Friday, January 25, 2013

‘முகில்’ கிளப்பிய ‘திகில்’!

Posted by பால கணேஷ் Friday, January 25, 2013

ந்த ஒரு புத்தகத்தையும் முழுதாகப் படிக்காமல் அதுகுறித்து அறிமுகம் தருவது எனக்கு வழக்கமில்லை. இந்தமுறை நான் பாதியளவு படித்திருக்கும் இந்த ‘வெளிச்சத்தின் நிறம் கறுப்பு’ புத்தகம் பற்றிச் சொல்கிறேன் என்றால் புத்தகத்தின் சுவாரஸ்யத்தை உங்களால் உணர முடியும். புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களில் இந்த மெகாசைஸ் புத்தகத்தை முதலில் படிக்க ஆரம்பித்ததன் காரணம்...

 1) நூலாசிரியர் ‘முகில்’ நான் கிழக்குப் பதிப்பகத்தில் வேலை செய்தபோது அங்கு உதவியாசிரியராக இருந்தவர். 2) நான் மிக ரசிக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர். 3) அவர் எதுபற்றி எழுதினாலும் அதில் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமிராது -ஆகியவை தான். நூலாசிரியர் முகில் இப்போது முழுநேர எழுத்தாளர். புத்தகம், சினிமா, தொலைக்காட்சி என்று பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர். இவர் எழுதிய சந்திரபாபு பற்றிய நூல், முகலாயர்கள், செங்கிஸ்கான், அகம்புறம் அந்தப்புரம், கிளியோபாட்ரா என்று பல சுவாரஸ்யமான  நூல்களைப் பலர் படித்து அறிந்திருப்பீர்கள். அறியாதவர்கள் இப்போது அறிக.

பர்முடா முக்கோணத்தின் மேல் மிதந்த கப்பல்களும், பறந்த விமானங்களும் ஏன் காணாமல் ‌போயின என்பதை ஆராய்ச்சி செய்து பல புத்தகங்கள் வந்துவிட்டாலும் தீராத ஒரு புதிராக நீடிக்கிறது அது. அதைப் போல இந்த பூமிப் பந்தின் மேல் நிகழும் பல விஷயங்களின் பின்னே மறைந்துறையும் மர்மங்கள் விடுவிக்கப்படாதவைகளாகவே இருக்கின்றன. அத்தகைய இருட்டான பல கேஸ்களை தன் சுவாரஸ்யமான எழுத்து நடையில் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறார் முகில். நான் சொல்லிப் புரிய வைப்பதைவிட, முன்னுரையில் முகில் சொல்லியிருப்பதன் ஒரு பகுதியை இங்கே தருவது ஏற்புடையதாயிருக்கும் :

‘உலகம் மர்மங்களால் ஆனது’ என்று பறைசாற்றும்படியாக, மனித அறிவுக்கும் அறிவியலுக்கும் பிடிபடாத, விடை தெரியாத மர்மங்கள் காலந்தோறும் பெருகிக் கொண்டேதான் செல்கின்றன. இந்தப் புததகம் எதைப் பற்றியெல்லாம் பேசப்போகிறது என்று பட்டியலிடுவது சற்றுக் கடினம். ஆனால் குண்டலினி வித்தையால் பறக்க வைக்கும் சாமியார், சிவலிங்கத்தைக் கக்கும் ஆன்மீகவாதி, கூனர்களையும் குருடர்களையும் குணமாக்கும் மதகுரு போன்ற டுபாக்கூர்களை நாம் சீண்டப் போவதில்லை. ஸ்பைகேமரா வைக்கப்படாத அறையில் அவர்கள் சுபிட்சமாக வாழ்ந்துவிட்டுப் போகட்டும். தவிர ஆவி, பேய், பிசாசு, பில்லி சூனியம், கண்கட்டு வித்தை என்ற மிகக் குறுகிய வட்டத்துக்குள் மட்டும் நாம் சுற்றிவரப் போவதில்லை.

நமக்கான தளம் மிக மிகப் பெரியது. நாம் ஏற்கப்போகும் பாத்திரங்கள் (தசாவதாரம் கமலைக் காட்டிலும்) ஏராளம். ஓர் அத்தியாயத்தில் நாம் அறிவியல் ஆராய்ச்சியாளராக மாற வேண்டியதிருக்கும். அடுத்ததில் உளவியல் மருத்துவராக, அதற்கடுத்த அத்தியாயங்களில் தொல்லியல் வல்லுநர், வரலாற்று ஆய்வாளர், வானியல் அறிஞர், துப்பறியும் அதிகாரி, விலங்கியல் நிபுணர், இயற்கை ஆர்வலர், அவசியப்பட்டால் பேய் ஓட்டுகிற மநதிரவாதியாகவும் மாற வேண்டியது வரலாம். பகுத்தறிவைப் பக்கத்துத் தெரு சேட்டிடம் அடகுவைத்துவிட்டு இந்தப் புத்தகத்தைப் படிக்கத் தேவையில்லை. உலகில் விடைகாண முடியாத மர்மங்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தவே இந்தப் புத்தகம். நம் அறிவுக்கும் அறிவியலுக்கும் அப்பாற்பட்ட மர்மங்கள், விநோதங்கள், விசித்திரங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். எனில் அந்தத் தீராத புதிர்களுக்கு இதில் விடை கிடைக்குமா என்றால் என் பதில் - அந்த வெளிச்சத்தின் நிறம் கருப்பு!


என்ன... அப்படியென்ன விடைகாண முடியாத மர்மங்களின் மேல் முகில் வெளிச்சத்தைப் பாய்ச்சியிருக்கிறார் என்று அறியும் சுவாரஸ்யம் எழுகிறது தானே... நூலின் முடிவில் இதற்கு உதவிய புத்தகங்கள், ஆவணப் படங்கள், இணைய தளங்கள் என்று முகில் தந்திருக்கும் லிஸ்ட் மட்டுமே ஏழு பக்கங்ள் நீள்கிறது. அத்தனை ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்பதில் பிரமித்துப் போனேன். நான் ரசித்த ஒரு சுவாரஸ்ய கட்டுரையின் சில பகுதிகள் உங்களின் ஒரு சோறு பதத்திற்காய் இங்கே:

                                              நாய்களின் தற்‌கொலை முனை

தை நீங்கள் படிக்க ஆரம்பித்திருக்கும் நேரத்தில் அங்கே அந்தப் பாலத்தில் ஏதோ ஒரு நாய் தற்கொலை செய்து கொள்ளலாம். அதன் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டிக் கொண்டு தொடருங்கள். ஒரு நாய் எதற்காக தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? தேர்வுத் தோல்வி, காதல் தோல்வி, பிஸினஸ் தோல்வி, தேர்தல் தோல்வி உள்ளிட்ட மனிதனுக்கான காரணங்கள் எதுவும் நாய்களுக்கு இருக்கப் போவதில்லை. தனது பாசத்துக்குரிய எஜமானரை இழந்து வாடிய சில நாய்கள், நாள்கணக்கில் எதுவும் உண்ணாமல் செத்தப்போன சம்பவங்கள் உண்டு. ஆனால் தற்கொலை எல்லாம் செய்து கொள்ளாது என்கிறீர்களா... உறுதியாகச் சொல்வதற்குமுன் ஒருமுறை ஸ்காட்லாந்துவரை சென்று பார்த்துவிட்டு வந்துவிடுவோம். அதுவும் அங்கேயுள்ள மேற்கு டன்பர்ட்டன்ஷைர் நகரத்திலுள்ள ஓவர்டவுன் எஸ்டேட்டுக்கு- அதிலும் முக்கியமாக எஸ்டேட்டில் அமைந்துள்ள மர்மமான அந்தப் பாலத்துக்கு வாருங்கள்.

-இப்படி நம்மை அழைத்துச் சென்று, தோ்ட்டத்தின் அழகை வர்ணித்தபின்.. கருங்கற்களாலும் கிரானைட்டாலும் உருவாக்கப்பட்ட அந்தப் பாலம் அதிக அகலமோ, பெரும் நீளமோ கிடையாது. சுமார் இரண்டடி உயர தடிமனான கைப்பிடிச் சுவர், சுவரின் குறிப்பிட்ட இடைவெளிகளில் பாலத்திலிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருப்பதான அரைவட்ட வளைவுகள். இருபக்கமும் சேர்த்து மொத்தம் எட்டு வளைவுகள். ஒரு நாய் தன் பின்னங்கால்களை தரையில் ஊன்றி, முன்னங்கால்களை சுவர்மேல் வைத்துக் கொண்டு கீழே ஓடும் நீரோட்டத்தை ரசிக்கலாம். சுற்றியிருக்கும் இயற்கையில் திளைக்கலாம். அப்படியே பின்னங்கால்களை உந்தித் தாவி, சுமார் 50 அடி பள்ளத்தில் குதித்து தற்கொலையும் செய்து கொள்ளலாம். அக்டோபர் 2005ல் அப்படித்தான் குதித்து விட்டது பென்..

என்று மர்மத்தை ஆரம்பித்து, பென்னின் உரிமையாளரிடம் வரும் நண்பர் தன் நாய் அதேபோல் இறந்ததைச் சொல்லும் போது வியப்பை ஏற்படு்ததி, அடுத்தடுத்து தற்செயலாகவும், சோதனைக்காகவும் அங்கு அழைத்துச் செல்லப்பட்ட நாய்கள் எல்லாம் தற்கொலை செய்து கொண்டதை விவரிக்கிறார். அங்கே மட்டும் நாய்கள் எல்லாம் ஏன் குதித்து உயிர் விட வேண்டும் என்று கண்டறிய ஆன்மீகத்தின் வழியிலும், விஞ்ஞான ரீதியாகவும் நடந்த பல ஆராய்ச்சிகளை விரிவாக விவரித்திரு்க்கிறார் முகில். முத்தாய்ப்பாக இப்படி முடிக்கிறார்.

இப்போது வரை ஓவர்டவுன் பாலத்தின் நாய் மர்மம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அது தீர வேண்டுமென்றால் இரண்டு விஷயங்கள் நடக்க வேண்டும். ஒன்று ஏதாவது ஒரு நாய் தற்கொலை செய்வதற்கு முன்பாக ‘என் சாவுக்குக் காரணம்....’ என கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சாக வேண்டும். அல்லது நாமே நாயாக மாறி, ஓவர்டவுன் பாலத்திற்குச் சென்று....

அலுவலகப் பணி, வெளி வேலைகள் இவற்றுக்கிடையில் கிடைக்கும் சமயங்களையெல்லாம் ‘என்னை உடனே படித்துமுடி’ என்று திருடிக் கொண்டு தொல்லை தந்து கொண்டிருக்கிறது இந்தப் புத்தகம். இத்தனைக்கு மேலும் விரிவாக நான் என்னத்தைச் சொல்ல...? ‘தமிழக அரசியல்’ இதழில் ஏறத்தாழ 35 வாரங்கள் முகில் எழுதிய இந்தத் தொடரை 320 பக்கங்களில், 200 ரூபாய் விலையில், 10/2 (8/2), போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தி.நகர், சென்னை-17ல் இருக்கும் ‘சிக்ஸ்த் சென்ஸ்’ பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள். (தொ.பே.2423 2771, 65279654).

=====================================

ன் ‘சரிதாயணம்’ நூலுக்கு இந்தப் பதிவில் அழகான அறிமுகம் தந்த வெங்கட் நாகராஜ், இந்தப் பதிவின் மூலம் அழகான ஒரு திறனாய்வைச் செய்த சீனு, இந்தப் பதிவின் மூலம் மனமகிழும் மதிப்புரை தந்த ஸ்ரவாணி, இந்தப் பதிவின் மூலம் என்னைப் பெருமைப்படுத்திய ‘எங்கள் ப்ளாக்’ மற்றும் இந்தப் பதிவின் மூலம் இனி படிக்கப் போவதாகச் சொன்ன ஹாரி ஆகிய என் நட்புகளுக்கு என் இதயம் நிறைந்த நன்றி. இன்னும் இந்தப் புத்தகம் பற்றி எழுதவிருக்கும் உங்களில் பலருக்கும், இவற்றையெல்லாம் படி்த்து எனக்கு தெம்பூட்டும் கருத்தைத் தந்த அனைத்து நல்இதயங்களுக்கும் மனநெகிழ்வுடன் என் நன்றி!

Wednesday, January 23, 2013

மொறு மொறு மிக்ஸர் - 15

Posted by பால கணேஷ் Wednesday, January 23, 2013

மீபத்தில் புத்தகக் கண்காட்சிக்குப் போகும் வழியில் பல இடங்களில் ‘வைரமுத்துவின் 37 புத்தகங்கள்’ என்று போட்டு ஸ்டால் எண்களைத் தெரிவித்த போஸ்டர்கள் கண்ணில் பட்டன. சிந்தனை முகமாய் புத்தகத்தைப் புரட்டியபடி கவிஞர் ‌வைரமுத்துவின் புகைப்படம் அச்சிட்டிருந்த அந்த போஸ்டர்களில் ‘தமிழின் நிகழ்காலம்’ என்று வைரமுத்துவைப் புகழ்ந்திரு்ந்தார்கள். ‘‘அடாடா... வைரமுத்து ஸார் தமிழின் நிகழ்காலம்னா, ‘அவர்’ கடந்த காலம்னு இவங்களே ஒத்துக்கறாங்களா...?’’ என்று கேட்டது மனஸ். ‘‘தெரியலையேப்பா... தெரியலையே...’’ என்று சிவாஜி குரலில் பதிலளித்தேன் நான்.

=======================================

மீபத்தில் ரசித்த சர்தார்ஜி ஜோக்: ரயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. திடீரென்று எட்டு சர்தார்ஜிகள் ரயில் வரும் சமயம் பிளாட்பாரத்திலிருந்து தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள். அதில் இரண்டு பேர் மீது ரயில் ஏறிவிட்டது. மற்றவர்களை கைது செய்திருக்கிறார்கள். செய்தி சேகரிக்க வந்த பத்திரிகை நிருபர், பிளாட்பாரத்தில் குப்புறப் படுத்திருந்த ஒரு சர்தார்ஜியை எழுப்பிக் கேட்டான். ‘‘அவங்க ஏன் தற்கொலைக்கு முயற்சி பண்ணினாங்க?’’

‘‘தற்கொலையா? அதெல்லாம் ஒண்ணுமில்ல... ரயிலுக்காக வெயிட் பண்ணிட்டிருந்தப்ப, அனவுன்ஸ்மென்ட்ல ‘ரயில் முதலாவது பிளாட்பாரத்திற்கு வந்து சேரும்’னு சொன்னதும், இவங்க பயந்து போய் பி்ளாட்பாரத்துல இருந்தா ரயில் மோதி செத்துருவோமேன்னு தண்டவாளத்துக்கு பாய்‌ஞ்சுட்டாங்க...’’ என்றார்.

நிருபர் வியப்புடன், ‘‘அவங்க எல்லாம் முட்டாள்களா இருந்தாலும் நீங்க ஒருத்தராவது புத்திசாலியா நடந்துக்கிடடீங்களே...’’ என்றார். சர்தார்ஜி சோகமாக, ‘‘நீங்க வேற ஸார்... நான்தான் உண்மையில தற்கொலை பண்ணிக்க வந்தவன். அனவுன்ஸ்மென்டை கேட்டதும் ரயில் என்மேல ஏறட்டும்னு குப்புறப் படுத்துட்டேன். அந்த பாழாப் போன ரயில் அவுங்க சொன்னபடி பிளாட்பாரத்துல வராம, தண்டவாளத்துல வந்து ஏமாத்திடுச்சு...’’

=======================================

மீப்த்தில் டீக்கடையில் கேட்ட உரையாடல்:

‘‘ஹும்! சேவை வரியை ரத்து செய்யணும்னு கோரி சினிமா உலகத்தைச் சேர்ந்தவங்க உண்ணாவிரதம் இருக்காங்களாம். அவங்க ப்ளாக் மணி வெச்சுக்காம இருந்தாலே அரசாங்கத்துக்கு நிறைய வரி கட்டலாமே...’’

‘‘நானும் அந்த நூஸைப் பட்ச்சேம்ப்பா. ஒரு விஸ்யம் புரில எனுக்கு.,.. அதின்னாது அது சேவை வரி?’’

‘‘அது ஒண்ணுமில்ல தம்பி. படம் பாக்கற நாமல்லாம் கேளிக்கைய அனுபவிக்கறோம்கறது்க்காக டிக்கெட்லயே கேளிக்கை வரி செலுத்தறோம்ல. அதுமாதிரி... அவங்க சேவை வரின்னு ஒண்ணு அரசாங்கத்துக்க கட்டணு்ம். அதை விதிக்கக் கூடாதுன்ற கோரிக்கைகாகத்தான் உண்ணாவிரதம்.’’

‘‘நான் ஒண்ணும் கேளிக்கை வரி கட்டறதில்லையேப்பா...’’

‘‘நீ தனியா கட்ட வேணாம். படம் பாக்கற ஒவ்வொருத்தரையும் தேடிப் பிடிச்சு வரி வசூலிக்க முடியாதுன்னுதான் அரசாங்கம் சினிமா டிக்கெட்லயே அதைச் சேர்த்திருக்கு. டிக்கெட் விற்பனைலருந்து தியேட்டர்காரங்க அதைக் கட்டிருவாங்க...’’

‘‘ஓ... அப்படியா விஸ்யம்? ஆனா ஒண்ணு புரியலப்பா... நாம கேளிக்கைய அனுபவிக்கறோம், அதனால கேளிக்கை வரி செலுத்தணும். அதான் ஞாயம். ஆனா இவங்கதான் யாருக்கும் எந்த சேவையும் செய்யலையே... அப்புறம் இன்னாத்துக்கு இவுங்க மேல சேவை வரி? அதான் நீக்கச் சொல்லிப் போராடறாங்க அல்லாரும். ரொம்பக் கரீக்டுப்பா...’’

=======================================

மீபத்தில் படித்ததில் ரசித்தது:

ந்த விமானத்தில் வந்தவர்களனைவரும் வெளியே போய் விட்டார்கள்- ஒரே ஒருவரைத் தவிர. நாலு கெளண்ட்டர் தள்ளி ராஜீவ்காந்தியின் இரு பெரிய பெட்டிகள், கைப்பைகள் திறக்கப்பட்டு, உள்ளேயிருந்த துணிமணிகள், சாமான்களெல்லாம் வெளியே வாரியிறைக்கப்பட்டிருந்தன. அங்கே இருந்த சோதனை அதிகாரி பெட்டியில் இன்னும் ‘எதையோ’ தேடிக் கொண்டிருந்தார். ஒரு மணி நேர வதக்கலுக்கப்புறமும் ராஜீவின் முகத்தில் புன்னக‌ை மாறவில்லை. ஆபீஸர் பார்த்த சாமான்களை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு ராஜீவ் பொறுமையாக பதிலளித்துக் கொண்டிருந்தார்.

கண்ணாடிச் சுவர் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த எனக்குப் பொறுக்கவில்லை. ‘‘என்னடா இது... இரண்டு மணி நேரமா அவர் பொட்டியில எனு்னடா தேடறீங்க. அவர் யாரு தெரியுமில்ல...? முன்னாள் பிரதமரின் மகன்! அவரென்ன கடத்தல்காரரா? ஏண்டா இப்படிப் படுத்தறீங்க? உண்மையான கடத்தல்காரனைக் கண்டுபிடிக்கறதில்லே...’’ என்று பொரிந்து தள்ளினேன். அதற்கு ரஙகராஜன், ‘‘எங்களுக்கும் டூட்டி முடிஞ்சு வீட்டுக்குப் போகணும். ஆனா மேலிடத்திலிருந்து ஆர்டர்- குறைந்தது ரெண்டு மூணு மணி நேரமாவது அவரைத் ‘தாளித்து’ அனுப்ப வேண்டுமென்று நார்த் பிளாக்கிலிருந்து உத்தரவு. எங்களுக்கும் கஷ்டமாத்தான் ஸார் இருக்கு. ஆனா நாளைக்கு போன் வ்ந்தா நாங்க பதில் சொல்லியாகணும்’’.

எனக்கு கோபம் தாளவில்லை. ஆனால் ராஜீவ்காந்தியோ தனக்கு ஏன் இவ்வாறெல்லாம் நடக்கிறது என்று நன்றாகத் தெரிந்திருந்தும் அவர் காத்த பொறுமையை என்னால் வியக்காமலிருக்க முடியவில்லை. எப்படி அவரால் அந்தச் சமயத்தில் கடுப்பின்றிச் சிரிக்க முடிந்தது? உண்மையிலேயே பெரிய மனிதர். கடைசியில் மூன்று மணி நேர சித்ரவதைக்குப் பிறகு வெளியில் வாரியிறைத்த துணிகளை பெட்டியில் அடைக்க முயன்று, அது முடியாமல் ஒரு பெட்ஷீட்டில் தனி மூட்டையாகக் கட்டி அதை சுமந்து கொண்டு புன்சிரிப்பு மாறாமல் ஏர்போர்ட்டுக்க வெளியே காத்திருந்த காருக்கு நடந்து போனார்- பிற்காலத்தில் பிரதமராகப் போகும் அந்த முன்னாள் பிரதமரின் மகன்.

இந்தச் சம்பவம் சென்னை விமானநிலையத்தில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் வாரிசு ஒருவருக்கு நேர்ந்தால் என்னாகும் என்று ஒரே ஒரு கணம் நினைத்தப் பாருங்கள். தன் ஓட்டை மோட்டார் பைக்கல் தப்பாக ஓன்வேயில் ‌போய் போலீஸ்காரரிடம் மாட்டிக் கொண்ட என்னைப் போன்ற பொதுஜனம், ‘‘நான் யாரு தெரியுமில்லே... 17வது வார்டு கெளன்சிலருக்கு ஒண்ணுவிட்ட மாமனோட சித்தப்பா எனக்கு மச்சான் முறை. கமிஷனருக்கு போன் போடுய்யா’’ என்று சொல்கிற இந்தக் காலத்தில் ஒரு வித்தியாசமான உண்மைக் காட்சிக்கு நான் ஒரு சாட்சி.

-‘பல நேரங்ளில் பல மனிதர்கள்’ புத்தகத்திலிருந்து. எழுதியவர்: பாரதி மணி.

=======================================

‘‘சமீபத்துல தொடர்ந்து ஹாலிடேவா வந்துச்சா... ஃபுல்லா வாங்கிவச்சு சரக்கு இன்னும் தீரலப்பா... மப்பும் இன்னும் தெளிய மாட்டங்குதுப்பா...!’’



=======================================

கரு்த்துப் பெட்டிக்கு சமீபத்தில் இருக்கீங்க. புடிச்சிருந்துச்சான்னு சொல்லிட்டுப் போங்க. ஹி... ஹி...

Monday, January 21, 2013

மூ்ன்று சந்தோஷ நிகழ்வுகள்!

Posted by பால கணேஷ் Monday, January 21, 2013

19.01.2013 சனி்க்கிழமை அன்று கவிஞர் சத்ரியன் புத்தகக் கண்காட்சிக்கு வருவதாகச் சொல்லியிருந்ததால் மதியம் 2 மணிக்கு ‌அங்கு சென்றேன்.நான் கிளம்புவதற்கு முன்பே செல்வி சமீரா போன் செய்து தான் பு.க.வில் இருப்பதாகச் சொல்ல, அவரை ‘டிஸ்கவரி’க்கு வரச் சொல்லியிருந்தேன். தம்பி சத்ரியனைச் சந்தித்து பேசி மகிழ்ந்தபோது சமீரா வர, அவரை அறிமுகம் செய்தேன். அப்‌போது ‘தென்றல்’ வீசியது. சசிகலா வந்தாங்க. பேசிக்கிட்டே ஸ்டாலை விட்டு வெளில வந்தா... நம்ம ‘மூவர் குழு’. அதாங்க... மெட்ராஸ்பவன் சிவகுமார், அஞ்சாஸிங்கம் செல்வின், பிலாசபி பிரபாகரன். மூவர் அணியோடவே பு.க.வுல வாஙகின புத்தகங்களோட கனமான பல பைகளைச் சுமந்துக்கிட்டு ‘கனமான’ மனிதர் ஆரூர் மூனா செந்தில்! (பதிவர் திருவிழா சமயத்துல இவரை வெச்சு ஒரு சர்ச்சைக் கிளப்புனவங்க, ஆர்வமா இத்தனை புத்தகங்களைப் வாஙகிப் படித்து ரசிக்கற அவரோட நல்ல பழக்கங்களை பாராட்டி கொஞ்சம் கை குலுக்குங்கப்பா). பட்டிக்காட்டான் ஜெய் வந்திருந்தார்.

இந்த நேரத்துல கேபிள் சங்கர் வந்து சேர ஜமா களை கட்டிருச்சு. அடுத்த நபரா வந்து கை குலுக்கினாரு நம்ம டி.என்.முரளிதரன். எங்க சுவாரஸ்யமான பேச்சு சத்தத்தோட டெஸிபல் கொஞ்சம் கூடினப்ப முதுகி்ல் தட்டியது ஒரு கை. திரும்பினால்... கவியாழி கண்ணதாசனும், புலவர் இராமானுசம் ஐயாவும்! அவங்களைப் பாத்த சந்தோஷத்துல எல்லாரும் பேசிட்டருக்கறப்ப அதகளமா என்ட்ரி குடுத்தாரு கவிஞர் மதுமதி. அப்புறம் தமிழ்ராஜா,. கவிஞர் பத்மஜா, தமிழரசின்னு எல்லாரும் வந்து சேரவும் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கோட வாசல்ல ஏதோ தனி பதிவர் சந்திப்பு ஏற்பாடு பண்ணாமலேயே தன்னிச்சையா நடந்துடுச்சுங்க.

 சட்டுன்னு ‘எக்ஸ்பிரஸ்’ ஐடியாவா, தம்பி சத்ரியனோட ‘‌கண்கொத்திப் பறவை’ புத்தகத்தை புலவர் ஐயா வெளியிட, என் ‘சரிதாயணம்’ புத்தகத்தை நண்பர் கேபிள் சங்கர் வெளியிட வெச்சு புகைப்படங்கள் எடுத்து சந்தோஷப்பட்டுக்கிட்டோம். ரெண்டு மூணு பதிவர் சந்திச்சாலே பேச்சும், சிரிப்பும், கேலியும் கிண்டலும் அமர்க்களப்படும். இத்தனை பேர் சந்திச்சா அந்த இடம் எப்படி இருந்திருக்கும்னு நீங்களே கற்பனை பண்ணிக்குங்க.

மாலை 5.30 மணிக்கு நான் நண்பர்களிடமிருந்து (பிரிய மனமின்றி) வி‌டைபெற்றுக் கிளம்பினேன்- மற்றொரு முக்கிய நிகழ்வுக்குச் செல்ல வேண்டியிருந்ததால். அப்படி‌ என்ன முக்கிய நிகழ்வுன்னு கேக்கறீங்களா? ‘பாட்டி சொன்ன கதை’ ருக்மணி சேஷசாயி அவர்களை உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அவங்களோட 75வது பிறந்ததினமான அன்று மா‌லை 5.30க்கு ‘ஒரு ஃபேமிலி கெட்டுகெதர்’ அரேன்ஜ் பண்ணியிருந்தாங்க. அந்த ஃபங்ஷனை அட்டெண்ட் பண்ணத்தான் அவசரமா போக வேண்டியதாயிடுச்சு. அது மற்றோர் ஆனந்த நிகழ்வு. அவங்களோட பல பரிணாமங்களை மேடையில் ஒவ்வொருவரும் அவரைப் பத்திப் பேசறப்ப புரிஞ்சக்கிட்டேன்.

ஏழு சகோதரர்களுக்கிடையில பிறந்த இவங்க, கல்யாணத்துக்கு அப்புறம்தான் தீவிரமா, படிப்பு எழுத்துல ஈடுபட்டிருக்காங்க. இளங்கலை பட்டம், முதுகலைப் பட்டம் பெற்று, ஆசிரியர் பயிற்சியும் முடிச்சு ஆசிரியப் பணி. 27 நூல்கள் இதுவரை எழுதி வெளியிட்டிருக்காங்க. எப்படியும் 50 ஆக அதை உயர்த்திவிட வேண்டும்னு ஒரு லட்சியம் இருக்காம். இப்பவே என் அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள்மா! ஆன்மீகத்துல தீவிர ஈடுபாடு உள்ளவங்க இவங்க. விழாவை அவரோட சகோதரர் பாண்டுரங்கன் தொகுத்து வழங்க, இடையிடையே நகைச்சுவையா பேசி கலகலப்பூட்டினார் ருக்மணியம்மாவோட மகன் ரங்கநாதன். கலகலப்பான அந்தக் குடும்ப விழாவுல கலந்துக்கிட்டு திரும்பி வருகையில் மனசெல்லாம் மகிழ்ச்சியால நிறைஞ்சிருந்தது. இந்த விழாவை எனக்கு நினைவூட்டி, அவசியம் செல்லும்படி உந்துதல் கொடுத்த ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு மனசு நிறைய நன்றி!

20.1.2013 ஞாயிற்றுக்கிழமை- ‘டிஸ்கவரி’ல வெச்சிருந்த ‘சரிதாயணம்’ புத்தகம் விற்றுத் தீர்ந்து விட்டதால் மேலும் பிரதிகளைக் கொண்டு வைப்பதற்காக காலையில் புத்தகக் கண்காட்சிக்கு (மறுபடி) போக வேண்டியிருந்துச்சு. புத்தகங்களைக் ‌கொடுத்துட்டு, ரெண்டாவது ரவுண்ட் பர்ச்சேஸ் பண்ணினப்ப, குடந்தையூரார் ஆர்.வி.சரவணன் வந்தார். அவரோட பேசிக்கிட்டே பர்ச்சேஸிங் முடிச்சுட்டு லன்ச் டயத்துல வீட்டுக்குக் கிளம்பினேன். ஒரு சிறு ஓய்வுக்குப் பின் தயாராகி மாலையில் நண்பர் திரு.பாலஹனுமான் (என்கிற ஸ்ரீனிவாசன்) அவர்களின் மகள் மீராவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குப் புறப்பட்டேன். துளசி டீச்சரின் ஃபங்ஷன் நடந்த அதே உட்லண்ட்ஸ் ஹோட்டல்ல லான்லயே அரேன்ஜ் பண்ணியிருந்தாங்க. நண்பர் மோகன்குமார் ‌நேரே அங்கே வந்துடறதாச் சொல்லியிருந்தார்.

உள்ளே நுழைஞ்சதுமே அருமையான கர்நாடக சங்கீத நிகழ்ச்சி நடந்துக்கிட்டிருந்துச்சு. நண்பர் ஸ்ரீனிவாசன் மகிழ்வாய் கை குலுக்கி வரவேற்றார். நமக்குத் தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களான்னு கண்ணால ஸ்கேன் பண்ணிட்டே வந்தா... மு்ன் வரிசையில உக்காந்து சங்கீதத்தை ரசிச்சுக்கிட்டிருந்தாரு ‘பாட்டையா’ பாரதி மணி ஐயா. அவர் பக்கத்துல போய் உக்காந்து கொஞ்ச நேரம் பேசிட்டிருந்தேன். என் முதல் புத்தகத்தை அவரிடம் கொடுத்து ஆசி பெற்றேன். கொஞ்‌ச நேரத்தில் கடுகு ஸாரும், கமலா அம்மாவும் வந்தாங்க. கடுகு ஸார்ட்ட பேசிட்டிருக்கறப்ப, எழுத்தாளர் என்.சொக்கன் தன்னுடன் வந்ததா சொன்னார். அவ்வளவுதான்... சொக்கன் ஸாரை எனக்கு அறிமுகம் பண்ணி வைங்கன்னு அவரைப் போட்டு தொணப்ப ஆரம்பிச்சுட்டேன். கடுகு ஸார் எழுந்து அவரே சொக்கன் ஸாரைத் தேடி அழைத்து வருவதாகச் சொல்லி எனக்காக மண்டபம் பூராவும் நடந்தார். சிறிது நேரத்தில் கண்டேன் என்.சொக்கன் அவர்களை!

சொக்கன் ஸார்கூட இமெயில், ட்விட்டர், பேஸ்புக் மாதிரி விஷயங்கள் மூலமா நல்ல அறிமுகம் உண்டு என்றாலும் நேரில் சந்திக்கற மகிழ்ச்சியே தனிதான் இல்லையா...! நான் ரசித்த அவர் எழுத்துக்களைச் சொல்லி, ‘சரிதாயணம்’ அவரிடம் தந்து (அவரை மட்டும் தப்பிக்க விட்ரலாமா? ஹி... ஹி...) நேரம் போவதே தெரியாமல் உரையாடிக் கொண்டிருந்தோம். பாலஹனுமான் மூலமாக மற்றொரு நல்லறிமுகம் நேற்று கிடைத்தது. அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘தென்றல்‘ இதழின் ஆசிரியர் திரு.அரவிந்த் ஸ்வாமிநாதனை அறிமுகப்படுத்தினார். சமீபத்தில்தான் சில ‘தென்றல்’ இதழ்களைப் படித்துப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருந்ததால் அவற்றைப் பற்றி அவருடன் பேசினேன்.

‘தென்றல்’ இதழை ஆன்லைனிலும் படிக்கலாம் என்று அதற்கான வழி சொல்லித் தந்தார் அரவிந்த். சிறந்த பத்திரிகை ஆசிரியர் மட்டுமின்றி ஆன்மீக ஈடுபாடு கொண்டவர், பல புத்தகங்கள் எழுதியவர் என்பதால் நாங்களனைவரும் சேர்ந்து பேச்சு சுவாரஸ்யமாகவே சென்றது. புகைப்படங்களை என்.சொக்கன் ஸாரின் (நல்ல) மொபைலில் எடுத்துக் கொண்டோம். (அவர் படங்ளை மடலிட்டதும் அவையும் பகிரப்படும்.) சற்று நேரத்தில் நண்பர் மோகன்குமாரும் வந்து சேர்ந்து கொண்டார். மேடையில் சங்கீதக் கச்சேரி முடிந்த பின்னும் இங்கே அரட்டைக் க்ச்சேரி நடந்தது. மணமக்களை வாழ்த்திவிட்டு, உணவருந்திவிட்டுக் கிளம்புகையில் வாட்ச்சில் மணி 9.45. ‘வீடு திரும்பல்’ பொருட்டு மோகன்குமாரை தி.நகரில் ட்ராப் செய்து விட்டு வீடு திரும்பினேன்.

-ஆக...கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து மூன்று சந்தோஷ நிகழ்வுகள் என்னை மகிழ்ச்சியில் பூரிக்க வைத்தன. (‘‘ஏற்கனவே எனக்குப் போட்டியா உப்பிட்டு வர்றீங்க. பாத்து... வெடிச்சுடாம...’’  என்று சிரிக்கிறாள் சரிதா. ஹி... ஹி...) உடனே உங்க எல்லார் கிட்டயும் ஷேர் பண்ணிக்கணும்னு ஆசை வந்துச்சு. டைரி எழுதற பழக்கத்தை உண்டாக்கிக்கணும்னும் எனக்கு ஒரு ஆசை இருந்துச்சு. ஸோ.... டூ இன் ஒன் பதிவா இந்த என் டைரிக் குறிப்பை உங்களுக்குத் தந்துட்டேன். பொறுமையாப் படிச்ச உங்களுக்கு ஸ்‌பெஷல் தாங்க்ஸ்!

Friday, January 18, 2013

நாடோடி, மன்னனான கதை!

Posted by பால கணேஷ் Friday, January 18, 2013
 
னவரி 17 - மக்கள் திலகத்தின் பிறந்த தினமான நேற்று வெளியிட்டிருக்க வேண்டிய இப்பதிவு இன்று வெளியிடப்படுகிறது. புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் எம்.ஜி.ஆர். இந்தப் புத்தகத்தில் நாடோடி மன்னன் படத்தில் திரைக்குப் பின்னும், திரைக்கு முன்னும் பங்கு பெற்ற அத்தனை கலைஞர்களைப் பற்றியும் படம் உருவானதைப் பற்றியும் அழகாகச் சொல்லியிருக்கிறார். 88 பக்கங்கள் கொண்ட, 50 ரூபாய் விலையுள்ள இந்தப் புத்தகம் நாதன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு நான் டிஸ்கவரி புக் ஸ்டாலில் (43, 44) வாங்கினேன். ஒரே மூ்ச்சில் படிக்க வைத்த இந்த சுவாரஸ்ய புத்தகத்தில் எனக்குப் பிடி்த்த சந்திரபாபுவைப் பற்றி வாத்யார் சொல்லியிருப்பதில் ஒரு பகுதி இங்கே:

                       சகாயமாக சாதித்த சந்திரபாபு

காயம்! இந்தப் பெயரின் கருத்தே உதவி என்பதுதான். உதவியில் பல வகையுண்டு. ஆனால் இந்தப் பெயரினால் கிடைத்திருக்கும் உதவி சாமான்யமானதல்ல. கதையின் குறிப்பிடத்தக்க பாத்திரமாக இருக்கும் நாடோடிக்கு உதவி செய்வதில் சில நேரங்களில் ஆபத்தையே ஏற்படுத்திக் கொடுப்பவர் சகாயம். ஆனால் அதனால் ஏற்படும் விளைவு நன்மையாகவே இருக்கும். தனது தேவை முதலில், அதே நேரதத்தில் பிறரைக் கண்டு அனுதாபம். எதைக் கண்டாலும் திகைப்பு; ஆனால் எதனைப் பற்றியும் அலட்சியம், எதிலும் பயம்; ஆனால் எதிலும் விருப்பம், காதலும் வேண்டும், அது கஷ்டமின்றியும் கிடைக்க வேண்டும். இப்படி குழப்பமான குணம் படைத்த பாத்திரம்தான் சகாயம். இதை ஏற்று நடிப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. சந்திரபாபு அவர்களின் திறமைக்கு இதுபோன்ற எந்தப் பாத்திரமும் மிகச் சாதாரணம் என்ற வகையில் நிறைவேற்றியிருக்கிறார்.

நடிகர்கள் பாத்திரத்திற்கு ஏற்படுத்தியிருக்கும் செய்கைகளை புதிய விதமாகச் செய்ய வேண்டும், நடிக்க வேண்டும் என்றுதான் டைரக்டரோ, கதையாசிரியரோ விரும்புவார்கள். ஆனால் சந்திரபாபு அவர்கள் நடிக்கும் போது மட்டும் புது மாதிரியாகச் செய்கிறேனென்று சந்திரபாப அவர்கள் சொல்லாமலிருக்க வேண்டும் என்பதைத்தான் எல்லாரும் விரும்புவார்கள். அவ்வளவு ஆர்வத்தோடு நடிப்பவர் சந்திரபாபு அவர்கள். நடிப்பதில் (எத்தகையதாயிருந்தாலும்) தனக்கெனத் தனிச் சிறப்பு ஏற்படுத்திக் கொள்ளத் தயங்காதவர். அதற்காகத் தனக்கு எந்த ஆபத்து வரினும் பொருட்படுத்தாதவர். இதனால்தான் இவரைப் பற்றி நாங்களெல்லோரும் பயந்து கொண்டேயிருப்போம்.

ஆனால் என்னோடு பழகிய வரையில் அவருக்குத்‌ தன் விருப்பத்தைத் தடுப்பது பிரியமில்லாததாயிருப்பினும் மறுத்துக் கூறாமல் நடித்துக் கொடுத்தார் அவர். மேலேயிருந்து குதிப்பேன் என்பார். எனக்கு நன்கு தெரியும்- அவரால் சரிவரக் குதிக்க முடியும் என்று. ஆனால் சிலசமயம் புதுவிதமாக குதிப்பதாகச் சொலலி திடீரென்று ஆபத்து நேரும் விதத்தில் குதித்து விடுவார். மரக்கிளை ஒடிந்து விழும் காட்சியில் எவ்வளவு சொல்லியும் கேட்க மறுத்தார். கடைசியில் அந்தக் காட்‌சியே வேண்டாமென்று சொல்லிவிடலாமா என்ற நிலைக்கு வந்த பிறகு மெள்ள விழுவதாக ஒப்புக் கொண்டார். ஆயினும் எனக்குப் பயம்தான்.

இப்படி அவரைப் பொறுத்தவரையில் பொறுப்பைத் தட்டிக் கழித்து விடுவாரோ என்ற அச்சத்திற்கு மாறாக, பொறுப்பை நல்ல முறையில் நிறைவேற்ற வேண்டுமென்ற கடமை உணர்ச்சியினால் அவருக்கு ஆபதப்து ஏற்பட்டு விடக் கூடாதே என்று கலங்கியபடியே இருக்க வேண்டும்.

ருநாள் வெளிக்காட்சி எடுத்துக் கொண்டிருந்தேன். சந்திரபாபு அவர்களும் நடிக்க வேண்டிய கட்டம். குதிரைகள் போகும் காட்சியைப் படமாக்கும் போது ஒரு குதிரை சொன்னபடி கேட்காமல் தொல்லை கொடுத்தது. சிறிது நேரம் அதை ஓட்டி, ஒழுங்குக்குக் கொண்டு வந்து குறிப்பிட்ட நடிகரிடம் கொடுத்து ஓட்டச் செய்து படப்பிடிப்பை முடித்தேன். அதற்குள் சந்திரபாபு அவர்கள் தயாராகி விட்டதால், அவர் சம்பந்தப்பட்ட ஷாட்டுக்கு ஏற்பாடு‌ செய்து கொண்டிருந்தேன்.  பாபுவும் வந்தார்; ஏற்பாட்டைக் கண்டார். பத்து நிமிடங்களாவது ஆகும் என்றறிந்தார். முரட்டுத்தனம் செய்து அடக்கியிருந்த குதிரையின் மீது ஏறப் போனார். நான் தடுத்தேன்- அந்தக் குதிரை சரியில்ல என்று. ‘சிறிது நேரம் இங்கேயே சுற்றுகிறேன்’ என்றார். நான் குதிரைக்காரனிடம் எச்சரித்து, குதிரையுடனேயே லகானைப் பிடித்தபடி போகச் சொல்லிவிட்டு வந்தேன். ஐந்து நிமிடங்கள்கூட ஆகியிராது. சிலர் ஓடிவந்து சந்திரபாபு அடிபட்டுக் கீழே விழுந்து விட்டார். எம்.ஜி.ஆரிடம் சொல்லுங்கள் என்று சொல்லி மயக்கமடைந்து விட்டார் என்றனர். என்னால் எதுவும் கற்பனை செய்யவே முடியவில்லை. எப்படியோ... பழைய சந்திரபாபு அவர்களாகவே இருக்கிறார் நலனோடு.

அவரிடம் ஒருநாள் என் மனம்விட்டுச் சொன்னேன். இந்த வார்த்தை அவருக்கு மட்டுமல்ல, தென்னகக் கலைஞர்களுக்கு, குறிப்பாகத் தமிழகக் கலைஞர்களுக்கு மிகமிகத் தேவையான விளக்கம் என்று கருதுவதால் அதை இங்கே குறிப்பிடுவது சரியென்று கருதுகிறேன்.

‘‘சந்திரபாபுவின் திறமையை மக்கள் போற்றுகிறார்கள், புகழுகிறார்கள் என்றால் அந்தச் சந்திரபாபு தன்னிடமிருக்கும் கலைத்திறனை எத்தனை தொல்லைகளுக்கிடையில், எத்தகைய எதிர்பார்ப்புகளுக்கிடையில் தெரிந்து கொண்டிருப்பார். அதற்காகப் பாடுபட்ட நாட்கள், மாதங்கள், வருடங்கள் எத்தனை? எத்தனையோ... அவைகளை எல்லாம் ஒரே நாளில் நினைத்ததும் பெறமுடியாத அந்த மகத்தான கலைத் திறமையையெல்லாம் ஒரே வினாடியில் இழந்து விடும் நிலைக்கு மக்களைக் கொண்டு வருவது மக்களுக்குச் செய்யும் மகத்தான துரோகமாகும்’’
என்றேன். மக்களுக்கு மகிழ்ச்சியை மட்டும்தான் கொடுக்கிறோம்; அறிவைக் கூட அல்ல என்று வாதிப்பவர்கள் கூட இந்த இழப்பை விரும்ப மாட்டார்கள்.

‘‘கலைஞர்கள் இல்லையே என்று ஏங்கும் மக்களுக்கு இருக்கும் கலைஞர்களையும் இல்லாமற் செய்வது சரியல்ல’’ என்றேன். இதை அவர் நன்குணர்ந்தார் என்பதற்கு அவர் விட்ட கண்ணீரே சாட்சியாக இருந்தது. ‘‘எனக்கு நீ என்ன உபதேசம் செய்வது?’’ என்று அவரால் கேட்க முடியும். கேட்கக் கூடியவரும் கூட. ஆனால் என்னிடம் கேட்கவில்லை. இதில் மட்டும் என்று எண்ணி விடாதீர்கள்; தொழிலிலும் கூட.

-இதன்பின் வாத்யார் வேண்டாமென வற்புறுத்தியும் கேளாமல் வாயிலிருந்து கோழிக்குஞ்சை வரவழைப்பதபற்காக சந்திரபாபு பட்ட கஷ்டங்களையும் அவரின் தீவிர ஈடுபாடு மிக்க கலைத்திறன் பற்றியும் மக்கள் திலகம் புகழ்‌ந்து எழுதியிருப்பதையும் மற்ற சுவாரஸ்ய விவரங்களையும் விவரித்தால் பதிவு நீண்டுவிடும் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்.

Wednesday, January 16, 2013


ன்னுடைய ‘சரிதாயணம் @ சிரிதாயணம்’ புத்தகததிற்கு நூல் வெளியீட்டு விழா நடத்த இயலாமல் போய் விட்டதே என்று ஒரு ஏக்கம் மனதுக்குள் இருக்கத்தான் செய்தது. அந்தக் குறையை நிவர்த்தி செய்து மகிழ்ச்சியைத் தந்தார் ‘சிரிப்பானந்தா’ என்ற பெயரில் அறியப்படும் திரு.சம்பத்குமார். நான் அவரிடம் ‘சரிதாயணம்’ புத்தகத்தை அளித்து, படித்துக் கருத்துக் கூறும்படி கேட்டிருந்தேன். ‘‘ஜோக்ன்ற வார்த்தைய ‌சொன்னாலே சிரிக்கற ஆசாமி நான். நகைச்சுவை கதைகள்னு வேற சொல்றீங்க. அவசியம் படிக்கறேன்’’ என்று சொல்லிச் சென்ற அவர், கதைகளை படித்து ரசித்து, என்னைத் தொடர்பு கொண்டு புத்தகக் கண்காட்சியின் மூன்றாவது தினமான ஞாயிறன்று (போகியன்று) அம்பத்தூரில் மாலையில் நடைபெறவிருந்த சிரிப்பரங்கத்தின் மாதாந்தரக் கூட்டத்திற்கு என்னை அழைத்தார். அங்கே அவரது சிரிப்பரங்க உறுப்பினர்களுக்கு என் புத்தகம் பற்றிப் பேசி அறிமுகம் செய்யவிருப்பதாகச் சொன்னார்.

காலை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். கோவையிலிருந்து தங்கள் புத்தகங்களுடன் வந்திருந்த நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு மதியம் 2.45க்கு அங்கிருந்து கிளம்பினேன்- நண்பர்கள் சீனுவையும், அரசனையும் உடனழைத்துக் கொண்டு. என் பதி்ப்பாளர் பிரகாஷ், வடபழனியிலிருந்து நேராக அம்பத்தூர் வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தார். நாங்கள் பேருந்தில் ஏறிச் சென்று கொண்டிருந்தபோது, தொலைபேசியில் அழைததார் ஸ்ரீராம். தான் புத்தகக் கண்காட்சியில் இருப்பதாக அவர் கூற, நாங்கள் விழாவுக்குச் சென்று கொண்டிருப்பதை அவரிடம் ‌சொன்னேன். நேரில் சந்தித்து அளவளாவி மகிழும் வாய்ப்பு போய்விட்டதே என்று ரொம்பவே வருத்தமாக இருந்தது.

ஏற்கனவே சிரிப்பரங்கத்தி்ன் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அனுபவசாலியான சீனு, எங்களை சரியாக வழிநடத்திச் சென்றார். சிரிப்பரங்கம் துவங்குவதற்கு முன்பு, தலைமை ஏற்பவரை மேடைக்கு அழைத்த சிரிப்பானந்தா, அடுத்து, ‘‘எழுத்தாளர் பாலகணேஷ் அவர்களையும், பதிப்பாளர் பிரகாஷ் அவர்களையும் சிறப்பு விருந்தினராக மேடைக்கு அழைக்கிறேன்’’ என்றார். ஆனந்த அதிர்ச்சியாகிப் போனது எனக்கு. ‘‘என்னை நல்லவேன்னு சொல்லிட்டாங்கம்மா...’’ என்று வடிவேலு புலம்புகிற தினுசில், ‘‘என்னை எழுத்தாளர்ன்னு சொல்லிட்டாங்கய்யா...’’ என்று மனஸ் உள்ளே குதியாட்டம் போட்டது. பாவம்...! ஆட்டுக்கு எப்பவுமே முதலில் அலங்காரம் பண்ணி மாலை போடுவார்கள் என்பது அதற்குத் தெரிந்தால் தானே...

சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு வந்து தங்களுக்குத் தெரிந்த ஜோக்குகளை சொல்லி சபையைச் சிரிக்க வைக்க வேண்டும் என்பது வழக்கமான ஒன்றாம். உறுப்பினர்கள் ‌அழைக்கப்பட்ட வரிசையில் வந்து சொல்லத் தொடங்கினர். சில ஜோக்குகள் பழையவையாக இருந்தன. சில புதிதாகச் சொல்லப்பட்டவையாக இருந்தன. இருந்தாலும் அனைவரும் எல்லா ஜோக்குகளுக்கும் சிரித்து உற்சாகப்படுத்தினார்கள். (ஒருவேளை சிரிக்காவிட்டால் சிரிக்கும்வரை இவர் ஜோக் சொல்லிக் கொண்டே இருப்பாரோ என்பதாலும் இருக்குமோ? ஹி... ஹி....)

மேடையில் அமர்ந்து கொண்டு ஜாலியாக ஜோக்குகள் கேட்டு சிரித்துக கொண்டிருந்த எனக்கு பாக்ஸிங் புலி முகம்மது அலி போல ஒரு ‘பன்ச்’ கொடுத்தார் சிரிப்பானந்தா.  நான்கைந்து உறுப்பினர்கள் ‌பேசியதும், ‘‘இப்போது ‘சரிதாயணம்’ங்கற புத்தகத்தைப் பத்தி சொல்லப் போறேன். அது முடிந்ததும் தலைவர் உரையாற்றுவார். பின் சிறப்பு விருந்தினர்கள் உரை நிகழத்துவார்கள். பின் மற்ற உறுப்பினர்களின் சிரிப்பைத் தொடரலாம்’’ என்றதும் நான் ‘ழே’ என்று விழிக்க ஆரம்பித்தேன். ‘‘ம்மே... ம்மே...’’ என்று மிரண்டு போய் அலறியது மனஸ்!

ஸ்கூல்ல படிக்கறப்பவே பேச்சுப் போட்டிக்கு பேர் கொடுத்துட்டு, ஸ்டேஜுக்குப் ‌போனதும் மைக்கையும், எதிர்லருக்கற மக்களையும் பார்த்து கை, கால் உதறி, பேச்சே வராம ‘திருதிரு’ன்னு முழிச்சுட்டு பேசாமலேயே எஸ்கேப்பான மாவீரன்(!) நான். என்னைப் போய் சிறப்பு உரை ஆத்துவாருன்னு சொல்லிட்டாரே... என்னத்தை ஆத்தறது?ன்னு புரியலையே... என்று எண்ணியபடி பதிபபாளர் பிரகாஷைப் பார்த்தேன். அவர் வாழ்க்கையைப் படித்தவர், மனிதர்களைப் படித்தவர், ஆனால் பள்ளிக்குச் சென்று அதிகம் படிக்காதவர் என்பதால் அவர் என்னைவிட மோசமாக விழித்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

அங்கே சிரிப்பானந்தா புத்தகம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். என் கதைகளைப் புகழ்ந்து தள்ளினார். கதையில் வரும் பல (எனக்கே தெரியாத) நல்ல அம்சங்களை ரசித்து,  நுணுக்கமாக அவர் விவரித்தபோது, சற்றே கூச்சத்தால் நெளிய வேண்டியிருந்தது. அவர் பேசினதும் வந்திருந்த உறுப்பினர்களில் பெரும்பாலானவங்க புத்தகத்தின் ஒரு பிரதியை வாங்கிக்கிட்டாங்க. சிரிப்பரங்க உறுப்பினர்கள் எல்லாரும் ரொம்ப ரொம்ப நல்லவங்க. ஹி... ஹி.... அதன்பின் தலைமையுரை நடக்க ஆரம்பித்தது.

என் மனசுக்குள் நாம என்ன பேசி ஒப்பேத்தப் போறோம் என்கிற சிந்தனை ஓடிட்டிருந்தது. தலைமையுரைக்குப் பின் பதிப்பாளர் பிரகாஷைப் பேசச் சொல்ல, ‘‘நான் ரொம்ப வருஷமா நிறைய புத்தகங்கள் போட்டுக்கிட்டிருக்கேன். ஒரு நகைச்சுவைப் புத்தகம் வெளியிடணும்னு ரொம்ப நாள் எண்ணம். பாலகணேஷ் எனக்கு நீண்டகால நண்பர். இவர் நகைச்சுவைச் சிறுகதைகள்னதும் உடனே வெளியிட்டுட்டேன். உங்க எல்லாருக்கும் நன்றி’’ அப்படின்னு நம்ம பிலாசபி பிரபாகரன் பேசற மாதிரி நாலே வார்த்தை பேசிட்டு ‘எஸ்’ஸாயிட்டாரு.

இவங்க பேசற நேரத்துக்குள்ள யோசிச்சு ஒரு மாதிரியா தயாராயிருந்தேன். நான் முன்ன எழுதின ‘இரட்டைப் புலவர்கள்’ மேட்டர்லருந்து ஒண்ணையும், ‘சிலேடைச் சிதறல்கள்’லருந்து ஒண்ணையும், ரெண்டு நாள் முன்னாடி படிச்ச முனைவர் கு.ஞானசம்பந்தன் புத்தகத்திலிருந்த மூணு ஜோக்குகளையும் எடுத்து, அந்த உதிரி ஜோக்குகளை வார்த்தைப் பூக்களால இணைச்சு ஒரு மாலையா மனசுக்குள்ள தயாரிச்சு வெச்சிருந்தேன். அதை கடகடன்னு மைக் முன்னாடி ஒப்பிச்சேன். குரல்ல கொஞசம் தடுமாற்றம் வேற.

நான் பேசி முடிச்சு மேடைய விட்டு இறங்கினதும், சற்றே பருமனான ஒரு பெண்மணி என்னை‌ நோக்கி அடிக்க வருபவர் போல வேகமாக வந்தார். முன்பே மேடைக்கு வந்து, பிஸ்கட், காபி எல்லாம் கொடுத்து ‘கவனித்தது’ அவர்தான் -இப்போது வரும் வேகத்தைப் பார்த்தால் நம் பேச்சுக்காக ‘கவனித்து’ விடுவாரோ என்று உதறல் எனக்கு. அருகில் வந்தவர், ‘‘மேடையில பேசினதே இல்லை, முதல் அனுபவம்னு சொல்லிட்டு அருமையாப் பேசி அசத்திட்டீங்க. சூப்பர்’’ என்று கை கொடுத்தாரே பார்க்கலாம்! ஹப்பாடா...! ‘‘அட... நமக்கும் ஒரு ரசிகையா... அவ்வ்வ்வ!’’ என்று மனஸ் குட்டிக்கரணமடிக்க, சந்தோஷமாகக் நன்றி சொன்னேன்.

விழாவுக்குக் கிளம்புகையில், பு.கண்காட்சியில் அன்று கூடியிருந்த நண்பர்கள் படையுடன் இருக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும், திரும்புகையில் பல பிரதிகள் புத்தகம் விற்று பலரைச் சென்றடைந்து விட்ட சந்தோஷமும், ‌ஜோக்குகள் கேட்டு மகிழ்ந்த அனுபவமும் சேர்ந்து கொள்ள, திரும்புகையில் மனஸ் மகிழ்ச்சியில் நிரம்பியிருந்தது. இந்த மகிழ்ச்சிக்கு முழுக்க முழுக்க காரணமான சிரிப்பானநதா அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி. (நிச்சயம் இந்த வார்த்தை என் உணர்வுகளை வெளிக்காட்டுவதாகாது. அதற்கும் மேல் மனஸ் தளும்பிக் கொண்டிருக்கிறது).

சிரிப்பரங்கத்துக்கு எனக்கு வழிகாட்டியா செயல்பட்டதோட இல்லாம, விழாவு்க்கு அழைச்சுட்டுப் போய் அங்கருந்து நான் புறப்படற வரைக்கும் என்கூடவே இருந்து உதவின, திடங்கொண்டு போராடும் ‘சீனு’, பொங்கலுக்கு ஊருக்குப் புறப்படற அவசரத்தில புத்தகக் கண்காட்சில சுற்றுவதைப் புறக்கணித்து எனக்காக என்னுடன் வந்து விழா முழுவதும் உடனிருந்த ‘கரைசேரா அலை’ அரசன் இருவருக்கும் என் மனம் நிறைய நன்றி!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube