Showing posts with label MGR. Show all posts
Showing posts with label MGR. Show all posts

Saturday, March 15, 2014

சாண்டில்யனின் சரித்திர நாவல்கள் என்றாலே நினைவில் முட்டுபவை ‘கடல் புறா’வும், ‘யவனராணி’யும்தான். யவனராணியைவிடவும் கடல்புறா அவரின் சிறந்த படைப்பு என்பது என் கருத்து. அதன் நாயகன் தரைப்படைத் தளபதியான கருணாகர பல்லவன் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் காரணமாக மரக்கலம் (கப்பல்) செலுத்தும் கலையை அகூதா என்ற சீன கடற்கொள்ளைக்காரனிடம் கற்று தனக்கென்று ‘கடல்புறா’ என்ற மரக்கலத்தை வடிவமைத்து கடல்வீரனாக மாறி, சோழதேசத்திற்கு வெற்றி தேடித் தருவான். அந்நாளில் கடல் கடந்து சென்ற தமிழர்கள் வாணிபத்தை விஸ்தரிக்க, தமிழக மன்னர்களோ மரக்கலம் ஓட்டி போர் செய்து தங்கள் அதிகாரத்தை விஸ்தரித்தனர். தொழில்நுட்பங்கள் எதுவுமின்றி இயற்கை அனுகூலமாக இருக்கும் நேரத்தை பயன்படுத்தியும் அனுகூலமற்ற நேரங்களில் போராடியும் அந்நாளிலேயே பலநாடுகளுக்கு கப்பலில் சென்று சாதித்த இனம் தமிழினம்.

 இந்த நாவலில் சாண்டில்யன் மரக்கலத்தின் வகைகள் என்னெனன என்பதை விரிவாக விளக்கி எழுதியிருப்பார். கப்பல் தலைவன் பருவக் காற்று வீசும் தருணம் உட்பட ஒவ்வொரு அம்சத்தையும் கணக்கிட்டு செயல்படுவதை சொல்லியிருப்பார். மரக்கலத்தின் பாய்மரத் தண்டில் ஏறி நடுத்தண்டில் நின்ற வண்ணம் கருணாகர பல்லவனும் காஞ்சனா தேவியும் காதல் செய்வார்கள். அப்படி ஒவ்வொரு வரியையும் காட்சிகளையும் ரசித்து பலமுறை நான் படித்த புத்தகம் என்றால் அது ‘கடல்புறா’தான். ஒவ்வொரு முறை படிக்கையிலும் மானசீகமாக கருணாகரனாக என்னை உணர்ந்து கடல் பயணத்தின் சுகத்தை மனதில் காட்சிப்படுத்தி நுகர முயல்வேன். ஓரளவுதான் உருப்பெறும். விஷுவலாக என்னால் உணர முடியாது. அந்த அவஸ்தையைத் தீர்த்து வைத்தது நான் பார்த்த வாத்யாரின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம்.

படத்தில் வைத்தியராக இருக்கும் எம்.ஜி.ஆர். சந்தர்ப்ப சூழ்நிலையால் நாடு கடத்தப்பட்டு கடல் வீரனாக மாறுவார். கருணாகர பல்லவன் போல பாய்மரத்தில் நடுத்தண்டில் தொங்கியபடி ‘காற்று நம்மை அடிமையென்று விலக்கவில்லையெ’ என்று பாடுவார். சேந்தன் கடல்புறாவில் சுக்கான் பிடிப்பது போல படத்தில் நம்பியார் சுக்கான் பிடிப்பார். காஞ்சனாவுடன் கருணாகரன் காதல் செய்வது போல வாத்யார் ஜெயலலிதாவுடன் பாய்மர ஊஞ்சலில் தொங்கியபடி பாடுவார். அட... இதிலும் வாத்யாரின் கப்பல் சர்வாதிகாரியின் கபப்லுடன் கடல் போரில் ஈடுபடுகிறது! வாளேந்தி விளையாடுகிறார் வாத்யார்...! அந்நாளைய மரக்கலங்கள் எப்படி இருந்தன. எப்படி செலுத்தப்பட்டன என்பதை நாவலில் அந்த ஜாம்பவான் வர்ணித்திருந்ததை வண்ணத்தில் என் கண்முன் காட்சிப்படுத்தினார் இந்த ஜாம்பவான். அதன்பின் என் கப்பல் கனவுகள் கலர்ஃபுல்லாகின. அவற்றில் எனக்குப் பதில் வாத்யார்தான் தெரியத் தொடங்கினார் கதாநாயகனாக. வாத்யாருக்கு இந்தப் படம் உருவாக்கத் தூண்டுதலாக இருந்தது ஒரு ஆங்கிலப்படம் என்றாலும் என்னைப் பொறுத்தமட்டில் கடல்புறாதான் இப்படத்தின் பெயரைச் சொன்னால் மனதில் நிழலாடுகிறது.

வாத்யாரின் வெற்றிப்படங்களில் குறிப்பிடத்தக்க தனியிடம் இந்தப் படத்துக்கு உண்டு. சிவாஜியை வைத்து பல வெற்றிப் படங்களை தந்த பி.ஆர்,பந்துலு அவர்கள் ஒருசமயம் நஷ்டத்தில் இருந்து மீள ஒரு வெற்றிப்படம் தந்தேயாக வேண்டிய கட்டாயத்தில், தயக்கத்துடன் வாத்யாரை அணுக, உடனே சம்மதித்து அவர் நடித்துத் தந்த படம் இது. பின்னாளில் பத்மினி பிக்சர்ஸில் தேடிவந்த மாப்பிள்ளை, ரகசியபோலீஸ் 115 என பல வெற்றிப்படங்கள் வாத்யாரின் தோட்டத்தில் விளைய அச்சாரமிட்ட மெகாஹிட் படம் இது. மெல்லிசை மன்னர்கள் கூட்டணியில் உருவான பாடல்கள் அத்தனையும் இன்று கேட்டாலும் ரசிக்க வைப்பவை. காட்சிகளுக்கு அழகுசேர்த்த வசனங்களாலும் குறிப்பிடத்தக்க படம் இது. இன்றளவும் பதிவர்கள்/பத்திரிகைகள் பயன்படுத்தும் ‘நம்க்கு வாய்த்த அடிமைகள் மிகமிகத் திறமைசாலிகள்’ என்ற வசனமாகட்டும், ‘உங்கள அதிகாரமென்ன சிலப்பதிகாரமா? காலத்தை வென்று நிலைப்பதற்கு?’ என்கிற வீரவசனமாகட்டும், ‘சற்றுப்பொறு கண்ணே... இவருடன் விளையாடிவிட்டு வருகிறேன்’ என்ற கேலி+ஜாலியாக வாத்யார் சண்டைக்குத் தயாராகும் வசனமாகட்டும், ‘மணிமாறா... மதங்கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?’ என்று நம்பியார் கொக்கரிக்க, ‘ஏன் தெரியாமல்... சினங்கொண்ட சிங்கத்திடம் தோற்றோடும்’ என வாத்யார் அசால்ட்டாக பதிலளிப்பதாகட்டும் அத்தனையும் கைதட்டல் பெற்ற ரசிக்கத்தக்க வசனங்கள். நாகேஷின் காமெடியும் ஒரு மிகப்பெரிய ப்ளஸ்.

த்தனை சிறப்புகளுடன் என் மனதில் பசுமையாக இடம் பிடித்திருந்த இந்தப் படத்தை பார்த்து பல ஆண்டுகளாகி விட்டதால் புதிய தொழில்நுட்பத்தில் அகன்ற திரையில், துல்லிய ஒலிச்சேர்க்கையில் வருகிறது என்ற அறிவிப்பைக் கண்டவுடனேயே முதல் நாளே பார்க்கும் ஆவலில் மெட்ராஸ்பவன் சிவகுமாரைப் படுத்தியெடுத்து டிக்கெட் புக் பண்ண வைத்துவிட்டேன். ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தை ரீமிக்ஸில் இப்படி ஆர்வமாக ஓடிப்போய்ப் பார்த்து நொந்த அனுபவம் மனதின் ஓரத்தில் வந்து போனாலும்கூட வாத்யார் படம் என்பதால் எப்படி இருந்தாலும் பார்க்கலாம் என்று மனதிற்கு சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

டம் இன்ப அதிர்ச்சி தந்தது. டைட்டிலை புதிதாக கிராபிக்ஸ் வொர்க் செய்திருந்தது வெகுஜோர். அகன்ற திரையில் வாத்யாரும் நம்பியாரும் மோதும் சண்டையில் வாட்கள்கூட பளிச்சென்று காட்சி தருகின்றன. கலைச்செல்வி ஜெயலலிதா இன்றைய நஸ்ரியா போல அவ்வளவு அழகாய்த் தெரிகிறார். விஜயலக்ஷ்மி நெற்றியின் நடுவில் வைக்காமல் வலது ஓரத்தில் பொட்டு வைத்திருப்பதுகூட துல்லியமாகத் தெரிகிறது. ஹி.... ஹி.... ஹி...! இன்னொரு ப்ளஸ் நம்ம விச்சு-ராமு பேர்ட்ட ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கை எடுத்துக்கிட்டு அதைக் கெடுக்காம அழகா டிஜிட்டலைஸ் பண்ணியிருக்கறது செவிகளுக்கு மதுரம்!  படத்தை டிஜட்டலைஸ் பண்ணுவதற்காக நிறைய சிரத்தை எடுத்துக்கிட்டு அசத்தலா பண்ணியிருக்கற டீமுக்கு தரலாம் பாராட்டும் பொக்கேயும்..! (இன்னொரு முறை படத்தப் பாத்துரணும்னு முடிவு பண்ணிருக்கேன் மக்கா)

நாகேஷின் காமெடிசீன் ஒன்று மட்டும் வெட்டப்பட்டிருக்கிறது. (மண்டையோட்டை கையிலெடுத்து ‘எவனோ ஒருத்தன் சிரிச்சுக்கிட்டே செத்திருக்கான்’ என்கிற சீன்) ஆனால் அது பலமுறை இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்பதால் உறுத்தவில்லை. என் ஆச்சரியம் என்னவெனில் சென்னை போன்ற மகாநகரத்தில் எஸ்கேப் என்ற ஷாப்பிங் மாலில் அதிலும் இரவுக் காட்சியில் தியேட்டர் ஹவுஸ்ஃபுல்லானதும். வாத்யாரின் அறிமுகம், பளிச் வசனங்கள், பாடல்கள் இவற்றுக்கு அங்கும் விசிலடித்து சிலர் ரசித்ததும்தான். தலைவா... நீ இன்னும் சாகவில்லை,,!

ஆயிரத்தில் ஒருவன் - மிஸ்பண்ணக் கூடாதவன்!

Friday, March 7, 2014

கதாநாயகனின் கதை!

Posted by பால கணேஷ் Friday, March 07, 2014
பால் அருந்தும் பிள்ளைப் பிராயத்திலிருந்து பள்ளி செல்லும் பையனாகிற பருவம் வரை ஒவ்வொருவருக்கும் அவரவர் அப்பாதான் முதல் கதாநாயகனாக இருப்பார்கள். அப்பாவின் நடை, உடை, பாவனைகள் ஆகியவற்றை ரசிப்பது முதல் ரசனைகள் வரை அப்பாவைச் சார்ந்தே இருக்கும் பள்ளி செல்லும் பருவத்தில். இவனுக்கும் அப்படித்தான். அதிலும் சில விசித்திரங்கள் உண்டு. இவன் தந்தையிடமிருந்த கன்னாபின்னாவென்ற வாசிக்கும் வழக்கம் கல்லூரிப் பருவத்தில்தான் இவனை ஆட்கொண்டது. ஆனால் அப்பாவுக்குப் பிடித்த கதாநாயகன் எம்.ஜி.ஆர். பள்ளிப் பருவத்திலேயே இவனை ஆட்கொண்டார்.

இவனுக்கு ஆறு வயதாக இருந்த சமயம் இவர்கள் இருந்தது மதுரையில் கிருஷ்ணாராவ் தெப்பக்குளத் தெருவில். தெரு முனை திரும்பினால் தேவி தியேட்டர் இருந்தது. அந்தத் தியேட்டரில் வாத்யார் படம் எதுவும் ரிலீஸாகக் கூடாதே என்பதுதான் இவன் பெருவிருப்பமாக இருந்தது. காரணம்... அப்பா சொந்த பிசினஸ் செய்து வந்தவராக இருந்ததால், கடையை அடைத்துவிட்டு வந்து சாப்பிட்டுவிட்டு படம் பார்க்க அழைத்துச் செல்வது பெரும்பாலும் இரவுக் காட்சிகளாகத்தான் இருக்கும். வீட்டிலிருந்து தியேட்டர் செல்வதற்கு குதிரை வண்டி வைப்பார் அப்பா. குதிரை வண்டி சவாரி என்றால் இவனுக்கு கொள்ளைப் பிரியம். லொடக் லொடக்கென்று இதமான ஆட்டத்துடன் செல்லும் அந்த வண்டியில் முந்தி ஏறி, வண்டிக்காரரின் அருகில் உட்கார்ந்து கொண்டு குதிரையைக் கவனிப்பதும், (முடிந்தால்) அதன் வாலைப் பிடிப்பதும் இவனுக்கு சுவாரஸ்யமான, ரசனையான விஷயங்கள். அதற்காகவே அப்பாவுடன் சினிமாவுக்குச் செல்லும் தருணங்களை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பான் இவன்.

அம்மாவுக்கு சிவாஜி என்றால் பிடிக்கும். அண்ணன் நடுநிலை - எவரென்றாலும் ஓ.கே. படம் போனால் சரி - அப்பாவுடன் சேர்ந்து இவனுககும் எம்.ஜி.ஆர். என்றால் மிகமிகப் பிடிக்கும். வீட்டில் எந்தப் படம் போவது என்பது பற்றிய உரையாடல் நடைபெற்றால்... பெரும்பாலும் மதியம் அப்பா சாப்பிட வீட்டுக்கு வரும் சமயங்களில் நடைபெறும்... அப்போது இவன் முந்திக் கொண்டு வாத்யார் படத்தை முன்மொழிவான். அதுவும் எப்படி...? ‘ல்தகாசைஆ' என்று விஜய் சொல்வது போல... ‘‘அப்பா! கைளிமாதந்சவ வேண்டாம்ப்பா... நாம ணைவீயதஇ போலாம்ப்பா..." என்பான். (இவனெல்லாம் அப்பவே அப்புடி!) இந்த வகைப் பேச்சை கிரகித்துக் கொள்ள முதலில் ரொம்பவே சிரமப்பட்ட அப்பா, விரைவில் அதற்குப் பழகி விட்டார். ஹால் அதிரும் வண்ணம் உரக்கச் சிரித்து, ‘‘சரிடா... போலாம்" என்பார். ஆஹா... நம்ம வீட்லருந்து சிந்தாமணி தியேட்டர் ரொம்பத் தூரமாச்சே... இன்னிக்கு குதிரை வண்டி சவாரி நிச்சயம் என்று இவன் இரவை எதிர்பார்த்திருப்பான்.

இன்றைய தேதியில் வளரும் பிள்ளைகளுக்கும்... ஏன்... சில வளர்ந்துவிட்ட பிள்ளைகளுக்கும் கூட குதிரை வண்டி சவாரி அனுபவம் வாய்த்திராது என நினைக்கிறேன். இயந்திரக் குதிரைகள் பரவலாகி, போக்குவரத்து விழிபிதுங்கத் துவங்கியிருக்கும் இன்றைய நகர நாகரீகத்தில் குதிரை வண்டிகள் வழக்கொழிந்து போய் விட்டன. இதேபோல வழக்கொழிந்துபோன மற்றொரு விஷயமும் உண்டு. மதுரையில் அப்போதெல்லாம் இடைவேளைக்கு முன்னும், இடைவேளைக்குப் பின்னும் ஒரு ட்ரேயில் பிஸ்கட், சாக்லெட், கடலை மிட்டாய் போன்ற ஐட்டங்களை ஏந்திக் கொண்டு உள்ளே வந்து விற்பதற்கு சிறு மற்றும் வாலிபப் பையன்களை நியமித்திருப்பார்கள். அவர்கள் சத்தமில்லாமல் ஊடாடி, விற்பனையையும் கவனிப்பார்கள். ஆக... எப்போது வேண்டுமானாலும் (கையில் சில்லறை இருந்தால்) ஸ்நாக்ஸ் கொறித்துக் கொண்டு ஆனந்தமாகப் படம் பார்க்கலாம். சிந்தாமணி தியேட்டரில் பால்கனியில் அம்மா, அப்பாவுக்கு அடுத்த சீட்டில் இவன் அமர்ந்திருக்க, இவனுககு அடுத்த சீட்டில் இருந்த கனவான் ஒருவர் ட்ரே சுமந்து வந்தவனிடம சாக்லெட்டோ, பிஸ்கட்டோ வாங்கிக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து திரையில் சண்டைக் காட்சி வந்திருக்க, வாத்யார் சிலம்பத்தைச் சுழற்றி 20 பேரை சமாளிக்க, சண்டை தந்த உற்சாகத்தில் இவனும் ‘‘அப்புடி அடி’’ என்று கத்தி,  வாத்யார் மாதிரி கையை வீசி துள்ளிக் குதிக்க, இவன் கை ட்ரேயில் சாடி அதிலிருந்த மிட்டாய், பிஸ்கட் வகைகள் அனைத்தும் பூமித்தாய்க்கு அர்ப்பணமாயின. அப்புறமென்ன... தியேட்டர் ஸ்பீக்கரை விடப் பெரியதான ட்ரேவாலாவின் வாயை அடைக்க இவன் அப்பா சில பண நோட்டுகளைத் திணிக்க வேண்டியிருந்தது.

இப்படியெல்லாம் இளமையில் மனதில் பதிந்து மனதைக் கவர்ந்த வாத்யாரை ஒருமுறையேனும் பார்த்துவிட வேண்டும் என்பது இவனுக்குப் பெருவிருப்பமாக இருந்தது. 7வது வயதில் அப்பா இறந்து, வேறு வேறு ஊர்கள் மாறி பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து 9ம் வகுப்பு படிக்கும் சமயம் மதுரைக்கு மீண்டும் வந்து மதுரை ‘சேதுபதி பள்ளி’யில் படித்துக் கொண்டிருந்த சமயம் இவன் ஆசை நிறைவேறியது. நடிகர் எம்.ஜி.ஆரைப் பார்க்க விரும்பிய இவன் முதல்வர் எம்.ஜி.ஆரை இரண்டு முறை அருகில் பார்த்தான். அப்போது முதல்வர் எம்.ஜி.ஆர். மதுரையில் உலகத் தமிழ் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தினார். நான்கு மாசி வீதிகளிலும் தமிழின் பெருமை பேசிய வண்டிகளின் ஊர்வலமும், கலைஞர்களின் ஆட்டபாட்டமுமாக ஒரு மணி நேரத்துக்கும் மேல் நடந்ததை ரசித்ததும், தமுக்கம் மைதானத்தில் போடப்பட்டிருந்த தமிழ் அரங்குகளில் நுழைந்து வேடிக்கை (மட்டுமே... இன்றுள்ள தமிழறிவு அன்றில்லை) பார்த்ததும் இன்றும் இவன் நினைவில் பசுமையாய். சரிசரி.... அதிகம் ஜல்லியடிக்காமல் இவன் வாத்யாரைப் பார்த்த அந்த இரண்டு சந்தர்ப்பங்களுக்கு வந்துவிடலாம்.

தமுக்கம் மைதானத்தில் ஒரு விழா மேடை அமைக்கப்பட்டு அன்று முதல்வர் பேசுவதாக இருந்தது. சித்தியுடன் போயிருந்த இவன் அரங்கின் வலதுபக்க ஓரமாக முன் வரிசைகளில் இருந்தான். அருகாமையில்தான் வாசல் இருந்தது. அதன் வழியே வந்து நான்கைந்து வரிசைகளைக் கடந்துதான் அனைவரும் மேடையேற வேண்டும். இவன் கண்கள் வாசலையே பார்த்தபடி இருக்க... அதோ பெருங்கூட்டம் புடைசூழ வாத்யார்! இவன் நன்றிருந்த வரிசைக்கு அருகில் ஒரு சிறு மரக்கட்டை போட்டு, மேடை செல்லும் வழி உயர்த்தப்பட்டிருக்க அது ஒரு ஸ்பீட் பிரேக்கர் போல அமைந்திருந்தது. வாத்யாருக்கு முன்னே நடந்து வந்த நாவலர் அதைக் கவனிக்காமல் நடந்ததில் கால் இடறி, சற்றே தடுமாறி விழப் போக, பின்னால் வந்த வாத்யார் இரண்டடிகள் தாவிக் குதித்து அவரைப் பிடித்து நிற்க வைத்தார். வாத்யாரின் வெள்ளைத் தொப்பியும் கண்ணாடியும் தந்த பிரமிப்பைவிட, அந்த சுறுசுறுப்பையும் வேகத்தையும் பிரமித்துப் போய் பார்த்தான் இவன். வாத்யார் மேடையில் பேசியது இன்று இவனுக்கு நினைவில் இல்லையென்றாலும் வரிக்கு வரி கைதட்டல் வாங்கியது மட்டும் நினைவில் நிழலாடுகிறது.

இர்ணடாவது சந்தர்ப்பம் சற்றும் எதிர்பாராமல் அவரை மிகமிக அருகில் பார்க்கக் கிடைத்த பொன்னான வாய்ப்பு. உலகத் தமிழ் மாநாட்டை முன்னிட்டு பிரபலமான நாடகக் குழுக்களின் நாடகங்கள் டிக்கெட் எதுவுமின்றி மதுரையில் நடத்த ஏற்பாடு செய்திருந்தார் வாத்யார். ஆர்.எஸ்.மனோகரின் ‘ஒட்டக் கூத்தன்' நாடகத்தைப் பார்த்து அவரின் அரங்க அமைப்புகளில் அதிசயித்துப் போனான் இவன். (நாடகம் என்ற வடிவத்தை இவன் கண்டதும் வாழ்வில் அதுவே முதல் முறை). அதற்கடுத்த தினம் மதுரைக் கல்லூரியில் மேடை அமைத்து மேஜர் சுந்தரராஜனின் ‘கல்தூண்' நாடகம் நடந்தது. இவனும் இவன் சித்தப்பாவும் (சித்தி அங்கே வேலை பார்த்ததால்) வி.ஐ.பி. அந்தஸ்து பெற்று மேடையிலிருந்து இரண்டாவது வரிசையில் மணல் தரையில் உட்கார்ந்திருக்கின்றனர். ஆமாம்... சேர் எல்லாம் போட்டுப் படுத்தாமல் மணலும் புல்லும் கலந்த தரையில் அமர்ந்துதான் அனைவரும் இலவச நாடகங்கள் பார்த்தது. நாடகம் துவங்கி அரைமணி நேரம் இருக்கும். திடீரென்று அரங்கில் சளசளவென்று பேச்சொலிகள். நடித்துக் கொண்டிருந்த மேஜர், நடிப்பதை நிறுத்தி கை உயர்த்திக் கும்பிடுகிறார். யாரையென்று தலையைத் திருப்பிப் பார்த்தால்... வாத்யார் பரிவாரங்கள் சூழ வந்து கொண்டிருக்கிறார். திடீரென்று அன்று அவர் நிகழ்ச்சி ஏதோ ஒன்று ரத்தாக, சர்ப்ரைஸ் விஸிட்டாக நாடகம் பார்க்க வந்திருக்கிறார் என்பது பின்னர் தெரிந்தது.

அவர் முதல் வரிசையில் இவனுக்கு அடுத்திருந்த நபருக்கு அருகே, தனக்காக போடப்பட்ட சேர்களை மறுத்துவிட்டு, புல் தரையிலேயே வாத்யார் அமர... அத்தனை நெருக்கத்தில் அவரைக் கவனித்த சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனான் அவன். மின்னல் போலக் கடந்து மேடைக்கு சென்றபோது பார்த்ததை விட இப்போது அருகில் பார்த்ததில் முதலில் இவனைக் கவர்ந்தது அவரின் நிறம். ‘‘என்னா செவப்புய்யா! இந்த ஆளு என்ன எளவுக்கு மேக்கப்லாம் போட்டு நடிச்சாரு? அப்படியே வந்து நின்னிருந்தாலே போதுமே" என்கிற எண்ணத்தை இவனில் தோன்றச் செய்தது அவரின் செக்கச் சிவந்த தங்க நிறம். அதன்பிறகு நாடகத்தை எங்கே பார்த்தான்...? வாத்யாரின் முகத்தையல்லவா பார்த்துக் கொண்டிருந்தான். நகைச்சுவைக் காட்சிகளில் அவர் வாய்விட்டுச் சிரிப்பதையும், உணர்ச்சிகரமான காட்சிகளில் கூர்ந்து கவனிப்பதையும், பிடிக்காத வசனங்கள் வருகையில் லேசாய் முகம் சுளிப்பதும் ஆக இவன் பார்த்த நாடகம் வாத்யாரின் முகத்தில்தான் ஓடிக் கொண்டிருந்தது.

நாடகம் முடிந்ததும் மேஜர் வந்து வாத்யாரின் காலில் விழுந்து ஆசி பெற்று, மரியாதையுடன் அழைத்துச் சென்று மேடையேற்ற, நாடகத்தில் நடித்த எவரையும் விட்டுவிடாமல் வசனங்கள் உட்பட வாத்யார் குறிப்பிட்டுப் பாராட்டியதைக் கண்டு அசந்துதான் போனான் இவன். குட்ட வேண்டியதை மிக நாசூக்காகக் குட்டியதும, பெரும்பாலும் நல்ல அம்சங்களை மட்டுமே எடுத்துச் சொல்லிப் பாராட்டிய பாங்கும் இவனுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. மேடையில் தான் பார்த்து ரசித்த கதாநாயகனை நிஜத்திலும் ரசிக்க முடிந்ததில் கொள்ளை கொள்ளையாய் சந்தோஷம் இவனுக்கு. நல்ல சுவையான சாக்லெட்டை மென்று முடித்த பின்னும் நாவில் அதன் இனிப்பு நிறைய நேரம் தங்கியிருப்பது போல வாத்யாரைப் பார்த்த மகிழ்வு இவனிடம் தங்கியிருந்தது. சக மாணவர்களிடம் (இதை நிறுத்தறியா, இல்ல... உதை வேணுமான்னு பசங்க சீர்ற அளவுக்கு) பல மாதங்கள் அதைச் சொல்லியே பெருமையடித்துக் கொண்டான் இவன்.

இத்தனைக்கும் பிறகு இன்று மீண்டும் இதை நினைத்துப் பார்க்கையில் இவன் மனதில் தோன்றுகிற எண்ணம் இதுதான். ‘‘அடடா! அவ்வளவு கிட்டத்துல வாத்யாரைப் பாத்தியே... ஒரு ஆட்டோகிராப் வாங்கியிருக்கலாம். அட்லீஸட் அவரை கை குலுக்கியாவது பார்த்திருந்திருக்கலாம். சான்ஸைக் கோட்டை விட்டுட்டியேடா!" ஹும்...! என்ன இருந்தாலும் மனித மனம் பாருங்கள்...!


Friday, January 17, 2014

என்றென்றும் எம்.ஜி.ஆர்!

Posted by பால கணேஷ் Friday, January 17, 2014
வாத்யார் சொன்னவை : (தொகுத்தது: ‘நான் ஆணையிட்டால் - விகடன் பிரசுர வெளியீடு’ மற்றும் ‘எம்.ஜி.ஆர். பேட்டிகள் - மனோன்மணி பதிப்பக வெளியீடு’ இரண்டிற்கும் ஆசிரியர்: எஸ.கிருபாகரன்)

* பக்தி உள்ளவர்கள் சாமி கும்பிட வேண்டும் அல்லது வேண்டாம் என்று நான் சொல்லத் தயாராக இல்லை. ஆனால் கடவுளின் பெயரால் ஏமாற்ற நினைக்காதீர், மோசடிகள் செய்ய முயலாதீர் என்பதே என் வேண்டுகோள். ஒன்றே குலம், ஒருவனே தேவன் - இதுதான் என் கொள்கை. (மதிஒளி 15.12.1962 - மருதமலை முருகன் கோயிலில பேசியது)

* நடிக்கக் கூடியவர்கள், எழுத்துத் திறமை படைத்தவர்கள் ஆயிரக்கணக்கில் நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வவய்ப்பு இல்லை. காரணம் அவர்களுக்கு விளம்பம் இல்லை. விளம்பரம் வேண்டும் என்றால் அவர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும். அவர்கள் திறமையைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் திறமையைப் பயன்படுத்த வேண்டும் என்றால் அவர்களுக்கு விளம்பரம் இருக்க வேண்டும் என்ற நிலை. திருமணம் ஆனால்தான் பைத்தியம் தீரும், பைத்தியம் தீர்ந்தால்தான் திருமணம் ஆகும் என்ற இந்த நிலைதான் நாட்டில் இருக்கிறது. (தென்றல் திரை, 05.11.57) 


* ‘நீங்கள் விரும்புகிறபடியெல்லாம் படத்தின் கதைகளை மாற்றினால் பணம் போட்டுப் படம் எடுப்பவர்களின் கதி என்ன ஆவது?’ என்ற கேள்விக்கு, ‘‘ஒன்றும் ஆகிவிடாது. என்னுடைய ஆலோசனையைக் கேட்டு எடுத்த படங்கள் நன்றாக வெற்றி பெற்றுள்ளன. ‘மதுரை வீரன்’ படத்திள்ள பல காட்சிகளுககும், கர்ண பரம்பரைக் கதைக்கும் சம்பந்தமில்லை. பழைய கதையில் வெள்ளையம்மாள் என்ற பாத்திரம் படுமோசமாக சிருஷ்டிக்கப்பட்டிருந்தது. அதன் தயாரிப்பாளர் என் ஆலோசனைக்கு செவி சாய்த்தார். படம் வெற்றி பெற்றது. ‘மலைக்கள்ள’னிலும் இவ்வாற என் யோசனைக்கு மதிப்பு தந்தார்கள். ‘அலிபாபா’விலும் என்னுடைய யோசனைகள் உபயோகமாக இருந்தன. இதிலிருந்து என் அரசியல் கொள்கைகளை நான் நடிக்கும் படங்களில் திணிப்பதாக முடிவுகட்டி விடாதீர்கள். நான் முதலில் கலைஞன், பிறகுதான் மற்றவை என்ற ரீதியிலேயே இவற்றைக் கூறகிறேன். என் அனுபவத்தை அவர்கள் உபயோகித்துக் கொள்ள அனுமதிக்கிறேன். அவ்வளவுதானே! (தென்னிந்திய சினிமா பத்திரிகையாளர் சந்திப்பில் அளித்த பேட்டியிலிருந்து)

* உள்ளம் எந்த அளவுக்கு உறுதியாக இருக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு உடலும் உறுதியாக இருந்தால்தான் நாம் காரியங்களை நல்ல முறையில் கவனிக்க முடியும். ஆகவே நடிப்புக்காக வருகிற அன்பர்கள் உடற்பயிற்சியையும் முக்கியமாகக் கொள்ள வேண்டும். (தென்றல் திரை, 05.11.57)

* ‘உங்கள் வயதுக்கு மிகவும் குறைந்த வயது கொண்ட இளைஞனாக நீங்கள் நடிப்பது பொருத்தமாகுமா?’ என்ற கேள்விக்கு, ‘‘திரையில் நீங்கள் என்னைப் பார்க்கும்போது இளைஞனாக நான் தோன்றுகிறேனா இல்லையா என்பதுதான் என் கேள்வி. இருபது வயது இளைஞன் ஐம்பது வயதுக்காரராக நடித்தால் பாராட்டுகிறீர்கள் அல்லவா? நான் இருபது வயது வாலிபனாக நடித்தால் ஏன் பாராட்டக் கூடாது? அதற்குப் பெயர்தானே நடிப்பு?’’ (‘இதயவீணை’ படப்பிடிப்பில் எடுத்த பேட்டியிலிருந்து)

* ‘‘என் மறைவிற்குப் பிறகு என்னைப் பற்றிப் புரிந்து கொள்வார்கள் என்று பேசி இருக்கிறீர்களே, இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கூறி மனதைப் பதற வைக்க வேண்டுமா?’’ என்ற கேள்விக்கு, ‘‘தோற்றம் இருந்தால் மறைவு இருக்கும். வளர்ச்சி இருந்தால் தளர்ச்சி இருக்கும். இளமையிருந்தால் முதுமையிருக்கும். பிறப்பிருந்தால் இறப்பிருந்தே தீரும். எனவே இளைஞர்கள் ஒருவனுடைய கொள்கையிலும், அதைச் செயல்படுத்தும் முறைகளிலும் உண்மையான பற்று வைத்திருந்தார்களேயானால் அவைகளைத் தாங்களும் செயல்படுத்திக் காப்பாற்றுவதற்கு, மேலும் வளர்ப்பதற்குத் தயாராகிக் கொள்ள வண்டும் என்பதற்காக நீங்கள் சொன்ன வார்த்தைகளை வெளியிட்டேன். ஒரு மனிதன் மறைந்தாலும் கொள்கை வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கொள்கையைத் தந்த பெயரும் புகழும் காப்பாற்றப்படும். எனக்குப்பின் உங்களைப் போன்றவர்களின் நம்பிக்கையைப் பெற்றவர்கள் வேறு யாரும் இல்லை என்கிற நிலையில் கழகத்தை விட்டு வைப்பேனேயானால் அது அமரர் பேரறிஞர் அண்ணாவிற்குச் செய்கின்ற மிகப் பெரிய துரோகம் என்று நான் கருதுகிறேன்.


ன்னால் மறக்க முடியாதவர் எம்.ஜி.ஆர். செட்டுக்குள்ளே அவர் வர்றாருன்னாலே அவ்வளவு அமர்க்களப்படும். ஆனா அவர் ரொம்ப சாது. அவரைச் சுத்தி இருக்கறவங்க ஷூட்டிங் சமயத்துல ஆடோ ஆடுன்னு ஆடுவாங்க. என் மேல் எப்பவுமே எம்.ஜி.ஆருக்கு நல்ல மரியாதை உண்டு. நான் அவரை ‘மிஸ்டர் ராமச்சந்திரன்’ அப்படின்னுதான் கூப்பிடுவேன். என் குரலைக் கேட்டதும் இயல்பா புன்னகை உதிர்ப்பார். எந்தப் படம்னு எனக்குச் சரியா ஞாபகம் இல்ல. எம்.ஜி.ஆர். ஹீரோ. நான் ஹீரோயின். வழக்கம் போல நம்பியார்தான் வில்லன். அன்னிக்கு ஷூட் பண்ண வேண்டிய சீன் இதுதான்: என்னை நம்பியார் கிட்ட இருந்து காப்பாத்தறதுக்காக எம்.ஜி.ஆர். அவரோட கத்திச் சண்டை போடணும். நான் பயந்த மாதிரி உடம்பு நடுங்கணும். அன்னிக்குன்னு பார்த்து எம்.ஜி.ஆரும் நம்பியாரும் ரீடேக் வாங்கிட்டே இருக்காங்க. காட்சிக்காக நடுங்குற மாதிரி நடிச்சு நடிச்சு எனக்கு ரொம்ப வெறுப்பாயிடுச்சு. எத்தனை முறை வசனம் எதுவமே இல்லாம நடுங்குற மாதிரி நடிச்சுக்கிட்டே இருக்க முடியும்? நேரா எம்.ஜி.ஆர். கிட்டப் போனேன். ‘‘மிஸ்டர் ராமச்சந்திரன்! காலையில இருந்து கத்திச் சண்டை போட்டுக்கிட்டே இருக்கீங்க. ஆனா என்னைக் காப்பாத்த மாட்டேங்கறீங்க. பேசாம அந்தக் கத்தியை என்கிட்டக் குடுங்க. நானே என்னைக் காப்பாத்திக்கறேன். நானா, நம்பியாரான்னு ஒரு கை பாத்திடுறேன்’’ என்று போலியான எரிச்சலோடு நான் சொன்னதுதான் தாமதம்... வெள்ளிக்காசு கொட்டின மாதிரி எம்.ஜி.ஆரும், நம்பியாரும் சேர்ந்து சிரிச்சாங்க. நம்பியார் வாய்விட்டுச் சிரிச்சதை நான் அன்னிக்குத்தான் பார்த்தேன்.
-பானுமதி ராமகிருஷ்ணா
ஆ.வி.தீபாவளி மலர் 2003-ல் இருந்து...


Wednesday, July 17, 2013

வாத்யாரின் படகோட்டி - 2

Posted by பால கணேஷ் Wednesday, July 17, 2013
க்கள் விரும்பிப் பார்த்து ரசித்த படங்களை அதே கதையை வைத்துக் கொண்டு புதிய ட்ரீட்மெண்ட்டில் கொடுத்து வெற்றி பெறுவது சமீப காலமாக தமிழ்சினிமாவில் வழக்கமாகி விட்டது. பில்லா, நான் அவன் இல்லை, தில்லுமுல்லு.... இப்படிப் பல படங்கள் வந்து விட்டன. எம்.ஜி.ஆர்., நம்பியார், நாகேஷ் போன்றோரை வைத்து சி.ஜி.யில் மீண்டும் படகோட்டி-2 படம் தயாரிக்க முடிவு செய்தார் எனக்குத் தெரிந்த ஒரு தயாரிப்பாளர். கதையை புதிய ட்ரீட்மெண்டில் எழுதித்தர குடிகார எழுத்தாளர் கோவணாண்டியிடம் கேட்டுக் கொண்டார். கோவணாண்டியும் குடிக்காத நேரம் போக மீதி நேரமெல்லாம் சிரமப்பட்டு உழைத்து(!) கதையை எழுதினார்.

ஒரு சமயம் டாஸ்மாக்கில் பிராந்தி வாங்கிக் குடிக்கப் பணமில்லாமல் தான் எழுதிய ஸ்கிரிப்டை எடைக்குப் போட்டுவிட்டு அந்தப் பணத்தில் குடிக்கப் போய்விட்டார். என் வீட்டுப் புத்தகங்களை எடைக்குப் போடப் போயிருந்தபோது, அந்த ஸ்கிரிப்டைப் பார்த்துவிட்டு விசாரித்த என்னிடம் கடைக்காரன் சொன்ன தகவல் இது. கடைக்காரன் எடை போடுகையில், அந்த ஸ்கிரிப்டிலிருந்து இரண்டு தாள்களை சுட்டு வந்தேன். அதில் இருந்தது ஒரு சீனும், அதைத் தொடர்ந்து வரும் பாடலும்...! இதோ உங்களுக்காக அது இங்கே:

ரசாங்கம் மதுக்கடைகளை அரசைத் தவிர தனியாரும் ஏலத்தில் எடுத்து நடத்தலாம் என்று அறிவித்திருந்தது. ஆகவே ஆங்காங்கே தனியார் மதுக்கடைகளும் முளைக்கத் துவங்கியிருந்தன. வில்லன் எம்.என். நம்பியாரும் தனது பிரம்மாண்டமான மதுக்கடை‌யைத் திறந்திருந்தார். அந்த மதுக்கடையை நோக்கிச் செல்லும் தன் காலனி மக்களை வழிமறிக்கிறார் வாத்யார்.

எம்.ஜி.ஆர்.: ‘‘இதோ பாருங்க... குடிக்காதீங்க, குடிக்காதீங்கன்னு நான் தலை தலையா அடிச்சுக்கிட்டாலும் நீங்க கேக்கறதா இல்ல. சரி, குடிக்கறதுதான் குடிக்கறீங்க... தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் கடைகள்ல குடிங்க...’’

குடிகாரன் 1 : ‘‘இன்னாபா இது... புச்சா ஏதோ கடை பேரச் சொல்றாரு தலீவரு...?’’

நாகேஷ் : ‘‘அட லூசு! டாஸ்மாக்கைத் தான்யா அவர் விரிவாச் சொல்லுறாரு... அங்க சரக்குல்லாம் சரியா இல்லண்ணே... அதான் வேற கடைக்குப் போறோம்...’’

எம்.ஜி.ஆர்.: ‘‘அரசுக்கு வரி செலுத்தறது குடிமகன்களோட கடமை. அதுமாதிரி ‘டாஸ்மாக்’ல குடிக்கறதும் ‘குடி’மகன்கள் கடமை. உங்களுக்காக இன்னிக்கு குடிக்கறவங்களுக்கெல்லாம் சைட் டிஷ் இலவசமா தரச் சொல்லியிருக்கேன்...’’

அப்போது ஒரு கார் வந்து நிற்க, அதிலிருந்து எம்.என். நம்பியார் இறங்குகிறார். கைகளில் (இல்லாத) கஞ்சாவைக் கசக்கியபடி எம்.ஜி.ஆரைப் பார்த்துச் சிரிக்கிறார்.

நம்பியார்: ‘‘ஹுக்குக்கும்! டேய்... இவன் சைட்டிஷ் மட்டும்தான் கொடுப்பான். நான் சரக்கையே கொடுப்பேன்டா... என் கடையில விஸ்கி பாதி ரேட்ல தரச் சொல்லியிருக்கேன். அத்தோட... நீங்கள்ளாம் ரசி்க்கறதுக்காக ஒரு ஐட்டம் டான்ஸும்  ஏற்பாடு பண்ணியிருக்கேன். அங்க‌ே போங்கடா....’’

‘குடி’ மக்கள் அனைவரும் வாத்யாரைத் தள்ளிவிட்டு, நம்பியாரின் மதுக்கடையை நோக்கி ஓட, வாத்யாரின் மேல் ஒரு ஏளனப் பார்வையை வீசுகிறார் நம்பியார். வெறுப்புப் பார்வை ஒன்றை நம்பியாரின் மீது வீசிவிட்டு, தோள்களை ஏற்றி இறக்கி, கைகளைத் தூக்கி விரித்துவிட்டு கேமராவை நோக்கி நடக்கத் துவங்குகிறார் எம்.ஜி.ஆர். ஸ்டார்ட் மூஜிக்...! டன்டன் டன்டன் டன்டன் டன்டன்.....


குடித்ததெல்லாம் குடித்தார் - அவர்
யாருக்காகக் குடித்தார்?
ஒருத்தருக்கா குடித்தார் - இல்லை,
அரசுக்காகக் குடித்தார்..!
ஒருத்தருக்கா குடித்தார் - இல்லை,
அரசுக்காகக் குடித்தார்...!


பாதிரேட்டில் விஸ்கி என்றால் எவர் குடிக்க வெறுத்திடுவார்?
பிராந்தி தரும் போதையைத்தான் பீரும் தர மறுத்திடுமா?
முடியாட்சி அன்று, ‘குடி’யாட்சி இன்று
குடிக்காமல் எவரும் இருப்பதில்லை!


குடித்ததெல்லாம் குடித்தார் - அவர்
யாருக்காகக் குடித்தார்?
ஒருத்தருக்கா குடித்தார் - இல்லை,
அரசுக்காகக் குடித்தார்..!


குடித்தவன் மேல் பழியுமில்லை...
கொடுத்தவன்‌மேல் பாவம் இல்லை...
சந்து சந்தாய் கடை திறந்தார்
குடித்தவர்கள் தெருவில் நின்றார்...!
துயர் வந்தபோதும், சுகம் வந்தபோதும்
ஒருபோதும் குடியை நிறுத்தவில்லை!


குடித்ததெல்லாம் குடித்தார் - அவர்
யாருக்காகக் குடித்தார்?
ஒருத்தருக்கா குடித்தார் - இல்லை,
அரசுக்காகக் குடித்தார்..!


பண்புடையோர் சபைதனிலே
குடித்தவர்கள் தொல்லை செய்வார்!
வயிறு நிறைய மதுவிருக்கும்....
வார்த்தையெல்லாம் கப்படிக்கும்...!
தடையொன்று போட்டு கடைதன்னை மூடி
குடியாதோர் வாழ வாழ்த்திடுவோம்!


குடித்ததெல்லாம் குடித்தார் - அவர்
யாருக்காகக் குடித்தார்?
ஒருத்தருக்கா குடித்தார் - இல்லை,
அரசுக்காகக் குடித்தார்..!


பாடியபடியே மாலை நேர எஃபெக்டில் கடற்கரையை நோக்கி வாத்யார் நடக்க அவர் உருவம் புள்ளியாகும் வரை காமிரா தொடர்கிறது. வாத்யார் ஸில் அவுட்டாக... டிஸ்ஸால்வ்!

கட்!

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

கோவணாண்டியிடமிருந்து இதற்குமுன் நான் சுட்ட பாடல் : போனால் போகட்டும் போடா!

=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

Thursday, March 7, 2013

சண்டைகள் பற்றி வாத்யார்!

Posted by பால கணேஷ் Thursday, March 07, 2013

ங்கள் படங்களில் சண்டைக் காட்சிகள் ஏன் அதிகம்?

வீர உணர்ச்சிக்கு அவை தேவை என்பதால்!

டத்தில் நீங்கள் எதிரிகளுடன் சண்டை போடும்போது பத்து, இருபது பேரை ஏககாலத்தில் தனியா‌கவே நின்று சமாளிக்கிறீர்கள். அவ்வளவு பேரையும் அடித்து வீழ்த்திவிட்டு வெற்றிகரமாக வெளியே வந்து விடுகிறீர்கள். உண்மையிலேயே இது சாத்தியமானதா? நம்பக் கூடியதா?

ங்களைப் பார்த்தால் மதப்பற்று உள்ளவராகத் தெரிகிறது. புராணக் கதைகளைப் படித்திருக்கிறீர்கள் அல்லவா? அவற்றில் வருவதை நம்புகிறீர்கள் அல்லவா? மகாபாரதக் கதையில் அர்ஜுனன் அனுபவம் மிகுந்த வில் விற்பன்னர்களிடம் போரிடுகிறான். சிக்கலான விஷயத்தை மிக எளிதாக உடைத்து எதிரிகளை முறியடித்துவிட்டுத் திரும்புகிறான். நீங்கள் இதை அப்படியே மனப்பூர்வமாக நம்புகிறீர்கள். வாழ்க்கையை ஒட்டிய திரைப்படத்தில் அத்தகைய சம்பவத்தை ஏன் நீங்கள்‌ நம்பக் கூடாது? அர்ஜுனன் ‌போன்றோர் அப்படிப் பல பேரை ஒரே சமயத்தில் வென்று திரும்ப முடியுமானால் ன்ெ போன்ற திரைப்படக் கதாநாயகர்களாலும் முடியும்.

ங்கள் படங்களில் ‘ஸ்டண்ட்’ அதிகமாக இருக்கிறதே... தேவைதானா?

ஜேம்ஸ்பாண்ட் படங்கள் எப்படி இருக்கின்றன? அதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அமெரிக்காவில் ஸ்டண்டுக்கு என்று தனியாகப் படம் எடுக்கிறார்கள். உணர்ச்சி நடிப்புப் படங்கள், பாட்டுக்கென்று, நகைச்சுவைக்கென்று தனித்தனியாகப் படங்கள் எடுக்கிறார்கள். அவர்களுக்கு உலகம் முழுவதும் மார்க்கெட். இங்கே குருவிக்கூடு மாதிரி உள்ள இடத்தில் எடுக்கப்படும் படங்கள் எல்லாம் கலந்த படங்களாக இருக்க வேண்டும். பாட்டு, நடிப்பு, சண்டை, நகைச்சுவை எல்லாம் ஒரே படத்தில் இருந்தால்தான் படம் ஓடும்!

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் உங்களை ‘அட்டைக்கத்தி வீரர்’ என்று முரண்டாபாகக் கூறுகிறார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

த்திரிகையிலே வந்த ஒரு செய்தியை வைத்து முடிவான பதிலைக் கூற நான் தயாராக இல்லை. ஆனால் சிறிது காலமாக ‘அட்டைக்கத்தி வீரர்’ என்று யார் யாரோ பேசுவதாகப் பத்திரிகைகளிலே செய்தி வந்து கொண்டிருப்பதை நான் கவனிக்காமல் இல்லை. பொதுவாக இந்தக் கேள்விக்கு நேரடியான பதில் சொல்ல என்னால் முடியாவிட்டாலும் ஒரு சிறு விளக்கம்தர விரும்புகிறேன். அதில் உங்கள் கேள்விக்குரிய விடை ஏதும் இருக்குமாயின் ஏற்க வேண்டும்.

சினிமாவைப் பொறுத்தவரை ஆசிரியர் எழுதிக் கொடுப்பதைத்தான் நடிக, நடிகையர் ஒப்பித்துத் தீர வேண்டும். தான் நினைப்பது போலக் கற்பனையாகப் பேசிவிட முடியாது. யாரையாவது ஆத்திரத்தோடு கோபித்துக் கொள்ளக் கூடிய காட்சியாயிருந்து அந்த நடிகன் ஆத்திரமாகத் திட்டும்போது, திட்டுகளை ஏற்றுக் கொள்ளக் கூடியவன் வேலைக்காரன் வேடத்திலிருந்தால் அவன் தன்வேடத்திற்கு ஏற்ப அந்தத் திட்டுகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, பதிலுக்குத் திட்டிவிட முடியாது. மேலும் திட்டப்படுவது பாத்திரமே தவிர, அவனல்ல. ஒரு நாடகம் அல்லது சினிமாவில் நல்லவன், கெட்டவன், கணவன், மனைவி, கடன்காரன், கடன்பட்டவன்... இவ்வாற பலவகைப்பட்ட பாத்திரங்களை ஏற்றுள்ளவர்கள் ஒரே மாதிரி நடிக்க முடியாது. கதாநாயகனும், அவனுடைய எதிரியும், ஒரு கிழவனும் வாலிபனும் ஒரே மாதிரி நடிக்க முடியாது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ‘நடிப்பதுதான் நாடகம்’ என்பது.

அடிக்க வேண்டிய காட்சிகளில் அடிபட வேண்டியவனை உண்மையாகவே அடித்து நொறுக்கிவிட முடியுமா? கொலை செய்ய வேண்டிய பாத்திரத்தை ஏற்றிருப்பவன் கொலை செய்யப்பட வேண்டியவனை உண்மையாகவே கொன்று விடுவதா? நடிப்பால்தானே உண்மை போல் நிரூபித்துக் காட்ட வேண்டும். நஞ்சை அருந்தி இறப்பதாக ஒரு பாத்திரம் வரும்போது உண்மையான நஞ்சை உபயோகித்தால் அந்த நடிகனை அப்புறம் பார்க்கவே முடியாது. சண்டைக் காட்சிகளிலும் பயிற்சியோடு நிஜமான உயிர்க் கொலை நேராமல் சண்டையிடுவார்‌களே தவிர, கொலைக்கு இடம் வைக்க மாட்டார்கள். ஆதலால் நடிப்பின் மூலம் உண்மையைப் பிரதிபலிக்கச் செய்யும் கலைதான் நாட்கம், சினிமா என்பவை. குறை கூறுபவர்கள் வேண்டுமென்றே சொல்கின்றனர். அறியாத்தனத்தால் அல்ல. தாங்கள் சொல்வது சரியல்ல என்பது அவர்களுக்கே தெரியும். ஆகவேதான் இதுபோ்ன்ற பல்வேறு விஷயங்களுக்கு நான் பதில் சொல்லாமல் விட்டுவிடுவது வழக்கம்.

சினிமாவில் எனக்கு இதுவரை அட்டைக் கத்தியை வைத்துச் சண்டை செய்து பழக்கமில்லை. அநேகமாக எனக்குத் தெரிந்த பலரும அட்டைக் கத்தியை உபயோகப்படுத்தியதில்லை. மரக்கத்தி உண்டு. ஆங்கிலப் படங்களில் பார்த்திருக்கிறேன். சினிமாவில் சண்டைக் காட்சிகளுக்கென அட்டைக் கத்தி இதுவரை உற்பத்தி செய்யப்பட்டதாகவோ, இறக்குமதி செய்யப்ப்ட்டதாகவோ நான் கேள்விப்பட்டதில்லை. பெரிய கவிஞரை சம்பந்தப்படுத்திய கேள்வி என்பதனால் ஓரளவு விளக்கம் கூற முனைந்தேன். இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்
.

============================================

ல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு வருடங்களில், பல்வேறு பத்திரிகைகளில் மக்கள் திலகம் அளித்த பேட்டிகளைத் தொகுத்து, ‘‘‘எம்.ஜி.ஆர். பேட்டிகள்’ என்று ஒரு தொகுப்பு புத்தகம் வெளியிட்டிருக்கிறார் எஸ்.கிருபாகரன் என்பவர். 208 பக்கங்களில் 130 ரூபாய் விலையில் மனோன்மணி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் புத்தகம் இது. (Manonmani Pathipagam, 35/14, East Rajaveethi, Opp: Babu Suriya Hote near bus stand, Kanchipuram-631 501. Email: kirubakar08@yahoo.com) அந்த நூலிலிருந்து சண்டைக் காட்சிகள் பற்றி வாத்யார் கூறியவற்றை மட்டும் தொகுத்து இங்கு அளித்திருக்கிறேன். புத்தகம் பற்றி சுருக்கமாகச் சொல்வதென்றால்: நடிகர், அரசியல்வாதி, இசை ரசிகர், போன்ற அவரின் பல்முகங்களைத் தாண்டி எம்.ஜி.ஆர். என்ற மனிதரை உணரச் செய்கிறது இந்தப் புத்தகம்!

============================================

Monday, March 4, 2013

எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகள்!

Posted by பால கணேஷ் Monday, March 04, 2013

==============================================================
முன்குறிப்பு: ‘‌எனக்கு எம்.ஜி.ஆரைப் பிடிக்காது’ என்பவர்கள் (அப்படி எவரும் இருந்தால்) இந்தப் பதிவிலிருந்து விலகி விடவும்.
==============================================================

பி.யு.சின்னப்பாவிலிருந்து இன்றைய சூர்யா வரைக்கும் கதாநாயகர்களின் வீரத்தை வெளிப்படுத்தும் சண்டைக் காட்சிகள் புகழ்பெற்றவை. என்னைப் பொறுத்தவரையில் எத்தனை ஹீரோக்கள் எத்தனை விதமாக சண்டைக் காட்சிகளில் நடி்ததாலும், என் மனதில் நிற்பது அன்றும் இன்றும் என்றும் எம்.ஜி.ஆர். நடித்த சண்டைக் காட்சிகள்தான். நன்றாகக் கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், ஹீரோ ஒரு குத்து விட்டதும், வில்லனின் ஆட்கள் அரைப்படி ரத்தத்தை வாய் வழியாகக் கக்கிக் கொண்டு விழுவதும், ஹீரோவின் ஒரு உதையில் முககால் கிலோமீட்டர் ஆகாய மார்க்கமாகப் பறந்து சென்று லைட் கம்பத்தைப் பெயர்த்துக் கொண்டு விழுவதும் போன்ற அபத்தமான சண்டைகளாக அவருடையது இருக்காது. அனைத்தும் ஒரு கலையழகுடன் அமைந்திருக்கும்.

ஒரு படத்தில் நான்கைந்து சண்டைக் காட்சிகள் வருகின்றன என்றால், அவற்றிற்கிடையே வித்தியாசம் காட்ட அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தை அபாரமானது. உதாரணத்துக்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’  பாருங்கள். முதலில் ஆர்.எஸ்.மனோகருடன் அவர் செய்யும் கராத்தே ஸ்டைல் சண்டை, பின்னர் ஜஸ்டினுடன் செய்கிற ஸ்டைலிஷ்ஷான ஜுடோ சண்டை, அழகான பொய்ப்பல் நம்பியாருடன் செய்கிற புத்தர் கோயில் சண்டை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித ரசனையில் அமைந்திருக்கும். ‘கண்ணன் என் காதலன்’ படம் பார்த்தீர்கள் என்றால் கையில் கிடார் என்ற இசைக் கருவியை வைத்துக் கொண்டு, முழுக்க முழு்க்க கால்களை மட்டும் பயன்படுத்தி அவர் நடித்திருக்கும் சண்டைககாட்சி உதட்டை மடித்து விசிலடிக்க வைக்கும். கால்களைப் பயன்படுத்துவதில் புரட்சிக் கலைஞருக்கு அப்பவே முன்னோடி புரட்சித் தலைவர்தாங்க.

எம்.ஜி.ஆரின் ஸ்பெஷாலிட்டின்னா அது வாள் சண்டைதான். வாள் சுழற்றுவதில் இணையற்ற திறமை படைத்திருந்த அவருக்கு ஜாடிக்கேத்த மூடியா அமைஞ்சவரு வில்லன் நம்பியார். ‘கலை அரசி’ன்னு ஒரு படம். அந்தக் காலத்துலயே பறக்கும் தட்டுல பறந்து வேற கிரகத்துக்குப் போறாங்கன்னுல்லாம் கதை அமைச்ச சயன்ஸ் ஃபிக்ஷன். அதுல எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதுவாங்க பாருங்க... அந்த வாள் சண்டையில ரெண்டுபேரும் ஆக்ரோஷமா மோதி, கடைசியில நம்பியாரோட வாளைத் கீழ தட்டி நிராயுதபாணியாக்கிட்டு, ஸ்டைலா நிப்பாரு பாருங்க எம்.ஜி.ஆர். சான்ஸே இல்ல... இப்பப் பாத்தாலும் அந்த சீன் நகம் கடிக்க வைக்கும்.

‘நீரும் நெருப்பும்’ படம் டி.வி.யில அடிக்கடி போடறாங்க. அந்தப் படத்துல சிவப்பா இருக்கற அண்ணன் எம்.ஜி.ஆர். இடதுகைக் காரர். கறுப்பா இருக்கற தம்பி எம்.ஜி.ஆர். வலதுகைக் காரர். ஆக, படத்துல இடது கையால வாளைச் சுழற்றி அவர் சண்டை போடற லாகவத்தைப் பாக்க எக்ஸ்‌ட்ரா ரெண்டு கண்ணுதாங்க வேணும். க்ளைமாக்ஸ்ல ரெண்டு கைலயும் வாளை வெச்சுக்கிட்டு சுழற்றி அவர் அசோகனை வீழ்த்தற காட்சி இருக்கே... அபாரம்பா! ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அரசிளங்குமரி’, ‘நாடோடி மன்னன்’ -இப்பிடி நிறையப் படங்கள்ல அவர் வாள் சுழற்றுகிற லாகவத்தை இப்பவும் பாக்கறப்பல்லாம் ரசிச்சுக்கிட்டுதான் இருக்கேன்.

வாத்யாரின் திறமைகள்ல இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் சிலம்பாட்டம். முறைப்படி அதைக் கற்று தேர்ச்சியடைஞ்சிருந்த அவர் பல படங்கள்ல கம்பு சுத்தற அழகைப் பாத்துட்டே இருக்கலாம். ‘தாயைக் காத்த தனயன்’ படத்துல சின்னப்பா தேவரோட அவர் போடற கம்பு சண்டைய இதுவரை பாக்காதவங்க, அவசியம் தேடிப்பிடிச்சு பாத்துடுங்க. அசரடிககிற வித்தை அது. அந்த சண்டை ஆக்ரோஷமானதுன்னா... ‘ரிக்ஷாக்காரன்’ படத்துல ரிக்ஷாவை விட்டு இறங்காமலே வண்டியை ரிவர்ஸ்ல வட்டமா ஓட்டி கம்பைச் சுத்தி, ரவுடிகளை பின்னிப் பெடலெடுப்பார் பாருங்க... பாத்துடறேங்கறீங்களா? அப்ப சரி. அதே மாதிரி ‘மாட்டுக்கார வேலன்’ படத்தோட க்ளைமாக்ஸ்ல கம்பு சுத்துவாரு பாருங்க... முதல்ல ரெண்டு பேர், அதை சமாளிக்கறப்பவே இன்னும் ரெண்டு பேர், நாலு பேரையும் சமாளிக்கறப்ப இன்னும் நாலு பேர் சேந்துக்க... எட்டுக் கம்புகளையும் சூறாவளியா சுத்தி அவர் சமாளிச்சு அடிக்கிறது... கண்டிப்பா பாத்து ரசிக்க வேண்டிய ஒண்ணு. இன்னும் நிறையப் படங்கள் சொல்லிக்கிட்டே போகலாம்.

‘குமரிக்கோட்டம்’ படத்துல புத்திசுவாதீனமில்லாத ஜெயலலிதாவுக்காக காளி கோயில் முனனால ஆர்.எஸ்.மனோகரோட வாத்யார் போடற சண்டை ஒண்ணு வரும். அதுல மனோகர் ரெண்டு கைலயும் கம்பைப் பிடிச்சுட்டு அடிக்க வர... அதைத் தடுத்து அந்தக் கம்புல கைகள் இருக்க, கால்கள் ரெண்டும் வான் நோக்கியிருக்க ரெண்டு நிமிஷம் ஜிம்னாஸ்டிக் வீரர் மாதிரி அந்தரத்துலயே சுத்தி அப்புறம் கீழ இறங்கி அடிப்பாரு... இப்பப் பாத்தாலும் பிரமிச்சுத்தான் போவீங்க! சுருள் கத்தின்னு ஒரு ஐட்டம் அந்தக் காலத்துல உண்டு. ஒரு கைப்பிடியில, சில மெல்லிய தட்டையான கம்பிகள் செருகப்பட்டிருக்கும். நீளமா பாக்கறதுக்கு தென்னை விளக்குமாறு மாதிரி இருக்கற அது ஒரு அபாயமான ஆயுதம். எதிராளியை தோலைச் சீவிரும். சரியா சுத்தத் தெரியாட்டி சுத்தறவனையே அது சீவிரும். அந்த சுருள் கத்தியைக் கையாண்டு ‘ரிக்ஷாக்காரன்’ பட க்ளைமாக்ஸ்ல எம்.ஜி.ஆர். போடற சண்டைகள் இப்பவும் ஹீரோக்களுக்கு ஒரு பாடமா வைக்கலாம்.

சிங்கத்தையும், சிறுத்தையையும் சண்டையிட்டுக் கொல்ற மாதிரியான சண்டைக் காட்சிகள்லயும் அவர் நடிச்சதுண்டு. அந்த மிதமிஞ்சிய ஹீரோத்தனங்களைப் பத்தி நான் பெருமையாச் சொல்ல வரலை. நான் சொன்ன மாதிரி, மென்மையாக, கலையழகோட அவர் சண்டை போடறதுக்கு நான் இன்‌னிக்கும் ரசிகன்கறதை மட்டும் பெருமையாச் சொல்லிக்கறேன். நான் குறிப்பிட்ட சண்டைக்காட்சிகளையெல்லாம் ஒருமுறை பார்த்து ரசிச்சா நீங்களும் இதேயேதான் சொல்வீங்கங்கறது என் நம்பிக்கை!

==============================================================
ஒரு ரசிகனின் பார்வைல நான் ரசிச்ச MGR சண்டைகளைப் பத்திச் சொன்னேன். அவற்றில் நடிச்ச வாத்யார் அதைப் பத்தி என்ன சொல்றார்னு தெரிஞ்சுக்க விருப்பமுண்டா? சொன்னீங்கன்னா, அவரோட பழைய பேட்டிகள்லருந்து தொகுத்து ஒரு பதிவா தந்துடறேன். (ஹையா! இன்னொரு பதிவு தேத்த ஐடியா கிட்டிருச்சு. ஜாலி!)
==============================================================

Friday, January 18, 2013

நாடோடி, மன்னனான கதை!

Posted by பால கணேஷ் Friday, January 18, 2013
 
னவரி 17 - மக்கள் திலகத்தின் பிறந்த தினமான நேற்று வெளியிட்டிருக்க வேண்டிய இப்பதிவு இன்று வெளியிடப்படுகிறது. புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் எம்.ஜி.ஆர். இந்தப் புத்தகத்தில் நாடோடி மன்னன் படத்தில் திரைக்குப் பின்னும், திரைக்கு முன்னும் பங்கு பெற்ற அத்தனை கலைஞர்களைப் பற்றியும் படம் உருவானதைப் பற்றியும் அழகாகச் சொல்லியிருக்கிறார். 88 பக்கங்கள் கொண்ட, 50 ரூபாய் விலையுள்ள இந்தப் புத்தகம் நாதன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு நான் டிஸ்கவரி புக் ஸ்டாலில் (43, 44) வாங்கினேன். ஒரே மூ்ச்சில் படிக்க வைத்த இந்த சுவாரஸ்ய புத்தகத்தில் எனக்குப் பிடி்த்த சந்திரபாபுவைப் பற்றி வாத்யார் சொல்லியிருப்பதில் ஒரு பகுதி இங்கே:

                       சகாயமாக சாதித்த சந்திரபாபு

காயம்! இந்தப் பெயரின் கருத்தே உதவி என்பதுதான். உதவியில் பல வகையுண்டு. ஆனால் இந்தப் பெயரினால் கிடைத்திருக்கும் உதவி சாமான்யமானதல்ல. கதையின் குறிப்பிடத்தக்க பாத்திரமாக இருக்கும் நாடோடிக்கு உதவி செய்வதில் சில நேரங்களில் ஆபத்தையே ஏற்படுத்திக் கொடுப்பவர் சகாயம். ஆனால் அதனால் ஏற்படும் விளைவு நன்மையாகவே இருக்கும். தனது தேவை முதலில், அதே நேரதத்தில் பிறரைக் கண்டு அனுதாபம். எதைக் கண்டாலும் திகைப்பு; ஆனால் எதனைப் பற்றியும் அலட்சியம், எதிலும் பயம்; ஆனால் எதிலும் விருப்பம், காதலும் வேண்டும், அது கஷ்டமின்றியும் கிடைக்க வேண்டும். இப்படி குழப்பமான குணம் படைத்த பாத்திரம்தான் சகாயம். இதை ஏற்று நடிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. சந்திரபாபு அவர்களின் திறமைக்கு இதுபோன்ற எந்தப் பாத்திரமும் மிகச் சாதாரணம் என்ற வகையில் நிறைவேற்றியிருக்கிறார்.

நடிகர்கள் பாத்திரத்திற்கு ஏற்படுத்தியிருக்கும் செய்கைகளை புதிய விதமாகச் செய்ய வேண்டும், நடிக்க வேண்டும் என்றுதான் டைரக்டரோ, கதையாசிரியரோ விரும்புவார்கள். ஆனால் சந்திரபாபு அவர்கள் நடிக்கும் போது மட்டும் புது மாதிரியாகச் செய்கிறேனென்று சந்திரபாப அவர்கள் சொல்லாமலிருக்க வேண்டும் என்பதைத்தான் எல்லாரும் விரும்புவார்கள். அவ்வளவு ஆர்வத்தோடு நடிப்பவர் சந்திரபாபு அவர்கள். நடிப்பதில் (எத்தகையதாயிருந்தாலும்) தனக்கெனத் தனிச் சிறப்பு ஏற்படுத்திக் கொள்ளத் தயங்காதவர். அதற்காகத் தனக்கு எந்த ஆபத்து வரினும் பொருட்படுத்தாதவர். இதனால்தான் இவரைப் பற்றி நாங்களெல்லோரும் பயந்து கொண்டேயிருப்போம்.

ஆனால் என்னோடு பழகிய வரையில் அவருக்குத்‌ தன் விருப்பத்தைத் தடுப்பது பிரியமில்லாததாயிருப்பினும் மறுத்துக் கூறாமல் நடித்துக் கொடுத்தார் அவர். மேலேயிருந்து குதிப்பேன் என்பார். எனக்கு நன்கு தெரியும்- அவரால் சரிவரக் குதிக்க முடியும் என்று. ஆனால் சிலசமயம் புதுவிதமாக குதிப்பதாகச் சொலலி திடீரென்று ஆபத்து நேரும் விதத்தில் குதித்து விடுவார். மரக்கிளை ஒடிந்து விழும் காட்சியில் எவ்வளவு சொல்லியும் கேட்க மறுத்தார். கடைசியில் அந்தக் காட்‌சியே வேண்டாமென்று சொல்லிவிடலாமா என்ற நிலைக்கு வந்த பிறகு மெள்ள விழுவதாக ஒப்புக் கொண்டார். ஆயினும் எனக்குப் பயம்தான்.

இப்படி அவரைப் பொறுத்தவரையில் பொறுப்பைத் தட்டிக் கழித்து விடுவாரோ என்ற அச்சத்திற்கு மாறாக, பொறுப்பை நல்ல முறையில் நிறைவேற்ற வேண்டுமென்ற கடமை உணர்ச்சியினால் அவருக்கு ஆபதப்து ஏற்பட்டு விடக் கூடாதே என்று கலங்கியபடியே இருக்க வேண்டும்.

ருநாள் வெளிக்காட்சி எடுத்துக் கொண்டிருந்தேன். சந்திரபாபு அவர்களும் நடிக்க வேண்டிய கட்டம். குதிரைகள் போகும் காட்சியைப் படமாக்கும் போது ஒரு குதிரை சொன்னபடி கேட்காமல் தொல்லை கொடுத்தது. சிறிது நேரம் அதை ஓட்டி, ஒழுங்குக்குக் கொண்டு வந்து குறிப்பிட்ட நடிகரிடம் கொடுத்து ஓட்டச் செய்து படப்பிடிப்பை முடித்தேன். அதற்குள் சந்திரபாபு அவர்கள் தயாராகி விட்டதால், அவர் சம்பந்தப்பட்ட ஷாட்டுக்கு ஏற்பாடு‌ செய்து கொண்டிருந்தேன்.  பாபுவும் வந்தார்; ஏற்பாட்டைக் கண்டார். பத்து நிமிடங்களாவது ஆகும் என்றறிந்தார். முரட்டுத்தனம் செய்து அடக்கியிருந்த குதிரையின் மீது ஏறப் போனார். நான் தடுத்தேன்- அந்தக் குதிரை சரியில்ல என்று. ‘சிறிது நேரம் இங்கேயே சுற்றுகிறேன்’ என்றார். நான் குதிரைக்காரனிடம் எச்சரித்து, குதிரையுடனேயே லகானைப் பிடித்தபடி போகச் சொல்லிவிட்டு வந்தேன். ஐந்து நிமிடங்கள்கூட ஆகியிராது. சிலர் ஓடிவந்து சந்திரபாபு அடிபட்டுக் கீழே விழுந்து விட்டார். எம்.ஜி.ஆரிடம் சொல்லுங்கள் என்று சொல்லி மயக்கமடைந்து விட்டார் என்றனர். என்னால் எதுவும் கற்பனை செய்யவே முடியவில்லை. எப்படியோ... பழைய சந்திரபாபு அவர்களாகவே இருக்கிறார் நலனோடு.

அவரிடம் ஒருநாள் என் மனம்விட்டுச் சொன்னேன். இந்த வார்த்தை அவருக்கு மட்டுமல்ல, தென்னகக் கலைஞர்களுக்கு, குறிப்பாகத் தமிழகக் கலைஞர்களுக்கு மிகமிகத் தேவையான விளக்கம் என்று கருதுவதால் அதை இங்கே குறிப்பிடுவது சரியென்று கருதுகிறேன்.

‘‘சந்திரபாபுவின் திறமையை மக்கள் போற்றுகிறார்கள், புகழுகிறார்கள் என்றால் அந்தச் சந்திரபாபு தன்னிடமிருக்கும் கலைத்திறனை எத்தனை தொல்லைகளுக்கிடையில், எத்தகைய எதிர்பார்ப்புகளுக்கிடையில் தெரிந்து கொண்டிருப்பார். அதற்காகப் பாடுபட்ட நாட்கள், மாதங்கள், வருடங்கள் எத்தனை? எத்தனையோ... அவைகளை எல்லாம் ஒரே நாளில் நினைத்ததும் பெறமுடியாத அந்த மகத்தான கலைத் திறமையையெல்லாம் ஒரே வினாடியில் இழந்து விடும் நிலைக்கு மக்களைக் கொண்டு வருவது மக்களுக்குச் செய்யும் மகத்தான துரோகமாகும்’’
என்றேன். மக்களுக்கு மகிழ்ச்சியை மட்டும்தான் கொடுக்கிறோம்; அறிவைக் கூட அல்ல என்று வாதிப்பவர்கள் கூட இந்த இழப்பை விரும்ப மாட்டார்கள்.

‘‘கலைஞர்கள் இல்லையே என்று ஏங்கும் மக்களுக்கு இருக்கும் கலைஞர்களையும் இல்லாமற் செய்வது சரியல்ல’’ என்றேன். இதை அவர் நன்குணர்ந்தார் என்பதற்கு அவர் விட்ட கண்ணீரே சாட்சியாக இருந்தது. ‘‘எனக்கு நீ என்ன உபதேசம் செய்வது?’’ என்று அவரால் கேட்க முடியும். கேட்கக் கூடியவரும் கூட. ஆனால் என்னிடம் கேட்கவில்லை. இதில் மட்டும் என்று எண்ணி விடாதீர்கள்; தொழிலிலும் கூட.

-இதன்பின் வாத்யார் வேண்டாமென வற்புறுத்தியும் கேளாமல் வாயிலிருந்து கோழிக்குஞ்சை வரவழைப்பதபற்காக சந்திரபாபு பட்ட கஷ்டங்களையும் அவரின் தீவிர ஈடுபாடு மிக்க கலைத்திறன் பற்றியும் மக்கள் திலகம் புகழ்‌ந்து எழுதியிருப்பதையும் மற்ற சுவாரஸ்ய விவரங்களையும் விவரித்தால் பதிவு நீண்டுவிடும் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.

Saturday, January 12, 2013

அலிபாபாவும் 40 திருடர்களும்!

Posted by பால கணேஷ் Saturday, January 12, 2013
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1956ம் ஆண்டு வெளிவந்த முதல் தமிழ் (கேவா) கலர்ப் படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. எம்,ஜி.ஆர்., பானுமதி, பி.எஸ்.வீரப்பா, தங்கவேலு ஆகியோர் நடித்த இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டு ரசித்திருக்கிறேன். இதுவரை படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததில்லை என்பதால் சமீபத்தில் அந்த வாய்ப்புக் கிட்டியபோது ஆர்வமுடன் பார்க்கத் துவங்கினேன்.

டத் துவக்கத்தில் ‘அழகான பொண்ணு நான்’ என்று பானுமதி ஆடிப் பாடுகிறார். அழகான பொண்ணு என்றால் ஆபத்து வராமல் இருக்குமா? பாடி முடித்ததும், குறுநில மன்னன் ஷேர்கானின் ஆட்கள் அவரை இழுத்துச் செல்லப் பார்க்கிறார்கள். அவர் மறுக்கவே சவுக்கால் அடிக்கின்றனர். ஜனங்களெல்லாம் (வழக்கம்போல்) வெறுமனே வேடிக்கை பார்க்க, பானுமதியுடன் இருக்கும் குட்டையான காமெடியன் தடுக்கப் பார்க்க, தள்ளி விடுகின்றனர். பாவம்... கல்கியின் ஆழ்வார்க்கடியான் சைஸில் இருக்கும் அவரால் என்னதான் செய்துவிட முடியும்..? ‘காப்பாத்துங்க’ என்று கதறுகிறார். இப்படி ஒரு அநியாயம் நிகழ்வதைக் கண்டு இயற்கை பொறுக்குமா? அது அவரின் அபயக்குரலை புரட்சித்தலைவரின் திருச்செவிகளில் விழச் செய்துவிட, அவர் என்ட்ரியாகி அனைவரையும் சண்டையிட்டுத் துரத்துகிறார். ஆஹா... எத்தனை படங்களில் பார்த்தாலும் சலிக்கவே சலிககாதது வாத்யார் போடும் வாள் சண்டை. (‘‘நாம படம் பாக்கக் கொடுத்த 50 ரூபாய் -டிவிடிக்கு- இதுக்கே செரிச்சுடுச்சு போ’’ என்றது மனஸ்.)

அப்புறமென்ன... பானுமதிக்கு வாத்யாரின் மேல் இன்ஸ்டன்ட் காதல் வந்துவிட, அவர் வீட்டிலேயே அடைக்கலமாகின்றனர். காட்டுக்கு விறகு வெட்டச் செல்லும் எம்.ஜி.ஆர்., ஒரு கழுதை வழி தவறியதால் அதைப் பிடிக்கப் போய், பி.எஸ்.வீரப்பா தலைமையிலல்39 திருடர்கள் சங்கேத வார்த்தையைச் சொல்லி குகையிலிருந்து வெளிவருவதையும், வேறொரு சங்கேத வார்த்தையைச் சொல்லி குகையை மூடிவிட்டுச் செல்வதையும் பார்க்கிறார். 

அவர்கள் சென்றதும், அதே சங்கேத வார்த்தையைச் சொல்லி, அவரும் காமெடியனும் உள்நுழைகின்றனர். கதவை மூடும் சங்கேதச் சொல்லை வாத்யார் சொல்ல, அந்த சங்கேதச் ‌சொல் கேட்டதும், உள்ளே சங்கிலியால் பிணைக்கப்பட்ட அடிமைகள் வட்டமாக இருக்கும் ஒரு சக்கரத்தை இயக்க, அது ஒரு லீவரை இயக்க, அதன் மூலம் ஒரு இரும்புச் சலாகை இயங்கி பாறையை அசைத்து குகையை மூடுகிறது. (யப்பா... என்னா டெக்னாலஜி மூளை இந்தத் திருடனுங்களுக்கு! இதை நல்ல வழியில நாட்டுல பயன்படுத்தியிருந்தா நாடு வெளங்கியிருக்குமே...’’ என்றது மனஸ். அதை தலையில் தட்டினேன்.).

உள்ளே இன்னொரு ரகசிய லீவரை இயக்கியதும் சிங்கத்தின் வாய் போல பிளந்திருக்கும் இரண்டு குகைகளு்க்கும் இடையே மேலே தூக்கியிருக்கும் பலகைப் பாதை இறங்கி இரண்டையும் இணைக்கிறது. இரண்டு குகைகளுக்கும் நடுவே கொதித்துக் கொண்டிருக்கும் வெந்நீர் நதி(?) ஓடுகிறது. (‘‘யாத்தே... 24 அவர்ஸும் தண்ணியக் கொதிக்க வைக்க அத்தனை பெரிய நெருப்பை எங்கருந்து ஏற்படுத்தினாங்க திருடய்ங்க?’’ -மனஸ்). இவர்கள் உள் குகைக்குள் சென்று பார்க்க, பத்துத் தலைமுறைக்கு வேண்டிய அளவு தங்க நகைகளும், பொற்காசுகளும், இன்னபிற ஆடை ஆபரணங்களும் குகை முழுக்க நிரம்பியிருக்கின்றன. (இவ்வளவு செல்வத்தை வெச்சுக்கிட்டு ஜாலியா லைஃபை அனுபவிக்காம அந்த 40 கூமுட்டைங்களும் என்னத்துக்கு இன்னும் திருடப் போவுதுங்களோ தெரியலையே... -மனஸ். ‘தே.. கம்னு கெட.’ -நான்)

அப்புறம் என்ன... ரெண்டு கழுதைகள் சுமக்கற அளவுக்கு (ஐயய்யோ! வாத்யாரையும், காமெடியனையும் சொல்லலீங்க... நிஜக் கழுதைகள்) பொன், பொருளை மூட்டை கட்டிக்கிட்டு வந்துடறாங்க.  பெரிய அளவு செல்வம் வந்துச்சுன்னா... நாமல்லாம் ஜாலியா செலவு பண்ணிட்டு திரிவோம். ஆனா செல்வம் கிடைச்சது யாருக்கு? பொன்மனச் செம்மலுக்காச்சே...! அவர் அதை நிறைய தானதர்மம் பண்றார்.

அலிபாபா பெரிய பணக்காரனாயிட்டான்னு ‌ஷேர்கானுக்குத் தெரிய வந்ததும் -- சொல்ல மறந்துட்டேனே.. அவர் வாத்யாரோட அண்ணன்தான் -- தம்பியைக் கூப்பிட்டு விருந்துல்லாம் வெச்சு, எப்படி இவ்வளவு செல்வம் வந்ததுன்னு நைஸா விசாரிக்கிறாரு. அண்ணனோட வற்புறுத்தலால வாத்யார் உண்மையச் சொன்னதும், அவரைக் கைது பண்ண உத்தரவிடறாரு  வீரர்கள் ஆயுதங்களுடன் சூழ்ந்து வாத்யாரை மடக்கிவிட,  பானுமதி தன் புத்தி சாதுர்யத்தினால வாத்யாரை விடுவிக்க, அவர் சண்டை போட்டு எல்லாரையும் காப்பாத்தி தானும் தப்பிச்சுடறாரு.

சண்டையில வாத்யாரோட அண்ணி இறந்துட, பேராசைக்கார அண்ணன் அதைப்பத்தி கவலையே படாம அந்த குகைக்கு ஓடிப் போறாரு. சங்கேதச் சொல்லைச் சொல்லி உள்ளே போனவருக்கு பணத்தைப் பார்த்த ஆனந்தத்துல வெளிவர்றதுக்கான சொல் மறந்துவிட, திருடர்கள் வந்துவிட, அவரைப் பிடித்து தலையையும் உடலையும் தனித்தனியாகப் பிரித்து விடுகின்றனர். அவர்கள் மீண்டும் திருடச் சென்றுவிட, அண்ணனைத் தேடி அங்கே வரும் வாத்யார், அந்த முண்டத்தையும் தலையையும் எடுத்துட்டு நாட்டுக்கு வந்துடறாரு. ரெண்டையும் தைச்சு, அண்ணனுக்கு இறுதிக் காரியங்களும் பண்ணிடறாரு.

திருடர்கள் புத்திசாலி(!)களாச்சே... யார் வந்துட்டுப் போறதுன்னு கண்டுபிடிக்க, நாட்டுக்குள்ள வந்து சமீபத்துல பணக்காரரானது யாருன்னு விசாரிக்க, அலிபாபா பற்றித் தெரிய வருகிறது. பி.எஸ்.வீரபபா ஒரு எண்ணெய் வியாபாரியா மாறுவேஷம் போட்டுக்கிட்டு, எண்ணெய் பீப்பாய்கள்ல 39 திருடர்களையும் ஒளிஞ்சுக்கச் சொல்லி வாத்யாரை நட்பாக்கிக்கிட்டு, அவர் வீட்டுக்குள்ள எல்லா பீப்பாய்களோடயும் வந்துடறாரு. அவர் பீப்பாய்ல ஒளிஞ்சிருக்கற திருடங்க கிட்ட பேசறதை பானுமதி பாத்துடறாங்க.

அந்த வீரப்பா தான் தன் அப்பா, அம்மாவை கொன்னு தன்னை அனாதை ஆக்கினவன்றதையும் புரிஞ்சுக்கிட்டு, அவனை பழிவாங்க திட்டம் போடறாங்க. என்னா திட்டம்...! வாத்யாருக்கும், வீரப்பாவுக்கும் முன்னால பாட்டுப் பாடி, நடனமாடியபடியே அவர் காலால் தாம்பாளத்தை தட்டி சத்தம் எழுப்ப, ஒவ்வொரு சத்தத்துக்கும் ஒரு பீப்பாயை நீர்வீழ்ச்சிலருந்து உருட்டி விட்டுடறாங்க பானுமதியோட இருக்கற காமெடியனும் அவன் ஜோடியும். (‘‘ஏம்ப்பா... நகரத்துல சாலையப் பாத்திருக்கற எம்.ஜி.ஆரோட வீட்டுக் கொல்லைப் புறத்துல நீர்வீழ்ச்சி எங்கருந்து வந்தது? அவர் என்ன மலையுச்‌சியிலயா குடியிருக்காரு?’’ என்று சிரித்தது மனஸ். ‘‘த பாரு... ஜனங்களே வாத்யார் படத்துல லாஜிக் எதிர்பார்த்ததில்லை. நீ பேசின ‌பிச்சுப்புடுவேன் பிச்சு...’’ என்றேன் நான்.)

பிறகென்ன... தன் சகாக்களை பானுமதி கொன்னது தெரிஞ்‌சதும் வீரப்பா அவரைக் கடத்திட்டு தன் குகைக்கு ஓட, அவரை துரத்திப் பிடித்து, சண்டையிட்டு, ஒரு வழியாக கொன்று தீர்க்கிறார் புரட்சித் தலைவர். (‘‘ஆமா... 39 திருடங்களை அந்தம்மாவே காலி பண்ணிட்டாங்க. ஒரே ஒரு திருடனை மட்டும் கொல்றது வாத்யாருக்குப் பெருமையாக்கும்?’’ -மனஸ். ‘‘சனியனே... அடங்க மாட்ட நீயி?’’ -நான்) வாத்யாரும், பானுமதியும் டூயட் பாட, படம் நிறைவடைகிறது.


படத்தில் பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையாக வந்திருக்கின்றன. எல்லாக் கதாநாயகிகளையும் தொட்டுத் தூக்கி, சுற்றி புகுந்து விளையாடும் வாத்யார், பானுமதியின் அருகில் பள்ளிக்கூட மாணவன் போல (பார்க்க: படம்) பாதுகாப்பான தூரத்தில் நின்று டூயட் பாடுவது (அதிகபட்சம் தோளை தொடுதல்தான்) பார்க்க ஆச்சரியமோ ஆச்சர்யம்! தங்கவேலுவின் காமெடி நிரம்பிய நடிப்பு அற்புதம். பானுமதி வழக்கம் போல் கம்பீரமான கதாநாயகியாக ரசிக்க வைக்கிறார். பி.எஸ்.வீரப்பா ஆர்ப்பாட்டமான வில்லன் நடிப்பில் அவருக்கு நிகர் வேறொருவர் இல்லை என்று சொல்ல வைக்கிறார். வாத்யாரின் அண்ணனாக வரும் (நிஜ அண்ணன்) எம்.ஜி.சக்ரபாணி குகையில் மாட்டிக் கொண்டு வெளியே வர வழி தெரியாமல் வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி, குகையைத் திறக்க வழி தெரியாமல் தவிப்பது நகைச்சுவைக்கு உத்தரவாதமான நடிப்பு. 

படத்தில் இந்த மனஸ் என்னதான் குற்றம் குறைகளைக் கண்டுபிடித்தாலும் அதையெல்லாம் யோசிப்பதற்கு நேரம் இல்லாதபடி படம் விறுவிறுப்பாகச் செல்கிறது. அதுதான் எம்.ஜி.ஆரின் திறமை + பலம். ரசிகர்களுக்கு அதைத் தவிர வேறென்ன வேண்டும்?

‘‘த்தோ பாரு மனஸ்... நீ படுத்தின பாட்டுக்கு அடுத்த தடவை படம் பாக்கறப்ப உன்னை கிட்ட சேர்க்கப் போறதில்லை’’ என்றேன் நான். ‘‘அதுசரி... ஏற்கனவே எம்.ஜி.ஆர். படத்தை மூளையக் கழட்டி வெச்சுட்டு, என்னை வெச்சுட்டுத்தான் ரசிச்சுட்டிருக்கே... என்னையும் துரத்திட்டேன்னா, நீ படம் பாக்கவே முடியாது’’ என்று மனஸ் சிரிக்க... நான் அவ்வ்வவ்!

====================================================
அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
====================================================

Friday, December 23, 2011

எல்லோருக்கும் பிடித்த MGR

Posted by பால கணேஷ் Friday, December 23, 2011
 ‘வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?’ என்றும் ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்றும் தான் பாடிய பாடல்களுக்கு நடைமுறை உதாரணமாக வாழ்ந்து மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். அவரது நினைவு நாளான இன்று - டிசம்பர் 24 - அவரை நினைவு கூர்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

* கர்ணன் படத்தில் சிவாஜிக்கு முன்னால் எம்.ஜி.ஆரிடம்தான் நடிக்கக் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்து விட்டார் எம்.ஜி.ஆர்.

* சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைக்கூடத் தவிர்த்தவர் எம்.ஜி.ஆர். ‘நினைத்ததை முடிப் பவன்’ படத்தி்ல சிகரெட்டை வாயில் வைப்பார், இழுக்க மாட்டார்.     
 * முதலமைச்சர் பதவியை ஏற்றுக் ‌கொண்டபின் ஷுட்டிங் போக முடியாது என்பதால் பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளி வைத்துவிட்டு (அவர் நடித்த கடைசிப் படமான) ‘மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ படத்தை முடித்துக் கொடுத்தார்.

• நம்பியாரும் அசோகனும்தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள்.

* எம்.ஜி.ஆருடன் அதிகப் படங்களில் நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா.
• எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் இணைந்து வெற்றி பெற்ற ‘மலைக் கள்ளன்’ ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் அது.

* நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்று மூன்று படங்களை இயக்கியிருக்கிறார் எம்.ஜி.ஆர். 


• எம்.ஜி.ஆர். எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்க வைத்தால். அதில் முக்கியமான இருவர் அரசியலைக் கலக்கிய துரைமுருகன், சினிமாவைக் கலக்கிய கோவை சரளா.

* கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழி லும் ஆங்கி லத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங் கிலத்தில் அண்ணாவை வசனம் எழுதும் படி கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் ஆசை நிறை வேறவில்லை.
• அறிமுகம்    இல்லாத புதிய நபர்களைச் சந்தித்தால் “நான் எம்.ஜி.ராமச்சந்திரன், சினிமா நடிகன்” என்று அறிமுகம் செய்து கொள்ளுமளவுக்கு எளிமையானவர் எம்.ஜி.ஆர்.

* தன் ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு சிங்கத்தையும், கரடியையும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டரையும் நியமித்திருந்தார்.
• மிகவும் நெருக்கமானவர் களை ‘ஆண்டவனே’ என்று தான் அழைப்பார் எம்.ஜி.ஆர்.
 * ‘அடிமைப் பெண்’ ஷுட்டிங்கிற்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர். குளிருக்காக வெள்ளைத் தொப்பி அணிந்தார். அது பிடித்துப் போனதுடன், நன்றாக இருக்கிறதென்று அனைவரும் பாராட்டவே அதைத் தொடர்ந்து அணிய ஆரம்பித்தார் எம்.ஜி.ஆர்.

• எம்.ஜி,ஆர். காலில் விழுந்து வணங்கிய பெருமை உடையவர்கள் இருவர். ஒருவர் கத்திச் சண்டை, இரட்டை வேட நடிப்பு இவற்றில் எம்.ஜி.ஆருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த நடிகர் எம்.கே.ராதா. மற்றொருவர் இந்திப்பட இயக்குனர் சாந்தாராம்.

* முழுக்கை சில்க் சட்டை, லுங்கி அணிந்து தொப்பி, கண்ணாடி இல்லாமல் தானே காரை டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாத்தான் கண்டுபிடிப்பாங்க போல’’ என்பாராம்!

• தன் அன்னையான சத்யா அவர்களை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.  
* ‘நான் ஏன் பிறந்தேன்?’ என்ற தலைப்பில் தன் சுயசரிதையை (முதல்வராவதற்கு முந்தைய காலகட்டத்தில்) எழுதியிருக் கிறார் எம்.ஜி.ஆர்.
• எம்.ஜி.ஆர். நடத்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவர் எழுதிய ‘அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா’ என்ற பாடல் எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலித்த பெருமையுடையது.
   

* எம்.ஜி.ஆர்.1936ல் சதி லீலாவதி என்ற படத்தின் மூலம் நடிகராகி 1977ல் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படம் வரை மொத்தம் 136 படங்களில் நடித்தார்.

• தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970ல் எம்.ஜி.ஆரின் கமெண்ட் : “அந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்ல. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க. அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்.”
 

நன்றி : ஆனந்தவிகடன் பழைய இதழ்கள்.
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube