Monday, April 8, 2013

என் முதல் நாடக அனுபவம்

Posted by பால கணேஷ் Monday, April 08, 2013
ந்தத் தலைப்பைப் படிச்சதும், நான் முதன்முதலா நாடக மேடையில நடிச்ச அனுபவத்தைச் சொல்லப் போறேன்னு நீங்க நினைச்சிருந்தீங்கன்னா... ஸாரி, உங்களுக்கு பாஸ் மார்க் கிடையாது! இது நான் முதன்முதலா நாடகம் பார்த்த அனுபவம்! ஹி... ஹி... அதப்பத்திச் சொல்றதுக்கு முன்னாடி... ஆதியும் அந்தமுமில்லாத கால வெள்ளத்திலே சற்றுப் பின்னோக்கிப் பயணிக்கும் ஓடத்தில் என்னுடன் வரும்படி நேயர்களை அழைக்கிறேன். (மீண்டும் பொ.செ. படிக்க ஆரம்பிச்சதோட பாதிப்பு.)

நான் பள்ளி மாணவனா இருந்த சமயம் மதுரையில அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார். எங்க சித்தி தமிழ்ப் பேராசிரியைன்னு முன்னமே சில பதிவுகள்ல சொல்லியிருக்கேனில்லையா.... அவங்க தமிழ்ச் சொற்பொழிவுகளுக்கும், அப்ப நடந்த கலை நிகழ்ச்சிகளுக்கும் போறப்ப என்னையும் கூடத் துணைக்கு கூட்டிட்டுப் போனாங்க. தமிழ் மேல இருந்த ஆர்வத்தால பல தமிழ் அறிஞர்களின் மேடைப் பேச்சை ரசிச்சேன். பரதநாட்டிய நிகழ்ச்சிகள்லயும், கர்நாடக சங்கீதக் கச்சேரிகளுக்கும் சித்திகூடப் போறப்பல்லாம்... இவங்க எதை இப்படி ரசிக்கிறாங்கன்னு பொறுமை இல்லாம எப்படா நிகழ்ச்சி முடியும்னு உக்காந்திருப்பேன். அந்த வயசுக்குரிய பக்குவம் அவ்ளவ்தான்!

அந்த உலகத் தமிழ் மாநாட்டு நிகழ்ச்சிகள்ல ரெண்டு நாடகங்களுக்கு சித்தி கூட்டிட்டுப் போனாங்க. மதுரைக் கல்லூரி மைதானத்துல மேடை போட்டு நிகழ்ச்சி நடந்ததால திறந்தபுல் வெளில உக்காந்து பாக்க வேண்டியிருந்தது. மேலே திறந்த வானம்தான் கூரை. ஆர்.எஸ்.மனோகரோட ‘ஒட்டக் கூத்தர்’ நாடகமும், மேஜர் சுந்தரராஜனின் ‘கல்தூண்’ நாடகமும் அப்ப பாத்திருக்கேன். தூரத்துலருந்து பாக்கறப்ப, மேடைல நடிச்சவங்க பொம்மை மாதிரி ஒரு குன்ஸாத்தான் தெரிஞ்சாங்க. தவிர, அப்ப நாடகங்களின் அருமை பெருமையும் தெரியாது, சினிமா ஒண்ணுதான் பிடிச்ச விஷயம்கறதால அக்கம்பக்கம் உக்காந்திருந்தவங்களைத்தான் வேடிக்கை பார்த்தேன். ஆனாலும் ஆர்.எஸ்.மனோகர் மேடையில நிகழ்த்திக் காட்டின தந்திரக் காட்சிகள் அப்பவே பெரும் வியப்பைத் தந்தன.

இப்படியான அனுபவங்களை நான் நாடகம் பாத்ததாச் சொல்லிக்க முடியுமா என்ன? கல்லூரிக் காலத்திலும் சரி... வேலை பார்ககத் துவங்கி, ஊர் ஊராக அலைந்த போதும் சரி.. ஒரு நாடகமாவது நேரில் கண்டு ரசிக்க வேண்டும் என்று பேராவல் இருந்ததே தவிர, ஏனோ வாய்ப்புக்கள் அமையவே இல்லை. சென்னையில செட்டினாதுக்கப்புறம் கிரேஸி, எஸ்.வி.சேகர் மாதிரி ஆளுங்க நிறைய நாடகம் போடறதா போஸ்டர்கள் பாக்கறப்பல்லாம் போனா என்னன்னு தோணும். ஒண்ணு..  நாடகம் நடக்கற தினங்கள்ல ஏதாவது வேலை வந்துடும், இல்லாட்டி, 200, 300ன்னு டிக்கெட் இருக்கறதப் பாத்துட்டு, இவ்வளவு செலவு பண்ணிப் போகணுமா?ன்னு தோணிரும். பதிவுகள் எழுத ஆரம்பிச்சு, நாலு பேருக்கு என்னைத் தெரிஞ்ச சந்தர்ப்பத்துல அறிமுகமான நண்பர் சரணபவன், ஸாரி...  மெட்ராஸ்பவன் சிவகுமார்! அவரோட பதிவுகள்ல அடிக்கடி நாடகம் பார்த்த அனுபவத்தையும், நாடக விமர்சனங்களையும் தொடர்ந்து எழுதிட்டு வர்றார். சிவாகிட்ட என் நாடக ஆசை‌யைச் சொல்லி, ‘‘அடுத்து ஏதாவது நாடகத்துக்குப் போனா என்னையும் கூட்டிட்டுப் போய்யா’’ என்று வேண்டுகோள் வைத்தேன்.

அதன்பின் வந்த மாதத்தில் சிவா போன் பண்ணி, ‘‘வரதராஜனோட ட்ரூப் ‘என்று தணியும் இந்த சுதந்திரதாகம்?’னு சோ நடத்தின நாடகத்தை நடத்தறாங்க. இன்னிக்கு நீங்க ஃப்ரீயா?’’ என்றார். துரதிர்ஷ்டவசமாக அன்றைக்கு வேறொரு வேலை இருந்ததால் போக முடியலை. அதன் பிறகு  சிவா மற்றும் இரண்டு சந்தர்ப்பங்களில் நாடகம் பார்க்க அழைத்தபோது, நான் வெளியூரிலும், மருத்துவமனை செல்லும் நிலையில் இருந்த காரணத்தாலும் மறுக்க நேர்ந்தது. வேறு யாராவதாக இருந்தால், ‘இவனுக்கு வேற வேலையில்ல. வர்றேன்னு ஆசையா சொல்லுவானே தவிர, வரமாட்டான்’னு கூப்பிடறதையே மறந்திருப்பாங்க. ஆனாலும் அசாத்திய பொறுமைசாலி இந்த சிவா!

சனிக்கிழமை மாலை தொலைபேசி, ‘‘கிருஷ்ணகான சபா’வுல ஈவ்னில் அஞ்சரை மணிக்கு ஒரு ஃபங்ஷன். அது முடிஞ்சதும் ஏழு மணிக்கு காத்தாடி ராமமூர்த்தி நாடகம். அனுமதி இலவசம்னு போட்டிருககாங்க. இன்னிக்கு நீங்க ஃப்ரீயா?’’ என்று கேட்டார். மாலை நான் ஃப்ரீ என்பதுடன், அனுமதி இலவசம் என்கிற வார்த்தையும்  தூண்டில் போட்டு இழுக்க, ‘‘கண்டிப்பா வர்றேன் சிவா’’ என்று சொல்லிவிட்டு உடனே புறப்பட்டேன். கிருஷ்ணகான சபாவினர் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை நாடக விழா என்று ஒரு வாரத்திற்கு நாடகங்களை நடத்தி, முதல் தினத்தன்று நாடக உலகில் சாதனை செய்த ஒரு பிரபலத்துக்கு ‘நாடக சூடாமணி’ விருதும் தந்து வருகிறார்கள் என்பது அங்கு சென்றபோதுதான் தெரிந்தது. இந்த ஆண்டு ‘வியட்நாம் வீடு’ சுந்தரம் கெளரவிக்கப்பட்டார். திரு.கே.பாலசந்தர், ஒய்.ஜி.மகேந்திரா, சச்சு போன்ற பிரபலங்கள் வாழ்த்திப் பேசினார்கள். அதன்பின் காத்தாடி ராமமூர்த்தி குழுவினரின் ‘பிள்ளையார் பிடிகக’‘ என்ற நாட்கம் ஆரம்பித்தது.

இந்த ராமமூர்த்தி காத்தாடிய கழட்டிவிட்டுட்டு தன்‌ பேரை ‘பங்சுவாலிட்டி ராமமூர்‌த்தி’ன்னு வெச்சுக்கலாம்! சரியா ஏழு மணிக்கு நாடகத்தை ஆரம்பிச்சுட்டார். பெண்ணுக்கு கல்யாணம் பண்ண பெற்றோர் கஷ்டப்பட்டது போக, இந்நாளில் பிள்ளைக்கு கல்யாணம் பண்ணவும் பெற்றோர் கஷ்டப்படுவதை நகைச்சுவை  ததும்ப நாடகமாக்கி இருந்தார்கள். நாடகத்தின் விமர்சனம் ‘மெட்ராஸ் பவன்’ தளத்தில் விரிவாக எழுதப்படும் சிவாவால்! ஆகவே, நான் இங்கே நான் கவனித்த, என்னைக் கவர்ந்த சில சமாசசாரங்களை உங்களோட ஷேர் பண்ணிக்கறேன்.

* மைக்கே தேவைப்படாத கணீர் குரல் காத்தாடி ராமமூர்த்திக்கு! தன் நீண்ட கால நாடக/சினிமா அனுபவத்தின் துணை கொண்டு மிகச் சரளமாக அருமையாக நடித்திருந்தார். அவருடைய ட்ரூப்பிலும் எவரின் நடிப்பும் சோடை‌ போகவில்லை.

* நாடகத்தில் மூன்றே காட்சிகளில் வரும் ‘கருப்பூர் வைத்தி’ என்ற கதாபாத்திரம் இரண்டு காட்சிகளில் நகைச்சுவையாகவும், ஒரு காட்சியில் சென்டிமென்ட் கலந்து சோகமாகவும் நடிக்க வேண்டும். அதில் நடித்த ஸ்ரீதரன் என்பவர் மிக அருமையாக நடித்திருந்தார்.

* ஹீரோயினாக நடித்த பெண் நல்ல அழகு! (ஹி.. ஹி...) காத்தாடி ராமமூர்த்தி போன்றவர்கள் வேஷ்டிக்கும், பேண்ட்டுக்கும் மாறி அடுத்தடுத்த காட்சிகளில் தோன்றுவது ஆச்சரியமில்லை. இந்தப் பெண்ணும் நாடகத்தில் நான்கைந்து சுடிதார்களில் சட்சட்டென்று உடை மாற்றி வந்து நடித்தது ஆச்சர்யம்! கருப்பு லெக்கின்ஸ் அணிந்திருந்த அவர், அதற்கு ஏற்றாற்போன்ற சிவப்பு, மஞ்சள் போன்ற நிறங்களில் வேறு வேறு டாப்ஸ்கள் மாற்றி வந்ததால் இது சாத்தியமென்பது நன்கு கவனித்ததில் புரிந்தது. நைட்டி அணிந்து வரும் ஒரு காட்சியில் அவர் கால்மேல் கால் போட்டு அமர்ந்தபோது அந்த லெக்கின்ஸ் நைட்டியின் உள்ளேயிருந்து தலைகாட்டியது ஒரு வேடிக்கை! (அப்ஸர்வேஷன் பாஸ்!)

* நாடகத்தில் நடித்தவர்களிடம் சிறு‌ பேட்டி எடுத்து வெளியிட வேண்டுமென்று ஆசையில் நானும் சிவாவும் போய்க் கேட்டபோது, நாடகப் பொறுப்பாளரைக் கை காட்டினார் காத்தாடி. அவரிடம் கேட்க, ‘போன் பண்ணிட்டு வாங்க’ என்று சிவாவிடம் தொலைபேசி எண் தந்தார். (சிவா போகும்போது அழைப்பதாகச் சொல்லியிருக்கார்) காத்தாடியிடம் மட்டுமாவது நாலு வார்த்தை பேசலாம் என்று பார்த்தால்... அவர்தான் காத்தாடியாயிற்றே...!  அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தார். இருந்தாலும் கிடைத்த இடைவெளியில் அவரை மடக்கி, ‘‘சார்! மத்த கேள்வில்லாம் அப்புறம கேட்டுக்கறேன். என் மனசுல ரொம்ப நாளா இருக்கற ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் இப்ப பதில் சொல்லுங்க...’’ என்றேன். ‘‘கேளுங்க’’ என்றார் காத்தாடி.

‘‘ஸார்! நீங்க நடிகர்திலகம் சிவாஜியைப் பாத்து, ‘நீயெல்லாம் நடிக்க வரலைன்னு யாருடா அழுதா? உனக்கு நடிப்பு சுட்டுப் போட்டாலும் வராது. பேசாம கிராமததுக்கே போயிடு’ன்னு திட்டுவீங்க. (ராமன் எத்தனை ராமனடி படம்). அந்தச் சமயத்துல...’’ என்று நான் கேட்பதற்குள் காத்தாடி அவசரமாக, ‘‘உங்களைப் பாத்து எப்படி சார் நான் இதைப் பேச முடியும்?னு சிவாஜி ஸார் கிட்டயே சொன்னேன். அவர், ‘ராமமூர்த்தி, நீ என்னைப் பாத்துச் சொல்லலை. அந்த டைரக்டர் கேரக்டர், நடிகனைப் பாத்துச் சொல்லுது. அவ்வளவுதான். தைரியமா நடி’ன்னு அவர்தான் தைரியம் தந்து நடிக்க வெச்சார்’’ என்றார். ‘‘என் கேள்வி அதில்லை சார்! அந்தக் காலத்துல எம்.ஜி.ஆர்., சிவாஜி ரெண்டு பேருக்குமே மிகத் தீவிரமான ரசிகர் பட்டாளம் இருந்ததாக் கேள்வி. இப்படி ஒரு வார்த்தை பேசினதுக்கு ரசிகர்கள் தரப்புலருந்து உங்களுக்கு எதுவும் எதிர்ப்பு, திட்டி லெட்டர், போன் எதுவும் வந்துச்சா?’’ என்றேன். ‘‘இல்லீங்க.. அப்படி எந்த விஷயமும் நடக்கலை. எந்தப் பிரச்னையும் ஆகலை’’ என்று ரத்னச் சுருக்கமாகச் சொல்லி, கை கொடுத்துவிட்டுப் பறந்து வி்டடார். (மதுரையில் ‘படிக்காதவன்’ படம் பார்த்தபோது ரஜினியை வடிவுக்கரசி கடுமையாகத் திட்ட,  தியேட்டரில் ரசிகர்கள் வடிவுக்கரசியை கன்னாபின்னாவென்று இங்கு எழுத முடியாத வார்த்தைகளில் அர்ச்சனை செய்ததை நான் பார்த்ததால் இந்தக் கேள்வியை அவரிடம் கேட்க வேண்டுமென்று ரொம்ப நாள் ஆசை)

* கிருஷ்ணகான சபா அரங்கம் மிக விஸ்தாரமாக இருந்ததுடன், சவுண்ட் சிஸ்டம் அருமையாக இருந்ததுடன், ஏ.ஸி. அரங்கமாகவும் இருந்தது மிக வியப்பு! மூங்கில் சேர்களை கீழே சட்டமிட்டு, அசைக்க முடியாதபடி அமைத்திருந்தார்கள். வயதானவர்கள் சேரை அசைகக முடியாமல், நடக்க இடைவெளி போதாமல்  கஷ்டப்பட்டது ஒன்றுதான் மைனஸாகத் தோன்றியது! மற்றபடி எல்லாமே ப்ளஸ்தான்!

இரண்டாவது வரிசையில் உட்கார்ந்து நாடகத்தை ரசித்த அனுபவம் நீண்டநாள் மகிழ்வாக மனதில் இருக்கும். அந்த மகிழ்வைத் தந்த மெ.ப. சிவாவுக்கு மனம் நிறைந்த நன்றியை இங்கே பதிவு செய்கிறேன்.

மே.மை. இப்போது : பதியைக் கொன்ற பாவை-8

66 comments:

  1. உண்மையில் நாடகம் பார்ப்பது ஒரு சுகானுபவம்தான். நாடகத்தை மட்டுமல்லாமல் வேறு பல விஷயங்களையும் கூர்மையுடன் கவனித்து எழுதியிருக்கிறீர்கள். இதுவே ஒரு குட்டி விமர்சனம்தான். அடுத்து ஒரு நாடக விமர்சனத்தை எதிர்பார்க்கலாமா?

    ReplyDelete
    Replies
    1. மனதில் அந்த ஆசை உண்டு ஸார். சமயம் வரும்போது அவசியம் செய்கிறேன். உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  2. நீங்களும் ப்ரீ.. எண்ட்ரியும் ப்ரீ.. என்னா காம்பினேஷன்..


    // கருப்பு லெக்கின்ஸ் அணிந்திருந்த அவர், அதற்கு ஏற்றாற்போன்ற சிவப்பு, மஞ்சள் போன்ற நிறங்களில் வேறு வேறு டாப்ஸ்கள் மாற்றி வந்ததால் இது சாத்தியமென்பது நன்கு கவனித்ததில் புரிந்தது. நைட்டி அணிந்து வரும் ஒரு காட்சியில் அவர் கால்மேல் கால் போட்டு அமர்ந்தபோது அந்த லெக்கின்ஸ் நைட்டியின் உள்ளேயிருந்து தலைகாட்டியது ஒரு வேடிக்கை!//

    நாடகத்த கூர்ந்து கவனிச்சுருக்கீங்க!! குட்!! ;-)

    ReplyDelete
    Replies
    1. ஹி... ஹி... என்னோட அப்ஸர்வேஷனைப் பாராட்டின ஆவிக்கு என் மனம் நிறைந்த நன்றி!

      Delete
  3. நாடகத்தை பார்க்கத் தூண்டும் விமர்சனம் அருமை.வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  4. எனக்கும் நாடகம் பார்க்க வேண்டும் அதில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது ஆனால் அது நிறைவேறவில்லை அப்படி ஒரு சூழலும் அமையவில்லை உங்களுக்கு பார்க்கவாவது கொடுப்பினை இருக்கு என்பதில் மகிழ்ச்சி பாலா சார் ..........அப்புறம் உங்களின் கூர்ந்த கவனிப்பிற்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. நடிப்பதிலும் ஆர்வம் உண்டா? உங்களின் விருப்பம் நிறைவேற இறையருள் கிட்டட்டும். நானும் வேண்டுகிறேன். ரசித்துப் படித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  5. அருமையான அனுபவம்
    பகிர்ந்த விதம் அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அனுபவப் பகிர்வை ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பரே!

      Delete
  6. காத்தாடியைத் திட்டாத ரசிகர் கூட்டத்துக்கும் வடிவுக்கரசியைத் திட்டின ரசிகர் கூட்டத்துக்குமிடைப்பட்ட காலத்தின் கண்ணியச் சரிவோ? இதற்கு ரஜினி காரணமா இல்லை நாம் தானா?

    ReplyDelete
    Replies
    1. இதுவேதான் என் எண்‌ணமும். ரஜினி ஒரு நடிகர், அந்த கேரக்டர்தான் திட்டப்படுகிறது என்பதை உணர முடியாத, விரும்பாத ஒரு கண்மூடித்தனமான வொர்ஷிப் எப்படி உண்டாச்சுன்னே புரியல... என்னத்தச் சொல்ல... மிக்க நன்றி அப்பா ஸார்!

      Delete
  7. மேடை நாடகம் நேரில் பார்த்ததில்லை.உங்கள் அனுபவங்களை அழகாக சொல்லி இருக்கிறீர்கள். நாடகத்தை ரொம்பவே உன்னிப்பா கவனிச்சிருக்கிங்க(?)ன்னு தெரியுது..ஹா..ஹா!

    ReplyDelete
    Replies
    1. நீங்களு்ம இதுவரை பார்த்ததில்லையா? சீக்கிரமேவ அனுபவ ப்ராப்தி ரஸ்து! என் கூர்ந்த கவனிப்பை ரசிச்ச உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  8. எஸ்.வி, கிரேசி ட்ராமாக்கள்ல 2 வது வரிசை சீட் டிக்கட் ஜஸ்ட் ரூ.1,000 தான் சார். அடுத்த வாரம் உங்க பர்சை ஓப்பன் பண்ணி ஆவன செய்யுங்கோ :))

    ReplyDelete
    Replies
    1. ஹலோ... ஹலோ... சிவா ஏதோ சொல்றார்னு புரியுது. என்னன்னே கேக்க மாட்டேங்குதே... ஹி.... ஹி...!

      Delete
  9. தலைப்பைப்பார்த்துமே நாடகத்தில் நடிக்கவே இயக்கவோ போய்ட்டீங்களோ என்று நினைத்தேன்.:)

    ReplyDelete
    Replies
    1. அப்படி நினைச்சிரக் கூடாதுன்னுதான் முதல் வரியிலயே சொல்லிட்டனே... ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  10. அனுபவம் அருமை ! அதை அளித்த விதமும் அருமை!

    ReplyDelete
    Replies
    1. அனுபவத்தை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி ஐயா!

      Delete
  11. ரசித்தவை அனைத்தும் நல்ல ரசனை...

    அடுத்து எஸ்.வி.சேகர் நாடகமா...?

    ReplyDelete
    Replies
    1. இல்லை நண்பா... எனக்கு கிரேஸியின் நாடகம் பார்க்கத்தான் ஆசை. முடிகிறதா பார்க்கலாம். மிக்க நன்றி!

      Delete
  12. It seems that your interest was not only to see a drama but also to see it at free of cost. And you got that after a long time. Above all, you had an opportunity to interview Kathadi Ramamoorthy also and your question to him was really great. The film Raman Yethanai Ramanadi came years back and your sense of remembering this dialogue and raising the question based on it is really superb. In short, I enjoyed your drama experience. Well Done.

    ReplyDelete
    Replies
    1. நான் கேட்ட கேள்வியையும் என் நினைவுத் திறனையும் ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  13. ஸாதிகா சொன்னது போல் நீங்கள் நடித்த நாடகத்தைப் பற்றி எதோ எழுதுகிறீர்கள் என்று தான் நினைத்தேன். உங்கள் நாடக அனுபவம் அருமையாகவே இருந்தது.
    நாடகத்தை நேரே பார்த்து ரசிப்பது என்பது ஒரு தனி அனுபவம் தான்.
    அதை அழகான எழுத்துக்களால் பகிர்ந்துள்ளீர்கள்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்து உற்சாகமூட்டும் கருத்தினை வழங்கிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  14. கிருஷ்ணகான சபாவில் நான் நாடகம் பார்த்ததில்லை. வாணி மகாலில் பார்த்திருக்கிறேன். கி.கா.சபாவில் இருக்கைகள் நடக்கக் கூட இடமில்லாமல்தான் இருக்கும் ஒரு உபன்யாசமும், கச்சேரியும் கேட்டிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அதே... அதே....! வரிசையில் நடந்து வெளிவர நானும் சிவாவுமே கஷ்டப்பட்டோம். முதியவர்கள் பாவம் இல்லை...? ஆனால் ஏ.ஸி., நல்ல சவுண்ட் என்று ரசனையான இடம்தான். மிக்க நன்றி!

      Delete
  15. சின்ன வயதில் நெல்லை சங்கீத சபாவில் சில நாடகங்கள் பார்த்ததுண்டு. பெங்களூர் செளடய்யா அரங்கில் ஒருமுறை எஸ்வி.சேகர் நாடகம். உங்கள் அனுபவங்களை சுவாரஸ்யமாகப் பகிர்ந்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நானும் இனி முடியும் போதெல்லாம் நாடகம் பார்க்கலாம் என்று நினைத்திருக்கிறேன் மேடம்! சுவாரஸ்யம் என்று சொல்லி உற்சாகம் தந்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  16. நகைச்சுவை இழையோட உங்களின் முதல் நாடக அனுபவம் படித்து ரசித்துச் சிரித்தேன்.
    நகைசுவை நாடகம் பார்ப்பதைப்போல உங்கள் எழுத்தும் அத்தனை நகைச்சுவை நிறைந்ததாய் இருக்கின்றது.

    அசத்தல் பதிவு சகோதரரே! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. என் எழுத்தின் மெல்லிய நகைச்சுவையை ரசித்துச் சிரித்து மகிழ்ந்து கருத்திட்டு என்னையும் உற்சாகப்படுத்திய அன்புச் சகோதரிக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  17. தலைப்பப் பாத்ததுமே நீங்க ஏதாவது நாடகம் எழுதி இருப்பீங்களோனுதான் நான் நெனச்சேன்! ஏன்னா, நடிப்பு உங்களுக்கு வராதது மாதிரிதான் தெரியுது! அவ்வ்வ்வ்வ்வ்வ் மத்தபடி நாடகத்தை ரொம்பவே கூர்மையா ரசிச்சு இருக்கீங்கன்றது தெரியுது! அது எப்படி? ஒரு விசயம் சொல்லும் போதே அத அப்டியே கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்தரிங்க! கொஞ்சம் எனக்கும் இந்த அம்சத்த கடனா குடுத்தா நல்லா இருக்குமே! சூப்பர்! கண்டின்யூ! கூடிய சீக்கறமே நீங்களும் ஒரு நாடகம் எழுத வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நடிப்புக்கும் எனக்கும் ரொம்ப தூரம் சுடர்! நாடகம் எழுதறது வேண்ணா டிரை பண்ணலாம். (சிரித்திரபுரம் கூட ஏறக்குறைய நாடகம்தான்) என் எழுத்துத் திறமையை ரசிச்சுப் பாராட்டின உனக்கு என் மனம் நிறைய நன்றிம்மா!

      Delete
  18. சிவாஜி நடிப்பைப் பொறுத்தவரை அந்த பாத்திரம்தான் நம் கண்களுக்குத் தெரியுமே தவிர சிவாஜி தெரியமாட்டார். எனவே ரசிகர்களுக்கு கோபம் வராது.
    ஆனால் எம்.ஜியார் படத்தில் எம்.ஜியார்தான் தெரிவார்.பாத்திரம் தெரியாது. உதாரணம்; திருடாதே படத்தில் கதாநாயகன் ஒரு பிக்பாக்கெட் அடிப்பவர். ஆனால் பிக்பாக்கெட் அடித்த பணத்தில் அனாதை இல்லத்து உண்டியலில் பணம் போடுவார். இது எம்.ஜியார் மிகவும் நல்லவர் என்று ரசிகர்களை நம்பவைக்கும் செயல். மேலும் இந்தி ரீமேக்காண 'நாளை நமதே' படமும்.

    ReplyDelete
    Replies
    1. இதுவும் ஒரு வேலிடான பாயிண்ட்டாத்தான் தெரியுது. எம்.ஜி.ஆர். தன்னை முன்னிறுத்திக்க தன் கதாபாத்திரங்களைப் பயன்படுத்திக்கிட்டார்னு உலகம் அறிஞ்சது. சிவாஜி ரசிகர்கள் அவரை கதாபாத்திரமா பாத்ததால ஒண்ணும் பிரச்னை பண்ணலியோன்னுகூட நீங்க சொன்னதும் தோணுது. அழகான கருத்துச் சொன்ன உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  19. அனுபவங்களைப் பகிரும் பொழுது அது
    இன்னும் அழகாகவும் ஆழமாகவும்
    உணர முடிகிறது என்பதை
    உங்களின் பதிவில் உணர்ந்தேன் பாலகணேஷ் ஐயா.

    பகிர்வு அருமை. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அனுபவத்தை ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete

  20. உங்க அனுபவம் அருமை! அணுஅணுவா ரசித்து வாசித்தேன்.

    நானும் ஒரு நாடகப் பைத்தியம்தான். சென்னை வாழ்க்கையில் கிடைச்ச எதையும், ஐ மீன் நாடகம், விட்டுவைக்கலை!

    திருவான்மியூரில் ஒரு ஹாலில் (பெயர் சரியா நினைவில்லை) ஒரே நாளில் மூணு நாடகங்களை ஒன்னாப் பார்த்து ரசித்தேன். ஒவ்வொன்னும் முடிஞ்சதும் பத்து நிமிசம் ஹாலின் வெளியில் போட்டுந்த கேண்டீன் விஜயம் வேற! ரேடியோ அண்ணாவின் நாடகமும் இதில் ஒன்னு.

    எல்லாமே இலவசம் என்பது கூடுதல் மகிழ்ச்சி:-))))

    ReplyDelete
    Replies
    1. திருவான்மியூர்ல நாடகம் பாத்த அனுபவம் இனி திரும்பக் கிடைக்காது டீசசர். அந்த ஏரியாவே இப்ப மாறிடுச்சு. இங்க கி.கா.சபாவுல ஒரு வாரமும் மாலையில இலவச அனுமதியோட நாடகம்ங்கறது சந்தோஷமா இருந்துச்சு கேக்கவே. என் அனுபவத்தை ரசிச்சுப் படிச்ச உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  21. // நண்பர் சரணபவன், ஸாரி... மெட்ராஸ்பவன் சிவகுமார்!// ஹா ஹா ஹா யோவ் மெட்ராஸ் இதுக்கு பதில் சொல்லுமையா மொதல்ல....

    //ஆனாலும் அசாத்திய பொறுமைசாலி இந்த சிவா!// நிச்சயம் உண்மை சார்.. எத்தனை முறை வரவில்லை என்று சொன்னாலும் அண்ணன் விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்று மீண்டும் மீண்டும் அழைப்பவர்.. அன்றைய தினம் என்னையும் அழைத்தார்.. ராசா ஆந்திராவ நோக்கி வண்டிய விட்டுட்டேன் அதன் வர முடியல

    //அப்ஸர்வேஷன் பாஸ்!)// உங்க அப்ஸர்வேஷன் ரொம்ப மோசம் பாஸ்!

    ReplyDelete
    Replies
    1. எலேய்... ராசா அடிக்கடி சொல்லாம கொள்ளாம ஆந்திரா, கேரளா பக்கம்னு வண்டிய விடுறதுக்கு ராசாவோட முட்டியப் பேத்துர வேண்டியதுதான்...! வாலேய்...! உமக்கிருக்கு...! அப்ஸர்வேஷன் உன் வயசுல இன்னும் கூர்மையா இருந்திச்சுல்ல...!

      Delete
  22. ஆமா இவரு அப்படியே ஆந்திரா ஹீரோயின் சார்மி கூட டூயட் பாடிட்டுல்ல வந்துருக்காரு...!!

    ReplyDelete
    Replies
    1. என்னது... சார்மியா? நானே சமந்தாவுக்கு அப்டேட் ஆயிட்டேன். இன்னும் பழைய ஃபிகர்லயே இருக்கியே சிவா...!

      Delete
  23. போட்டால இருக்குறது நீங்களா அண்ணா ...?

    என்னது ஆமாவா ?

    அயோய்யோ எப்புடி இருந்த அண்ணேன் இப்பூடி ஆகிட்டாரே .
    அப்ப நாளைக்கு நானும் இப்டிதானா ?

    நீங்க ஒரு நாடகம் எழுதுங்கன்னேன் . அடுத்த பதிவர் சந்திப்புல நாமெல்லாம் சேந்து சூப்பரா நடிச்சு அரங்கேத்திடுவோம் . ஆனா ஸ்டேஜ் சூப்பரா இருக்கோணும் சொல்லிப்புட்டேன் . எம்.ஏ.சி கிரவுண்டு , நந்தனம் ஓய.எம்.சி.ஏ இந்த மாதிரி படா படா கிரவுண்டா பாத்து வைங்க . அரங்கேற்றம் அமர்க்களமா இருக்கனும்ல அதான் .
    அப்புறம் அடுத்தடுத்தா நாடகத்துக்கு பத்துக்கு பத்து ரூமே போதும் , ஏன்னா ...?

    ReplyDelete
    Replies
    1. தம்பி... முதல் போட்டோவுல இருக்கறது மெட்ராஸ்பவன் சிவகுமார், ரெண்டாவது படத்துல இருக்கறவர் காத்தாடி ராமமூர்த்தி. தமிழ்நாட்டுல ரெண்டு பிரபலங்களைத் தெரிஞ்சுக்காம நீயெல்லாம் எப்படித்தான் பதிவுலகுல குப்பை கொட்டறியோ...? என்னமோ போடா மாதவா...! நான் நாடகம் எழுதிடுவேன். ரொம்ப ஈஸி. ஆனா திறந்த வெளில நீ நடிக்கறதை அரங்கேத்தறதுதான் உனக்கு ஸேப்! ஓட வசதியா இருக்கும். ஹி... ஹி...!

      Delete
    2. // தமிழ்நாட்டுல ரெண்டு பிரபலங்களைத் தெரிஞ்சுக்காம நீயெல்லாம் எப்படித்தான் பதிவுலகுல குப்பை கொட்டறியோ...?//

      ஆகா பல்பு வாங்கிட்டேனே . சரி விடுங்க ஒரு பிரபலம் இன்னொரு பிரபலத்த தெரியாதுன்னு சொல்றதுதானே டிரெண்டு . ( நாங்கல்லாம் "மிஸ்கின்" ரசிகர்களாக்கும் ஹி... ஹி...! .)

      //ஆனா திறந்த வெளில நீ நடிக்கறதை அரங்கேத்தறதுதான் உனக்கு ஸேப்! ஓட வசதியா இருக்கும். ஹி... ஹி...!//

      குதிர மூஞ்சி மாதிரி இருக்கு நீயெல்லாம் நடிக்கபோறியான்னு சிவாஜியவே கேட்ட நாடு நம்ம நாடு . சிறந்த நடிகருக்கு இதெல்லாம் சகஜமப்பா ....! ஹி... ஹி...!


      Delete
    3. வாயை அகலமா மீன்குஞ்சு மாதிரி பொளந்து பேசறான் என்றுகூட முதல் படத்தில் கமெண்ட் வந்ததாம் சிவாஜிக்கு! பின் அவர் படைத்தது வரலாறு! அதுக்காக நடிக்க வர்றவனெல்லாம் சிவாஜியாயிட முடியுமாப்பா...? நீ மிஷ்கின் ரசிகர்ங்கறதை இப்படிச் சொல்றதால ஆமோதிச்சுத்தான் ஆகணும். ஹா... ஹா...!

      Delete
  24. சோ, மனோகர், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன் நடித்த பல நாடகங்கள் நானும் பார்த்திருக்கேன். உண்மையிலேயே தனி அனுபவம் தான். கிரேசி மோகன், சேகர் நாடகங்களும் பார்த்திருக்கிறேன்.

    தலைப்பைப் பார்த்து நீங்கள் தான் நடித்திருக்கிரீர்களோ என்று நினைத்துவிட்டேன். (தப்பு ஒன்றுமில்லையே!)

    ReplyDelete
    Replies
    1. தப்பொன்றுமில்லை. பப்ளி்ஷ் பண்றதுக்கு முன்னாடி எனக்கு இப்படி நினைச்சுடுவாங்களோன்னு தோணிச்சு. அதான் முதல் வரிலயே கன்ஃபெஸ் பண்ணிட்டேன். ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  25. பல பல வருஷங்களுக்குமுன் கிரேசியின் நாடகத்துக்கு (அண்ணாமலை மன்றம்) போனேன். இரண்டாவது ரோ 150 ரூ என்றதும் அடுத்து குறைந்த ரேட் என்ன என்று விசாரித்தேன். கவுன்டர் காரர், நீங்கள் 75 ரூ டிக்கெட் வாங்கினால் போதும் என்று சொல்லி, முதல் வரிசையில் உட்கார வைத்துவிட்டார்!

    காத்தாடி நாடகம் free, வருகிறாயா என்றதும் நீங்கள் என்ன சொல்லியிருப்பீர்கள் என்று யோசித்தேன் - 'free யா, அப்பா சரி, பொண்டாட்டி பிரசவகாலமாயிருந்தாலும் தள்ளி வைத்துவிட்டு வந்து விடுகிறேன் !' . சரியா!

    -ஜெ

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... அப்படி ஒரு நல்ல கவுண்ட்டர்காரர் கிடைக்க நான் கொடுத்து வெக்கலியே...! அவர் பேர், அட்ரஸ் ப்ளீஸ்! உங்கள் யூக பதிலில் பாதி சரி... வீட்டு பர்சேஸிங் இருக்கு. அதை தள்ளி வெச்சுட்டு வந்துடறேன்னு சிவாட்ட சொன்னேன்!

      Delete
  26. சார் சார் அப்படியே என்னையும் அழைத்து செல்வீர்கள் என நம்புகிறேன்

    ப்ரியா தான் என்ன சரிதானே

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா... கோவைலருந்து நீங்க எனக்காக சென்னை வர்றதாயிருந்தா கண்டிப்பா கூட்டிட்டுப் போறேன் நண்பா. மிக்க நன்றி!

      Delete
  27. எஸ் வீ சேகர் நமக்கு அல்வா ஊட்டுனது இங்கே:-))))

    http://thulasidhalam.blogspot.co.nz/2007/02/6.html

    ReplyDelete
    Replies
    1. ஊஹும்...! டீ்ச்சர் தொடாத சப்ஜெக்ட் எதுவும் எழுதறதுக்கு பாக்கி இருக்கறதா நேக்குத் தோணலை. (இருந்தா என் காதுல மட்டும் ரகசியமா சொல்லுங்களேன்...!) சேகர் ஊட்டுன அல்வாவைச் சாப்பிட, ஸாரி, படிக்கப் போறேன். உங்களுக்கு என் .உளம் கனிந்த நன்றி!

      Delete
  28. ஆஹா.. ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே, பார்த்த நாடகங்கள் ஞாபகம் வருதே! 70 களில் பம்பாயில் (மாதுங்காவில்) இருந்தபோது ஷண்முகானந்தா ஹாலில் வருஷாவருஷம் நாடக சீசன் உண்டு. மனோகர், சோ, ஜெயசங்கர் கூட, நாடகங்கள் மிஸ் பண்ணியதில்லை. ஒவ்வொரு குழுவும் 3 நாடகங்களாவது போடுவார்கள். மனோகர் நாடகங்களைப் பற்றி புதிதாக யார் எழுத முடியும்!

    சோ நாடகத்தை ஒருமுறை அடுத்த நாள் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் கிழித்திருந்தார்கள். அன்றைய நாடகத்தில் புதிதாக ஒரு சீன் போட்டு டைம்ஸ் பேப்பரை கையில் வைத்துக்கொண்டு, 'இந்த குப்பையெல்லாம் யார் கொண்டு வந்தது, சீ, தூ' என்று துப்பி, கிழித்துப்போட்டு அதை மிதி மிதியென்று மிதித்துவிட்டார்!

    கமல் ஹாசன், ஸ்ரீப்ரியா 2 பேர் மட்டும் ஓர் ஓரங்கநாடகம் சில் நிமிஷங்களுக்கு போட்டார்கள். கும்பல் நிறைந்த பஸ்ஸில் மேல் கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி செல்வதுபோலும், அவர்கள் காலை மற்றவர்கள் மிதித்தால் வரும் ரியாக்ஷன், பஸ் குலுங்கும்போது முன்னும் பின்னும் சாய்வது, (பே க் கிரௌண்ட் ம்யூஸிக் உண்டு) என்று பின்னிவிட்டார்கள்.

    ஒருமுறை சிவாஜி 2 நாடகங்கள் - தங்கப் பதக்கம், ஞான ஒளி - போட்டார். எதோ காரணத்தால் ஷண்முகானந்தா ஹால் அவருக்குக் கிடைக்கவில்லை. தாதர் போகும் வழியில் ஒரு ஓபன் ஏரியாவில் மேடை போட்டு நாடகம். த. ப. வில் மேல் அதிகாரியிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவர் மனைவி இறந்த செய்தி வரும். விறைப்பாக ஒரு சல்யூட் வைத்துவிட்டு மேடையின் இந்தக் கோடியிலிருந்து நடக்க ஆரம்பித்து நடுவில் முழங்கால் தடுமாறி சமாளித்து விறைப்பாக வெளியேறுவார் பாருங்கள், அது போதும் அந்தக் கலைஞனை ஆராதிக்க!

    -ஜெ.

    ReplyDelete
    Replies
    1. மனோகர், சோ... சரி, ஜெய்கூட நாடகத்துல நடிச்சாரா என்ன? புதுத் தகவல் எனக்கு! சோ டைமிங் சென்ஸோட மத்தவங்களை கிழிக்கறதுல கில்லாடி! (ஒரு படத்துல ‘சென் மேடம் ரொம்ப நல்லவங்கடா, சென்ஸார் தான் மடையன் முட்டாள்னு அவர் திட்டினது ஞாபகம் வருது) அப்புறம்... கமல் இந்த ‘மைமிங்’ ஆக்டிங்ல எக்ஸ்பர்ட். (சலங்கை ஒலியில ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸை ஜெயப்ரதாவோட நடிச்சுக் காமிப்பாரே... நினைவிருக்கா?) சிவாஜியப் பத்தி என்ன சொல்ல...? நான் போன விழா மேடையில வி.வீ.சுந்தரமும், ‌ஒய்.ஜி.மகேந்திராவும் சிலாகிச்சதை விடவா...? நீங்கள் சொன்னதை அப்படியே ஆமோதிக்கிறேன் ஜெ!

      Delete
    2. சலங்கை ஒலி சீன் - அதே, அதே!

      ஆம், ஜெய் நாடகத்தில் நடித்திருக்கிறார். பள்ளிப் பருவத்தில் ஸ்ரீரங்கத்தில் நவாப் ராஜமாணிக்கம் நாடகங்கக் கூடப் பார்த்திருக்கிறேன்! இன்னும் ஒன்று சொல்ல மறந்துவிட்டது. கே. பாலச்சந்தரின் நாடகங்களை பார்க்க வாய்ப்பு கிடைக்காததில் எனக்கு ரொம்ப வருத்தம். - ஜெ.

      Delete
    3. நவாப் ராஜமாணிக்கம் நாடகங்கள் பற்றியும், டி.கே.சண்முகம் அவர்களி்ன நாடகங்கள் பற்றியும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். நாடக உலகினருக்கு சினிமாப் பிரவேசத்துக்கு ஷார்ட் கட் பாதை அமைச்சுத் தந்தவராச்சே கே.பாலசந்தர். இவங்கல்லாம் நாடகம் போட்ட காலத்துல ரொம்ப சின்னப் பையனானதால பாக்க எனக்கு குடுப்பினை இல்ல. நீங்களும் கே.பி. நாடகம் பாத்ததில்லைங்கறதுல எனக்கும் வருத்தம் தான் ஜெ!

      Delete
  29. இதுவரை மேடை நாடகங்கள் பார்த்த அனுபவம் இல்லை. சிறப்பாக அவ்வனுபவத்தை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் இதான் முதல் அனுபவம் முரளி. இதைப் படித்து ரசித்துக கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  30. நாடகம் பார்க்கத் தூண்டும் எழுத்து... அருமை அண்ணா....

    ReplyDelete
    Replies
    1. எழுத்தை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

      Delete
  31. Visit : http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_27.html

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube