Tuesday, January 29, 2013

ச்சும்மா.... கொஞ்சம் ஜாலியா...!

Posted by பால கணேஷ் Tuesday, January 29, 2013
ஹாய்,,, ஹாய்,... ஹாய்.... நான் நல்ல சந்தோஷமான மூட்ல இருக்கேன்றதால... இன்னிக்கு எந்த மேட்டரையும் எழுதி உங்களைத் துன்புறுத்த வேணாம்னு முடிவு பண்ணிட்டேன். (காரணம் கடைசியில சொல்லப்படும்.) இங்க நான் தந்திருக்கற புகைப்படங்களைப் பார்த்து மெல்லிய புன்னகை சிந்திட்டுப் போங்க.

டைமே இல்லப்பா... பிஸி(னஸ்)மேன் நான்!

குழந்தை எங்க போயிரப் போவுது? ‘விஸ்வரூபம்’ எப்ப ரீலீஸ்னு மெசேஜ் வந்திருக்கு... பாத்துடறேன் முதல்ல...

என் கிட்டருந்து பந்தை தட்டிப் பறிக்க எந்தக் கொம்பனாலயும் முடியாது...!

இப்படி டெய்லி காசு போட்டு பணம் சேத்தா தான் குட் பாய்!

‘‘இதான் விஸ்வரூபம் ரிலீஸாகாம இருக்கறதுக்கு நிஜக் காரணம். நான் சொன்னேன்னு கமல்கிட்ட சொல்லிடாதீங்க, சரியா...?’’

லண்டன்ல எங்க நல்ல சாப்பாடு கிடைக்கும்னு தெரிஞ்சுக்காம எப்படி அங்க பறக்கறதாம்...?
‘‘உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே கிடையாதாடா...?’’



வலையுலகில் 500 அடிச்சுட்டு அசால்ட்டா பல பேர் அடிச்சு ஆடிட்டிருக்கறப்ப வெறும் 200 அடிச்சுட்டு நான் ‘ஆடக்’கூடாதுதான்! ஆனா சற்று பின்னோக்கி்ப் பார்த்தால் நான்தான் எழுதினேனா என்று எனக்கே பிரமிப்பாகத் தான் இருக்கிறது. அப்படி நான் தொடர்ந்து எழுதிட்டு வர்றதுக்கு காரணம் நீங்க... நீங்க... நீங்க மட்டும்தான். அதனால என்னை செயல்பட வைக்கிற உங்களுக்கு மிகமிக மகிழ்வோடயும், மன நெகிழ்வோடயும் என் நன்றி!

Sunday, January 27, 2013

‘காலா’வின் ‘ரணகளம்!’

Posted by பால கணேஷ் Sunday, January 27, 2013

டைரக்டர் காலா சிந்தனையுடன் மோட்டுவளையைப் பார்த்தபடி அமர்ந்திருக்க, நடிகர் குஜய் தன் அப்பா பந்திரசேகருடன் உள்ளே நுழைகிறார்.

காலா, ‘‘வாங்க குஜய்! ‘கீனந்த சகடன்’ பத்திரிகைல என் இயக்கத்தில நடிக்க விருப்பம்னு பேட்டி குடுத்திருந்தீங்க. படத்தை எப்ப ஆரம்பிக்கலாம்’’ என்க, ‘‘நான் ரெடி காலா ஸார். ஸ்டோரி ரெடி பண்ணிட்டீங்களா?’’ என்று கேட்கிறார் குஜய். அவரை மேலும் கீழும் அழுத்தமாகப் பார்த்தபடி சொல்கிறார் காலா: ‘‘ஸ்டோரிக்கென்ன.... அது எப்பவோ ரெடி. ‘ரணகளம்’ங்கறது படத்தோட பேரு. ஆனா என் ஹீரோ கேரக்டர்ல நீங்க செட்டாகணும்னா அதுக்கு நீங்க இப்பருந்தே தயாராகணும். அப்பத்தான் ஆறு மாசம் கழிச்சு ஷுட்டிங் போக முடியும்...’’ என்று அவர் சொன்னதும், ‘‘என்ன பண்ணனும் சொல்லுங்க. அசத்திரலாம்’’ என்று குஷியாகிறார் குஜய்.

‘‘முதல்ல இதைப் பிடிங்க...’’ என்று காலா ஒரு டப்பாவை நீட்ட, அதில் மூன்று எலிகள் இருக்கின்றன. குஜய், ‘‘என்னங்ணா இது?’’ என்று குழப்பமாகப் பார்க்க, ‘‘இந்த எலிங்களை .உங்க பெட்ரூம்ல விட்டுட்டு தூங்கணும். பயப்படாதீங்க. நல்லா ட்ரெய்னிங் கொடுத்திருக்கு. நைட் உங்க தலைமுடிய அங்கங்க கடிச்சுக் குதறிடும். மார்னிங் பாத்தா டிஃபரன்ட்டா ஒரு ஹேர்ஸ்டைலோட இருப்பீங்க. அதான் நம்ம ஹீரோ கேரக்டருக்கு தேவை...’’ என்க, இம்சை அரசன் வடிவேலு மாதிரி ‘உவ்’ என்று வாயைப் பொத்திக் கொள்கிறார் குஜய். பந்திரசேகர், ‘‘போலாமா?’’ என்கிறார். சுதாரித்துக கொண்டு ‘‘சரி... டைட்டிலைப் பாத்தா, ஆக்ஷன் சப்ஜெக்ட் மாதிரி இருக்கு. இப்பவே சிக்ஸ் பேக்குக்கு ரெடியாயிடவா?’’ என்கிறார் குஜய்.

‘‘சிக்ஸ் பேககா...? நோ... நோ... என் படத்துக்கு சிங்கிள் பேக் இருந்தாப் போதும்! இன்னும் ஆறு மாசத்துக்கு நீங்க தண்ணி மட்டும்தான் குடிக்கணும். நோஞ்சான் பாடிய உண்டாக்கிக்கணும்...’’ என்கிறார் காலா. குஜய் பரிதாபமாக பந்திரசேகரைப் பர்க்க, ‘‘ஆனா படத்துல ஆக்ஷன் சீன்லாம் உண்டு. க்ளைமாக்ஸ்ல வில்லன் டவர்ஸ்டார் கோனிவாசனோட உக்கிரமா சண்டை போடறீங்க...’’ என்று காலா சொல்ல, அதிர்ச்சியாகிறார் குஜய்.

‘‘என்னது...? டவர்ஸ்டார் கோனிவாசன் வில்லனா? என்னங்ணா இது?’’ என்க, ‘‘அவரும் உங்க மாதிரி என் படத்துல நடிக்க விருப்பம்னாரு. வில்லனாக்கி்ட்டேன். அவர்மேல கரியப் பூசி கருப்பு கலராக்கிட்டு, முகத்துல ரெண்டு பல்லு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கா பொருத்தப் போறேன். ஸ்க்ரீ்ன்ல வந்து அவர் சிரிச்சாலே டெரரா இருக்காது...?’’ என்று சிரிக்கிறார் காலா.

‘‘ண்ணா..! அவர் சாதாரணமா வந்து சிரிச்சாலே டெரராத்தாங்ணா இருக்கும்... இதுவேற தேவையாங்ணா?’’ என்று குஜய் பம்ம, ‘‘தியேட்டரை விட்டு ஜனங்க தெறிச்சு ஓடிடும் மை ஸன்’’ என்று மெல்லிய குரலில் சொல்கிறார் பந்திரசேகர்.

‘சரி, விடுங்க... ஹீரோயின் கேரக்டர் பத்திச சொல்லுங்க...’’ என்று குஜய் ஆர்வமாகக் கேட்க, ‘‘கூஜான்ற பொண்ணுதான் ஹீரோயின். எப்பவும் வெத்தலை மென்னு துப்பறதால வாய் மட்டும் செவப்பா இருக்கும் அவளுக்கு. கொஞ்சம் லூசு மாதிரி ஒரு கேரக்டர்...’’ என்று காலா சொல்ல, ‘‘ஏன் சார்... நார்மலா ஒரு கேரக்டர்கூட உங்க படத்துல வெக்க மாட்டீங்களா?’’ என்கிறார் பந்திரசேகர். ‘‘அப்டில்லாம் வெச்சா அது காலா படமே இல்லன்னு சொல்லிடுவாங்க ஸார். ஆனாலும் காமெடியன் பஞ்சா பருப்பு இல்லாட்டி கிருணாஸ கேரக்டரை குஜய்க்கு ஃப்ரெண்டாப் போட்டு அவங்களை நார்மல் கேரக்டரா வெச்சிடுவேன்’’ என்று சிரிக்கிறார் காலா.

‘‘அந்த க்ளைமாக்ஸ் ‌ஃபைட்டைப் பத்திக் கேளுங்க... உக்கிரமான கோபத்தோட நீங்க வந்து டவர்ஸ்டார் மண்டையில உங்க கையால அடிக்கறீங்க. நோஞ்சானோட எலும்புக் கைங்கறதால அவர் மயக்கமாயிடறாரு. நீங்க அவரை மடியில போட்டுக்கிட்டு, நீளமான நகத்தால அவர் வயித்தைக் கிழிச்சு குடலை உருவி கழுத்துல போட்டுக்கறீங்க. ரத்தத்தைக் குடிச்சுட்டு, ஸ்க்ரீனைப் பார்த்து சிங்கம் மாதிரி உறுமறீங்க. உங்க முகத்துல ஃப்ரீஸ் பண்ணி, ‘எ ஃபிலிம் பை காலா’ன்னு டைட்டில் போடறோம். எப்பூடி?’’ என்று பெருமையாய்ப் பார்க்கிறார் காலா. ‘உவ்’ என்று மறுபடி குஜய் வாயைப் பொத்திக் கொள்ள, ‘‘கன்ஃபர்ம்ட்! தியேட்டர்ல இதைப் பாக்க ஒரு பய இருக்க மாட்டான் மை ஸன்’’ என்கிறார் பந்திரசேகர் மெதுவாக.

‘‘படத்தோட ஸ்டோரி லைன் என்னன்னா...’’ என்று காலா ஆரம்பிக்க, குறுக்கிடுகிறார் குஜய். ‘‘ண்ணா...! எனக்கு வயித்தைக் கலக்கிடுச்சு. போய்ட்டு அப்புறம் ஃபோன் பண்ணிட்டு வர்றேங்ணா... அடுத்த டிஸ்கஷன்ல இதைப் பத்தி பேசிக்கலாம்ங்ணா...’’ என்று அவசரமாக எழுந்து பந்திரசேகருடன் வெளியே வருகிறார். அங்கே ஜீன்ஸ், டிஷர்ட்டில் நின்றிருக்கிறார் இயக்குனர் ஊரரசு.

‘‘வாங்க குஜய் ஸார்... இதெல்லாம் ஒர்க்கவுட் ஆகாதுன்னு எனக்குத் தெரியும். என்கிட்ட அதிரிபுதிரியா ஒரு ஆக்ஷன் சப்ஜெக்ட் இருக்கு. நாம பண்ணலாம்... படத்தோட பேரு பட்டிவீரன் பட்டி. நீங்க பட்டி வீரனா நடிக்கறீங்க. நான் பட்டியா நடிக்கிறேன். ஓகேவா?’’ என்கிறார். ‘‘ஏன்யா? டைட்டில் வைக்க ஊர்ப் பேரை விட்டா உனக்கு எதும் தோணாதா?’’ என்று பந்திரசேகர் சிரிக்கிறார்.

‘‘அதாங்க நம்ம அடையாளமே... ஓப்பனிங் ஷாட்ல ஒரு கிராமத்தையே ஒரு ரவுடிக் கூட்டம் வளைச்சு அட்ராசிட்டி பணணிட்டிருக்கு அப்ப காத்துல ஒரு அருவாள் பறந்து வந்து தரையில விழாம அந்தரத்துலயே சுத்திச் சுத்தி வட்டம் போட்டுக்கிட்டு இருக்கு. வில்லன்கள் மிரண்டு ‌போய்ப் பார்க்கறாங்க. அப்ப ஆகாயத்துல ஒரு உருவம பறந்து வந்து, அருவாளைக் கேட்ச் பண்ணிட்டு பூமிக்கு லேண்ட் ஆகுது க்ளோஸ் அப் வெச்சா.. அது குஜய் ஸார்... கைல அருவாளோட நம்ம கூப்பர் ஸ்டார் கஜினி மாதிரி ஒரு கையால சல்யூட் அடிக்கிறீங்க... அப்ப நீங்க பஞ்ச் டயலாக் பேசுவீங்கன்னு ஜனங்க நினைப்பாங்க. ஆனா நீங்க பேச மாட்டீங்க. உங்க முதுகுக்குப் பின்னால இருந்து நான் வந்து பன்ச் டயலாக் பேசுவேன்.. அது என்னன்னா....’’ என்று ஊரரசு நான் ஸ்டாப்பாகப் பேச, கையமர்த்துகிறார் பந்திரசேகர்.

‘‘யோவ்... இதுக்கு என் டைரக்ஷன்லயே குஜய் நடிச்சிரலாம்யா. என் ஸ்டோரில ஹீரோ, நடுரோட்ல வெச்சு போலீஸ் கமிஷனரைக் கொல்றான். ஆனா அவனை சட்டத்தால அரெஸ்ட் பண்ண முடியலை அது ஏன்கறதுதான் ட்விஸ்டே’’ என்று அவர் சொல்ல, ‘‘இன்னும் நீங்க சட்டத்தை விடலையா? அதெல்லாம் ஓல்ட் ட்ரெண்ட் ஸார். என் படம் அப்படியில்ல... நீங்க கேளுங்க குஜய் ஸார் அந்த பன்ச் டயலாக்கை...’’ என்று கையை டைரக்டர் டச்சுடன் அசைத்து, ஊரரசு திரும்ப, குஜய் நின்றிருந்த இடம் காலியாக இருக்கிறது. 

‘‘எங்கே போனாரு குஜய்?’’ என்றபடி பந்திரசேகரும், ஊரரசுவும் நிமிர்ந்து பார்க்க... சற்றுத் தொலைவில் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்கிறார் குஜய்!

==================================

திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் ‘பாலகங்கை பப்ளிகேஷன்ஸ்’ (ஸ்டால் : 90)ல் என் ‘சரிதாயணம்’ புத்தகம் கிடைககும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

==================================

Friday, January 25, 2013

‘முகில்’ கிளப்பிய ‘திகில்’!

Posted by பால கணேஷ் Friday, January 25, 2013

ந்த ஒரு புத்தகத்தையும் முழுதாகப் படிக்காமல் அதுகுறித்து அறிமுகம் தருவது எனக்கு வழக்கமில்லை. இந்தமுறை நான் பாதியளவு படித்திருக்கும் இந்த ‘வெளிச்சத்தின் நிறம் கறுப்பு’ புத்தகம் பற்றிச் சொல்கிறேன் என்றால் புத்தகத்தின் சுவாரஸ்யத்தை உங்களால் உணர முடியும். புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களில் இந்த மெகாசைஸ் புத்தகத்தை முதலில் படிக்க ஆரம்பித்ததன் காரணம்...

 1) நூலாசிரியர் ‘முகில்’ நான் கிழக்குப் பதிப்பகத்தில் வேலை செய்தபோது அங்கு உதவியாசிரியராக இருந்தவர். 2) நான் மிக ரசிக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர். 3) அவர் எதுபற்றி எழுதினாலும் அதில் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமிராது -ஆகியவை தான். நூலாசிரியர் முகில் இப்போது முழுநேர எழுத்தாளர். புத்தகம், சினிமா, தொலைக்காட்சி என்று பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர். இவர் எழுதிய சந்திரபாபு பற்றிய நூல், முகலாயர்கள், செங்கிஸ்கான், அகம்புறம் அந்தப்புரம், கிளியோபாட்ரா என்று பல சுவாரஸ்யமான  நூல்களைப் பலர் படித்து அறிந்திருப்பீர்கள். அறியாதவர்கள் இப்போது அறிக.

பர்முடா முக்கோணத்தின் மேல் மிதந்த கப்பல்களும், பறந்த விமானங்களும் ஏன் காணாமல் ‌போயின என்பதை ஆராய்ச்சி செய்து பல புத்தகங்கள் வந்துவிட்டாலும் தீராத ஒரு புதிராக நீடிக்கிறது அது. அதைப் போல இந்த பூமிப் பந்தின் மேல் நிகழும் பல விஷயங்களின் பின்னே மறைந்துறையும் மர்மங்கள் விடுவிக்கப்படாதவைகளாகவே இருக்கின்றன. அத்தகைய இருட்டான பல கேஸ்களை தன் சுவாரஸ்யமான எழுத்து நடையில் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறார் முகில். நான் சொல்லிப் புரிய வைப்பதைவிட, முன்னுரையில் முகில் சொல்லியிருப்பதன் ஒரு பகுதியை இங்கே தருவது ஏற்புடையதாயிருக்கும் :

‘உலகம் மர்மங்களால் ஆனது’ என்று பறைசாற்றும்படியாக, மனித அறிவுக்கும் அறிவியலுக்கும் பிடிபடாத, விடை தெரியாத மர்மங்கள் காலந்தோறும் பெருகிக் கொண்டேதான் செல்கின்றன. இந்தப் புததகம் எதைப் பற்றியெல்லாம் பேசப்போகிறது என்று பட்டியலிடுவது சற்றுக் கடினம். ஆனால் குண்டலினி வித்தையால் பறக்க வைக்கும் சாமியார், சிவலிங்கத்தைக் கக்கும் ஆன்மீகவாதி, கூனர்களையும் குருடர்களையும் குணமாக்கும் மதகுரு போன்ற டுபாக்கூர்களை நாம் சீண்டப் போவதில்லை. ஸ்பைகேமரா வைக்கப்படாத அறையில் அவர்கள் சுபிட்சமாக வாழ்ந்துவிட்டுப் போகட்டும். தவிர ஆவி, பேய், பிசாசு, பில்லி சூனியம், கண்கட்டு வித்தை என்ற மிகக் குறுகிய வட்டத்துக்குள் மட்டும் நாம் சுற்றிவரப் போவதில்லை.

நமக்கான தளம் மிக மிகப் பெரியது. நாம் ஏற்கப்போகும் பாத்திரங்கள் (தசாவதாரம் கமலைக் காட்டிலும்) ஏராளம். ஓர் அத்தியாயத்தில் நாம் அறிவியல் ஆராய்ச்சியாளராக மாற வேண்டியதிருக்கும். அடுத்ததில் உளவியல் மருத்துவராக, அதற்கடுத்த அத்தியாயங்களில் தொல்லியல் வல்லுநர், வரலாற்று ஆய்வாளர், வானியல் அறிஞர், துப்பறியும் அதிகாரி, விலங்கியல் நிபுணர், இயற்கை ஆர்வலர், அவசியப்பட்டால் பேய் ஓட்டுகிற மநதிரவாதியாகவும் மாற வேண்டியது வரலாம். பகுத்தறிவைப் பக்கத்துத் தெரு சேட்டிடம் அடகுவைத்துவிட்டு இந்தப் புத்தகத்தைப் படிக்கத் தேவையில்லை. உலகில் விடைகாண முடியாத மர்மங்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தவே இந்தப் புத்தகம். நம் அறிவுக்கும் அறிவியலுக்கும் அப்பாற்பட்ட மர்மங்கள், விநோதங்கள், விசித்திரங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். எனில் அந்தத் தீராத புதிர்களுக்கு இதில் விடை கிடைக்குமா என்றால் என் பதில் - அந்த வெளிச்சத்தின் நிறம் கருப்பு!


என்ன... அப்படியென்ன விடைகாண முடியாத மர்மங்களின் மேல் முகில் வெளிச்சத்தைப் பாய்ச்சியிருக்கிறார் என்று அறியும் சுவாரஸ்யம் எழுகிறது தானே... நூலின் முடிவில் இதற்கு உதவிய புத்தகங்கள், ஆவணப் படங்கள், இணைய தளங்கள் என்று முகில் தந்திருக்கும் லிஸ்ட் மட்டுமே ஏழு பக்கங்ள் நீள்கிறது. அத்தனை ஆராய்ச்சி செய்திருக்கிறார் என்பதில் பிரமித்துப் போனேன். நான் ரசித்த ஒரு சுவாரஸ்ய கட்டுரையின் சில பகுதிகள் உங்களின் ஒரு சோறு பதத்திற்காய் இங்கே:

                                              நாய்களின் தற்‌கொலை முனை

தை நீங்கள் படிக்க ஆரம்பித்திருக்கும் நேரத்தில் அங்கே அந்தப் பாலத்தில் ஏதோ ஒரு நாய் தற்கொலை செய்து கொள்ளலாம். அதன் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டிக் கொண்டு தொடருங்கள். ஒரு நாய் எதற்காக தற்கொலை செய்துகொள்ள வேண்டும்? தேர்வுத் தோல்வி, காதல் தோல்வி, பிஸினஸ் தோல்வி, தேர்தல் தோல்வி உள்ளிட்ட மனிதனுக்கான காரணங்கள் எதுவும் நாய்களுக்கு இருக்கப் போவதில்லை. தனது பாசத்துக்குரிய எஜமானரை இழந்து வாடிய சில நாய்கள், நாள்கணக்கில் எதுவும் உண்ணாமல் செத்தப்போன சம்பவங்கள் உண்டு. ஆனால் தற்கொலை எல்லாம் செய்து கொள்ளாது என்கிறீர்களா... உறுதியாகச் சொல்வதற்குமுன் ஒருமுறை ஸ்காட்லாந்துவரை சென்று பார்த்துவிட்டு வந்துவிடுவோம். அதுவும் அங்கேயுள்ள மேற்கு டன்பர்ட்டன்ஷைர் நகரத்திலுள்ள ஓவர்டவுன் எஸ்டேட்டுக்கு- அதிலும் முக்கியமாக எஸ்டேட்டில் அமைந்துள்ள மர்மமான அந்தப் பாலத்துக்கு வாருங்கள்.

-இப்படி நம்மை அழைத்துச் சென்று, தோ்ட்டத்தின் அழகை வர்ணித்தபின்.. கருங்கற்களாலும் கிரானைட்டாலும் உருவாக்கப்பட்ட அந்தப் பாலம் அதிக அகலமோ, பெரும் நீளமோ கிடையாது. சுமார் இரண்டடி உயர தடிமனான கைப்பிடிச் சுவர், சுவரின் குறிப்பிட்ட இடைவெளிகளில் பாலத்திலிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருப்பதான அரைவட்ட வளைவுகள். இருபக்கமும் சேர்த்து மொத்தம் எட்டு வளைவுகள். ஒரு நாய் தன் பின்னங்கால்களை தரையில் ஊன்றி, முன்னங்கால்களை சுவர்மேல் வைத்துக் கொண்டு கீழே ஓடும் நீரோட்டத்தை ரசிக்கலாம். சுற்றியிருக்கும் இயற்கையில் திளைக்கலாம். அப்படியே பின்னங்கால்களை உந்தித் தாவி, சுமார் 50 அடி பள்ளத்தில் குதித்து தற்கொலையும் செய்து கொள்ளலாம். அக்டோபர் 2005ல் அப்படித்தான் குதித்து விட்டது பென்..

என்று மர்மத்தை ஆரம்பித்து, பென்னின் உரிமையாளரிடம் வரும் நண்பர் தன் நாய் அதேபோல் இறந்ததைச் சொல்லும் போது வியப்பை ஏற்படு்ததி, அடுத்தடுத்து தற்செயலாகவும், சோதனைக்காகவும் அங்கு அழைத்துச் செல்லப்பட்ட நாய்கள் எல்லாம் தற்கொலை செய்து கொண்டதை விவரிக்கிறார். அங்கே மட்டும் நாய்கள் எல்லாம் ஏன் குதித்து உயிர் விட வேண்டும் என்று கண்டறிய ஆன்மீகத்தின் வழியிலும், விஞ்ஞான ரீதியாகவும் நடந்த பல ஆராய்ச்சிகளை விரிவாக விவரித்திரு்க்கிறார் முகில். முத்தாய்ப்பாக இப்படி முடிக்கிறார்.

இப்போது வரை ஓவர்டவுன் பாலத்தின் நாய் மர்மம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அது தீர வேண்டுமென்றால் இரண்டு விஷயங்கள் நடக்க வேண்டும். ஒன்று ஏதாவது ஒரு நாய் தற்கொலை செய்வதற்கு முன்பாக ‘என் சாவுக்குக் காரணம்....’ என கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சாக வேண்டும். அல்லது நாமே நாயாக மாறி, ஓவர்டவுன் பாலத்திற்குச் சென்று....

அலுவலகப் பணி, வெளி வேலைகள் இவற்றுக்கிடையில் கிடைக்கும் சமயங்களையெல்லாம் ‘என்னை உடனே படித்துமுடி’ என்று திருடிக் கொண்டு தொல்லை தந்து கொண்டிருக்கிறது இந்தப் புத்தகம். இத்தனைக்கு மேலும் விரிவாக நான் என்னத்தைச் சொல்ல...? ‘தமிழக அரசியல்’ இதழில் ஏறத்தாழ 35 வாரங்கள் முகில் எழுதிய இந்தத் தொடரை 320 பக்கங்களில், 200 ரூபாய் விலையில், 10/2 (8/2), போலீஸ் குவாட்டர்ஸ் சாலை, தி.நகர், சென்னை-17ல் இருக்கும் ‘சிக்ஸ்த் சென்ஸ்’ பதிப்பகத்தினர் வெளியிட்டிருக்கிறார்கள். (தொ.பே.2423 2771, 65279654).

=====================================

ன் ‘சரிதாயணம்’ நூலுக்கு இந்தப் பதிவில் அழகான அறிமுகம் தந்த வெங்கட் நாகராஜ், இந்தப் பதிவின் மூலம் அழகான ஒரு திறனாய்வைச் செய்த சீனு, இந்தப் பதிவின் மூலம் மனமகிழும் மதிப்புரை தந்த ஸ்ரவாணி, இந்தப் பதிவின் மூலம் என்னைப் பெருமைப்படுத்திய ‘எங்கள் ப்ளாக்’ மற்றும் இந்தப் பதிவின் மூலம் இனி படிக்கப் போவதாகச் சொன்ன ஹாரி ஆகிய என் நட்புகளுக்கு என் இதயம் நிறைந்த நன்றி. இன்னும் இந்தப் புத்தகம் பற்றி எழுதவிருக்கும் உங்களில் பலருக்கும், இவற்றையெல்லாம் படி்த்து எனக்கு தெம்பூட்டும் கருத்தைத் தந்த அனைத்து நல்இதயங்களுக்கும் மனநெகிழ்வுடன் என் நன்றி!

Wednesday, January 23, 2013

மொறு மொறு மிக்ஸர் - 15

Posted by பால கணேஷ் Wednesday, January 23, 2013

மீபத்தில் புத்தகக் கண்காட்சிக்குப் போகும் வழியில் பல இடங்களில் ‘வைரமுத்துவின் 37 புத்தகங்கள்’ என்று போட்டு ஸ்டால் எண்களைத் தெரிவித்த போஸ்டர்கள் கண்ணில் பட்டன. சிந்தனை முகமாய் புத்தகத்தைப் புரட்டியபடி கவிஞர் ‌வைரமுத்துவின் புகைப்படம் அச்சிட்டிருந்த அந்த போஸ்டர்களில் ‘தமிழின் நிகழ்காலம்’ என்று வைரமுத்துவைப் புகழ்ந்திரு்ந்தார்கள். ‘‘அடாடா... வைரமுத்து ஸார் தமிழின் நிகழ்காலம்னா, ‘அவர்’ கடந்த காலம்னு இவங்களே ஒத்துக்கறாங்களா...?’’ என்று கேட்டது மனஸ். ‘‘தெரியலையேப்பா... தெரியலையே...’’ என்று சிவாஜி குரலில் பதிலளித்தேன் நான்.

=======================================

மீபத்தில் ரசித்த சர்தார்ஜி ஜோக்: ரயில் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. திடீரென்று எட்டு சர்தார்ஜிகள் ரயில் வரும் சமயம் பிளாட்பாரத்திலிருந்து தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்கள். அதில் இரண்டு பேர் மீது ரயில் ஏறிவிட்டது. மற்றவர்களை கைது செய்திருக்கிறார்கள். செய்தி சேகரிக்க வந்த பத்திரிகை நிருபர், பிளாட்பாரத்தில் குப்புறப் படுத்திருந்த ஒரு சர்தார்ஜியை எழுப்பிக் கேட்டான். ‘‘அவங்க ஏன் தற்கொலைக்கு முயற்சி பண்ணினாங்க?’’

‘‘தற்கொலையா? அதெல்லாம் ஒண்ணுமில்ல... ரயிலுக்காக வெயிட் பண்ணிட்டிருந்தப்ப, அனவுன்ஸ்மென்ட்ல ‘ரயில் முதலாவது பிளாட்பாரத்திற்கு வந்து சேரும்’னு சொன்னதும், இவங்க பயந்து போய் பி்ளாட்பாரத்துல இருந்தா ரயில் மோதி செத்துருவோமேன்னு தண்டவாளத்துக்கு பாய்‌ஞ்சுட்டாங்க...’’ என்றார்.

நிருபர் வியப்புடன், ‘‘அவங்க எல்லாம் முட்டாள்களா இருந்தாலும் நீங்க ஒருத்தராவது புத்திசாலியா நடந்துக்கிடடீங்களே...’’ என்றார். சர்தார்ஜி சோகமாக, ‘‘நீங்க வேற ஸார்... நான்தான் உண்மையில தற்கொலை பண்ணிக்க வந்தவன். அனவுன்ஸ்மென்டை கேட்டதும் ரயில் என்மேல ஏறட்டும்னு குப்புறப் படுத்துட்டேன். அந்த பாழாப் போன ரயில் அவுங்க சொன்னபடி பிளாட்பாரத்துல வராம, தண்டவாளத்துல வந்து ஏமாத்திடுச்சு...’’

=======================================

மீப்த்தில் டீக்கடையில் கேட்ட உரையாடல்:

‘‘ஹும்! சேவை வரியை ரத்து செய்யணும்னு கோரி சினிமா உலகத்தைச் சேர்ந்தவங்க உண்ணாவிரதம் இருக்காங்களாம். அவங்க ப்ளாக் மணி வெச்சுக்காம இருந்தாலே அரசாங்கத்துக்கு நிறைய வரி கட்டலாமே...’’

‘‘நானும் அந்த நூஸைப் பட்ச்சேம்ப்பா. ஒரு விஸ்யம் புரில எனுக்கு.,.. அதின்னாது அது சேவை வரி?’’

‘‘அது ஒண்ணுமில்ல தம்பி. படம் பாக்கற நாமல்லாம் கேளிக்கைய அனுபவிக்கறோம்கறது்க்காக டிக்கெட்லயே கேளிக்கை வரி செலுத்தறோம்ல. அதுமாதிரி... அவங்க சேவை வரின்னு ஒண்ணு அரசாங்கத்துக்க கட்டணு்ம். அதை விதிக்கக் கூடாதுன்ற கோரிக்கைகாகத்தான் உண்ணாவிரதம்.’’

‘‘நான் ஒண்ணும் கேளிக்கை வரி கட்டறதில்லையேப்பா...’’

‘‘நீ தனியா கட்ட வேணாம். படம் பாக்கற ஒவ்வொருத்தரையும் தேடிப் பிடிச்சு வரி வசூலிக்க முடியாதுன்னுதான் அரசாங்கம் சினிமா டிக்கெட்லயே அதைச் சேர்த்திருக்கு. டிக்கெட் விற்பனைலருந்து தியேட்டர்காரங்க அதைக் கட்டிருவாங்க...’’

‘‘ஓ... அப்படியா விஸ்யம்? ஆனா ஒண்ணு புரியலப்பா... நாம கேளிக்கைய அனுபவிக்கறோம், அதனால கேளிக்கை வரி செலுத்தணும். அதான் ஞாயம். ஆனா இவங்கதான் யாருக்கும் எந்த சேவையும் செய்யலையே... அப்புறம் இன்னாத்துக்கு இவுங்க மேல சேவை வரி? அதான் நீக்கச் சொல்லிப் போராடறாங்க அல்லாரும். ரொம்பக் கரீக்டுப்பா...’’

=======================================

மீபத்தில் படித்ததில் ரசித்தது:

ந்த விமானத்தில் வந்தவர்களனைவரும் வெளியே போய் விட்டார்கள்- ஒரே ஒருவரைத் தவிர. நாலு கெளண்ட்டர் தள்ளி ராஜீவ்காந்தியின் இரு பெரிய பெட்டிகள், கைப்பைகள் திறக்கப்பட்டு, உள்ளேயிருந்த துணிமணிகள், சாமான்களெல்லாம் வெளியே வாரியிறைக்கப்பட்டிருந்தன. அங்கே இருந்த சோதனை அதிகாரி பெட்டியில் இன்னும் ‘எதையோ’ தேடிக் கொண்டிருந்தார். ஒரு மணி நேர வதக்கலுக்கப்புறமும் ராஜீவின் முகத்தில் புன்னக‌ை மாறவில்லை. ஆபீஸர் பார்த்த சாமான்களை திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு ராஜீவ் பொறுமையாக பதிலளித்துக் கொண்டிருந்தார்.

கண்ணாடிச் சுவர் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த எனக்குப் பொறுக்கவில்லை. ‘‘என்னடா இது... இரண்டு மணி நேரமா அவர் பொட்டியில எனு்னடா தேடறீங்க. அவர் யாரு தெரியுமில்ல...? முன்னாள் பிரதமரின் மகன்! அவரென்ன கடத்தல்காரரா? ஏண்டா இப்படிப் படுத்தறீங்க? உண்மையான கடத்தல்காரனைக் கண்டுபிடிக்கறதில்லே...’’ என்று பொரிந்து தள்ளினேன். அதற்கு ரஙகராஜன், ‘‘எங்களுக்கும் டூட்டி முடிஞ்சு வீட்டுக்குப் போகணும். ஆனா மேலிடத்திலிருந்து ஆர்டர்- குறைந்தது ரெண்டு மூணு மணி நேரமாவது அவரைத் ‘தாளித்து’ அனுப்ப வேண்டுமென்று நார்த் பிளாக்கிலிருந்து உத்தரவு. எங்களுக்கும் கஷ்டமாத்தான் ஸார் இருக்கு. ஆனா நாளைக்கு போன் வ்ந்தா நாங்க பதில் சொல்லியாகணும்’’.

எனக்கு கோபம் தாளவில்லை. ஆனால் ராஜீவ்காந்தியோ தனக்கு ஏன் இவ்வாறெல்லாம் நடக்கிறது என்று நன்றாகத் தெரிந்திருந்தும் அவர் காத்த பொறுமையை என்னால் வியக்காமலிருக்க முடியவில்லை. எப்படி அவரால் அந்தச் சமயத்தில் கடுப்பின்றிச் சிரிக்க முடிந்தது? உண்மையிலேயே பெரிய மனிதர். கடைசியில் மூன்று மணி நேர சித்ரவதைக்குப் பிறகு வெளியில் வாரியிறைத்த துணிகளை பெட்டியில் அடைக்க முயன்று, அது முடியாமல் ஒரு பெட்ஷீட்டில் தனி மூட்டையாகக் கட்டி அதை சுமந்து கொண்டு புன்சிரிப்பு மாறாமல் ஏர்போர்ட்டுக்க வெளியே காத்திருந்த காருக்கு நடந்து போனார்- பிற்காலத்தில் பிரதமராகப் போகும் அந்த முன்னாள் பிரதமரின் மகன்.

இந்தச் சம்பவம் சென்னை விமானநிலையத்தில் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களின் வாரிசு ஒருவருக்கு நேர்ந்தால் என்னாகும் என்று ஒரே ஒரு கணம் நினைத்தப் பாருங்கள். தன் ஓட்டை மோட்டார் பைக்கல் தப்பாக ஓன்வேயில் ‌போய் போலீஸ்காரரிடம் மாட்டிக் கொண்ட என்னைப் போன்ற பொதுஜனம், ‘‘நான் யாரு தெரியுமில்லே... 17வது வார்டு கெளன்சிலருக்கு ஒண்ணுவிட்ட மாமனோட சித்தப்பா எனக்கு மச்சான் முறை. கமிஷனருக்கு போன் போடுய்யா’’ என்று சொல்கிற இந்தக் காலத்தில் ஒரு வித்தியாசமான உண்மைக் காட்சிக்கு நான் ஒரு சாட்சி.

-‘பல நேரங்ளில் பல மனிதர்கள்’ புத்தகத்திலிருந்து. எழுதியவர்: பாரதி மணி.

=======================================

‘‘சமீபத்துல தொடர்ந்து ஹாலிடேவா வந்துச்சா... ஃபுல்லா வாங்கிவச்சு சரக்கு இன்னும் தீரலப்பா... மப்பும் இன்னும் தெளிய மாட்டங்குதுப்பா...!’’



=======================================

கரு்த்துப் பெட்டிக்கு சமீபத்தில் இருக்கீங்க. புடிச்சிருந்துச்சான்னு சொல்லிட்டுப் போங்க. ஹி... ஹி...

Monday, January 21, 2013

மூ்ன்று சந்தோஷ நிகழ்வுகள்!

Posted by பால கணேஷ் Monday, January 21, 2013

19.01.2013 சனி்க்கிழமை அன்று கவிஞர் சத்ரியன் புத்தகக் கண்காட்சிக்கு வருவதாகச் சொல்லியிருந்ததால் மதியம் 2 மணிக்கு ‌அங்கு சென்றேன்.நான் கிளம்புவதற்கு முன்பே செல்வி சமீரா போன் செய்து தான் பு.க.வில் இருப்பதாகச் சொல்ல, அவரை ‘டிஸ்கவரி’க்கு வரச் சொல்லியிருந்தேன். தம்பி சத்ரியனைச் சந்தித்து பேசி மகிழ்ந்தபோது சமீரா வர, அவரை அறிமுகம் செய்தேன். அப்‌போது ‘தென்றல்’ வீசியது. சசிகலா வந்தாங்க. பேசிக்கிட்டே ஸ்டாலை விட்டு வெளில வந்தா... நம்ம ‘மூவர் குழு’. அதாங்க... மெட்ராஸ்பவன் சிவகுமார், அஞ்சாஸிங்கம் செல்வின், பிலாசபி பிரபாகரன். மூவர் அணியோடவே பு.க.வுல வாஙகின புத்தகங்களோட கனமான பல பைகளைச் சுமந்துக்கிட்டு ‘கனமான’ மனிதர் ஆரூர் மூனா செந்தில்! (பதிவர் திருவிழா சமயத்துல இவரை வெச்சு ஒரு சர்ச்சைக் கிளப்புனவங்க, ஆர்வமா இத்தனை புத்தகங்களைப் வாஙகிப் படித்து ரசிக்கற அவரோட நல்ல பழக்கங்களை பாராட்டி கொஞ்சம் கை குலுக்குங்கப்பா). பட்டிக்காட்டான் ஜெய் வந்திருந்தார்.

இந்த நேரத்துல கேபிள் சங்கர் வந்து சேர ஜமா களை கட்டிருச்சு. அடுத்த நபரா வந்து கை குலுக்கினாரு நம்ம டி.என்.முரளிதரன். எங்க சுவாரஸ்யமான பேச்சு சத்தத்தோட டெஸிபல் கொஞ்சம் கூடினப்ப முதுகி்ல் தட்டியது ஒரு கை. திரும்பினால்... கவியாழி கண்ணதாசனும், புலவர் இராமானுசம் ஐயாவும்! அவங்களைப் பாத்த சந்தோஷத்துல எல்லாரும் பேசிட்டருக்கறப்ப அதகளமா என்ட்ரி குடுத்தாரு கவிஞர் மதுமதி. அப்புறம் தமிழ்ராஜா,. கவிஞர் பத்மஜா, தமிழரசின்னு எல்லாரும் வந்து சேரவும் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கோட வாசல்ல ஏதோ தனி பதிவர் சந்திப்பு ஏற்பாடு பண்ணாமலேயே தன்னிச்சையா நடந்துடுச்சுங்க.

 சட்டுன்னு ‘எக்ஸ்பிரஸ்’ ஐடியாவா, தம்பி சத்ரியனோட ‘‌கண்கொத்திப் பறவை’ புத்தகத்தை புலவர் ஐயா வெளியிட, என் ‘சரிதாயணம்’ புத்தகத்தை நண்பர் கேபிள் சங்கர் வெளியிட வெச்சு புகைப்படங்கள் எடுத்து சந்தோஷப்பட்டுக்கிட்டோம். ரெண்டு மூணு பதிவர் சந்திச்சாலே பேச்சும், சிரிப்பும், கேலியும் கிண்டலும் அமர்க்களப்படும். இத்தனை பேர் சந்திச்சா அந்த இடம் எப்படி இருந்திருக்கும்னு நீங்களே கற்பனை பண்ணிக்குங்க.

மாலை 5.30 மணிக்கு நான் நண்பர்களிடமிருந்து (பிரிய மனமின்றி) வி‌டைபெற்றுக் கிளம்பினேன்- மற்றொரு முக்கிய நிகழ்வுக்குச் செல்ல வேண்டியிருந்ததால். அப்படி‌ என்ன முக்கிய நிகழ்வுன்னு கேக்கறீங்களா? ‘பாட்டி சொன்ன கதை’ ருக்மணி சேஷசாயி அவர்களை உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். அவங்களோட 75வது பிறந்ததினமான அன்று மா‌லை 5.30க்கு ‘ஒரு ஃபேமிலி கெட்டுகெதர்’ அரேன்ஜ் பண்ணியிருந்தாங்க. அந்த ஃபங்ஷனை அட்டெண்ட் பண்ணத்தான் அவசரமா போக வேண்டியதாயிடுச்சு. அது மற்றோர் ஆனந்த நிகழ்வு. அவங்களோட பல பரிணாமங்களை மேடையில் ஒவ்வொருவரும் அவரைப் பத்திப் பேசறப்ப புரிஞ்சக்கிட்டேன்.

ஏழு சகோதரர்களுக்கிடையில பிறந்த இவங்க, கல்யாணத்துக்கு அப்புறம்தான் தீவிரமா, படிப்பு எழுத்துல ஈடுபட்டிருக்காங்க. இளங்கலை பட்டம், முதுகலைப் பட்டம் பெற்று, ஆசிரியர் பயிற்சியும் முடிச்சு ஆசிரியப் பணி. 27 நூல்கள் இதுவரை எழுதி வெளியிட்டிருக்காங்க. எப்படியும் 50 ஆக அதை உயர்த்திவிட வேண்டும்னு ஒரு லட்சியம் இருக்காம். இப்பவே என் அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள்மா! ஆன்மீகத்துல தீவிர ஈடுபாடு உள்ளவங்க இவங்க. விழாவை அவரோட சகோதரர் பாண்டுரங்கன் தொகுத்து வழங்க, இடையிடையே நகைச்சுவையா பேசி கலகலப்பூட்டினார் ருக்மணியம்மாவோட மகன் ரங்கநாதன். கலகலப்பான அந்தக் குடும்ப விழாவுல கலந்துக்கிட்டு திரும்பி வருகையில் மனசெல்லாம் மகிழ்ச்சியால நிறைஞ்சிருந்தது. இந்த விழாவை எனக்கு நினைவூட்டி, அவசியம் செல்லும்படி உந்துதல் கொடுத்த ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு மனசு நிறைய நன்றி!

20.1.2013 ஞாயிற்றுக்கிழமை- ‘டிஸ்கவரி’ல வெச்சிருந்த ‘சரிதாயணம்’ புத்தகம் விற்றுத் தீர்ந்து விட்டதால் மேலும் பிரதிகளைக் கொண்டு வைப்பதற்காக காலையில் புத்தகக் கண்காட்சிக்கு (மறுபடி) போக வேண்டியிருந்துச்சு. புத்தகங்களைக் ‌கொடுத்துட்டு, ரெண்டாவது ரவுண்ட் பர்ச்சேஸ் பண்ணினப்ப, குடந்தையூரார் ஆர்.வி.சரவணன் வந்தார். அவரோட பேசிக்கிட்டே பர்ச்சேஸிங் முடிச்சுட்டு லன்ச் டயத்துல வீட்டுக்குக் கிளம்பினேன். ஒரு சிறு ஓய்வுக்குப் பின் தயாராகி மாலையில் நண்பர் திரு.பாலஹனுமான் (என்கிற ஸ்ரீனிவாசன்) அவர்களின் மகள் மீராவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குப் புறப்பட்டேன். துளசி டீச்சரின் ஃபங்ஷன் நடந்த அதே உட்லண்ட்ஸ் ஹோட்டல்ல லான்லயே அரேன்ஜ் பண்ணியிருந்தாங்க. நண்பர் மோகன்குமார் ‌நேரே அங்கே வந்துடறதாச் சொல்லியிருந்தார்.

உள்ளே நுழைஞ்சதுமே அருமையான கர்நாடக சங்கீத நிகழ்ச்சி நடந்துக்கிட்டிருந்துச்சு. நண்பர் ஸ்ரீனிவாசன் மகிழ்வாய் கை குலுக்கி வரவேற்றார். நமக்குத் தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களான்னு கண்ணால ஸ்கேன் பண்ணிட்டே வந்தா... மு்ன் வரிசையில உக்காந்து சங்கீதத்தை ரசிச்சுக்கிட்டிருந்தாரு ‘பாட்டையா’ பாரதி மணி ஐயா. அவர் பக்கத்துல போய் உக்காந்து கொஞ்ச நேரம் பேசிட்டிருந்தேன். என் முதல் புத்தகத்தை அவரிடம் கொடுத்து ஆசி பெற்றேன். கொஞ்‌ச நேரத்தில் கடுகு ஸாரும், கமலா அம்மாவும் வந்தாங்க. கடுகு ஸார்ட்ட பேசிட்டிருக்கறப்ப, எழுத்தாளர் என்.சொக்கன் தன்னுடன் வந்ததா சொன்னார். அவ்வளவுதான்... சொக்கன் ஸாரை எனக்கு அறிமுகம் பண்ணி வைங்கன்னு அவரைப் போட்டு தொணப்ப ஆரம்பிச்சுட்டேன். கடுகு ஸார் எழுந்து அவரே சொக்கன் ஸாரைத் தேடி அழைத்து வருவதாகச் சொல்லி எனக்காக மண்டபம் பூராவும் நடந்தார். சிறிது நேரத்தில் கண்டேன் என்.சொக்கன் அவர்களை!

சொக்கன் ஸார்கூட இமெயில், ட்விட்டர், பேஸ்புக் மாதிரி விஷயங்கள் மூலமா நல்ல அறிமுகம் உண்டு என்றாலும் நேரில் சந்திக்கற மகிழ்ச்சியே தனிதான் இல்லையா...! நான் ரசித்த அவர் எழுத்துக்களைச் சொல்லி, ‘சரிதாயணம்’ அவரிடம் தந்து (அவரை மட்டும் தப்பிக்க விட்ரலாமா? ஹி... ஹி...) நேரம் போவதே தெரியாமல் உரையாடிக் கொண்டிருந்தோம். பாலஹனுமான் மூலமாக மற்றொரு நல்லறிமுகம் நேற்று கிடைத்தது. அமெரிக்காவிலிருந்து வெளியாகும் ‘தென்றல்‘ இதழின் ஆசிரியர் திரு.அரவிந்த் ஸ்வாமிநாதனை அறிமுகப்படுத்தினார். சமீபத்தில்தான் சில ‘தென்றல்’ இதழ்களைப் படித்துப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருந்ததால் அவற்றைப் பற்றி அவருடன் பேசினேன்.

‘தென்றல்’ இதழை ஆன்லைனிலும் படிக்கலாம் என்று அதற்கான வழி சொல்லித் தந்தார் அரவிந்த். சிறந்த பத்திரிகை ஆசிரியர் மட்டுமின்றி ஆன்மீக ஈடுபாடு கொண்டவர், பல புத்தகங்கள் எழுதியவர் என்பதால் நாங்களனைவரும் சேர்ந்து பேச்சு சுவாரஸ்யமாகவே சென்றது. புகைப்படங்களை என்.சொக்கன் ஸாரின் (நல்ல) மொபைலில் எடுத்துக் கொண்டோம். (அவர் படங்ளை மடலிட்டதும் அவையும் பகிரப்படும்.) சற்று நேரத்தில் நண்பர் மோகன்குமாரும் வந்து சேர்ந்து கொண்டார். மேடையில் சங்கீதக் கச்சேரி முடிந்த பின்னும் இங்கே அரட்டைக் க்ச்சேரி நடந்தது. மணமக்களை வாழ்த்திவிட்டு, உணவருந்திவிட்டுக் கிளம்புகையில் வாட்ச்சில் மணி 9.45. ‘வீடு திரும்பல்’ பொருட்டு மோகன்குமாரை தி.நகரில் ட்ராப் செய்து விட்டு வீடு திரும்பினேன்.

-ஆக...கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து மூன்று சந்தோஷ நிகழ்வுகள் என்னை மகிழ்ச்சியில் பூரிக்க வைத்தன. (‘‘ஏற்கனவே எனக்குப் போட்டியா உப்பிட்டு வர்றீங்க. பாத்து... வெடிச்சுடாம...’’  என்று சிரிக்கிறாள் சரிதா. ஹி... ஹி...) உடனே உங்க எல்லார் கிட்டயும் ஷேர் பண்ணிக்கணும்னு ஆசை வந்துச்சு. டைரி எழுதற பழக்கத்தை உண்டாக்கிக்கணும்னும் எனக்கு ஒரு ஆசை இருந்துச்சு. ஸோ.... டூ இன் ஒன் பதிவா இந்த என் டைரிக் குறிப்பை உங்களுக்குத் தந்துட்டேன். பொறுமையாப் படிச்ச உங்களுக்கு ஸ்‌பெஷல் தாங்க்ஸ்!
  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube