Showing posts with label கமல். Show all posts
Showing posts with label கமல். Show all posts

Monday, July 1, 2013

நோ குழந்தை - வீடு சுத்தம்!

Posted by பால கணேஷ் Monday, July 01, 2013
நோ... நோ... அப்படிப் பாக்காதீங்க. இப்படியொரு (அபத்தமான) கருத்தை நான் சொல்ல மாட்டேங்க. குழந்தைங்க இருக்கணும்.... வீடு கலகலப்பா இருக்கணும். எல்லாப் பொருட்களும் இறைஞ்சு கிடக்கணும். அதை ஒழுங்குபடுத்தணும். இல்லன்னா என்ன சுவாரஸ்யம் லைஃப்ல? இப்படி ஒரு கருத்தைச் சொன்னவர் சர்ச்சைகளுக்குப் பெயர் பெற்ற நம்ம கலகநாயகன்... ஸாரி, உலகநாயகன் கமலஹாசன்தான். பழைய குமுதம் இதழில் ஒரு பக்கக் கட்டுரைகள் பல வாரங்கள் இளைஞர் கமல் எழுதியிருக்கிறார். அதில் ஒரு பக்கம் இங்கே நீங்கள் படிக்க... :



ப்போது நான் திருவல்லிக்கேணி இந்து ‌ஹைஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் பால்கனியில் விளையாடும் போது சறுக்கி விழுந்து அடிபட்டு விட்டது. என்னை வீட்டில் கொண்டு வந்து விட்டு சிகிச்சையளித்தார்கள். என்னோடு படித்துக் கொண்டிருந்த டி.கே.பகவதியின் மகன் மணிவண்ணன் என் புத்தக மூட்டையை டி.கே.எஸ.ஸின் மகன் கலைவாணன் மூலம் வீட்டுக்கு அனுப்பியிருந்தான்.

என் உடம்பு தேறியதும் திரு டி.கே.எஸ்ஸின் வீட்டுக்குப் போனேன்- நன்றி தெரிவிக்க. வீட்டிலேயே அவர் ஷு சாக்ஸ் உடன் வெள்ளை வெளேரென்ற வேஷ்டியுடன் படு சுத்தமாக இருந்தார். அதைவிட அவர் லைப்ரரி கனகச்சிதமாக ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. வீடு முழுவதும் கோவிலைப் போல ஒரே ஊதுவத்தி ஸ்மெல். ரொம்ப இனிமையாக இருந்தது.

உடல் சுத்தத்தை விட மன சுத்தம் அந்தக் குடும்பத்தில் அதிகம். அனைவரிடமும் அன்பு, உரிமை, பிரியம் என்பது அந்தக் குடும்பத்தில் இருக்கிறது. இப்போதும் என் மனம் தடுமாறும் நேரங்களில் அண்ணாச்சி ரூமுக்குப் போய், சில நிமிடங்கள் நின்றுவிட்டு மானசீகமாக அவர் ஆசியைப் பெற்று வருவேன்.

சுத்தமான மனிதர் என்று கூறும்போது என் தந்தை திரு.சீனிவாசன் ஞாபகம் வருகிறது. அவருக்கு வயது அறுபத்தேழு. ஐம்பது வருஷமாக ஒரே பெண்டாட்டியுடன் குடும்பம் நடத்துகிறாரே? அத்துடன் வெற்றிலை, பாக்கு, பொடி, சிகரெட், ‘தண்ணி’ எதுவும் கிடையாது அவருக்கு. அதைவிட சுத்தம், பிள்ளைகள் விஷயத்தில் தலையிடாதது. அவர் எப்போதும் காவிக் கலர் கதர் சட்டை வேஷ்டியுடன்தான் இருப்பார். அவரைப் போல இப்போது யாரும் நடக்க முடியாது. சொல்லப் போனால் நான் அவரை இதுவரை இரண்டே தடவை தான் தொட்டுப் பார்த்திருக்கிறேன்!

வீடு சுத்தமாக இருக்கணுமானால் சின்னக் குழந்தைகள் இருக்கக் கூடாது.

மூன்று வயதிலிருந்து எனக்கு ஃபுல் பேண்ட் போட்டுக் கொள்ள ஆசை. வீட்டில் கேட்டால் வாங்கித்தர மாட்டார்கள். ‘‘நீ வளரும் பிள்ளை. முழுக்கால் சட்டை சின்னதாகப் போய்விடும். பெரியவனானதும் தைக்கலாம்’’ என்று சாக்குச் சொல்லி விடுவார்கள்.

இன்று வீட்டில் சூட் போடவே பிடிக்காது. பெரிய பார்ட்டிகள், நிகழ்ச்சிகளுக்கு மட்டும்தான் சூட் போடுவேன். கழுத்தில் டை இறுக்க, வேர்க்க விறுவிறுக்க என்ன சூட் வேண்டிக் கிடக்கிறது என்று சமயத்தில் கோபமாக வரும்.

வீட்டில் எப்போதும் நான் வெறும் டவலுடன்தான் இருப்பேன். அதிலிருக்கும் ஆனந்தம் எதிலும் கிடையாது. எனக்கென்று வீட்டில் வேஷ்டி எதுவும் கிடையாது. லுங்கி உண்டு. என் அப்பா மெட்றால் வரும்போது அவர் வேஷ்டி ஒனறு இரண்டை விட்டுப் போவார். அதைக்கூட லுங்கி மாதிரி இரண்டு பக்கமும் தைத்துத்தான் கட்டிக் கொள்வேன்.

Wednesday, May 22, 2013

கமல் மாறி விட்டா(ரா)னா?

Posted by பால கணேஷ் Wednesday, May 22, 2013
‘இதய மலர்’ பட ஷுட்டிங். ஜெமினிகணேசன் அவர்கள் டைரக்ட் செய்து கொண்டிருந்தார். மாலை 3 மணி முதல் 10 மணி வரை கால்ஷீட். ஒரு குழந்தை, விஜயகுமார், கமலஹாசன் நடிக்கும் காட்சி. இரவு 9 மணியைத் தாண்டி விட்டதால் குழந்தைக்குத் தூக்கம் வந்து விட்டது. பெரிய வசனம்! குழந்தைக்குக் குளறியது. கமலஹாசனுக்கும் தூக்கம் வந்துவிட்டதா அல்லது நாள் முழுவதும் ஷுட்டிங் செய்த அலுப்பா என்று தெரியவி்‌ல்லை... சலிப்புடன் முகத்தைச் சுளித்துக் கொண்டான். குழந்தைக்கு வசனம் சரியாக வந்தவுடன் கூப்பிடுமாறு சொல்லிவிட்டு ஒரு சோபாவில் சாய்ந்து கொண்டான்.

டைரக்டர் ஜெமினி சற்றும் சலிப்பில்லாமல், கோபம் கொள்ளாமல் குழந்தைக்கு வசனம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்- குழந்தைக்குச் சமமாக மண்டியிட்டுக் கொண்டு! இந்தக் காட்சியை சலிப்புடனும் வெறுப்புடனும் பார்த்துக் கொண்டிருந்த கமலின் முகம் திடீரென்று மலர்ந்தது. சட்டென்று எழுந்துவந்து குழந்தையை உற்சாகப்படுத்தி, அதற்கு வசனம் பேச வரும்வரை பொறுமையுடன் இருந்து காட்சியை முடித்துக் கொடுத்தான். ‘‘ஏன் இந்தப் புத்துணர்ச்சி?’’ என்று கமல் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

பதில்: புத்துணர்ச்சி அல்ல, குற்ற உணர்ச்சி! குழந்தை நட்சத்திரத்தைப் பார்த்து முகம் சுளித்த கமல், பல ஆண்டுகளுக்கு முன் ஒரு குழந்தை நட்த்திரமாக இதேபோல் பல இரவுகளில் ஷுட்டிங்கில் வசனங்களைக் குழறியிருக்கிறான். சக நடிகர்கள் யாரும் முகம் சுளித்ததாக அவனுக்கு ஞாபகம் இல்லை. மாறாக இன்முகத்துடன் உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தனர். இதே ஜெமினிகணேசன் ‘அங்கிள்’ இதே கனிவுடன் இதேபோல் முகம் சுளிக்காமல் வசனம் சொல்லிக் கொடுத்த ஞாபகம் கமலுக்கு வந்துவிட்டது. அன்று இனிமையாகப் பேசி கொஞ்சிக் கொஞ்சி நடிக்க வைக்கப்பட்ட குழந்தை நட்சத்திரம் கமல் இன்று பெரியோரின் ஆசியால் வளர்ந்துவிட்டான்.

அவனை வளர்த்தவர்கள் அதே அன்புடனும் குணத்துடனும் இருக்கிறார்கள். கமல் மாறிவிட்டானா? கர்வமா? எதுவாக இருந்தாலும் திருத்தப்பட வேண்டிய, திருத்தப்படக் கூடிய தவறுகள்தான். அவன் வந்த வழியை அவன் திரும்பிப் பார்த்தால் அவன் தவற மாட்டான். அது நிச்சயம். ஆனால் அதையும் மீறி அவன் கர்வம் கொண்டால் திருத்த வேண்டியது அவனை உருவாக்கிய பெரியோரின் பொறுப்பு.
அன்றைய கமலஹாசன்கள்! (கல்லூரி நாட்களில் என் ஃபேவரைட்)
கரம் முழுவதும் "Enter the Dragon" வியாதி பரவியிரு்கிறது. என் வயதுள்ள முக்கால்வாசிப் பேர் கராத்தே கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் முஷ்டி கறத்து, காய்த்துப் போய் விடுகிறது. இதுதான் அவர்கள் கராத்தே வீரர் என்பதற்கு அடையாளம். மற்றபடி எல்லாரையம் போலத்தான் இருக்கிறார்கள். ஒரு கராத்தேக்காரர் அடிப்பதற்கு முன்னால் ‘கீயா’ (kiah) என்ற ‌போடும் ச்த்தமே போதும் எதிரியைப் பயமுறுத்த.

கராத்தே வகுப்புக்கு என் நண்பருடன் சென்றிருந்தேன் வேடிக்கை பார்க்க. நண்பர் மெலிந்தவர். சாமானியர். சென்னை டாக்சி/ஆட்டோ டிரைவர்களிடம்கூட அவருக்குக் கோபம் வராது. அவ்வளவு சாது. கராத்தே வகுப்பில் மாணவர்கள் செய்யும் சத்தத்தைக் கேட்டு மிரண்டு விட்டார். ‘‘ஏன் தம்பி, இதுக்குப் பேரு கராத்தேயா, இல்ல, கத்தறேயா? இப்படிக் கத்தறாங்களே?’’ என்றார். ‘‘என்ன, கேலி பண்றீங்க? முடிஞ்சா அவங்க செய்யற மாதிரி செய்யுங்களேன் பார்ப்போம்’’ என்றேன். ‘‘செய்யறது பெரிய கஷ்டமில்‌லே, செஞ்சிடுவேன். ஆனா இப்ப வேணாம். என்னால இவங்க மாதிரி கத்த முடியாது. தொண்டை சரியில்லை’’ என்று மழுப்பிவிட்டார்.

சினிமா ஸ்டண்ட்காரர் ஒருவர், ‘‘இந்தக் கராத்தே எல்லாம் நம்ம தஞ்சாவூர் குத்துவரிசையும், கேரளத்துக் களரியும் ஒண்ணாச் சேர்ந்ததுதான். இந்தியாவிலிருந்து சைனா போன ஒரு புத்தபிட்சு இங்கேருந்து கொண்டுபோன வித்தைதான் கராத்தே’’ என்று சம்பந்தமில்லாமல் பழம்பெருமை பாடுகிறார். எனக்குத் தெரிந்த உண்மை: பதினேழாம் நூற்றாண்டில் ‘ரூ க்யூ’ (Ryu Kyu) என்ற ஒரு தீவுவாசிகள் ஜப்பானிய ஆதிக்கத்திலிருந்தார்கள். அந்தத் தீவின் மக்கள் யாரும் ஆயுதங்கள் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஜப்பானிய அரசாங்கம் சட்டம் போட்டிருந்தது. ஆதிக்கத்தை முறியடிக்கவும், ஆயுதுமில்லாத தற்காப்புக் கலைக்காகவும் இத்தீவு மக்கள் கண்டுபிடித்த போர் முறை கராத்தே. ‘கரா’ என்றால் வெறுமை. ‘தே’ என்றால் கை. வெறுங்கை - கராத்தே.

ஏழெட்டுச் செங்கல்களை ஒன்றாக அடுக்கி, தலையாலும் கையாலும் உடைக்கும் என் நண்பர்கள் இருக்கிறார்கள். நானும் இரண்டு ஆண்டுகளக்கு முன் கராத்தே கற்கத் தொடங்கி முடியாமல் ஓடிவந்து விட்டேன். இப்போது மீண்டும் கற்கத் தொடங்கி இருக்கிறேன். ஐந்தில் வளையாததைக்கூட வளைக்கிறார்கள் கராத்தே ஆசிரியர்கள். என்னைப் பொறுத்தவரை கராத்தே கற்றுக் கொண்டால் தைரியமாகக் கடன் கொடுக்கலாம், கடன் வாங்கலாம் - கராத்தே தெரியாதவர்களிடம்!

*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=

- மேலே கொடுக்கப்பட்டிருப்பவைகள் இன்றைய கலகநாயகன்... ஸாரி, உலகநாயகன் (அன்றைய வளரும் நடிகன்) கமல் 1975ம் ஆண்டு ‘குமுதம்’ இதழில் எழுதி வந்த ஒருபக்கக் கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்டவை.
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube