Showing posts with label தெரியுமா இவரை. Show all posts
Showing posts with label தெரியுமா இவரை. Show all posts

Wednesday, June 5, 2013

தெரியுமா இவரை - 6

Posted by பால கணேஷ் Wednesday, June 05, 2013
வின்ஸ்டன் சர்ச்சில்
 
சர். வின்ஸ்டன் லியோனார்ட் ஸ்பென்சர் சர்ச்சில் (Sir Winston Leonard Spencer Churchill)  என்பது அவருடைய நீளமான பெயர். 1874ம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த அன்னைக்கும், பிரிட்டிஷ்காரரான தந்தைக்கும் பிறந்தவர். இரண்டாம் உலகப் போர் நடந்த சமயத்தில் இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்க போன்ற ஐக்கிய நாடுகளின் கூட்டுப் படைக்குத் தளபதியாக இருந்தவர் சர்ச்சில்! ஹிட்லர், முசோலினி ஆகிய சர்வாதிகாரிகளிடமிருந்து உலகைக் காப்பாற்றியவர் என்ற முறையில் சர்ச்சிலுக்கு மிகப்பெரும் முக்கியத்துவம் உண்டு.தன்னுடைய மிகச்சிறந்த வீரம் மற்றும் ராஜதந்திரத்தின் மூலம் இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்துக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தவர் என்ற வகையில் அந்நாட்டு மக்களால் தேவதூதன் போல மதிக்கப்பட்டவர் வின்ஸ்டன் சர்ச்சில்.

அதற்கெல்லாம் அடிப்படை சர்ச்சிலின் பள்ளிப் படிப்பிலிருந்தே துவங்கியது. அவர் சிறுவனாக இருந்தபோதே ராணுவப் பள்ளியில் படித்தவர். அச்சம் என்பதை அறியாமல் வளர்ந்த இளைஞன் சர்ச்சில் முதலாம் உலக யுத்ததின் போது இங்கிலாந்தின் கப்பல் படை அமைச்ச்ராக இருந்தார். கடற்படையை மிகவும் வலுப்பெறச் செய்து வெற்றிகளைக் குவித்தார் அவர். இரண்டாம் உலகப் போர் துவங்கிய சமயம் ஹிட்லரின் ஹிட்லிஸ்ட்டில் இங்கிலாந்தும், பிரான்ஸும்தான் முதல் இடங்களில் இருந்தன. அப்போது இங்கிலாந்தின் பிரதமராக இருந்த சேம்பர்லின் என்பவரின் அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருந்தார் வின்ஸ்டன் சர்ச்சில். சேம்பர்லின் அரசு ஹிட்லருடன் மோதத் தயாராக இல்லை. ஹிட்லருடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒப்பந்தம் போட்டார் சேம்பர்லின். ஹிட்லரைப் பற்றித்தான் உலகறியுமே...  ஒரு பக்கம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டே மறுபக்கம் யுத்தத்திற்கான ஆயத்தங்களை செய்தார் அவர்.

வீரனாகிய அமைச்சர் சர்ச்சில், பிரதமர் சேம்பர்லினை இந்த விஷயத்தில் கடுமையாக எதிர்த்தார். ‘‘ஹிட்லருடன் ஒப்பந்தமிடுவது போரில் தோல்வி‌யை ஒப்புக் கொள்வதற்கு சமம். ஹிட்லரை நம்பக் கூடாது’’ என்று சீறினார். அவரி்ன வார்த்தைகள்தான் சரியென்பதை ஹிட்லர் நிரூபித்தார். அவரின் படைகள் குண்டுமழை பொழிந்தன. அதற்கு மேலும் பொறுமை காக்க இயலாமல் இங்கிலாந்தும், பிரான்ஸும் ஜெர்மனியை எதிர்த்து போருக்குத் தயாராயின. ஆனால் துவக்கத்தில் வெற்றி ஹிட்லரின் பக்கமே இருந்தது. தொடர்ந்து வெற்றிகளை ருசித்தது ஜெர்மனி. அச்சமயத்தில் இங்கிலாந்து பிரதமர் சேம்பர்லின் சோம்பல்-லினாக இருந்த காரணத்தால், அவரின் கட்சியிலேயே அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்ப, பிரதமர் பொறுப்பு சர்ச்சிலைத் தேடி வந்தது. ‌சர்ச்சிலின் வீரம், ராஜதந்திரம் இரண்டும் இங்கிலாந்துக்கு வெற்றியைத் தேடித்தரும் என்று நம்பிய இங்கிலாந்து மக்களின் முழு ஆதரவும் அவருக்கு இருந்தது.

மக்களின் நம்பிக்கையை மெய்ப்பித்தார் சர்ச்சில்! நேசப்படைகளின் தளபதியானதும், முதலில் அதுவரை உலகயுத்தத்தில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்த அமெரிக்காவிடம் இங்கிலாந்தின் உறவை பலமாக்கினார். அமெரி்க்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டுடன் அவர் கொண்ட நட்புறவின் பயனாக, படைகளுக்குத் தேவையான ஆயுதங்களும், வெடி மருந்துகளும் அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு ஏராளமாகக் கிடைத்தன. இரண்டாம் உலகப் போரின் பிற்பகுதியில் ஹிட்லர் அமெரிக்காவையும் சீண்டிவிட, பிரான்ஸ், இங்கிலாந்துடன் அமெரிக்காவும் கை கோர்த்து களத்தில் குதித்தது. வின்ஸ்டன் சர்ச்சில் மிகச்சிறந்த பேச்சாளர். யுத்த சமயம் அவர் ஆற்றிய உரைகள் படைகளை எழுச்சி கொள்ளச் செய்தன. அதைத் தவிர, Victory என்ற வார்த்தையின் முதல் எழுத்தைக் குறிக்கும் வண்ணம் V என்பதைப் போல இரண்டு விரல்களை உயர்த்தி (நம்ம வாத்யார் இரட்டை இலை காட்டுவது மாதிரி) காட்டுவார் சர்ச்சில். ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் உற்சாகத்தை அணை உடைத்த வெள்ளமாய் அந்த சைகை பொங்கச் செய்யும்.

1944ம் ஆண்டு சர்வாதிகாரிகள் அழிக்கப்பட்டு இரண்டாம் உலகப் போர் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. அந்தப் போரில் இங்கிலாந்து மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு மகத்தான வெற்றி கிடைக்கக் காரணமாக இருந்தவர் சர்ச்சில். ஆனால் வாழ்வின் மிகப்பெரிய முரண்களில் ஒன்றாக... போரில் வென்ற சர்ச்சில், தேர்தலில் மாபெரும் தோல்வியைச் சந்தித்தார். ஆம்! 1945ம் ஆண்டு சர்ச்சிலின் பதவிக் காலம் முடிய, இங்கிலாந்தில் நடந்த தேர்தலில் போட்டியிட்ட சர்ச்சிலுக்கு்க் கிடைத்தது தோல்வி. அதற்குக் காரணம் அவர் முன்பு நிதியமைச்சராக இருந்தபோது கொண்டுவந்த சட்டதிட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்துக்குப் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததை மக்கள் மறக்கவில்லை. மிகச் சிறந்த வீரனாகவும், ராஜதந்திரியாகவும் அவரை நம்பிய மக்கள் நாடாள்பவராக அவரை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அவர், 1951ம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று மீண்டும் பிரதமரானார். 1955ம் ஆண்டு பதவியிலிருந்து விலகி அரசியல் ஓய்வு பெற்றார்.

போர்வீரராக இருந்தாலும் சர்ச்சிலுக்கு எழுதுவதில் பெரும் நாட்டம் இருந்தது. அவர் எழுதிய History of the English Speaking People புத்தகம் புகழ்பெற்றது. ஆறு தொகுதிகளைக் கொண்ட இவர் எழுதிய நூலான The Second world War என்ற புத்தகம் இவருக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தந்தது. கவிதைகள் எழுதுவதிலும் சர்ச்சிலுக்கு மிகப் பிடித்த ஒன்று. இதைத் தவிர அழகாக ஓவியம் வரையும் திறமையும் சர்ச்சிலின் வசம் இருந்தது. பேச்சில் வல்லவரான அவரிடம் நகைச்சுவை உணர்வும் நிரம்ப இருந்தது. ஒருமுறை சர்ச்சிலின் வாதங்களுக்குப் பதில்தர முடியாத எதிர்க்கட்சி உறுப்பினர் கோபத்தில், ‘‘நீங்கள் என் கணவராக அமைந்திருந்தால் காப்பியில் விஷத்தைக் கலந்து உமக்குக் கொடுத்திருப்பேன்’’ என்று கொதிப்புடன் கூற, சர்ச்சில் கூலாக, ‘‘நீங்கள் என் மனைவியாக வாய்த்திருந்தால் அதை சந்தோஷமுடன் வாங்கிப் பருகியிருப்பேன்’’ என்று பதில் தந்தது உலகப்புகழ் பெற்ற ஜோக்!

சர்ச்சிலுக்கு சென்டிமென்ட்டான விஷயம் அவர் கையில் வைத்திருந்த வாக்கிங் ஸ்டிக்! அதை அவர் எப்போதும் பிரிந்ததே இல்லை. புகைப்படங்களில் கூட பெரும்பாலும் அவரை கையில் வாக்கிங் ஸ்டிக்குடன்தான் பார்க்க முடியும். மாபெரும் ராஜதந்திரியான சர்ச்சில் தன்னுடைய 90வது வயதில் 1965ம் ஆண்டு ஜனவரி 24ம் ஆண்டு மறைந்தார். ‘இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுத்தால் இங்கிலாந்தின் கெளரவம் குறைந்துவிடும். எனவே சுதந்திரம் தரக் கூடாது.’’ என்று பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் வாதாடினார் என்ற வகையில் நம் நாட்டு மக்களுக்கு உவப்பானவராக அவர் இல்லாவிட்டாலும் இங்கிலாந்து மக்களின் நினைவில் இன்றும் குறிப்பிடத்தக்க தலைவராக வாழ்கிறார் சர்.வின்ஸ்டன் சர்ச்சில்!

Wednesday, March 20, 2013

தெரியுமா இவரை - 5

Posted by பால கணேஷ் Wednesday, March 20, 2013

                                  லியனார்டோ டாவின்சி (Leonardo da Vinci)

எஸ்.வி.சேகரின் நாடகம் ஒன்றில் அவரின் அப்பா, ‘‘ஏண்டா இப்படிப் பொறுப்பில்லாம திரியறே? நீ ஒரு டாக்டரா, வக்கீலா, இஞ்சினியரா வரணும்னு நான் எவ்வளவு ஆசைப்பட்டேன் தெரியுமா?’’ என்பார். ‘‘போப்பா... ஒரே ஆள் எப்படி டாக்டரா, வக்கீலா, இஞ்சினீயரா வர முடியும்?’’ என்பார் எஸ்.வி.சேகர். அரங்கம் சிரிப்பலையில் மூழ்கும். ஆனால் நிஜவாழ்வில் மிகச் சிறந்த ஓவியராக, சிற்பியாக, நில அளவையாளராக, தச்சராக, விஞ்ஞானியாக, பொறியியலாளராக, மருத்துவராக, அரசியல் ஆலோசகராக என்று பல நிலைகளில் வாழ்ந்த சாதனையாளர் லியனார்டோ டாவின்சி.

1452ம் வருடம் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி இத்தாலியிலுள்ள வின்சி என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தையான செர்.பியரோ டா வின்சி, ஒரு நல்ல நிலையிலிருந்த நில உரிமையாளர். தாய் கத்தரீனா ஒரு விவசாயக் குடும்பப் பெண். டாவின்சியில் இளமைக்காலம் புளோரசன்சில் கழிந்தது. டாவின்சி இடதுகைக்காராக இருந்தாலும் சிறு வயதிலேயே இரண்டு கைகளாலும் எழுதவும், வரையவும் திறமை பெற்றிருந்தார். உள்ளூர்க் குடியானவன் ஒருவன் லியனார்டோவிடம் ஒரு வட்டப் பலகையில் படம் வரைந்து தருமாறு கேட்க, பாம்புகள் தீயை உமிழ்கிற காட்சியைப் படமாக வரைந்திருக்கிறார். அவரின் தந்தை அந்தப் படத்தின் அழகை அதிசயித்து அதை நல்ல விலைக்கு கலைப்‌பொருள் கூடத்திற்கு விற்றுப் பணமாக்கி விட, வேறொன்று வரைந்து குடியானவனுக்குத் தந்திருக்கிறார் லியனார்டோ.

1466ல், டாவின்சியின் 14வது வயதில், அந்நாளில் மிகவும் வெற்றிகரமான ஓவியராக விளங்கியவரும், வெரோக்கியோ என அறியப்பட்டவருமான ஆண்ட்ரே டி சியோன் (Andrea di Cione) என்பவரிடம் லியனார்டோ ஓவியம் பழகுவதற்காகச் சேர்ந்தார். அப்போது புகழ் பெற்றிருந்த பல கலைஞர்கள் வெரோக்கியாவின் கலைக்கூடத்தில்  தொழில் பழகுவோராகவோ, வேறு வகையில் தொடர்பு உள்ளவர்களாகவோ இருந்துள்ளனர். அதனால் லியனார்டோவுக்குப் பல வகையான தொழில் நுட்பத் திறன்களின் அறிமுகம் கிடைத்தது.  வேதியியல், உலோகவியல், உலோகவேலை, தோல் வேலை, இயந்திரப் பொறிகள் செய்தல், தச்சுவேலை போன்றவற்றோடு ஓவியம் வரைதல், சிற்பம் செதுக்குதல் முதலிய பல திறமைகளையும் வளர்த்து தன்னை கூர் தீட்டிக் கொள்ள ஒரு சிறந்த பயிற்சிக் களமாக அவருக்கு அது அமைந்தது.

‘கிறிஸ்துவின் ஞானஸ்நானம்’ என்னும் ஓவியத்தை, வெரோக்கியோவும், லியனார்டோவும் இணைந்து வரைந்தனர். யேசுவின் உடையை இளம் தேவதை ஏந்தியிருப்பதை லியனார்டோ வரைந்த விதம், குருவையும் விஞ்சியதாக இருந்ததால், அசந்துபோன வெரோக்கியோ அதன் பின்னர் வரைவதையே நிறுத்தி விட்டார் என்று சொல்லப்படுவதுண்டு. இது மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றினாலும் நன்கு ஆராயும்போது, அந்த ஓவியத்தில் லியனார்டோவின் முத்திரை அழுத்தமாக இருப்பதை உணரலாம். அதன்பின்னர் குருவை மிஞ்சிப் புகழ்பெற்ற லியனார்டோ வரைந்த பல ஓவியங்களில் 1498ல் வரைந்த ‘இயேசுவின் கடைசி விருந்து’ ஓவியமும், 1503-1506ல வரைந்த ‘மோனாலிசா’ ஓவியமும் உலகப் புகழ் பெற்றவை. ஆகாய விமானம், பாராசூட், பீரங்கி போன்ற அக்காலத்தில் இல்லாத பல விஷயங்களை ஒரு விஞ்ஞானியாக முன்கூட்டியே கற்பனை செய்து, ஓவியங்களில் வரைந்திருக்கிறார் டாவின்சி. அவரது மேதைமை அவர் வாழ்ந்த காலத்தில் உணரப்படவில்லை, கொண்டாடப்படவில்லை என்பதே வேதனையான உண்மை. (நமது மகாகவி பாரதியார் போல).

1472 ஆம் ஆண்டளவில், லியனார்டோ 20 ஆவது வயதில், மருத்துவர்கள் மற்றும் கலைஞர்கள் குழுவான ‘சென்-லூக்’ குழுவில், வல்லுனராகத் தகுதி பெற்றார். 1482 இலிருந்து, 1498 வரை மிலானில் லுடோவிக்கோ ஸ்போர்ஸா என்பவரிடம் வேலை பார்த்துவந்ததுடன், பல பயிற்சியாளர்களுடன்கூடிய வேலைத்தலம் ஒன்றையும் நடத்திவந்தார். அதன்பின் போரின் காரணமாக அவர் வெனிஸ் சென்றடைந்தார். பின், புளோரன்சில் செஸாரே போர்கியா என்பவரிடம் ஆயுதப்படைக் கட்டிடக்கலைஞராகவும், பொறியியலாளராகவும் பணியில் அமர்ந்தார். 1506 இல் மீண்டும், மிலானுக்குத் திரும்பினார்.

1515ல் பிரான்ஸ் மன்னர் பிரான்சிஸ்-Iக்கும் போப் லியோ X-க்கும் நடைபெறவிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போது இயந்திரச் சிங்கமொன்றைச் செய்வதற்கு லியனார்டோ அமர்த்தப்படார். அதுதான் அரசருடன் அவரின் முதல் சந்திப்பு. 1516ல், அவர் பிரான்ஸிசின் பணியில் அமர்ந்தார். அரசர் அவருக்கு நெருங்கிய நண்பரானார். அரசரின் வாசஸ்தலத்துக்கு அருகில் ஒரு வீடும் சிறப்பான ஊதியமும் வழங்கப்பட்டன.

ஒரு கல்லைக்கூட கைகளிடையில் வைத்து நசுக்கிவிடும் அளவுக்கு லியனார்டோ வியக்கத்தகு உடல் வலிமை படைத்திருந்தார். ஆனாலும் இறப்புக்கு விதிவிலக்காக எவர் இருந்துவிட இயலும்?  1519ம் ஆண்டு லியனார்டோ காலமானார். அவருடைய விருப்பப்படி 60 பிச்சைக்காரர்கள் அவரது பிணப்பெட்டியைத் தொடர்ந்து சென்றார்கள். அம்போயிஸ் கோட்டையில் இவர் அடக்கம் செய்யப்பட்டார்.

மேய்ச்சல் மைதானத்தில் இப்போது... பதியைக் கொன்ற பாவை-4

Friday, March 1, 2013

தெரியுமா இவரை? - 4

Posted by பால கணேஷ் Friday, March 01, 2013
========================================================
‌எச்சரிக்கை : சற்றே நீண்ட பயணம்! கவனமாகச் செல்க!
========================================================

                         ஹோசிமின் (Ho Chí Minh)

பிரான்ஸ் நாட்டிடமும், பின்னர் ஜப்பானிடமும் அடிமைப்பட்டுக் கிடந்த வியட்நாமை அடிமைத் தளையிலிருந்து போராடி விடுவித்த மகத்தான தலைவர் ஹோசிமின். இங்கேயுள்ள படத்தில் சோனியாகக் காட்சிதரும் இந்த எளிய மனிதருக்கு வாய்ச்சிருந்தது இரும்பு இதயமுங்க. ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே தண்ணிகாட்டி, ‌அதோட மூக்கை உடைச்சவரு இவருன்னா நம்புவீங்களா? விரிவாச் சொல்றேன், கேளுங்க...

இவர் 1890ம் ஆண்டு தன் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாப் பிறந்தார். இவருக்கு பெற்றோர் வெச்ச பேரு சிங்சுங். அப்ப... ‘ஹோசிமின்’ அப்படிங்கற பேர் எப்படி வந்‌துச்சுன்னு யோசிக்கறீங்களா? ‘‌ஹோசிமின்’ என்ற பெயருக்கு ‘ஒளி தந்தவர்’ என்பது பொருள். இருண்டு கிடந்த வியட்நாம் நாட்டுக்கு ஒளி தந்தவர்ங்கறதால மக்கள் வெச்ச பேரு அது. அதுவே நிலைச்சுடுச்சுன்னா எந்த அளவுக்கு மக்கள் தலைவரா இருந்திருப்பாருன்னு பாத்துக்கங்க.

பிரான்ஸ் தனக்கு தோதானவங்களை வியட்நாம் அரசுல அமர்த்திட்டு அவங்களை வெச்சு பொம்மலாட்ட அரசியல் நடத்திட்டிருந்துச்சு. அதை எதிர்த்துப் போரிட்ட கொரில்லாப் படைக்கு தகவல்களைக் கொண்டு சேக்கற வேலையத்தான் சிறுவனா இருந்தப்ப ஹோசிமின் செஞ்சாரு. உயிருக்கே ஆபத்தான இந்த வேலையச் செய்யறப்பவே நாட்டு விடுதலைககாக ஏதாச்சும் செய்யணும்ங்‌கற அழுத்தமான விதை இவர் மனசுல விழுந்துருச்சுங்க. இளைஞனானதும் அவர் பிரான்ஸை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினாரு. பிரான்ஸ் அரசாங்கத்தோட சர்வ வல்லமைக்கு முன்னால ஒண்ணும் வேலைக்காவலை. சரின்னு பிரான்ஸுக்கே போய், பாரீஸ்ல ஒரு தபால் நிலையத்துல வேலை பாத்துக்கிட்டே பிரெஞ்சுப் புரட்சிய எப்படி சாதிச்சாங்கன்றதுல இருந்து பல தகவல்களை சேகரிசசுக்கிட்டாரு.

வியட்நாமுக்கு அவர்  திரும்ப வந்தப்ப... 1940ம் ஆண்டு. அப்ப பிரான்ஸ் கிட்ட இருந்து வியட்நாமை ஜப்பான் கைப்பற்றிச்சு. பிரான்ஸோட கொடுமைல இருந்து விடுபட்டாச் சரின்னுட்டு வியட்நாம் மக்கள் ஜப்பானியர்களுக்கு வரவேற்பு த்நதாங்க. ‘‘எந்த நாட்டின் ஆதிக்கத்தோட கீழ இருந்தாலும் அடிமைங்க அடிமைங்க தானே... அதனால இவங்களை விரட்டியடிச்சு நாம சுதந்திர நாடாகணும்’’ அப்படின்னு மக்கள்கிட்ட முழங்கி, எழுச்சியை உண்டுபண்ண முயன்றாருங்க ஹோசிமின். இதை வேடிக்கை பாத்துட்டிருக்க ஜப்பான் அரசு என்ன இனா வானாக்களா? இவரை நசுககிடலாம்னு முனைஞ்சது. வியட்நாமில் இருந்த அடர்ந்த காடுகள் ஹோசிமினுக்குப் புகலிடம் தந்து காப்பாற்றின. அந்தக் காட்டுக்குள்ள இருந்துக்கிட்டே அவர் ஒரு கொரில்லாப் படையை உருவாக்கினாரு. (நோ... நோ... காட்ல இருந்த கொரில்லாக் குரங்குகளை வெச்சு இல்ல... மறைஞ்சிருந்து எதிர்பாராம தாக்குதல் நடத்துறவங்களுக்கு கொரில்லாப் படைன்னு பேரு.) அந்த  கொரில்லாப் படைக்குப் பயிற்சி கொடுத்து தகுந்த சந்தர்ப்பத்துக்காக கொக்கு மாதிரி காத்திருந்தார்.

1945ம் வருஷத்துல ஜப்பான் மீது குண்டுகள் வீசப்பட்டு, அது கலகலத்துப் போயிருந்த சமயம்... பிரான்ஸ் வியட்நாமைக் கைப்பற்றுவதற்கு முன்னால தன் கொரில்லாப் படையோட ஹோசிமின் ஜப்பானியர்களை விரட்டியடிச்சு, நாட்டைக் கைப்பத்திட்டாரு. சின்ன வயசுலருந்து அவர் வெச்சிருந்த ஆசை நிறைவேறிட்ட சந்தோஷத்தோட வியட்நாம் சுதந்திர நாடாயிட்டதா உலகத்துக்கு பறை சாற்றினாரு. கையோட தேர்தலையும் நடத்த... அவர் கட்சி ஜெயிச்சு நாட்டுக்கு அவர் தலைவரானாரு. பிரான்ஸ் கொஞ்சம் லேட்டா சுதாரிச்சுக்கிட்டு யுத்தத்துக்கு படைதிரட்டி வந்துச்சு. வியட்நாமில யுத்தம் ஆரம்பிச்சது.

போர்க் கப்பல்கள், விமானங்கள், பீரங்கிகள்னு இப்படி சகல ஆயுத வசதிகளோடயும் இருந்த பிரான்ஸை போதிய ஆயுத வசதிகள் இல்லாத ஹோசிமின், ‘‘எங்கள்ட்ட வாலாட்டினா கடைசில தோக்கறது நீங்களாதான் இருப்பீங்க’’ன்னு எச்சரிச்சாரு. ‘ஹா... ஹா... நல்லாவே ஜோககடிக்கிறாரு இவரு’ன்னு சிரிச்சுக்கிட்டே வந்த பிரான்ஸ், ஐம்பத்தைந்து நாட்கள் நடந்த போரில, காட்டில் கடுமையான பயிற்சி அளிக்கப்பட்டிருந்த ஹோசிமின் படைகளை எதிர்கொள்ள முடியாம மண்ணைக் கவ்வுச்சு. பிரான்ஸ் இப்படி தோல்வியைச் சந்திச்சாலும் தெற்கு வியட்நாம் அதோட கட்டுப்பாட்டிலதான் இருந்து்ச்சு. வடக்கு்ப் பகுதி மட்டும்தான் ஹோசிமின் வசம். ‘என் நாட்டை முழுமையா மீட்டே தீருவேன்’ன்னாரு ஹோசிமின்.

அசைவின்றி, சத்தமின்றி எரியும் புத்தபிட்சு!
பிரான்ஸ், ஹோசிமினை ஒரு கம்யூனிஸ்ட்னு சொல்லி அமெரிக்கா கிட்ட உதவி கேட்டுச்சு. கட்டப் பஞ்சாயத்துன்னா குஷியாகற, கம்யூனிஸ்ட்ன்னாலே பிடிககாத அமெரிக்கா  பிரான்ஸுக்கு ஆயுத உதவி பண்ணிச்சு. வியட்நாம் பூரா குண்டு மழை, துப்பாககி சத்தம்தான். பல ஆண்டுகள் ஹோசிமின் படை பிரான்ஸுக்கு தண்ணி காட்ட, அந்த கேப்ல அமெரிக்கால மூணு ஜனாதிபதிகளே பதவி மாறிட்டாங்கன்னா பாத்துக்குங்களேன். ‘சரி, இதெல்லாம் வேலைக்காவாது’ன்னு முடிவுகட்டி அமெரிக்காவே 1965ம் ஆண்டு நேரடியா போர்ல இறங்கிச்சு. அங்க புடிச்சது அமெரிக்காவுக்கு சனி. அதுவரைக்கும் தோல்வியே காணாத அமெரிக்காவோட மூக்கை உடைச்சாரு ஹோசிமின்.

எப்படிங்கறீங்களா...? அமெரிக்கப் படைங்க இரக்கமே இல்லாம வடக்கு வியட்நாம் மேல மானாவாரியா குண்டு வீசித் தாக்க ஆரம்பிச்சது. நிறைய கொரில்லா வீரர்களை வீழ்த்தியதா கொக்கரிச்சது. உண்மையில கொரிலாக்களால நிறைய அமெரிக்க வீரர்கள் இறந்ததையும், பலர் துண்டைக் காணோம், துணியக் காணோம்னு ஓடினதையும் அமெரிக்கா மறைச்சுட்டது. ‘சமாதானமாப் போயிடலாமே. வடக்கு வியட்நாமை மட்டும் நீ வெச்சுக்கோ’ன்னு ஹோசிமினுக்கு தூது விட்டுச்சு. ‘சுதந்திர நாடே என் லட்சியம்’னு உறுதியா முழங்கினாரு ஹோசிமின்.

1968ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி தெற்கு வியட்நாம்ல முகாமி்ட்டிருந்த அமெரிக்கப் படைகள் புத்தாண்டுக் கொண்டாட்டத்துல இருந்த சமயம், சாதாரண மக்கள் போல ஊடுருவியிருந்த ஹோசிமினோட படைகள் திடீர்னு வெறித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டாங்க. அமெரிக்க தூதரக அலுவலகம் உட்பட கொரில்லாப் படையினர் கைப்பற்றிட்டாங்க. இந்த அவமானத்தையும் மூக்குடைப்பையும் சகிச்சுக்க முடியாத அமெரிக்கா, கட்டுப்பாடில்லாத வன்முறையக் கட்டவிழ்த்து விட்டுச்சு. கம்யூனிஸ்ட்னு சந்தேகப்படற அப்பாவி பொதுஜனங்களைக் கூட கேள்விமுறையில்லாம சுட்டுத் தள்ளினாங்க. வயசானவங்க, குழந்தைங்கன்னு எந்த இரக்கமும் பார்க்கல. அவ்வளவுதான்... அது‌வரைக்கும் ‌ஹோசிமினோட கொரில்லாப் படைகள்தான் போராடிக்கிட்டிருந்துச்சு. இப்ப பொதுமக்கள்லருந்து புத்தபிட்சுக்கள் கூட போராட ஆரம்பிச்சாங்க. ஒரு சின்ன கதறலோ, சத்தமோ இல்லாம புத்தபிட்சுக்கள் நடுரோட்ல தங்களைத் தாங்களே எரிச்சுககிட்டாங்க. இதையெல்லாம் டி.வி.யில பாத்த அமெரிக்க ஜனங்களே, தங்கள் அரசை குறை சொல்ல ஆரம்பிச்சாங்க.

அப்ப எலக்ஷன் டயம்ங்கறதால ‘வியட்நாம்லருந்து படைகளை விலக்கிக் கொள்வேன்’னு உறுதிமொழி தந்து ஜனாதிபதியானாரு நிக்ஸன். (பி்னனால வாட்டர்கேட் ஊழல்ல பேர் நாறின அதே ஆசாமிதாங்க). படைகளை விலக்கிக்கற மாதிரி பாவ்லா காட்டிக்கிட்டே, வியட்நாம் மேல தாக்குதலை தீவிரமாக்கி டபுள் கேம் ஆடினாரு அந்த பாவி மனுஷன்! ஏதோ உலகப் போர் ரேஞ்க்கு விமானங்கள் குண்டு மழை பொழிய... இடைவிடாத யுத்த பூமியாகவே தொடர்ந்தது வியட்நாம். இந்த நிலையிலதான் ஒரு பெரிய திருப்பம் வந்துச்சுங்க. 1972 மார்ச் மாசத்துல ‘நேப்பாம்’ங்கற கொடூரமான குண்டை அமெரிக்கா வீச, ஒரு வியட்நாமிய கிராமமே பத்தி எரிஞ்சுச்சு. அதுல தன் உறவுகளை இழந்த ஒரு சிறுமி, ஆடைகளை கழற்றிட்டு நிர்வாணமா கதறிக்கிட்டு ஓடி வந்த காட்சியும் அந்தச் சிறமியின் கதறலும் பாத்தவங்க அத்தனை பேர் மனசையும் உலுக்கிச்சு. (உலகப்புகழ் பெற்ற அந்தப் படம் இங்கே). அமெரிக்காவுலயே ஜனங்கள்ட்டருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்த அதேசமயம் உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவைக் கண்டிச்சுக் குரல் கொடுத்து பாய ஆரம்பிச்சுச்சு.

கடைசியில வேற வழியே இல்லாம எல்லாத் துருப்புகளையும் வாபஸ் வாங்கிக்கிட்டாரு அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன். வட வியட்நாம், தென் வியட்நாமோட இணைச்சு ஒரே சுதந்திர நாடாக மாறிச்சு. ஆனா விதியோட ‌கொடுமையான விளையாட்டு என்னன்னா... இதைப் பாக்கறதுக்கு ஹோசிமின் உயிரோட இல்ல. அதற்கு முன்னாலேயே இறந்து விட்டிருந்தார். அவர் இறந்தாலும் அவரோட புகழ் இறக்கலை. வெற்றிக்கு அருகாமை வரை தங்களை வழிநடத்தின அந்தத் தலைவனை மறக்காத வியட்நாம் மக்கள் ஒரு்ங்கிணைந்த வியட்நாமின் தலைநகரான சைகோனுக்கு ‘ஹோசிமி்ன் சிட்டி’ன்னு பேர் வெச்சு கெளரவப்படு்த்தினாங்க. ஹோசிமினோட மனஉறுதியும், தைரியமும், தன்னம்பிக்கையும் சாதிச்ச வெற்றி அது. இந்த மூணும் நம்மகி்ட்ட இருந்தா, நாமகூட சாதிக்கலாமுங்க!

Monday, February 25, 2013

தெரியுமா இவரை? - 3

Posted by பால கணேஷ் Monday, February 25, 2013
         
          நெப்போலியன் போனபார்ட் (Napoléon Bonaparte)

‘நெப்போலியன்’ அப்படின்னு சொன்னாலே ‘குடி’ மக்களுக்கு பிராந்தியும், சினிமா பிரி(வெறி)யர்களுக்கு ‘மாவீரன்’னு அடைமொழி வெச்சுக்கிட்ட ஒரு நடிகரும் நினைவுக்கு வருவாங்க. ஆனா உண்மையில ‘மாவீரன்’ங்கற அடைமொழிக்கு மிகப் பொருத்தமான ஒரிஜினல் மாவீரன் பிரான்ஸ் நாட்டில் பிறந்த நெப்போலியன் போனபார்ட்தாங்க!  மன்னர் மரபில் வந்தவர்கள் அரசாண்ட காலத்தில் சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒருவன் தேசத்திற்கு சக்கரவர்த்தியாக விளங்கினார் என்றால் அந்தப் பெருமை நெப்போலியன் போனபார்ட் ஒருத்தருக்குத்தாங்க சொந்தம்.

1769ம் வருஷம் ஆகஸ்ட் 16 பிரான்ஸ்ல கோர்சிக்கா என்ற :ஊர்ல பிறந்தாரு நெப்போலியன். அவரோட பெற்றோருக்கு இவரையும் சேர்த்து 13 பிள்ளைகள்.ராணுவப் பள்ளியில படிச்ச நெப்போலியன் புத்திசாலி மாணவனா இருந்தாரு. கணிதம், வரலாறு- புவியியல் ஆகியவை அவருக்குப் பிடித்த பாடங்கள். (அவ்வ்வ்வ்! படிக்கிற காலத்துல எனக்குல்லாம் அலர்ஜியா இருந்ததே இந்த சப்ஜெக்ட்டுங்கதாங்க...) 16 வயசுல படிப்பை முடிச்சுட்டு ராணுவத்துல ஆர்ட்டிலரி பிரிவுல சேர்ந்தாரு. 1796ம் ஆண்டுல டுலால் நகர்ல நடந்த யுத்தத்துல இணையற்ற வீரத்தைக் காட்டினதால இவருக்கு படைத் தளபதியா பதவி உயர்வு கிடைச்சது.

அதுக்கு மூன்றாண்டுகளுக்குப் பின்னால ‘பிரெஞ்சுப் புரட்சி’ன்னு சரித்திரத்துல சொல்லப்படற மிகப்பெரிய புரட்சியை நிகழ்த்தினதுல இவருக்கு முக்கியப் பங்கு இருந்துச்சு. அக்கம்பக்கமிருந்த ரஷ்யா, அமெரிக்கா மாதிரி பஞ்சாயத்து தலைவருங்க, இவரோட வளர்ச்சியப் பாத்துட்டு உஷாராகணும்னு நெனச்ச நேரத்துல.இவரு முந்திக்கிட்டு ராணுவப்புரட்சி மூலமா ஆட்சியைக் கைப்பற்றி, 1804ம் ஆண்டுல - அவரோட 35வது வயசுல - பிரான்ஸின் மன்னராக தனக்குத்தானே முடிசூட்டிக்கிட்டாரு நெப்போலியன். ‘‘இது என் உழைப்பில் கைப்பற்றியது. எனக்கு முடிசூட்டும் அருகதை எவருக்கும் இல்லை’’ன்னு சொன்னதை அவரோட தைரியம்னு நீங்க பாராட்டுனாலும் சரி... திமிருன்னு திட்டினாலும் சரி... அவர் செஞ்சதென்னமோ அதைத்தான்.

போர்த் திட்டங்களை வகுக்கறதுல இணையற்ற திறமை நெப்போலியனுக்கு இருந்துச்சு. அதனால அடுத்தடுத்து அவர் நிகழ்த்திய போர்கள்ல எல்லாம் வெற்றி வாகை சூடி இங்கிலாந்தைத் தவிர மற்ற எல்லா நாடுகளையும் வெற்றிகண்டு மொத்த ஐரோப்பாவையும் தன் கண்ட்ரோலுக்குள்ள கொண்டு வந்தாரு இந்த சாதனையாளர். நம்ம நாட்டாமை தீர்ப்பு சொல்வாரே... ‘இவங்களோட யாரும் அன்னந்தண்ணி பொழங்கக் கூடாது’ன்னு! அப்படி ‘இங்கிலாந்துடன் எந்த நாடும் வர்த்தகம் புரியக் கூடாதுன்னு சொல்லி Continental System-ங்கற ஒரு முறையக் கொண்டு வந்தாரு. இந்த நாட்டாமையோட தீர்ப்புக்கு எதிரா ரஷ்யா, இங்கிலாந்துகூட வர்த்தகம் பண்ணினதால கடுங்கோபம் அடைஞ்சு பெரும் படையோட (படைன்னா உடம்புலன்னு நெனக்காதீங்க. Big Armyங்கற அர்த்தத்துல சொல்றேன்) ரஷ்யாவை நோக்கி்ப் புறப்பட்டது இந்தச் சி்ஙகம்.

சிங்கத்துக்கு போர்த்தந்திரம் நல்லாத் தெரியும்ங்கறது வாஸ்தவம்தான். ஆனா நரியோட தந்திரம் அதைவிட உசத்தியானதாச்சே! மாஸ்கோ நகரத்துல எல்லா கட்டடங்களையும் நொறுக்கி தகர்த்துட்டு, தண்ணி கிடைக்கக் கூட வழியில்லாம பண்ணிட்டு, இரண்டரை ல்டசம் ரஷ்யர்களோட ‌எஸ்கேப்பாயிட்டாரு ரஷ்ய மன்னர் ஷா. மாஸ்கோவுல டென்ட்டடிச்சு, ஷா வந்து சரணடைவார், இல்ல தகவலாவது அனுப்புவார்னு ஒரு மாசம் முகாமிட்டாரு நெப்போலியன். மாச இறுதியில வந்தது... தகவல் இல்லீங்க, கடும் பனிக்காலம்! குளிர்னா உங்க வூட்டுக் குளிரு, எங்க வூட்டுக் குளிரு இல்ல... ரத்தமே உறைஞ்சு போற மாதிரி கடுங்குளிர்! டென்ட்டடிச்சு தங்கியிருந்த நெப்போலிய‌னோட படைகளுக்கு டப்பா டான்ஸாடிடுச்சு. நரியோட தந்திரத்தை தாமதமாப் புரிஞ்சுக்கிட்ட நெப்போலியன், நாட்டுக்குத் திரும்ப உத்தரவி்டடாரு. வழியெல்லாம் குளிரும், பசியும், தாகமும் வாட்ட படை வீரர்கள்ல பெரும்பகுதி இறந்தாங்க. உணவு கிடைக்காம அவங்க பயணம் செஞ்ச குதிரைகளையே வெட்டித் தின்னாங்கன்னா... எவ்வளவு கஷ்டம்னு யூகிச்சு்க்கங்க. சுமார் 6 லட்சம் வீரர்களோட புறப்பட்ட நெப்போலியன் வெறும் 20 ஆயிரம் வீரர்களோட நாடு திரும்பினாருங்க ஐயோ பாவமா!

‘சரிதான்பா... பலவீனமா இருக்கற இந்த சிங்கத்தை இப்பக் காலி பண்ணினாத்தான் .உண்டு’ன்னு முடிவு பண்ணி, பிரிட்டன், ரஷ்யா, ஆஸ்திரியா, ஸ்வீடன் ஆகியவற்றின் கூட்டுப்படைகள் பிரான்ஸ் மேல போர் தொடுத்தன. இந்தப் போர்ல தன்னோட வாழ்க்கைல முதல் முதலா தோல்வியைச் சந்திச்சாரு நெப்போலியன். அவரைக் கைது பண்ணி ‘எல்பா’ங்கற தீவுல சிறை வெச்சாங்க. சிங்கத்தைச் சிறையில வெச்சா என்ன நடக்கும்...? சிங்கம் சிறையவே சிதைச்சுட்டு ஒரே வருஷத்துல தப்பி வந்துடுச்சு. பிரான்ஸ் மக்கள் அவரை சக்ரவர்த்தியா மீண்டும் ஏத்துக்க, புதிய படையை உருவாக்கினார் நெப்போலியன். அடுத்த இரண்டு வருடங்களுக்குப் பின்னால பிரிட்டனும், அதன் நட்பு நாடுகளும் மீண்டும் நெப்போலியனுக்கு எதிரா அணி திரண்டு படையெடுத்து வந்தாங்க. வாட்டர்லூ என்கிற இடத்தில நடந்த அந்த சரித்திரப் புகழ் பெற்ற போரில் நெப்போலியன் இட்ட ஆணைகளை அவர் தளபதிகள் சரியா நிறைவேற்றாததால இன்னொரு முறையும்  (இறுதித் தோல்வி) நெப்போலியன் தோல்வியைச் சந்திச்சாரு.

இம்முறை அவரை செயின்ட் ஹெலினாங்கற தீவுல சிறை வெச்சாங்க. அந்தச் சிறையில இருக்கறப்பதாங்க நெப்போலியனுக்கு கடுமையான வயிற்று வலியும் மனச் சிதைவும் ஏற்பட்டுருச்சு. (வயிற்றுப் புற்றுநோய்னும் சொல்றாங்க.) ரொம்பவே கஷ்டப்பட்ட அவர், ஆறு ஆண்டுகள் அந்தச் சிறையில வாடினாரு. 1821ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி நெப்போலியன்ங்கற மாவீரனோட வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி விழுந்துச்சு.

பிரான்ஸ் மக்களோட பேராதரவோட நெப்போலியன் சக்கரவர்த்தியா திகழ்ந்ததற்குக் காரணம், நாட்டை அவர் ஆண்ட விதம். புதிய வீதிகளை உருவாக்குதல், பாலங்கள் கட்டுதல், தண்ணீர் விநியோகத்தை சீரமைத்தது, வேலைவாய்ப்பில் தன்னிறைவு அடையச் செய்தது, பொருளாதார மற்றும் அரசியல் சட்டங்களில் சீர்திருத்தம் செய்ததுன்னு போர் வெற்றிகளைத் தவிர அவர் சாதிச்சது நிறைய. ‘சட்டத்துக்கும் முன் யாவரும் சமம்’ங்கற விஷயத்தை தீவிரமா கடைப்பிடிச்சாரு நெப்போலியன்.

‌மாவீரன் நெப்போலியன் கிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயங்கள் ரெண்டு: 1. புத்தகங்கள் வாசிப்பதில் நெப்போலியன் ஒரு தீவிரவாதி. நிறையப் புத்தகங்கள் படிக்கிற அவரு ஒரு நாளைக்கு நாலு மணி நேரம்தான் தூங்குவார்னு கேள்வி. 2) ‘முடியாது என்ற வார்த்தையே என் அகராதியில கிடையாது’ -இது நெப்போலியனின் தாரக மந்திரம். இந்த ரெண்டைத் தவிர, துணிச்சல், தன்னம்பிக்கை போன்ற விஷயங்களையும் நாம அவர் வாழ்க்கைலருந்து எடுத்து நம்முடையதாக்கிக்கலாம். என்ன... நாஞ் ‌சொல்றது சரிதானே...!

Wednesday, February 6, 2013

தெரியுமா இவரை...! - 2

Posted by பால கணேஷ் Wednesday, February 06, 2013

                 ஸோய்சிரோ ஹோண்டா (Soichiro Honda)

1906 நவம்பர் 17ல் ஜப்பானில் சைக்கிள் ரிப்பேர் செய்யும் தந்தைக்கும், நெசவாளியான தாய்க்கும் பிறந்த சோய்சிரோ ஹோண்டோவின் இளமைப் பருவத்தில் குறிப்பிடும்படி ஒன்றுமில்லீங்க. இளைஞன் ஹோண்டா வசதிக்குறைவாக இருந்தாலும் என்னைப் போல மிகத் திறமைசாலியாக இருந்தாருங்கோ. (ஹி... ஹி...) தன் 15வது வயதிலேயே படிப்பை நிறுத்திட்டு... (அவரா எங்க நிறுத்தினாரு? அது மண்டைல ஏறாததால விட்டுட்டாரு) வேலை தேடி டோக்கியோ வந்தாரு.

ஒரு காரேஜில் மெக்கானிக்காகச் சேர்ந்து தொழில் கத்துக்கிட்டாரு. காங்கிரசும் கோ்ஷ்டிப் பூசலும் மாதிரி எதையும் ஆராய்ஞ்சு பாக்கறது அவரோட இணைஞ்ச தனிக்குணம். மோட்டார் பைக்குகளை அக்கக்கா பிரிச்சு மறுபடி சேர்க்கற அளவுக்கு தொழில் கத்துக்கிட்டாரு. அங்க ஆறு வருஷம் வேலை பாத்தாரு. அப்புறமென்ன...  தனிக்கட்சி ஆரம்பிக்க... ச்சே... தனியா ஆட்டோமோபைல் ஆரம்பிக்கணும்னு அங்கருந்து விலகினாரு. ஆறு வருஷம் கழிச்சு தன் 22வது வயதில் 1928-ம் ஆண்டு தனியாக ஆட்டோமொபைல் காரேஜ் வைத்து நடத்த ஆரம்பிச்சுட்டாரு.

ஹோண்டா தனக்கிருந்த ஆராய்ச்சி அறிவின் காரணமாக, ஒரு பிஸ்டனைக் கண்டுபிடிச்சிருந்தாருங்க. அதை கார்கள்ல பொருத்தினா வேகமாக இயங்க உதவுவதுடன், எரிபொருள் சேமிப்புக்கும் உதவுவதை டெஸ்ட் பண்ணிப் பாத்து தெரிஞ்சுக்கிட்டாரு. அதை டொயோட்டோ கம்பெனியில் வித்துரணும்னு விரும்பி அணுகினார். மிகப்பெரிய நிறுவனமான டொயோட்டோவின் இன்ஜினியர் குழுவைச் சந்தித்து தன் பிஸ்டனைப் பற்றி விளக்க முயற்சி பண்ணினாரு.
இவர் மிஸ்டர் ஹோண்டா.

அந்த இன்ஜினியருங்க எல்லாம் இவர் சொல்றதை காது கொடுத்துக் கேக்கவே தயாராயில்லை. சிலர் விழுந்து விழுந்து சிரிச்சாங்க. சிலர் உஷாரா விழாம சேரைப் புடிச்சுக்கிட்டு உக்காந்துட்டு சிரிச்சாங்க. அப்புறம், ‘‘போய் புள்ளைகுட்டிங்களைப் படிக்க வைய்யா...’’ என்று அவரை அவமானப்படுத்தி விரட்டினாங்க.

தன் முயற்சியில சற்றும் மனம் தளராத.... விக்கிரமாதித்தனில்லை, ஹோண்டா மீண்டும் மீண்டும் டொயோட்டாவின் மீது படையெடுத்தாருங்க. ஒரு வாரமில்ல... ஒரு மாசமில்ல... ஒரு வருஷம்! கடைசில இன்ஜினியர் குழு இவர் சொல்றதுக்கு காது குடுத்தது (வேற என்னத்தப் பண்ண? இவர் தொல்லை விட்டா சரின்னுதான்...). இவர் பொறுமையா தன் பிஸ்டனோட சிறப்பம்சங்களை விளக்கி டெமோ காட்டவும் அசந்துட்டாங்க. மேலிடத்துல பேசி, அவருக்கு பிஸ்டன் தயாரிச்சுத் தர்ற கான்ட்ராக்ட் தந்தாங்க.

இங்கதாங்க ஆரம்பிக்குது ‌ஹோண்டாவின் வியக்க வைக்கும் ‘விஸ்வரூப’க் கதை! பிஸ்டன்கள் தயாரிக்கறதுக்காக ஒரு ஃபாக்டரியை நிர்மாணிக்க ஆரம்பிச்சாரு ஹோண்டா. ஃபாக்டரி முக்கால்வாசி கட்டப்பட்ட நிலையில தானா இரண்டாம் உலகப் போர் ஏற்படணும்? அதுல ஜப்பான் மீது வீசப்பட்ட பல குண்டுகள்ல ஒண்ணு சரியா இவர் ஃபாக்டரி மேலயா விழுந்து வைக்கணும்? முற்றிலுமாக அழிஞ்சு போனது ஃபாக்டரி. ஹோண்டா கொஞ்சம் அப்செட்டானாருங்க...

ஆனாலும் மனம் தளராம மறுபடி பணம் திரட்டி, ஃபாக்டரியை மீண்டும் நிர்மாணிக்க ஆரம்பிச்சாரு. இந்த முறை ஃபாக்டரி முழுமையாக உருவெடுத்து, இன்னும் ரெண்டு நாள்ல உற்பத்திய ஆரம்பிச்சுடலாம்னு இருக்கற சூழ்நிலையில வந்துச்சுங்க அடுத்த சோதனை. ஜ்ப்பானுக்கு அடிக்கடி விருந்தாளியா வந்து பாடாப் படுத்தற நிலநடுக்கம் ஏற்பட, ஹோண்டாவோட ஃபாக்டரி முழுவதுமா இடிஞ்சு விழுந்துடுச்சு.

அடுத்தடுத்து இப்படி மெகா சோதனைகளை சந்திச்சிருந்தா நாமளாயிருந்தா, ‘கடவுளே நீ இல்ல. ஆனா இருந்தா நல்லாயிருக்கும்’னு கடவுளைத் திட்டியிருப்போம். இல்லாட்டி, மனசு உடைஞ்சு போயி, பாருக்கோ, டாஸ்மாக்குக்கோ ஓடியிருப்போம். அங்கதான் நிக்கிறாரு ஹோண்டா. மனசைத் தேத்திக்கிட்டு, தன் நண்பர்கள், தெரிந்தவர்களிடமெல்லாமிருந்து பணம் திரட்டி, தன்கிட்ட இருந்த சொற்ப சொத்துக்களையும் வித்து மீண்டும் ஃபாக்டரியை எழுப்பினாரு. இவ்வளவுக்கப்புறம் இவரை இயற்கை சோதிக்கலை. இந்த முறை ஃபாக்டரி முழுசா தயாராச்சு.

உற்பத்தி ஆரம்பிச்சு, டொயோட்டோ கம்பெனிக்கு பிஸ்டன்கள் சப்ளை பண்ண ஆரம்பிச்சாரு. சில காலம் கழிச்சு தன் கம்பெனியை 450,000 யென்னுக்கு டொயோட்டோ நிறுவனத்து கிட்டயே வித்துட்டாருங்க. அந்தப் பணத்தை வெச்சு 1946-ல ‌‘ஹோண்டா டெக்னிகல் ரிஸர்ச் இன்ஸ்டிட்யூட்’ங்கற நிறுவனத்தை ஏற்படுத்தினாரு. அதன் பின்னர் 1948ம் ஆண்டுல ‘ஹோண்டா மோட்டார் கம்பெனி’ தயாரிச்ச மோட்டார் பைக்குகள் விற்பனைக்கு வந்தன.

இது ஹோண்டா கம்பெனி பைக்!
அப்புறமென்னங்க... அண்ணாமலை ரஜினி அப்படியே லிஃப்டில ஏறுற நேரத்துல வாழ்க்கைல மேல ஏறுவாரே... அதுமாதிரி தாங்க... அதுக்கப்புறம் ஹோண்டாவோட பிரம்மாண்டமான வளர்ச்சி நிறுத்த முடியாததாயிடுச்சு. ஒரு கட்டத்துல டொயோட்டோவையே மிஞ்சி கார் சந்தையில முத்திரை பதிச்சது ஹோண்டா நிறுவனம். இன்னிக்கு இன்டர்நேஷனல் மார்ககெட்டில ஹோண்டா நிறுவனத்தின் கார்களும், பைக்குகளும் என்ன மதிப்பில இருக்குங்கறது உங்களுக்கெல்லாம் நல்லாவே தெரிஞ்ச விஷயம். 

1973ம் ஆண்டு ரிடையராகும் வரை ஹோண்டா நிறுவனத்தின் பிரஸிடெண்ட்டா இருந்த அவர், அதன் பி்ன், ‘சுப்ரீம் அட்வைஸர்’ என்கிற உச்சப் அந்தஸ்துல ஹோண்டா நிறுவனத்துல தொடர்ந்தார். 'PEOPLE' பத்திரிகை 1980ல் அவரை '25 Most Intriguing People of the Year' என்ற பட்டியல்ல முதலிடம் அளிச்சும், ‘ஜப்பானியர்களின் ஹென்றிபோர்ட்’ என்று புகழ்ந்தும் கெளரவிச்சது. கல்லீரல் செயலிழந்ததன் காரணமா 5, ஆகஸ்ட்1991ல ஹோண்ட காலமானாரு.

போண்டான்னா விரும்பிச் சாப்பிடற நாம எல்லாரும் இந்த ஹோண்டா கிட்ட இருந்து அயராத தன்னம்பிக்கையையும், உழைப்பையும், பாஸிடிவ் திங்கிங்கையும் கைப்பற்றிக்கணும்ங்கறது என்னோட விருப்பம்! நீங்க என்ன நினைக்கறீங்க...?

Friday, February 1, 2013

தெரியுமா இவரை...!

Posted by பால கணேஷ் Friday, February 01, 2013

                                பெனிட்டோ முசோலினி!

லகததையே அஞ்சி நடுங்க வைச்ச சர்வாதிகாரிகள்ல ஹிட்லருக்கு அடுத்தபடியா பிரபலமானவரு முசோலினி. என்னது... ஹிட்லரு யாரா..? அதாங்க நம்ம சார்லி சாப்ளின் மாதிரியே தோற்றத்துல இருப்பாரே... அவருதான். சாப்ளின் நிறையப் பேருக்குத் தநதது சிரிப்பு, ஹிட்லர் நிறையப் பேருக்கு்த் தந்தது இறப்பு! அவ்வளவுதாங்க வித்தியாசம்! மனிதாபிமானம் இல்லாத கொடூரன் ஹிட்லரைப் போலவே இன்னொருத்தர் முசோலினி.

முசோலினி
ஜெர்மனியில சர்வாதிகாரியா இருந்த ஹிட்லர் சின்ன வயசுல தான் ஒரு ஓவியரா வரணும்னு ஆசைப்பட்டாரு. 1922 முதல் 21 ஆண்டு காலம் இத்தாலியை ஆட்டிப் படைச்ச சர்வாதிகாரி முசோலினி ஒரு பள்ளிக்கூட வாத்தியாரா இருந்தவரு. அவரோட ஆசை நிறைவேயிருக்கலாம்; இவரோட கல்விப் பணி(?) தொடர்ந்திருக்கலாம். அப்படி ஆகியிருந்தா உலக வரலாறே வேற மாதிரி ஆயிருக்கும். இவங்க ரெண்டு பேரும் சர்வாதிகாரிகளாப் பரிணமி்ச்சதை விதியின் விநோத விளையாட்டுன்னுதான் சொல்லணும்.

நாம முசோலினியை கவனிப்போம். இத்தாலியில1883ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி முசோலினி பிறந்தாரு. (பிறந்திருக்கணுமா?)  அவரோட அம்மா ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. அப்பா இரும்புப் பட்டறை வெச்சிருந்த ஒரு கொல்லர். அவர் சரியான அரட்டைப் பேர்வழிங்க. வர்றவங்க போறவங்ககிட்ட எல்லாம் இத்தாலியில மன்னர் ஆட்சி ஒழிஞ்சு மக்கள் ஆட்சி மலரணும்னு டீக்கடை பெஞ்சல உக்காந்து அரட்டையடிக்கிற மாதிரி சதா அரசியல் பேசிட்டிருப்பாரு. சின்ன வயசுல மனசுல பதியறது சுலபத்துல மாறாதும்பாங்க. அப்பாவைக் கூர்ந்து கவனிச்சுட்டு வந்த முசோலினிக்கு அப்பவே அரசியல்ல ஈடுபாடு வந்துட்டது. நல்ல பேச்சுத் திறமையும், எழுத்துத்த திறமையும் முசோலனிக்கு இருந்தது அவருக்கு ப்ளஸ். கூடவே லத்தீன், பிரெஞ்சு, ஜெர்மனி, ஸ்பானிஷ் ஆங்கிலம்னு பல மொழிகளை வேற கத்து வெச்சிருந்தாரு.

தன் படிப்பை முடிச்சதும் கொஞ்ச காலத்துக்கு வாத்தியாரா பணியாற்றினாரு முசோலினி. பசங்ககிட்ட அப்ப எவ்வளவு சர்வாதிகாரம் செலுத்தினாருன்றதெல்லாம் தெரியல. கொஞ்ச நாள்லயே அவருககு அந்த வேலை போரடிச்சுட்டுது. எத்தனை நாளைக்குத்தான் பசங்களையே போட்டு அடிச்சிட்டிருக்கறது...? ஒரு சேஞ்சுக்கு ஆளுங்களை போட்டுத் தள்ளுவோமேன்னு தோணவும் ராணுவத்துல சேர்ந்துட்டாரு. கொஞ்ச காலம் ராணுவத்துல இருந்த பின்னாடி அதுவும் போரடிக்குதுன்னு அங்கருந்து விலகி ஒரு பத்திரிகை நிறுவனத்துல ‌வேலைக்குச் சேர்ந்தாரு. பயம்கறதே இல்லாத இந்த மனுசன், காரசாரமா எழுதின அரசியல் கட்டுரைகள் பெரிய பரபரப்பை உண்டாக்கிச்சு. அவர் எழுதின ஒரு கட்டுரைக்காக ஓராண்டு ஜெயில் தண்டனை அனுபவிச்சார்னா பாத்துக்‌கங்க... (இதே இவர் சர்வாதிகாரிய இருந்த சமயம்னா, அப்படி எழுதின நிருபரை ஜோலிய முடிச்சிருப்பாரு....)

முசோலினி - ஹிட்லர்
1914ம் ஆண்டுல முதலாம் உலகப் போர் ஆரம்பிச்சிச்சு. அப்போ மறுபடியும் ராணுவத்துல போய்ச் சேர்ந்தாரு முசோலினி. இதே காலகட்டத்துலதான் ஜெர்மன்ல ஹிட்லர் ராணுவத்தில சேர்நதாருங்கறது குறிப்பிடத்தக்க விஷயமுங்க. அப்படிச் சேர்ந்த இவங்க ரெண்டு பேரும் பின்னால 1939ம் ஆண்டுல இரண்டாம் உலகப் போர் மூண்டபோது ஜெர்மனிக்கும், இத்தாலிக்கும் தங்களின் கடின முயற்சியால(?) சர்வாதிகாரியா ஆகியிருந்தது பெரிய ஆச்சரியக்குறிதான்!  இந்த இரண்டாம் உலகப் போர்ல ஹிட்லரும் முசோலினியும் ஒரே அணியில இருந்து (ஒண்ணு கூடிட்டாங்கய்யா.... ஒண்ணு கூடிட்டாய்ங்க...) நேச நாடுகளை ‌எதிர்த்தாங்க. ஆரம்பத்துல இவங்க கூட்டணிக்கு வெற்றிமேல வெற்றி தாங்க கிடைச்சது. எந்தக காலத்திலயும் அயோக்கியங்க நிரந்தரமா ஜெயிக்கறதில்லைங்கறதுதானே வரலாறு...! இப்பவும் அப்படித்தாங்க போரோட போக்கே பின்னால மாறி, ஹிட்லருக்கும் முசோலினிக்கும் தோல்விகள் தொடர ஆரம்பிச்சது.

சரி... தோல்வி ஆயிப்போச்சு. இனி ஜனங்க கிட்டயோ, புரட்சிப் படை கிட்டயோ மாட்டினா ஆபத்துதான்கறதைப் புரிஞ்சுக்கிட்ட முசோலினி தன் காதலி கிளாரா பெட்டாசியைக் கூட்டிக்கிட்டு ஒரு வேன்ல தப்பிக்க முயற்சி பண்ணினாரு. (லூசு! ஹிட்லர்கிட்ட ஐடியா கேட்ருக்கலாம்) 1945ம் ஆண்டு ஏப்ரல் 26 அதிகாலையில எல்லையைக் கடக்க முயற்சி பண்றப்ப புரட்சிப் படை அவங்களை மடக்கிடு்ச்சு. முசோலினியை அவர் காதலியோட சேர்த்து கீழ இறக்கினாங்க. தன்னோட முடிவு நெருங்கிட்டதை உணர்ந்துக்கிட்ட முசோலினி, ஒரு சர்வாதிகாரி செய்யக்கூடாத காரியத்தை செஞ்சாரு. புரட்சிப் படை முன்னால மண்டியிட்டு, ‘‘என்னைக் கொன்னுடாதீங்க...’’ன்னு கெஞ்ச ஆரம்பிச்சாரு. (அப்போ பயத்துல பேண்ட்லயே ‘சுச்சா’ போயிட்டாராம்)

எப்பவுமே கொடுக்கறதுதானே திரும்பக் கிடைக்கும்கறது உலக நியதி? இவர் யார் மேலயாவது இரக்கம் காட்டியிருந்தா தானே இவர் மேல மத்தவங்க இரக்கம் காட்டறதுக்கு...? அவங்க தங்க தோட்டாக்களால (தங்கத்துல தோட்டா இல்லங்க, தங்களோட தோட்டான்னு பொருள்‌ கொள்க) முசோலினியையும், அவர் லவ்வரையும் சல்லடையாத் துளைச்சு அவங்களோட உடலை மிலான் நகர்ல நடுவீதியில போட்டுட்டாங்க. அந்த உடல்கள் மேல ஜனங்கள் எல்லாம் காறித் துப்பியும், ‘சுச்சா’ போயும் அவமானப்படுத்தினாங்க. அவ்வளவு கேவலப்பட்ட பின்னால அந்த உடல்களை ஒரு கம்பத்துல தலைகீழாக் கட்டித் தொங்க விட்டுட்டாங்க.

இவரோட ஒப்பிடறப்ப ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லர் புத்திசாலிங்க. தோல்வி நெருங்கினதை உணர்ந்ததும், ஒரு பாதாள அறைக்குள்ள தன் காதலி ஈவா ப்ரெளனோட போய்ப் பதுங்கினவரு, அங்கயே தற்கொலை பணணிக்கிட்டாரு. முசோலினிக்கு நடந்த கேவலம் அவருக்கு நடக்காம தப்பிச்சுட்டாரு அந்த ராட்சசன். எது எப்படியோ... உலகையே மிரட்டுற சர்வாதிகாரிகளோட கடைசிக்காலம் மிகக் கொடூரமானதாக இருக்கும்கறதுக்கு முசோலினி ஒரு மிகப்பெரிய உதாரணம்!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube