Sunday, April 22, 2018

நினைவுக் குறிப்பிலிருந்து....

Posted by பால கணேஷ் Sunday, April 22, 2018
மாத நாவல்கள் - 1

1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி சானல்களும், கைபேசிகளும் நேரத்தைப் பிடுங்கிக் கொள்ளாத அந்த நாளில் அந்தத் தொடர்கதைகளைப் படித்து பைண்ட் செய்து வீட்டில் வைத்துக் கொள்வது வழக்கம். பின்னர் பதிப்பகங்களின் வெளியீடுகளாக வரும் அந்தக் கதைகளையும் சிலர் வாங்கித் தங்கள் வீட்டில் சேர்த்து வைப்பதுண்டு. ஆனாலும் பதிப்பகப் புத்தகங்கள் விலை அதிகம் என்று இருந்த காரணத்தால் (இன்றைய நம் விலைவாசியில், பதிப்பகப் புத்தகங்களின் தூக்கலான விலைக்கு நாம் பழகிவிட்ட நிலையில் அந்தப் புத்தகங்களின் தொகை நமக்கு அற்பமாகத்தான் தோன்றும்.) பலரால் வாங்க இயலாத நிலை இருந்தது.

அப்படிப் பதிப்பகப் புத்தகங்களை வாங்கி வைத்துக் கொள்ள இயலாதவர்களின் மனக்குறையைப் போக்குவதற்கு அன்றையப் பதிப்பாளர்கள் வழிவகை செய்திருந்தார்கள். பிரபலமான நூல்களை உயர்தரத்தில் வெளியிடும் அதேசமயம், அவற்றை சற்றே தரமிறங்கிய காகிதங்களில் அச்சிட்டு மலிவுப் பதிப்பு என்றும் வெளியிடுவார்கள். புத்தகத்தின் விலையில் ஏறத்தாழ பாதி விலைக்கும் குறைவாகத்தான் இந்த மலிவுப் பதிப்புகள் இருக்கும். நுங்கம்பாக்கம் ’மங்கள நூலகம்’ நிறுவனம் வெளியிட்ட கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’, எஸ்ஏபியின் ‘காதலெனும் தீவினிலே’, ராஜாஜியின் ‘வியாசர் விருந்து’, தியாகராயநகர் அருணா நிலையம் வெளியிடட்ட ‘அகநானூறு’, ‘புறநானூறு’ உள்ளிட்ட பல நூல்களின் மலிவுப் பதிப்புகளை நான் படித்திருக்கிறேன். அவற்றில் சிலவற்றின் பிரதிகள் இன்றும் என்னிடம் உண்டு.

அப்போதுதான் அறிமுகமானது ‘ராணிமுத்து’ மாதநாவல் இதழ். (வருடம் 1967 என்பதாக நினைவு.) சிறந்த படைப்பாளர்களின் புகழ்பெற்ற படைப்புகளைத் துளியும் சுருக்காமல் அப்படியே மாதம் ஒரு நாவலாகத் தருவது என்ற நோக்கத்துடன் துவங்கப்பட்டது. நியூஸ் ப்ரிண்ட் என்கிற சாணித்தாளில்தான் அச்சிடப்படும். விலை ஒரு ரூபாய்தான். அந்தப் புத்தகத்தின் பின் அட்டையில் அடுத்து வரவிருக்கும் நாவல் பற்றிய அறிவிப்பிலேயே தெளிவாகச் சொல்லியிருப்பார்கள். ‘ரூ.5 மதிப்புள்ள இந்த நாவல் உங்களுக்கு ரூ.1க்குக் கிடைக்கும்’, ‘ரூ.3 மதிப்புள்ள இந்த நாவல் உங்களுக்கு ரூ.1 க்குக் கிடைக்கும்’ என்று. பக்க வரையறை கிடையாது. ஒரு புத்தகம் 270 பக்கம் இருக்கும், மற்றொன்று 175 பக்கம் அல்லது 126 பக்கம்கூட இருக்கலாம்.

பேப்பர்களைப் பற்றிக் கவலைப்படாமல் எழுத்தைப் படித்து ரசிக்க விரும்பிய வாசகர்களுக்கு மிகச் சௌகரியமான இதழாக அமைந்தது. நல்ல விற்பனையையும் பெற்றது. முதல் இதழாக அகிலன் எழுதிய ‘பொன்மலர்’ நாவலை வெளியிட்டார்கள். இரண்டாவதாக அறிஞர் அண்ணா எழுதிய ‘பார்வதி பி.ஏ.’ வெளியானது. தொடர்ந்து, பானுமதி ராமகிருஷ்ணாவின் ‘மாமியார்’, மு.வ. எழுதிய ‘அந்த நாள்’, கலைஞர் கருணாநிதியின் ‘வெள்ளிக்கிழமை’, ஜெகசிற்பியனின் ‘நந்திவர்மன் காதலி’, சாண்டில்யனின் ‘ஜீவபூமி’, மாயாவியின் ‘வாடாமலர்’ லக்ஷ்மியின் ‘காஞ்சனையின் கனவு’, ரா.கி.ரங்கராஜனின் ‘ஒரே வழி’, தமிழ்வாணனின் ‘பாலைவனத்தில் பத்து நாட்கள்’ ...இப்படி கணக்கற்ற க்ளாஸிக் நாவல்கள் எளிமையான விலையில் கிடைத்தன.

பின்னாளில் க்ளாஸிக்குகளைக் கைவிட்டு புதிதாக எழுத்தாளர்களிடம் நாவல் வாங்கி வெளியிடப்பட்டது ‘ராணிமுத்து’வில். அப்போதும் 100க்குக் குறையாத பக்கங்கள் கொண்டதாக, எழுதுபவர்களுக்கு நிறைய ஸ்பேஸ் தரும் இதழாகவே இருந்தது. இப்போதைய ‘ராணிமுத்து’தான் அளவில் இளைத்து இன்றைய ‘ஜீரோ சைஸ்’ பெண்களைப் போல மிக ஒல்லியாகக் காட்சி தருகிறது.

தவிர ‘ராணிமுத்து’வுக்கு ஓராண்டு சந்தா கட்டினால் ஏதாவது ஒரு க்ளாஸிக்கை இலவசமாக அனுப்பித் தருவார்கள் என்றொரு ஸ்கீமும் இருந்தது. இன்னொரு சிறப்பம்சம், ஆரம்பம் முதலே ஓவியர் ஜெயராஜின் கை வண்ணத்தில் கலர்ஃபுல்லான அட்டைப்படங்களும், உள்ளே நான்கைந்து கறுப்பு வெள்ளைப் படங்களும் தாங்கித்தான் வெளிவரும். இப்போது அட்டைப்படம் திரை நட்சத்திரங்களைத் தாங்கி வந்தாலும், இன்றளவும், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, உள் படங்கள் அதே ‘ஜெ’தான் தொடர்ந்து வரைந்து கொண்டிருக்கிறார் என்பது ‘ஜே’ போட்டுப் பாராட்ட வேண்டிய விஷயம். சாண்டில்யனின் ‘ஜீவபூமி’ அந்நாளில் திரைப்படமாக்கத் திட்டமிருந்ததால் அட்டைப்பட ஓவியத்தில் நடிகர்திலகம், பத்மியினியின் சாயலில் சாண்டில்யனின் நாயக, நாயகியை அவர் வரைந்திருந்தது இன்றும் நினைவில் பசுமையாக.

என் கல்லூரி நாட்களில் பழைய புத்தகக் கடைகளில் வாங்கித்தான் பல க்ளாசிக் நாவல்களை, குறிப்பாக சாண்டில்யனின் நாவல்களைப் படித்து ரசித்தேன். காலப் போக்கில் இரவல் வாங்கியவர்களும், வெள்ளமும் சாப்பிட்டது போக மிகச்சில பிரதிகளே நினைவுக்காக இப்போது என்னிடம் தங்கியிருக்கின்றன.

ராணிமுத்துவைத் தொடர்ந்து அதே காலகட்டத்தில் வேறு சில மாத நாவல்களும் துவங்கப்பட்டன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை பல உண்டு. 

ட்யூரோசெல் பேட்டரி விளம்பரத்தில் வரும் முயல்களைப் போல அந்த மாதநாவல்களெல்லாம் காலப்போக்கில் நின்றுவிட்டன என்றாலும், ஜெயிக்கிற முயலாக ராணிமுத்து இன்றும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த மற்ற மாதநாவல்களைப் பற்றி...


சிறிது இடைவெளி விட்டு... தொடரலாமா என்பதை நீங்கள் சொல்லுங்கள்.

Wednesday, April 18, 2018

பேரா சார் முக்கியம்..?

Posted by பால கணேஷ் Wednesday, April 18, 2018

பேருல என்ன சார் இருக்கு..? எல்லாம் எழுதி வெச்சபடிதான் நடக்கும்” என்கிற நம்பிக்கைவாதிகளும் சரி, “பேர்ல ஒண்ணுமே இல்ல, எல்லாம் நம்ம திறமைலயும் செயல்பாட்டுலயும்தான் இருக்கு“ என்கிற தன்னம்பிக்கை வாதிகளும் சரி... பெயரில்தான் பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.

ஒரு நண்பர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்ததாகத் தகவல் வந்தது. பார்க்கச் சென்றேன். தலையிலும் கையிலும் பெரிய கட்டுக்களோடு படுத்திருந்தார். “என்னய்யா வரதராஜன், எப்டி இப்டி அடிபட்டுது..?” என்றேன். “என் பேராலதான்யா இவ்ளவு பெரிய அடி...” என்றார்.

பேராலயா..? என்னய்யா சொல்ற..?”

அதை ஏன்யா கேக்கற..?” என்று அவர் இழுத்தார்.

சரி, கேக்கலை விடு”

அட, கேளுய்யான்னா...” என்றார் எரிச்சலாக. “நேத்து ஈவினிங் வாக் வந்துட்டிருந்தேன். கைல மொபைல வெச்சுகிட்டு ஃபேஸ்புக்க ஓபன் பண்ணிகிட்டே என் தெருவுல நொழைஞ்சப்ப எதிர்வீட்டு பரந்தாமன் எதிர்ல வந்தான். திடீர்னு என்னைப் பார்த்து, ‘எருமை வரது’ அப்டின்னு கத்தினான். கடுப்பாய்ட்டேன் நான். ‘என்னய்யா திமிரா.? மரியாதையாப் பேசு’ அப்டின்னேன் கோபத்தோட. அவனானா கொஞ்சமும் அசராம கைய வேற நீட்டி, “யோவ், எருமை வரது”ங்கறான் மறுபடி.

இன்னொரு தடவை வாயத் தொறந்த, தொலைச்சுடுவேன்’ அப்டின்னு விரல் காட்டி வார்ன் பண்ணேன். அவ்ளவுதான்யா தெரியும். திடீர்னு பின்னால மலை மோதின மாதிரி ஒரு பீலிங். நாலடி முன்னால பறந்து அங்கருந்த ஒரு ஆட்டோல இடிச்சுகிட்டு கீழ விழறேன். தலை தரைல மோதி ரத்தம் வருது. நிமிர்ந்து பாத்தா, ஒரு எருமை என்னைத்தாண்டி ஓடுது. அந்தப் படுபாவியானா மெதுவா பக்கத்துல வந்து, ‘எருமை வரதுன்னு நான்தான் கத்தினேனேய்யா. இப்டியா கவனிக்காம எருமை மாதிரியே வருவ.?’ அப்டிங்கறான். வேற பேர் வெச்சுக்கலாமான்னு யோசனை பண்ணிட்டிருக்கேன் இப்போ.” என்று பாண்டியராஜன் ஸ்பெஷல் விழி விழித்தபடி அவர் கூற என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

ண்பரொருவரின் (ஒரு நண்பர் இல்லை, இவர் வேறு) அனுபவம் வேறுவிதமானது. பைக்கில் வந்த இவரை ஒரு ட்ராபிக் கான்ஸ்டபிள் வழிமறித்திருக்கிறார். டிரைவிங் லைசென்ஸ், ஆர்சி புக் எல்லாம் சோதித்துவிட்டு “இன்சூரன்ஸ் புதுப்பிக்கலை. ஃபைன் போடணும்” என்றிருக்கிறார். “அடாடா, கவனிக்கலை சார். நாளைக்கே ரின்யூ பண்ணிடறேன். ஸாரி சார்..” என்று இவர் விதவிதமாகக் கெஞ்சியும் பிரயோஜனம் இல்லை. பைன் கட்டியே தீரணும் என்று அடம்பிடித்த கான்ஸ், ரசீது புக்கை எடுத்து வண்டி நம்பர் எழுதிவிட்டு, பேரைச் சொல்லுங்க என்றிருக்கிறார். இவர் சொன்னார் : ‘ஸ்தலசயனப் பெருமாள்’.

என்னது..? என்ன பேர் சொன்னீங்க..?”

ஸ்தலசயனப் பெருமாள்..”

அவர் தமிழில் எழுதிப் பார்த்திருக்கிறார். ஆங்கிலத்தில் எழுத முயன்றிருக்கிறார். இந்தப் பெயரை எப்படி எழுதுவதென்று தெரியவில்லை. பேய்விழி விழித்தபடி, “சரி, சரி, கிளம்புங்க. உடனே சரி ரின்யூ பண்ணிடுங்க. போங்க.” என்று விட்டு விட்டாராம். நண்பரொருவர் சொல்லிச் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார் அடுத்த ஒரு வாரத்துக்கு.

சிலபேர் தங்கள் பிள்ளைகளுக்கு மாடர்னாகப் பெயர் வைப்பதாக எண்ணிக் கொண்டு, தாங்கள் அறியாமலேயே விசித்திரமான பெயர்களை வைப்பதும் நடப்பதுண்டு. உறவினர் வீட்டு விசேஷம் ஒன்றிற்குச் சென்றிருந்தபோது, அவரின் பெயரன் துறுதுறுவென்று ஒரு இடத்தில் நிற்காமல் ஓடியாடிக் கொண்டிருந்தான். “பெயரென்ன?” என்று கேட்டதற்கு “ரேவந்த்” என்றார். “இப்டில்லாமா பேரு இருக்கு..?” என்று விழித்தேன். “இது நார்த்சைட்ல வெக்கப்படற பேர்தான்யா. நல்லாருக்குல்ல சொல்றதுக்கு..” என்றார். தலையாட்டிவிட்டு வந்த நான், பெயரகராதியில் இப்படி ஒரு பெயர் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தபோது இருந்தது. பெயருக்கான விளக்கம் இப்படி.... ‘ரேவந்த் - குதிரைகளைப் பராமரிப்பவன்’ ஹா.. ஹா.. ஹா...

இதேபோல மற்றொரு சந்தர்ப்பத்தில் ‘தேனுகா’ என்ற பெயரைக் கேள்விப்பட்டு நான் (வழக்கம்போல்) அகராதியைக் கேட்டதில் வந்த பதிலானது... ’தேனுகா - மாட்டுமந்தை’. , என் கடவுளே, அர்த்தம் புரிந்தால் இப்படிப் பெயர் வைப்பார்களோ... கலைவாணி என்று பெற்றோரால் ரசனையுடன் வைக்கப்பட்ட பெயரைப் பெரும்பாலோர் உச்சரிப்பு வழக்கில் களவாணி என்றே அழைப்பதால் பெயரையே கெஜட்டில் மாற்றிக் கொண்ட பெண்ணையும் நான் சந்தித்திருக்கிறேன்.

ஆக, கயல், யாழிசை போன்ற இனிய தமிழ்ப் பெயர்களும், ராமன், கிருஷ்ணன், சரஸ்வதி போன்ற தெய்வப் பெயர்களுமே வைப்பதற்கு உகந்தவை. எந்தக் குழப்பமும் பிரச்சினையும் வராதவை என்பதை அறிந்து தான் நம் முந்தைய தலைமுறை அத்தகைய பெயர்களைச் சூட்டியிருக்கிறது.

நம் வாத்யார் எம்ஜிஆர் கூட தன் படங்களில் கதாநாயகர்களுக்கு முருகன், ராமு, கண்ணன் என்றெல்லாம் எளிய பெயர் வைத்ததற்குக் காரணமும் அதுவே. ஆதலினால் உலகத்தீரே... உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குச் சுத்தத் தமிழ்ப் பெயரையே வைப்பீராக.

(ஹப்பாடா, சந்தடிசாக்குல ஒரு மெசேஜும் சொல்லியாச்சுப்பா. நல்ல எழுத்தாளர்ன்னுடுவாங்க. ஹி... ஹி.. ஹி...)

-‘சிருஷ்டி’ இணைய இதழில் வெளியானது.

Thursday, March 8, 2018

உதயமூர்த்தியும், உப்புமாவும்!

Posted by பால கணேஷ் Thursday, March 08, 2018

டி மாதத்து அம்மன் கோவில் ஒலிபெருக்கி போல அலறினாள் சாந்தி. “என்னது..? உன்னோட தம்பி பிரசவிச்சுட்டானா..?”
கண்களில் சலிப்புக்காட்டிப் பார்த்தான் உதயமூர்த்தி. அருகில் நெருங்கி, அவள் காதுகளிலிருந்து இயர்போன்களைப் பிடுங்கிக் கீழே போட்டான். “என் தம்பி ஊர்ல அவன் நடத்திட்டிருந்த ப்ரஸ்ஸை வித்துட்டான்னு சொன்னேன்மா. நெக்ஸ்ட் வீக் இங்க வந்து தங்கி, வேலை தேடப் போறானாம். போன் பண்ணான்”
“நோ வே. உங்க தம்பிக்கும் சேத்து வடிச்சுக் கொட்ட என்னால முடியாது. எங்கனாச்சும் உன்னோட ப்ரண்ட்ஸ் ரூம்ல தங்கிக்கச் சொல்லு...” என்றாள் கண்டிப்பாக. 
“ம்க்க்கும். உள்ளூர்ல உன் வீடு இருக்கறதால பாதி நாள் உன் தம்பிக்கு டிபன், சாப்பாடுன்னு சகலமும் இங்கருந்துதான். பத்து கிலோ அரிசிய பத்தே நிமிஷத்துல காலி பண்ற அந்த சின்டெக்ஸ் டாங்க்குக்கே வடிச்சுக் கொட்டறே... இதைச் செய்ய மாட்டியா..?”
“சாப்பாட்டு ராமன், சின்டெக்ஸ் டாங்க்... இன்னும் எப்டில்லாம என் தம்பிய மட்டம் தட்டறதா ஐடியா உனக்கு.? உன்னோட தம்பியப்போல மனசெல்லாம் வஞ்சனையா இருந்தா உடம்பு ஊசியாட்டம்தான் இருக்கும் உதயா...” என்று அவள் வரிந்து கட்டிக்கொண்டு யுத்தத்துக்குத் தயாராக, சும்மாக் கிடந்த சைரனைத் தெரியாமல் ஆன் செய்து விட்டோமே, இனி இது இப்போதைக்கு ஓயாதே என்று உ.மூர்த்தி ‘ழே’ யென்று விழிக்க, அதே செகண்டில் “அக்கா..” என்று வாசலிலிருந்து குரல் கேட்டது. பல்லெல்லாம் வாயாக எண்ட்ரியானான் சாந்தியின் தம்பி ஹரி.
கேஸ் சிலிண்டர் ஒன்றை நிறுத்தி வைத்து, அதற்குக் கை, கால்கள் கொடுத்து, அதன் மீது பூசணிக்காய் ஒன்றை வைத்து, அதில் சோவின் கண்கள் போல பெரிய கண்கள் கொண்ட ஒரு உருவத்தைக் கற்பனியுங்கள். அதுதான் ஹரி.
உள்நா(வீ)ட்டு உக்கிர யுத்தமொன்றில் உத்தரவின்றி உள்நுழைந்து விட்டதை அறியாமல் உற்சாகமாகப் (எத்தனை உ!!) பேசினான் ஹரி. “மாமா, அம்மாக்கு இன்னிக்கு உடம்பு சரியில்லாததால அக்கா வீட்லயே டிபன், சாப்பாடு சாப்ட்டுக்கோன்னு சொல்லிட்டாங்க. நான் இப்போ டயட்ல இருக்கறதால...”
“இருக்கறதால..?”
“எட்டே எட்டு தோசையோட சிம்பிளா டிபனை முடிச்சுக்கலாம்னு இருக்கேன் மாமா. அக்கா, டிபன் செஞ்சாச்சா..?” என்றபடி வைரமுத்துவை முறைக்கிற ஜீயர் போலத் தன்னை முறைத்த உ.மூ.வைக் கண்டுகொள்ளாமல் சாந்தியை நெருங்கினான்.
“காலைல எழுந்ததே லேட்டுடா. ஸண்டேதானே மெல்லப் பண்ணலாம்ங்கற நெனப்புல இன்னும் லேட்டாயிட்டுது. உங்க மாமா இருக்காரே... மத்த புருஷன்கள மாதிரி வீட்டைப் பெருக்கறாரா, காபி போடறாரா, இல்ல கிச்சன்ல காய் நறுக்கி ஹெல்ப்பாச்சும் பண்றாரா..? ஆபீஸ்ல இருக்கற மாதிரியேதான் இங்கயும் தேமேன்னு உக்காந்திருக்கார்..”
“என்னது..? மத்த புருஷன்களா..? அடிப்பாவி... எத்தனை நாளா எனக்கு துரோகம் பண்ற..?”எப்எம் ரேடியோ அறிவிப்பாளினி போல இன்ஸ்டன்ட்டாக அலறினான் உதயமூர்த்தி.
“அடச்சே... மத்த வீடுங்கள்ல இருக்கற மத்த பெண்களோட புருஷன்களைப் போலன்னு சொல்ல வந்தேன். அதுனால ஹரி.. இன்னிக்கு சிம்பிளா உப்புமா பண்ணலாம்னு இருக்கேன்.”
“ஐயையோ... உன்னோட உப்புமாவா..? போன வாரம் டிபன்பாக்ஸ்ல நீ தந்த உப்புமாவைத் தின்னுட்டு கொஞ்சத்தை எங்க தெரு நாய்க்குப் போட்டேன். அது இன்னி வரைக்கும் என்னைக் கடிக்கறதுக்கு வெறி கொண்டு துரத்திட்டிருக்கு. அதுக்குப் பயந்து ஓடியே நாலு கிலோ குறைஞ்சிட்டேன். ஆள விடுக்கா. சூர்யபவன்ல உளுந்துவடை சைசுக்கு சப்பாத்தி போடுவான். அதைச் சாப்ட்டுக்கறேன்..” என்று அலறியபடி ஓடி மறைந்தான் ஹரி.
“ஹும், சொந்தத் தம்பியே மதிக்கலன்னா மத்தவங்கள என்னத்தச் சொல்றது..?” என்றபடி சமையலறையை நோக்கி நகர முற்பட்ட சாந்தியைக் கையமர்த்தித் தடுத்தான் உதயமூர்த்தி. “நீ இன்னிக்கு அநியாயத்துக்கு என்னைச் சீண்டிட்டே. அதனால... இன்னிக்கு உப்புமாவை நானே செய்யறேன்.” என்றான்.
“ஆ... நமக்குக் கல்யாணமான நாள்லருந்து உங்கிட்ட சூடு, சொரணை, ரோஷம் எதுவும் நான் பாத்ததில்லையே...” சாந்தியின் முகம் எண்ணெயில் போட்ட பூரிபோல உப்பியது. “ஆனா, உன்னால உருப்படியா ஒரு காரியமும் செய்ய முடியாது. விட்று உதயா.”
“யார்டி சொன்னது உருப்படியா நான் ஒண்ணும் செய்ய மாட்டேன்னு?”
“போன வாரம் நம்ம வெட்டிங் அனிவர்சரிக்கு வந்த உங்க மேனேஜர்தான்...”
உக்ரமூர்த்தியானான் உதயமூர்த்தி. “ஆபீஸ்ல எல்லாரையும் அவரைப் போலவே நெனச்சுட்டார் போலருக்கு அந்தாளு...・பல்லை நறநறத்தான். 党அடியேய், இன்னிக்கு மட்டும் நான் சூப்பரா உப்புமா செஞ்சு உன்னை அசத்தல...”
“நான் கேக்கறதை வாங்கித் தரணும். டீலா.?” கையை உயர்த்தினாள் சாந்தி.
சனிபகவான் அவன் ஜாதகக் கட்டத்தில் சடுகுடு ஆடுவதை உணராதவனாய், வாராது வந்த அபூர்வ ரோஷத்துடன் பதிலுக்கு கை உயர்த்தினான் உதயமூர்த்தி. “டீல்...”
தொலைக்காட்சியில் ஆழ்ந்திருந்த சாந்தியை இழுத்தது சமையலறையில் இருந்து வந்த நெய் வாசம். என்ன செய்கிறான் இவன்..? எட்டிப் பார்த்தாள்.
“என்ன உதயா..? உப்புமா பண்றேன்னுட்டு முந்திரி வறுத்துட்டிருக்கே..?”
“இங்க பாரு... பட்டாணி வேக வெச்சு எடுத்தாச்சு. கேரட் நறுக்கி வெச்சுட்டேன். வெங்காயம் வதக்கி வெச்சாச்சு. இப்ப இந்த முந்திரியவும் சேத்து, கூடக் கொஞ்சம் நறுக்கின தக்காளியும், பொடிப் பொடியா வெட்டின பீன்சும் போட்டு, கூடக் கொஞ்சம் கறுவேப்பெலையும், பத்து துண்டு பச்சை மிளகாவும் போட்டு...”
“ஏன், முட்டைக்கோஸ், இஞ்சியெல்லாம் விட்டுட்டே...?”
“ஆ... மறந்துட்டேன். தேங்க்ஸ். அதெல்லாத்தயும்கூடப் போட்டுக் கிளறி எறக்கிக் காட்டறேன்டி. நீ பண்றதுக்குப் பேரு உப்புமாவாடி..? போய் அஞ்சு நிமிஷம் ஹால்ல டிவி பாத்துட்டிரு. முடிச்சுட்டுக் கூப்டறேன், போடி பூந்தி”
“எனக்கு வராம இருந்தாச் சரி வாந்தி..” என்றபடி வெளியேறினாள் சாந்தி.
ந்தப் பூனையின் கிடார் இசைக்கு அறையே அதிர்ந்தது. எலியானது தலையணையைக் காதில் வைத்துப் பொத்திக் கொண்டும்கூட, சத்தம் அதைத் தூக்கிப் போட, கட்டிலில் இருந்து அது கீழே விழுந்து, பூந்தொட்டி அதன் தலையில் விழுந்து தலை கிர்ரென்று சுற்ற, விழித்தது அது. 
பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த சாந்தியை இழுத்தது உள்ளேயிருந்து வந்த உ.மூ.வின் அபயக்குரல். “சாந்திம்மா, இங்க கொஞ்சம் வாயேன்...”
சமையலறையின் உள்ளே செல்ல உதயா, எக்ஸிபிஷனில் காணாமல் போன குழந்தை மாதிரி திருதிருவென விழித்தபடி நின்றிருந்தான். “என்னமோ தெரியலம்மா. எல்லாச் சமாச்சாரங்களையும், ரவையவும் போட்டு பத்து நிமிஷமாக் கௌறிட்டிருக்கேன். கெட்டியாகவே மாட்டேங்குது...”
“ஸ்டவ்வைப் பத்த வெச்சிருக்க மறந்துருப்ப. வேறென்ன..” என்று கிடைத்த சாக்கில் அவனைக் கால்வாரியபடி கவனித்தாள். அடுப்பு சரியாகத்தான் எரிந்தது. சட்டியில் எல்லாச் சமாச்சாரங்களும் கொதித்துக் கொண்டுதான் இருந்தன. பின்னே என்னவாகியிருக்கும்..? குழம்பியபடி பார்த்தவளின் பார்வையில் பட்டது ஸ்டவ்வின் அருகிலிருந்த டப்பா.
அடுத்த கணம்...
பெயரிலிருந்த அமைதியைத் தொலைத்து, கோபமாகக் கேட்டாள். “ஏய் உதயா, என்னது இது.?”
“இதுவா..? ரவை டப்பா. இதுலருந்துதான் கொட்டிருக்கேன் ரவையை...”
“அடப்பாவி...” சீறினாள் உதயா. “என்ன வேலையப் பண்ணி வெச்சிருக்கே..?” என்றபடி அவனை மொத்தத் துவங்கினாள். நான்கைந்து அடி அடித்தவள், அடுத்த கணம் குமரிமுத்துவும் பி.எஸ்.வீரப்பாவும் சேர்ந்து சிரிப்பதைப் போல வித்தியாசமான ஒரு டோனில் அடுக்கடுக்காகச் சிரிக்கத் தொடங்கினாள்.
ஒன்றும் புரியாமல் ‘ழே’ என்று விழித்தபடி பரிதாபமாகக் கேட்டான் உ.மூ. “பழைய படத்துல சிவாஜிகணேசன் பண்ற மாதிரி இப்டி கோவிச்சுக்கிட்டே சிரிச்சா எப்டி சாந்தி..? என்ன விஷயம்னு சொல்லிட்டாச்சும் சிரியேன், ப்ளீஸ்..”
“யோவ் லூசு... ஹாஹாஹா... டப்பாவைச் சரியாப் பாக்க... ஹாஹாஹா... மாட்டியா..? இது ரவை... ஹாஹாஹா.. இல்லடா. காலைல நான்.. ஹாஹாஹா... வாங்கி வெச்ச கோலமாவு...” சிரித்தபடியே கோபத்துடன் அவன் தலையில் அவள் ஓங்கிக் குத்த, ஈரேழு பதினான்கு லோகங்களும் இருமுறை சுற்றிவிட்டு நேராகி நின்றன அவனுக்கு.
அடுப்பை அணைத்தபடியே, “பாவி மனுஷா... நீ கொட்டின தக்காளி, முந்திரி, எட்செட்ரா எட்செட்ராவை மட்டும் வறுத்துத் தின்னிருந்தாலே பசி அடங்கியிருக்கும். இப்ப அத்தனையும் வேஸ்ட்டு. உன்னைச் சொல்லிக் குத்தமில்லய்யா. உங்கம்மாவோட வளர்ப்பு அப்டி...” என்று அவள் அர்ச்சனையை ஆரம்பிக்க, “ஹி.. ஹி.. ஹி..” என்று இளித்தபடி நழுவலானான் உ.மூ.
“ஏய், நில்லு...” சட்டையைப் பிடித்து இழுத்தாள். “கேவலமாக் கூட உப்புமாச் செய்ய முடியாம நீ தோத்துட்ட. ப்ராமிஸ் பண்ணா மாதிரி நான் கேக்கறதை வாங்கிக் குடுத்தாகணும் நீ...”
“ஹி... ஹி... பந்தயம்லாம் ஒரு விளையாட்டுக்குப் போட்டுக்கறது சாந்திம்மா. இதயெல்லாம் சீரியஸா எடுத்துக்கலாமா..? ஹி... ஹி...”
“மரியாதையா சொன்ன வாக்கைக் காப்பாத்தணும். இல்லாட்டி இந்த வாரம் பூரா மூணு வேளையும் உனக்கு உப்புமாதான்.”
“ரைட்டு. என்ன வேணுமோ கேளு..” தெம்பாக இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும் என்னத்தைக் கேட்டுத் தொலைப்பாளோ என்று உள்ளே குதிரைக்குட்டி உதைத்தது உ.மூ.வுக்கு.
“எனக்கு ஒரு ஆப்பிள் வாங்கித் தந்துடு...”
“செல்லாக்குட்டி..” ரிலாக்ஸானான் உ.மூ. “ஒண்ணு இல்லடா, ஒரு டஜனே வாங்கித் தரேன், போதுமா..?”
கேஸ் தீர்ந்து போன ஸ்டவ் எரிவதுபோல, பகபகவெனச் சிரித்தாள் சாந்தி. “லூசு... நான் கேட்டது திங்கற ஆப்பிள் இல்ல... ஆப்பிள் ஐபோன்”
“என்னது..?” தலை சுற்ற ஆரம்பித்தது உ.மூ.வுக்கு. “இப்ப நீ வெச்சிருக்கறதே என்னைவிட ஸ்மார்ட்டான போனாச்சே... வேற எதாச்சும் கேள்டா செல்லம்..”
“போனா இது..? பலசமயம் மக்கர். நான் பேசினா எதிர்முனைல இருக்கறவங்களுக்கு சரியாவே கேக்க மாட்டேங்குது.’‘
“அப்படியாப்பட்ட நல்ல போனைப் போய் மாத்தலாமா சாந்தி...” என்றவனை, கை நீட்டி எச்சரித்தாள். “மரியாதையா சொன்ன வாக்கைக் காப்பாத்திடு. இல்லாட்டி உன் பனிஷ்மெண்ட் ஒரு வாரம்ங்கறதை ஒரு மாசம்னு மாத்திடுவேன்...”
தலையைச் சுற்றிப் பல ராக்கெட்டுகள் பறக்க, தடாலெனத் தரையில் சரிந்தான் உதயமூர்த்தி.
• • •

Saturday, December 30, 2017

காம - தேனுவின் முத்தம்

Posted by பால கணேஷ் Saturday, December 30, 2017
ரித்திரம், பேன்டஸி, ஆன்மீகம் என்று ஏதாவது ஒரு பின்புலத்தில் மர்மத்தைக் கலந்து காக்டெய்ல் நாவல்களைத் தந்துவரும் இனிய நண்பர் காலச்சக்கரம் நரசிம்மாவின் 8வது நாவலாக ‘காமதேனுவின் முத்தம்’ இப்போது வெளியாகி உள்ளது. இது காதல் + பேன்டஸி + மெலிதான மர்மம் கலந்த காக்டெய்லாக வந்திருக்கிறது.  நியாயமாகப் பார்த்தால் ‘காமதேனுவுக்கு முத்தம்’ என்றுதான் அவர் டைட்டில் வைத்திருக்க வேண்டும். ஹி... ஹி... காமதேனு முத்ததைப் பெறுகிறாளே அன்றி அவள் தரவில்லை. சரி, அதை விடுங்கள். நாவல் படிக்க சுவாரஸ்யம் தந்ததா? இல்லையா என்பதைப் பார்க்கலாம்.

கதை இரண்டு ட்ராக்குகளாகச் சொல்லப்படுகிறது. கோவூரில் வசிக்கும் பாண்டி சகோதரர்களின் குடும்பம் பற்றிய கதை ஒரு ட்ராக்கிலும் சென்னையில் வசிக்கும் தொழிலதிபர் நித்யமூர்த்தி, அவர் மகள் சுபாங்கி, டாக்டர் நரேந்திரநாத், அவரின் அக்கா அம்சா ஆகியோர் அடங்கிய ஒரு ட்ராக்கிலும் சொல்லப்பட்டு, நாவலின் பிற்பகுதியில் அழகாக இரண்டையும் ஒன்றிணைத்திருக்கிறார்.

கோவூரில் பாண்டி என்ற பொதுப்பெயர் கொண்ட சகோதரர்கள் குடும்பத்துப் பெண் கர்ப்பம் தரிப்பாளேயாகில் சுபகாயை தினத்தன்று அவள் கண்களுக்குக் காமதேனு காட்சி தருவாள். அப்படிக் காட்சி தந்தால் பிறக்கும் குழந்தை காமதேனுவின் அம்சமாகப் பிறக்கும். காமதேனு வாழுமிடத்தில் சகல சௌபாக்கியங்களையும் தரும் என்பதால் அவர்கள் குடும்பம் செழித்து வளரும் என்பது நம்பிக்கை. கடைசிப் பாண்டியின் மனைவி தமயந்தி காமதேனுவைப் பார்த்துவிட, அவளுக்குத் தரப்பட்ட எச்சரிக்கையையும் மீறி தன் குடும்பத்தினரிடம் பார்த்ததைச் சொல்லிவிட, துவங்குகிறது வினை. ‘சின்னத்தம்பி’ பட குஷ்பூ போல சதாசர்வ நேரமும் பாடிகார்டுகள் சூழ, தெய்வக் குழந்தை வளர்க்கப்பட்டு தெய்வக் குமரி ஆகிறாள்.

ஆண் சம்பந்தம் ஏற்பட்டாலே தெய்வத்தன்மை போய்விடும் என்கிற நிலையில் அதை ஏற்படவிட யாருக்குத்தான் மனம் வரும்? பாண்டி சகோதரர்களின் தங்கை காமதேனுவின் அம்சமாகப் பிறந்தவள் என்பதையும், அவள் என்னவானாள் என்பதே தெரியாது என்கிற நிலையும், மாமியார் தற்போது பைத்தியமாக இருப்பதும் தமயந்தியைக் கலங்கடிக்கின்றன. அப்புறம் என்ன ஆனது..? இந்தக் காமதேனுப் பெண்ணின் சக்திகள் என்ன செய்தன? அவள் சாதாரணப் பெண்ணாக வாழ முடிந்ததா?  தேனுவுக்கு முத்தம் தந்த அந்தக் காமன் யார்? சென்னைக் குடும்பம் எந்த வகையில் இவர்களுடன் தொடர்புபடுகிறது? இப்படிப்பட்ட கேள்விகளையெல்லாம் எழுப்பிவிட்டு அந்த முடிச்சுகளை சுவாரசியம் குறையாமல் அவிழ்த்திருக்கிறார் நரசிம்மா. (இதற்குமேல் எதைச் சொன்னாலும் அவர் வைத்திருக்கும் முடிச்சுகள் அவிழ்ந்து படிக்கிற சுவாரசியம் போய்விடும் என்பதால் அடக்கி வாசிக்கிறேன்.)

காதல் இந்தக் கதையில் மூன்று விதங்களில் சொல்லப்பட்டு அலசப்பட்டிருக்கிறது. சந்தீப்பின் மீது சுபாங்கிக்கு வரும் காதல் டிபிகல் தற்கால அவசரயுகக் காதலைக் கண்முன் வைக்கிறது. டாக்டர் நரேந்திரன் ரேணுகா மீது கொண்ட காதல் அன்றும் இன்றும் என்றும் அரிதான வகையில் உள்ள தெய்வீகமான காதலைக் காட்சிப்படுத்துகிறது. தேனுகாவின் மேல் காமேஸ்வரனுக்கு வரும் காதல் உணர்வுகளுடன், அறிவுபூர்வமாகச் சிந்திக்கிற காதலாக ப்ராக்டிகல் காதல் என்ற வகையில் காட்டப்படுகிறது. மூன்றையும் ஒப்பிட்டுப் பார்த்தபடி படித்தோமானால் இரண்டு, மூன்று, ஒன்று என்று வகைப்படுத்தத் தோன்றும். மூன்றுமே உணர்வுபூர்வமாக ரசிக்கும்படி எழுதப்பட்டிருப்பது நரசிம்மாவின் திறமைக்குச் சான்று.

காமதேனுவின் சக்திகள் என்னவெல்லாம் செய்யும்? அது போய்விட்டால் என்னவெல்லாம் நிகழும் என்வற்றை நரசிம்மா காட்சிப்படுத்தியிருக்கும் விதம் பிரமிக்க வைத்தது. அதேபோல்தான் டாக்டர் நரேந்திரன் எந்த வகையில் பாண்டி குடும்பத்தாருடன் சம்பந்தப்படுகிறார் என்பதற்கு அவர் வைத்திருந்த திருப்பமும். ஆனால் க்ளைமாக்ஸ் நெருங்குகையில் நரேந்திரனும், அம்சாவும் மருத்துவமனையில் என்ன செய்கிறார்கள் என்பதை யூகித்துவிட முடிந்தது. (டோண்ட் வொர்ரி நரசிம்மா சார். எளிய வாசகனால் அத்தனை சுலபமாக யூகித்துவிட முடியாது.) என்றாலும் அடுத்தடுத்த திருப்பங்கள் அபாரமானவை. 

அழகர் கோடங்கி, காசிலிங்கம் மாமா, செக்யூரிட்டிகளாக வரும் காண்டீபன், தேனப்பன், காமேஷின் அப்பா சிவனேசன் என்று உப பாத்திரங்களும் நேர்த்தியாக, அவரவர் குணாதிசயங்களுடன் வடிக்கப்பட்டிருப்பது பிரமாதமாக இருக்கிறது. அதுபோலத்தான் கதையில் பல வில்லன் கதாபாத்திரங்கள் செயல்பட்டாலும் எவரையும் நாம் வெறுத்துவிடாதபடி கதையைச் சொல்லியிருக்கும் விதமும். பாண்டி சகோதரர்களின் அம்மா பாஞ்சாலி கதாபாத்திரம் படிப்பவர் மனதில் பரிதாபத்தைத் தோற்றுவிக்கத் தவறாத வண்ணம் அழுத்தமாகப் பின்னப்பட்டிருப்பதும் மற்றொரு சிறப்பு. இவை யாவற்றையும் விட மகத்தான ஒன்று, கதைப் பின்னல் உத்தி இங்குமங்குமாக தாவிச் சென்றாலும் சற்றும் குழப்பாமல் கதை சொன்ன அந்த உத்தி சபாஷ் போட வைக்கிற ஒன்று. கதையில் லாஜிக் தவறுகள் எதுவும் இல்லாதிருப்பதும் இதம்.

இத்தனை நல்ல அம்சங்களையும் மீறி ஒருவித எரிச்சலுடனேயேதான் கதையைப் படித்து முடிக்க முடிந்தது. அதற்குக் காரணம் நரசிம்மா அல்ல. கதையை வெளியிட்டிருக்கும் ஸ்ரீ பதிப்பகத்தார், சற்றே சிரமம் பாராமல் ஒரு ப்ரூப் ரீடரை வேலைக்கு வைத்துக் கொள்ளுதல் உத்தமம். புத்தகத்தில் ஒற்றுப் பிழைகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளலாம். எழுத்துப் பிழைகள் இருந்தால் மன்னிக்கலாம். ஆனால் கருத்துப் பிழைகள் ஏராளமாக வருவது தாங்க முடியாத எரிச்சலைத் தருகிறது. உதாரணமாக, மகளின் தலையை ஆதூரத்துடன் வருடினாள் என்று வரவேண்டியது, ஆதாரத்துடன் வருடினாள் என்று வருகிறது. கணக்குப் பிள்ளை முதலாளியை பெரியய்யா என்று கூப்பிட வேண்டியது ‘பெரியப்பா’ என்று கூப்பிடுகிறார். (கொடூரம்). அவன் சுமையை அனாயாசமாகத் தாங்கினான் என்பதற்குப் பதில் ‘அனாவசியமாக’(?) தாங்கினான் என்றுள்ளது. ஸ்டுபிடிட்டி டு த கோர் என்று வரவேண்டியது ‘ஸ்டுப்பிடிட்டி டு த கேர்ள்ஸ்’ என்றிருக்கிறது. பட்டியல் போட்டால் தனிப் பதிவாகத்தான் எழுத வேண்டியிருக்கும். மொத்தத்தில்... சமையல் நன்றாகச் செய்திருந்தும், சமைத்தவரைப் பாராட்டித் தள்ள விருப்பம் இருந்தும் பரிமாறிய பாத்திரம் சரியாக அமையாமல் போய்விட்டது. பாவம் நரசிம்மா. 

Tuesday, September 5, 2017

ன்று ஆசிரியர் தினம் என்பதால் அனைவரும் அவரவர் ஆசிரியர்களை நினைவுகூர்ந்து நிறையப் பதிவுகள் இட்டிருந்ததைக் காண நேர்ந்தது. நான் என் ஆசிரியர்களைப் பற்றி நினைவுகூர்ந்தால் என்ன என்று மனதில் பின்னோக்கி பள்ளிக் காலத்திலிருந்து எண்ணிப் பார்த்ததில் ஒவ்வொருவராக மனத்தில் ஸ்லைடு ஸ்லைடாக வந்து போனார்கள். யாரைப் பற்றிச் சொல்லலாம்..?

ரிடையர்மெண்டுக்குச் சில ஆண்டுகளே பாக்கி வைத்திருந்த, வழுக்கைத் தலையும் கைத்தடியுமாக யுத்தக் கப்பல் ஒன்று அசைவதைப் போல ஆடிஆடி நடந்து வரும் டிஆர்ஜி (டி.ஆர்.கோவிந்தராஜன்) சார், அகன்ற தன் உடம்பால் கோல்போஸ்ட்டையே மறைத்து எங்களுடன் பந்து விளையாடிய சுந்தரம் வாத்தியார், பத்தாம் வகுப்பை நெருங்கும் நிலையிலும் தமிழ் இலக்கணத்தில் நான் பூஜ்யமாக இருந்ததைக் கண்டு அதிர்ந்து, ஒவ்வொரு நாளும் வகுப்பு முடிந்தபின் எனக்காகப் பத்து நிமிடங்கள் பிரத்யேக இலக்கண வகுப்பு நடத்திய புதிய வார்ப்புகள் பாக்யராஜ் போன்ற தோற்றத்திலிருந்த காளிதாஸ் ஐயா,

என் தமிழை ரசித்து மேம்படுத்திய தாசரதி ஐயா, வழுக்கைத் தலையுடன், சிறு தோல் பிரச்சனையும் இருந்ததால் வெயிலிலும் மழையிலும் எப்போதும் கையில் விரித்த குடையுடன் இருந்ததால் ‘குடை ஸார்’ என்று பட்டப்பெயர் பெற்ற பேராசிரியர் ராஜமாணிக்கம், உலகின் மிகச்சிறந்த ஜோக்கைச் சொன்னால்கூட இவர் சிரிக்க மாட்டார் என்று எங்களால் கேலி செய்யப்பட்ட, மீசையற்ற தீவிரமான முகத்துடன் எப்போதும காணப்படும் பேராசிரியர் கல்யாணம்.... அனைவரும் வந்து போனார்கள்.

ஆனாலும்... பழம் தின்று கொட்டை போட்ட இந்த ஆசிரியர்கள் அனைவரையும் விட, என்னைப் பழம் தின்ன வைத்துக் காசு போட வைத்த மங்கையர்க்கரசி டீச்சர்தான் மனசில் வந்து போகிறார்.  தட்ஸிட்... அவருடன் சேர்ந்து அந்தச் சம்பவமும் மனதில் நிழலாடுகிறது.

அது நான் இரண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த சமயம். என் அப்பாவுக்கு என் மீது பாசம் கொஞ்சமில்லை... மிகமிக அதிகம். யாராவது 2ம் கிளாஸ் படிக்கிற பையனுக்குக் கண்ணில் காசைக் காட்டுவார்களா..? என் அப்பா காட்டியவர். இரண்டு பைசா, ஐந்து பைசா, பத்துப் பைசா என்று அவ்வப்போது மிட்டாய் வாங்கிச் சாப்பிட பாக்கெட் சில்லறை கிடைக்கும். நம்புங்கள்... அந்த நாணயங்களுக்கு அப்போது நல்ல மதிப்பிருந்தது. 30 பைசாவில் ஒருபெரிய மாம்பழமே வாங்கித் தின்னலாம் என்றால் பாருங்கள்.


அப்போது எனக்கொரு வினோத(கெட்ட) பழக்கம் இருந்தது. மங்கை டீச்சர் கிளாஸ் நடத்திக் கொண்டிருக்கையில் வழக்கம்போல பத்துப் பைசாவை வாயின் ஒரு புறத்தில் வைத்து அதக்கியபடி வகுப்பைக் கவனித்துக் கொண்டிருந்தேன். பாடத்தின் இடையில் டீச்சர் ஏதோ சொல்லிச் சிரிக்க வைக்க, மற்ற பையன்களுடன் சேர்ந்து சிரித்ததில் வாயோரமிருந்த பைசாவானது நழுவித் தொண்டையை நோக்கிச் சென்று அங்கே சுங்கச்சாவடி எதுமில்லாததால் நேராக வயிற்றை நோக்கி வழுக்கிக் கொண்டு பயணித்தது.

அப்போதைய பத்துப்  பைசாக்கள் இன்றுள்ளவை போல் வட்டமாக இல்லாமல்  நெளிநெளியான ஓரங்களுடன், மெட்டலில் செய்யப்பட்டிருக்கும். படம் காண்க. அதனால் தொண்டையில் அடைத்துக் கொள்ளவில்லை. இல்லையேல் தொண்டை அடைத்துக் கொண்டு மூச்சுத் திணறி அன்றே பரலோகப் பயணத்தைத் துவக்கியிருப்பேன். ஆனாலும் நாணயத்தை விழுங்கியதில் இயல்புக்கு மாறாக விக்கோ விக்கென்று விக்கி, அட் எ டைம் நாலு ஆடு திருடியவனைப் போல திருதிருவென நான் விழிப்பதைக் கண்டு மங்கை டீச்சர் என்னவென்று கேட்க, உண்மையைத் திக்கி திக்கிச் சொன்னேன்.

அதிர்ந்து போய்விட்டார் மங்கை டீச்சர். ஆனாலும் சமயோசிதமாகச் செயல்பட்டார். ஒரு பயலை அனுப்பி இரண்டு பெரிய வாழைப் பழங்களை வாங்கிவர வைத்து என்னை விழுங்க வைத்தார். நான்கு டம்ளர் நிறையத் தண்ணீரைத் தந்து தலையில் தட்டிக் குடிக்கச் செய்தார். பின் பியூரை (வயசானவரை மருவாதி இல்லாம பியூன்ங்கலாங்களா? ஹி.. ஹி...) அழைத்து நடந்ததை வீட்டில் சொல்லி என்னை ஒப்படைத்து வருமாறு அனுப்பினார். 

அவர் சொன்னதைக் கேட்டு வீட்டில் அதிர்ச்சியுடன் கோபத்தையும் அடைஞ்சாங்க அம்மா.  அந்த பின்மதியத்தில் வீட்டில் யாரும் இருக்கவில்லை. எனக்கு ரெண்டு செல்லச் சாத்து சாத்தி (அம்மா அடிச்சு என்னிக்கு எவனுக்கு வலிச்சிருக்கு?) வயித்தை வலிக்குதாடா? தலை சுத்துதாடா? என்று பலப்பல கேள்விகளைக் கேட்டு பதறிக் கொண்டிருந்தார். எனக்கோ எந்தப் பிரச்சனையும் இல்லை உண்மையில் அந்தக் காசு வயிற்றில் தொல்லை எதுவுமின்றி செட்டிலாகி விட்டது போல. கேட்டதற்கெல்லாம் இல்லை என்றே சொல்லிக் கொண்டிருந்தேன்.

இதற்குள் ஆபீஸிலிருந்து சித்தப்பா வந்துவிட, ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டேன். அங்கு புரியாக்கதிர் எடுக்கச் சொன்னார்கள். எடுத்தோம். மருத்துவர் அதை வெளிச்சத்தில் பார்த்து வயிற்றில் எதுவும் இல்லை, சுத்தமாக இருக்கிறது என்று அறிவித்தார். எதற்கும் இரவு தூங்கட்டும். காலையில் மீண்டும் ஒருமுறை எடுத்துப் பார்த்து விடலாம் என்றார். சொந்த பிசினஸ் என்பதால் இரவுதான் அப்பா வருவார். வந்ததும் அவர்மீது குற்றப் பத்திரிகை சாட்டப்பட, விஸ்கி விஸ்கி... ச்சே, விக்கி விக்கி அழுது கொண்டிருந்த என்னை அப்பாதான் சமாதானம் செய்தார். மறுநாள் காலையில் மீண்டும் புரியாக்கதிர் படம். அப்போதும் வயிறு க்ளியர். இறுதியில் மங்கை டீச்சர் தந்த வாழைப்பழமும் தண்ணீரும் காயினுடன் வினைபுரிந்து அதைக் கழிவுடன் வெளியேற்றியிருக்க வேண்டும் என்றும், இனி எனக்கு எதுவும் பிரச்சினை வராது என்றும் தன் ஆராய்ச்சி முடிவை அறிவித்தார்.

அப்பாடா... என்று ஆறுதலுடன் மருத்துவமனையிலிருந்து தப்பித்த சந்தோஷத்துடன் விளையாடப் போய்விட்டேன் நான். ஆனால் மருத்துவராலும் என் வீட்டினராலும் சமயோசிதமாகச் செயல்பட்ட மங்கை டீச்சர் வெகுவாகப் பாராட்டப்பட்டார். அப்போது நன்றியெல்லாம் சொல்லி மகிழ்விக்கிற அளவுக்குப் பண்பாடு எனக்கு வளரவில்லை என்றாலும், இப்போது நினைக்கையில் மங்கை டீச்சர் நினைவிற்கு வருகிறார். ஆனால், என்ன ஒரு சோகம்... அதன்பின் சில்லறையைக் கண்ணில் காட்டுகிற வழக்கத்தை அப்பா நிறுத்தி விட்டார் என்பதுதான். அவ்வ்வ்வ்....
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube