புத்தகம் வடிவமைப்பவனாக இருக்கிற ஒருவனுக்கு வடிவமைக்கத் தரப்படுகின்ற ஒவ்வொரு புத்தகமும் சப்ஜெக்ட்தான். வாசகநிலையில் இருந்து படிக்க வேண்டும் என்பது அவசியமில்லை, அப்படிப் படிக்கவும் இயலாது. ஏனென்றால் பதிப்பாளர்கள் அச்சாகும் இடத்திலும், பைண்டாகும் இடத்திலும் தாமதமானால் பொறுத்துக் கொள்வார்கள்... வடிவமைப்பாளனிடம் வரும்போது மட்டும் காலில் கஞ்சியைக் கொட்டிக்கொண்டுதான் வருவார்கள். ஹி... ஹி... ஹி... நான் சொல்ல வந்த விஷயம் அதில்லை. அப்படிப் புத்தகங்களை வடிவமைக்கையில் படிக்க நேரிடும் சில பக்கங்கள் நம்மை உள்ளிழுத்து முழுமையாக வாசிக்க வைத்துவிடும் அனுபவம் வெகுசில புத்தகங்களில்தான் ஏற்படும். சமீபத்தில் அப்படி எனக்கு அமைந்த ஒரு புத்தகம் கணேசகுமாரன் எழுதிய ‘மெனிஞ்சியோமா’.
இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கும் கணேசகுமாரனின் முதல் நாவல் முயற்சிதான் இந்த ‘மெனிஞ்சியோமா’. படித்துப் பல நாட்கள் ஆகியும் இந்தக் கதை தந்த பாதிப்பு இன்னும் மனசில் பச்சைப்பசேல்.
மரபார்ந்த கதைசொல்லும் முறைகள், நவ செவ்வியலின் கூறுகள் இவற்றிலிருந்து விலகி இன்றைய தகவல் யுகத்தில் உருவாகும் பிரதிகள், ஆய்வுகள் மற்றும் தரவுகளின்மீது கட்டமைக்கப்படும் புனைவுகளாக எழுதப் பெறுவதைக் காண்கிறோம். -இப்படியான இலக்கிய வார்த்தைகளால் புத்தகத்தைப் பற்றிய ஆழமான முன்னுரை தந்திருக்கிறார் திரு.நேசமித்ரன். இலக்கியத்துக்கும் எனக்கும் ரொம்பவே தூரம்கறதால எனக்குத் தெரிஞ்ச எளிய நடையில உணர்ந்ததைச் சொல்றேன். ஹி.. ஹி... ஹி....
கதையின் நாயகன் சந்துருவிற்கு மூளையில் ஒரு சிக்கல் என்பதால் அந்தப் பிரதேசத்தில் ஒரு ஆபரேஷன் செய்யப்படுகிறது. அதன் பிள்விளைவாக அவன் அனுபவிக்கும் அவஸ்தைகளையும். வலி, வேதனைகளையும் வார்த்தைகளின் துணைகொண்டு ஜீவனுடன் நம்மிடம் கடத்துகிறது நாவல். வெறும்வார்த்தைக்காய் நான் இதைச் சொல்லவில்லை -உண்மையில் படிக்கையில் சந்துருவாக என்னை உணர்ந்தேன் நான். சாதாரணமாக எதற்கும் கலங்காத என் கண்கள் கலங்கின என்றால் அது மிகை வார்த்தையில்லை.
நோயுற்றிருக்கும் உறவினர்களையோ, நண்பர்களையோ காண்பதற்கு மருத்துவமனைகளுக்குச் செல்லும் சமயம் அங்கே கண்ணில்படும் பல நோயுற்றவர்களின் காரணமாக திரும்புகையில் மனசு பாரமாகிவிடும் எப்போதும். எத்தனையெத்தனை கஷ்டங்கள் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் படைத்தது இந்த உடலம்! பல வியாதிகள் நாமாக (அறிந்தோ, அறியாமலோ) வரவழைத்துக் கொள்பவை வேறு. ‘இப்படியொரு துன்பம் நமக்கோ, நம்மைச் சேர்ந்தவர்களுக்கோ வரக்கூடாது... நோய்த் துன்பம் எதுவும் இல்லாம ஓரிரவில் பொட்டுன்னு போயிரணும் உசிரு’ இப்படியான எண்ணம்தான் என்னுள் எழும். சந்துருவின் துன்பமும் ‘இவனைப் போல யாருக்கும் வரக்கூடாதுய்யா’ என்று எண்ண வைப்பதுதான்.
கணேசகுமாரன் அற்புதமான எழுத்து நடையைக் கைக்கொண்டிருக்கிறான். சந்துருவின் தவிப்பையும், தகிப்பையும் முப்பரிமாணத்தில் நம்மிடம் கடத்த அவன் எழுத்துநடையால் முடிகிறது. ஆபரேஷனின் பிறகு தாகத்தால் ஜீவன் தவித்து சந்துரு அவஸ்தைப்படுவதும், தரக்கூடாது என்ற டாக்டரின் கண்டிப்பான உத்தரவால் அது மறுக்கப்படுவதும், அதற்கு நிவாரணமாக அவன் செய்யும் செயலும் படிக்கையில் உருக்கிவிட்டது அவன் எழுத்து. அப்பாவிடம் சொல்லாமல் பக்கத்து பார்க்குக்கு வாக்கிங் போக, அங்கே ஃபிட்ஸ் வந்துவிட, சந்துருவின் நிலையை கணேசா சொல்லும்போது விழியோரம் துளிர்க்கும் நீரை அடக்குதல் சிரமம்தான்.
சந்துருவின் துன்பங்களுக்கு மௌன சாட்சியாக இருக்கிற, அவனைப் பராமரித்து ஆதரவாய் இருக்கிற அப்பாவின் நிலை மற்றொரு துயரமுனை. தன் அவஸ்தை பொறுக்காமல் உயிர்விட எண்ணி சந்துரு தூக்க மாத்திரைகளை விழுங்க, நோயின் தீவிரத்தால் அது உயிரைப் போக்காமல் மேலும் துன்பத்தைத் தர, அப்பாவின் பார்வையும் அது கேட்கும் கேள்விகளையும் எதிர்கொள்ளும் சந்துருவின் நிலையை கனேசா விவரிக்கையில் மனசு பதைத்துப் போனது.
கணேசகுமாரன் இக்கதையில் நோயின் தன்மையையும், மருந்தின் பெயரையும் தந்திருந்தாலும் (சந்துருவின் டிஸ்சார்ஜ் ஷீட் முழுமையாக தரப்பட்டிருக்கிறது) மருத்துவர்களைக் கொண்டு புரியாத மெடிக்கல் வார்த்தைகளால் நோயைப் பற்றி விவாதிக்க வைக்கவில்லை. மாறாக அதன் விளைவுகளையும், சந்துருவின் கஷ்டங்களையும் உணர்வுபூர்வமாக விளக்கத்தான் முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறான்.
சந்துருவின் அவஸ்தையை, வலியை எதற்காக நான் இந்த முப்பரிமாண எழுத்தில் படிக்க வேண்டும், அதனால் பாதிக்கப்பட வேண்டும், இதைப் படிப்பதால் என்ன பிரயோஜனம்? என்றெல்லாம் புத்திபூர்வமாகக் கேள்வி கேட்பீர்களாயின்.. வெல், இந்தப் புத்தகம் தேவையில்லைதான். ஆனால் உணர்வுகளை மதிப்பவர்களாக இருப்பீராயின், புத்தகம் என்பது ஏதோ ஒரு உணர்வால் படிப்பவனைப் பாதிக்க வேண்டும் - அது சிரிக்க வைப்பதாகவோ, கலங்க வைப்பதாகவோ - என்பதை ஒப்புக் கொள்வீராயின் நீர் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.
‘கணேசகுமாரனின் இந்த முதல் நாவல் முயற்சி தனதான திசைகளை அங்கீகாரங்களை அடையும் தகுதிகளோடு இருப்பதாகவே நம்புகிறேன்’ என்கிற நேசமித்ரனின் வார்த்தைகளோடு நானும் உடன்படுகிறேன். இன்னும் பல எழுத்து முயற்சிகளை அவன் முன்னெடுத்து வெல்ல என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
நூலின் விலை 80 ரூபாய். வெளியீடு : யாவரும் பப்ளிஷர்ஸ் (யாவரும்.காம்) தொடர்புக்கு : editor@yaavarum.com / 90424 61472 / 98416 ஆன்லைனில் வாங்கியும் படிக்கலாம்.
பின்குறிப்பு : ஒரு எழுத்தாளனை ‘அவன்’ என்று ஏகவசனத்தில் எழுதியிருக்கிறேனே என்று என்னைத் தவறாக எண்ண வேண்டாம். அதற்கான உரிமையை அவனி(ரி)டமிருந்து பெற்றிருக்கிறேன். ‘அவர் இவர்’ என்றால்தான் வெகுசம்பிரதாயமாக இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது எனக்கு.