Thursday, January 12, 2012

சின்னச் சின்னப் பூக்கள்!

Posted by பால கணேஷ் Thursday, January 12, 2012
ரு சமயம் மகாவிஷ்ணு கைலாயம் சென்றிருந்தபோது கணேசரிடம் கொஞ்சி விளையாடினார். குழந்தை கணேசர் சட்டென்று தன் துதிக்கையை நீட்டி விஷ்ணுவின் சக்கரத்தைப் பிடுங்கி வாயில் அடக்கிக் கொண்டார். விஷ்ணு எத்தனையோ விதமாக கெஞ்சிக் கேட்டும் பலனில்லை. தரமாட்டேன் என்று அடம் பிடித்தார் வினாயகர். விஷ்ணுவுக்கு ஒரு யுக்தி தோன்றியது. உடனே தன் காதுகளைக் கைகளல் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுந்தார். குழந்தை வினாயகர் அதைக் கண்டு குபுக்கென்று குலுங்கிச் சிரிக்க, வாயில் அடக்கி வைத்திருந்த சக்கரம் வெளியே வந்து விழுந்தது. உடனே விஷ்ணு அதைக் கையில் எடுத்துக் கொண்டு ‘எஸ்கேப்’ ஆனார்.

மகாவிஷ்ணு கைகளால் காதைப் பிடித்துக் கொண்ட செயல் சமஸ்கிருதத்தில் ‘தோர்பிகர்ணம்’ என்று சொல்லப்பட்டது. ‘தோர்பி’ என்றால் கைகளால். ‘கர்ணம்’ என்றால் காதுகள். கையால் காதைப் பிடித்துக் கொள்ளும் ‘தோர்பிகர்ணம்’ நாளடைவில் திரிந்து பேச்சு வழக்கில் தோப்புக்கரணம் ஆகிவிட்டது.  தோப்புக் கரணம் என்றால் தோப்பில் போடும் குட்டிக்கரணம் என்று பொருள் கொள்ளலாகாது. இனி ‘தோர்பிகர்ணம்’ என்றே பொருள் கொள்வீராக!

இப்போது எதற்கு இந்தப் புராணம்? வேறொன்றுமில்லை... நேற்று என் மருமகள் ‘ஹோம் ஒர்க் பண்ணலை. மிஸ் பனிஷ் பண்ணுவாங்க’ என்று பள்ளி செல்ல அடம் பிடித்ததைப் பார்த்த போது என் பள்ளி நாட்கள் நினைவுக்கு வந்தன. பள்ளிச் சிறுவனா யிருந்த காலத்தில் சுந்தரம் வாத்தியார் கொடுத்த அதிகபட்ச தண்டனை இந்த ‘தோர்பி கர்ணம்’தான். மறக்க முடியாத (ஆன்மீக) பனிஷ்மென்ட் ஆச்சே!

==============================================

ள்ளி நாட்கள் என்றதும் வேறொன்றும் தோன்றுகிறது. தமிழ் மொழியின் சிறப்பே இரண்டு பொருள் தரும் ஒரே வார்த்தைகள்தான். இவற்றைப் பயன்படுத்தி எழுதப்பட்ட ‘சிலேடை’ என்கிற அற்புதமான ஒரு விஷயம் தமிழ் மொழியில் நிறைய .உண்டு.

முன்பொரு பதிவில் நாங்கள் தமிழ்ப் பாடல்களை ஆங்கிலப்படுத்தி விளையாடும் வழக்கம் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். சில பாடங்கள் மொழிபெயர்ப்புக்குத் தோதாக இல்லையென்றாலும் கர்ணகடூரமாக தமிங்கிலீஷிலாவது மொழி பெயர்த்துப் பாடிவிடுவோம். ‘சிந்து ரிவரின் மிசை மூனினிலே, சேரநன்னாட்டிளம் கேர்ள்ஸ் உடனே சுந்தர தெலுகினில் ஸாங்கிசைத்து, போட்டுகள் ஓட்டி விளையாடி வருவோம்’ என்பது போல. இப்படியெல்லாம் ஆங்கிலப்படுத்தி(?)க் கொண்டிருந்த எங்களை அப்படிச் செய்ய முடியாமல் தோற்கடித்த பாடலும் ஒன்று உண்டு. கீழே நான் கொடுத்துள்ள பாடலை எப்படி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது? தெரிந்தவர் யாராவது சொல்லுங்களேன்...

ஞாயிறு என்பது கண்ணாக
திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவைப் பழமாக
சேர்ந்தே நடந்தது அழகாக

==============================================

தானே புயல் காரணமாக ‘நாகேஷ்’ என்று மழை பெய்த ஓய்ந்திருந்த (எத்தனை நாளைக்குத்தான் ‘சோ’ன்னு மழை பெஞ்சதா சொல்றது? ஹி... ஹி...), பத்து தினங்களுக்கு முந்தைய ஒருநாள். வாரத்தில் ஒருநாள் நண்பருடன் வள்ளுவர் கோட்டம் அருகில் ஒரு டீக்கடைக்குச் சென்று காபி குடித்துக் கொண்டிருந்தோம். அப்போது தெருவோரத்தின் டிரெய்னேஜில் இருந்த சிறு ஓட்டை வழியாக ஒரு எலிக்குஞ்சு தலையை எட்டிப் பார்ப்பதும், மனித நடமாட்டம் ‌கண்டதும் தலையை .உள்ளிழுத்துக் கொள்வதுமாக இருந்தது. பொந்தை விட்டு சற்று வெளியே வரும். கடையில் நின்றிருப்பவர்களில் யாராவது அசைந்தால் கடகடவென்று மீண்டும் குழிக்குள் ஓடிவிடும்.

இதை நான் கவனித்துக் கொண்டிருந்தபோதே அது நடந்தது. சுண்டெலி தலையை ‌வெளியே நீட்டிப் பார்த்துவிட்டு பொந்தை விட்டு வெளி வந்தது. சிறிது தூரம் அது முன்னேறுவதற்குள் பறந்து வந்த காக்கை ஒன்று அதைக் கவ்வியபடி பறந்து மே‌லே மரக்கிளையில் அமர்ந்தது. அதைக் கொத்தியது.

பாவம், சுண்டெலியார் கொத்தப்பட்டு, மரத்திலிருந்து கீழே விழுந்தார். காகம் அதன் அருகில் சென்று கொத்த முயல, வேறு நான்கைந்து காகங்கள் அருகில் வந்தன. இந்தக் காகம் அவற்றை விரட்டிவிட்டு தானே கவ்விக் கொண்டு மரக்கிளையில் அமர்ந்து மீண்டும் கொத்தித் தின்னத் துவங்கியது. மற்ற காகங்கள் அருகில் வந்ததும் அவற்றை விரட்டிய வண்ணமிருந்தது.

‘காக்கை கரவா கரைந்துண்ணும்’ என்று ஒரு தாடிக்காரப் புலவர் (மதுமதி! உங்களை இல்லைங்க...) இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு எழுதி வைத்தாரே... அந்தக் காகங்களெல்லாம் என்னவாயின? ‘இரை கிடைத்தாலும் இல்லையென்றாலும் உறவை அழைக்கும் காக்கைகளே’ என்று எம்.ஜி.ஆர்.  கூடப் பாடுவாரே... அப்படிப்பட்ட காகங்கள் இரை கிடைத்ததும் ஒன்றை மற்றொன்று துரத்தியதைக் கண்டு வியந்தேன். மனிதர்கள் போட்ட உணவுகளைத் தின்று தின்று காகங்கள் கூட குணம் மாறி விட்டனவா என்ன?

நகரக் காக்கைகளிடம் வேறொன்றும் கவனி்த்திருக்கிறேன். மதுரையில் நான் சிறுவயதில் இருந்த காலத்தில் காக்கைகளை சற்று தூரத்தில் இருந்து கையசைத்து ‘போ’ என்று விரட்டினாலே பறந்து விடும். சென்னை நரகத்திலோ... ச்சே, நகரத்திலோ... மாடிக் கைப்பிடிச் சுவரில் அமரும் காக்கையை சற்று தூரத்திலிருந்து ‘போ’ என்று விரட்டினால் ‘எவன்டாவன்?’ என்பது போல் ஓரக்கண்ணால் ‘ஸைட்’ அடிக்கின்றன- எத்த‌னை ஹாரன் அடித்தாலும் நகராமல் ‘இடிச்சுடுவியா நீ?’ என்கிற மாதிரி சென்னை ஜனஙகள் நடுரோடில் நடக்கிறார்களே... அந்த மாதிரி! மிக அருகில் நெருங்கி, விரட்டினால்தான் பறக்கின்றன. இந்த மெத்தனமும் நகரத்து மனிதர்களின் உணவைத் தின்பதனால் அவற்றுக்குப் பழகியிருக்குமோ என்று ஒரு எண்ணம் எனக்குள் தோன்றுவதுண்டு.

==============================================

ழைய (சாவி அவர்கள் ஆசிரியராக இருந்த) குங்குமம் இதழ் ஒன்றில் கண்ணில் பட்ட வித்தியாசமான துணுக்குச் செய்தி இது. (பட், இவங்க நேர்மை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு!)


==============================================

ஓக்கே... இப்போ to end with a smile...  லைட்டா ஹி... ஹி...ங்க!

(கோழி ஒண்ணு முட்டையிட்டு யானைக் குஞ்சு வந்ததுன்னு...)

படம்: என் நண்பர் ஜி.ஆரோக்கியதாஸ்.

Monday, January 9, 2012

நானும் ஒரு கொலைகாரனும்-3

Posted by பால கணேஷ் Monday, January 09, 2012
‘‘இன்னொரு கொலைக்காகத்தான் என்னை போலீஸ் தேடுது’’ என்று அவன் சொன்னதும் என் தொண்டை உலர்ந்து போக, பயத்துடன் அவனை ஏறிட்டேன்.

‘‘உங்க மனசுல இப்ப என்ன ஓடிட்டிருக்குன்னு எனக்குத் தெரியும் ஸார்! எங்க இவன் நம்மளையும் போட்டுத் தள்ளிடுவானோன்னு நினைக்கறீங்க... சரியா?’’ என்று சிரித்தான் அவன். ‘ஙே’ என்று விழித்தபடி தலையசைத்தேன். ‘‘சேச்சே... இங்கருந்து நேரா போலீஸ் ஸ்டேஷன் போய் சரணடையற முடிவோடதான் வந்திருக்கேன் பயப்படாதீங்க ஸார்...’’ என்றான் சிரித்தபடியே.

‘‘சரி! நீங்க ராமனைக் கொன்னதை போலீஸ் கண்டுபிடிக்கலைன்னு சொன்னீங்க. அப்புறம் எதுக்கு இன்னொரு கொலை? யாரை?’’

‘‘ஒரு இடத்துல கொள்ளையடிக்கப் போனப்ப, குறுக்க வந்த ஒருத்தரைக் கொல்ல வேண்டியதாயிடுச்சு ஸார்...’’

‘‘சரிதான்! பஞ்சமாபாதகங்கள்ல எதையும் விட்டு வெக்கலையா நீங்க? ராமனோட சொத்து எல்லாத்துக்கும் அதிபதியானீங்கதானே... அப்புறம் எதுக்கு கொள்ளை, கொலை?’’

‘‘‌விரிவா சொல்றேன் ஸார்! ஏதோ அண்ணனைக் கொலை பண்ணிட்டேன், சொத்தை அடைஞ்சிட்டேன்னு நான் சொன்னதை சுலபமா கேட்டுக்கிட்டீங்க. ஆனா அதுக்கப்புறம் நான் பட்ட அவஸ்தை இருக்கே... ‘சிவப்பு ரோஜாக்கள்’ படத்துல மழை பெய்யும் போது மண்ணிலருந்து ஒரு கை எழுந்து வருமே... அது மாதிரி ராமனைப் புதைச்ச இடம் வெளில தெரிஞ்சுடுமோன்னு மழை பெய்யறப்பல்லாம் பயந்துக்கிட்டே ஜன்னல் வழியா எட்டிப் பார்ப்பேன். கண்ணாடியில என் முகத்தைப் பாக்கறப்பல்லாம் ‘பாவி! ஏண்டா என்னைக் கொன்‌னே?’ன்னு ராமன் கேக்கற மாதிரி இருக்கும். என் முகம்தானே அவனோட முகம்? நரகம் ஸார்! சொல்லி்ப் புரிஞ்சுக்க முடியாது. நீங்க ஒரு கொலை பண்ணிப் பாத்திங்கன்னாதான் அந்த அவஸ்தை புரியும்...’’

‘‘அவ்வ்வ்வ்வ்வ...! நானும் கொலைகாரனாகணுமா? ஆள விடுங்க, கெளம்புங்க ஸார் நீங்க....’’ என்றேன் கோபமாக.

‘‘ஸாரி ஸார். அந்த Mental Agonyயை அனுபவிச்சாத்தான் புரியும்கறதுக்காகச் சொல்ல வந்தேன், இப்படி மனசாட்சி உறுத்தறப்பல்லாம் அந்த உறுத்தல் தாங்க முடியாம தண்ணியடிப்பேன். ராமனோட சொத்துக்களை வெச்சு உல்லாசமா வாழ்க்கையை அனுபவிச்சேன். ராமன் அளவுக்கு எனக்கு பிசினஸ் திறமை இல்லாததால நான் எடுத்த சில முடிவுகளால நஷ்டம் ஏற்பட்டது. நான் வேற ஏதோ லாட்டரில கிடைச்ச பணம் மாதிரி ராமனோட பணத்துல ஜாலியா வாழ்ந்ததுல சீக்கிரமே சொத்து கரைஞ்சு, கடன் கழுத்து வரைக்கும் வந்துட்டுது.

என்ன செஞ்சு கடன்லருந்து மீள்றதுன்னு புரியாம யோசிச்சுக்கிட் டிருந்தப்பதான் ‌எதேச்சையா ஒருநாள் எங்கப்பா எழுதி வெச்ச உயிலை பீரோவுல பார்த்தேன். அதுல இங்க் கறை படிஞ்ச விரல் ரேகை உயிலோட கார்னர்ல இருந்ததைப் பார்த்தேன். அண்ணன் எப்பவோ உயிலைப் பாத்தப்ப, கைல இங்க் பட்டதைக் கவனிக்காம விட்ருக்கான் போலருக்கு. அவன் ரேகையோட அதைப் பார்த்ததும் ஐடியா கிடைச்சது. எங்கயாவது பணக்கார வீடுகள்ல முகமூடி மாட்டிட்டு கொள்ளையடிக்கலாம்னு ஒரு ஐடியா வெச்சிருந்தேன். இப்ப, குறுக்க யாராவது வந்தா கொலைகூடப் பண்ணலாம். பண்ணிட்டு அந்த உயில் பேப்பரை ஓடும்போது தவற விடற மாதிரி வேணும்னே தவறவிட்டுட்டு வந்துட்டா, விரல் ரேகையை வெச்சு போலீஸ் கம்பேர் பண்ணினாலும் டில்லிக்குப் போன தம்பி (நான்தான்) வந்து இப்படில்லாம் பண்றான்னு போலீஸை மிஸ்லீட் பணணிடலாம்.\

 -இப்படி ஒரு ஐடியா கிடைச்சதும் உடனே செயல்ல இறங்கினேன். ரெண்டு மாசம் முன்னால அயனாவரத்துல ஒரு லட்சாதிபதி யோட வீட்ல கொள்ளைன்னு பேப்பர்ல படிச்சிருப்பீங்களே.. அது என் கைங்கரியம் தான்!  அதுல நான் மாட்டிக்கலை. ‌அதுக்கப்புறம் பொறுமையா ஒரு மாசம் கேப் விட்டு, நிதானமா ப்ளான் பண்ணி பல்லாவரத்துல ஒரு கோடீஸ்வரன் வீட்டுல போன மாசம் கொள்ளையடிக்கப் போனேன். அங்கதான் விதி விளையாடிடுச்சு. கொள்ளையடிச்சுட்டு கிளம்பும் போது ஒரு வேலைக்காரன் என்னைப் பாத்துட்டான். அவன் கூச்சல் போட்டதுல அந்த கோடீஸ்வரனும் வந்து ரெண்டு பேருமா என்னைப் பிடிககப் பாத்தாதங்க. போராட்டத்தல என்னோட முகமூடியை அந்தக் க‌ோடீஸ்வரன் கழட்டிட்டான். வெறியில அவனைக் குத்திட்டேன். அதைப் பாத்ததும் பயத்துல வேலைககாரன் பிடியை விட, நான் ஓடும் போது வேணும்னே தவற விடற மாதிரி (போட்ட ப்ளான்படி) உயிலைத் தவறவிட்டுட்டு தப்பிச்சுட்டேன்.

வேலைக்காரன் அடையாளம் காட்ட, போலீஸ் என்கிட்ட வந்துச்சு. நாமதான் இப்ப சமூக அந்தஸ்துள்ள பணக்காரனாச்சுதே! இன்ஸ்பெக்டர் கிட்ட கெத்தாவே பேசினேன். ‘‘மிஸ்டர் இன்ஸ்பெக்டர்! டில்லியில எதோ வேலை கிடைச்சிருக்குன்னு என்கிட்ட சொல்லிட்டுப் போன என்னோட தம்பி லட்சுமணன்தான் இதைல்லாம் செஞ்சிருக்கணும். அயோக்கியன்! நானும் அவனும் இரட்டையர்கள்ங்கறதால என்மேல சந்தேகம் விழட்டும்னே இந்த வேலைக்காரன்கிட்ட முகத்தைக் காட்டிருப்பான் ராஸ்கல்!’’ என்றேன்.

‘‘கொலை நடந்த இடத்துல இந்த உயில் பத்திரத்தைத் தவறவிட்டுட்டு கொலை பண்ணினவன் ஓடியிருக்கான்...’’ என்று அதை எடுத்துக் காட்டினார்.

‘‘பீரோவுல இருந்த இதைக் காணம்னுதான் ஒரு வாரமா தேடிட்டிருக்கேன். படவா! திருடிட்டுப் போனது அவன்தானா?’’ என்று கோபமாக இருப்பது போல நடித்தேன்.

‘‘ஸார்...  உங்க கைரேகையை நான் எடுத்துக்கலாமா? போலீஸ் ஃபார்மாலிட்டிக்ககாக, ப்ளீஸ்!’’ என்றார் இன்ஸ்.

‘‘தாராளமா... போலீசுக்கு ஒத்துழைக்க வேண்டியது என்மாதிரி பெரிய மனுஷங்களோட கடமையில்லையா...’’ என்று கைரேகையைத் தந்தேன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டு

சிரித்தது நான் அல்ல, விதி என்பது பின்னால்தான் புரிந்தது. அடுத்த நாள் இன்ஸ்பெக்டர் மறுபடி வீட்டுக்கு வரவும், ‘‘என்ன ஸார்... அவன் அகப்பட்டானா?’’ என்று கேட்டேன்.

‘‘அகப்பட்டது அவன் இல்ல மிஸ்டர் ராமன், நீங்கதான்! அந்த உயில்ல இருக்கற ரேகையும், உங்க ரேகையும் நூறு சதவீதம் ஒத்துப் போகுது. தம்பி பேர்ல பழி போட்டுட்டு தப்பிக்கப் பாக்கறது நீங்கதான். உங்களை அரெஸ்ட் பண்றேன்’’ என்றார்.

என் காலின் கீழ் பூமி நழுவுவதைப் போலிருந்தது. தலை ரோலர் கோஸ்டரில் போனதுபோல் சுற்றியது. ‘எப்படி இது சாத்தியம்? மைகாட்! எப்போதோ ஒரு சந்தர்ப்பத்தில் மைக்கறையுடன் உயிலை நான் தொட்டிருக்கிறேன். அதை மறந்து அண்ணனின் ரேகை என்று எண்ணியது  வினையாகி இப்போது மாட்டிக் கொண்டேனே...

என் அருகில் வந்த இன்ஸ்பெக்டரை அவர் சற்றும் எதிர்பாராத வகையில் தலையில் அடித்தேன். தடுமாறிக் கீழே விழுந்தவரை, மாடிப் படியில் முட்டி மயக்கமுறச் செய்துவிட்டு தப்பினேன். ஒரே ஓட்டம்! போலீஸ் இப்போது என்னை வலைவீசித் தேடிக் கொண்டிருக்கிறது. ஓடிஓடி எனக்கும் அலுத்து விட்டது. போலீஸில் சரணடையப் போகிறேன். அதற்கு முன்னால் உங்களைப் பார்த்து இதைச் சொல்லத்தான் வந்தேன்...’’ என்றான்.

‘‘நான் ஏதோ ஹெல்ப் பண்ணனும்னீங்களே....’’

‘‘ஆமாம் ஸார்... இந்தாங்க என்னோட, அதாவது ராமனோட விஸிட்டிங் கார்ட்’’ நீட்டினான். வாங்கிக் ‌கொண்டேன். ‘‘நான் போலீஸ்ல சரணடைஞ்சவுடனே கேஸ் நடந்தா எனக்கு ஆயுள் தண்டன கிடைக்குமோ, தூக்கு தண்டனை கிடைக்குமோ தெரியாது.  ஆனா ஸ்வேதா என்னைப் பார்த்து அழுவா. என்னை - அதாவது அவ புருஷனை - காப்பாத்தணும்னு வக்கீலை வெச்சு முயற்சி பண்ணுவா-  நான் அவ புருஷன் ராமன் இல்ல, லட்சுமணன்தான். ராமன் செத்துட்டான்கற விஷயத்தை நீங்க அவளை சந்திச்சு சொல்லணும். இந்த விஷயத்தை அவளோட முகத்தைப் பார்த்துச் சொல்ற துணிச்சல் எனக்கு இல்ல...’’

‘எல்லா அயோக்கியத்தனங்களையும் பண்றதுக்கு இவனுக்கு துணிச்சல் இருந்துச்சு. இதுககு இல்லாமப் போயிடுச்சாககும்’ என்று மனதில் நான் நினைத்துக் கொண்டிருக்க, அவன் தொடர்ந்தான். ‘‘அவகிட்ட நான் சொன்ன எல்லாத்தையும் சொல்லி, என்னை மன்னிச்சுடச் சொல்லுங்க ஸார், ப்ளீஸ்! நான் வர்றேன்...’’ என்ற அவன், நான் பேச முற்படுவதற்கு முன் சட்டென்று எழுந்து வெளியேறி விட்டான் அவன். ஸாண்ட்ரோ புறப்பட்டுச் செல்லும் ஓசை கேட்டது.

என்ன செய்வதென்று ‌புரியாமல் பிரமை பிடித்தவன் மாதிரி ‘ஙே’ என்று விழித்தபடி சுவரைப் பார்த்து அமர்ந்திருந்தேன் நான். நீங்களே சொல்லுங்கள் சார்/மேடம்! நான் என்ன செய்ய வேண்டும்?

Friday, January 6, 2012

நான் + ஒரு கொலைகாரன்-2

Posted by பால கணேஷ் Friday, January 06, 2012
திர்ச்சியில் சற்று நேரம் எனக்குப் பேச்சு வரவில்லை. பின் சற்று சுதாரித்துக் கொண்டு கேட்டேன். ‘‘ஏன் அண்ணனைக் கொலை பண்ணீங்க?’’

‘‘சின்ன வயசுலருந்தே ஏற்பட்ட பிளவு ஸார் அது. நான் படிப்புல கொஞ்சம் சுமார். ராமன் படிப்புல கெட்டி. நான் அப்பா தர்ற பாக்கெட் மணியெல்லாம் செலவழிச்சு காலி பண்ணிடுவேன். ஆனா ராமன் அதுல பாதியச் செலவு பண்ணிட்டு பாதியச் சேத்து வெப்பான். இப்படி எல்லா விஷயத்துலயும் எதிரெதிர் பர்ஸனாலிட்டிகளா இருந்தோம். எங்கப்பாவுக்கு என்னைவிட ராமன் மேல பாசம் ஜாஸ்தி. எங்கப்பா பெரிய கோடீஸ்வரர். அவன் எது கேட்டாலும் உடனே கிடைக்கும். எனக்குன்னா ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டுட்டுத்தான் தருவார் எங்கப்பா. இதனால எனக்கு ராமன் மேல வெறுப்பு வளர்ந்துட்டே வந்தது...’’

‘‘அந்த வெறுப்புலதான் கொன்னீங்களா?’’

‘‘அதுமட்டுமில்ல ஸார்... இன்னொரு விஷயத்துலயும் என் லைஃப்ல விளையாடினான். நான் என் மாமா பொண்ணு ஸ்வேதாவைக்  காதலிச்சேன். அவளுக்கும் என் மேல ஒரு ஈர்ப்பு இருக்கறதா உணர்ந்தேன். பட், எங்கப்பா நான் பொறுப்பில்லாதவன்னும், ராமன்தான் அவளுக்குப் பொருத்தமான வன்னும் சொல்லி அவளை ராமனுக்குக் கட்டி வெச்சுட்டார். என்னோட எதிர்ப்பைக் காதிலயே வாங்கிக்கலை.

இந்தப் படுபாவி ராமனும், என் விருப்பத்தைத் தெரிஞ்சுக்கிட்டும், நான் அவன் கிட்ட எனக்காக விட்டுத்தரச் சொல்லிக் கெஞ்சினதை காதுலயே போட்டுக்காம, அவளை என் கண் முன்னாலயே கல்யாணம் பண்ணிட்டு குடும்பம் நடத்தினான். அண்ணனா சார் அவன்? எனக்குள்ள அவன் மேல இருந்த வெறுப்போட சதவீதம் அதிகமாச்சு. கோபத்துல கொந்தளிச்சுட்டிருந்த எனக்கு அடுத்த இடி எங்கப்பா-அம்மா கார் விபத்துல இறந்த பின்னால விழுந்தது.’’

‘‘அம்மாவும் அப்பாவும் ஒரே நேரத்துல இறந்துட்டாங்களா? இதைவிடப் பெரிய இடி என்ன இருக்கு?’’

‘‘இருந்தது ஸார். எங்கப்பாவோட உயில்ல சொத்துல முக்கால் பகுதி ராமன் பேர்லயும், கால் பகுதி என்னோட பேர்லயும் எழுதியிருந்தார். அது அவன் மேல எனக்கிருந்த கோபத்தோட சதவீதத்தை அதிகமாக்கிச்சு. ராமன் என் பங்கைப் பிரிச்சுக் கொடுத்து தனியா அனுப்பிட்டான். நான் எனக்குக் கிடைச்ச பங்கை உல்லாசமா செலவழிச்சு சீக்கிரமே அழிச்சுட்டேன். ராமன் பிஸினஸ்ல பணத்தைப் போட்டு பலமடங்காப் பெருக்கியிருந்தான்.
  வேற வழியில்லாம நான் அண்ணன் கிட்டத்தான் செலவுக்குப் பணம் கேட்டு கையேந்த வேண்டியிருந்தது. அவன்கிட்ட பணம் கேக்கறப் பல்லாம், தம்பியாச்சேன்னு பரிதாபப் பட்டு பலசமயம் பணம் கொடுப்பான். சில சமயங்கள்ல அட்வைஸ் மழையா பொழிஞ்சு தள்ளுவான். நான் ஊதாரித் தனமா ஊர் சுத்தாம அவன் கம்பெனில மேனேஜரா சேர்ந்து வேலை பாக்கணும்பான். ‘நீ முதலாளியா இருப்ப, நான் உன்கிட்ட வேலை பாக்கணுமாடா?’ன்னு எனக்கு கோபமான கோபம் வரும். பணம் கேட்க அவன் வீட்டுக்குப் போறப்ப ஸ்வேதா கண்ணுல படும் போதெல்லாம் எனக்குள்ள வயிற்றெரிச்சலோட அளவு ஜாஸ்தியாயிடும்.

ஒரு கட்டத்துல வெறுப்பாகிப் போயி, என்னை ‘நீ என் தம்பியேயில்ல, இனி இங்க வராத’ன்னு கழுத்தைப் பிடிச்சு வீட்டை விட்டு வெளில தள்ளி அவமானப்படுத்திட்டான். அது நடக்கறப்ப ஸ்வேதா கண்கொட்டாம பாத்துட்டிருந்தா. அவமானத்துல முங்கிப் போய் திரும்பிட்டிருந்தப்பதான் எனக்குள்ள இருந்த வெறி அதிகமாச்சு. அவனைக் கொன்னுடணும்னு திட்டம் போட வெச்சுது...’’

‘‘திட்டம் போட்டா கொன்னிங்க?..?’’

‘‘ஆமாம். போலீஸ்ல மாட்டிக்கிட்டு ஜெயிலுக்குப் போக நான் விரும்பலை. நான் எந்த வகையிலயும் மாட்டிக்காம இருக்கணும்னு முடிவு பண்ணிக்கிட்டு பல நாட்கள் யோசிச்சு திட்டத்தை அலசி ஆராய்ஞ்சு பாத்துட்டு, சில மாதங்கள் காத்திருந்து அப்புறம்தான் செயல்படுத்தினேன்.

ஒருநாள் அவன்கிட்ட போயி, ‘‘டில்லியில ஒரு கம்பெனில வேலை கிடைச்சிருக்குன்னும் அங்க போய் செட்டில் ஆகப் போறேன்னும் சொல்லி அவன்ட்ட பணம் கேட்டேன். ஏ.ஸி. கோச்சுல டிக்கெட் போட்டு, கையில நிறையப் பணமும் கொடுத்தான். ‘விட்டதுடா சனி’ங்கற மாதிரி ஒரு ரிஃலீ்ப் அவன் முகத்துல பாத்ததும் எனக்கு கோபம் எகிறிச்சு.

ரயில்ல ட்ராவல் பண்ணி, நடுராத்திரியில ஏதோ ஒரு ஸ்டேஷன்ல நின்னப்ப இறங்கிட்டேன். ஆட்டோ, டாக்ஸி பிடிச்சா பின்னால பிரச்சனை வரும்னு லாரி பிடிச்சு சென்னைக்கு வந்தேன். என் பெட்டியை ஒரு பாழுங்கிணத்துல போட்டு (அதுல வேல்யுபிளா எந்த திங்ஸ்ம் இல்ல- என் டிரஸ்கள் தவிர) டிஸ்போஸ் பண்ணிட்டேன். (எவிடென்ஸ் கூடாது ஸார்) மீசைய ‌ஷேவ் பண்ணிக்கிட்டு, ராமன் பங்களா சுவர் ஏறிக் குதிச்சு, ராத்திரி பூரா இருட்டுல, கொட்டற பனியில தோட்டத்துல ஒளிஞ்சிருந்தேன்.

காலையில தோட்டத்துல வாக் போறது அவன் பழக்கம்னு தெரிஞ்சு கையில இரும்புத் தடியோட காத்திருந்தேன். அவன் வந்தான். ஓங்கி ஒரே போடு! கத்தறதுக்குக் கூட அவகாசமில்லாம துடிச்சு செத்துட்டான். அவன் கண்கள்ல மட்டும் ‘ஏண்டா?’ங்கற கேள்வி இருந்ததை என்னால மறக்கவே முடியாது.

மடமடன்னு அவன் டிரஸ்ஸைக் கழட்டி நான் போட்டுக்கிட்டு, என் டிரஸ்ஸை அவனுக்குப் போட்டு விட்டேன். தோட்டத்துல மரம் நடுறதுக்காக ஒரு பெரிய குழி தோண்டியிருந்தாங்கன்றதை முதல்நாளே கவனிச் சிருந்தேன். அந்தக் குழியில அவன உடம்பைத் தள்ளி அவசரமா மண்ணைத் தள்ளினேன். அப்போதான் அந்தக் குரல் கேட்டுச்சு...’’

‘‘யாரும் பாத்துட்டாங்களா? மாட்டிக்கிட்டீங்களா? அதான் போலீஸ் தேடுதா உங்களை?’’

‘‘சரியான அவசரக்குடுக்கை ஸார் நீங்க! குரல் கொடுத்தது போலீஸ் இல்ல, குரல் கேட்டதும் திடுககிட்டுத் திரும்பிப் பார்த்தா... வீட்டு தோட்டக்காரன்! வேகமா வந்து, ‘நீங்க ஏன் ஸார் இந்த வேலை பண்ணணும்? நான்தான் காலையில வந்து குழியை மூடி மரக்கன்னை நட்டுடறேன்னு சொல்லியிருந்தேனில்ல... நான் குழியை மூடிடறேன்’ன்னான். நல்ல வேளையா அதுக்குள்ள நான் தள்ளின மண் ராமனை மூடியிருந்ததால அவன் எதையும் பார்க்கலை. மீதி மண்ணை அவன் தள்ளி மரக்கன்றை நட்டு்ட்டான். நான் பங்களாவுக்குள்ள வந்தேன்.‘‘

‘‘இப்ப நான் ராமன். இது என்னோட பங்களா, என் சொத்து. நினைக்கவே தித்திப்பா இரு்ந்தது. ஸ்வேதா வந்து காபி கொடுத்தா. அவளைக் கட்டிப் பிடிச்சு முத்தமிட்டேன். மனசுக்குள்ள ஒரு ஓரத்துல ‘இது தப்புடா’ன்னு மனசாட்சி குரல் கேட்டாலும், ‘நியாயமா எனக்குச் சேர வேண்டியவளை தட்டிப் பறிச்சவன் அவன்தானே. இதுல ஒண்ணும் தப்பில்ல’ன்னு அந்தக் குரலோட கழுத்தை முறிச்சுட்டேன்.

அதுக்கப்புறம் எந்த உறுத்தலும் இல்லாம நான் முழுமையா ராமனாவே மாறிட்டேன். அவனோட நடவடிக்கைகள், மேனரிஸம் எல்லாமே எனக்கு அத்துபடியானதால யாருக்கும் என்மேல எந்தச் சந்தேகமும் வரலை. ஊரைப் பொறுத்தவரை லட்சுமணன் டில்லி போயிட்டான். ராமன்தான் இங்க இருக்கான். எல்லாம் சரியாவே நடந்துச்சு. அந்தக் கொலைய போலீஸ் கண்டுபிடிக்கவே இல்லை ஸார்...’’

‘‘பின்ன... போலீஸ் தேடுதுன்னு சொன்னீங்களே...’’

‘‘ஆமா ஸார். போலீஸ் தேடறது ராமனைக் கொலை செஞ்சதுககாக இல்ல. நான் செஞ்ச இன்னொரு கொலைக்காக...’’ என்று பொக்ரான் அணு குண்டையே என்மேல் வீசினான் அவன். அதிர்ச்சியில் எனக்கு நாக்கு உலர்ந்து போனது.

-ஹய்யோ... ஹய்யோ... அதிர்ச்சி மேல அதிர்ச்சியா குடுக்கறானே... 
அடுத்த பதிவுல முடிச்சுடறேன்!

Wednesday, January 4, 2012

நானும் ஒரு கொலைகாரனும்-1

Posted by பால கணேஷ் Wednesday, January 04, 2012
ரு மனுஷனுக்கு நேரம் சரியில்லைன்னா அது எப்படியெல்லாம் சோதனைகளைக் கொண்டு வருது? சனிப் பெயர்ச்சில என்னோட கிரக நிலை சரியில்லைன்னு போட்டிருந்துச்சுன்னு சரிதா சொன்னப்ப, ஜோசியத்தை நம்பற அவளைக் கிண்டலடிச்சேன். ஆனா... எனக்கு வந்த சோதனை இருக்கே... அப்படி என்னய்யா நடந்துச்சுன்னு கேக்கறீஙகதானே... சொல்றேன்:

காலை நேரம். அலுவலகத்திற்குக் கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்த நேரம்... காலிங் பெல் ஒலித்தது. சென்று கதவைத் திறந்தேன். வெளியே... கண்ணியமான, விலையுயர்ந்த .உடை அணிந்து நின்றிருந்த அந்த இளைஞன், ‘‘ஸார், நீங்கதானே கணேஷ்?’’ என்றான். வெளியே அவன் வந்த ஸாண்ட்ரோ கார் பளபளப்பாக நின்றிருந்தது.


‘‘ஆமாம். உள்ள வாங்க...’’ என்றேன். உள்ளே வந்ததும் அவனை சேரில் அமரச் சொல்லிவிட்டு, அவனை ஏறிட்டேன். சராசரி உயரம், வட்ட முகம், பிரபுதேவாவுக்கு இருப்பது போல ஸ்ப்ரிங் முடி. பஃப்களில் பார்க்கும் இன்றைய இளைஞர்களை ஒத்திருந்தது அவன தோறறம். ‘‘யார் நீங்க? என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்திருக்கீங்க?’’ என்று கேட்டேன்.

‘‘ஸார்! ‘மின்னல் வரிகள்’ன்ற பேர்ல ப்ளாக் எழுதறது நீங்கதானே...?’’

‘‘ஆமாங்க... நான் யார்ட்டயும் அதைச் சொன்னது கிடையாதே. எப்படி என்னைக் கண்டுபிடிச்சீங்க?’’

‘‘நான் பக்கத்துல கே.கே.நகர்லதான் இருக்கேன் ஸார். ப்ளாக்ல படிக்கும் போது உங்க ஃபோட்டோவை பார்த்திருக்கேன். இந்த ஏரியாவுல ஒரு நாள் கிராஸ் பண்றப்ப நீங்க வீட்டுக்குள்ளருந்து வெளில வந்து ஸ்கூட்டர்ல போறதப் பாத்தேன். நீங்கதான்னு தெரிஞ்சுககிட்டேன். அது இப்ப உதவியா இருக்குது. நீங்க எழுதற மேட்டர்ஸ் நிறையப் படிச்சிருக்கேன். நல்லா எழுதறீங்க ஸார்...’’ என்றான். என் எழுத்தைப் படித்துவிட்டு ஒருவன் வீடு‌‌ தேடி வந்து பாராட்டுவதாவது! உள்ளே திரும்பி சரிதாவைப் பெருமையாகப் பார்த்தேன். ‘‘ரொம்ப நன்றி ஸார்!’’ என்றேன்.

‘‘ஸார், உங்களால எனக்கு ஒரு ஹெல்ப் ஆகணும். அதுக்குத்தான் வந்தேன்....’’

‘‘சொல்லுங்க. என்னால முடிஞ்சதுன்னா கண்டிப்பா பண்றேன்...’’

‘‘ஸார், நான் இப்ப சொல்லப் போறது என்னோட லைஃப்ல நடந்த விஷயங்கள். அதை நீங்க முழுசாக் கேட்டாதான் உங்ககிட்ட நான் ஹெல்ப் கேக்க முடியும். என்னோட கதைய நீங்க உங்க ப்ளாக்ல வேணும்னாலும் எழுதலாம். எனக்கு ஆட்சேபணையில்ல...’’

அடடா... ஆடு தானேவந்து பிரியாணியாகிறேன் என்கிறதே... பதிவுக்கு மேட்டர் தேத்த அலையும் நமக்கு இப்படி ஒரு சான்ஸா? மகிழ்ச்சியாக, ‘‘எழுதறேன் ஸார். முதல்ல உங்க பேர் என்ன சொல்லுங்க...’’ என்றேன்.


‘‘என் பேர் லட்சுமணன். இப்ப ராமன் ஸார்...’’

‘‘அடிக்கடி பேர் மாத்திக்குவீங்களா நீங்க?’’

‘‘இல்ல ஸார். ஒரு சின்னத் தப்புப் பண்ணினதுக்காக இப்ப என்னை போலீஸ் தேடிக்கிட்டிருக்கு...’’

‘‘போலீஸா? போலீஸ் தேடற அளவுக்கு என்ன தப்புப் பண்ணினீங்க?’’

‘‘கொலை பண்ணிட்டேன் சார்...’’ என்றான் கூலாக.

நான் திடுக்கிட்டேன். ‘‘கொக்.... கொக்.... ‌கொக்... கொலையா?’’ என்றேன் துண்டுதுண்டாக. ‘ஙே’ என்று விழித்தேன்.

‘‘அதுக்கு ஏன் சார் கோழி மாதிரி கூவறீங்க? நான் சொல்ற மேட்டரை கவனமாக் கேட்டு உங்க ப்ளாக்ல எழுதுங்க...’’

‘பாவி! கொலை பண்ணுறது சின்னத் தப்பாடா உனக்கு?’ என்று மனதிற்குள் எழுந்த கேள்வியை அடக்கிக் கொண்டு உதறலுடன் சொன்னேன்: ‘‘ஸார், நான் கொஞ்சம் பயந்த சுபாவம். நீங்க வேணா ‘நாஞ்சில் மனோ’ன்னு ஒருத்தர் எழுதறார். நல்ல தைரியசாலி! அவரைப் பாருங்களேன்...’’

‘‘ஹலோ, நானும் ப்ளாக்லாம் படிக்கறவன்தான். எனக்கு உள்நாட்டில எழுதறவங்கதான் வேணும்...’’

‘‘அப்ப ‘சி.பி.செந்தில்குமார்’னு நம்ம ஃப்ரெண்டு ஈரோடுலருந்து எழுதறாரு. ரொம்பப் பிரபலம். நிறைய ஃபாலோயர்ஸ் உண்டு அவருக்கு. கில்மாப் படங்களுக்கு விமர்சனம் தவிர அப்பப்ப உண்மைக் கதைகளும் எழுதுவார். அவரை வேணாப் பாருங்களேன்...’’ என்றேன். மனதிற்குள் ‘ப்ளாக்ல இருக்கற ஃபோட்டோவை முதல்ல எடுத்துரணும்டா கணேஷ்!’

‘‘சும்மாருங்க சார்.. நான் சொல்றதை எழுதறதுக்கு ஃபேமஸ் ஆட்கள் வேண்டாம்....’’

‘‘அப்படியா ராமன் ஸார்? அப்ப ‘ராஜி’ன்னு நம்ம தங்கச்சி ப்ளாக் எழுதிட்டிருக்காங்க. உங்க கார்ல போனா மூணு மணி நேரத்துல பாத்துடலாம்...’’

‘‘பொம்பளைங்கட்ட சொல்ல நான் விரும்பலை. உங்களை என்ன கொலையா பண்ணச் சொன்னேன். கேக்கத்தானே ‌சொன்னேன்? கேளுங்க ஸார்...’’ என்றான் அதட்டலாக.

‘விட்டால் நம்மைக் குத்தி விடுவானோ’ என்று உள்ளே ஒரு எண்ணம் ஓட, நடுங்கியபடி அதை வெளிக்காட்டாமல் , ‘‘சரி, கேக்கறேன். சொல்லுங்க ஸார்...’’ என்றேன். (வேற வழி?)

அவன் பேசுவதற்கு வாயைத் திறந்த நேரம்... சரிதா ட்ரேயில் இரண்டு காபிக் கோப்பைகளுடன் வந்தாள். ‘‘காபி எடுத்துக்கங்க...’’ என்றாள். நான் ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டேன். அந்த ராமன், ‘‘எனக்கு காபி வேணாம். ஹாட் வாட்டர் தாங்க மேடம்...’’ என்றான்.

‘‘அதைத்தான் காபின்னு சொல்லித் தர்றா. சும்மா குடியுங்க...’’ என்றேன். சரிதாவின் முகத்தில், ‘உள்ள வருவில்ல... அப்ப இருக்கு உனக்கு’ என்ற வரிகள் தெரிந்தன. அவள் திரும்பிச் சென்றபின் அவன் பேசத் தொடங்கினான்:


‘‘என் அண்ணன் ராமனும், நானும் இரட்டைப் பிறவிகள். எனக்கு கால் க்ட்டை விரலில் ஒரு மச்சம் உண்டு என்பதைத் தவிர இருவருக்கும் வேறு எந்த உருவ வித்தியாசமும் கிடையாது. இந்த மாதிரி இரட்டைக் குழந்தைகளை பெற்றவர்கள் மட்டும் சரியாக அடையாளம் கண்டு கொள்வார்கள். பள்ளிக்கூடத்துலயும் சரி, உறவினர்கள் மத்தியிலயும் சரி, யாரு ராமன், யாரு லட்சுமணனனு ஒரு குழப்பம் இருந்தது. என் அப்பா நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது என் கழுத்தில் ஒரு கறுப்புக் கயிறு கட்டி வைத்திருந்தார் மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்வதற்காக.

அதென்னமோ தெரியல... ட்வின்ஸ்களோட பேரண்ட்ஸ் எல்லாருமே ரெண்டு‌ பேருக்கும் ட்ரெஸ்லருந்து, ப்ரஷ் வரைக்கும் ஒரே மாதிரிதான் வாங்கறாங்க. எங்கப்பாவும் அப்படித்தான் செஞ்சார். நாங்கள் வளர்ந்து வாலிபர்களான பிறகு நான் சொன்ன யோசனையின் படி ராமன் மீசை வளர்க்காமல் இருந்தான். நான் மீசை வைத்திருந்தேன். இதுதான் எங்களை அடையாளம் கண்டுகொள்ள வழியாக இருந்தது. நாங்க ஒற்றுமையா பாசமுள்ள அண்ணன் தம்பிகளா வாழணும்னு ஆசைப்பட்ட எங்கப்பா எங்களுககு ராமன் - லட்சுமணன்-னு பேர் வெச்சார்...’’

‘‘இவ்வளவு உருவ ஒற்றுமையுள்ள நீங்க அண்ணனுக்கேத்த தம்பியா இருந்திருப்பீங்க...’’

‘‘யார் சொன்னது? உருவம்தான் ஒற்றுமையா இருக்குமே தவிர, நாங்க ரெண்டு பேரும் நேர்எதிராத்தான் இருந்தோம். நான் கொலை செஞ்சேன்னு சொன்னேனே.... அது எங்கண்ணன் ராமனைத்தான்’’ என்று ஒரு வெடிகுண்டை வீசினான் அவன். நான் அதிர்ந்து போனேன்.
-அடுத்த பகுதியில முடிச்சிரலாம்...

ஒரு பின்குறிப்பு: இந்தப் பதிவில் வெளியிட்டுள்ள என் படங்களைப் பார்த்து ‘கொலவெறி’யுடன் கம்பு, கட்டைகளை எடுப்பவர்கள் நண்பர் ‘நாஞ்சில் மனோ’வின் ப்ளாக்கில் சென்று வீசும்‌படி கோரப்படுகிறார்கள். ஐடியா உபயம் அவ்விடம்தான்.

ஒரு மகிழ்ச்சி: நான் வலையுலகில் எழுதத் துவங்கி நான்கு மாதங்கள் முடிந்திராத நிலையில் சென்ற ஆண்டின் ‌வலைப்பதிவர் பட்டியலில் தமிழ்மணம் திரட்டி எனக்கு 55வது இடம் கொடுத்துள்ளது.

ஒரு நன்றி நவிலல்: இதற்கு முழுமுதற் காரணம் உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவுமே. திரட்டியின் மதிப்பைவிட மேலாக உங்கள் இதயங்களில் எனக்கு ஒரு இடம் தந்துள்ள நட்புகள், உறவுகளான உங்கள் யாவருக்கும் என் கைகுலுக்கல் + இதயம் நிறைந்த நன்றிகள்!

ஒரு வருத்தம்: எனக்கு வலைக்கணக்கைத் துவக்கித் தந்து, ஆரம்ப நாட்களில் திரட்டிகளில் இணைத்து வழிகாட்டியாக .உடனிருந்த நண்பர் ‘சேட்டைக்காரன்’ இப்போது வலையுலகில் இல்லாதது. இப்போதும் அவரை எழுதச் சொல்லி நிறைய இமெயில்களும், போன்களும் வருவதாகச் சொன்னார். ‘‘நீங்கதான் பாக்கறீங்களே... என் மனநிலையும், உடல்நிலையும் சரியில்லாத நிலையில நான் எப்படி எழுத முடியும்? எல்லாருக்கும் என் நன்றியையும், வலையுலகில் நான் செயல்பட முடியாத நிலையையும் தெரிவிச்சுடுங்க’’ என்றார். ‌இதன் மூலம் தெரிவித்து விட்டேன்!

Monday, January 2, 2012

‘‘மாதங்களில் நான் மார்கழியாயிருக்கிறேன்’’ என்றான் இறைவன். ‘‘மாதங்களில் அவர் மார்கழி’’ என்று காதலியை வர்ணித்தார் கண்ணதாசன். இத்தனை சிறப்பு மிக்க மார்கழி மாதம் பிறந்தபோதே மார்கழிச் சிறப்பையும், ஆண்டாள் கவிதையையும் வைத்து ஒரு பதிவு போட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். சற்றே தாமதமானதில் மார்கழிச் சிறப்பைப் பற்றி பலரும் பதிவிட்டிருந்ததைப் படிததேன் மகிழ்ந்தேன். மார்கழி 17ம் நாளான இன்று நான் மிக ரசித்த ஆண்டாளின் திருப்பாவையில் 17, 18ம் பாடல்களையும், அதன் எளிய தமிழ் மொழிபெயர்ப்பையும் வழங்கி மகிழ்கிறேன்.

தற்குமுன் என் சிறுவயது அனுபவம் ஒன்று. மதுரையில் மார்கழி மாத அதிகாலையில் பஜனைக் கோஷ்டியினர் பல தெருக்களிலும் பாடியபடி வந்து எங்கள் தெருவைக் கடந்து அடுத்த தெருவில் இருந்த கோதண்டராமர் கோயிலில் முடிப்பார்கள். பனி பெய்யும் அந்த அதிகாலையில் எழுந்திருப்பதே அந்தச் சிறு வயதில் பெரிய விஷயம். அதிலும் குளித்துவிட்டு பஜனை கோஷ்டியுடன் செல்வது... நடக்கிற காரியமா? ஆனால் பஜனை கோஷ்டியுடன் சேர்ந்து பாடியபடி போனால் கோதண்டராமர் கோயிலில் சர்க்கரைப் பொங்கல் கிடைக்கும். அதை விட்டுவிடவும் மனம் வராது.

அதற்காக பஜனைக் கோஷ்டி எங்கள் தெரு முனையில் வரும்போது முகம் கழுவி, குளித்த எஃபெக்டை கொண்டுவந்துவிட்டு, பஜனைக் கோஷ்டியுடன் மெல்லக் கலந்து கொள்வேன். அடுத்த தெரு வரும்வரையில் என் குரல்தான் அங்கு உரத்து ஒலிக்கும். (நான் வருவதை ரிஜிஸ்டர் செய்ய வேண்டுமே...) கோயிலில் பார்த்தசாரதி ஐயங்கார், ‘‘நீ பாடிண்டு வந்தாயோடா?’’ என்று சந்தேகமாகக் கேட்பார். ‘‘என்ன மாமா... நான்தான் முதல்லருந்தே வரேனே... என் குரலைக் கேக்கலையா நீங்க..?’’ என்பேன். ‘‘படவா! சர்க்‌கரைப் பொங்கலுக்காக பெருமாளண்டை நின்னுண்டு பொய் சொல்லப்படாது. இந்தா ரெண்டு தொன்னையா வாங்கிக்க, போ...’’ என்று செல்லமாக தோளில் தட்டி சர்க்கரைப் பொங்கல் தருவார். (இப்போது பார்த்தசாரதி ஐயங்கார் பெருமாள் திருவடி சேர்ந்து விட்டதாக சமீபத்தில் என் பால்ய நண்பனை மதுரையில் பார்த்தபோது சொன்னான்).

ண்டாள்! தமிழில் பெண் கவிஞர் என்றால் முதலில் நினைவுக்கு வருவது ஆண்டாளின் பாடல்கள்தான். விவரமறியாத வயதில் ‘விஷ்ணு  சட்டை போடறதில்லைங்கறத ஆண்டாளே ‘ஓங்கி உலகளந்த உத்தமன் Barebodyன்னு பாடியிருக்காங்கடா’ என்று சொல்லிச் சிரி்த்தது நினைவில் வருகிறது. பின்னாளில் தமிழின் சுவையறிந்து கவிதைகளில் மூழ்கிய காலத்தில் ஆண்டாளைப் படித்த போது உடனே நமஸ்கரிக்கத் தோன்றியது. இனி ஆண்டாள் அருளிய திருப்பாவையின் 17 மற்றும் 18ம் பாடல்கள்:

ம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
    எம்பெருமான் நந்தகோபாலா! எழுந்திராய்;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே!
    எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்;
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
    உம்பர் கோமானே! உறங்காதெழுந்திராய்;
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
    உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்!
விளக்கம்: ‘‘ஆடை அணிகலன்களையும், அன்னத்தையும், தூய்மையான பருகும் நீரையும், போதும் போதும் என்னும் அளவுக்குத் தானமாகக் கொடுக்கும் நந்தகோபாலா, எழுந்திரு!

பூக்‌கொழுந்தே, புகுந்த வீட்டின் ஒளிவிளக்கே! எங்கள் தலைவியே! தாயே! யசோதா; எழுந்திரு!

பொற்கழல் பூண்ட பலதேவா! அகிலம், ஆகாயம் என அனைத்தையும் காலால் அளந்த கண்ணா! அண்ணன், தம்பி இருவரும் இனியேனும் உறங்காமல் எழுந்து கொள்ளுங்கள்!’’

ந்து மதகளிற்றன், ஓடாத தோள்வலியன்,
    நந்தகோபாலன் மருமகளே, நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்!
    வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
    பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
    வந்து திறவாய், மகிழ்ந்தேலோர் எம்பாவாய்1


விளக்கம்: ‘‘யானை பலம் கொண்டவன், எதிரிகளைக் கண்டு பின்வாங்காத தோள் வலியைக் கொண்டவன் எங்கள் நந்தகோபன்! அவருடைய மருமகளே! நப்பின்னையே! நறுமணக் கூந்தலைக் கொண்டவளே! கதவைத் திறம்மா! கோழி கூவி விட்டது. பூப்பந்தல் மேல் அமர்ந்து குயிலினங்களும் கூவிவிட்டன. .உன் கணவன் கண்ணனின் புகழை உன்னுடன் சேர்ந்து பாட வந்திருக்கிறோம். உன் தாமரைக் கைகளில் அணிந்திருக்கும் வளையல்கள் குலுங்க வந்து வாசல் கதவைத் திறவேன்!’’

விளக்கவுரை : காஷ்யபன். படங்கள் : ஜெ.பி.
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube