Wednesday, July 3, 2013

தே(வ)ன் துளிகள்!

Posted by பால கணேஷ் Wednesday, July 03, 2013
காதேவன் என்கிற தேவன் எழுத்துக்களில் இயல்பான ஹாஸ்ய ரசம் ததும்பும். அவரது சுவாரஸ்யமான எழுத்து நடை எனக்கு மிகப் பிடிக்கும். அதைப் பற்றி எழுத வேணுமென்று ரொம்ப நாளாக ஆசை. நான் எழுதி என்னத்த பெரிசாச் சொல்லிடப் போறேன்னு தோணிச்சு. அதனால அவர் எழுத்துலருந்து கொஞ்சம் ஸாம்பிள் இங்க உங்களுக்காக:

====================================

திருநெல்வேலி ஜங்ஷனுக்கும் திரு‌ச்செந்தூருக்கும் இடையேயுள்ள மைல்கள் முப்பத்தெட்டுதான் என்றாலும் மொத்தம் பத்தொன்பது ஸ்டேஷன்களையும் அவைகளி்ல் ஒன்று தவறது நிற்கும் ரயில் வண்டிகளையும் இங்கே காணலாம். அடிக்கடி கதவுகளைத் திறப்பதும் அடைப்பதும் இறங்குவதும் ஏறுவதுமாயுள்ள மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளுக்கிடையே நடைபெறும் சச்சரவுகளுக்கும், சண்டைகளுக்கும் இங்கே குறைச்சல் ஓய்ச்சல் ஏதும் இல்லை.

‘‘ஓய்! உமக்கு மூளை கொஞ்சமாவது இருக்கா? இவ்வளவு கொழந்தைகளும் பொம்பிளைகளும் இருக்கிற வண்டியிலே பார்த்து ஏற வந்துட்டீரே! மேலே வண்டி அம்பிட்டும் காலி!’’ என்று ஞானதிருஷ்டியில் கண்டாற்போல் ஒருவர் புத்தி சொல்வார். ‘‘இருக்கட்டும் ஸார்! நான் என்ன, அடுத்த ஸ்டேஷன்லயே இறங்கப் போறவன். ஒரு மூலையில ஓர் அங்குல இடத்தில் நின்றுவிட்டால் போச்சு’’ என்று மார்பின் சுற்றளவு நாற்பத்திரண்டு அங்குலம் கொண்ட ஆசாமி முண்டுவார்.

‘‘காலை மிதித்து விட்டீர‌ே கடங்கார மனுஷா!’’

‘‘என்னமோ, ரயிலையே விலைக்கு வாங்கிட்டாற் போல்தான் வாய்வீச்சு!’’

‘‘மனுஷனுக்கு அறிவு வேணும். அது இல்லையோ, ரயில் வண்டியிலே வந்து ஏறப்படாது...’’

‘‘ஓஹோஹோ! நான் ஏறினதுதான் இப்போ சங்கடமோ? எங்கேயும் பார்த்துட்டேன். இடமில்லை. உங்க பக்கத்திலே நிற்கணும்னு ஆசையா, பிரார்த்தனையா! இரண்டுமில்லையே!’’ என்று ஏறிக் கொண்டான் அவன். ‘‘ஏறாதே என்கிறேன். என்ன? மேலே ஏறினா?  நான் சொல்கிறவன் மனுஷனாப் படல்லே! என்ன?’’ என்று எகிறினார் அவர். ‘‘மனுஷனாயிருந்தால் அப்படிச் சொல்ல மாட்டானே! ஒரு மாதிரி நகர்ந்து இடம் கொடுப்பானே!’’ என்று நடராஜன் நன்றாக உள்ளே வந்து கதவையும் சாத்திக் கொண்டான்.

‘‘இப்ப நீ இறங்கப் போறியா என்ன? ஏய்...!’’

‘‘இறங்கப் போறேன், தாத்தா! கட்டாயம் இறங்கத்தான் போறேன். நான் போக வேண்டிய ஸ்டேஷன் வந்துட்டா ஒரு விநாடி உட்காருவேனா? இல்லை, வேற யார்தான் உட்காருவா? நீங்கதான் நிமிஷம் நிற்பேளா?’’

-‘மிஸ் ஜானகி’ நாவலிலிருந்து.


====================================

ங்கநாதத்தின் வீட்டில் அன்று மத்தியானம் டிபனுக்குத் தவலை அடை செய்திருந்தார்கள். தவலை அடை என்றால் ரங்கநாதத்திற்குத் தேவதா விசுவாசம். தூக்கு மேடை மீது ஏற்றுமுன் அவரை அதிகாரிகள், ‘‘கடைசியாக உன் விருப்பம் என்ன?’’ என்று கேட்டிருந்தால், ‘‘ஓர் அரை டஜன் தவலை அடைகள் சாப்பிட்டு விடுகிறேன். அப்புறம் உங்கள் இஷ்டம் போல் என்னைச் செய்து கொள்ளுங்கள்’’ என்று திருப்தியுடன் சொல்லி விடுவார்.

சுடச்சுடக் கொண்டுவந்து கனகம் அடைகளைப் பரிமாறுவதும், அவைகளை அவசரம் அவசரமாக ரங்கநாதம் அந்தர்த்தானமாக்குவதுமாக முனைந்திருந்த தருணம். அந்த மாதிரி சமயங்களில் அவர் மனம் மிக விசாலமாக இருக்கும். யார் என்ன வரம் கேட்டாலும் கொடுக்கத் தயாராக இருப்பார். அதை அறிந்த அவருடைய மூத்த பிள்ளையான கஸ்தூரி ‘ஸ்கவுட்’டில் சேர காக்கி உடுப்புகளுக்குப் பணம் கேட்டு, உத்தரவும் பெற்றுக் கொண்டு விட்டான். பெரிய பெண் அலமேலு பூச்சவுக்கம் போட புதிய நூல்களுக்கு‘ஆர்டர்’ வாங்கிக் கொண்டு விட்டாள். கனகமோ தன் வைர பேஸரியை அழித்து திருச்சி டாக்டர் சம்சாரம் பண்ணிக் கொண்டிருக்கிற மாதிரி புது மோஸ்தரில் செய்து கொள்ள வரம் வாங்கும் தருணம் எது என்று காத்திருந்தாள். அப்போது வாசல் கதவை வேதாந்தம் தட்டினான்.

‘‘யாரடா அவன் சனியன்? ஓடிப் போய்ப் பாருடா கஸ்தூரி!’’ என்றார் ரங்கநாதம். அவர் குரல் வேதாந்தத்திற்கும் கேட்டது. ‘சனியன்’ என்று சொல்ல, தன்னைப் பார்க்குமுன் அவர் எப்படிக் கண்டுபிடித்தார் என்று அவன் ஆச்சரியத்துடன் சிரித்துக் கொண்டான். ‌வேறு சமயமாக இருந்தால் ரங்கநாதம் ஓடி ஒளிந்திருப்பார். வெங்காய போண்டாவுடன் அகப்பட்டுக் கொள்ளும் எலி மாதிரி இவர் தவலை அடையும் கையுமாக இன்று சிக்கிக் கொண்டு விட்டார் வேதாந்தத்திடம்.

-‘மிஸ்டர் வேதாந்தம்’ நாவலிலிருந்து

====================================

‘‘ராஜம்! நாம் முன்பிருந்த வீட்டில் சாண் பூமியாவது இருந்தால் பிரமாதமாகத் தோட்டம் போடுவேன் என்று சொன்னாயே! இப்போது வீட்டைச் சுற்றி ஒன்றே முக்கால் கிரவுண்ட் தரை இருந்தும் நீ வாளாயிருப்பதன் ரகசியம் என்ன?’’ என்று என் மனைவியைக் கேட்டேன். ‘‘இப்போதானே வேலி போட்டீர்கள்? தவிர, இந்தப் பங்குனி மாசத்தில் செடியும் கொடியும் வைத்தால் எப்படிப் பிழைக்கும்?’’ என்று அவள் என்னைத் திருப்பிக் கேட்டாள். ‘‘அப்படியானால் ஏதோ பூஞ்செடிகள் விற்றுக் கொண்டு வருகிறானே, அவன் ஒரு மூடனா? நான் வாங்குகிறேன் பார்’’ என்று அவனைக் கைதட்டி அழைத்தேன். அவன் வந்து தலைச்சுமைக்ை கீழே வைத்துவிட்டு எதிரில் உட்கார்ந்தான்.

‘‘ரொம்ப உசந்த செடிகள் இருக்குது... பார்த்தீங்களா இந்தப் பூங்கொத்தை? விருட்சிப் பூங்க!’’ என்று ஒரு பூங்கொத்தைக் காட்டினான். ‘‘ரொம்ப நன்றாக இருக்கிறதே இந்தப் புஷ்பம்! எங்கே இதன் செடி?’’ என்றதும் ‘‘இதோ பாருங்க’’ ன்று சுமார் பத்துச் செடிகளை எடுத்து வெளியே போட்டான். ஒவ்வொன்றின் வேர்ப்புறமும் ஒரு சருகில் சுருட்டி அழகாகக் கட்டி வைக்கப்பட்டிருந்தது.

‘‘இதைப் பாருங்க முல்லைச் செடி... முல்லையிலே பதினாறு விதமுங்க. பதினாறும் நம்மகிட்ட இருக்குது...’’

‘‘அதையெல்லாம தனியா வை. அப்புறம்...?’’

‘‘பழச்செடிங்க! இதெல்லாம் அலகாபாத் கொய்யா... ஒசத்தி ஒட்டுங்க. ஒரு பளம் சும்மா ஒரு சொம்பளவு வருமுங்க. வாயில போட்டீங்கன்னா கரைஞ்சு போவுங்கோ...’’

அவன் சொல்லும்போதே என் தோட்டத்தில் விருட்சியும் இருவாட்சியும் பூத்துக் குலுங்குவது போலும், கொய்யாவும், மாதுளையும், ஒட்டுமாவும் பழுத்துத் தொங்குவது போலவும் என் கண்முன் ஒரு பிரமை உண்டாயிற்று. நாற்பத்தி நாலு ரூபாய் விலை சொன்ன அந்தச் செடிகளை நானும் ராஜமும் சாமர்த்தியமாகப் பேரம் பேசி இரண்டே கால் ரூபாய்க்குத் தீர்த்தோம். ‘‘ஐயா பேச்சிலே தேனு ஒழுகுது’ என்று அவன் பணத்துடன் சென்றான்.

பிற்பகல் வந்த வாட்ச்மேன் ஆறுமுகத்தைக் கொண்டு அவைகளைப் புதைக்கச் சொன்ன ‌போதுதான் உண்மை வெளியாகியது. பாதிச் செடிகளில் சருகுப் பார்சலை அவிழ்த்ததும் வேர் என்பதே இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு வேதனைப்பட்டோம். ‘‘இதற்காக நீங்கள் வருந்த வேண்டாம் ஸ்வாமி! இந்தச் செடிகளில் வேர் இருந்தாலும் உபயோகம் இல்லை. இத்தனையும் நீங்க பூஞ்செடிகளே இல்லை... எல்லாம் காட்டுச் செடிகள்!’’ என்று சொல்லி விட்டான் அவன்.

இவ்வளவு லகுவாக நாங்கள் ஏமாந்து விட்டதை நினைத்து நானும் ராஜமும் சிறிதுநேரம் வருந்திவிட்டு, ‘இனிமேல் இந்த வீட்டுக்காக காலணா செலவழிப்பதில்லை; தெரிந்தும் தெரியாமலும் வேண்டியது நஷ்டப்பட்டு விட்டோம்’ என்று கடும் வைராக்கியம் செய்து கொண்டு காம்பவுண்டின் ஒரு மூலையில் எல்லாச் செடிகளையும் வாரி வீசினோம்.

-‘ராஜத்தின் மனோரதம்’ நாவலிலிருந்து.


====================================

தேவனின் புகழ்பெற்ற துப்பறியும் சாம்பு உள்ளிட்ட நிறைய புதினங்களிலிருந்து இன்னும் இன்னும் சொல்ல விருப்பம்தான். ஆனால் இங்கே இடம் பற்றாதே... எனவே பிடித்திருந்தால் நீங்களே அவர் புத்தகங்களைத் தேடிப் பிடித்துப் படித்துக் கொள்ளும்படி கோருகிறேன்!

52 comments:

  1. தேவன் எழுத்திலிருக்கும் தேன் துளிகள்
    பகிர்வுகள் தித்திக்கச் செய்தன.
    பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தே(வ)ன் துளிகளை ரசித்த உங்களுக்கு என் மனம் நி‌றைய நன்றி. (திரட்டிகளில் சேர்த்துவிட்டு வருவதற்குள் உங்களின் கருத்து முந்தி வந்திருக்கிற வேகம் என்னை பிரமிக்கவும் ரசிக்கவும் வைத்தது இரா.ரா.அம்மா! மிக்க நன்றி)

      Delete
  2. ரயிலில் பயணம் செய்து வீட்டுக்கு வந்து தவலை வடை சாப்பிட்டு வீட்டுக்கொல்லையில் தோட்டம் வளர்க்க எண்ணி பல்பு வாங்கியதையெல்லாம் மீண்டும் கண்முன் கொண்டுவந்த வார்த்தை ஜாலம் அருமை!
    //துப்பறியும் சாம்பு//
    பள்ளிக்கூட காலத்தில் பாடப்புத்தகங்களோடு புத்தகமாக வைத்து படித்ததை மீண்டும் ஞாபகபடுத்திய உங்களுக்கு...

    படா டாங்க்ஸ்பா!

    ReplyDelete
    Replies
    1. துப்பறியும் சாம்பு எதனோடும் ஒப்பிட முடியாத ஒரு தனிரக எழுத்து. நான் மிக ரசித்துப் படித்த ஒரு விஷயம் அது. அதை ரசித்த உங்களுக்கு மகிழ்வுடன் என் நன்றி!

      Delete
  3. பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்த உங்களு்க்கல்லவா நன்றி சொல்ல வேண்டும். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  4. மேலும் சுவை தரும் எழுத்துகளை பதிவு செய்யுங்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் செய்கிறேன் நண்பா. மிக்க நன்றி!

      Delete
  5. தேடிப் படிக்க முடியாத பல விசயங்களை எங்களோடு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி வாத்தியாரே, துப்பறியும் சாம்பு படிக்க வேண்டும் என்பது என் நெடுநாள் அவா

    ReplyDelete
    Replies
    1. துப்பறியும் பாம்பு, ச்சே.. சாம்பு மிக அருமையான கதை சீனு. ஆரம்பபத்துல விகடன்ல படக்கதையா வந்து அனைவரின் ரசனையையும் அள்ளிச்சு. அப்புறமா அதை தனித்தனி சிறுகதைகளாகவும் எழுதினாரு தேவன். தேடிப் பிடிச்சு படிச்சு ரசி! மிக்க நன்றி!

      Delete
    2. நான் ஒய்.ஜி.. நடிச்சா நாடகம் தான் பார்த்துருக்கேன்.. புக் படிச்சதில்லே..

      Delete
    3. என்னப்பா சீனு, ஷெர்லாக் ஹோம்ஸ்ம் துப்பறியும் சாம்புன்னு ஒரே "துப்"பறியும் கதைகளே விரும்பறே.. என்ன சேதி??

      Delete
  6. தேவனின் எழுத்துக்களில் தாங்கள் கொடுத்த தொகுப்பு அனைத்தும் அருமை... இவ்வாறு அறிமுகத்தில் அவர்களின் புகழ்பெற்ற நூல்களையும் வரிசைப்படுத்திடுங்க எங்களுக்கெல்லாம் உபயோகமாக இருக்கும் கணேஷ் அண்ணே...

    ReplyDelete
    Replies
    1. நீங்களெல்லாம் தரும் ஊக்கத்தினால் நிச்சயம் செய்கிறேன் பிரதர்...! மிக்க நன்றி!

      Delete
  7. Replies
    1. ஆம வடை தெரியுமா?

      Delete
    2. நானும் அடை சாப்பிட்டதுண்டு. தவலை அடை சாப்பிட்டதில்லை. அவர் எழுதிய விதத்தை வைத்துப் பார்த்தால் வெகு ருசியாக இருக்கும்னு தோணுதுங்க விஜி. மிக்க நன்றி!

      Delete
  8. தேவன் கதைகள் அனைத்தும் இளம் வயதில் படித்திருக்கிறேன் ஆரோக்கியமான நகைச்சுவை அவருடையது. என் சிநேகிதி ஒருத்தர் எப்போதுமே அவரின் ஏதாவது ஒரு புத்தகத்தை தினமும் படிப்பதை வழக்கமாகக் கொண்டவர்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete
  9. ‘ராஜத்தின் மனோரதம்’ நாவலிலிருந்து.
    >>
    இதை மட்டும் படித்தாற் போல ஒரு ஞாபகம்

    ReplyDelete
    Replies
    1. தேவனை நீ படித்ததுண்டு என்பதில் மிக்க மகிழ்ச்சி எனக்கு!

      Delete
  10. ஓகே... நான் ஸ்ரீமான் சுதர்சனம் எடுத்துப் படிக்கப் போகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வேதாந்தம், ராஜம், ஜானகி இதெல்லாம் நான் பகிர்ந்தவை. நீங்கள் சுதர்சனம் என்கிறீர்கள். (துப்பறியும்) சந்துரு, சாம்பு போன்றோரெல்லாம் பாக்கி. நான் படிக்கப் போகிறேன் ஸ்ரீராம். ஹி... ஹி..!

      Delete
  11. தேவனின் தேனமுதம் ருசித்தேன்! பகிர்வுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  12. தேவனின் படைப்புகளிலிருந்து ஒரு சில தேன் துளிகள் தந்தமைக்கு நன்றி! அவரது இன்னொரு புகழ் பெற்ற படைப்பான ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’ கதையிலிருந்தும் சிலவற்றை தந்திருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு சில கதைகள் என்னிடமில்லை/நான் படித்ததில்லை. ஜகந்நாதன் அதில் ஒன்று. விரைவில் இன்னொரு தொகுப்பாகத் தர முயல்கிறேன் ஐயா. மிக்க நன்றி!

      Delete
  13. நகைச்சுவையும் ஈர்க்கும் நடையும் அவர் ஸ்பெஷாலிடியாச்சே... 'சாம்பு'விலிருந்தூம் கொஞ்சம் சாம்பிள் கொடுங்க!
    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் செய்கிறேன் ஜனா ஸார். மிக்க நன்றி!

      Delete
  14. தேன் துளிகள்! அருமை. ஆம், சாம்புவிலிருந்தும் எடுத்துத் தாருங்கள்:)!

    ReplyDelete
    Replies
    1. ஐ! சாம்புக்கு இவ்வளவு ரசிகர்/ரசிகைகளா? அவசியம் செய்து விடுகிறேனுங்க. மிக்க நன்றி!

      Delete
  15. ரயில் வண்டி பேச்சு சுவாரசியம்.
    நாம் அவர்களில் ஒருவராக இல்லாத வரை.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா.. . நல்லாச் சொன்னீங்க. மிக்க நன்றி!

      Delete
  16. ரயில் பிரயாண உரையாடல்கள் ரொம்பவும் சுவையாக இருந்தன. தவலை அடைக்கு இப்படி ஒரு ரசிகரா?
    ஒவ்வொருவரியிலும் இழையோடும் நகைச்சுவை ரசித்துப் படிக்க வைத்தது.

    பகிர்வுக்கு நன்றி, கணேஷ்!

    ReplyDelete
    Replies
    1. மகா ரைட்டரின் மெகா நகைச்சுவையை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றிம்மா!

      Delete
  17. சகோ... நகைச்சுவையை பெருஞ்சுவையாய் பகிர்ந்ததைப் படித்து மகிழ்ந்தேன்.
    நாங்களெல்லாம் இப்படியான புத்தகங்களை ஊரில் இருந்தபோது தேடித்தேடி படித்துடன் சரி!
    இங்கு யாரிடமாவது இருந்து அதை இரவல்வாங்கிப் படிக்கணும் இல்லை ஊரிலிருந்து தருவிக்கணும். ஹும் நடக்கிற காரியமா...

    ஏதோ உங்களைப் போன்றோர் தயவில் இப்படிப் பகிர்வதை வாசித்துச் சிரிக்கக் கிடைத்ததே பாக்கியம்தான்...:)

    பகிர்விற்கு மிக்க நன்றி சகோ!

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போன்ற ரசிகர்களுக்காக இப்படிப்பட்ட பகிர்வுகளை அவசியம் அளிக்கிறேன் சிஸ்டர்! மிக்க நன்றி!

      Delete
  18. ஐயமில்லாமல் அத்தனையும் தேன் துளிகள் தான்!

    தேவன் 'தவலை அடை' என்றா எழுதியிருக்கிறார்? தவலை வடை தான் famous!

    அந்த ரயில் சம்பாஷணையின் அடுத்த பகுதியை நான் யூகிக்கிறேன் - அடுத்த நிறுத்தம் வந்ததும் நடராஜனும் தாத்தாவுடன் சேர்ந்துகொண்டு புதிதாக வண்டியில் ஏறுபவர்களை விடட்டிக் கொண்டிருந்தான்!

    என்ன ஒரு சாமர்த்தியம் இருந்தால் 44 ரூபாய் செடிகளை இரண்டேகால் ரூபாய்க்கு வாங்கியிருப்பார்! நல்லவேளை ராஜம் மாமியும் இந்த பேரத்தின்போது பக்கத்தில் இருந்ததால் மாமா பிழைத்தார்; தனியாக வாங்கிவிட்டு ஜம்பம் அடித்துக்கொண்டிருந்தால் அப்புறம் மாமியிடம் இடி வாங்கியிருப்பார்!

    கல்கி, தேவன் இவர்கள் எல்லாம் தமிழர்களுக்கு வரம்!

    -ஜெ.

    ReplyDelete
    Replies
    1. ரசனையில் என்னுடன் மிகமிக ஒத்துப் போகிறீர்கள். கடைசி வரியை கைதட்டி ஆமோதிக்கிறேன் ஜெ. மிக்க நன்றி!

      Delete
  19. அனைத்தும் தேன் துளிகள் தான்.
    என்ன மீதியையும் படிக்க முடியாது.

    பகிர்விற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் ரசிப்பதால் இன்னொரு தொகுப்பும் தருகிறேன் அருணா. மிக்க நன்றி!

      Delete
  20. மிஸ்டர் வேதாந்தம் தவலை அடை சாப்பிட்டது சுவாரஸ்யம்தான். என் பள்ளி நாட்களில் எதிர் வீட்டு ஆன்ட்டி தவலை அடை செய்தால் எனக்கு தருவார்கள். எனக்கும் பிடிக்கும்! மற்ற படி தவலை அடை என்பது தவலையில் செய்வார்களா பக்கெட்டில் செய்வார்களா என்று தெரியாது... ஹா.. ஹா...

    ReplyDelete
    Replies
    1. ஏன் அப்படி தவலை வடை, தவலை அடைன்னு சொல்றாங்களோ, எனக்கும் தெரியலை உஷா. ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  21. என்னைக் கவர்ந்தது இவர் எழுத்து, துப்பறியும் சாம்பு சிறுகதை ஒன்று பாடப் புத்தகத்தில் ஆங்கிலத்தில் படித்து உண்டு.... கண்டிப்பாக தேடி பிடித்து படிப்பேன்

    ReplyDelete
    Replies
    1. படித்தால் மிக ரசிப்பீர்கள் ரூபக். மிக்க நன்றி!

      Delete
  22. தவளை வடைக்கு ரசிகர் மன்றமே ஆரம்பித்து விடுவார் போல் தெரிகிறது.
    துப்பறியும் சாம்பு நான் மிகவும் ரசித்துப் படித்த கதைகளில் ஒன்று.
    அருமையான கதைத் தொகுப்பு.
    பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  23. துளியாக தேவன் அவர்களின் எழுத்தை எடுத்திருந்தாலும் அனைத்தும் தேன் துளிகள்தான் அண்ணா.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  24. எனக்கும் சாம்புவிலிருந்து :) பகிருங்கள்.

    ReplyDelete
  25. நகைச்சுவை தேன் துளிகளை ரசித்தேன்.. இவரைப் பற்றி இப்போதான் கேள்விப் படுறேன்.. (படிக்கறது சினிமாவும் விளையாட்டும் அப்புறம் எப்படி இவரை தெரியும்னு நீங்க தலையில குட்டுறது தெரியுது)

    ReplyDelete
  26. தேவனின் எழுத்துகள் தரமான நகச்சுவையை அள்ளித் தரும். சிறுவயதில் படித்த, பார்த்த துப்பறியும் சாம்பு, தற்போது படித்த ஜாங்கிரி சுந்தரம் ஆகியவை மனதில் உள்ளன.

    ReplyDelete
  27. துப்பறியும் சாம்பு எனக்கு மிகவும் பிடித்த கதை... துப்பறிய போகும் இடங்களில் இயல்பாக நடக்கும் விடயங்கள் சாம்புவிற்கு கை கொடுக்கும் விதம் அருமையாக இருக்கும்... :)

    ReplyDelete
  28. துப்பறியும் சாம்புவை மறக்க இயலுமா? இல்லை வேதாந்தம் தான் விட்டு விடுவாரா? திரு தேவனின் கதைகள் படித்து இன்புற்று எங்களுக்கும் அந்த சுவையைத் தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி கணேஷ்.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube