என் செல்லம்ல...’’ என்று ஆரம்பிக்க... ‘‘சரி சரி... ரொம்ப வழியாதீங்க. நானே போய்ட்டு வர்றேன்’’ என்றுவிட்டு, சற்று நேரத்தில் கிளம்பிச் சென்றாள்.

ரை மணி நேரம்கூட ஆகியிராது. மின்சாரம் தவறியிருக்க, யுபிஎஸ் பவர் தீர்வதற்குள் வேகமாக டைப்பிவிட வேண்டும் என்று முயன்ற நேரம்... வாசல் கதவு படபடவென்று தட்டப்பட்டது. ‘‘இரு சரி... வர்றேன்...’’ என்று சொல்லியபடி செல்வதற்குள் மீண்டும் படபடவென்று தட்டப்பட்டது. கோபமாக கதவைத் திறந்து ‘‘ஏய்...’’ என்று ஆரம்பித்தவன் வெளியில் நின்ற உருவத்தைக் கண்டு சட்டென்று நிறுத்தினேன். வாசலில் நின்றவன் உயரமாக, இரண்டு ஆளுக்குரிய பருமனில் திருமலைநாயக்கர் மகால் தூண் போல பெரிய கைகளுடன், அதில் சத்யராஜ் போல கொசகொசவென்று முடிக்கற்றைகளுடன் இருந்தான். முகத்தில் மீசையுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு தாடிப் புதர் அடர்ந்திருந்தது. மொத்தத்தில் வண்டலூர் ஜுவிலிருந்து தப்பித்து வந்த கரடி போலிருந்தான். ‘‘கொஞ்சம் மெதுவா கதவைத் தட்டக் கூடாதுங்களா? யாரு வேணும்?’’ என்றேன்.

‘‘கணேஷ் எங்கே?’ என்றான் கரடி. ‘‘நான்தாங்க கணேஷ்’’ என்றேன். ‘‘ஏய்... என்னை ஏமாத்தப் பாக்கறியா? அவனை உள்ள ஒளிச்சு வெச்சிக்கிட்டு இல்லன்னா சொல்ற?’’ எப்போது அவன் கையில் கத்தி முளைத்தது? எப்போது என்னை நோக்கி நீண்டது? ‘‘நீங்க அட்ரஸ் மாறி வந்துட்டீங்கன்னு நினைக்கிறேன்...’’ என்றபடி பயத்துடன் பின்வாங்கினேன். ‘‘அப்ப... மூஞ்சில கோடு போட்டாத்தான் சொல்லுவ போலருக்கு’’ என்று அவன் முன்னே வர... என் கண்கள் நிலைத்தன. அவனுக்குப் பின்னால்...

சத்தமின்றி வந்து நின்றிருந்த சரிதா, கையில் வைத்திருந்த பையிலிருந்து வெள்ளையாக கிரிக்கெட் பந்து போலிருந்த ஒன்றை எடுத்து கபில்தேவ் போல அதிவேகமாக வீசினாள். சின்ன வயசில் தோப்புகளில் மாங்காய் அடித்துச் சாப்பிட்டதைப் பற்றி அவள் சொன்ன போதெல்லாம் கேலி செய்த நான் இப்போது நம்பினேன்...! அவ்வளவு கச்சிதமாக குறி தவறாமல் கரடியின் மண்டையைத் தாக்கியது! கத்தியைப் பிடித்த கையுடன் அவன் தலையைப் பிடித்துக் கொண்டு திரும்ப, மற்றொரு கிரிக்கெட் பந்தை மால்கம் மார்ஷல் போல சரிதா பெளன்சர் பண்ண, முன்னிலும் வேகமாகத் தாக்கியதில் ‘அம்மா’ என்றபடி கீழே விழுந்தான் கரடி. சரிதாவின் பின்னாலிருந்து வெளிப்பட்ட நாணாவின் குடும்பப் பட்டாளம் அவன் மேல் பாய்ந்து தாக்க, நான் கயிறு எடுத்துவர... அவனைக் கட்டினோம்.

உடனே கான்ஸ்டபிள் கந்தசாமியை அழைத்துவர பக்கத்து வீட்டுக்காரரை அனுப்பினோம். சரியாக அதே நேரம ஹவுஸ் ஓனர் குடும்பம் ஆட்டோவில் வந்து இறங்க...  விஷயம் புரிந்தது. நாங்கள் குடிவருவதற்கு முன் இங்கு குடியிருந்தவர் ராஜகணேஷ் என்பவராம். அவர் ஏதோ கேஸில் இந்தக கரடிக்கெதிராக சாட்சி சொல்லிவிட, அதற்குப் பழிவாங்க இவன் லெட்டர் போட, பாலகணேஷ் ஆகிய எனக்கு அது வினையாகியிருக்கிறது! ‘‘இனிமே எங்கயாவது குடி போகறதா இருந்தா முன்னாடி அந்த வீட்ல யார் குடியிரு்நதாங்க, என்னன்னு விவரம்லாம் கேட்டுக்கிட்டுத்தான் போகணும்’’ என்றாள் சரிதா.

‘‘சரியான நேரத்துக்கு வந்து என்னைக் காப்பாத்தினியே சரி... ரொம்ப நன்றி! உனக்கு எது வேணும்னாலும் கேளு, தர்றேன்’’ என்றேன். ‘‘அப்படியா...? அப்படின்னா இனிமே என்னையும் என் ஃபாமிலியையும் கலாய்ச்சுக் கதை எழுதறத‌ை நீங்க நிறுத்தணும். வாக்குக் கொடுத்திருக்கீங்க. மீறக் கூடாது’’ என்றாள்.

‘‘ரைட்டு. இனி கலாய்ச்சுக கதைய‌ே எழுத மாட்டேன் சரி - அடுத்த மாசம் வரைக்கும்!’’ என்றேன். முறைத்தாள். ‘‘சரி, அதுசரி... அவன் மேல கரெக்டா இதால அடிச்சியே... என்னதிது?’’ என்றேன் அந்த கிரிக்கெட் பந்துகளை எடுத்துக் காட்டி.

‘அதுவா மாப்ளே... என் வொய்ப் பண்ணின பொருவிளங்கா உருண்டை அது. கொஞ்சம்(?) கெட்டியாய்டுத்து, உடைச்சுத்தான் சாப்பிடணும்னாள். சரிதாவுக்கும் உங்களுக்கும் தரலாம்னு நாலஞ்சை எடுத்துட்டு வந்தோம்.’’ என்றார் நாணா.

 ‘‘நான் இன்னும் கொஞ்ச நாள் நான் பல்லோட இருக்கணும்னு விரும்பறேன். வேணும்னா ஒண்ணு பண்ணலாம். எல்லாத்தையும் கான்ஸ்டபிள் கந்தசாமிகிட்ட குடுத்துட்டு வர்றேன். லாட்டியோட சேர்த்து இதையும் ரவுடிகளை அட்டாக் பண்ண ஆயுதமா யூஸ் பண்ணினா தமிழ்நாடு போலீஸ் பவர்ஃபுல்லாயிடும்’’ என்க, ‘‘வேணாம்... அடுத்த மாசம் வரைக்கும்....! இல்லன்னா...’’ என்று கையில் அந்த வெள்ளை ஆயுதத்துடன் என் மேல் பவுன்ஸர் போடப் போகிறவள் மாதிரி கை ஓங்குகிறாள் சரிதா. அவ்வ்வ்வ்வ்வ்! மீ எஸ்கேப்!

====================================================
‘‘மாதம் ஒரு முறையாவது சரிதா வரவேண்டும்’’ என்று விரும்பிய ரசிகை சிஸ்டர் ஸாதிகாவுக்காக இந்த சரிதா ஸ்பெஷல்!
====================================================

Wednesday, April 10, 2013

கொ(கோ)டைக் கா(ண)னல் - 3

Posted by பால கணேஷ் Wednesday, April 10, 2013
வேன் சற்று தூரம் வந்ததும் தூண்பாறைக்கு 8 கிலோமீட்டர் இருப்பதாகச் சொல்லியது போர்டு. வழக்கம் போல பாட்டுக் கச்சேரியுடன் வேன் செல்ல, சற்று நேரத்திலேயே வேனை நிறுத்தினார் ஓட்டுனர். ‘‘இந்த இடத்துக்கு பைன் மரக் காடுகள்னு பேரு ஸார்! இறங்கிப் பாத்துட்டு வாங்க’’ என்றார். ‘‘இந்த ஊசியிலைக் காட்டை 1906ம் ஆணடில் பிரயண்ட் என்பவர் உருவாக்கினார். கொடைக்கானலைப் பசுமையாக்கும் முயற்சியில் மலைப் பகுதியில் பல ஊசியிலை மரங்களை அவர் நட்டு வளர்‌த்தார். இது இப்போது ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது’’ என்று நான் படித்தது நினைவில் வர... அனைவருடனும் வேனை விட்டு இறங்கினோம்.

ஊசியிலைக் காடுகளே, முத்துமழை மேகங்களே!
மலைச்சரிவில் சீரான இடைவெளி விட்டு வளர்க்கப் பட்டிருந்த பைன் மரங்களுக்கிடையில் இறங்கிக் கீழே சென்றால் ஒரு சமதளம் வருகிறது. அங்கே வந்திருந்த பல குழுக்கள் இறங்கிக் கொண்டிருந்தார்கள். சரி, நாமும் இறங்கலாம் என்று நாங்களும் இறங்கத் தொடங்கினோம். கால்களை அழுந்த வைத்து மிக ஜாக்கிரதையாக இறங்க வேண்டிய சரிவு. சற்று அசந்தால் கால் ஸ்கேட்டிங் செய்து, கீழே ‘மூன்றாம் பிறை’ கமல் மாதிரி உருண்டே போய் விடுவோம். கையில் காமிரா வேறு இருந்ததால் மிக உஷாராகவே இறங்கினேன். ஒவ்வொரு மரத்தையும் நிமிர்ந்து பார்த்து வியக்க வேண்டியிருந்தது! என்ன அழகு! ‘தேடும் கண் பாவை தவிக்க’ என்று சிங்கப்பல் மைக் மோகன் போல மரங்களிடையே தாவித் தாவிப் பாடலாம் போல இருந்தது. உடன் அமலா இல்லாததால், மரத்தின் மேல் சாய்ந்து ஒரு படம் மட்டும் எடுத்துக் கொண்டேன்.

நானாவது பரவாயில்லை... எங்களுடன் வந்திருந்த ஒரு உதவி ஆசிரியர் - அவர் ஒரு கவிஞர் - இந்த ‌ஊசியிலைக் காட்டைக கண்டதும் உற்சாகத்தின் எல்லைக்கே போய்விட்டார். கடகடவென்று மரத்தில் ஏற ஆரம்பித்து விட்டார். நாங்களும், சுற்றிப் பார்க்க வந்திருந்த மற்றவர்களும் வியந்து பார்க்க... எங்களைப் போலவே மற்ற குழுவினரும் அவரைப் போட்டோ எடுத்தனர். 

‘முன்னோர்’களை விட வேகமாக மரமேறியவர்!
 நல்லவேளையாக... பாதி மரம் வரை ஏறிவிட்டு, கீழே குதித்தார். சின்ன வயதில் கிராமத்தில் வசித்த காலங்களில் மரம் ஏறுதலும், நீந்திக் குளித்தலும் நிறைய இருந்தது என்றும், நகர வாழ்க்கையில் மறந்து போனது இப்போது நினைவு வந்தது என்றும் சொன்னார். சில்லென்ற காற்றை நுகர்ந்தவாறே கீழே இறங்கி, பின் மேலேறி வந்தது தனி உற்சாகம் தந்தது. மேலே வந்தால்... அங்கே நின்றிருந்த வேன்களிலும், அருகாமை மரங்களிலும் ஏராளமான ராமதூதர்கள் குடும்பம் குடும்பமாக புகுந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களைக் ‘க்ளிக்’கிக் கொண்டதும் வேன் புறப்பட்டது.

எங்க ராஜ்யத்துல குறுக்க வந்தது நீங்கதானே மக்காஸ்! என்கின்றன...

தூண் பாறையை அடைந்து வேனைவிட்டு இறங்கியதும் பார்த்தால், அந்தப் பகுதியே மஞ்சு(மேக) மூட்டமாக இருக்க... ஐஸ் காற்று சில்லென்று வருடிச் சென்றது.

இப்படி மஞ்சு மூடியிருந்தா எப்படி ஸைட் ஸீயிங்? ஒன்லி ஸீயிங் மஞ்சு!

இங்கு மொத்தம் மூன்று பாறைகள் 122மீ உயரத்தில் தூண் போல காட்சியளிக்கின்றன. பல நேரங்களின் இந்த பாறைகள் மேகங்களால் மூடியே இருக்கும் என்பது உபரித் தகவல்.

மார்த்./மஞ். வண்டியில் வந்த மைனாக்கள்!
வேனை விட்டு இறங்கிய நேரத்தில் மார்த்தாண்டத்திலிருந்து வந்த ஒரு மஞ்சள் பஸ் சற்றுத் தொலைவில் வந்து நிற்க, ‘‘ஏ, அதோட ஹாரனை கேட்டியளா? படுபாவி!’’ என்றார் நண்பர். ‘‘கவனிக்கலையே...’’ என்றேன். என் கவனம் எங்கே இருந்தது என்பதை நான சொல்ல மாட்டேன்பா...! அவன் மீண்டும் வண்டியை நகர்த்த ஹாரன் அடித்த போது கவனித்தேன்... பாம்புப் பிடாரர்கள் வாசிக்கும் மகுடி சத்தத்தை ஹாரனாக வைத்திருந்தான்!

மேக மூட்டத்தை அனுபவித்தபடி தூண் பாறையின் அருகில் சென்று கையருகில் நகரும் மேகத்தை ரசித்தபடி பசுமையான அந்தப் பின்னணியில் படங்கள் எடுத்துக் கொண்டோம். சற்றுத் தூரத்தில் டவர் அருகில் தங்களை மறந்து இருந்தது ஒரு ஜோடி அருகில் சிலர் வந்து தங்களைப் படமெடுக்க முற்பட்டதையும் பொருட்படுத்தாமல், ‘எவன் வேணாலும் க்ளிக்கிக்க’ என்று உலகை மறந்து இருந்தனர். யாவற்றையும் பார்த்தபடியே வர... அங்கே இருந்த ஒரு பாறையின் மேல் சாய்ந்தபடி நான் போஸ் கொடுக்க... அந்த என் அழகை(?) ரசித்து இந்தப் பெண் தன் காமிராவில் சிறைப்படுத்துகிறாள் பாருங்கள்... ஹி... ஹி...!

என்னமா ரசிக்குதுய்யா இந்தப் புள்ள... நம்ம ரசிகையா இருக்குமோ!
தூண் பாறையருகில் நிறைய நேரம் செலவழித்துவிட்டு வெளியே வர... வரிசையாக இருந்த கடைகள் எங்கள் குழுவை ஈர்த்தன. நான் ‘கொடை ஸ்பெஷல்’ சாக்லெட் கால்கிலோவும், கீசெயின் போன்ற சில பொருட்களும் வாங்க, உடன் வந்தவர்கள் விளையாட்டு பொருட்கள், துணி வகைகள் என்று பெரிய பர்ச்சேஸ் செய்து கொண்டிருந்தார்கள். அதிலும் நீண்ட நேரம் செலவாகி விட... தூண் பாறையிலிருந்து கிளம்பலாம் என்று நினைத்த போது மணி இரண்டரை ஆகிவிட்டிருந்தது. காட்டேஜ் சென்று மதிய உணவை முடித்துக் கொண்டு சிறு ஓய்விற்குப் பின் ஏரிக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தார் தலைவர்.

வாழ வைக்கும் காதலுக்கு ஜே! தாராளமா க்ளிக்கிக்குங்க!
மதிய உணவாக மட்டன் குழம்பு வைத்திருந்தார்கள். நான் மட்டன் சாப்பிடுவதில்லையாதலால், ரசம் சாதம், மோர் சாதம் ஆகியவற்றை உருளைக்கிழங்கு பொறியல் மற்றும் அப்பளத்தின் உதவியுடன் சாப்பிட்டேன். ‘‘கொஞ்ச நேரம் ரெஸ்‌ட் எடுத்துட்டு, நாலு மணிக்கு ரெடியாயிடுங்க. போட்டிங் போகணும்’’ என்று தலைவர் சொல்ல, அவரவர் அறைகளில் சென்று படுக்கையில் விழுந்தனர். முதல்தினம் இரவு முழுவதும் பயணித்த அலுப்பு.... ஆளாளுக்கு குட்டித் தூக்கத்‌தைப் பெருந்தூககமாகப் போட்டுவிட, அனைவரும் தயாராகி வந்தபோது மணி ஐந்தேகாலைக் கடந்து விட்டிருந்தது.

இரவு உணவு்க்கு என்ன தயாரிக்கலாம் என்று கேட்டுப்போக வந்திருந்த விடுதிப் பொறுப்பாளர், ஐந்தரைக்கு மேல் படகுகளைத் தர மாட்டார்கள் என்றும், இனி ஏரிக்குப் போவது வேஸ்ட் என்றும் கருத்து தெரிவித்தார். அடடா... இனி என்ன செய்வது என்று அனைவரும் யோசித்த வேளையில் ‘‘சினிமாவுக்குப் போகலாம்’’ என்றார் தலைவர். அனைவரும் ஆமோதித்து ‘பாலா’வின் ‘பரதேசி’ திரைப்படத்திற்குச் செல்வதென்று ஏகமனதாக முடிவெடுத்தோம் - காரணம்.... கொடைக்கானலி்ல இருந்தது ஒரே தியேட்டர், அங்கே ஓடியது பரதேசி படம் என்பதால்! ஹி.... ஹி...!

‘‘தியேட்டர்ல நீங்க ஏழு மணிக்கு இருந்தாப் போதும் ஸார். அதிகம் கூட்டம் இருக்காது. ஏழு மணிக்குத்தான் டிககெட் கொடுக்கவே ஆரம்பிப்பாங்க’’ என்றுவிட்டுப்‌ போய்விட்டார் வி.பொ. அப்போது மணி ஐந்தரைதான் ஆகியிருந்தது. ஏழு மணிக்குத் தியேட்டருககுப் போனால் போதும் என்றால் ஆறே முக்காலுக்குப் புறப்பட்டால் போதும், இன்னும் ஒன்றேகால் மணி நேரத்தை ஓட்ட வேண்டுமே... என்ன செய்யலாம் என்றார் ஒரு நண்பர். அப்போதுதான் தலைவர் அந்த வார்த்தைகளைச் சொன்னார் அனைவரையும் பார்த்து...! அதுவரை சந்தோஷமாக பொழுது கழிந்ததை ரசித்து வந்த எனக்கு அவர் சொன்னதைக் கேட்டதும் (நான் முன்பு குறிப்பிட்டிருந்த) பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு, வயிற்றைக் கலக்கியது. அது...?

                                                                                                           -தொடர்கிறேன்...!

Monday, April 8, 2013

என் முதல் நாடக அனுபவம்

Posted by பால கணேஷ் Monday, April 08, 2013
ந்தத் தலைப்பைப் படிச்சதும், நான் முதன்முதலா நாடக மேடையில நடிச்ச அனுபவத்தைச் சொல்லப் போறேன்னு நீங்க நினைச்சிருந்தீங்கன்னா... ஸாரி, உங்களுக்கு பாஸ் மார்க் கிடையாது! இது நான் முதன்முதலா நாடகம் பார்த்த அனுபவம்! ஹி... ஹி... அதப்பத்திச் சொல்றதுக்கு முன்னாடி... ஆதியும் அந்தமுமில்லாத கால வெள்ளத்திலே சற்றுப் பின்னோக்கிப் பயணிக்கும் ஓடத்தில் என்னுடன் வரும்படி நேயர்களை அழைக்கிறேன். (மீண்டும் பொ.செ. படிக்க ஆரம்பிச்சதோட பாதிப்பு.)

நான் பள்ளி மாணவனா இருந்த சமயம் மதுரையில அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார். எங்க சித்தி தமிழ்ப் பேராசிரியைன்னு முன்னமே சில பதிவுகள்ல சொல்லியிருக்கேனில்லையா.... அவங்க தமிழ்ச் சொற்பொழிவுகளுக்கும், அப்ப நடந்த கலை நிகழ்ச்சிகளுக்கும் போறப்ப என்னையும் கூடத் துணைக்கு கூட்டிட்டுப் போனாங்க. தமிழ் மேல இருந்த ஆர்வத்தால பல தமிழ் அறிஞர்களின் மேடைப் பேச்சை ரசிச்சேன். பரதநாட்டிய நிகழ்ச்சிகள்லயும், கர்நாடக சங்கீதக் கச்சேரிகளுக்கும் சித்திகூடப் போறப்பல்லாம்... இவங்க எதை இப்படி ரசிக்கிறாங்கன்னு பொறுமை இல்லாம எப்படா நிகழ்ச்சி முடியும்னு உக்காந்திருப்பேன். அந்த வயசுக்குரிய பக்குவம் அவ்ளவ்தான்!

அந்த உலகத் தமிழ் மாநாட்டு நிகழ்ச்சிகள்ல ரெண்டு நாடகங்களுக்கு சித்தி கூட்டிட்டுப் போனாங்க. மதுரைக் கல்லூரி மைதானத்துல மேடை போட்டு நிகழ்ச்சி நடந்ததால திறந்தபுல் வெளில உக்காந்து பாக்க வேண்டியிருந்தது. மேலே திறந்த வானம்தான் கூரை. ஆர்.எஸ்.மனோகரோட ‘ஒட்டக் கூத்தர்’ நாடகமும், மேஜர் சுந்தரராஜனின் ‘கல்தூண்’ நாடகமும் அப்ப பாத்திருக்கேன். தூரத்துலருந்து பாக்கறப்ப, மேடைல நடிச்சவங்க பொம்மை மாதிரி ஒரு குன்ஸாத்தான் தெரிஞ்சாங்க. தவிர, அப்ப நாடகங்களின் அருமை பெருமையும் தெரியாது, சினிமா ஒண்ணுதான் பிடிச்ச விஷயம்கறதால அக்கம்பக்கம் உக்காந்திருந்தவங்களைத்தான் வேடிக்கை பார்த்தேன். ஆனாலும் ஆர்.எஸ்.மனோகர் மேடையில நிகழ்த்திக் காட்டின தந்திரக் காட்சிகள் அப்பவே பெரும் வியப்பைத் தந்தன.

இப்படியான அனுபவங்களை நான் நாடகம் பாத்ததாச் சொல்லிக்க முடியுமா என்ன? கல்லூரிக் காலத்திலும் சரி... வேலை பார்ககத் துவங்கி, ஊர் ஊராக அலைந்த போதும் சரி.. ஒரு நாடகமாவது நேரில் கண்டு ரசிக்க வேண்டும் என்று பேராவல் இருந்ததே தவிர, ஏனோ வாய்ப்புக்கள் அமையவே இல்லை. சென்னையில செட்டினாதுக்கப்புறம் கிரேஸி, எஸ்.வி.சேகர் மாதிரி ஆளுங்க நிறைய நாடகம் போடறதா போஸ்டர்கள் பாக்கறப்பல்லாம் போனா என்னன்னு தோணும். ஒண்ணு..  நாடகம் நடக்கற தினங்கள்ல ஏதாவது வேலை வந்துடும், இல்லாட்டி, 200, 300ன்னு டிக்கெட் இருக்கறதப் பாத்துட்டு, இவ்வளவு செலவு பண்ணிப் போகணுமா?ன்னு தோணிரும். பதிவுகள் எழுத ஆரம்பிச்சு, நாலு பேருக்கு என்னைத் தெரிஞ்ச சந்தர்ப்பத்துல அறிமுகமான நண்பர் சரணபவன், ஸாரி...  மெட்ராஸ்பவன் சிவகுமார்! அவரோட பதிவுகள்ல அடிக்கடி நாடகம் பார்த்த அனுபவத்தையும், நாடக விமர்சனங்களையும் தொடர்ந்து எழுதிட்டு வர்றார். சிவாகிட்ட என் நாடக ஆசை‌யைச் சொல்லி, ‘‘அடுத்து ஏதாவது நாடகத்துக்குப் போனா என்னையும் கூட்டிட்டுப் போய்யா’’ என்று வேண்டுகோள் வைத்தேன்.

அதன்பின் வந்த மாதத்தில் சிவா போன் பண்ணி, ‘‘வரதராஜனோட ட்ரூப் ‘என்று தணியும் இந்த சுதந்திரதாகம்?’னு சோ நடத்தின நாடகத்தை நடத்தறாங்க. இன்னிக்கு நீங்க ஃப்ரீயா?’’ என்றார். துரதிர்ஷ்டவசமாக அன்றைக்கு வேறொரு வேலை இருந்ததால் போக முடியலை. அதன் பிறகு  சிவா மற்றும் இரண்டு சந்தர்ப்பங்களில் நாடகம் பார்க்க அழைத்தபோது, நான் வெளியூரிலும், மருத்துவமனை செல்லும் நிலையில் இருந்த காரணத்தாலும் மறுக்க நேர்ந்தது. வேறு யாராவதாக இருந்தால், ‘இவனுக்கு வேற வேலையில்ல. வர்றேன்னு ஆசையா சொல்லுவானே தவிர, வரமாட்டான்’னு கூப்பிடறதையே மறந்திருப்பாங்க. ஆனாலும் அசாத்திய பொறுமைசாலி இந்த சிவா!

சனிக்கிழமை மாலை தொலைபேசி, ‘‘கிருஷ்ணகான சபா’வுல ஈவ்னில் அஞ்சரை மணிக்கு ஒரு ஃபங்ஷன். அது முடிஞ்சதும் ஏழு மணிக்கு காத்தாடி ராமமூர்த்தி நாடகம். அனுமதி இலவசம்னு போட்டிருககாங்க. இன்னிக்கு நீங்க ஃப்ரீயா?’’ என்று கேட்டார். மாலை நான் ஃப்ரீ என்பதுடன், அனுமதி இலவசம் என்கிற வார்த்தையும்  தூண்டில் போட்டு இழுக்க, ‘‘கண்டிப்பா வர்றேன் சிவா’’ என்று சொல்லிவிட்டு உடனே புறப்பட்டேன். கிருஷ்ணகான சபாவினர் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை நாடக விழா என்று ஒரு வாரத்திற்கு நாடகங்களை நடத்தி, முதல் தினத்தன்று நாடக உலகில் சாதனை செய்த ஒரு பிரபலத்துக்கு ‘நாடக சூடாமணி’ விருதும் தந்து வருகிறார்கள் என்பது அங்கு சென்றபோதுதான் தெரிந்தது. இந்த ஆண்டு ‘வியட்நாம் வீடு’ சுந்தரம் கெளரவிக்கப்பட்டார். திரு.கே.பாலசந்தர், ஒய்.ஜி.மகேந்திரா, சச்சு போன்ற பிரபலங்கள் வாழ்த்திப் பேசினார்கள். அதன்பின் காத்தாடி ராமமூர்த்தி குழுவினரின் ‘பிள்ளையார் பிடிகக’‘ என்ற நாட்கம் ஆரம்பித்தது.

இந்த ராமமூர்த்தி காத்தாடிய கழட்டிவிட்டுட்டு தன்‌ பேரை ‘பங்சுவாலிட்டி ராமமூர்‌த்தி’ன்னு வெச்சுக்கலாம்! சரியா ஏழு மணிக்கு நாடகத்தை ஆரம்பிச்சுட்டார். பெண்ணுக்கு கல்யாணம் பண்ண பெற்றோர் கஷ்டப்பட்டது போக, இந்நாளில் பிள்ளைக்கு கல்யாணம் பண்ணவும் பெற்றோர் கஷ்டப்படுவதை நகைச்சுவை  ததும்ப நாடகமாக்கி இருந்தார்கள். நாடகத்தின் விமர்சனம் ‘மெட்ராஸ் பவன்’ தளத்தில் விரிவாக எழுதப்படும் சிவாவால்! ஆகவே, நான் இங்கே நான் கவனித்த, என்னைக் கவர்ந்த சில சமாசசாரங்களை உங்களோட ஷேர் பண்ணிக்கறேன்.

* மைக்கே தேவைப்படாத கணீர் குரல் காத்தாடி ராமமூர்த்திக்கு! தன் நீண்ட கால நாடக/சினிமா அனுபவத்தின் துணை கொண்டு மிகச் சரளமாக அருமையாக நடித்திருந்தார். அவருடைய ட்ரூப்பிலும் எவரின் நடிப்பும் சோடை‌ போகவில்லை.

* நாடகத்தில் மூன்றே காட்சிகளில் வரும் ‘கருப்பூர் வைத்தி’ என்ற கதாபாத்திரம் இரண்டு காட்சிகளில் நகைச்சுவையாகவும், ஒரு காட்சியில் சென்டிமென்ட் கலந்து சோகமாகவும் நடிக்க வேண்டும். அதில் நடித்த ஸ்ரீதரன் என்பவர் மிக அருமையாக நடித்திருந்தார்.

* ஹீரோயினாக நடித்த பெண் நல்ல அழகு! (ஹி.. ஹி...) காத்தாடி ராமமூர்த்தி போன்றவர்கள் வேஷ்டிக்கும், பேண்ட்டுக்கும் மாறி அடுத்தடுத்த காட்சிகளில் தோன்றுவது ஆச்சரியமில்லை. இந்தப் பெண்ணும் நாடகத்தில் நான்கைந்து சுடிதார்களில் சட்சட்டென்று உடை மாற்றி வந்து நடித்தது ஆச்சர்யம்! கருப்பு லெக்கின்ஸ் அணிந்திருந்த அவர், அதற்கு ஏற்றாற்போன்ற சிவப்பு, மஞ்சள் போன்ற நிறங்களில் வேறு வேறு டாப்ஸ்கள் மாற்றி வந்ததால் இது சாத்தியமென்பது நன்கு கவனித்ததில் புரிந்தது. நைட்டி அணிந்து வரும் ஒரு காட்சியில் அவர் கால்மேல் கால் போட்டு அமர்ந்தபோது அந்த லெக்கின்ஸ் நைட்டியின் உள்ளேயிருந்து தலைகாட்டியது ஒரு வேடிக்கை! (அப்ஸர்வேஷன் பாஸ்!)

* நாடகத்தில் நடித்தவர்களிடம் சிறு‌ பேட்டி எடுத்து வெளியிட வேண்டுமென்று ஆசையில் நானும் சிவாவும் போய்க் கேட்டபோது, நாடகப் பொறுப்பாளரைக் கை காட்டினார் காத்தாடி. அவரிடம் கேட்க, ‘போன் பண்ணிட்டு வாங்க’ என்று சிவாவிடம் தொலைபேசி எண் தந்தார். (சிவா போகும்போது அழைப்பதாகச் சொல்லியிருக்கார்) காத்தாடியிடம் மட்டுமாவது நாலு வார்த்தை பேசலாம் என்று பார்த்தால்... அவர்தான் காத்தாடியாயிற்றே...!  அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தார். இருந்தாலும் கிடைத்த இடைவெளியில் அவரை மடக்கி, ‘‘சார்! மத்த கேள்வில்லாம் அப்புறம கேட்டுக்கறேன். என் மனசுல ரொம்ப நாளா இருக்கற ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் இப்ப பதில் சொல்லுங்க...’’ என்றேன். ‘‘கேளுங்க’’ என்றார் காத்தாடி.

‘‘ஸார்! நீங்க நடிகர்திலகம் சிவாஜியைப் பாத்து, ‘நீயெல்லாம் நடிக்க வரலைன்னு யாருடா அழுதா? உனக்கு நடிப்பு சுட்டுப் போட்டாலும் வராது. பேசாம கிராமததுக்கே போயிடு’ன்னு திட்டுவீங்க. (ராமன் எத்தனை ராமனடி படம்). அந்தச் சமயத்துல...’’ என்று நான் கேட்பதற்குள் காத்தாடி அவசரமாக, ‘‘உங்களைப் பாத்து எப்படி சார் நான் இதைப் பேச முடியும்?னு சிவாஜி ஸார் கிட்டயே சொன்னேன். அவர், ‘ராமமூர்த்தி, நீ என்னைப் பாத்துச் சொல்லலை. அந்த டைரக்டர் கேரக்டர், நடிகனைப் பாத்துச் சொல்லுது. அவ்வளவுதான். தைரியமா நடி’ன்னு அவர்தான் தைரியம் தந்து நடிக்க வெச்சார்’’ என்றார். ‘‘என் கேள்வி அதில்லை சார்! அந்தக் காலத்துல எம்.ஜி.ஆர்., சிவாஜி ரெண்டு பேருக்குமே மிகத் தீவிரமான ரசிகர் பட்டாளம் இருந்ததாக் கேள்வி. இப்படி ஒரு வார்த்தை பேசினதுக்கு ரசிகர்கள் தரப்புலருந்து உங்களுக்கு எதுவும் எதிர்ப்பு, திட்டி லெட்டர், போன் எதுவும் வந்துச்சா?’’ என்றேன். ‘‘இல்லீங்க.. அப்படி எந்த விஷயமும் நடக்கலை. எந்தப் பிரச்னையும் ஆகலை’’ என்று ரத்னச் சுருக்கமாகச் சொல்லி, கை கொடுத்துவிட்டுப் பறந்து வி்டடார். (மதுரையில் ‘படிக்காதவன்’ படம் பார்த்தபோது ரஜினியை வடிவுக்கரசி கடுமையாகத் திட்ட,  தியேட்டரில் ரசிகர்கள் வடிவுக்கரசியை கன்னாபின்னாவென்று இங்கு எழுத முடியாத வார்த்தைகளில் அர்ச்சனை செய்ததை நான் பார்த்ததால் இந்தக் கேள்வியை அவரிடம் கேட்க வேண்டுமென்று ரொம்ப நாள் ஆசை)

* கிருஷ்ணகான சபா அரங்கம் மிக விஸ்தாரமாக இருந்ததுடன், சவுண்ட் சிஸ்டம் அருமையாக இருந்ததுடன், ஏ.ஸி. அரங்கமாகவும் இருந்தது மிக வியப்பு! மூங்கில் சேர்களை கீழே சட்டமிட்டு, அசைக்க முடியாதபடி அமைத்திருந்தார்கள். வயதானவர்கள் சேரை அசைகக முடியாமல், நடக்க இடைவெளி போதாமல்  கஷ்டப்பட்டது ஒன்றுதான் மைனஸாகத் தோன்றியது! மற்றபடி எல்லாமே ப்ளஸ்தான்!

இரண்டாவது வரிசையில் உட்கார்ந்து நாடகத்தை ரசித்த அனுபவம் நீண்டநாள் மகிழ்வாக மனதில் இருக்கும். அந்த மகிழ்வைத் தந்த மெ.ப. சிவாவுக்கு மனம் நிறைந்த நன்றியை இங்கே பதிவு செய்கிறேன்.

மே.மை. இப்போது : பதியைக் கொன்ற பாவை-8

Friday, April 5, 2013

கொ(கோ)டைக் கா(ண)னல் - 2

Posted by பால கணேஷ் Friday, April 05, 2013
மு.கு.1 : சென்ற பகுதியில் இரவில் ஒரு அதிர்ச்சி என்று நான் குறிப்பிட்டதை மாலையில் என்று திருத்தி வாசிக்கவும்.

மு.கு.2 : இது நான் நிஜமாகவே பயணம் போய் வந்து எழுதுவதா, இல்லை கற்பனையூரில் பயணித்து எழுதுவதா என்று தாய்க்குலங்கள் சந்தேகிக்கிற காரணத்தால்... நான் எழுதுவது முழுவதும் பொய்க்கலப்பற்ற நிஜம் என்பதை சூடம் அணைக்காமலும், வேட்டியைப் போட்டுத் தாண்டாமலும் சத்தியம் செய்கிறேன்.

மு.கு.3 : அப்படி அவர்கள் சந்தேகப்பட்டதால் கொடைக்கானல் படங்களை மட்டும் போடலாம் என்றிருந்த நான், அங்கே என்னை எடு்த்த படங்களையும் போட முடிவு செய்துவிட்டேன். மனதை திடப்படுத்திக் கொள்க. ஹி... ஹி...!

 
காலை 5.45 மணிக்கு காற்றில் குளிர் இருந்தது. பனிப் படலம் கண் முன்னால் அசைந்தது. ஸ்வெட்டர் எதுவும் அணியாததால் உடல் சற்றே நடுங்கியது. ‘‘என்னா குளிர் பாருய்யா!’’ என்றேன் உடன் நடந்த நண்பரிடம். ‘‘கரெக்ட் சார்’’ என்று அவர் சொல்ல... ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகணேஷா?’’ என்றது மனஸ். வெள்ளி அருவியில் தண்ணீர் சீஸன் இல்லாத காலங்களில பணக்காரன் விடும் கண்ணீர் போல மிக மெல்லிய கோடாக விழும் என்றும், சீஸன் சமயங்களில் அடர்த்தியான கூந்தலுள்ள பெண்ணின் பின்னல் போல தடித்து விழும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன் நான். நாங்கள் சென்ற சமயம் சீஸனின் மிகத் துவக்கம் என்றாலும், அருவியில் துல்லிய வெள்ளியை உருக்கி ஊற்றிய மாதிரி நன்றாகத் தண்ணீர் விழுந்து கொண்டிருந்தது.

வெள்ளி அருவியின் நுழைவாயில்!

‘‘ஹையா! சிலுசிலுன்னு காத்துல, அருவி விழறதைப் பாக்கும் போது பாடலாம் போல இருக்கு. இந்த மலையில எங்கருந்துதான் தண்ணி உற்பத்தியாகுதோ...?’’ என்றார் நண்பர்-2. (அவர் பார்ட்டைமாக இசைக்குழு ஒன்றில் பாடவும், வாத்தியம் இசைக்கவும் செய்கிறார்). ‘‘ஊற்றுலருந்து வர்ற நீர்வீழ்ச்சி இல்ல நண்பா இது. கொடைக்கானல் ஏரியில இருந்து வர்ற தண்ணீர்தான் இந்த நீர்வீழ்ச்சியோட துவக்கம். கடல்மட்டத்துல இருந்து 5900 அடி உயரத்துல இருக்கறதால மிகத் துல்லியமான சுத்தமான தண்ணீர் இது. பாக்கறதுக்கு வெள்ளியை உருக்கி ஊத்தின மாதிரி இருக்குல்ல... அதான் ‘வெள்ளி நீர்வீழ்ச்சி’ன்னுபேரு...’’ என்றேன் நான். ‘‘யப்பா! எப்படி இப்படி தகவலாக் கொட்டறீங்க? என்னா மெமரி உங்களுக்கு!’’ என்றார் நண்பர் ஆச்சரியமாக. ‘‘அதெல்லாம் ஒரு மண்ணுமில்லய்யா. டூர் கிளம்பறதுன்னு முடிவானதுமே எந்தெந்த இடங்கள் சுத்திப் பாக்க இருக்கு? அதோட விசேஷங்கள் என்னன்னு கூகிள்ல சர்ச் பண்ணி குறிப்பெடுத்துக்கிட்டேன். அவ்வளவுதான்!’’ என்றேன்.

பார்க்கவே பிரசவம்... ச்சே, பரவசம் தரும் நீர்வீழ்‌ச்சிœ!
வெள்ளி அருவியை சற்று நேரம் ரசித்துவிட்டு, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு மீண்டும் வேனுக்குத் திரும்பலாம் என்று வந்த எங்களை அங்கிருந்த கடைகள் வரவேற்றன. தைலம், சாக்லெட்டுகள் போன்றவற்றை விற்கும் கடைகளும், அருகிலேயே டீ மற்றும் டிபன் கிடைக்கும் கடைகளும் இருந்தன. ‘‘நமக்கு புக் பண்ணியிருக்கற காட்டேஜ்ல டிபன் காத்துட்டிருக்கும். அதனால ஒரு காப்பி மட்டும் குடிச்சுட்டு போயிரலாம்’’ என்றார் தலைவர். டீக்கடையில் அருகில் வந்தால்... அங்கே ஃப்ரெஷ்ஷாக செடியிலிருந்து பறித்த கேரட்டுகளை வைத்திருந்தார்கள். பார்க்கவே அவ்வளவு அழகாக, ஆசையாக இருந்தது. மூன்று கொத்து கேரட்டை வாங்கி அனைவரும் ஷேர் பண்ணிக் கொண்டு, காபி குடித்தபின் வேன் ஏறினோம்.

பச்சைப்‌ பசேலென்று... ஸாரி, செக்கச்செவேல் கேரட்!
நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடாகியிருந்த காட்டேஜ் மிக அழகாகவே இருந்தது. தரைமட்டத்திலிருந்த உயர்த்திக் கட்டப்பட்டிருந்த அதில் முதல் தளத்தில் இரு பெரிய அறைகளும் இரண்டாம் தளத்தில் மூன்று சிறிய அறைகளும் இருந்தன. கீழே 3 + 3 = 6 பேரும், மேலே 2+2+2 ஆக 6 பேரும் அவரவருக்கான அறைகளை முடிவு செய்ததும் தலைவர், ‘‘இப்ப மணி ஏழரை. ஒன்பது மணிக்கு குளிச்சு ரெடியாகி கீழ்தளத்துக்கு வந்துடு்ஙக. டிபன் ரெடியாயிருக்கும். சாப்டுட்டு புறப்படலாம்’’ என்றார். அறைக்குச் சென்று குளிக்கலாம் என்று ஹீட்டரைப் போட்டால், தண்ணீர் சூடாக வரவில்லை. ‌மிக வெதுவெதுவெனத் தான் வந்தது. ‘‘இப்பத்தான் கரண்ட் வந்துச்சுங்க...’’ என்றார் விடுதிப் பராமரிப்பாளர். அப்போதுதான் நாம் சென்னையிலில்லை, தென்தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறோம் என்பது உறைத்தது. தமிழக அரசை வாழ்த்தியபடி குளித்துத் தயாரானேன்.

காட்டேஜிலிருந்து என்னை எடுத்தது!
மணி 8.30 தானே ஆகுது, நாம வந்துட்ட தகவலை வீட்டுக்குச் சொல்லலாம் என்று செல்லைக் கையிலெடுத்தபடி அறையை விட்டு வெளியே வந்தேன். காலைப்பனியில் எதிரில் தென்பட்ட மலையின் அழகை க்ளிக்கியபடி டயல் செய்ய, பக்கத்து அறையில், மேல் தளத்தில் இருந்தெல்லாம், ‘‘ம்ம்ம்... வந்துட்டேம்மா. குளிச்சாச்சு. இனிதான் சாப்பிடப் போறேன்’’ என்று குரல்கள் கேட்டன. எல்லாருமே அவரவர் வீணையை விட்டுப் பிரிந்து வந்த காரணத்தால் (சம்சாரம் என்பது வீணை - கண்ணதாசன்) ஆளாளுக்கு பேசறாங்கன்னு புரிஞ்சதும் சிரிப்பு வந்துடுச்சு. ம்... Houseக்கு ஹவுஸ் Door Steps!

போன் பேசி முடிச்ச நேரம் காலை டிபன் வந்துசேர, அதன்பேரில் பாய்ந்தோம் அனைவரும். காரணம்... நேற்று இரவு உணவுக்காக நிறுத்தப்பட வழிநடை ஓட்டல் கழிசடை ஓட்டலாக இருந்ததும், அங்கே வறட்டி மாதிரி காய்ந்துபோன சப்பாத்தியும், ஆஃப்பாயில்டு தோசையும் மட்டுமே கிடைத்ததால் யாரும் சரியாகச் சாப்பிடாததும்தான்! சும்மா சொல்லப்படாது. டிபன் அருமையான ப்ரிப்பரேஷன்! மெதுமெது இட்லி, க்ரிஸ்பி வடை, கமகம பொங்கல், காரமான சட்னியும், வெங்காய சாம்பாருமாக... ஆஹா...!  டிவைன்! (சாப்பாட்டைப் பத்தி எழுதினா இந்த வார்த்தையும் வரணும்ல...? ஹி... ஹி....)

குறிஞ்சியாண்டவர் ஆலய முகப்பு!
ம்பிரதாயப்படி முதலில் குறிஞ்சியாண்டவர் கோயிலுக்கு வேனை செலுத்தச் சொன்னார் தலைவர். கோயிலை அடைந்ததும் அதன் முகப்பில் படங்கள் எடுத்துக் கொண்டு உள்ளே சென்றோம். உள்ளே கேமரா அனுமதி இல்லையாம்! குறிஞ்சியாண்டவர் கோயில் சிறியதாக இருந்தாலும் அழகாக இருந்தது. முருகப் பெருமானும் அப்படியே... சிறிய மூலவராக இருந்தாலும் கொள்ளையழகாக இருந்தார். பிராகாரத்தில் நாங்கள் நடக்க, ‘‘தலைவா! இந்தக் கோயிலப் பத்தி என்ன குறிச்சு வெச்சீங்க/’’ என்று மறக்காமல் கேட்டார் நண்பர். ‘‘அதுவா..? 1934ம் ஆண்டுல ஐரோப்பாவுலருந்து வந்த லீலாவதிங்கற அம்மையார் கட்டினது இந்தக் கோயில். இப்ப பழநி கோயிலோட கட்டுப்பாட்டுல இது இருக்குது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கற குறிஞ்சிப் பூவை அது பூக்கற வருஷத்துல வந்தா இங்க பாத்து மகிழ முடியும்’’ என்றேன் நான்.

‘‘லாஸ்ட்டா எப்ப அந்தப் பூ பூத்தது? இனிமே எப்பப் பூக்கும்?’’ மற்றொரு நண்பர் கேட்க, ‘ழே’யெனறு விழித்தேன் நான்.‘‘ஸாரிப்பா... அதை நோட் பண்ணிக்கணும்னு தோணாமப் போச்சே...’’ என்றபடி தரிசனம் முடித்து பிராகாரத்தில் சற்று நேரம் அமர்ந்தோம். ஆலயத்தின் தரையை கிரானைட்டால் அமைத்தது ராமசுப்பையரின் குடும்பத்தினர் என்று தங்களின் சரித்திர சாதனை(!)யை கல்வெட்டாக பிராகாரத்தில் பொறித்திருந்தது தினமலர் நாளிதழ். ஆலயத்தை விட்டு வெளியே வந்து அங்கிருந்த கடைகளில் ஒரு ரவுண்ட் அடித்தோம்.

ஆலய வாசலில் எங்கள் குழுவின் ஒரு பகுதி!
அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். ஸ்டைல் தொப்பிகள் (பாடும்போது நான் தென்றல்காற்று) அழகாக இருக்கவே அதில் ஒன்றை எடுத்து, ‘‘என்ன விலைங்க?’’ என்றேன். ‘‘130 ரூபாய்ங்க...!‘‘ என்றார் கடைக்காரர். ‘யப்பா!’ என்று பின்வாங்கி வேனுக்குப் பாய்ந்து விட்டேன். வேன் டிரைவர் வேனைக் கிளப்ப, ‘‘அடுத்து எங்க போறோம் தலைவா?’’ என்று கேட்டேன். ‘‘தூண் பாறைக்குப் போலாம் சார்!’’ என்றார் அந்த மலைப் பிரதேசத்தின் விவரங்களை விரல் நுனியில் வைத்திருந்த வாகன ஓட்டுனர்!

                                                                                                                 -தொடர்கிறேன்....

மே.மை. இப்போது : இருபதாண்டுகளுக்குப்பின்-2

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube