Saturday, December 10, 2011

மீசைக்காரனின் சிந்தனைகள்..!

Posted by பால கணேஷ் Saturday, December 10, 2011
சுப்பிரமணிய பாரதி! மகாகவி என்ற சொல்லுக்கு மேல் ஏதாவது இருந்தால் அந்தப் பட்டத்துக்கும் தகுதியானவர். கண்ணன் கவிதைகளில், குயில் பாட்டில் தென்றலாய் வீசியவர்; தேசபக்திப் பாடல்களில் புயலாய்ச் சீறியவர்; வசன கவிதை என்ற ஒன்றை எழுதி, இன்றைய புதுக் கவிதைக்கு பிள்ளையார் சுழி போட்ட பிதாமகன்; உரைநடைத் தமிழையும் ஒரு கை பார்த்தவர். பாட்டுக்கொரு புலவன் பாரதியின் பிறந்த தினம் டிசம்பர் 11. இத்தருணத்தில் அவரது உரைநடையில் என்னைக் கவர்ந்த வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்கிறேன்.

• தனக்கேனும் பிறர்க்கேனும் துன்பம் விளைவிக்கத்தக்க செய்கை பாவம். தனக்கேனும் பிறர்க்கேனும் இன்பம் விளைவிக்கத்தக்க செய்கை புண்ணியச் செயல் எனப்படும்.

* எப்போதும் பாடுபடு. எப்போதும் உழைத்துக் கொண்டிரு. உழைப்பிலே சுகம் இருக்கிறது. வறுமை, நோவு முதலிய குட்டிப் பேய்கள் எல்லாம் உழைப்பைக் கண்டால் ஓடிவிடும்.
• உழைப்பு எப்போதும் உண்டு. இதிலே ‘நான்’ என்ற பாரத்தை நீக்கிவிட்டு உழைத்தால், வேலை கிறுகிறு என்று வேகமாகவும், பிழை இல்லாமலும் நடக்கும். தன்னைத் தூக்கித் தலையிலே வைத்துக் கொண்டு வேலை செய்தால் வேலை குழம்பும்.

* தேசாபிமானம் கற்பியாத கல்விமுறை வெறும் மண்ணாகுமேயன்றி ஒன்றுக்கும் பயன்படாது.

* அச்சமே மடமை; அச்சம் இல்லாமையே அறிவு. அன்பே தெய்வம். அன்பு இருந்தால் குழந்தையும் தாயும் சமானம்; ஏழையும் செல்வனும் சமானம்; படித்தவனும் படியாதவனும் சமானம்; அன்பு இருந்தால் மனிதனும் தெய்வமும் சமானம். அன்பு பூமியிலேயே மேலோங்கி நிற்கும்.

• அன்பே தெய்வம். அன்பு இருந்தால் குழந்தையும், தாயும் சமானம்; ஏழையும், செல்வமும் சமானம்; படித்தவனும், படியாதவனும் சமம். அன்பு இருந்தால் மனிதனும் தெய்வமும் சமானம். அன்பு பூமியிலே மேலோங்கி நிற்கும்.

* வீட்டிலும் வெளியிலும் தனிமையிலும் கூட்டத்திலும் எதிலும் எப்போதும் நேர்மை  இருக்க வேண்டும். உண்மை இருக்க வேண்டும்.

* எதற்கும் கவலைப்படாதே. கவலைப்படாது இருத்தலே முக்தி. கவலைப்படாது இருந்தால்தான் இவ்வுலகத்தில் எந்த நோயும் வராது. எவ்வித ஆபத்தும் நேராது. தவறி எவ்வித நோய் அல்லது எவ்வித ஆபத்து நேர்ந்த போதிலும் ஒருவன் அவற்றுக்குக் கவலையுறுவதை விட்டு விடுவானாயின் அவை தாமே விலகிப் போய் விடும்.

• இவ்வுலக வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமானால், அவன் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லா வற்றிலும் மிகமிக உயர்ந்த குணமாவது பொறுமை.

* மனிதனுடைய மனம் சிங்கம் போல் தாக்கும் திறனும், பாயும் திறனும் கொண்டு இருப்பது மட்டு மேயன்றி, ஒட்டகத்தைப் போல பொறுக்கும் திறனும் வேண்டும். அவ்விதமான பொறுமை பலம் இல்லாதவர்களுக்கு வராது. இவ்வுலக வாழ்க்கையில் ஒருவன் வெற்றியடைய வேண்டுமானல் அவன் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய குணங்கள் எல்லாவற்றிலும் மிக உயர்ந்த குணமானது பொறுமை.

• தீராத ஆவலும், அவசரமும், ஓயாத பரபரப்பும் உள்ள ஜுர வாழ்க்கை நாகரிகம் ஆக மாட்டாது. சரியான நாகரிகத்துக்குச் சாந்தியே ஆதாரம். அடக்கம், பொறுமை. ஜீவகாருண்யம் என்ற குணங்களே உண்மையான நாகரிகத்தையும், நித்திய ஜீவனையும் விளைவிக்கும்.

* மூடன் தான் செய்த குற்றத்தை மறந்து விடுகிறான் அல்லது பிறருக்குத் தெரியாமல் மறைக்கிறான் அல்லது பொய்க் காரணங்கள் செல்லி அது குற்றம் இல்லை என்று ருஜுப்படுத்த முயற்சி செய்கிறான். குற்றத்திற்குக் காரணம் அறியாமை. அதை நீக்கும் வழி சத்சங்கமும், தைரியமும்! பிறர் குற்றங்களை ஷமிக்கும் குணம் குற்றம் இல்லாதவர்களிடத்திலேதான் காணப்படும்.

• நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி, அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டும் என்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும் வேறு வழி இல்லை.

* சொந்த பாஷை கற்றுக் கொள்ளாதவர்கள் குரங்குகளாகப் பிறப்பார்கள் அடுத்த ஜென்மத்தில்!

• யாகம் என்பதன் பொருளை நாம் மிகத் தெளிந்து கொள்ளுதல் வேண்டும். பெரியதோர் இஷ்ட சித்தியின் பொருட்டாகச் சிறிய தற்கால சுகங்களை மனம் அறிந்து வெறுத்து விடுதலே யாகம்.

* பாவத்தைச் செய்வது இல்லை என்ற தீர்மானம் உண்மையாக இருக்க வேண்டும். ஞானமே அவ்வளவுதான். அதைக் காட்டிலும் பெரிய ஞானம் இருக்க முடியாது.

* தமிழ், தமிழ், தமிழ் என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய புதிய செய்தி, புதிய புதிய யோசனை, புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக் கொண்டே இருக்க வேண்டும்.

* பொறுமை இல்லாதவனுக்கு இவ்வுலகில் எப்போதும் துன்பமே அன்றி அவன் ஒருநாளும் இன்பத்தைக் காண மாட்டான். ஒருவனுக்கு எத்தனைக்கு எத்தனை பொறுமை மிகுதிப்படுகிறதோ அத்தனைக்கு அத்தனை அவனுக்கு உலக விவகாரங்களில் வெற்றி உண்டாகிறது. வீட்டிலே பொறுமை பழகினால் அன்றி ஒருவனுக்கு நாட்டு விவகாரங்களில் பொறுமை ஏற்படாது.

* உண்மையான தெய்வ பக்தி இருந்தால் மனோ தைரியம் உண்டாகும். மனோ தைரியம் இருந்தால் உண்மையான தெய்வ பக்தி உண்டாகும்.

* தர்மத்தை நிலைநிறுத்தும் பொருட்டாக உலகத்தாரி்ன் நிந்தை, பழி, விரோதம், தீங்கு முதலியவற்றைக் கவனியாமல் உழைப்பவன் யக்ஞம் செய்பவன் ஆகிறான்.

* நெஞ்சம் இளகி விரிவெய்த ‌விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியாருக்கு நாம் இரங்கி, அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டும் என்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும். வேறு வழி இல்லை.

• பயத்தை உள்ளே வளர்ப்பவன் பாம்பை வளர்க்கிறான்.

• உண்மையான தெய்வபக்தி இருந்தால் மனோதைரியம் உண்டாகும். மனோ தைரியம் இருந்தால் உண்மையான தெய்வ பக்தி உண்டாகும்.

• ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம். ஒரு சொற் கேளீர்... சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்வீர்.

• வஞ்சகர், தீயர், மனிதரை வருத்துவோர், நெஞ்சகத்து தருக்குடை நீசர்கள் -இன்னோர் தம்மொடு பிறந்த சகோதரராயினும் வெம்மையோடு ஒறுத்தல் வீரர்தம் செயலாம்.

* அகண்ட வெளிக்கண் அன்பே வாழ்க! துயர்கள் தொலைந்திடுக! தொலையா இன்பம் விளைந்திடுக! வீழ்க கலியின் வலியெலாம்! கிருத யுகம்தான் மேவுகவே!

Wednesday, December 7, 2011

சிலேடைச் சிதறல்கள்

Posted by பால கணேஷ் Wednesday, December 07, 2011
வேறெந்த மொழிக்கும் இல்லாத பல சிறப்புகள் நம் தாய்மொழியாகிய தமிழ் மொழிக்கு உண்டு. அதில் ஒன்று- இரண்டு பொருள் தரும்படியான வார்த்தைகள் மற்ற மொழிகளைவிட தமிழில்தான் அதிகம் உள்ளன. ஒரு வார்த்தை இருபொருள் தரும்படி அழகாகப் பேசுவதை ‘சிலேடை’ என்று அழைப்பார்கள். இந்த சிலேடைத் தமிழில் வல்லவர் திரு.கி.வா.ஜ. அவர்கள். இங்கே நான் படித்து ரசித்த சில சிலேடைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

==================================================

ரு மடாதிபதி தமிழ்ப் புலவர்களை எல்லாம் அழைத்து விருந்து ஒன்று வைத்தாராம். எல்லா ஊர்களில் இருந்தும் புலவர்கள் வந்து விருந்தில் அமர்ந்தனர். ஸ்ரீவைகுண்டம் என்ற ஊருக்குப் பக்கத்தில் கடைமடை என்ற ஊர் இன்றைக்கும் இருக்கிறது. அவ்வூரைச் சேர்ந்த புலவர் ஒருவர் விருந்திற்கு மிகத் தாமதமாக வந்து சேர்ந்தார்.

மடாதிபதி அவரை வரவேற்கும் விதமாக, “வாரும் கடைமடையரே!’ என இருபொருள்பட அழைத்தாராம். கடைமடை என்ற ஊரைச் சேர்ந்தவரே என்பது ஒரு பொருள். கடைசியாக வந்த மடையரே என்பது மற்றொரு பொருள். வந்த புலவர் லேசுப்பட்டவரல்ல... அவரும் பதிலுக்கு, “வந்தேன் மடத்தலைவரே...” என்றாராம். இதற்கு மடத்திற்குத் தலைவரே என்பது ஒரு பொருள். மடையர்களுக்கெல்லாம் தலைவரே என்பது மற்றொரு பொருள்.

==================================================

பெரும் புலமை பெற்ற ஒருவர் பாட்டுப் பாடுவதிலும் வல்லமை பெற்றிருந்தார். அவர் தன் ஊரில் கடைத்தெருவுக்கு ஒருநாள் வந்தபோது, அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த கிராமத்து ஆசாமி ஒருவன் அவரை நெருங்கி, “ஐயா, நான் உங்களைப் பாடையில பார்க்கணும்” என்றானாம். ’பாடும்போது பார்க்க வேண்டும்’ என்பதை அப்படிச் சொல்லியிருக்கிறான். அவரும் அசராமல், ”அப்ப சாகையில வந்து பார்” என்றாராம். ’சாகை’ (ஜாகை) என்பது இருப்பிடத்தைக் குறிக்கும். வீட்டில் வந்து பார் என்பதை இப்படி அழகாக சிலேடையில் கூறிச் சென்றுள்ளார் புலவர்.

==================================================

யதான புலவர் ஒருவர் கம்பு ஒன்றினை ஊன்றிக் கொண்டு தள்ளாடியபடி வந்து  கொண்டிருந்தார். அவரைக் கண்ட கஞ்சப்பிரபு ஒருவர் கேலியாக, ”வாரும் கம்பரே...” என்றாராம். கம்பரைப் போன்ற புலவர் என்றும் கம்பை ஊன்றியவரே என்றும் பொருள் கொள்ளும்படி அவர் பேச, இவரும் உடனே தயங்காது கம்பைச் சற்று ஓங்கி, ”அடியேன் வணக்கம்” என்றாராம்.

==================================================

ராமநாதபுரம் சேதுபதி மன்னரின் சபையில் ஒருநாள் தமிழ்ப் புலவர் சபை கூடியிருந்தது. எல்லாப் பகுதிகளில் இருந்தும் புலவர்கள் வந்திருந்தனர். மன்னரும் சபைக்கு வந்து அமர்ந்தார். சபை தொடங்குவதற்குமுன் தாமதமாக வேம்பத்தூரைச் சேர்ந்த ‘வெண்பா பாடுவதில் புலி’ என்று அழைக்கப்பட்ட பிச்சுவையர் வந்து சேர்ந்தார்.

அவரைப் பார்த்த மன்னர் சிலேடையாக, “வேம்புக்கு இங்கு இடமில்லை” என்றாராம். ’வேம்பு’ என்றால் கசப்பு. இந்த இனிய சபையில் கசப்புக்கு இடமில்லை என்றும், வேம்பத்தூரைச் சேர்ந்த உமக்கு இடமில்லை என்றும் இருபொருள் கொள்ளலாம்.

புலவர் விடுகிற ரகமா என்ன..? சட்டென்று சற்றும் தயங்காது வெகுவேகமாக வந்து மன்னரின் சிம்மாசனத்தின் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு, “வேம்பு அரசோடுதான் இருக்கும்” என்றாராம். அதாவது வேம்பு என்று தன்னை மன்னன் சொன்னதும், அரசனும், வேம்பாகிய தானும் சேர்ந்தே இருப்போம் என்றும், வேப்ப மரமும், அரச மரமும் சேர்ந்து இருந்தால் அது கோவிலாகும் என்றும் இருபொருள்படக் கூறினாராம். சபையே வியந்து சிரிக்க, மன்னரும் சிரித்து மகிழ்ந்தாராம்.

==================================================

பேரறிஞர் அண்ணா அவர்கள் ஒரு கூட்டத்தை முடித்துவிட்டு அடுத்த கூட்டத்தில் பேசுவதற்கு அவசரமாகக் கிளம்பினார். அவரோடு சில நண்பர்களும் காரில் ஏறிக் கொண்டனர். அண்ணா, டிரைவரிடம், “தம்பி, விரைவாக வண்டியை ஓட்டுவாயா?” என்று கேட்டார்.

டிரைவரும் உடனே, “கவலைப்படாதீங்கய்யா... ஒரு நொடியில கொண்டு போய் விட்டுடறேன் பாருங்க...” என்றிருக்கிறார். அவர் காரை மிக வேகமாக ஓட்டிச் சென்றதில் சாலையில் ஒரு பள்ளம் இருப்பதைக் கவனிக்காமல் போக, கார் பள்ளத்தில் இறங்கி உருண்டது. அனைவரும் காரைவிட்டு வெளியே வர, நல்லவேளையாக யாருக்கும் அதிகமாகக் காயம் இல்லை.

அனைவரும் கோபமாக டிரைவரை திட்டத் தொடங்க, அண்ணா அவர்களை கையமர்த்தி விட்டு இப்படிக் கூறினாராம்: ”நாம கிளம்பறப்பவே அவர்தான் சொன்னார்ல... ஒரு ‘நொடி’யில விடறேன்னு. சொன்னபடி விட்டுட்டார். விடுங்க...” நொடி என்பதற்கு வினாடி, பள்ளம் என்று இரு பொருள் உண்டு. இப்படி அண்ணா சொன்னதும் அனைவரும் கவலை மறந்து சிரித்து விட்டார்களாம்.

==================================================

வியரசு வைரமுத்து ஒருமுறை தன் சொந்த ஊரான வடுகபட்டிக்கு வந்திருந்தார். அவர் என் இனிய நண்பர் ஆதலால் நான் அவரை அடிக்கடி சந்தித்துப் பேசுவது வழக்கம். அவருக்கு கவிதையைப் போலவே நகைச்சுவை உணர்வும் அதிகமுண்டு. நானும் அவரும் நண்பர்களும் காரில் வரும்போது மதுரையில் ஓரிடத்தில் பொங்கல் வைத்து விழாக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

“மதுரை இன்றைக்கும் கிராமம்தான்” என்று கவிஞர் ஆச்சரியத்தோடு சொல்ல, “அந்த போஸ்டரைப் பாருங்கள். இன்றிரவு கரகாட்டமும், பட்டிமன்றமும் நடைபெறும் என்று போட்டிருக்கிறார்கள்” என்று நான் சுட்டிக் காட்டினேன்.
   “இப்போதெல்லாம் இரண்டும் ஏறத்தாழ ஒன்றுதான்” என்று ஒரு நண்பர் சொன்னார்.
   உடனே வைரமுத்து, “இரண்டுக்குமே தலையில் ஏதாவது இருந்தால்தான் நல்லது” என்றார் சிரிப்போடு. 
   கார் ஓட்டிய டிரைவர் உட்பட அனைவரும் சிரித்து விட்டோம். அவர் சிலேடையாகக் கூறிய செய்தியை நினைத்து வியந்தோம்.

-முனைவர் கு.ஞானசம்பந்தன் எழுதிய ’பரபரப்பு, சிரிசிரிப்பு’ என்ற நூலிலிருந்து.

Monday, December 5, 2011

சோறு கண்ட மூளி யார்?

Posted by பால கணேஷ் Monday, December 05, 2011
’சேர்ந்தே இருப்பது?’ என்று சி(வன்)வாஜி கேட்க, தருமி நாகேஷ் ‘வறுமையும், புலமையும்’ என்று பளிச் பதிலளிக்கும் திருவிளையாடல் காமெடியை பார்த்து ரசிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். சங்க காலத்தில் புலவர்களோடு வறுமையும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாய் இருந்திருக்கிறது. அரசனையோ, பணக்கார வள்ளல்களையோ பாடிப் பரிசில் பெற்றுத்தான் காலத்தை ஓட்ட வேண்டிய சூழலில் இருந்திருக்கிறார்கள். அப்படி நான் படித்த சங்ககாலப் புலவர்கள் இருவரைப் பற்றி இங்கே குறிப்பிடுகிறேன்.

கி.பி. பதிநான்காம் நூற்றாண்டு. சோழ நாட்டில் ஒரு வேளாளர் தம்பதி வாழ்ந்து வந்தனர். சிவபெருமானை வணங்கி வேண்டிய அவர்களுக்கு ஈசன் திருவருளால் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஆனால், என்ன துரதிர்ஷ்டம்... ஒரு குழந்தைக்குப் பார்வை கிடையாது. மற்றொரு குழந்தையால் நடக்க இயலாது. இத்தம்பதியர் இது கண்டு மனமுடைந்து வருந்தியபோது, ஒரு பெரியவர், “இவர்கள் ஊனத்தை வென்று, ஞானம் அடைந்து, ஞாயிறு (சூரியன்) போல் உலா வருவார்கள்” என வாழ்த்தினாராம். ஆகவே முதலில் பிறந்தவருக்கு முது சூரியர் என்றும், அடுத்தவருக்கு இளஞ்சூரியர் என்றும் பெயரிட்டனர். (இருவரும் ஒன்றாகப் பிறந்தவர்கள் அல்ல, ஒன்றாக வாழ்ந்ததாலேயே இரட்டையர்கள் எனப் பெயர் பெற்றனர் என்றும் வரலாற்றில் கூறப்படுகிறது.)

அந்தப் பெரியவர் வாழ்த்தியது போலவே இருவரும் தமிழ் ஞானம் பெற்று பாடல்கள் இயற்றும் புலமை பெற்றனர். சிவபெருமான் மீது மாறாத பக்தி கொண்டு பல பாடல்களை இயற்றிய இவர்களை ‘இரட்டைப் புலவர்கள்’ என்று மக்கள் குறிப்பிட்டனர். நடக்க இயலாதவரை, பார்வையற்றவர் தோளில் தூக்கி வைத்துக் கொள்ள, அவரது வழிகாட்டலின் பேரில் பார்வையற்றவர் நடந்து செல்ல, தமிழகம் முழுவதும் பல ஊர்களுக்கும் சென்று ஆலய தரிசனம் செய்தும், தமிழ்ப் பற்று மிக்க வள்ளல்களைப் பாடி பரிசு பெற்றும் இருக்கிறார்கள். இவ்விதம் தங்களின் ஊனத்தை வென்றிருக்கிறார்கள். இந்த இரட்டைப் புலவர்கள் வெண்பாப் பாடல்களை நிறையப் பாடி இருக்கிறார்கள். பாடலின் முதல் இரண்டு அடிகளை ஒருவர் பாட, அடுத்த இரண்டு அடிகளை மற்றவர் பாடுவார். இதை வழக்கமாகவே வைத்திருந்தார்கள்.



ருமுறை நெடுந்தொலைவு நடந்து வந்ததால் பசி மிகுந்திருக்க, இவர்கள் ஒரு ஊரை அடைந்து அங்குள்ள சிவன் கோயிலுக்குச் சென்றிருக்கிறார்கள். அது பூஜை நேரம் என்பதால் பூஜைக்குரிய மணி ஓசைகள் கேட்கத் துவங்க, இருவரும் பூஜை முடிந்ததும் நைவேத்யப் பிரசாதம் கிடைக்கும் என்று மகிழ்வோடு அங்கே அமர்கின்றனர். அது பாடல் பெற்ற ஸ்தலமாக இருந்தாலும், கோயிலுக்கு முறையான வருமானம் இல்லாததால் ஷீணித் திருந்த ஆலயம். அதன் அர்ச்சகர் ஒரு வினோதமான காரியம் செய்தார்.
அடுப்பிலே சாதத்திற்குப் பதிலாக ஒரு செங்கல்லைச் சுட வைத்து, அதனை ஒரு தட்டில் எடுத்து அதன் மீது ஈரத் துணியைப் போர்த்த, அதிலிருந்து ஆவி பறந்து கொண்டிருந்தது. பார்ப்பதற்கு பொங்கலை தட்டில் வைத்து மூடியது போலக் காட்சியளித்தது அந்தச் செங்கல். அதை சிவனுக்குக் காட்டி, மணிகள், சங்கு ஆகியவை முழங்க பூஜை செய்தார் அர்ச்சகர். இதை நடக்க இயலாதவர் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது பார்வையிழந்த புலவர்,

தேங்குபுகழ் ஆங்கூர்ச் சிவனே அல்லாளியப்பா, நாங்கள் பசித்திருக்க நியாயமா?

-என்று பாட, நடக்க இயலாத புலவர்,

போங்காணும் கூறு சங்கு தோல்முரசு கொட்டோசை அல்லாமல் சோறு கண்ட மூளி யார் சொல்?

-என்று பாடி முடித்தாராம். பாடலை முழுமையான வடிவத்தில் இப்போது படிக்கலாம்:

தேங்குபுகழ் ஆங்கூர்ச் சிவனே அல்லாளியப்பா
நாங்கள் பசித்திருக்க ஞாயமா? -போங்காணும்
கூறு சங்கு தோல்முரசு கொட்டோசை அல்லாமல்
சோறுகண்ட மூளியார்? சொல்!

-இப்படிப் பாடி சிவனுக்கே இங்கே உணவில்லை, நமக்கு எங்கே உணவு கிடைக்கப் போகிறது என்பதை மற்ற புலவருக்கு உணர்த்தியிருக்கிறார். அந்தச் சோகத்திலும் அவர்கள் நகைச்சுவை உணர்வைக் கைவிடாமல் இப்படி அழகு தமிழ்க் கவிதை பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் உணர்த்தும் செய்திகள் என்னென்ன?

-முறையான வருமானம் இல்லாத ஆலயங்கள் பல அக்காலத்திலேயே இருந்திருக்கின்றன.

-அக்காலங்களிலேயே ஆலயங்களில் இறைவனுக்குப் பூஜை முடிந்ததும் வறியவர்களுக்கு உணவிடும் வழக்கம் இருந்திருக்கிறது.

-புலவர்களுடன் வறுமையும், அத்துடன் நகைச்சுவை உணர்வும் சேர்ந்தே இருந்திருக்கிறது.

-தமிழ் மொழியின் மேல் ஆர்வம் கொண்ட வள்ளல்களும், மன்னர்களும் பலர் இருந்திருக்கிறார்கள்.


மற்றொரு சம்பவம்:

ஒரு சமயம், மதுரைக்குச் சென்று சொக்கநாதரை வழிபாடு செய்துகொண்டிருந்தனர். அப்போது பொற்றாமரைக்குளத்தில், பார்வை இழந்தவர் படியில் அமர்ந்து, துணி துவைத்துக் கொண்டு இருக்கையில், அவர் கை நழுவி, அந்தத் துணி சென்றுவிட்டது. அதைப் பார்க்க இயலாமல் தண்ணீரில் கைகளால் துணியைத் தேடித் துழாவிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த நடக்க இயலாதவர்,

'அப்பிலே தோய்த்து அடுத்தடுத்து நாம் அதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ'

என்றார். (அப்பு – தண்ணீர். தண்ணீரில் தினம் தினம் நாம் துணியினை தப்பினால் – தோய்த்தால், நம்மிடமிருந்து அந்தத் துணி தப்பியோட நினைக்காதோ என்கின்றார்). அதற்கு பார்வையற்றவர், தம்மிடமிருந்து துணி போய்விட்டது என்றுணர்ந்து, அதைப் பெரிதாக எண்ணாமல், பதிலுரைக்கின்றார்.

‘ஆனாலும் கந்தை, அதிலுமோர் ஆயிரங்கண்
போனால் துயர் போச்சுப்போ'

(அந்தத் துணி கந்தலாகிவிட்டது. கிழிந்து விட்டது. கிழிந்த துணியிலும் ஆயிரம் ஓட்டைகள். துணி போனால் துயர் போனது என்று எடுத்துக்கொள்வோம்). ஆனாலும் இந்தப் பதிலில் திருப்தி அடைவில்லை முதுசூரியர். மறு கேள்வி கேட்கின்றார்.

'கண்ணாயிரமுடைய கந்தையேயானாலும்
தண்ணார் குளிரையுடன் தாங்காதோ?'

(கந்தலாகிய துணி என்றாலும் குளிர் தாங்குமாறு உபயோகப் படுத்தலாமே?) இதற்கு இப்படிப் பதில் சொல்கின்றார் இளஞ்சூரியர்:

'எண்ணாதீர், இக்கலிங்கம் போனாலென்
ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை!'

(கலிங்கம் – துணி. இந்தத் துணி போனால் என்ன, லிங்க ஸ்வரூபமாக விளங்கும் மதுரையில் உறையும் சொக்கநாதரே துணை) என்று பக்தியுடன் பாடுகின்றார்.  இங்கேயும் பக்தியுடன் சேர்ந்து அவர்கள் பெற்றிருந்த நகைச்சுவை உணர்வும் வெளிப்படுகிறது.

இந்த இரட்டைப் புலவர்கள் ஒன்றாகவே வாழ்ந்து பின் மரணமடைந்ததுகூட ஒரே நாளில் என்று படித்திருக்கிறேன். (ஒருவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியிலேயேகூட மற்றவர் இறந் திருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியதுண்டு) அன்றைய காலத்தின் வாழ்க்கைச் சூழலையும், இன்றிருக்கும் வாழ்க்கை முறையையும் மனதில் சற்று ஓட்டிப் பார்த்தால் எத்தனை விஷயங்களில் வளர்ச்சி பெற்றிருக்கிறோம் என்பதையும், எத்தனை விஷயங்களை இழந்திருக்கிறோம் என்பதையும் நன்றாக உணர இயல்கிறது.

Saturday, December 3, 2011

ஜெ. சினிமா நடிகையான கதை-2

Posted by பால கணேஷ் Saturday, December 03, 2011
சென்ற பதிவில் இன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சினிமா நடிகையான வரலாற்றை அவரது தாயார் சந்தியா கொடுத்திருந்த பேட்டியின் ஒரு பகுதியை வெளியிட்டிருந்தேன். சென்ற பதிவைப் படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படித்துக் கொள்ளலாம். இனி, அந்தப் பேட்டியின் தொடர்ச்சி :

‘‘அம்முவின் படிப்பு கெடக் கூடாது. அவளுக்குக் கோடை விடுமுறை வரும் வரை காத்திருப்பீர்களா?’’ என்று ஒப்புக்குக் கேட்டேன். அவர்களும் உடனே, ‘‘ஆகட்டும்’’ என்றார்கள். மேலும் மூன்று மாதங்கள் ஓடிவிட்டன. அம்முவுக்குக் கோடை விடுமுறையும் வந்தது. அதே தயாரிப்பாளர்கள் திரும் பவும் வந்தனர். 
      ‘‘தொடர்ந்து நடிக்கச் செய்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி... உங்கள் மகளை இந்த முறை மட்டும் நடிக்க அனுமதியுங்கள்’’ என்று கேட்டனர். என் நிலைமை தர்மசங்கடமாகி விட்டது. ‘அம்முவை நடிக்க அனுமதிக்க வேண்டியது தானா?’ என்ற எண்ணம் எழுந்தது. அம்முவிடமும் கேட்டேன்.

‘‘நான் திறமையாக நடிப்பேன் என்று உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் எனக்கு ஆட்சேபணை இல்லை’’ என்றாள். விடுமுறை நாட்கள்தானே என்று அம்முவை நடிக்க அனுப்பி வைத்தேன்.

நான் நடித்திருந்த ‘கர்ணன்’ தமிழ்த் திரைப்படத்தின் 100வது நாள் விழாவுக்குப் போயிருந்தேன். என்னுடன் அம்முவும் வந்திருந்தாள். அப்போது அம்முவைப் பார்த்த திரு.சிவாஜிகணேசன், அவள் பிற்காலத்தில் பெரிய நடிகையாக வருவாள் என்று வாழ்த்தினார்.

அம்முவைக் கண்ட தயாரிப்பாளர் - டைரக்டர் பி.ஆர்.பந்துலு அவர்கள், அம்முவை அவரது படத்தில் நடிக்க அனுமதிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார். நான் வழக்கம்போல் மறுத்தேன். கோடை விடுமுறையிலேயே படப்பிடிப்பை முடித்துக் கொள்வதாகக் கூறினார். ‘முரடன் முத்து’ என்ற கன்னடப் படம் அது. கல்யாண்குமார்தான் ஹீரோ. அம்மு நடிக்க ஒப்பந்தம் ஆனாள்.

னாரஸ் மெட்ரிக் ரிசல்ட் வந்தது. பரீட்சையில் நிறைய மார்க்குகள் வாங்கியிருந்த அம்முவுக்கு மேற்படிப்புக்கு சிறப்பு ஸ்காலர்ஷிப் கொடுத்தார்கள். அம்முவும் கல்லூரியில் சேர்ந்து இரண்டு நாட்கள் சென்றும் வந்தாள். அப்போது ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது.

தாசிரியர் - டைரக்டர் திரு.ஸ்ரீதர் அவர்கள் அம்முவுக்குத் தன் படத்தில் கதாநாயகியாக நடிக்க அழைப்பு விடுத்தார். திரு.பந்துலு அவர்கள் ‘ரஷ்’ படத்தில் அம்முவின் நடிப்பைப் பார்த்திருக்கிறார். ‘புகழும் திறமையும் உள்ள ஒரு முன்னணி டைரக்ட ரிடமிருந்து ஒரு வாய்ப்புக் கிடைத் துள்ளது.

இதைப் பயன்படுத்திக் கொண்டு அம்முவை நடிக்கச் செய்வதா அல்லது தொடர்ந்து படிக்கச் செய்வதா?’ எனக்கு ஒரு பெரிய பிரச்சனை மீண்டும் ஏற்பட்டு விட்டது. என் குடும்ப நண்பர்கள், என் நல்வாழ்வில் அக்கறை கொண்டோர் அனைவரிடமும் இது பற்றி ஆலோசனை செய்தேன்.


அம்முவுக்குப் படிப்பா? நடிப்பா? இதை முடிவு செய்ய வேண்டிய நெருக்கடியான நிலை எனக்கு.


என் தந்தையோ, ‘‘குழந்தை நன்றாகப் படிக்கிறாள். நீயும் உன் தங்கையும் (வித்யாவதி) சினிமாவில் நடிப்பது போதாதா? அம்முவை ஏன் சினிமாத் துறைக்கு வரச் செய்கிறாய்?’’ என்று தன் எதிர்ப்பைத் தெரிவித்தார். முடிவில் அம்முவைத் தேடி வந்த வாய்ப்பை நழுவவிட வேண்டாம் என்று தீர்மானித்து அம்முவை நடிக்க அனுமதித்தேன். (அந்தத் திரைப்படம்தான் ‘வெண்ணிற ஆடை‘) அம்முவைப் பொறுத்தவரை சந்தர்ப்பங்கள் அவளைத் தேடித்தான் வந்தது. அதற்கு அடுத்த படத்தில் மக்கள் திலகத்தின் கதாநாயகியாக ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் நடித்தாள்.

அம்மு நடிக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. அம்முவுக்கும் படிப்பில்தான் மிகுந்த விருப்பம். அப்படி இருந்தும் அம்மு நடிப்புத் துறைக்கு வந்துவிட்டாள் என்றால் அதை விதியின் வலிமை என்றுதானே கூற முடியும்?

என் மகள் அகில உலக நட்சத்திரமாக வளர வேண்டும் என்பதுதான் என் ஆசை.

-1964ம் ஆண்டு குமுதத்தில் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவின் பேட்டி.

கோவாவுக்கு அருகில் இருந்த கார்வாரில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஷுட்டிங். கார்வாரில் வேறுவேறு விடுதிகளில் தங்கியிருந்த படக்குழுவினர் அனைவரும் படகுத் துறையில் ஒன்றுகூடி அங்கிருந்து 25 கி.மீ. தொலைவில் கடலுக்கு நடுவிலிருந்த தீவுக்குச் செல்ல வேண்டும்.  ஒருநாள் ஜெயலலிதா வரத் தாமதமானது. அவருடைய டூப் அணிந்திருந்த உடைகளை வைத்து அவர் வந்ததாக எண்ணிய தயாரிப்பு நிர்வாகி ஓகே சொல்ல, படகு புறப்பட்டுச் சென்று விட்டது.

படகுத்துறைக்கு வந்த ஜெயலலிதாவைக் கண்ட தயாரிப்பு நிர்வாகி சுப்பிரமணியத்திற்கு அதிர்ச்சி. அனைவரும் புறப்பட்டுச் சென்று விட்டதை அறிந்த ஜெயலலிதாவிற்கு அழுகை அழுகையாக வந்தது. வேறு படகு கிடைக்குமாவென்று சுப்பிரமணியம் விசாரித்துப் பார்த்தும் எதுவும் கிடைக்கவில்லை. அப்போது உள்ளூர்க்காரர் ஒருவர் யோசனை ‌சொன்னார்: ‘‘இங்கிருந்து ரோடு வழியாக பதினைந்து கி.மீ. தூரம் போனால் மீன் பிடிப்பவர்கள் அந்த தீவுப் பக்கம் குறுக்கு வழியாகச் செல்லும் இடம் வரும். அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில்தான் தீவு இருக்கிறது. கட்டுமரத்தில் போய் விடலாம்’’ என்று கூறினார்.

அப்படியே செய்தார்கள். மூன்று கிலோமீட்டர் தூரம்தான் என்றாலும் அலையடிக்கும் கடலில் நிலையற்று ஆடும் கட்டுமரத்தில் பயணம் செய்யத் துணிச்சலும் மன வலிமையும் நிறைய இருக்க வேண்டும். அவை இரண்டுமே ஜெயலலிதாவிடம் நிறைய இருந்தன. மோட்டார் படகில் சென்றவர்கள் தீவுக்குச் சற்று முன்பாகவே படகை நிறுத்திவிட்டு, கரைக்குச் செல்ல சிறிய துடுப்புப் படகுகள் வந்துசேர்வதற்காக காத்திருந்தார்கள். தங்களுக்கு முன்பாகவே கட்டுமரத்தில் ஜெயலலிதா செல்வதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார்கள்.

ஜெயலலிதாவின் உடையும் ஒப்பனையும் கடல் நீர் வாரியடித்ததில் நனைந்து விட்டிருந்தன. எம்.ஜி.ஆர். வந்ததும், ‘‘ஒரே ஆச்சரியமா இருக்கு. எங்களுக்கு முன்னாடி எப்படி வந்தே?’’ என்று கேட்டார். அதுவரை அடக்கி வைத்திருந்த ஆத்திரமும், அழுகையும் பீறிட்டுக் கொண்டு வெளிப்பட்டன ஜெயலலிதாவிடமிருந்து. நடந்ததை விளக்கினார். எம்.ஜி.ஆரின் மோதிரக் கையால் அன்று குட்டுப்பட்டார் தயாரிப்பு நிர்வாகி. படக் குழுவிலிருந்த அனைவருமே ஜெய லலிதாவின் துணிச்சலைக் கண்டு ஆச்சரியப்பட்டு அவரைப் பாராட்டினார்கள்.

பின்னிணைப்பு :  செல்வி ஜெயலலிதா சில பாடல்களையும் பாடியிருக்கிறார். 1974ல் வெளியான ‘வைரம்’ திரைப்படத்தில் தேன்குரல் தென்றல் எஸ்.பி.பி.யுடன் அவர் பாடிய இந்த டூயட் எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்களும் இங்கே சொடுக்கி தரவிறக்கி கேட்டு மகிழலாம். (இனிமையான இசையை வழங்கிய புண்ணியவான் யாரென்றுதான் எனக்குத் தெரியவில்லை).

Thursday, December 1, 2011

ஜெ. சினிமா நடிகையான கதை!

Posted by பால கணேஷ் Thursday, December 01, 2011
ன்றைய தமிழக முதலமைச்சரான ஜெயலலிதா புரட்சித் தலைவி, அம்மா என்று எத்தனையோ பட்டங்களால் அழைக்கப்பட்டாலும் திரைப்படத் துறையில் புகழ் பெற்ற நடிகையாக இருந்தபோது அவர் கலைச் செல்வி ஜெயலலிதா என்றுதான் அழைக்கப்பட்டார். திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருந்த ஜெயலலிதாவை திரைத் துறைக்கு அழைத்து வந்தது விதி. (இன்று அரசியலில் பலராலும் திட்டப்பட்டுக் கொண்டிருக்கும் முதல்வர் ஜெ.வைப் பற்றியது அல்ல இக்கட்டுரை. திரை நட்சத்திரம் பற்றியதே...)

1964ம் ஆண்டு குமுதம் இதழில் ஜெயலலிதாவின் தாயார் நடிகை சந்தியா எப்படி தன் மகள் ஜெயலலிதாவுக்கு சினிமா வாய்ப்புக்கள் வந்தது என்பதையும், அவர் நடிகையான பின்ணணியையும் கூறி விரிவாக ஒரு பேட்டி கொடுத்து இருக்கிறார். இந்த விவரங்கள் தெரியாத இளைய தலைமுறையினருக்காக இங்கே அந்தப் பேட்டியைக் கொடுத்துள்ளேன் :

ன் மகள் அம்மு - ஜெயலலிதா - திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று நான் முதலில் விரும்பவில்லை. சிறு குழந்தையாக இருக்கும் போதே அம்மு எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் திறமையைப் பெற்றிருந்தாள். படிப்பில் அம்மு கெட்டிக்காரி. வகுப்பில் அவள்தான் முதல் மாணவி! படித்துப் பட்டம் பெற வேண்டும் என்ற ஆர்வம் அம்முவுக்கு இருந்தது. அவள் விரும்பியவாறு நிறையப் படிக்கட்டும் என்றுதான் நானும் எண்ணினேன்.

ஜெ.வின் தாயார் சந்தியா
சிறு வயதில் ரேடியோவில் ஒலிபரப்பாகும் இசையைக் கேட்டால் அதற்கேற்ப நடனமாடத் தொடங்குவாள் அம்மு. நடனத்தின் மீது அவளுக்குள்ள ஆர்வத்தை ஏன் வீண் அடிக்க வேண்டும் என்று நினைத்த நான், நடன ஆசிரியை திருமதி கே.ஜே.சரசாவிடம் அம்முவுக்கு நடனம் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தேன். அம்மு விரைவாகக் கற்றுத் தேறியதால் அவளுடைய நடன அரங்கேற்றத்தையும் ஏற்பாடு செய்து நடத்தினேன்.

சென்னை சர்ச் பார்க் கான்வென்ட்டில் அம்மு படிக்கும் போதே அவளுக்கு நாடகத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அதுவும் ஆங்கில நாடகம். திரு.ஒய்.ஜி.பார்த்தசாரதி குழுவினர் நடத்திய நாடகம் அது. ஆங்கில மொழியை நன்கு அறிந்து சரளமாகப் பேசும் அம்முவுக்கு அந்த நாடகத்தில் ஆங்கிலம் பேசத் தெரியாத பிரெஞ்சுப் பெண்ணின் வேடம் கிடைத்தது. இந்த நாடகத்தில் வி்ல்லனாக நடித்தவர் சோ. அனைவரும் அம்முவின் நடிப்பைப் பாராட்டினார்கள்.

சற்றேறக்குறைய இதே சமயத்தில் திரு.சங்கர் கிரி (ஜனாதிபதி திரு.வி.வி.கிரி அவர்களி்ன் மகன்) ஆங்கிலத்தில் டாக்குமெண்டரி படம் ஒன்றைத் தயாரிக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். அதில் கதாநாயகியாக நடிக்க ஆங்கிலம் நன்றாகப் பேசத் தெரிந்த ஒரு பெண்ணைத் தேடிக் கொண்டிருந்தார்.


அம்முவின் நடிப்பைப் பாராட்டிய திருமதி. ஒய்.ஜி.பி., திரு.சங்கர் கிரியிடம் அம்முவை சிபாரிசு செய்திருக்கிறார். திரு.சோ அவர்களும் அம்முவின் நடிப்பை சங்கர் கிரியிடம் புகழ்ந்து கூறி, ‘‘உங்கள் படத்தில் அம்மு சிறப்பாக நடிப்பாள்’’ என்று சொல்லி இருக்கிறார்.

அம்முவை தனது டாக்குமெண்டரி்ப் படத்தில் நடிக்க என்னிடம் அனுமதி கேட்டார் சங்கர் கிரி. ‘‘அம்மு சினிமாவில் நடிப்பதை நான் விரும்பவில்லை’’ என்று அவரிடம் சொன்னேன். ‘‘இது ஒரு டாக்குமெண்டரிப் படம். உங்கள் மகளின் படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்படாமல் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் படப்பிடிப்பை நடத்திக் கொள்கிறேன். உங்கள் மகளுக்கும் இது ஒரு நல்ல பொழுதுபோக்காக இருக்கும்’’ என்றார்.

சனி, ஞாயிறுகளில் படப்பிடிப்பு, அதுவும் ஆங்கிலப் படம். இரண்டையும் எண்ணிப் பார்த்த நான் சம்மதித்தேன். அந்தப் படம்தான் ‘எபிசில்’. படப்பிடிப்பு தொடங்கியது.

அப்போது நான் ‘நன்ன கர்த்தவ்யா’ என்ற கன்னடப் படத்தில் நடித்து வந்தேன். அதில் எனக்கு மாமியார் வேடம். படத்தின் கதாநாயகி ஒரு பால்ய விதவை. அந்த வேடத்தில் நடிக்க களை சொட்டும் முகமுடைய ஓர் இளம் நடிகையைத் தயாரிப்பாளர்கள் தேடி வந்தனர். 

அவர்கள் தேடிய வண்ணம் கதாநாயகி கிடைக்காததால் அந்தப் பாத்திரம் சம்பந்தப்பட்ட சில காட்சிகளை விட்டுவைத்து விட்டு படத்தில் வரும் மற்ற காட்சிகளைப் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
       ஒருநாள் என்னிடம் கால்ஷீட் வாங்க தயாரிப்பாளர்கள் வந்தபோது தற்செயலாக அம்முவைப் பார்த்து விட்டனர்.   ‘‘நாங்கள் தேடிய முகப் பொலிவுள்ள கதாநாயகி இதோ இங்கேயே இருக்கிறாரே.. உங்கள் பெண்ணையே எங்கள் கதாநாயகியாப் போடப் போகிறோம்’’ என்றனர். ஆனால் நான் அதற்கு சம்மதம் அளிக்கவில்லை.

ஆறு மாதங்கள் சென்றிருக்கும். மீண்டும் அவர்கள் என்னிடம் வந்தனர். ‘‘இன்னும் எங்கள் படத்திற்குக் கதாநாயகி அமையவில்லை. உங்கள் பெண்ணையே தயவுசெய்து நடிக்க அனுமதியுங்கள்’’ என்று கேட்டுக் கொண்டனர். நீண்ட நேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன்.

அம்முவை நடிக்க வைப்பது என்று அவர் முடிவெடுத்தார் என்பதும், இரண்டாவது படத்திலேயே எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடத்து பிரபல நடிகையானதும்  அனைவருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும் அது அவ்வளவு எளிதில் நடந்து விடவில்லை. அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. அதையும், ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பில் நடந்த ஒரு சுவாரஸ்ய அனுபவத்தையும் அடுத்த பதிவில் வெளியிடுகிறேன். அதுவரை சற்றுப் பொறுத்திருங்கள் நண்பர்களே...!
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube