உணவு என்கிற விஷயத்தில் தென்னிந்தியர்கள் எடுத்துக் கொள்ளும் அக்கறையை வேறு எந்த நாட்டவரும் எடுத்துக் கொள்வதில்லை என்பது என்னுடைய கருத்து. நார்த் இன்டியன் ஃபுட், சைனீஸ், ஃபுட், கான்டினென்டல் ஃபுட் என்று எத்தனையோ விதவிதமான உணவு முறைகள் இருந்தாலும் நம் தென்னிந்திய உணவு முறைகளை அடித்துக் கொள்ள முடியாது. நம் உணவு வகைகளில்தான் எத்தனை எத்தனை வெரைட்டிகளில் டிபன் ஐட்டங்கள், சாப்பாட்டு ஐட்டங்கள்...! இப்போதும் பரிசோதனை முயற்சியாகச் செய்து புதிய புதிய விதங்களி்ல் சமையல் குறிப்புகள் நிறையக் கண்களில் படுகின்றன. உணவு சாப்பிடுவது என்பது பசியைப் போக்குவதற்காக மட்டுமின்றி, ரசனை சார்நததாகவும் அமைத்துக் கொள்ளலாம்.
‘புதிய பறவை’ திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். ‘‘நல்லா இருக்குன்னு சொல்றோமே... அது நல்ல ரசனையிலிருந்துதான் உருவாகுது. எல்லாத்துக்கும் ரசனைதான் அடிப்படை’’ என்பார் சிவாஜி. உணவின் சுவையானது உணவுப் பொருளைத் தேர்ந்தெடுப்பதிலும், அதை சுத்தம் செய்வதிலும், கழுவுவதிலும், சமையலில சேர்க்கும் உப பொருட்கள் எந்த அளவில் சேர்க்கப்படுகின்றன, எந்த உஷ்ண நிலையில் சமைக்கப்படுகின்றன என்பதில்தான் அமைந்திருக்கிறது. மற்றபடி, ‘எங்கம்மாவின் கைப்பக்குவம் வராது’ ‘என் மனைவி செஞ்சா ஊரே மணக்கும்’ என்பதெல்லாம் சுத்த ஹம்பக்தான்!
 |
| ரஜினியோட எக்ஸ்ப்ரஷனை பாருங்க..! |
‘நித்தம் நித்தம் நெல்லுச் சோறு; நெய் மணக்கும் கத்தரிக்காய்; நேத்து வெச்ச மீன் குழம்பு என்னை இழுக்குதய்யா, நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு வந்து மயக்குதய்யா...’ என்று துவங்கும் பாடலில் தான் ரசிக்கும் சாப்பாட்டு ஐட்டங்களை கதாநாயகி பாடுவதாக கவிஞர் (யார்?) எழுதியிருப்பார் பாருங்கள்... ரசிகரய்யா! அவரையம் விஞ்சும் வண்ணம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தன்னுடைய ‘கடல்மேற்க குமிழிகள்’ என்ற நாடகக் காப்பியத்தில் உணவைப் பற்றியும் பாடியிருக்கிறார் இப்படி:
‘‘கத்தரிப் பொரியலும், கரும் பாகற்குழம்பும்
புத்துருக்கு நெய்யும், பொன்னிறப் பருப்பும்,
மிளகின் சாறும், புளியாத தயிரும்,
அனைவர்க்கும் நிகரே! ஆயினும் மின்னொளி
உனக்கொன் றதிகள்’’ என்றுரைத்தான் வையன்.
‘‘என்ன?’’ என்றாள் மின்னொளி.
சின்னதாய் முத்தம் தந்தான்-
அன்னதனோடே அருந்தினாள் விருந்தே!
என்ன ஒரு ரசனை! கிடைத்தால் இப்படி முத்தத்தோடு உணவருந்தி சமையலோடு சேர்த்து காதலையும் வளருங்கள். (ஹோட்டல்ல யார்ட்டயாவது கேட்டு நீங்க அடி வாங்கினா, நான் பொறுப்பில்ல... பாரதிதாசன்தான் பொறுப்பு!) கரும்பாகற் குழம்பு என்றால் என்னவென்ற யோசித்ததில் வற்றல் குழம்பைத்தான் சொல்லியிருக்கிறாரோ என்று தோன்றியது. வற்றல் குழம்புடன் சுட்ட அப்பளமும், பருப்புத் துவையலும் கிடைத்தால் எனக்கு அமிர்தம்தான்!
இப்படி உணவு வகைகளுக்கு அவைகளுக்கேற்ற சரியான காம்பினேஷன் அமைந்து விட்டால், மூக்குப் பிடிக்கத் தின்றாலும் சரி, அளவோடு சாப்பிட்டாலும் சரி... பசியோடு நல்ல ருசியையும் அனுபவிக்கலாம். குழாய்ப் புட்டு என்கிற ஒரு ஐட்டம் எனக்கு மிகப் பிடித்தமானது. அதனோடு வாழைப்பழத்தைப் பிசைந்து சாப்பிடலாம். கொண்டைக் கடலை மசாலா இருந்தால் அதைச் சேர்த்தும் சாப்பிடலாம். ஒருமுறை உணவகத்தில் ஒருவர் அதைப் பாலில் கலந்து சாப்பிடுவதைக் கண்டு வியந்தேன். ஆப்பம் என்கிற ஒரு ஐட்டத்துக்குத்தான் தேங்காய்ப்பால் சரியாக வரும் என்பது அதுவரை என் கருத்தாக இருந்தது.

இப்படி விதவிதமான காம்பி னேஷன்களைக் கண்டுபிடித்துச் சாப்பிடுவதும் ஒரு தனி சுவாரஸ்யம்தான். இல்லாமலா பின்னே, ‘கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்’ என்கிற பாடலில் விதவிதமான சாப்பாட்டு காம்பினேஷன்களை அப்படி விளக்கியிருப்பார்கள்? அத்தனை வகைகளையும் கடோத்கஜன் சாப்பிடுவது போல் சாப்பிட்டால் நம் வயிறு என்னாகும் என்பது வேறு விஷயம். நான் சொல்ல வந்தது ரசித்துச் சாப்பிடுவது என்பதைத்தான்.
உணவை ரசித்துச் சாப்பிடும் விஷயத்தில் கூட சில மேனர்ஸ் கடைப்பிடிக்க வேண்டுமென்பதும் என் கருத்து. என் நண்பன் ஒருவன் சாப்பிடும் போது டிடிஎஸ் சவுண்ட் எபெக்ட் போல ‘சபக் சபக்’ என்று மெல்லும் சத்தம் என் காதுகளைக் குடையும். அவனோடு உணவருந்துவதை பின்னாட்களில் தவிர்த்து விட்டேன். சாம்பாரையோ, ரசத்தையோ, பாயசத்தையோ கல்யாண வீடுகளில் பரிமாறப்படும் போது ‘சர்’ரென்று சத்தம் எழ உறிஞ்சுபவர்கள் என் அருகில் அமர்ந்து தொலைத்து விட்டால் பாதிச் சாப்பாட்டில் எழுந்து விடுவேன். (தலையெழுத்து! பலமுறை அப்படி அமைந்து விடுகிறது). மற்றவர்களுக்கு உறுத்தாமல் வெகு நளினமாகச் சாப்பிடும் கலை நம்மவர்களில் பலருக்கு இன்னும் கைவரப் பெறவில்லை என்பதே என் கருத்து.
அடை- அவியல், பூரி -கிழங்கு, வெஜிடபிள் பிரியாணி... சொல்லிக் கொண்டே போனால் லிஸ்ட் மிக நீண்டு விடும். இப்படி சாப்பிடுவதில் பிடித்த ஐட்டங்கள் பல இருந்தாலும் எனக்கு எப்போதும் சம்மதமானது தோசைதான். சில நேரங்களில் மதிய உணவு நேரம் தாண்டிவிட்டால் தோசை சாப்பிட்டே பொழுதை ஓட்டிவிடுவேன். சட்னி, சாம்பார், தோசை என்கிற இந்தக் காம்பினேஷன் எனக்கு எந்த நேரத்திலும் எந்த சீதோஷ்ண நிலையிலும் சம்மதமான, ஒத்துக் கொள்ளக் கூடிய விஷயமாக இருந்து வருகிறது.
உணவு விஷயத்தில் என் நிலைப்பாடு இது. உங்களின் கருத்து எது?
பின்குறிப்பு : இதைப் படித்ததும் எனக்கு எதுவும் பட்டம்(?) வழங்கலாமா என்று யாரும் யோசிக்க வேண்டாம். அடுத்து நான் ‘அழகு’ பற்றிய என் கண்ணோட்டத்தை எழுதும் போது என்ன பட்டம் தருவதென்று நீங்கள் திருதிருவென்று முழிக்க நேரிடும். கபர்தார்!
மேய்ச்சல் மைதானத்தில் இப்போது :
கத்தரித்தவை-8