Saturday, January 12, 2013

அலிபாபாவும் 40 திருடர்களும்!

Posted by பால கணேஷ் Saturday, January 12, 2013
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1956ம் ஆண்டு வெளிவந்த முதல் தமிழ் (கேவா) கலர்ப் படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. எம்,ஜி.ஆர்., பானுமதி, பி.எஸ்.வீரப்பா, தங்கவேலு ஆகியோர் நடித்த இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டு ரசித்திருக்கிறேன். இதுவரை படம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்ததில்லை என்பதால் சமீபத்தில் அந்த வாய்ப்புக் கிட்டியபோது ஆர்வமுடன் பார்க்கத் துவங்கினேன்.

டத் துவக்கத்தில் ‘அழகான பொண்ணு நான்’ என்று பானுமதி ஆடிப் பாடுகிறார். அழகான பொண்ணு என்றால் ஆபத்து வராமல் இருக்குமா? பாடி முடித்ததும், குறுநில மன்னன் ஷேர்கானின் ஆட்கள் அவரை இழுத்துச் செல்லப் பார்க்கிறார்கள். அவர் மறுக்கவே சவுக்கால் அடிக்கின்றனர். ஜனங்களெல்லாம் (வழக்கம்போல்) வெறுமனே வேடிக்கை பார்க்க, பானுமதியுடன் இருக்கும் குட்டையான காமெடியன் தடுக்கப் பார்க்க, தள்ளி விடுகின்றனர். பாவம்... கல்கியின் ஆழ்வார்க்கடியான் சைஸில் இருக்கும் அவரால் என்னதான் செய்துவிட முடியும்..? ‘காப்பாத்துங்க’ என்று கதறுகிறார். இப்படி ஒரு அநியாயம் நிகழ்வதைக் கண்டு இயற்கை பொறுக்குமா? அது அவரின் அபயக்குரலை புரட்சித்தலைவரின் திருச்செவிகளில் விழச் செய்துவிட, அவர் என்ட்ரியாகி அனைவரையும் சண்டையிட்டுத் துரத்துகிறார். ஆஹா... எத்தனை படங்களில் பார்த்தாலும் சலிக்கவே சலிககாதது வாத்யார் போடும் வாள் சண்டை. (‘‘நாம படம் பாக்கக் கொடுத்த 50 ரூபாய் -டிவிடிக்கு- இதுக்கே செரிச்சுடுச்சு போ’’ என்றது மனஸ்.)

அப்புறமென்ன... பானுமதிக்கு வாத்யாரின் மேல் இன்ஸ்டன்ட் காதல் வந்துவிட, அவர் வீட்டிலேயே அடைக்கலமாகின்றனர். காட்டுக்கு விறகு வெட்டச் செல்லும் எம்.ஜி.ஆர்., ஒரு கழுதை வழி தவறியதால் அதைப் பிடிக்கப் போய், பி.எஸ்.வீரப்பா தலைமையிலல்39 திருடர்கள் சங்கேத வார்த்தையைச் சொல்லி குகையிலிருந்து வெளிவருவதையும், வேறொரு சங்கேத வார்த்தையைச் சொல்லி குகையை மூடிவிட்டுச் செல்வதையும் பார்க்கிறார். 

அவர்கள் சென்றதும், அதே சங்கேத வார்த்தையைச் சொல்லி, அவரும் காமெடியனும் உள்நுழைகின்றனர். கதவை மூடும் சங்கேதச் சொல்லை வாத்யார் சொல்ல, அந்த சங்கேதச் ‌சொல் கேட்டதும், உள்ளே சங்கிலியால் பிணைக்கப்பட்ட அடிமைகள் வட்டமாக இருக்கும் ஒரு சக்கரத்தை இயக்க, அது ஒரு லீவரை இயக்க, அதன் மூலம் ஒரு இரும்புச் சலாகை இயங்கி பாறையை அசைத்து குகையை மூடுகிறது. (யப்பா... என்னா டெக்னாலஜி மூளை இந்தத் திருடனுங்களுக்கு! இதை நல்ல வழியில நாட்டுல பயன்படுத்தியிருந்தா நாடு வெளங்கியிருக்குமே...’’ என்றது மனஸ். அதை தலையில் தட்டினேன்.).

உள்ளே இன்னொரு ரகசிய லீவரை இயக்கியதும் சிங்கத்தின் வாய் போல பிளந்திருக்கும் இரண்டு குகைகளு்க்கும் இடையே மேலே தூக்கியிருக்கும் பலகைப் பாதை இறங்கி இரண்டையும் இணைக்கிறது. இரண்டு குகைகளுக்கும் நடுவே கொதித்துக் கொண்டிருக்கும் வெந்நீர் நதி(?) ஓடுகிறது. (‘‘யாத்தே... 24 அவர்ஸும் தண்ணியக் கொதிக்க வைக்க அத்தனை பெரிய நெருப்பை எங்கருந்து ஏற்படுத்தினாங்க திருடய்ங்க?’’ -மனஸ்). இவர்கள் உள் குகைக்குள் சென்று பார்க்க, பத்துத் தலைமுறைக்கு வேண்டிய அளவு தங்க நகைகளும், பொற்காசுகளும், இன்னபிற ஆடை ஆபரணங்களும் குகை முழுக்க நிரம்பியிருக்கின்றன. (இவ்வளவு செல்வத்தை வெச்சுக்கிட்டு ஜாலியா லைஃபை அனுபவிக்காம அந்த 40 கூமுட்டைங்களும் என்னத்துக்கு இன்னும் திருடப் போவுதுங்களோ தெரியலையே... -மனஸ். ‘தே.. கம்னு கெட.’ -நான்)

அப்புறம் என்ன... ரெண்டு கழுதைகள் சுமக்கற அளவுக்கு (ஐயய்யோ! வாத்யாரையும், காமெடியனையும் சொல்லலீங்க... நிஜக் கழுதைகள்) பொன், பொருளை மூட்டை கட்டிக்கிட்டு வந்துடறாங்க.  பெரிய அளவு செல்வம் வந்துச்சுன்னா... நாமல்லாம் ஜாலியா செலவு பண்ணிட்டு திரிவோம். ஆனா செல்வம் கிடைச்சது யாருக்கு? பொன்மனச் செம்மலுக்காச்சே...! அவர் அதை நிறைய தானதர்மம் பண்றார்.

அலிபாபா பெரிய பணக்காரனாயிட்டான்னு ‌ஷேர்கானுக்குத் தெரிய வந்ததும் -- சொல்ல மறந்துட்டேனே.. அவர் வாத்யாரோட அண்ணன்தான் -- தம்பியைக் கூப்பிட்டு விருந்துல்லாம் வெச்சு, எப்படி இவ்வளவு செல்வம் வந்ததுன்னு நைஸா விசாரிக்கிறாரு. அண்ணனோட வற்புறுத்தலால வாத்யார் உண்மையச் சொன்னதும், அவரைக் கைது பண்ண உத்தரவிடறாரு  வீரர்கள் ஆயுதங்களுடன் சூழ்ந்து வாத்யாரை மடக்கிவிட,  பானுமதி தன் புத்தி சாதுர்யத்தினால வாத்யாரை விடுவிக்க, அவர் சண்டை போட்டு எல்லாரையும் காப்பாத்தி தானும் தப்பிச்சுடறாரு.

சண்டையில வாத்யாரோட அண்ணி இறந்துட, பேராசைக்கார அண்ணன் அதைப்பத்தி கவலையே படாம அந்த குகைக்கு ஓடிப் போறாரு. சங்கேதச் சொல்லைச் சொல்லி உள்ளே போனவருக்கு பணத்தைப் பார்த்த ஆனந்தத்துல வெளிவர்றதுக்கான சொல் மறந்துவிட, திருடர்கள் வந்துவிட, அவரைப் பிடித்து தலையையும் உடலையும் தனித்தனியாகப் பிரித்து விடுகின்றனர். அவர்கள் மீண்டும் திருடச் சென்றுவிட, அண்ணனைத் தேடி அங்கே வரும் வாத்யார், அந்த முண்டத்தையும் தலையையும் எடுத்துட்டு நாட்டுக்கு வந்துடறாரு. ரெண்டையும் தைச்சு, அண்ணனுக்கு இறுதிக் காரியங்களும் பண்ணிடறாரு.

திருடர்கள் புத்திசாலி(!)களாச்சே... யார் வந்துட்டுப் போறதுன்னு கண்டுபிடிக்க, நாட்டுக்குள்ள வந்து சமீபத்துல பணக்காரரானது யாருன்னு விசாரிக்க, அலிபாபா பற்றித் தெரிய வருகிறது. பி.எஸ்.வீரபபா ஒரு எண்ணெய் வியாபாரியா மாறுவேஷம் போட்டுக்கிட்டு, எண்ணெய் பீப்பாய்கள்ல 39 திருடர்களையும் ஒளிஞ்சுக்கச் சொல்லி வாத்யாரை நட்பாக்கிக்கிட்டு, அவர் வீட்டுக்குள்ள எல்லா பீப்பாய்களோடயும் வந்துடறாரு. அவர் பீப்பாய்ல ஒளிஞ்சிருக்கற திருடங்க கிட்ட பேசறதை பானுமதி பாத்துடறாங்க.

அந்த வீரப்பா தான் தன் அப்பா, அம்மாவை கொன்னு தன்னை அனாதை ஆக்கினவன்றதையும் புரிஞ்சுக்கிட்டு, அவனை பழிவாங்க திட்டம் போடறாங்க. என்னா திட்டம்...! வாத்யாருக்கும், வீரப்பாவுக்கும் முன்னால பாட்டுப் பாடி, நடனமாடியபடியே அவர் காலால் தாம்பாளத்தை தட்டி சத்தம் எழுப்ப, ஒவ்வொரு சத்தத்துக்கும் ஒரு பீப்பாயை நீர்வீழ்ச்சிலருந்து உருட்டி விட்டுடறாங்க பானுமதியோட இருக்கற காமெடியனும் அவன் ஜோடியும். (‘‘ஏம்ப்பா... நகரத்துல சாலையப் பாத்திருக்கற எம்.ஜி.ஆரோட வீட்டுக் கொல்லைப் புறத்துல நீர்வீழ்ச்சி எங்கருந்து வந்தது? அவர் என்ன மலையுச்‌சியிலயா குடியிருக்காரு?’’ என்று சிரித்தது மனஸ். ‘‘த பாரு... ஜனங்களே வாத்யார் படத்துல லாஜிக் எதிர்பார்த்ததில்லை. நீ பேசின ‌பிச்சுப்புடுவேன் பிச்சு...’’ என்றேன் நான்.)

பிறகென்ன... தன் சகாக்களை பானுமதி கொன்னது தெரிஞ்‌சதும் வீரப்பா அவரைக் கடத்திட்டு தன் குகைக்கு ஓட, அவரை துரத்திப் பிடித்து, சண்டையிட்டு, ஒரு வழியாக கொன்று தீர்க்கிறார் புரட்சித் தலைவர். (‘‘ஆமா... 39 திருடங்களை அந்தம்மாவே காலி பண்ணிட்டாங்க. ஒரே ஒரு திருடனை மட்டும் கொல்றது வாத்யாருக்குப் பெருமையாக்கும்?’’ -மனஸ். ‘‘சனியனே... அடங்க மாட்ட நீயி?’’ -நான்) வாத்யாரும், பானுமதியும் டூயட் பாட, படம் நிறைவடைகிறது.


படத்தில் பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையாக வந்திருக்கின்றன. எல்லாக் கதாநாயகிகளையும் தொட்டுத் தூக்கி, சுற்றி புகுந்து விளையாடும் வாத்யார், பானுமதியின் அருகில் பள்ளிக்கூட மாணவன் போல (பார்க்க: படம்) பாதுகாப்பான தூரத்தில் நின்று டூயட் பாடுவது (அதிகபட்சம் தோளை தொடுதல்தான்) பார்க்க ஆச்சரியமோ ஆச்சர்யம்! தங்கவேலுவின் காமெடி நிரம்பிய நடிப்பு அற்புதம். பானுமதி வழக்கம் போல் கம்பீரமான கதாநாயகியாக ரசிக்க வைக்கிறார். பி.எஸ்.வீரப்பா ஆர்ப்பாட்டமான வில்லன் நடிப்பில் அவருக்கு நிகர் வேறொருவர் இல்லை என்று சொல்ல வைக்கிறார். வாத்யாரின் அண்ணனாக வரும் (நிஜ அண்ணன்) எம்.ஜி.சக்ரபாணி குகையில் மாட்டிக் கொண்டு வெளியே வர வழி தெரியாமல் வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி, குகையைத் திறக்க வழி தெரியாமல் தவிப்பது நகைச்சுவைக்கு உத்தரவாதமான நடிப்பு. 

படத்தில் இந்த மனஸ் என்னதான் குற்றம் குறைகளைக் கண்டுபிடித்தாலும் அதையெல்லாம் யோசிப்பதற்கு நேரம் இல்லாதபடி படம் விறுவிறுப்பாகச் செல்கிறது. அதுதான் எம்.ஜி.ஆரின் திறமை + பலம். ரசிகர்களுக்கு அதைத் தவிர வேறென்ன வேண்டும்?

‘‘த்தோ பாரு மனஸ்... நீ படுத்தின பாட்டுக்கு அடுத்த தடவை படம் பாக்கறப்ப உன்னை கிட்ட சேர்க்கப் போறதில்லை’’ என்றேன் நான். ‘‘அதுசரி... ஏற்கனவே எம்.ஜி.ஆர். படத்தை மூளையக் கழட்டி வெச்சுட்டு, என்னை வெச்சுட்டுத்தான் ரசிச்சுட்டிருக்கே... என்னையும் துரத்திட்டேன்னா, நீ படம் பாக்கவே முடியாது’’ என்று மனஸ் சிரிக்க... நான் அவ்வ்வவ்!

====================================================
அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
====================================================

55 comments:

  1. பார்த்து பார்த்து ரசித்த படம்... நண்பரே...
    """அழகான பொண்ணு நான் அதுக்கேத்த கண்ணு தான்""""
    என்ன ஒரு பாடல்..
    பாடலும் அந்தக் கண்ணசைவும் அப்பப்பா...
    நினைவை மீட்டி விட்டீர்கள் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. நினைவலைகளில் நீந்தி படத்தை மீண்டும் ரசித்த நண்பர் மகேனுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  2. படத்தைப் பார்க்கத் தூண்டும் விமர்சனம்.... மறுபடிதான்!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்... மறுபடி பார்த்து மகிழுங்கள் ஸ்ரீராம். மிக்க நன்றி.

      Delete
  3. நண்பரே உங்களின் விமர்சனம் அருமை லேட்டேனா பதிவானாலும் லேட்டஸ்ட் அருமை .திரும்பவும் பார்க்க தோணுது

    ReplyDelete
    Replies
    1. லேடடஸ்ட்டாகப் பாரதது மகிழுங்கள். உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  4. இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமகிழவுடன் என் இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழத்துகள்.

      Delete
  5. சின்ன வயதில் ஆச்சர்யங்களுடன் நிறைய தடவைகள் பார்த்த படம். இதை எப்படி நீங்கள் மிஸ் பண்ணுனீங்க? முக்கியமான அந்த வசனத்தை சொல்ல மறந்துட்டீங்களே?

    "அண்டாக்கா கசூம், அபூக்கா கசூம், திறந்து விடு சீசே"

    :) :) :)

    ReplyDelete
    Replies
    1. மறக்கவில்லை பாஷித். சங்கேதச் சொற்கள் என்று குறிப்பிட்டதன் காரணம் என்னைப் போல படம் பார்க்காதவர்கள் (லேட்டாகப் பார்ப்பவர்கள) ரசிக்கட்டும் என்பதாலும் பதிவு இன்னும் நீண்டு விடுமே என்பதாலும்தான். நீங்களும் ரசித்துப் பார்த்த படம் என்பதில் மகிழ்வு கொண்டு உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  6. ஹா ஹா படம் பார்த்தமாதிரியே இருந்திச்சு. அவ்வளவு தெளிவான பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட பூந்தளிருக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  7. அலிபாபா (எம்ஜிஆர்) கடவுளிடம் இருக்காரு.... அந்த 40 திருடர்கள் எங்க இருக்காங்க தெரியுமா?

    ReplyDelete
    Replies
    1. அந்த 40 திருடர்களை படத்துலயே அலிபாபா அழிச்சுட்டாரு இசக்கி. ஆனா இப்ப நாட்ல கணக்கில்லாத திருடர்கள் இருக்காங்க. அவங்களை அழிக்க எநத அலிபாபா வரப் போறாரோ... உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி + இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

      Delete
  8. ஆஹா.... சொன்னதை செஞ்சுட்டீங்க கணேஷ். என் ட்ராஃப்டில் இருப்பதை வெளியிட வேண்டியது தான்! :)

    சிறப்பான விமர்சனம். சமீபத்தில் தான் நானும் முரசு தொலைக்காட்சியில் சில காட்சிகள் பார்த்தேன்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் வெங்கட். நிறைய எழுதணும்னு ஆசையும் திட்டங்களும் இருக்கத்தான் செய்யுது. நேரம்தான் அனுமதிக்கறதில்லை. நான் சொன்ன மாதிரி நீங்களும் உங்கள் பொக்கிஷத்திலிருந்து பழைய திரைப்படங்கள் பத்தின விமர்சனமும் தகவல்களும் அள்ளி விடுங்க. நிச்சயம் ரசிக்கப்படும். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  9. இனியதொரு பட பிளாஷ்பாக் !
    உங்களுக்குப் பொறுமை அதிகம் . நீள் பதிவு !
    மனஸ் மைனஸ் அல்ல! ரசிக்க வைக்கிறது.
    அல்லா கா கசம் - அல்லாவின் மீது ஆணை !
    அபு கா ஹுகும் - அபுவின் கட்டளை !
    திறந்திடு சீசேம் ! என்பது திரிந்து அண்டா கா .....
    என்று ஆகி விட்டது .
    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. ஆஹா... அந்த சங்கேதச் சொல்லுக்கு இப்படி ஒரு பொருள்கூட உண்டா என்ன? அசத்தறீங்க ஸ்ரவாணி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

      Delete
  10. Sir, I can understand your feelings. You are so much so fed up with present day movies and this is the cause for you to watch the old goldies. You have made us to feel to watch the movie again at the background of your review. Thanks a lot. Next time, I expect a similar old gold of sevaliar sivaji ganesan.
    To kill the present day thieves, we need minimum 40 Alibabas.

    ReplyDelete
    Replies
    1. முதல் நாள் முதல் ஷோவே பார்த்துவிட்டு எழுதும் இன்றைய பதிவர்களுடன் நான் போட்டியிட விரும்பவில்லை. தவிர, நான் பார்த்து அதிகம் ரசிப்பதும் பழைய படங்களே என்பதால் நிச்சயம் உங்கள் எண்ணப்படி அவ்வப்போது எழுதுகிறேன் மோகன். அதென்ன... இன்றைய திருடர்களை அழிக்க குறைந்தது 40 அலிபாபாவாவது வேண்டுமா? ஹா... ஹா... நிஜம்தான்! ரசித்துப் படித்து அருமையான கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  11. இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் சரவணன்.

      Delete
  12. Sir,
    MGR started acting closely with heroines after 1962 only.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்... சற்று யோசித்துப் பார்த்தால் உங்களின் கருத்து சரியென்பது புரிகிறது பார்த்தி. உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  13. உங்கள் பாணி விமரிசனம் பிரமாதம்! //அப்புறம் என்ன... ரெண்டு கழுதைகள் சுமக்கற அளவுக்கு(ஐயய்யோ! வாத்யாரையும், காமெடியனையும் சொல்லலீங்க... நிஜக் கழுதைகள்)// //‘‘ஆமா... 39 திருடங்களை அந்தம்மாவே காலி பண்ணிட்டாங்க. ஒரே ஒரு திருடனை மட்டும் கொல்றது வாத்யாருக்குப் பெருமையாக்கும்?’’ -மனஸ். ‘‘சனியனே... அடங்க மாட்ட நீயி?’’ -நான்)// அற்புதம்! இந்த வயதில், இந்த காலத்தில் பார்க்கும்போதும் ரசிக்க வைப்பதுதான் படத்தின் பலம். குகை திறந்து, மூடும்போதும், தொங்கு பாலத்தில், கீழே கொதிக்கும் தண்ணீரில் விழாமல் போடும் சண்டைக் காட்சிகளும் - கணினி கிராபிக்ஸ் எல்லாம் வராத போது எடுத்த படம் - சின்ன வயதில் எப்படி ரசித்திருப்போம். - ஜெ .

    ReplyDelete
    Replies
    1. மனஸ் என்னதான் சொன்னாலும் நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் ‌ஜெ. உங்களுக்குத் தெரிந்ததுதானே அது? நாடோடி மன்னன் படத்தில் (1962 என்று நினைவு) அக்காலத்தில் மாஸ்க் முறையில் பாதி காமிராவை மறைத்து டபுள் ஆக்ட் எடுத்த பழைய டெக்னாலஜியிலேயே ஒரு எம்.ஜி.ஆர். சேரில் அமர்ந்திருக்க, இன்னொரு எம்.ஜி.ஆர். அவரைச் சுற்றி பேசியபடி நடந்து வருவார். என்ன முறையைப் பயன்படுத்தி அதை சாதித்தார் வாத்யார் என்று இன்னும் பிரமிப்பு என்னுள். டெக்னிக்கலாக நிறைய விஷயங்களில் அவர் ஓர் அதிசயம். சின்ன வயசுல என்ன... இப்பவும் என்னால வாத்யார் படங்களை விசிலடிச்சு ரசிக்க முடியுது. என்னோட மனஸ் இப்படித்தான் எல்லா படத்துலயும் லாஜிக்கை எதிர்பார்த்து குரல் கொடுக்கும். அது கிடக்குது கழுதைன்னு தலையில தட்டி அடக்கிடுவேன். ஹி... ஹி... மிக்க நன்றி.

      Delete
  14. அடிக்கடி கே டிவியிலே போடுவாங்க! நான் முழு படமும் பார்த்தது இல்லை! பொறுமையா பார்த்து விமர்சனம் பண்ணியிருக்கீங்க! சூப்பர்!

    ReplyDelete
    Replies
    1. அடுத்த முறை போட்டா முழுசாப் பாருங்க சுரேஷ். நிச்சயம் போரடிக்காது. மிக்க நன்றி.

      Delete
  15. நானும் இந்த படத்தை முழுசா பார்த்தது இல்லை. நல்ல விமர்சனம்.

    ReplyDelete
    Replies
    1. விமர்சனத்தை ரசிச்சுப் படிச்ச உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  16. மு. கருனாநிதியால் தான் இந்தப் படத்தைப் பார்தென்.
    ஒரு முறை MGR கட்சி 40 லோக்சபா இடங்களையும் ஜெயித்ததற்கு என்ன நினைக்கிறீர்கள் என்தற்கு...இதிலென்ன நினைப்பதற்கு இருக்கு..ஆம், அலிபாபாபவும் நாற்பது திருடர்களும் என்றார்.

    பாண்டியிலும் அப்போ ஜெயம்: பால பழனூர் ஜெயித்து மத்திய மந்திரியானர். முதல் போனி மததிய அரசில் மாநிலக் கட்சி.

    ஒரு கேள்வி கருணாவை கஞ்சி காச்சும் அன்பர்களுக்கு:

    ஏன், எம்ஜீயார் அப்போது காவேரி தண்ணீரையும் முல்லைப் பெரியாறையும் நமக்கு சாதாகமாக தீர்பெழுத மததிய அரசை நிரப்ந்தி இருக்கலாம்; இல்லை என்றால் பதிவியை ராஜினாமா செய்திருக்கலாம். ஏன் செய்யலை என்றால் அதுக்கு ஒரு வெண்டைக்க விளக்கம் கொடுப்பார்கள். இதை எந்தப் பத்திரிக்கையும் மக்களிடம் கொண்டு சேர்க்காது...காரணம் உங்களுக்கு தெரியும்...

    ReplyDelete
    Replies
    1. அரசியல் விஷயத்தில் எனக்கு அறிவு ரொம்பக் குறைவு நண்பா... (மத்த எதுல அதிகம்னு விவகாரமால்லாம் கேக்கக் கூடாது. ஹி... ஹி...) உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  17. பாலா சார்.. விமர்சனம் அருமை..

    //யாத்தே... 24 அவர்ஸும் தண்ணியக் கொதிக்க வைக்க அத்தனை பெரிய நெருப்பை எங்கருந்து ஏற்படுத்தினாங்க திருடய்ங்க?//

    தண்ணி, அத கொதிக்க வைக்க கரண்ட்டு இந்த படத்த இனிமே தமிழ் நாட்டுல எடுக்க முடியாதுன்னு சொல்லுங்க..

    விமர்சனம் படித்த பிறகு அலெக்ஸ் பாண்டியனுக்கு பதில் அளிபாபாவையே இன்னொரு முறை பார்திடலாம்னு தோணுது..

    ReplyDelete
    Replies
    1. அடாடா... அலெக்ஸ்பாண்டியன் பாத்து நொந்த கூ்ட்டத்துல நீங்களும் உண்டா நண்பா? அதைல்லாம் பாக்கறதுக்கு அலிபாபா 100 தடவை பெட்டர்தான். நான் எழுதியதை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  18. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் எழில்!

    ReplyDelete
  19. நான் கூட தலைப்பப் பாத்ததும் நீங்க ஏதோ காமெடி க்ரைம் கதை சொல்லப் போரிங்களோனு நெனச்சென். கடைசியில ## ஏமாந்துட்டோம்! ஆனா, நான் இது வரை பாக்காத படம்னால ஒரு படம் பாத்த எஃபெக்ட்டோட பதிவு எழுதி இருக்கீங்க! பொங்கல் நல்வாழ்த்துக்கள்.... அப்படியே வீட்டில ஏதாச்சும் மாடு இருந்தாக்கா அதுக்கும் ஹேப்பீ பொங்கல்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
    Replies
    1. ரசிச்சுப் படிச்சு பொங்கல் வாழ்த்துச் சொன்ன சுடருக்கு என் இதயம் நிறை நன்றிகள் + ‌இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

      Delete
  20. ரசிகர்களை முட்டாள்கள் என்று நினைத்து எடுக்கப்படும்படங்களில் அதுவும் "ஙே" என்ற ஒரு சிரிப்புடன் வரும் கதாநாயகர்களைக் கொண்ட இன்றைய படங்களை விட ரசிகர்களின் ரசிப்புத்தன்மையை மதித்து எடுக்கப்பட்ட அந்தக்கால படங்கள் பொக்கிஷங்கள் தான்.
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக அவை பொக்கிஷங்கள் என்பதுதான் என் கருத்தும். அதற்கு முக்கியக் காரணம் பாடல்கள். அதனால் தான் ஒன்றிப் போய்ப் பார்த்து ரசிக்க இயல்கிறது. எழுத இயல்கிறது. இதை ரசித்து என்னை வாழ்த்திய உங்களுக்கு என் இதய நன்றி + இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

      Delete
  21. விமர்சனம் அருமை.
    இவ்வளவு பழையப் படத்திற்கு இவ்வளவு பெரிய நீள் விமர்சனம்.
    நீங்க ரொம்ம்ம்ம்மப பொறுமைசாளி தாங்க.

    உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும்
    என் இனிய பொங்கல் மற்றும் தமிழர்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சற்றே நீளமான விமர்சனத்தை ரசித்த என்னை வாழ்த்திய உங்களுக்கு மனமகிழ்வுடன் என் உளம்நிறை நன்றி மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

      Delete
  22. பழைய படத்தைத் தேடிப் பார்க்க வைக்கிறீங்களே ஃப்ரெண்ட் !

    ReplyDelete
    Replies
    1. புதியவற்றை விட அவையே சிறந்தவையாக இருக்கு ஃப்ரெண்ட். அதனால பார்த்து ரசியுங்க. உங்களுக்கு என் மனம் நிறை நன்றி மற்றும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

      Delete
  23. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    என் மனம் கனிந்த இனிய பொங்கல் திருநாள்
    நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி! உங்களுக்கும் மகிழ்வுடன் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள் மகேன்!

      Delete
  24. சூப்பர்! அழகான விமர்சனம். நான் இந்த படத்தை பலமுறை ரசிச்சு பார்த்திருக்கேன். எனக்கு மிகவும் பிடிச்ச படம். இதைவிட 'மலைக்கள்ளன்' படம் இன்னும் பிடிக்கும். :))

    இடுப்பையே வளைக்காம டான்ஸ் ஆடின ஒரே நடிகை பானுமதி அவர்கள்தான். :) நல்ல கம்பீரமான நடிகை. 'அன்னை' படத்துல இவங்க நடிப்பை ரொம்ப ரசிச்சிருக்கேன்.

    //ஆஹா... எத்தனை படங்களில் பார்த்தாலும் சலிக்கவே சலிககாதது வாத்யார் போடும் வாள் சண்டை.(‘‘நாம படம் பாக்கக் கொடுத்த 50 ரூபாய் -டிவிடிக்கு- இதுக்கே செரிச்சுடுச்சு போ’’ என்றது மனஸ்.)// அப்படி போடுங்க. இந்த விஷயத்துல நானும் உங்க கட்சிதான். :)
    இந்த படத்தோட கிளைமாக்ஸ் சுபெர்ப். தங்கவேலு காமெடியும் ரொம்ப ரசிக்க முடியும். இவரோட 'அறிவாளி' பட காமெடி படு கலக்கலா இருக்கும். சமயம் கிடைக்கும்போது பாருங்க.

    உங்களோட 'சரிதாயணம்' புத்தகமா வெளிவந்ததுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். ரொம்ப சந்தோஷம் கணேஷ்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. திரைப்பட விமர்சனத்தை ரசித்து (என் ரசனைக்கு வெகுவெகு அருகில் இருக்கீங்க) மகிழ்வுடன் பாராட்டி, புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்திய உங்களுக்கு என் மனம் நிறைந்தநன்றி + உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

      Delete
  25. Sir, in one of your replies, you mentioned that you are very weak in politics sorry you have stated that your intelligence is very weak in politices. But my view is you are not weak in intelligence but in...............!!!!!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். அரசியல் அறிவு குறைவென்றுதான் நான் சொல்லியிருக்க வேண்டும். சரியான கருத்துரைத்த உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  26. நீங்கள் பார்த்தும் ரசித்ததை நாங்க படித்து ரசித்தோம். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  27. போனவாரம் 'முரசு' தொலைக்காட்சியில் இந்தப் படத்தை பார்த்து ரசித்தேன். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம். முதன் முதலில் கேவா கலரில் வந்த படம்.
    க்ளைமாக்ஸில் தாம்பாளம் போலத் தொங்கும் பெரிய தட்டில் சத்தம் எழுப்புவார் பானுமதி காலால் அல்ல, கையில் வைத்திருக்கும் சுத்தியல் போன்ற ஒன்றால்...
    குழந்தைகளுடன் அமர்ந்து ரசிக்கலாம் இந்தப் படத்தை.

    ஒரு முறை திரு அப்பாதுரை அவர்கள் தனது 'அவலை நினைத்து என்ற பதிவில்

    //எம்ஜிஆர் அருகில் இருந்தாலும் பானுமதி, சாவித்திரி இருவரும் ஏதோ தனியாக நடிப்பது போலிருந்தது. எம்ஜிஆர் பானுமதியிடம் பயந்து நடிக்கிறார்.// என்று குறிப்பிட்டு இருப்பார்.

    இப்படியெல்லாம் ரொம்பவும் சிந்திக்காமல் நிஜமாகவே மூளையை கழற்றிவிட்டு இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

    பானுமதியுடன் வரும் காமெடியன் திரு சாரங்கபாணி. மிகச்சிறந்த நடிகர்.

    உங்களது விமரிசனத்தைவிட என் பின்னூட்டம் நீண்டு விடும் போலிருக்கிறது.



    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க. நானும் ரொம்ப ரசி்ச்சுப் பாத்துட்டுத்தான் எழுதினேன். அந்த காமெடியன் பேர் தெரியாம ‘ழே’ன்னு முழிச்சுட்டுதான் வெறுமனே காமெடியன்னு எழுதினேன். சாரங்கபாணியா அவர் பேரு? நல்ல தகவலும் அழகான பின்னூட்டமும் தந்த உங்களு்க்கு என் இதயம் நிறை நன்றி. (பின்னூட்டம் எவ்வளவு நீண்டாலென்ன... உங்கள் எழுத்து சுவாரஸ்யம் தான்மா)

      Delete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. என்னது!! இந்த படம் சமீபத்தில் தான் பார்தீங்களா??

    செல்வம் வந்ததும் -MGR ஒரு பெரிய மாளிகை கட்டினார் அது தான்....
    // ஒரே ஒரு திருடனை மட்டும் கொல்றது வாத்யாருக்குப் பெருமையாக்கும்?’’ - ///
    39 போரையும் ஆட்டி வச்ச ஒரு திருடன் எவ்ளோ பெரிய வீரனா இருக்கணும்???

    ரொம்ப நாள் அப்புறம் இந்த படம் பார்த்த நிறைவு சார் ....

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube