Saturday, January 12, 2013

அலிபாபாவும் 40 திருடர்களும்!

Posted by பால கணேஷ் Saturday, January 12, 2013
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1956ம் ஆண்டு வெளிவந்த முதல் தமிழ் (கேவா) கலர்ப் படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. எம்,ஜி.ஆர்., பானுமதி, பி.எஸ்.வீரப்பா, தங்கவேலு ஆகியோர் நடித்த இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டு ரசித்திருக்கிறேன். இதுவரை படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததில்லை என்பதால் சமீபத்தில் அந்த வாய்ப்புக் கிட்டியபோது ஆர்வமுடன் பார்க்கத் துவங்கினேன்.

டத் துவக்கத்தில் ‘அழகான பொண்ணு நான்’ என்று பானுமதி ஆடிப் பாடுகிறார். அழகான பொண்ணு என்றால் ஆபத்து வராமல் இருக்குமா? பாடி முடித்ததும், குறுநில மன்னன் ஷேர்கானின் ஆட்கள் அவரை இழுத்துச் செல்லப் பார்க்கிறார்கள். அவர் மறுக்கவே சவுக்கால் அடிக்கின்றனர். ஜனங்களெல்லாம் (வழக்கம்போல்) வெறுமனே வேடிக்கை பார்க்க, பானுமதியுடன் இருக்கும் குட்டையான காமெடியன் தடுக்கப் பார்க்க, தள்ளி விடுகின்றனர். பாவம்... கல்கியின் ஆழ்வார்க்கடியான் சைஸில் இருக்கும் அவரால் என்னதான் செய்துவிட முடியும்..? ‘காப்பாத்துங்க’ என்று கதறுகிறார். இப்படி ஒரு அநியாயம் நிகழ்வதைக் கண்டு இயற்கை பொறுக்குமா? அது அவரின் அபயக்குரலை புரட்சித்தலைவரின் திருச்செவிகளில் விழச் செய்துவிட, அவர் என்ட்ரியாகி அனைவரையும் சண்டையிட்டுத் துரத்துகிறார். ஆஹா... எத்தனை படங்களில் பார்த்தாலும் சலிக்கவே சலிககாதது வாத்யார் போடும் வாள் சண்டை. (‘‘நாம படம் பாக்கக் கொடுத்த 50 ரூபாய் -டிவிடிக்கு- இதுக்கே செரிச்சுடுச்சு போ’’ என்றது மனஸ்.)

அப்புறமென்ன... பானுமதிக்கு வாத்யாரின் மேல் இன்ஸ்டன்ட் காதல் வந்துவிட, அவர் வீட்டிலேயே அடைக்கலமாகின்றனர். காட்டுக்கு விறகு வெட்டச் செல்லும் எம்.ஜி.ஆர்., ஒரு கழுதை வழி தவறியதால் அதைப் பிடிக்கப் போய், பி.எஸ்.வீரப்பா தலைமையிலல்39 திருடர்கள் சங்கேத வார்த்தையைச் சொல்லி குகையிலிருந்து வெளிவருவதையும், வேறொரு சங்கேத வார்த்தையைச் சொல்லி குகையை மூடிவிட்டுச் செல்வதையும் பார்க்கிறார். 

அவர்கள் சென்றதும், அதே சங்கேத வார்த்தையைச் சொல்லி, அவரும் காமெடியனும் உள்நுழைகின்றனர். கதவை மூடும் சங்கேதச் சொல்லை வாத்யார் சொல்ல, அந்த சங்கேதச் ‌சொல் கேட்டதும், உள்ளே சங்கிலியால் பிணைக்கப்பட்ட அடிமைகள் வட்டமாக இருக்கும் ஒரு சக்கரத்தை இயக்க, அது ஒரு லீவரை இயக்க, அதன் மூலம் ஒரு இரும்புச் சலாகை இயங்கி பாறையை அசைத்து குகையை மூடுகிறது. (யப்பா... என்னா டெக்னாலஜி மூளை இந்தத் திருடனுங்களுக்கு! இதை நல்ல வழியில நாட்டுல பயன்படுத்தியிருந்தா நாடு வெளங்கியிருக்குமே...’’ என்றது மனஸ். அதை தலையில் தட்டினேன்.).

உள்ளே இன்னொரு ரகசிய லீவரை இயக்கியதும் சிங்கத்தின் வாய் போல பிளந்திருக்கும் இரண்டு குகைகளு்க்கும் இடையே மேலே தூக்கியிருக்கும் பலகைப் பாதை இறங்கி இரண்டையும் இணைக்கிறது. இரண்டு குகைகளுக்கும் நடுவே கொதித்துக் கொண்டிருக்கும் வெந்நீர் நதி(?) ஓடுகிறது. (‘‘யாத்தே... 24 அவர்ஸும் தண்ணியக் கொதிக்க வைக்க அத்தனை பெரிய நெருப்பை எங்கருந்து ஏற்படுத்தினாங்க திருடய்ங்க?’’ -மனஸ்). இவர்கள் உள் குகைக்குள் சென்று பார்க்க, பத்துத் தலைமுறைக்கு வேண்டிய அளவு தங்க நகைகளும், பொற்காசுகளும், இன்னபிற ஆடை ஆபரணங்களும் குகை முழுக்க நிரம்பியிருக்கின்றன. (இவ்வளவு செல்வத்தை வெச்சுக்கிட்டு ஜாலியா லைஃபை அனுபவிக்காம அந்த 40 கூமுட்டைங்களும் என்னத்துக்கு இன்னும் திருடப் போவுதுங்களோ தெரியலையே... -மனஸ். ‘தே.. கம்னு கெட.’ -நான்)

அப்புறம் என்ன... ரெண்டு கழுதைகள் சுமக்கற அளவுக்கு (ஐயய்யோ! வாத்யாரையும், காமெடியனையும் சொல்லலீங்க... நிஜக் கழுதைகள்) பொன், பொருளை மூட்டை கட்டிக்கிட்டு வந்துடறாங்க.  பெரிய அளவு செல்வம் வந்துச்சுன்னா... நாமல்லாம் ஜாலியா செலவு பண்ணிட்டு திரிவோம். ஆனா செல்வம் கிடைச்சது யாருக்கு? பொன்மனச் செம்மலுக்காச்சே...! அவர் அதை நிறைய தானதர்மம் பண்றார்.

அலிபாபா பெரிய பணக்காரனாயிட்டான்னு ‌ஷேர்கானுக்குத் தெரிய வந்ததும் -- சொல்ல மறந்துட்டேனே.. அவர் வாத்யாரோட அண்ணன்தான் -- தம்பியைக் கூப்பிட்டு விருந்துல்லாம் வெச்சு, எப்படி இவ்வளவு செல்வம் வந்ததுன்னு நைஸா விசாரிக்கிறாரு. அண்ணனோட வற்புறுத்தலால வாத்யார் உண்மையச் சொன்னதும், அவரைக் கைது பண்ண உத்தரவிடறாரு  வீரர்கள் ஆயுதங்களுடன் சூழ்ந்து வாத்யாரை மடக்கிவிட,  பானுமதி தன் புத்தி சாதுர்யத்தினால வாத்யாரை விடுவிக்க, அவர் சண்டை போட்டு எல்லாரையும் காப்பாத்தி தானும் தப்பிச்சுடறாரு.

சண்டையில வாத்யாரோட அண்ணி இறந்துட, பேராசைக்கார அண்ணன் அதைப்பத்தி கவலையே படாம அந்த குகைக்கு ஓடிப் போறாரு. சங்கேதச் சொல்லைச் சொல்லி உள்ளே போனவருக்கு பணத்தைப் பார்த்த ஆனந்தத்துல வெளிவர்றதுக்கான சொல் மறந்துவிட, திருடர்கள் வந்துவிட, அவரைப் பிடித்து தலையையும் உடலையும் தனித்தனியாகப் பிரித்து விடுகின்றனர். அவர்கள் மீண்டும் திருடச் சென்றுவிட, அண்ணனைத் தேடி அங்கே வரும் வாத்யார், அந்த முண்டத்தையும் தலையையும் எடுத்துட்டு நாட்டுக்கு வந்துடறாரு. ரெண்டையும் தைச்சு, அண்ணனுக்கு இறுதிக் காரியங்களும் பண்ணிடறாரு.

திருடர்கள் புத்திசாலி(!)களாச்சே... யார் வந்துட்டுப் போறதுன்னு கண்டுபிடிக்க, நாட்டுக்குள்ள வந்து சமீபத்துல பணக்காரரானது யாருன்னு விசாரிக்க, அலிபாபா பற்றித் தெரிய வருகிறது. பி.எஸ்.வீரபபா ஒரு எண்ணெய் வியாபாரியா மாறுவேஷம் போட்டுக்கிட்டு, எண்ணெய் பீப்பாய்கள்ல 39 திருடர்களையும் ஒளிஞ்சுக்கச் சொல்லி வாத்யாரை நட்பாக்கிக்கிட்டு, அவர் வீட்டுக்குள்ள எல்லா பீப்பாய்களோடயும் வந்துடறாரு. அவர் பீப்பாய்ல ஒளிஞ்சிருக்கற திருடங்க கிட்ட பேசறதை பானுமதி பாத்துடறாங்க.

அந்த வீரப்பா தான் தன் அப்பா, அம்மாவை கொன்னு தன்னை அனாதை ஆக்கினவன்றதையும் புரிஞ்சுக்கிட்டு, அவனை பழிவாங்க திட்டம் போடறாங்க. என்னா திட்டம்...! வாத்யாருக்கும், வீரப்பாவுக்கும் முன்னால பாட்டுப் பாடி, நடனமாடியபடியே அவர் காலால் தாம்பாளத்தை தட்டி சத்தம் எழுப்ப, ஒவ்வொரு சத்தத்துக்கும் ஒரு பீப்பாயை நீர்வீழ்ச்சிலருந்து உருட்டி விட்டுடறாங்க பானுமதியோட இருக்கற காமெடியனும் அவன் ஜோடியும். (‘‘ஏம்ப்பா... நகரத்துல சாலையப் பாத்திருக்கற எம்.ஜி.ஆரோட வீட்டுக் கொல்லைப் புறத்துல நீர்வீழ்ச்சி எங்கருந்து வந்தது? அவர் என்ன மலையுச்‌சியிலயா குடியிருக்காரு?’’ என்று சிரித்தது மனஸ். ‘‘த பாரு... ஜனங்களே வாத்யார் படத்துல லாஜிக் எதிர்பார்த்ததில்லை. நீ பேசின ‌பிச்சுப்புடுவேன் பிச்சு...’’ என்றேன் நான்.)

பிறகென்ன... தன் சகாக்களை பானுமதி கொன்னது தெரிஞ்‌சதும் வீரப்பா அவரைக் கடத்திட்டு தன் குகைக்கு ஓட, அவரை துரத்திப் பிடித்து, சண்டையிட்டு, ஒரு வழியாக கொன்று தீர்க்கிறார் புரட்சித் தலைவர். (‘‘ஆமா... 39 திருடங்களை அந்தம்மாவே காலி பண்ணிட்டாங்க. ஒரே ஒரு திருடனை மட்டும் கொல்றது வாத்யாருக்குப் பெருமையாக்கும்?’’ -மனஸ். ‘‘சனியனே... அடங்க மாட்ட நீயி?’’ -நான்) வாத்யாரும், பானுமதியும் டூயட் பாட, படம் நிறைவடைகிறது.


படத்தில் பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையாக வந்திருக்கின்றன. எல்லாக் கதாநாயகிகளையும் தொட்டுத் தூக்கி, சுற்றி புகுந்து விளையாடும் வாத்யார், பானுமதியின் அருகில் பள்ளிக்கூட மாணவன் போல (பார்க்க: படம்) பாதுகாப்பான தூரத்தில் நின்று டூயட் பாடுவது (அதிகபட்சம் தோளை தொடுதல்தான்) பார்க்க ஆச்சரியமோ ஆச்சர்யம்! தங்கவேலுவின் காமெடி நிரம்பிய நடிப்பு அற்புதம். பானுமதி வழக்கம் போல் கம்பீரமான கதாநாயகியாக ரசிக்க வைக்கிறார். பி.எஸ்.வீரப்பா ஆர்ப்பாட்டமான வில்லன் நடிப்பில் அவருக்கு நிகர் வேறொருவர் இல்லை என்று சொல்ல வைக்கிறார். வாத்யாரின் அண்ணனாக வரும் (நிஜ அண்ணன்) எம்.ஜி.சக்ரபாணி குகையில் மாட்டிக் கொண்டு வெளியே வர வழி தெரியாமல் வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி, குகையைத் திறக்க வழி தெரியாமல் தவிப்பது நகைச்சுவைக்கு உத்தரவாதமான நடிப்பு. 

படத்தில் இந்த மனஸ் என்னதான் குற்றம் குறைகளைக் கண்டுபிடித்தாலும் அதையெல்லாம் யோசிப்பதற்கு நேரம் இல்லாதபடி படம் விறுவிறுப்பாகச் செல்கிறது. அதுதான் எம்.ஜி.ஆரின் திறமை + பலம். ரசிகர்களுக்கு அதைத் தவிர வேறென்ன வேண்டும்?

‘‘த்தோ பாரு மனஸ்... நீ படுத்தின பாட்டுக்கு அடுத்த தடவை படம் பாக்கறப்ப உன்னை கிட்ட சேர்க்கப் போறதில்லை’’ என்றேன் நான். ‘‘அதுசரி... ஏற்கனவே எம்.ஜி.ஆர். படத்தை மூளையக் கழட்டி வெச்சுட்டு, என்னை வெச்சுட்டுத்தான் ரசிச்சுட்டிருக்கே... என்னையும் துரத்திட்டேன்னா, நீ படம் பாக்கவே முடியாது’’ என்று மனஸ் சிரிக்க... நான் அவ்வ்வவ்!

====================================================
அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
====================================================

Friday, January 11, 2013

அப்பாவிப் பதிவர் வாங்கிய பல்புகள்!

Posted by பால கணேஷ் Friday, January 11, 2013

ந்தப் பதிவரை எனக்கு நீஈஈஈண்ட காலமாகப் பழக்கம். அவர் பதிவுலகிற்கு வந்தபின் ரொம்பவே விவரமானவராயிட்டார். பதிவுகள் எழுத ஆரம்பிக்கறதுக்கு முன்னால அவர் வாங்கின ரெண்டு பல்புகளை இப்ப உங்களுக்குச் சொல்லப் போறேன்.

சம்பவம் : 1

து 2000ம் ஆண்டு. அவர் அப்ப திருநெல்வேலியில வேலை பாத்துட்டிருந்தார். அவருக்கு மிக நெருங்கிய நண்பன் போன் பண்ணி (இருவரும் ஒரே அலுவலகம்தான்- நண்பனுக்கு வெளியில் சுற்றும் உத்தியோகம்) ‘‘லேய், தினேஷ் நெல்லைக்கு வந்திருக்காம்லே. பேசியே நாளாச்சுன்னு சொன்னியே... உடனே போன் பண்ணிப் பேசிட்டுப் போய்ப் பாருலே. இன்னிக்கு ராத்திரி ஊருக்குப் போறானாம்...’’ என்றான். ‘‘நம்பர் சொல்றா, குறிச்சுக்கறேன்’’ என்று இவர் பேப்பருடன் தயாராக, நண்பன் சொன்னான்: ‘‘மூணு ரெண்டு நாலு ஜீரோ மூணு ரெண்டு’’ என்று. நம்ம அ.ப. பேப்பர்ல இப்படி எழுதிக்கிட்டாரு: 324032.

அலுவலகத்திலிருந்து வெளியே வந்து பப்ளிக் டெலிபோன் பூத்தில பல தடவை அந்த நம்பரை ட்ரை பண்ணினாரு. அவருக்குக் கிடைச்ச பதில்: "This number does not exist."ங்கறதுதான். ‌கடைசில வெறுத்துப் போய் டயல் பண்றதை விட்டுட்டாரு. மாலையில டூர்லருந்து அந்த நண்பன் வந்ததும், ‘‘என்னலே, பேசினியா?’’ என்று கேட்க, இவர், ‘‘பல தடவை ட்ரை பண்ணேன்டா. நம்பர் டஸ்நாட் எக்ஸிஸ்ட்ன்னே வருது’’ என்றிருக்கிறார். அவன் உடனே இவரை பூத்துக்கு அழைத்துப் போய் நம்பரை டயல் பண்ண, இவர் டிஸ்ப்ளேயில் பார்த்திருக்கிறார்- 32000032 என்பது சரியான நம்பர்.

தினேஷிடம் பேசிமுடித்து வெளியே வந்ததும், நண்பர் மீது பாய்ந்தார் இவர். ‘‘ஏலே மூதி! நம்பரை ஒழுங்காச் சொல்ல மாட்டியாலே... மூணு ரெண்டு டபுள் ஜீரோ டபுள் ஜீரோ மூணு ரெண்டுன்னு நீ சொல்லியிருந்தா அப்பவே பேசியிருபேன்ல..’’ என்று சொல்லி தான் எழுதி வைத்திருந்த நம்பரைக் காட்ட, அவன் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறான். ‘‘எலே, கோட்டிக்காரப் பயலே! எங்கயாச்சும் ஆறு டிஜிட்ல டெலிபோன் நம்பர் வருமாலே...? அப்பவே நீ சுதாரிச்சிருக்க வேணாமா? நீ தப்புப் பண்ணிட்டு என்னைக் கேக்க?’’ என்று அவன் விடாமல் சிரிக்க, இவர் ‌‘ழ‌‌ே’ என்று விழித்திருக்கிறார்.

சம்பவம் : 2

ம்ம அ.ப.வை ஒரு அவசர வேலையா பெங்களூர்ல இருக்கற அவர் நண்பன் உடனே வரச் சொல்லி, டிக்கெட்டும் அனுப்பினதால புறப்பட்டுப் போனார். அவர் முன்னப்பின்ன பெங்களூரு போனதில்ல. கண்டோன்மென்ட் ஸ்டேஷன் நெருங்கறப்ப நண்பனுக்கு போன் பண்றார். அவன், ‘‘நான் ஒன்வேல சுத்திட்டு வர்றதுக்கு லேட்டாயிடும். ஸ்டேஷன் பக்கத்துல ரெண்டு நிமிஷ நடை தூரத்துல காரோட வெயிட் பண்ணிட்டிருக்கேன். ஸ்டேஷனை விட்டு வெளிய வந்ததும் கூப்பிடு’’ என்றிருக்கிறான் நண்பன். இவர் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்ததும், அவனைக் கூப்பிட்டு, ‘‘நான் ஸ்டேஷனுக்கு வெளில நிக்கறேன்’’ என்க, அவன், ‘‘எதிர்ல ஒரு யானை தெரியுதா?’’ என்று கேட்டிருக்கிறான். இவர் பார்‌க்க, எதிரில் ஒரு யானை நடந்து சென்று கொண்டிருந்தது. ‘‘ஆமா, தெரியுது’’ என்று இவர் பதிலளித்ததும், ‘‘அந்த யானை திசையிலயே வந்தா ஒரு சர்க்கிள் வரும். அதுல இடது பக்கம் திரும்பினா, காரோட நான் நிக்கறது தெரியும்’’ என்றிருக்கிறான்.

இவரும் யானை சென்ற  திசையிலேயே அதைப் பின்தொடர்ந்து நடந்திருக்கிறார். சிறிது தொலைவு சென்றதும், பாதை இரண்டாகப் பிரிய, யானை இடதுபுறப் பாதையில் சென்று விட்டது. சர்க்கிள் எதையும் காணோமே என்று இவர் ‘ழே’ என்று விழித்து, மீண்டும் நண்பனுக்கு டயல் செய்து, ‘‘டேய், நீ சொன்னபடி யானை வழியா வந்ததுல ரோடுதான் ரெண்டாப் பிரியுது. சர்க்கிள் எதையும் காணமேடா’’ என்று கேட்க, ‘‘நீ இடது பக்கம் போயிட்ட போலருக்கு. அப்படியே திரும்பி ஸ்டேஷனுக்கு வந்து வலதுபுறமா வா’’ என்று நண்பன் பதிலுரைக்க, விதியே என்று இவர் மீண்டும் ஸ்டேஷனை நோக்கி நடந்து, அதைத் தாண்டி கொஞ்சம் தூரம் நடந்தார்.

அங்கே சற்று தூரம் சென்றதும் ஒரு யானை சிலை இருக்க, அதைச் சுற்றி ஒரு சர்க்கிள் இருந்தது. அதில் இடதுபுறம் செல்லும் பாதையில் பார்க்க, காரின் வெளியி்ல் நின்றிருந்த நண்பன் கையாட்டி அழைத்திருக்கிறான். நண்பனின் அருகில் சென்றதும், ‘‘ஏன் இத்தனை லேட்?’’ என்று அவன் கேட்க, ‘‘நீ யானை தெரியுதான்னு கேட்டப்ப, என் எதிர்ல ஒரு யானை நடந்துட்டிருந்தது. நீ எங்கருந்தோ என்னைப் பாத்துட்டுதான் பேசறேன்னு நான் நினைச்சு, யானை திசையில நீ போகச் சொன்னதால அது பின்னால போய்ட்டேன். இப்பத்தான் புரியுது நீ யானை சிலையச் சொல்லியிருக்கேன்னு. ஏண்டா பாவி... யானை சிலைன்னு தெளிவாச் சொல்லித் தொலையக் கூடாதா?’’ என்று இவர் வருத்தம் பாதி, கோபம் பாதியாகக் கேட்க, நெல்லை நண்பனைப் போலவே இந்த பெங்களூர் நண்பனும் ரசித்து வாய்விட்டுச் சிரித்திருக்கிறான். ‘‘ஏண்டா நான் பேசற நேரம் நிஜ யானை நேர்ல போகும்னு கனாவா கண்டேன்?’’ என்று அவன் சிரிக்க, இவருக்கும் சிரிப்பு வந்து விட்டது.

இப்படி இரண்டு பல்புகள் வாங்கிய அந்த அ.ப. யாருன்னு கேக்கறீங்களா? ஜன்னல் வரிகள் ஜாலடணேஷ் தவிர வேற யாரு அவ்வளவு புத்திசாலி(?)யா இருக்க முடியும்? ஹி... ஹி...

======================================

ப்ப புத்தகக் கண்காட்சி அப்டேட்ஸ்: என்னுடைய ‘சரிதாயணம்’ புத்தகம் டிஸ்கவரி புக் பேலஸ் -- ஸ்டால்: 43,44 தவிர, மயிலவன் பதிப்பகம் ---ஸ்டால் 295, 296 ஸ்டாலிலும் கிடைக்கும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இனி நம் பதிவர் புத்தகங்களுள் எனக்குத் தெரிந்த மேலும் இரண்டு.

அகிலா - ரசனை மிகுந்த கவிதைகளையும், அழகான எழுத்து நடையில் கட்டுரைகளையும் படைக்கும் இவரது படைப்புகள் இப்போது ‘சின்னச் சின்னச் சிதறல்கள்’ (இவர் எழுதும் தளத்தின் பெயரும் அதுவே) நூல் வடிவம் பெற்றிருக்கிறது.

ஜீவா என்று விரிவாக நண்பர்களால் அழைக்கப்படும் இவரின் சுருக்கப் பெயர் ஜீவானந்தம். ‘கோவை நேரம்’ என்ற தன் தளத்தி்ல பல அரிய ஆலயங்களைப் பற்றியும், நல்ல உணவகங்களைப் பற்றியும், இவர் சென்று சுற்றுலா தலங்களைப் பற்றியும் சுவாரஸ்யமாக எழுதி வருகிறார். அவை இப்பொழுது புத்தக வடிவம் பெற்றிருக்கின்றன- ‘கோவை நேரம்’ என்ற பெயரிலேயே.

இவை தவிர கடுகு (அகஸ்தியன்) அவர்கள் எழுதிய ‘கமலாவும் நானும்’ என்ற நகைச்சுவைக் கதைகளும், அனுபவக் கட்டுரைகளும் அடங்கிய பொக்கிஷப் புத்தகமும் இம்முறை பு.க.வில் கிடைக்கும் என்பதை மகிழ்வுடன் கூறிக் கொள்கிறேன்.

இந்த மூன்று புத்தகங்களும் டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டாலிலேயே கிடைக்கும் என்று பட்சி சொல்கிறது. (பஜ்ஜி இல்லீங்க, பட்சி!) உங்கள் புத்தகக் கண்காட்சி விசிட்டில் தவறாமல் டிஸ்கவரிக்கு ஒரு விசிட் அடித்து நம் பதிவர்களின் புத்தகங்களை வாங்கிப் படித்து மகிழ்வீர்கள்.. சரிதானே...!

Wednesday, January 9, 2013

சரித்திரக் கதை எழுதுவது எப்படி?

Posted by பால கணேஷ் Wednesday, January 09, 2013

ரித்திரக் கதையில ரெண்டு டைப் இருக்குங்க. ஒண்ணு கல்கி, சாண்டில்யன், விக்ரமன் மாதிரி எழுத்தாளர்கள் எழுதிய அக்கால பாணிக் கதைகள். இன்னொண்ணு சுஜாதா, சுபா மாதிரி எழுத்தாளர்கள் எழுதின நவீனபாணி சரித்திரக் கதைகள். ரெண்டையும் பார்க்கலாம் இப்ப. முதல்ல பழைய பாணி...

முதல்ல கதாபாத்திரங்களை உருவாக்கிக்குங்க. சரித்திரக் கதைகள்ல நிறையக் கற்பனையக் கலந்து சரடு விடலாம் நீங்க. ஆனா, அதுல வர்ற மன்னர்கள் பேரு மட்டும் சரியானதா இருக்கணும். அதுக்கு பழைய சரித்திர புத்தகங்கள் ஏதாவது படிச்சு ரெஃபரன்ஸ் எடுத்துக்கணும். எடுத்தாச்சா... ரைட்டு, இப்ப ஹீரோ கேரக்டர். ஹீரோங்கறதால அவன் பெரிய வீரனாகவும் புத்திசாலியாகவும் இருத்தல் அவசியம். மன்னனோட படைத் தளபதியாவோ, இல்ல மன்னர் மரபில வந்து இப்ப செல்லாக்காசா இருக்கறவனாவோ உருவாக்கிக்கங்க. அடுத்தது கதாநாயகி. கதாநாயகிங்கறதால அவ ஒரு இளவரசியாகவும், அதியற்புத அழகியாகவும் இருக்க வேண்டியதும் காலத்தின் கட்டாயம்.

அப்புறம்... சரித்திரக் கதைகள்ல ஒரு துறவி கேரக்டர் இருக்க வேண்டியது அவசியம். அவர் துறவிக்குரிய பணியைத் தவிர மத்த எல்லா அரசியல் பணியையும் செய்யறவரா அமைச்சுக்கறது மிக முக்கியமான விஷயமுங்க. இன்னொண்ணு... அந்தக் காலத்து மன்னர்கள் மாறு வேஷத்துல நகர் வலம் வர்றதும், மக்களை சந்திக்கறதும் வழக்கம்கறதால ஒரு மர்ம கதாபாத்திரத்தை அமைச்சுக்கணும். கடைசி சீன்லதான் அது மன்னர்தான்கற சஸ்பென்ஸை உடைக்கணும். -அது சஸ்பென்ஸா இல்லாம பாதியிலயே வாசகர்களுக்குத் தெரிஞ்சிட்டாலும் கூட. இவங்களுக்குத் துணையா இன்னும் எத்தனை கேரக்டர்களை வேணுமுன்னாலும் நீங்க சேத்துக்கலாம்.

ரைட். இப்ப இந்த எல்லா கதாபாத்திரங்களையும் உங்க மனக்குடுவைல போட்டு, அதை நல்லாக் குலுக்குங்க. -ரெண்டு மூணு குட்டிக்கரணம் அடிச்சாலு்ம் சரிதான்... ஆச்சா? சம்பவங்கள்ங்கற கோந்தை வெச்சு இவங்களை ஒட்டினீங்கன்னா, சரித்திரக் கதை தயார். என்னது...? எப்படி ஒட்டறதுன்னா கேக்கறீங்க? அதையும் சொல்றேன். ஓப்பனிங் ஹீரோ இன்ட்ரடக்ஷன். குதிரைல ஹீரோ இயற்கைய ரசிச்சுட்டு வர்றப்ப, அவனை சில பெண்கள் ரசிக்கறாங்கன்னு சொல்லிட்டு, அவன் வீரம் வெளிப்படற மாதிரி ஒரு சண்டை சம்பவத்தை அமைச்சுக்கணும். அடுத்து அவன் கதாநாயகியைப் பார்த்து காதல் வசப்படணும். மன்னரோட எதிரி போருக்கு வர்ற மாதிரியோ, இல்ல மன்னர் ஏதோ ஒரு போர்ல தோத்துட்டு நாட்டை மீட்கப் போராடற மாதிரியே வெச்சுக்கிட்டு, ஹீரோ போய் அவருக்கு ஐடியாஸ் தர்ற மாதிரி வெச்சுக்கணும்.

அதுக்காக எதிரி நாட்டுக்கு துப்பறியப் போறான். அங்க இன்னொரு பொண்ணை காதலிக்கறான். - சரித்திரக் கதைன்னா எத்தனை பொண்ணுங்களை வேணும்னாலும் காதலிக்கலாம். நமக்கு வேண்டியது காதலை வெச்சு ரெண்டு சாப்டர் தள்ளணும்கறதுதான். -  அங்க அவனுக்கு ஒரு துறவி உதவறார். சில பல சாகசங்களுக்குப் பின் வெற்றிகரமா தன் நாட்டுக்கு வர்றான். இப்படி்ல்லாம் சம்பவ கோந்துகளை உங்க கற்பனைக் குதிரையக் கண்டபடி தறிகெட்டு ஓடவிட்டு உருவாக்கி ஒட்டிக்கணும். கடைசியா க்ளைமாக்ஸ்னு வர்றப்ப ஒரு போர்க்களம் நிச்சயம் இருந்தாகணும். அந்தப் பெரும் போர்ல நம்ம ஹீரோவோட ஐடியாக்களாலயும், வீரத்தாலயும் மன்னர் ஜெயிக்கறதா காட்டிரணும். அவர் அரசவைக்கு வந்ததும் அவர்தான் துறவியா வந்து ஹீரோவுக்கு உதவி செஞ்சார்ங்கற மஹா சஸ்பென்ஸை உடைச்சு, ஹீரோவுக்கு பரிசுகள் தரணும். அவன் தன் காதலிகளோட கொஞ்சறதோட கதைய முடிச்சிரணும். - இல்லன்னா, கல்லெறிஞ்சு முடிக்க வெச்சிருவாங்க. ஹி... ஹி...!

இதையெல்லாம் எழுதும் போது இலக்கிய நயமா இல்லாட்டியும் கூட ஒரளவுக்காவது பழங்கால தூய தமிழ்ல சொற்களை அமைச்சுக்க வேண்டியது அவசியம். அது தெரிஞ்சாதான் சரித்திரக் கதைகள்னு எழுதி ஜல்லியடிக்கலாம். இல்லாட்டி ரசிக்க மாட்டாங்க யாரும். இத்தனை விஷயங்களை வெச்சு சீரியஸ் டைப் சரித்திரக் கதைகளை ஈஸியா எழுதி அசத்திடுவீங்கதானே... என்னது... அந்த இன்னொரு நவீன பாணி சரித்திரக் கதைன்னா என்னன்னு கேக்கறீங்களா... சொல்றேன்.

நவீன பாணி சரித்திரக் கதைகள் எழுதறது மிகமிகச் சுலபமான விஷயம். முதல்ல நீங்க ஒரு சாதாரண நாவல் எழுதிக்கங்க. அது க்ரைம் கதையாக கூட இருக்கலாம். எழுதி முடிச்சாச்சா...? இப்பத்தான் முக்கியமான விஷயம். அந்த க்ரைம் கதையில வர்ற பெயர்களை முதல்ல சரித்திர காலப் பெயர்களா மாத்தணும். உதாரணமா ஹீரோ பேர் தினேஷ்னு வெச்சிருந்தா ‌தினேசவர்மன்னும், ஹீரோயின் பேரு சுலபான்னு வெச்சிருந்தா சுலபதேவின்னும் மாத்திக்கலாம். அப்புறம்... கார்ல வந்து இறங்கினான்னு எழுதியிருந்தீங்கன்னா, குதிரையில அல்லது தேர்ல வந்து இறங்கினான்னும், துப்பாக்கியால சுட்டான்னு எழுதியிருந்த அதை வாளால் வெட்டினான்னும் மாத்தி எழுதிக்கணும்.

இப்படி எல்லாத்தையும் கவனமா மாத்திட்டீங்கன்னா நவீன பாணி சரித்திரக் கதை ரெடி. கணேச பட்டர், வசந்தகுமாரன்னு சுஜாதா ஸாரும், நரேந்திரவர்மன், வைஜயந்தி தேவின்னு சுபாவும் அவங்கவங்க எழுதின க்ரைம் கதைகளை சரித்திரமா மாத்தி இப்படித்தான் கும்மியடிச்சாங்க. உங்க பங்குக்கு நீங்களும் கும்மியடிச்சு தமிழை வாழ வையுங்க... ஹி... ஹி...

=============================

நிஜமாவே சரித்திரக் கதைகளை விரும்பிப் படிக்கும் வாசகர்களுக்கு நான் எழுதினதுல கோபம் வந்திருக்கும். எத்தனை கல் விழுதுன்னு பாக்க ஆவலோட வெயிட்டிங். அப்புறம்... நாளை மறுதினம் துவங்க இருக்கும் புத்தகக் கண்காட்‌சியில ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ ஸ்டால் எண் 43, 44 ஆகிய எண்கள்ல அமைஞ்சிருக்கு. அங்கே என்னோட ‘சரிதாயணம்’ கிடைக்கும். இன்னும் சில பதிவர்களோட புத்தகங்களும் அங்க கிடைக்க இருக்கறதாகத் தெரிய வருகிறது. இரண்டு புத்தகஙகளை இங்க சொல்றேன். இன்ன பிறவற்றை தகவல்கள் திரட்டி நாளை சொல்றேன்.

1. கவியாழி கண்ணதாசன் - ‘அம்மா நீ வருவாயா, அன்பை மீண்டும் தருவாயா?’ என்கிற தலைப்பில் இவரின் கவிதைகள் மணிமேகலைப் பிரசுர வெளியீடாக புததக வடிவம் பெற்றுள்ளன. மணிமேகலையின் அரங்கு எண் 244ல் இந்தப் புத்தகத்தை நீங்கள் பெறலாம். 13-1-2013 ஞாயிறு அன்று மதியம் 2 மணிக்கு புத்தகக் கண்காட்சி அரங்கிலேயே நடக்கற இந்த நூல் வெளியீட்டு விழாவுக்குப் போனீங்கன்னா ஆசிரிரின் ஆட்டோகிராபோட புத்தகத்தை வாங்கிக்கலாம்.

2. கோவை மு.சரளா - இவங்களோட கவிதைகளுக்கு அறிமுகம் தேவைப்படாது. ரசிக்க, மயங்க, உருக, உற்சாகப்பட, துடிக்க... இப்படி பல உணர்வுகள்ல நம்மை தோய்த்தெடுக்கற அழகான கவிதைகளுக்கு சொந்தக்காரரான இவரின் கவிதைகளும் ‘மெளனத்தின் இரைச்சல்’ என்கிற தலைப்பில் புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. இதையும் டிஸ்கவரியின் ஸ்டாலில் நீங்கள் சந்திக்கலாம்.

Friday, January 4, 2013

கேப்ஸ்யூல் நாவல் - 7

Posted by பால கணேஷ் Friday, January 04, 2013

                வீரத்தேவன் கோட்டை
                                                     - லக்ஷ்மி -

ழுத்தாளர் லக்ஷ்மி சரித்திரக் கதைகூட எழுதியிருக்கிறாரா என்ன? என்று புருவங்களை உயர்த்துகிறீர்கள் தானே... இந்த நாவல் அவரின் எழுத்துக்களில் மாறுபட்டதாக சரி்த்திர, சமூகக் கதையாகப் பரிமளித்திருக்கிறது. சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு நடந்த கதை என்கிற குறிப்புடன் 1956ல் இதை எழுதியிருக்கிறார் லக்ஷ்மி அவர்கள். இப்போதும் படிப்பதற்கு போரடிக்காத இந்தக் கதை இங்கே உங்களுக்கு கேப்ஸ்யூலாக!

ந்த திரைப்படக் குழு காவிரிக் கரையில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கிறது. உணவு இடைவேளை விடப்பட, அனைவரும் உணவருந்தியபடியே அரட்டையடிக்கின்றனர். தனக்கு முன் தென்பட்ட இடிந்த கோட்டையைக் கண்ட கதாநாயகி காமினி, அதைப் பறறிக் கேட்க, அதற்கு ‘வீரத்தேவன் கோட்டை’ என்றும், அந்நாட்களில் வீரத்தேவன் பெயர் கேட்டால் அழுத பிள்ளையும் வாய் மூடும் என்றும் கூறுகிறார். ‘இந்தக் கோட்டை போரில் அழிந்திருக்குமோ’ என இயக்குனர் கேட்க, ‘ஒருவகையில் பெரும் போர்தான். அன்பை வெல்ல இருவர் போராடினார்கள். நூறு வருஷங்களுக்கு முன்பு...’ என்று கதையை சொல்லத் தொடங்குகிறார் கதாசிரியர்.

காவிரி பெருக்கெடுத்தோடும் கொள்ளிடக்கரையில் திருவிழா நடந்து கொண்டிருக்க, நண்பர்கள் வீரத்தேவனும் இருளப்பனும் அதைப் பார்த்து மகிழ்ந்தபடி நடககின்றனர். அங்கே கறுப்பாக, நீள் வட்ட முகமும், சிவந்த அதரங்களும், முத்துப் பற்களையும் கொண்ட அழகியொருத்தியைக் கண்டு வீரத்தேவன் மயங்குகிறான். பவளவல்லி என்கிற பெயர் கொண்ட அவள் இதயமும் வீரத்தேவனை நாடுகிறது. திருவிழா முடிந்தபின் அவளைக காண விருமபி பதினைந்து தினங்களுக்கும் மேலாக இருளப்பனுடன் அவளைத் தேடியலைகிறான் வீரத்தேவன். ‘பொன்னம்பலத் தேவர்’ என்கிற எதிரியின் எல்லையில் அந்தப் பெண்ணை மீண்டும் கண்டு அவளுடன் பேச்சுக் கொடுக்கின்றனர். இருளப்பனின் பேச்சில் கோபமடைந்து பவளவல்லி சென்று விடுகிறாள்.

அதேநேரம் அரண்மனையில் சைவப் பழமாய் காட்சியளிக்கும் வீரத்தேவனின் தாய் மங்களாம்பிகையைக் காண ஒரு கிழவி வந்திருப்பதாக தோழியர் சொல்ல, அவள் முகம் வெளிறிப் போகிறது. ‘ஏன் இங்கேயெல்லாம் வந்தாய்’ என்று கிழவியை அவள் கடிந்து கொள்ள, கிழவி பணம் கேட்கிறாள். ‘அந்த ஒலையைத் தந்தால் நிறையப் பணம் தருவேன்’ என மங்களாம்பிகை சொல்ல, ‘அது பிறகு, இப்போது கொஞ்சம் பணம் தா’ என்று அவளை மிரட்டி பணம் பறித்துச் செல்கிறாள் கிழவி.

ன்றைய படப்பிடிப்பு முடிந்து விட்டதால் கதையை நிறுத்திய கதாசிரியர் மறுநாள் லன்ச் பிரேக்கில் மீண்டும் தொடர்ந்து சொல்கிறார்.

டுத்த சில தினங்களில் பவளவல்லி-வீரத்தேவன் காதல் நன்கு வளர்ந்து விட்டிருக்கிறது. தன் இயற்பெயரான சுந்தரத்தேவன் என்று அவளுடன் அறிமுகமாகிப் பழகி வருகிறான். அவள் வீட்டுக்கு தாமதமாகத் திரும்புவதைக் கண்ட பொன்னம்பலத் தேவர், அவளைக் கண்டித்து வீரத்தேவன் என்பவன் தன் பரமவைரி என்று கூறி, பரம்பரைக் கதையைச் சொல்கிறார். ‘‘கொள்ளிடத்தின் மறுகரையை ஆண்டு வந்த சிவஞானத் தேவனின் மகன் இந்த வீரத்தேவன். பத்தாண்டுகளுக்கு முன் சிவஞானத்தேவர் சிலரால் தாக்கப்பட்டு மரணமடைந்தார். அதை நான் செய்ததாக பலர் சொல்கிறார்கள். நான் செய்யவில்லையே என்பதுதான் என் வருத்தமும். ஆனாலும் வீரத்தேவனின் உதிரத்தில் என் பழி தீர்த்துக் கொள்வேன். வீரத்தேவனின் தாய் மங்களாம்பிகை பெண்ணாகப் பிறந்த ஒரு பேய். என் மகனையும் மருமகளையும் கொன்று தீர்த்த அந்தக் குடும்பத்தை பழி தீர்ப்பேன்’’ என்று குமுறுகிறார். ‘‘உன் மாமன் பாண்டித்துரையும், சிவஞானமும் நெருங்கிய நண்பர்கள். ஒரு பெண் விவகாரமாக அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு எதிரிகளானார்கள். உன் மாமி பூரண கர்ப்பிணியாயிருக்கையில் அவளுடன் ஒரு திருமணத்திற்குச் சென்று திரும்பிய உன் மா‌மனையும் மாமியையும் இருளில் சில ஆட்கள் தாக்கிக் கொன்று விட்டனர். அவர்கள் அணிந்திருந்த நகைகளை சில காலம் சென்றபின் மங்களாம்பிகை குறைந்த விலைக்கு விற்றாள் என்பதால் அதைச் செய்தது இன்னாரென விளங்கிற்று. நம் குடும்ப நகைகளில் மச்ச சின்னம் பொறித்திருக்கும்’’ என்கிறார் பொன்னம்பலத் தேவர். பவளவல்லி அவசரமாக ஓடிச் சென்று வீரத்தேவன் பரிசளித்த பச்சைக்கல் மோதிரத்தை எடுத்துப் பார்க்கிறாள். மச்சச் சின்னம் கண் சிமி்ட்டுகிறது அங்கே.

டப்பிடிப்பு மும்முரமாக நடைபெறவே கதையை இத்துடன் விட்டுவிட்டு மறுதினம் மீண்டும் தொடர்கிறார் கதாசிரியர்.

தன்பின் வீரத்தேவன் தன் காதலியைச் சந்திக்க வர, பவளவல்லி, தான் பொன்னம்பலத் தேவரின் பேத்தி என்பதால் இந்தக் காதல் நிலைக்காது என்று கண்ணீருடன் சொல்லவிட்டு ஓடி விடுகிறாள். அதற்குப் பதினைந்து தினங்கள் கழித்து இரவில் சில முரட்டு மனிதர்கள் எதிர்பாராதவிதமாக பொன்னம்பலத் தேவரைத் தாக்கி மயக்கமடையச் செய்து, பவளவல்லியைத் தூக்கிச் செல்கின்றனர். கண் விழிக்கும் பவளவல்லியை சந்திக்கும் மங்களாம்பிகை, அவள் கறுத்த நிறத்தை கேலி செய்துபேசி, அழவைத்து, தனக்குப் பணிப்பெண்ணாக இருக்கும்படி கூறுகிறாள். வீரத்தேவன் அவளிடம் ‘சிலகாலம் அம்மாவுக்கு பணிப்பெண்ணாக இருந்து அவள் மனம் மகிழச் செய்தால் உன்னை மன்னித்து நம் கல்யாணத்துக்கு சம்மதிப்பாக சொல்லியிருக்கிறாள், ஆகவே வேறு வழியில்லை’ என்று கடுமையாக சொல்லிச் செல்கிறான்.

மங்களாம்பிகைக்குப் பணிய மறுத்து கைதியாக பவளவல்லி படும் துன்பம் கண்டு பொறாமல், அவளுக்கு ரகசியமாக உதவ முன்வருகிறான் இருளப்பன். தன் நம்பிக்கைக்குரிய சேடிப் பெண் மூலம் இரவு அவளைத் தப்ப வைப்பதாக செய்தியனுப்புகிறான்.  இரவில் அந்தப் பணிப்பெண் வழிகாட்டி அழைத்துச் செல்ல, இருவரும் பதுங்கி தோட்டத்துக்கு வரகின்றனர். பின்கதவை நெருங்குவதற்குள் யாரோ நடந்து வரும் காலடி ஓசை‌ கேட்கவே இருளில் பதுங்குகின்றனர். முக்காடிட்டுக் கொண்டு ஒரு இருள் உருவம் வருவதைக் கண்டு மிரள்கின்றனர். அது முக்காட்டை நீக்க... அந்தக் கிழவி! அவள் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு தன் இடுப்பிலிருந்த துணிப்பையை எடுத்து அருகிலிருந்த திரைச்சீலை மடிப்பில் ஒளித்து வைத்துவிட்டு நிற்கிறாள். தோழிப் பெண் வந்து ராணி காத்திருக்கிறார்கள் என்று கூறி அவளை அழைத்துச் செல்ல, பவளவல்லி மெல்ல அந்த துணிப்பையை கைப்பற்றுகிறாள். அதற்குள் மங்களாம்பிகை, கிழவியுடன் உரத்த குரலில் பேசுவது கேட்கிறது. அவர்களிருவரும் பயந்து ஓடி ஓரிடத்தில் வெளியேற வழியின்றி கதவு பூட்டியிருப்பதைக் கண்டு மறைந்து கொள்கின்றனர்.

சத்தம் கேட்டு அங்கே வரும் மங்களாம்பிகை அவர்களைக கண்டுபிடிக்கவில்லை. பின்னாலேயே கிழவி வருகிறாள். இம்முறை அவளுக்கு பெரும்பணம் தந்து விட்டதால் ஓலையைத் தரும்படி மங்களாம்பிகை மிரட்ட, மலடியானவள் ஒரு மகனுக்குத் தாயாக வேண்டுமானால் கஷ்டங்களை அனுபவிக்கத்தான்வேண்டும் என்று சிரிக்கிறாள் கிழவி. ‘‘உனக்கு குழந்தை பிறக்காததால் வேறு கல்யாணம் செய்ய உன் கணவர் திட்டமிட்டிருந்தார். அப்படி நடந்திருந்தால் இரண்டாவது மனைவிக்கு பணிப்பெண்ணாய் இருந்திருப்பாய். மருத்துவச்சி நான் சூழ்ச்சி செய்து நீ கர்ப்பமாய் இருப்பதாக பொய் சொன்னேன்.திருட்டுத்தனமாக ஒரு குழந்தையைப் பெற்று உன் அறையில் ஒளித்துவைத்து அது உனக்குப் பிறந்தது என்று உறுதிப்படுத்தினேன். உண்மையில் குழந்தையைப் பெற்றவள் ஒரு ஓலையில் அதன் பூர்வோத்திரங்களை எழுதி அவன் வயது வந்ததும் கொடுக்கச் சொல்லிவிட்டு இறந்தாள். அந்த ஓலைக்கு நீ என்ன கொடுத்தாலும் தகும்’’ என்கிறாள். கிழவிக்கு இன்னும் பணம் தந்து ஓலையைத் தரச் சொல்ல, அவள் வைத்த இடத்தில் துழாவி ஓலை காணவில்லையன்று மிரள, கோபமிகுதியில் மங்களாம்பிகை கிழவியின் கழுத்தை நெறித்துக் கொன்று விடுகிறாள். பிணத்தை திரைச்சீ‌லையின் பின் மறைத்துவிட்டு அவள் செல்ல, பவளவல்லி அங்கிருந்து வெளியேறி, இருளப்பன் உதவியுடன் தப்புகிறாள்.

கொள்ளிடக்கரையில் அவளைச் சேர்த்த இருளப்பன், பரிசல் ஏற்பாடு செய்யச் செல்ல, ஆவல் தாங்காமல் அந்த ஓலையைப் பிரித்துப் படிக்கிறாள். அது புதிய கதை சொல்கிறது. ‘‘நான் கொள்ளிடக் கரையில் சில தினங்கள் முன்பு படுகொலை செய்யப்பட்ட பாண்டித்துரையின் பத்தினி பர்வதவர்த்தினி. நான் இனி பிழைப்பேன் என்று தோன்றவில்லை. எங்களுக்கு இந்த நிலை வரும்படி செய்த அந்தப் பாவிகளை என் மாமன் பழிவாங்குவார். ஆகவே, இதைப் படிக்கும் அன்பு சகோதரரே, என் மைந்தனையையும் இந்த ஓலையையும் என் மாமா பொன்னம்பலத் தேவரிடம் ஒப்படைக்கும்படி வேண்டுகிறேன். அதற்கு பிரதியாக என் கைகளில் அணிந்திருக்கும் பச்சைக்கல் பதித்த கங்கணங்கள் இரண்டையும் பரிசளிக்கும்படி என்னைக் காத்த அம்மையாரிடம் சொல்லியிருக்கிறேன்.’’ என்று எழுதப்பட்டிருக்கிறது. அத்துடன் உள்ள மற்றொரு ஓலையில் பொன்னம்பலத் தேவருக்கு அவள் எழுதிய கடிதம் இருக்கிறது. அதில் இந்த விஷஜுரத்தில் தான் பிழைக்க மாட்டேன் என்றும், தன் கணவரைக் கொன்றது சிவஞானத்‌ தேவரின் ஆட்கள் என்பதை அவர்கள் பேசியதைக் கேட்டதாகவும், அவரைப் பழிவாங்குமாறும், அவள் மகனின் மார்பில் பொற்காசு அளவில் மச்சமும், கால்களில் ஆறு விரலும் காணப்படுகின்றன என்று அடையாளங்களும் எழுதப்பட்டிருக்கிறது.

ஓலைகளைப் படித்து முடித்ததும் ஸ்தம்பித்துப் போகிறாள் பவளவல்லி. அதற்குள் சில ஆட்களுடன் வந்த வீரத்தேவன் அவளை எதுவும் பேச விடாமல் மீண்டும் கவர்ந்து செல்கிறான். அங்கே சென்றதும் பவளவல்லி தான் தப்புவதற்காக எதிரில் வந்த கிழவியைக் கொன்று விட்டு ஓடிவிட்டாள் என்று மங்களாம்பிகை குற்றம் சாட்ட, கோபத்தில் கொந்தளிக்கும் பவளவல்லி, வீரத்தேவனிடம் உண்மைகளைப் போட்டு உடைக்கிறாள். அதன் வீரியம் தாங்காமல் மயக்கமாகிறாள் மங்களாம்பிகை.

ங்கே கதையை நிறுத்திவிட்டு, படப்பிடிப்பு தொடர்ந்து நடப்பதால் இரண்டு தினங்கள் கழித்து நடிகை காமினியிடம் கதையைத் தொடந்து சொல்கிறார் கதாசிரியர்.

மூர்ச்சை தெளிந்ததும் ஓர் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டு ‘தன் பரமவைரியின் மகனைத் தத்தெடுத்து வளர்த்து விட்டோமே’ என்ற அதிர்ச்சியைத் தாளாது, வைரமோதிரத்தைப் பொடி செய்து விழுங்கி உயிரை விடுகிறாள். இந்த உண்மைகளை ஜீரணிக்க இயலாமல் பல தினங்கள் அதிர்ச்சியுடன் திரியும் வீரத்தேவன், பின் மனம் தேறி, பவளவல்லியைத் திருமணம் செய்து கொண்டு தன் பாட்டனார் பொன்னம்மபலத் தேவரைச் சந்திக்கிறான். ‘‘என் குலக்கொழுந்தே! உன்னை யாரென்று தெரியாமல் வெறுத்தேனே!’’ என்று அவனைக் கட்டியணைக்கிறார் அவர்.

‘‘இதுதான் இந்த வீரத்தேவன் கோட்டையின் கதை’’ என்று முழுவதுமாகச் சொல்லி முடிக்கிறார் கதாசிரியர். அன்றுடன் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிவதனால் அனைவரும் புறப்படுகின்றனர்.

....என்னங்க... பேக்கேஜ் டூர் மாதிரி சுருக்கமா கதையைப் படிச்சுட்டீங்க. பிடிச்சிருந்ததா? முழுசாப் படிக்கணும்னு தோணிச்சுன்னா... உடனே லைப்ரரிக்கு ஓடுங்க. எந்த மாதிரி சுவாரஸ்யமான இடங்கள்ல லக்ஷ்மியம்மா கதாசிரியர் மூலமா ப்ரேக் விட்டுட்டு, நம்ம படபடப்பை கூட்டிட்டு அப்புறம் தொடர்ந்திருக்காங்கன்றதை கவனிச்சீங்களா? நல்ல யுத்தியா இருக்கில்ல..!  லக்ஷ்மியம்மாவின் வித்தியாசமான இந்தக் கதையைத் தந்ததுபோல அவர் எழுதிய அருமையான குடும்பக் கதைகளில் ஒன்று இன்னொரு கேப்ஸ்யூலாக பின்னர் தருகிறேன்.

Wednesday, January 2, 2013

இனி இல்லை இடைவேளை!

Posted by பால கணேஷ் Wednesday, January 02, 2013
ஹாய்... ஹாய்... ஹாய்...!

அனைவரும நலம்தானே...! பிறந்திருக்கற இந்த புதுவருடம் உங்களுக்கு நிறைய வெற்றிகளையும் முழுக்க முழுக்க சந்தோஷங்களையும் நிரப்பினதா அமையட்டும்னு மனம் நிறைய வாழ்த்தறேன். நேற்றைய தினம் எனக்குப் புத்தாண்டு வாழ்த்துச் சொன்ன நண்பர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி. பதிப்பக நிறுவனத்துல ‌பணிக்குச் சேர்ந்ததால புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு நிறையப் புத்தகங்களைத் தயாரிக்கும் பொருட்டு இரவு பகல் பாராமல் பணி செய்ய வேண்டியதாய் அமைந்தது சென்ற மாதம். எல்லாத்தையும் முடிச்சிட்டு இதோ மீண்டும் வந்துட்டேன். இனி முன்போல் ஒரு தினம் விட்டு ஒரு தினம் தொடர்ந்து எழுதுவதாக உத்தேசம். அவனியிற் சிறக்க தேவி பராசக்தி அருள் புரிவாளாகுக! (பாரதியார் கவிதைகள் படிச்சு, வொர்க் பண்ணினதோட பாதிப்பு. ஹி... ஹி...)

ஜனவரி மாதம் பிறந்தது என்றாலே திருவிழா மயம்தான். பொங்கல் திருவிழா ஒன்றாலேயே இந்த மாதம் களைகட்டி விடும் அனைவருக்கும். சென்னைவாசிகளுக்கோ அத்துடன் புத்தகத் திருவிழாவும் சேர்ந்து கொள்வதால் டபுள் தமாக்காதான். இம்மாதம் 11 ம் தேதி முதல் 23ம் தேதி வரை நந்தனம் ஒய்எம்சிஏ கிரவுண்டில் புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த வருஷ புத்தகக் கண்காட்சி எனக்கு மிகமிக விசேஷமானது.

காரணம் 1 : சிங்கப்பூரில் வசிக்கும் தம்பி சத்ரியன் எழுதிய ‘கண் கொத்திப் பறவை’ மற்றும் நண்பர் சி.கருணாகரசு எழுதிய ‘நீ வைத்த மருதாணி’ ஆகிய கவிதைப் புத்தகங்களை நான் வடிவமைத்து இருக்கிறேன். ‘கண்கொத்திப் பறவை’ - கவிதைகளைப் படித்தால் உங்கள் மனங்களைக் கொத்திச் சென்று விடுவார் கவிஞர் சத்ரியன். ‘நீ வைத்த மருதாணி’ - அவள் வைத்த மருதாணி சில தினங்களில் கலைந்து விடும். கருணாகரசுவி்ன் கவிதைகள் மருதாணியாக உங்கள் மனங்களில் ஒட்டிக் கொண்டு கலையவே கலையாது. அத்தனை அழுத்தமான கவிதைகள் இவர்கள் இருவருடையதும். உள்ளடக்கத்திலும் சொல்லாடலிலும் அழகான இவர்களின் கவிதைகளை வடிவமைப்பால் மேலும் அழகாக்க நான் முயன்றிருக்கிறேன். வெற்றி பெற்றிருக்கிறேனா என்பதை நீங்கள் அவசியம் படித்துவிட்டுச் சொல்ல வேண்டும். இந்தப் புத்தகங்கள் ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ ஸ்டாலில் கிடைக்கும்.

காரணம் 2 : நான் எழுதிய ‘சரிதா’ கதைகள் மற்றும் சிரித்திரபுரம் ஆகியவை சிறுகதைகள் தொகுக்கப்பட்டு புத்தக வடிவம் பெற்றிருக்கின்றன. இந்தப் புத்தகமும் ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ ஸ்டாலில் கிடைக்கும். மற்றும் சில ஸ்டால்களிலும் கிடைக்கச் செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறேன். ஸ்டால் நம்பர்கள் அடுத்தடுத்து வரும் பதிவுகளில் விளக்கமாய் தெரிவிக்க(விளம்பரப்படுத்த?)ப்படும். தமிழில் வெளியான மிகச் சிறந்த நகைச்சுவை(!)ப் புத்தகங்களில் ஒன்றான(?) இந்தப் புத்தகத்தை நீங்கள் அவசியம் வாங்கிப் படித்து சிரிக்க (முயற்சிக்க) வேண்டும் என்பது என் வேண்டுகோள் மற்றும் ஆலோசனை. ஹி... ஹி...

அப்புறம்... தமிழனாய்ப் பிறந்தவர்கள் அவசியம் படித்திருக்க வேண்டிய புத்தகங்கள் என்று நான் மதிக்கும் ‘பாரதியார் கவிதைகள்’ மற்றும் மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே.சாமிநாதய்யரின் ‘என் சரித்திரம்’ ஆகிய இரண்டும் விகடன் வெளியீடாக வருகின்றன. ‘கோச்சடையான்’ என்ற மன்னின் வாழ்க்கையை கெளதம நீலாம்பரன் அழகாக எழுதியது குமுதம் வெளியீடாக வருகிறது. இவற்றை வாங்கிப் படிக்கலாம் என்று ‘டிக்’ அடித்து வைத்திருக்கிறேன். மற்ற நல்ல புத்தகங்களின் வருகையைப் பற்றி முதல்தினம் ஒரு ரவுண்டு போய்ப் பார்த்துவிட்டு வந்து எழுதுவதாக ஒரு உத்தேசம் இருக்கிறது.

‌வேறென்ன... இந்தியத் தலைநகரில் 6 மிருகங்களால் ஒரு பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவம் இந்தியனாய்ப் பிறந்தமைக்காய் நம்மைத் தலைகுனிய வைத்தன என்றே சொல்ல வேண்டும். இதனால் நிகழ்ந்த போராட்டங்களும், அபத்தமாய் அரசியல் புள்ளிகள் உதிர்த்த கருத்துக்களும், ‘எப்படி வேண்டுமானாலும் ஆடை அணிவது பெண்கள் சுதந்திரம்’ என்று பெண்கள் அமைப்புகள் உயர்த்திய புரட்சி(?)க் கொடியும் அந்தப் பெண்ணின் இறப்பும் நீஙகள் அறிந்ததே. இந்த விஷயத்தில் தவறு இரவில் தனியாக வந்த அந்தப் பெண்ணின் மீதோ, அந்த இளைஞர்களின் குடியின் மீதோ,அல்ல... பெண்மையை மதிக்கக் கற்றுத் தராமல் அவர்களை மிருகங்களாக வளர்த்த‌ பெற்றோர் மற்றும் ஆசிரியர்களைச் சார்ந்தது என்று நான் நினைக்கிறேன்.

நேற்றைய தினம் நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகர் அனுப்பிய புத்தாண்டு வாழ்த்து வந்தது. மிகச் சரியாக ஒன்றாம் தேதி கைக்குக் கிடைக்கும் வண்ணம் நம் தபால் துறையின் வேகத்தை(!)க் கணக்கிட்டு அனுப்பிய அவரின் திட்டமிடலை வியந்து கொண்டே பிரித்துப் பார்த்தேன். என் மன ஓட்டத்துக்கு ஏற்ப அவர் அழகாய் வடிவமைத்து வெளிப்படுத்தியிருந்தார். அதை இங்கே மகிழ்வுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


ரைட்டு... ஒரு புதிய, வித்தியாசமான கேப்ஸ்யூல் நாவலோட உங்களை வெள்ளிக்கிழமை சந்திக்கறேன். ஸீ யு.
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube