Saturday, May 3, 2014

சுஜாத்...ஆ!

Posted by பால கணேஷ் Saturday, May 03, 2014
மிழில் சில பிரயோகங்களின் ‘லாஜிக்’ எனக்குப் புரியவில்லை. இலக்கண ஆசிரியர்கள் ஏதாவது காரணம் சொல்லி விளக்கலாம். எழுத்தாளன் என்கிறோம். ஏன் கொலையாளன் என்பதில்லை? கொலையாளி என்கிறோம், உளவாளி ஏன் உளவாளனாவது இல்லை. இதற்கெல்லாம் எங்கேயாவது விதி இருக்கிறதா? பார்த்தால் இலக்கணப் புத்தகங்களில் கிடைக்காது என்றே தொன்றுகிறது. ஆனால் ‘உளவன்’ என்கிற வார்த்தை இருந்திருக்கிறது. இழந்து விட்டோம். உளவன் என்றால் SPY. ‘உளவன் இல்லாமல் ஊரழியாது’ என்கிறது குமரேச சதகம். அதை ஏன் உளவாளி ஆக்கினோம் என்று புரியவில்லை.

தமிழில் நாம் பல சொற்களை இழந்து விட்டோம். ‘இதைத் துடைச்சுரு’ என்கிறோம். துடைப்பதற்கு மற்றொரு நளினமான வார்த்தை இருந்திருக்கிறது. ‘உவனித்தல்’. ஒரு வில்லை அதை எய்துவதற்கு முன் துடைப்பதற்கு, ஏன் தயார் செய்வதற்கும் ஏற்பட்ட வார்த்தை. சீவக சிந்தாமணியில் ‘வில்லன்றே உவனிப்பாரும்’ என்று வருகிறது. எய்யத் தொடங்குவதற்குமுன் ஒருவாறு Preparation for take off. ராக்கெட் விடுவதற்கு முன் count down இவைகளுக்குப் பயன்படுத்தலாம். ‘ஏவுகணையை உவனித்தல்’. இம்மாதிரியான ஆயிரக்கணக்கான வார்த்தைகள் நம் திவாகரம் பிங்கலம் போன்ற நிகண்டுகளில் உள்ளவை வழக்கொழிந்து போவதற்குமுன் அவைகளை தூசுதட்டி புதுப்பித்து கலைச் சொற்களாக பயன்படுத்த இயலும் என்பதை நான் எல்லா மேடைகளிலும் சொல்லக் கொண்டு இருக்கிறேன்.

கணிப்பொறி வார்த்தைகள் Hardware, Software, Operating System போன்றவைகளுக்கெல்லாம் புதிய வார்த்தைகள் தேடவேண்டிய அவசியமே இல்லை. கலைச்சொற்கள் அமைப்பதில் நமக்கு ஒரு கோட்பாடு சரிவர அமைக்கப்படவில்லை. அதனால்தான் தமிழார்வத்தில் இஷ்ட்த்துக்கு வார்த்தைகளை அமைத்துக் கொண்டு இருக்கிறோம், உதாரணமாக ‘கட்டுமானப் பொறியியலில் கண்டதுண்ட பகுப்பாய்வு’ என்று ஒரு கட்டுரையைப் பார்த்தேன். இது எந்த இயல் பற்றியது என்பதாவது புரிகிறது. கட்டுமானப் பொறியியல் என்று ஆர்க்கிடெக்சரைச் சொல்கிறார். ஆனால் கண்டதுண்ட பகுப்பாய்வு..? அதில் வரும் முக்கியமான கணிப்பொறித் திறனான finite element analysis-க்கு கட்டுரையாளர் அமைத்துக் கொண்ட கலைச்சொல். இதை நாம் அங்கீரிக்குமுன் ‘கண்டதுண்டம்’ என்றதும் ஓர் ஆளை வெட்டிப் போடுவதை நாம் மறந்துவிட வேண்டும்.

-ஜுனியர் போஸ்ட், 17,12,1997

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

......‘ஒண்டித்வனி’ (தனிக்குரல்) என்று பெயர் வைத்து நாகாபரணா படப்பிடிப்பைத் துவங்க பூஜை போட்டார்கள். ‘24 ரூபாய் தீவு’ கதையைப் பற்றி அப்போது முன்னணியில் இருந்த நடிகர் அம்பரீஷ் கேள்விப்பட்டார். ‘ஒள்ளே கதே’ என்று தன்னிச்சையாக அதில் நடிக்கிறேன் என்று முன்வந்தார். அதில் நடிக்கவிருந்த சுந்தர்ராஜன் நீக்கப்பட்டார். கதைக்குக் கேடுகாலம் துவங்கியது. கன்னட நடிகை மஞ்சுளாவும் ‘நானும் உண்டு’ என்று சேர்ந்து கொண்டார். தயாரிப்பாளருக்கு இரட்டிப்பு சந்தோஷம். அம்பரிஷ் ஒருவகையில் சூப்பர்ஸ்டார் கேட்டகெரி-2 அந்தஸ்தில் இருந்தார். (ராஜ்குமார் நம்பர் 1)

“அம்பரீஷுக்காக சின்னச்சின்ன மாற்றங்களும் சமரசங்களும் செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு சின்ன ஃபைட் சீனு, சிஸ்டர் வெச்சு ஒரு சாங், அவ்வளவுதான்” என்று தயாரிப்பாள்ர் சொன்னார். “படப்பிடிப்பு மைசூர் ராஜா பேலசில் நடந்து கொண்டிருக்கிறது. வந்து பாருங்கள்” என்றார். போனேன். நாகரா அலற, மஞ்சுளா நடனமாட, சுற்றிலும் திண்டு  போட்டு சேட்டுகள் வீற்றிருந்து நோட்டுகளை தலையைச் சுற்றி விசிறிக் கொண்டிருந்தார்கள். நான், “இதெல்லாம் என் கதையில் எங்கே வருகிறது?” என்ற என்னுடைய பழக்கமாகிவிட்ட கேள்வியைக் கேட்டேன். “அம்பரிஷ் நடிப்பதால் கொஞ்சம் கமர்ஷியல் விஷயங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. மற்றபடி நீங்கள் எழுதியபடியே எடுத்திருக்கிறோம்” என்றார்.

படம் வெளிவந்து கினோ தியேட்டரில் பார்த்தேன். உயிரோட்டமுள்ள ஒரு கதையை இயன்ற அளவுக்கு விகாரப்படுத்தியிருந்தார்கள். வெளியே வந்த ரசிகர்கள் “கதே பரிதவனு யாவனப்பா?” என்று அதட்டிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள், நான் மஃப்ளரால் முகத்தை மறைத்துக் கொண்டு விலகினேன். படம் ரசிகர்களால் நிராகரிக்கப்பட்டு ஒரு வாரத்தில் தூக்கப்பட்டது.

-பார்வை 365 நூலிலிருந்து...

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

தவு மெல்லத் திறக்க வினிதா நடுங்கிக் கொண்டே வெளியே வந்தாள், “இஸ் தி ஷூட்டிங் ஓவர்? வஸந்த், உங்களுக்கு ஏதாவது அடியா?” என்றாள். “அப்படி ஒண்ணும் பிரமாதமில்ல. சின்னதா மார்ல குண்டு பாய்ஞ்சிருக்கு. ஆபரேஷன் பண்ணி எடுத்துட்டா சரியாப் போயிடும், உம் மார்ல எதும் பாயலியே..?”  “வஸந்த்... இஸ் இட் டரூ? நிசமாவே உங்க மார்ல... ஆர் யூ ஆல்ரைட்?” “கவலையே படாத. உன்னை வீட்டில கொண்டு விட்டுட்டு அப்படியே ஆபரேஷன் தியேட்டர் போயிடறேன்...” “மிஸ்! அவன் சொல்றது எதையும் நம்பாதீங்க. புருடா விடறதில மன்னன். உங்களை போலீஸ் வண்டியில கொண்டு விட்டுடறோம்..,” “பாஸ்., இதானே வேணாங்கறது” என்றான் வஸந்த். அவளை நோக்கித் திரும்பி புன்முறுவலித்து. “இவங்க சொல்றதையெல்லாம் கேக்காத வின்னி. வாரம் எட்டு நாள் இவங்க உண்மைக் காதலுக்கு தடை விதிப்பாங்க. நான் உனக்கு ரேகை பார்க்கணும். மச்ச சாஸ்திரம் தெரியுமோ உனக்கு..?” “தெரியாதே!” “உனக்கு எங்கெல்லாம் மச்சம் இருக்குன்னு காட்டு, ஐ மீன்... சொல்லு. நான் அங்கங்கெல்லாம், ஸாரி... அதுக்கெல்லாம் பலன் சொல்றேன். வா...” “பழனிவேல்..! அவங்க மூணு பேர்கூட இவனையும் அரெஸ்ட் பண்ணிட்டுப் போங்க...” என்றான் கணேஷ்.

-‘மீண்டும் ஒரு குற்றம்’ நாவலிலிருந்து...

42 comments:

  1. நன்று. 'எங்களு'க்கு இன்று பாஸிட்டிவ் பதிவு இருப்பதால் வியாழன் அன்றே சுஜாதா பதிவு வெளியிட்டு விட்டேன். :))))))

    ReplyDelete
    Replies
    1. பார்த்தேன், படித்தேன் ஸ்ரீ. நன்றாகவே செய்திருந்தீர்கள். இதையும் நன்று என்ற ரசித்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி.

      Delete
  2. சுஜாதா சுஜாதா என்று ஒரு காலத்தில் அலைந்து அலுந்து புத்தகங்களைப் படித்தவன் நான்.
    சுஜாதாவின் நினைவலைகளைப் போற்றுவோமை

    ReplyDelete
    Replies
    1. ஆம்.த ஒன் அண்ட் ஒன்லி சுஜாதா! படித்து ரசித்த உங்களுக்கு மகிழ்வான என் நன்றி நண்பரே.

      Delete
  3. ஒள்ளே கதா மட்டுமா, எனக்கு பிரியா படமே அப்படித்தான் தோன்றியது..

    ReplyDelete
    Replies
    1. ப்ரியா என்றில்லை. இன்னும் கூட உண்டு. இன்னொரு விஷயம் ஆவி. எந்த ஒரு நாவலையும் கதையாக நீங்கள் படிக்கும்போது உங்கள் மனதில் இருக்கும் பிம்பங்களோடு, அந்நாவலைப் படமாக எடுக்கும்போது திரையில் வரும் பிம்பங்கள் ஒத்து வராது. அதனால் நம் மனதுக்கு அவை ஏற்புடையதாக இருக்காது. போதாக் குறைக்கு இந்த கதையைக் கெடுக்கும் விஷயங்கள் வேறு! ப்ரியா எடுத்த பிறகு 'இதை எப்படி படமாக எடுக்கிறார்கள் பார்க்கலாம்' என்று முன்னுரையில் சொல்லியே 'உன்னைக் கண்ட நேரமெல்லாம்', 'மேற்கே ஒரு குற்றம்' போன்ற கதைகளை எழுதினர் சுஜாதா.

      Delete
    2. கரெக்ட் ஸ்ரீ ‘உன்னைக் கண்ட நேரமெல்லாம்’ நாவலின் துவக்கத்திலேயே ப்ரியா படம் எடுத்தவர்கள் மேல் கேஸ் போட வேண்டுமென்று வஸந்த் கொதிக்க, கணேஷ் அவனை சமாதானப்படுத்துவான். பழைய நினைவுகளுக்குள் உலாப்போக வைத்து விட்டீர்கள்.

      Delete
  4. சுஜாதா என்றதும் என் நினைவுக்கு வருவது அவரது படைப்புகளில் சொல்லப்படும் அறிவியல் கூறுகள் தான். சிறந்த ஒரு படைப்பாளி.

    ReplyDelete
    Replies
    1. தமிழிலு விஞ்ஞானக் கதைகள் நிறைய எழுதி அந்த கேட்டகரியையும் பாப்புலராக்கியவர் சுஜாதாதான். படித்து ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி.

      Delete
  5. வலை உலகிற்கு சுஜாதா ஒரு வள்ளல். சாதாரண செய்தியாக இருந்தால் கூட அதிலும் ஒரு சுவாரசியம் வைப்பது அவரது சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. சின்ன துணுக்குச் செய்தியைச் சொன்னாலும் அதில் அவரின் ‘டச்’ இருக்கும். ரசித்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி முரளி.

      Delete
  6. சுஜாதவிற்க்கு அருமையான அழகான சமர்ப்பணம் அண்ணா....

    ReplyDelete
  7. நீங்களும் சுஜாதா பதிவு போட்டாச்சா.. பேஷ் பேஷ்

    ReplyDelete
    Replies
    1. செனற ஆண்டும் போட்டிருந்தேனே...

      Delete
  8. சுஜாதாவின் மூன்று வெவ்வேறு விதமான எழுத்துக்களை பகிர்ந்து அவரது பிறந்த நாளை கொண்டாடியமை சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இன்னும் பல சுவாரஸ்யங்கள் பகிர்வதற்கு உண்டு. நம் இடப்பற்றாக்குறைதான் மூன்றோடு நிறுத்த வைக்கிறது. மிக்க நன்றி சுரேஷ்.

      Delete
  9. சுஜாதாவின் கதைகள் நிறையவே படித்து இருக்கிறேன் ஆனால் தற்சமயம் ஒன்றுகூடக் கையில் இல்லை. சுஜாதாவுக்கு அன்க்சலி அவர் எழுத்துக்களில் இருந்தே. நன்றாக இருக்கிறது. உங்களுக்குத் தெரியுமா மெக்சிகோ சலவைக்காரி ஜோக்ஸ்.

    ReplyDelete
    Replies
    1. தெரியும் ஸார். அதை இங்கே சொல்லத்தான் முடியாது. ஹி... ஹி... ஹி... மிக்க நன்றி.

      Delete
  10. சுஜாதாவோட ஒரு தொடர் நாவல் அந்தக்காலத்துலே
    குமுதம் இதழ் .

    ஜீனோ அப்படின்னு ஒரு நாய்க்குட்டி. அதை விடாம பார்த்துண்டு இல்ல,படிச்சுண்டு இருந்தேன்.

    பிறகு,கணேஷும் வசந்தும் லாயர் அசிஸ்டெண்டா அதுவும் படிச்சிருக்கேன்.

    முதல் முதலில் அவர் எழுதிய கதையில் அவர்



    ங்
    கி
    னா
    ன்

    என்று எழுத்துக்களை 3 டி லே பேசவிட்டது கூட நினைவில் இருக்கிறது.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. நினைவுகூர்ந்து ரசித்த சுப்புத்தாத்தாவுக்கு மகிழ்வான நன்றி.

      Delete
  11. சூப்பர் பால கணேஷ் சகோ. சுஜாதாவைப் பற்றிய பகிர்வு அருமை. :)

    ReplyDelete
    Replies
    1. ரசித்த தேனக்காவுக்கு மகிழ்வான நன்றி.

      Delete
  12. தாத்தாவின் கருத்து அட...!

    ReplyDelete
    Replies
    1. ‘அட’ போட்டு ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி.

      Delete
  13. உளவாளிக்கு ஒற்றன் என்றும் சொல்லலாமோ அண்ணே ?

    ReplyDelete
    Replies
    1. ஆம்... அப்படியும் அழைக்கத்தான் செய்கிறார்கள். மிக்க நன்றி மனோ.

      Delete
  14. வணக்கம்,பாலகணேஷ் சார்!நலமா?///நல்ல பகிர்வு!எனக்குப் பெரிதாக வாசிக்கும் பழக்கம் இப்போது இல்லை.பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பகிர்வை ரசித்த உங்களுக்கு என் மகிழ்வான நன்றி.

      Delete
  15. கதையை படித்து அசந்து.. அதை படமாக பார்க்கையில் பிரமித்தது காட் பாதர்! ஜீவனை சிதைக்காமல் மொழி பெயர்ப்பதும் , கதையை படமெடுப்பதும் பெரும் கலை!

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட். கதையாகவும், சினிமாவாகவும் திருப்தி தந்தவை மிகச் சிலவே. மிக்க நன்றி பந்து.

      Delete
  16. பாலகணேஷர்,

    வழக்கம் போல பழைய பத்திரிக்கை தகவல்களை பிரமாதமாக வெளிக்கொண்டு வந்திருக்கீங்க, இதுக்கெல்லாம் ஒரு பிரதி வச்சிருக்கிங்களா?

    சுஜாதா விசிறியாச்சே இல்லாமலா இருக்கும் அவ்வ்!

    #//எழுத்தாளன் என்கிறோம். ஏன் கொலையாளன் என்பதில்லை? கொலையாளி என்கிறோம், உளவாளி ஏன் உளவாளனாவது இல்லை. இதற்கெல்லாம் எங்கேயாவது விதி இருக்கிறதா? //

    பொதுவாக ஒலிநயம் பொருட்டு அப்படி சொல்லி இருக்கலாம்.

    கொலை - ல ஒலி , ஆள்- ஆளி -ள ஒலி, ஒரே சொல்லில் ல,ள என பயன்ப்படுத்தும் போது ஒலிநயம் வருது.

    ஆனால் எழுத்தாளன் என்பதில் , ல, ள என ஒரே சொல்லில் இல்லை.

    பெயர்ச்சொல் ஆறுவகையில் பெயர்ச்சொல் பகுபதம் என இருக்கு,இதனடிப்படையில் வினையாளணையும் பெயர்ச்சொல் , பெயர் சொல் போன்றவையும் இருக்கு.

    தொழிலாளி என்பதை தொழிலாளன் என எழுதலாம். ஒன்று வினையாளணையும் பெயர் இன்னொன்று தொழிலாகுபெயர் ,இரண்டுமே noun - பெயர்ச்சொல் தான்.

    எனவே கொலையாளன் , உளவாளன் எனவும் எழுதலாம், நம்ம மக்கள் தாங்களாக தான் பயன்ப்படுத்துவதில்லை.

    snake என்ற சொல்லை தானே serpent என்பதை விட அதிகம் ஆங்கிலத்தில் பயன்ப்படுத்துகிறோம், அப்படித்தான் தமிழில் சொற்களின் புழக்கம் குறைவதும்.

    இலக்கணப்புத்தகத்தில் அப்படிலாம் விதி இருக்கானு கேட்டிருக்கார் , ஏன் அவருக்கு தெரியாதா ,அப்படிலாம் பயன்ப்படுத்த தமிழிலக்கணத்தில் தடையில்லைனு, நன்னூலில் தெளிவாக தான் போட்டிருக்கு.

    சொந்தமா இப்படிலாம் சந்தேகம் எழும்பினாப்போல சொல்வோம்னு சொல்லியிருப்பார் போல :-))

    # உளவன் என்றால் ஸ்பைனு சொல்வது "நம்ம பயன்ப்பாட்டில்" பழகி வந்துடுச்சு ஆனால் அப்படி நேரடியாக பொருள் கொடுக்குதா? இல்லைனு சொல்லலாம்.

    உளவன் - உள் +அவன் = அங்கே இருப்பவன் , இன்சைடர் அவ்ளோ தான் ,இன்சைடர் கிட்டே இருந்து "இன்பர்மேஷன்" வாங்கினா தான் " ஸ்பை"

    எனவே சரியான சொற்பதம் "உளவறிதல்".உளவாளி , உளவன் எல்லாம் நாம சுருக்கிசொல்வது.

    நெடுநாள் உளனொருவன் இன்றில்லை எனும்
    பெருமை உடைத்திவ் வுலகு"

    உளனொருவன் , உள்ளவன் ஒருத்தன் என குறிப்பிட்டால் உளனொருவன் , சும்மா சொன்னா உளவன் எனலாம்.

    இதுல உளவன் என்றால் உடையவன் என்ற இன்னொருப்பொருளும் இருக்கு.

    எனவே ரொம்ப குழப்பம் இல்லாமல் ஸ்பை என தமிழில் சொல்ல "ஒற்றன்" எனலாம் , வள்ளுவரே ஒற்றறிதல் என அதிகாரம் எழுதி இருக்காருள்ள!

    //இம்மாதிரியான ஆயிரக்கணக்கான வார்த்தைகள் நம் திவாகரம் பிங்கலம் போன்ற நிகண்டுகளில் உள்ளவை வழக்கொழிந்து போவதற்குமுன் அவைகளை தூசுதட்டி புதுப்பித்து கலைச் சொற்களாக பயன்படுத்த இயலும் என்பதை நான் எல்லா மேடைகளிலும் சொல்லக் கொண்டு இருக்கிறேன்.//

    திவாகர நிகண்டு,பிங்கல நிகண்டு, சூடாமணி நிகண்டுலாம் ரெஃபெர் செய்து பதிவு கூட எழுதுறோம் ,எந்த சுஜாதா ரசிகன் அதெல்லாம் படிக்கிறான்?

    இதுல சுஜாதா அப்போவே பேசிட்டார்னு சொல்லிக்கிட்டு "சினிமா" கதையடிக்கிறது தான் 'சுஜாதா ரசிகமணிகளுக்கு" இணையத்தில் இருக்கும் ஆகசிறந்த வேலை :-))

    ReplyDelete
    Replies
    1. பெயர்ச்சொல் பற்றி நினைவில் இருந்து சொல்லி இருக்கேன், இதுவரை சும்மா இருப்பவர்கள் ,இனிமே தான் அப்படி இல்லைனு ஆய்வு செய்வார்கள், சரியான பெயர்ச்சொல் வகைகளை தேடி வச்சிக்கிறேன் ,உதவும்!

      Delete
    2. வவ்ஸ்,

      ////எழுத்தாளன் என்கிறோம். ஏன் கொலையாளன் என்பதில்லை? கொலையாளி என்கிறோம், உளவாளி ஏன் உளவாளனாவது இல்லை. இதற்கெல்லாம் எங்கேயாவது விதி இருக்கிறதா? ////

      எழுத்தாளன் என்பது எழுத்தின் மீது ஆளுமை உடையவன் என்று பொருள். எழுத்தருக்கும் எழுத்தாளருக்கும் உள்ள வித்யாசம், ஆங்கிலத்தில் writerக்கும் authorக்கும் உள்ள வித்யாசம். கொலையாளி, உளவாளி,காவலாளி என்பதை அதனோடு ஒப்பிட இயலாது. கொலையைச் செய்த ஆள், உளவைச் செய்த ஆள், காவலை செய்யும் ஆள் போன்ற பொருட்களில் வரும்.

      Delete
    3. நீங்க்ள் சொன்ன இலக்கண காரணங்கள் தவிரவும் உளவன் என்பதை நம்ம ஆட்கள் சரியாக உச்சரிக்காமல் போய் உழவன் என்பதுடன் குழப்பிவிடக் கூடும். அலகிய தமில்மகல் இவல் என்று பாட்டுப் பாடுகிற ஆசாமிகளாயிற்றே நம்மவர்கள். ஹி... ஹி.... ஹி...
      அப்புறம்... திருக்குறளை உங்க வசதிக்கு மாத்தி எழுதிக்கிட்டீங்க போலயே.... ‘நெடுநாள் உளனொருவன்’ அப்படின்னு வள்ளுவர் சொல்லலை ‘நெருநல் உளனொருவன்’ அப்படின்னுல்ல சொல்லியிருக்காரு. ஹி... ஹி... ஹி...

      Delete
    4. குட்டிப்பிசாசு,

      நீங்க சொல்றாப்போல ஆளுமை அடிப்படையில் அல்ல, பகுபத விகுதி என ஒன்று இருக்கு , அதன் அடிப்படையில் பெயர்ச்சொல் விகுதி , தொழில் விகுதி, வினைமுற்று விகுதி என , அன் ,ஆர், அள்,ஆள் ,அம் என நிறைய சேர்த்து சொல்லை முடிக்கலாம்.

      ஹி...ஹி கொலையில் ஆளூமை உள்ளவன் கொலையாள் அவனை கொலையாளி என சொல்றாங்க என சொல்லலாம்.

      உழைப்பாளி என்கிறார்கள், ஆனால் ஒரு பெயர்ச்சொல்லா முழுமையாக உழைப்பாளர் - உழைப்பாளர் தினம் என்பதில்லையா?

      "ளி" என முடிப்பது ஒருமுறையில் விளிக்க, கொலையாளர் என உயர்வு விகுதி கொடுத்து முடிக்க மனசு வரலை போல.

      "அன்" என சேர்த்து முடிப்பது ஆண்பால் விகுதி , அள் சேர்த்து முடிப்பது பெண்பால் விகுதி. அர்,ஆர் என முடிப்பது பன்மை உயர்வு விகுதி!

      தொழிலாளன் -ஆண்பால்

      தொழிலாளள் -பெண்பால் ,ஆனால் நடைமுறையில் பயன்ப்படுத்துவதில்லை.

      தொழிலாளர் - உயர்ச்சியுடன் குறிப்பிடுவது, தொழிலாளர் நல வாரியம் என்று தான் சொல்கிறார்கள்.

      மக்கள் சில சொற்களை புழங்குவதில்லை அவ்ளோ தான்.

      கொலையாளன், உளவாளன் என தாராளமாக சொல்லலாம்.
      ------------------
      பாலகணேஷர்,

      "ழ"கரம் சொல்லாமல் கொல்வோர் நிறய உண்டு , எளுத்து, கிளக்கு ,வளக்கம் என தென்மாவட்டங்களில் பேசுவது சகஜம் தானே.

      எனவே உளவன் என சொன்னால் "உழவன்' என நினைக்க தான் வாய்ப்பு அதிகம்.

      #//அப்புறம்... திருக்குறளை உங்க வசதிக்கு மாத்தி எழுதிக்கிட்டீங்க போலயே.... ‘நெடுநாள் உளனொருவன்’ அப்படின்னு வள்ளுவர் சொல்லலை ‘நெருநல் உளனொருவன்’ அப்படின்னுல்ல சொல்லியிருக்காரு. ஹி... ஹி... ஹி...//

      ஹி...ஹி எழுதும் போதே முதல் அடிக்கும் ,ரெண்டாவது அடிக்கும் எதுகை,மோனை வரலையேனு நினைச்சுட்டே தான் எழுதினேன் , சரி யாரு கண்டுப்பிடிக்க போறா .நமக்கு "உளனொருவன்" என்ற சொல் தானே உதாரணம் என எழுதி வச்சேன் ,சரியா புடிச்சுட்டிங்க அவ்வ்!

      தமிழ் ரொம்ப நெகிழ்ச்சியானது , உள்ளது என்பதை உளது என எழுதலாம், உள்ளம் என்பதையும் உளம் என எழுதலாம் உ.ம்: "உளமாற வாழ்த்துகிறேன்" ,எனவே ஒரு சொல்லை எப்படி பயன்ப்படுத்துறோம் என்பதில் இருக்கு "டிரிக்கு'

      Delete
    5. பழசை எல்லாம் தேடிப்பிடிப்பிடித்து பகிரும் உங்கள் பொறுமைக்கும் ஆர்வத்திற்கு ஒரு சல்யூட் கணேஷண்ணே.

      Delete
  17. சுஜாத்...ஆ? தலைப்பிலேயே கலக்கறீங்க வாத்யாரே.....

    சுஜாதா நினைவலைகள் இங்கேயும். சமீபத்திய பயணத்தில் படித்த புத்தகம் - கணையாழியின் கடைசி பக்கங்கள்!

    ReplyDelete
  18. பாலண்ணா & வவ்வால் , குட்டிப்பிசாசு - மூவருக்கும் நன்றிகள் நல்லதொரு பின்னூட்ட விவாதத்திற்கு .

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube