Thursday, August 30, 2012

பதிவர் திருவிழாவில் பி.கே.பி!

Posted by பால கணேஷ் Thursday, August 30, 2012

திவர் திருவிழாவில் திரு.பி.கே.பி. இணைய எழுத்தைப் பற்றியும். முதியோர் பற்றியும் செறிவான உரை நிகழ்த்தினார். அதன் விரிவாக்கம் விழாவைப் பார்க்காதவர்களுக்காக இங்கே. (என் வழக்கத்துக்கு மாறாக நீண்ட பதிவாக இருக்கும. பொறுமையுடன் படியுங்க நண்பர்களே)

மூத்த வலைப்பதிவாளர்களுக்கு மரியாதை, கவியரங்கம்னு இந்த நேரத்துல இந்த விழா இவ்வளவு சுறுசுறுப்பா போயிட்டிருக்கறதே பெரிய விஷயம். முக்கியமான ஒரு குடும்ப விழா இது. வலைப்பதிவர்களின் சங்கமம்ங்கறது இந்த வகையில இதான் முதல் விழான்னு நினைக்கிறேன். இந்த விழாவை அமைத்த அமைப்பாளர்களுக்கு ஒரு பெரிய கரகோஷத்தைத் தரலாம் நீங்க. இந்த விழா ஒரு முக்கியமான விழான்னு சொல்றதுக்கு காரணமான மற்றொரு விஷயம் என்னன்னா... துபாய்லருந்து, சிங்கப்பூர்லருந்துல்லாம வந்து கலந்துட்டிருககாங்கன்றது ரொம்ப பாராட்ட வேண்டிய விஷயம். மும்பைலருந்து, கோயமுத்தூர்லருந்து, மதுரைலருந்துல்லாம் வந்திருக்காங்க. பெண்கள் கிட்டத்தட்ட 20, 25 பேர் இருக்காங்கன்னு நினைக்கிறேன். 25 சதவீதம்! இவங்க ஒரு நாள் முழுக்க வலைப் பதிவாளர்களுக்கான விழாவுல வந்து கலந்துக்கிட்டிருக்காங்கன்னா அது விழாவின் வெற்றியாக எடுத்துக்கலாம்.

காலை நிகழ்ச்சிகள் எப்படிப் போச்சுன்னு எனக்குத் தெரியாது. அதுவும் நல்லாவே போச்சுன்னு பாலகணேஷ் சொன்னார். பதிவர்கள் தங்களைப் பற்றி அறிமுகப்படுத்திக்கிட்டாங்க. அவர் முதல்ல அழைச்சப்ப, எத்தனை மணிக்கு நீங்க வர்றீங்க, பேசிட்டு நீ்ங்க வேணாப் போயிடலாம்னுதான் சொன்னார். ஆனா சபை நாகரீகம்னு ஒண்ணு இருக்கு. என்னைப் பொறுத்தவரை நானே வலைப்பதிவுகள்ல ஆர்வமுள்ள ஒரு ஆர்வலன். நான் அவர்கிட்ட என்ன ‌சொன்னேன்னா, என்னுடைய பகுதி நிகழ்ச்சி ஆரம்பத்துலருந்து கடைசி வரை நான் இருப்பேன்னு சொன்னேன். உங்க பங்கு முடிஞ்சதும் போயிடலாம்னு என் நேரத்துக்கு முக்கியத்துவம் தந்து சொல்லாதீங்க, நானும் ஒரு பார்வையாளனா... பேச்சாளனா இல்லை, பார்வையாளனா முழுக்க இருந்து பாக்கறேன்னு கேட்டுக்கிட்டேன். அதனால ஒரு மூணு மணி நேரம் செலவு பண்ணினது பெரிய விஷயம் இல்ல. சந்தோஷமா எல்லாத்தையும் ரிஸீவ் பண்ணிட்டிருந்தேன்.

ஒவ்வொருவரின் பேச்சிலும் பல தெறிப்புகள்! அவ்வளவு திறமைகள்! இவ்வளவு பேர் கவிதைகள் படிச்சாங்களே... அந்தக் கவிதைகள்ல உள்ள நயம்...எவ்வளவு ஆழம், அழுத்தம், நகைச்சுவை, கிண்டல், பணிவு அனுபவம்! இதையெல்லாம் வலையில பதிவு பண்ணத்தான் போறீங்க. அதுக்கான ஒரு சாம்பிள்தான் இந்த மேடைல காட்டினீங்க. ரொம்ப அருமையா இருந்துச்சு எல்லாரோட கவிதைகளும். அதுலயும் இந்தப் புத்தகத்தை (தென்றலின் கனவு) நான் வெளியிட்டேன்கறதால அதுலருந்து சில பகுதிகளைச் சொல்றதுதான் முறைன்னு நினைக்கிறேன். சசிகலா அவர்களுடைய தென்றலின் கனவு வலையில அவர் பதிவு செய்த கவிதைகளோட தொகுப்புன்னு சொன்னாங்க. நல்ல கவிதைகள் நிறைய இருக்கு. புரட்டினப்ப கண்ல பட்ட சில தெறிப்புகள் மட்டும் இங்க படிச்சுக் காட்டறேன்.

‘கோபம் வரத்தான் செய்கிறது’ ன்னு ஒரு கவிதை. தூங்கி விழித்து/மண்ணில் உருண்டு புரண்டு/ சண்டையிடும் மழலைகளைக் காணும் போதெல்லாம்/ கோபம்வரத்தான் செய்கிறது/ சண்டையே போடாத அக்காவின் மேல்! -அந்த சண்டையே போடாத அக்காவின் மேல்ங்கறதுலதான் ஒரு பன்ச், நல்ல ஒரு ரசனை இருந்தது. அதேபோல ‘அன்பைப் போல’ன்னு ஒரு கவிதை... எவர் தடுப்பினும்/வழியிலேயே நின்றுவிடப் போவதில்லை மழை/ உன்மீதான என் அன்பைப் போல! மழைய நாம எல்லாம் பாத்துக்கிட்டுத்தான் இரு‌க்கோம். அதை காதலோட கம்பைல் பண்ணி... மழை பெய்யறப்ப என்னதான் தடுத்தாலும் நிக்காதுல்ல...  அந்த அன்பைச் சொல்ற தாட் நல்லா இருந்துச்சு.

இன்றைய விஞ்ஞான முன்னேற்றத்துல எதுவுமே பழைய சட்டை போட்டுட்டிருக்கற புது அம்சம். எதுவுமே பழசோட தொடர்ச்சி இல்லாம இல்ல. முந்தி கையெழுத்துப் பத்திரிகைன்னு ஒண்ணு நடத்தினோம். அப்பல்லாம் பத்திரிகைகள் ரொம்பக் கம்மி. நான் எழுத வந்தப்போ.... 77ல என் முதல் சிறுகதை! 77ல ஒரு நாலு, அஞ்சு பத்திரிகைதான். குமுதம், விகடன், கல்கி, கலைமகள்னு நாலைஞ்சு பத்திரிகைதான். இன்னிக்கு மாதிரி 50, 60ன்னு அந்த அளவுக்குல்லாம் இல்ல. ஸோ, அன்னிக்கு இருந்த எக்கச்சக்கமான எழுத்தாளர்கள்லாம் இந்தப் பத்திரிகைகள்லதான் எழுத முடியும். எல்லாருமே வெகுஜனப் பத்திரிகைகள்ல, பிரபல பத்திரிகைகள்ல எழுத முடியாதில்லையா? அப்ப தன்னுடைய திறமையை, தன்னுடைய படைப்பை, தன் கற்பனை நமைச்சலை வெளிப்படுத்தறதுக்கான ஒரு வழியா அந்தக் காலகட்டத்துல இருந்தது கையெழுத்துப் பத்திரிகை. எட்டு பக்க பேப்பரை எடுத்து கட் பண்ணி, அதுலயே ஒரு கார்ட்டூன், ஜோக்னு பத்திரிகை மாதிரியே ரெண்டு மூணு பேர் எழுதி, அதுக்கு ஒரு எடிட்டர், ஒரு சப்எடிட்டர், அதுக்கு ஒரு ஆர்ட்டிஸ்ட்ன்னுட்டு அது ஒரு ப்ரைவேட் சர்குலேஷன்- ஒரு 25 பேருக்கு, 50 பேருக்கு. அந்த மாதிரி இருந்தது.

அதனுடைய ஒரு நீட்சி... அதனுடைய மிகப்பெரிய வளர்ச்சியின் ஒரு பகுதிதான் இந்த வலைப்பதிவுகள்! யோசிச்சுப் பாத்தா ஆச்சரியமாக்கூட இருக்கு. ஒரு நூறு வருஷத்துல விஞ்ஞானம் செய்திருக்கற ஒரு தாவல்! பல நூற்றாண்டுகளுக்கு முன்னால வாழ்ந்தவர்கள் இதையெல்லாம் அனுபவிக்காமயே போய்ட்டாங்களேங்கற ஒரு ஆதங்கம்கூட எனக்கு உண்டு. பொன்னியின் செல்வன்ல வந்தியத்தேவன் ஒரு ஓலைய எடுத்துக்கிட்டு ஒரு பாகம் பூரா போயிட்டிருப்பான். குந்தவை தந்த ஓலையக் குடுக்க ரெண்டாவது பாகம் வரை ஓடிட்டிருப்பான். இன்னிக்கு மாதிரி ஒரு ஸ்கைப் கால் இருந்திருந்தா... அருள்மொழிகிட்ட வந்தியத்தேவன் என்ன, குந்தவையே பேசியிருப்பா. அதுக்கு நடுவுல ஒரு தூதுவன் எதுக்கு? நல்லா யோசி்சசுப் பாத்தீங்கன்னா... அவங்க இழந்தையெல்லாம் நாம எவ்வளவு அடைஞ்சிருக்கோம்னு புரியும். நானே அனுபவிச்சிருக்கேன்.

ட்ரங்க கால்! பட்டுக்கோட்டையில எஸ்.டி.டி. வர்றதுக்கு ரொம்பக் காலம் ஆச்சு. ட்ரங்க் கால் புக் பண்ணிதான் பேசணும். போஸ்ட் ஆபீஸ் போய் எழுதிக் குடுக்கணும். ஏற்கனவே எழுதிக் குடுக்க ஆறேழு பேர் வரிசைல நின்னுட்டிருப்பான். ஏழாவது ஆளா, காரைக்குடில இந்த எண்ணுன்னு எழுதிக் குடுத்துட்டு உக்காந்திருக்கணும். அவங்கல்லாம் முடிக்கற வரைக்கும் எப்ப கூப்பிடுவாங்களோன்னு உக்காந்திருக்கணும். காரைக்குடி கால் புக் பண்ணிங்களா, இந்தாங்க பேசுங்கன்னு தந்ததும் ஹலோ அங்க நாராயணன் இருக்காருங்களான்னு கேட்டா, அவர் வெளில போயிருக்காருங்களேன்னு டொக்னு வெச்சுடுவாங்க.அவர் வெளில போயிருக்காருன்னு தெரிஞ்சுக்கறதுக்கு ரெண்டு மணி நேரம் உக்காந்திருக்கணும். அது ஒரு காலகட்டம் அப்படி இருந்திருக்கு. இன்னிக்கு விஞ்ஞானம், எலக்ட்ரானிக் மீடியா தந்திருக்கற வாய்ப்புகள் எவ்வளவு!

இங்க மூத்த பதிவர்கள்ன்னு அறிமுகப்படுத்தி, அவங்களையெல்லாம் கவுரவிச்சாங்களே... ரொம்பப் பெருமையாகவும், நெகிழ்ச்சியாவும் இருந்தது. அவங்கள்ல ஒருத்தர் பேசும்போது சொன்ன மாதிரி, ரிடையராயிட்டோம், வாழ்க்கையின் ஓய்வான ஒரு பகுதி, சும்மா பேப்பர் படிச்சுக்கிட்டு, வாக்கிங் போயிட்டு, வீட்டுக்கு சின்னச் சின்ன வேலை பண்ணிட்டு, பேரன் பேத்திகளைக் கொஞ்சிட்டு இருந்திடலாம்னு இல்லாமல்... இன்றைய இளைஞர்களோட போட்டி போடற விதமா... இன்னும் சொல்லப் போனா இந்த மூத்த பதிவர்கள் இளைஞர்களை விட பத்து மடங்கு பாராட்டப்பட வேண்டியவங்க. ஏன்னா, இளைஞர்கள் அனுபவத்தை இப்பதான் அனுபவிக்க ஆரம்பிச்சிருக்காங்க. சிந்தனையும் கற்பனையும்தான் இவங்க பதிவுல அதிகம் இருக்கும். ஆனா, முதியவர்களோட பதிவுகள்லாம் அனுபவச் சுரங்கங்கள்! அவை கிடைக்காது, கிடைக்கவே கிடைக்காது. இன்னிக்கு யாரும் உக்காந்து கேக்கறதுக்குத் தயாரா இல்ல. இன்னிக்கு பல வீடுகள்ல வயசானவங்களோட பிரச்சனை என்னன்னா... ஒரு அஞ்சு நிமிஷம் எனக்கு ஒதுக்க மாட்டியா? யாரும் உக்காந்து பேசத் தயாரா இல்ல. ஒண்ணு கம்பெனிக்கு போகணும், வேலைக்குப் போகணும், ஸ்கூலுக்குப் போகணும், மத்த நேரத்துல அவங்களோட ஸ்பெஷல் இன்ட்ரஸ்ட், கேம்ஸ்க்கு போகணும், கராத்தே போகணும், தன்னை வளர்த்துக்கப் போகணும்னு எல்லாரும் ஆக்குபைடா இருக்காங்க.

ஸோ, இது இந்த முதியவங்களுக்கு கிடைச்சிருக்கற மிகப் பெரிய வரப்பிரசாதம். நீ வீட்ல கேக்க வேணாம்டா, லட்சம் பேர் வெளில கேக்கறான், போ... என்னுடைய எண்ணங்களை, என்னுடைய அனுபவங்களை படிக்கறதுக்கும், ரசிக்கறதுக்கும், பின்னூட்டம் போடறதுக்கும் நீ இல்ல... அறிமுகம் இல்லாத எவனெவனோ இருக்கான் -அப்படிங்கற நம்பிக்கையை அவங்களுக்குக் குடுத்திருக்கற இடம் இந்த வலையுலகம். அப்படித்தான அதை நான் பாக்கறேன். ரெண்டு மூணு ஜெனரேஷன் தாண்டி வந்தப்புறம் ஐக்யூ லெவல்ங்கறது இன்னிக்கு மாறி இருக்கு. ஒவ்வொரு ஜெனரேஷனுக்கும் அது அதிகரிச்சிட்டேதான் போகுது. ஒரு 20, 30 வருஷத்துக்கு முன்னாடி இருந்த ஐக்யூ லெவல் இன்னிக்கு இல்ல. இன்னிக்கு உள்ள ஐ க்யூ லெவல் வேற. திரைப்படம்னு எடுத்துக்கிட்டாக் கூட பத்து வருஷத்துக்கு முன்னாடி படத்துக்கான ட்ரீட்மெண்ட்டுங்கறது வேற, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி‌ வேற, இன்னிக்கு ட்ரீட்மெண்ட் வேற.. இப்படி மாறுது. யாருக்காக தயாரிக்கிறோமோ அந்த ஆடியன்ஸ் மாறுறாங்க. அந்த மாறுதலுக்கேற்றபடி நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படி மாத்திக்கிற அப்டேஷன்ங்கறது ஒவ்வொரு மனிதனுக்கும் இன்னிக்கு தே‌வைப்படுது.

எங்கம்மால்லாம் செல்போனை தொடறதுக்கே தயங்கிட்டிருந்தாங்க. அவங்களுக்கு அந்த செல்போனை எப்படி இயக்கணும்னு கத்துக் கொடுத்ததுக்குப் பிறகு யாரையுமே டிபெண்ட் பண்ணாம, கிடைச்ச நேரத்துல மகன்களுடனும், மகள்களுடனும் பேசிட்டிருந்தாங்க. அவங்களோட கடைசிக காலத்துலல்லாம் அந்த செல்போன்ல பேசிட்டே இருந்தாங்க. அப்படி தன்னை நவீனப்படுத்திககறதுக்கு இன்னுமே நிறையப் பேர் தயாரா இல்லை. கம்ப்யூட்டர்ன்னா அது ஏதோ தொட்டா ஷாக் அடிச்சுடும்னு நினைக்கறவங்கல்லாம் இருக்காங்க. வலைப்பதிவர்களாகிய உங்களோட நோக்கம்ங்கறது அவங்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தறதா இருக்கணும்னு நினைக்கிறேன். நீங்கள் உங்களுடைய அனுபவங்‌களையும், திறமைகளையும் இதுல வெளிப்படுத்தறதைத் தவிரவும் மத்தவங்களை இதுல ஈடுபடுத்தறதுக்கு என்ன பண்ணப் போறீங்க? அதற்கான சிந்தனைகளை யோசிக்கணும், அதற்கான வழிமுறைகளை யோசிக்கணும். கேன்வாஸிங் ஃபார் திஸ் மீடியா. நான் சொல்றது தனிப்பட்ட முறையில இந்த வலைப்பதிவைப் படிங்க, அந்த வலைப்பதிவைப் படிங்கன்னு நான் சொல்லலை.

வலைப்பதிவுங்கற ஒரு விஷயம் எதிர்காலத்துல ஆளும். இப்ப நாம பேப்பர்லெஸ் சொஸைட்டியை நோக்கித்தான் போயிட்டிருக்கோம். ரயில்வேயில கூட உங்க டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுக்காதீங்க, மொபைல்ல எடுத்துட்டு வாங்க, அது போதும்ங்கறாங்க. ஏன்னா பிரிண்ட் அவுட் எடுககறதை நிறுத்தினீங்கன்னா வருஷத்துக்கு இவ்வளவு பேப்பர் குறையும்கறாங்க. இங்க கூட ஒருத்தர் மொபைல்லதான் எழுதிட்டு வந்து படிச்சாரு. அப்படிதான் போயிட்டிருக்கு. அப்படி பேப்பர்லெஸ் சொஸைட்டில எலக்ட்ரானிக்ஸ்ல கிடைக்கக் கூடிய ஒரு புதிய தளம், அந்த புதிய தளத்தோட முதல் விழாவையே இன்னிக்குதான் ஆரம்பிச்சிருக்கீங்க. இது மூலமா ஒரு நல்ல விஷயத்தை எப்படி பொதுமக்களுக்கு பரப்பப் போறீங்க? ஏன்னா... ஆல்ரெடி ப்ளாக்கர்ஸ்னாலே ஒரு தனி மரியாதை இருந்துட்டிருக்கு.

திரைத் துறையைப் பொறுத்தவரைக்கும் கேபிள் சங்கர் என்ன விமர்சனம் எழுதறாருன்னு எத்தனை பேர் எதிர்பாத்துட்டிருக்காங்க தெரியுமா? ஜாக்கி சேகர் என்ன எழுதறார்னு பாக்கறாங்க. குறிப்பிட்டு பத்து பேரை... ஏன்னா பத்திரிகையில வந்து, அவங்க படம் பார்த்து எழுதறதுக்கே டைமாகும். இவங்க எப்பப் படம் பாக்கறாங்கன்னு தெரியலை. எல்லாப் படத்துக்கும் உடனே விமர்சனம் எழுதிடறாங்க. முந்திக்கறாங்க. இதெல்லாம் எழுதறது ‘என்கிட்ட திறமை இருக்கு. இதைப் பார்’ன்னு காட்டக்கூடிய விஷயம் இல்ல. ‘இது பதிவு, இது ஒரு அனுபவம், இது நான் கேட்டது, இது நான் உணர்ந்தது’ அப்படின்னு அந்தப் பதிவுக்கு கிடைக்கிறது நல்ல ஒரு மேடை.

நாம உடனே படிச்சுடறோம். குமுதத்துக்கோ, விகடனுக்கோ கதை அனுப்பிட்டு, அது ஆறு மாசம் கழிச்சு ஒரு குறிப்போட ‘தங்கள் கதையை பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம், தொடர்ந்து எழுதிக் கொண்டிருங்கள்’ன்னு குறிப்போட வரும். அந்த ஸ்லிப்பை பாக்கறதுக்கே சந்தோஷமா இருக்கும்- ஆறு மாசம் கழிச்சு! இது உங்களுக்கு நீங்களே அமைத்துக் கொள்கிற மேடை! உங்களுக்கு நீங்களே எழுதிக் கொள்கிற ஒரு புத்தகம்! அப்படியொரு வாய்ப்பு இந்தக் காலகட்டத்துல கிடைச்சிருக்கு. இனி இந்த வலைப்பதிவுங்கற துறையை இன்னும் பெரிசா கொண்டு சென்று சேர்க்கணும்னு உங்களை கேட்டுக்கறேன். அதற்கான வழிமுறையை யோசிக்கற கூட்டங்களாக அடுத்தடுத்த கூட்டங்கள் இருக்கணும். நிறையப் பேருக்கு இந்த டெக்னிகல் ‘நோ ஹெள’  தெரியாம இருக்கலாம். அவங்களுக்கு ஒரு பயிற்சி கொடுக்கணும். நான் எப்படி ப்ளாக்குக்குள்ள வரணும், புதுசா துவங்கணும்னு நினைக்கறாங்கன்னா, நீங்க அவங்க வீட்டுக்கே போய் சொல்லிக் கொடுக்கலாம். அதற்கு ஒரு கமிட்டி அமைக்கலாம். இதெல்லாம் உங்களை வளர்த்துக்கறதுக்கு ஒரு அடுத்த கட்டமாக எடுத்துக்கணும்னு நான் கேட்டுக்கறேன்.

அதைத் தாண்டி, எல்லா விஷயத்துக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கு. ஒரு அணுகுண்டு கண்டுபிடிச்சா அதுக்கு ஒரு பயன்பாடு ஒரு பக்கம்னா, அணுகுண்டோட அழிவைப் பத்தி சொல்லவே வேண்டியதில்லை. அதுமாதிரி... இதுல உள்ள மைனஸ்ன்னு பாக்கறப்ப, நான் என்ன ஃபீ்ல் பண்றேன்னா... தனி நபரைத் தாக்கறதுக்கான ஒரு களமா தயவுசெய்து இதைப் பயன்படுத்தாதீங்க. இதை அதற்கான ஒரு மேடையாகப் பயன்படுத்தறது அநாகரீகம்னு நான் நினைக்கறேன். நான் சில வலைகள்ல பாத்திருக்கேன். அதுவரைக்கும் நல்ல விஷயங்கள் வந்திருக்கும். ஒரு தனிநபரைக் குறிப்பிட்டு ஒரு நபரை விமர்சனம் பண்றதுக்காகப் பயன்படுத்தறாங்க. படைப்பை விமர்சியுங்கள்... படைப்பாளியை விமர்சிக்காதீர்கள்!  ஏன்னா எந்த ஒரு படைப்பாளியையும் தனி மனுஷனா நீங்க அணுகிப் பார்த்தால் அவன்கிட்ட குற்றம் குறைகள் இருக்கும். கண்ணதாசன் அவருடைய படைப்புகளுக்காக மட்டுமே மதிக்கப்படுகிறார்; தனிப்பட்ட வாழ்க்கையினால அல்ல!

அதுமாதிரி நான் கவனிச்ச இன்னொரு விஷயம் என்னன்னா... ஒரு பத்திரிகைக்கு படைப்பு அனுப்பினீங்கன்னா அங்க எடிட்டர்னு ஒருத்தர் இருக்கார். அந்த எடிட்டர் ஆட்சேபமான ஒரு விஷயத்தை, அன்பார்லிமென்ட்ரியான வார்த்தைகளை எடிட் பண்றதுக்குத்தான் அவர் உக்காந்திருக்கார். அதுதான் அவர் வேலை. ஒரு செய்தி மக்களுக்குப் ப‌ோயச் சேருகிற போது இப்படித்தான் போகணும்னு ஒரு வரைமுறை -சென்சார்ஷிப்- இருக்கு. இங்க சென்சார்ஷிப்ங்கறதை நீங்களே வகுத்துக்கணும். ஏன்னா, இதுக்கு இல்லை. அப்படி இதுக்கு இல்லைங்கறப்ப ஒரு சுய கட்டுப்பாடு, சுய சென்சார்ஷிப் - ஒரு நியாயம் - வேணும். சில தளங்கள்ல அன்பார்லிமென்ட்ரியான வார்த்தைகள் வருது. பெண்கள் எப்படிப் படிக்கறது? சொல்லுங்க... நீங்க இதுக்கு ‘யதார்த்தமா பேசறதைதானே எழுதறேன். யதார்த்தமான நிகழ்வுதானே’ன்னு சப்பைக்கட்டு கட்டாதீங்க. டீசன்ஸி லெவல்ன்னு ஒண்ணு இருக்கு. ‘‘இது என் பக்கம். இங்க என்ன வேண்டுமானாலும் எழுதுவேன்’’ங்கற ஒரு அலட்சியப் போக்கு வேண்டாம். கூடிய சீக்கிரத்துல உங்களைப் புறக்கணிச்சுடுவாங்க.  ‘இவர் இப்படி ஒரு வலைப்பதிவு எழுதறார். போய்ப் படி’ன்னு மத்தவங்க சொல்லும்படியாக உங்க வலைப் பக்கங்களை அமைச்சுக்கங்க. அந்த ஒரு பண்பாடு, நாகரீகம் வேணும்.

ஒருவனோட முகத்தைப் பார்த்ததும், அவன் பேச ஆரம்பிச்சதும் எப்படி அவங்க மேல ஒரு மதிப்பீடு வருதோ... அதைப் போல உங்கள் வலைப் பக்கம், உங்களைப் பற்றிய அடையாளம் காட்டுகிற ஒரு விஷயமா இருக்கு. அதை நீங்க மறந்துடக் கூடாது. நீங்க என்ன பதிவு பண்றீங்களோ, அதை வெச்சுத்தான் உங்க மேல மரியாதை இருக்கும். உங்கள் மேல ஒரு மதிப்பு- ஒரு கூட்டத்துல பாக்கறப்ப, ‘இவரா... இப்படி எழுதிட்டிருப்பாரே... இவர்தானே’ அப்படின்னு சந்தோஷத்தோட தேடி வந்து கை குடுக்கற மாதிரி இருக்கணும். ’இவரா... இவரைப் பாக்கவே கூடாது’ன்னு முகத்தைத் திருப்பிட்டுப் போகிற மாதிரி உங்க வலைப்பக்கத்தை அமைக்காதீர்கள்.

அப்புறம்... வலைப்பதிவுகளோட அருமை வெளியில நல்லாப் பரவிட்டிருக்குங்கறதுக்கு ஒரு சாம்பிள் என்னன்னா, இன்னிக்கு எந்தப் பத்திரிகைய எடுத்துக்கிட்டாலும் வலைப்பதிவுகள்லருந்து சில பகுதிகளை எடுத்துப் போடாமல் செய்யவே முடியாது. அந்த மாதிரி ஒரு கட்டத்துக்கு வந்துட்டாங்க. ‘வலையில் சுட்டவை’ ‘வலையில் எடுத்தவை’ன்னு பத்திரிகைல எழுதறவன் குறைஞ்சு போயிட்டான், இங்க எழுத ஆரம்பிச்சுட்டாங்கறதால நல்ல விஷயங்களைத் தேடறதுக்கு இவங்களே (பத்திரிகையாளர்கள்) பாக்க வேண்டியதா இருக்கு. பத்திரிகைகள்ல பாத்தா ஃபேஸ் புக்லருந்து, ட்விட்டர்லருந்து எடுக்கற மேட்டர்கள் வரிசையா இருக்கும். இனி யார் புதுசா பத்திரிகைய ஆரம்பிச்சாலும் ஜோக் போடறது, கவிதை போடறது மாதிரி, வலைப்பதிவுகள்லருந்து திரட்டி எடுத்த மேட்டர்களைப் போடறதும் ஒரு தவிர்க்க முடியாத அம்சமா மாறிடுச்சு. அந்த மாதிரி கவனிக்க வெச்சிருக்கீங்க. அது ஒருவரோட செயல் இல்ல... உங்க அத்தனை பேரோட ஒரு கூட்டு முயற்சி. அத்தனை பேரோட செயல்பாடுகள்தான் இந்தப் பக்கம் திரும்ப வெச்சிருக்கு. லட்சக்கணக்குல விக்கற பத்திரிகைகள்லாம் உங்களைத் தேடி வந்து மேட்டர் எடுத்துப் போடறாங்கன்னா, அது உங்களோட வலிமையை நீங்கள் புரிஞ்சுக்க வேண்டிய நேரம்.

அப்புறம்... இந்த சினிமா விமர்சனம் உடனுக்குடனே பண்ணிடறாங்கன்னு பாராட்டிச் சொன்னேன். அதுல சில விமர்சனங்கள் நடுநிலையா இருக்கறதில்லை. அதில நிறைய ஒரு சார்பு நிலை இருக்கு. சினிமா விமர்சனம்லாம் எல்லாரும் பண்ணியே ஆகணும்கற கட்டாயம்லாம் ஒண்ணும் கிடையாது. அதை பண்ணினாத்தான் கவனிக்கப் படுவோம்கற அவசியமும் கிடையாது. அதனால சினிமா விமர்சனம் எழுதறதுன்னு முடிவு பண்ணினால், சினிமா ரசனையுடன், சினிமாவைத் தெரிந்து எழுதுங்கள். சும்மா நானும் எழுதணும்னு எழுதாதீங்க. பல பதிவுகளை நான் படிச்சுட்டிருக்கேன் தொடர்ந்து படிக்கலைன்னாக் கூட ராண்டமா பாத்துட்டிருக்கேன். அப்படி கவனிச்சதுலதான் கேபிள் சங்கரை ‘ஊஞ்சல்’ இதழ்ல வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தணும்னு கேட்டுக்கிட்டேன். அவரும் 30, 40 பேரை அவங்க தளத்தின் பேரோட, தளத்திலுள்ள சிறப்பான‌ ஹைலைட்ஸைத் தொகுத்து அற்புதமா பண்ணிக் கொடுத்தாரு. அதெல்லாம் ஒரு ரெகக்னிஷன்தான். அதனால... சினிமா விமர்சனம்னு வரும்போது அதை முழுமையாக, ப்ளஸ் மைனஸ்களோட நடுநிலையா விமர்சனம் பண்ணுங்க.

வலையில நல்ல பல தெறிப்புகளை நான் பாக்கறேன். நான் பாத்த தளத்துலருந்து ஒரு குட்டிக் கதைய இங்க ‌சொல்றேன். ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்‌டோர்ஸ்க்கு ஒருத்தன் வர்றான். அவன் ‘அரைகிலோ பட்டர் வேணும்’னு கேக்கறான். விற்பனையாளன் பாத்துட்டு ‘ஒரு கிலோ பட்டர்தான் இருக்கு’ங்கறான். ‘இல்ல, எனக்கு அரைகிலோதான் வேணும்’கறான் அவன். ‘இல்லங்க, ஒரு கிலோ பாக்கெட்டாதான் இருக்கு. அதைப் பிரிக்க முடியாது அரைகிலோ தீர்ந்து போயிட்டதால, ஒரு கிலோ வேணும்னா வாங்கிக்கங்க’ங்கறான். ‘நான் கஸ்டமர். என்னை ஸாடிஸ்பை பண்ண வேண்டியது உன் கடமை. உன் மேனேஜரைக் கேளு. நான் ரெகுலரா வாங்கிட்டிருக்கேன். எனக்கு அரை கிலோதான் வேணும்’னு பிடிவாதம் பிடிக்கறான். சேல்ஸ்மேனுக்கு என்ன பண்றதுன்னு தெரியல. நேரா மேனேஜர்கிட்டப் போறான். ’’சார், ஒரு சாவுகிராக்கி, லூசு... ஒரு கிலோ பட்டர் இருக்கு, வாங்கிக்கோன்னா அரை கிலோ பட்டர்தான் வேணும்னு பிடிவாதம் பிடிக்கிறான்’’ அப்படின்னு சொல்லிட்டிருக்கும் போது பாத்தா, அந்த கஸ்டமர் பின்னாடியே வந்து நிக்கிறாரு. அவரைப் பாத்ததும் என்ன பண்றதுன்னு தெரியாம ஒரு செகண்ட் திகைச்சு்ட்டு, ‘‘அப்படிப் பண்றான் ஸார் ஒருத்தன். ஆனா இந்த ஜென்டில்மேன் இவர் அரை கிலோ வாங்கிக்கறேங்கறாரு. இப்ப நான் என்ன பண்ணட்டும்?’’ன்னு சொன்னான். ‘‘அப்புறம் என்னய்யா... இந்த ஜென்டில்மேன்தான் அரைகிலோ வாங்கிக்கறேங்கறாருல்ல... பிரிச்சுக் கொடுத்துடு’’ன்னாரு மேனேஜர்.

பிரிச்சுக் கொடுத்து அனுப்பினதும் அவனைக் கூப்பிடறார் மேனேஜர். ‘‘பரவால்லப்பா... நீ அந்த கஸ்டமரைப் பத்தி கமெண்ட் அடிச்சுட்டே. பின்னாடி அவரைப் பார்த்ததும் சடார்ன்னு பேச்சை அப்படியே மாத்திட்டியே. வெரிகுட்! நீ எந்த ஊர்லருந்து வர்றப்பா?’’ன்னு கேட்டார். ‘‘நான் மெக்ஸிகோலருந்து வர்றேன் ஸார். நிறைய ஃபுட்பால் டீம்களுக்கும், நிறைய ப்ராஸ்டிட்யூட்ஸ்க்கும் புகழ்பெற்ற மெக்ஸிகோவுலருந்து நான் வர்றேன் ஸார்’’ன்னான். மேனேஜர் முகம் சுருஙகிப் போச்சு. ‘‘என்ன ஸார்?’’ன்னான். ‘‘என்னய்யா நினைச்சுட்டிருக்க? என்னையே கிண்டலடிக்கிறியா? என் வொய்ஃப் மெக்ஸிகோவைச் சேர்ந்தவ. தெரியமா?’’ன்னார் கோபமா. அவன் சட்னு, ‘‘அப்படியா ஸார்? எந்த ஃபுட்பால் டீம் அவங்க’’ன்னு கேட்டான். அங்கயும் தன் ஸ்மார்ட்னஸ்ஸைக் காமிச்சான்கறதுதான் விஷயம்.

அந்த அளவுக்கு ஐக்யூ உள்ளவங்கதான் இன்னிக்கு இருக்கறாங்க. அந்த மாதிரி ஐக்யூ இருக்கறவங்க கிட்டதான் நீங்க வலைப்பதிவு எழுதிக்கிட்டிருக்கீங்க. அதனால, யார் படிக்கறாங்கங்கறதை மைண்ட்ல வெச்சுக்கிட்டு, பொறுப்புணர்ச்சியோட தொடர்ந்து செயல்படுங்கள். வாழ்த்துக்கள். என்னை அழைத்ததற்கு நன்றி! வணக்கம்!

73 comments:

  1. அருமை முழுதும் வாசித்தேன் ஒரே மூச்சில்.
    மிக்க மிக்க நன்றி.
    வேதா. இலங்காதிலகம் (came from FB)

    ReplyDelete
    Replies
    1. மிகப் பெரியதாய் அமைந்த இந்தப் பதிவையும் முழுமையாக வாசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  2. Really superb post. You have done an excellent job of producing rather reproducing the speech of PKP in a typical manner and while reading it, I just felt as if I am watching him live. Suvai Kuraiyamal kothatharkku mikka nanri.

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட். அவர் பேசினதை மறுஒளிபரப்புதான் செஞ்சிருக்கேன். இந்தக் கருத்துக்களை சுவை குறையாம தந்திருக்கேன்ற உங்க பாராட்டு மிக மகிழ்வைத் தருகிறது. மிக்க நன்றி நண்பரே.

      Delete
  3. 'ஹைலைட்' செய்யப்பட்ட கருத்துக்கள் மிகவும் அருமை... பலரும் அறிந்து கொள்ள உதவும்... வாழ்த்துக்கள்...

    பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி சார்... (TM 3)

    ReplyDelete
    Replies
    1. நான் ரசித்த கருத்துக்களை ஹைலைட் செய்ததை நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி தனபாலன். உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  4. சிறப்பு அழைப்பாளராக போனோமா வந்தோமான்னு இல்லாம, போகும் இடத்தை பத்தி தெரிஞ்சுவச்சுகிட்டு அனைவருக்கும் பயனுள்ள வகையில் ஒரு நீண்ட உரையாற்றியிருக்கிறார் திரு.பி.கே.பி அவர்கள்! உரையிலுள்ள பல கருத்துக்கள் நாம் அனைவரும் பின்பற்ற வேண்டியவை!

    திரு.பி.கே.பி அவர்கள் உரையை நேரலையில் கொஞ்சம் தான் பார்த்தேன் (அலுவலகத்தில் இருந்ததால் அவ்வளவுதான் பார்க்க முடிந்தது except bloggers introduction), உரையை இங்கு பதிவாக்கி தந்தமைக்கு நன்றி சார்!

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியாச் சொன்னீங்க. எந்த மேடைல என்ன பேசணும்னு தெரிஞ்சுக்கிட்டு சரியாப் பேசறவர்தான் என் நண்பர். நல்ல கருத்துக்களை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த ந்ன்றி.

      Delete
  5. அவருடைய அசத்தல் & அலசல் பேச்சு
    நம் வலைப்பதிவுலகத்திற்கு சூட்டப்பட்ட
    மணி மகுடம். அதை நாம் தக்க வைத்துக்
    கொள்வோம் என்றும்.
    சிறப்பான , தேவையான
    இத்தொகுப்பிற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அழகான கருத்தை நயம்பட உரைத்து மகிழ்வு தந்த தோழிக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  6. அற்புதமான சொற்புரை
    நிறைய பயனுள்ள விஷயங்களை சொல்லி இருக்கிறார்
    நேரலையில் கண்டேன் கேட்டேன்
    உங்கள் எழுத்தில் வாசித்தபோது ஆழமாய் பதிகிறது
    ஒவ்வொரு வார்த்தைகளும்

    பகிர்வுக்கு நன்றிகள் சார்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி நண்பா.

      Delete
  7. மிகவும் அருமையாக திரு பிகேபி சொல்லியதை எழுதி இருக்கிறீர்கள். உங்களது இந்த தகவலை என் தளத்தின் உங்கள் அனுமதியுடன் இணைக்க விரும்புகிறேன்.
    இணைப்பை மட்டும் கொடுக்கிறேன்.

    இன்று தான் பதிவர் விழா பற்றிய பதிவை என் 200 வது பதிவாகப் போட்டிருக்கிறேன்.

    உங்களை பதிவர் விழாவில் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
    அன்புடன்,
    ரஞ்ஜனி
    ranjaninarayanan.wordpress.com

    ReplyDelete
    Replies
    1. அனுமதி என்ன... உங்களுககு என்னிடமிருந்து எதை எடுத்துக் கொள்ளவும் பூரண உரிமை உண்டு. மிக்க மகிழ்ச்சி எனக்கு அதில். 200வதற்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். இதோ... வாழ்த்த அங்கயும் வர்றேன்.

      Delete
    2. அன்பு பால கணேஷ்,
      புலவர் திரு இராமானுசம், திரு கணக்காயர், வலைச்சரம் அன்பின் சீனா இவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். தயவு செய்து லிங்க் கொடுக்க முடியுமா?
      நன்றி,
      ரஞ்ஜனி

      Delete
    3. கீழ்க்கண்ட இமெயில் முகவரிகளில் நீங்கள் தொடர்பு கொள்ளலாம் அம்மா.
      Chenna sir : cheenakay@gmail.com
      Kanakkayan sir : amizhdhu@gmail.com
      Chennaippithan sir : mukkannan@gmail.com
      Pulavar Sa.Ramanujam sir : jram178@yahoo.co.in

      Delete
  8. Replies
    1. நல்ல பகிர்வென்று பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றிகள் ஸார்.

      Delete
  9. பகிர்வுக்கு நன்றிகள்...

    ReplyDelete
    Replies
    1. ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  10. அருமையான உரை.முழுவதுமாக கேட்டும்,வாசித்தும் விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. வாசித்தும் கேட்டும் மகிழ்ந்த தங்கைக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  11. அவரோட உரையை அப்படியே பதிவிட்டு அசத்தீங்க சார்...
    விழாவிற்கு வராதவங்க இதபடிச்சலே போதும்... நன்றிகள் சார்...

    படிக்க பொறுமை வேண்டும் சொல்றீங்க... அதைவிட நீண்ட உரையை அழகாக வரிவடிவம் கொடுக்க இன்னும் அதிகமாகவே பொறுமை வேண்டும் சார்....
    பதிவிற்கு மிக்க நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. உரையை ரசித்துப் படித்து என்னைப் பாராட்டி உற்சாகம் தந்த கருத்திட்ட சமீராவுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  12. நிறைய விஷயம் தெரிந்து கொண்டேன் சார் இந்த பதிவில் இருந்து... நன்றி சார்....

    ReplyDelete
    Replies
    1. நிறையத் தெரிந்து கொண்டு என்னைப் பாராட்டிய அன்புக்கு என் இதயம் நிறை நன்றிம்மா.

      Delete
  13. அவசரமா என்னால பதிவு போடமுடியவே முடியாது கணேஷா.. ஏன்னா பொக்கிஷம் இந்த பதிவு... நிறைய நல்ல விஷயங்கள் இருக்கு.... நிறைய அறிவுரைகள் இருக்கு... பட்டுக்கோட்டை பிரபாகர் சார் எத்தனை தெளிவா எத்தனை அருமையா பேசி இருக்கார். அவர் எத்தனை பண்புடையவர் இறுதிவரை இருந்துட்டு போவேன்னு சொல்லி இருக்காரே... இதை நிதானமாக படித்து நிதானமாக பதிவுகள் இடுகிறேன்பா.. இடையில் இந்த வார விடுமுறை இரண்டு நாட்கள் வர சிரமம் தான். ஆனாலும் முயல்கிறேன் கணேஷா...

    அற்புதமா அசத்திட்டீங்க என்று தான் சொல்வேன்... வார்த்தைகள் ஒவ்வொன்றும் வைரச்சிதறல் போல இருக்கு நீங்கள் பதித்தது...

    தொடர்வேன்.....

    பிரத்யேக அன்பு நன்றிகள் கணேஷா விழாவில் கலந்துக்கொள்ளாத எங்களுக்கும் இதன் இனிமையை ருசிக்க கொடுத்தமைக்கு....

    ReplyDelete
    Replies
    1. எப்ப டைம் கிடைக்குதோ அப்ப பொறுமையா வாங்க தோழி. இது உங்க இடம். ரசித்துப் படித்து பாராட்டினதுக்கு என் நன்றி.

      Delete
  14. நீங்க என்ன பதிவு பண்றீங்களோ, அதை வெச்சுத்தான் உங்க மேல மரியாதை இருக்கும். உங்கள் மேல ஒரு மதிப்பு- ஒரு கூட்டத்துல பாக்கறப்ப, ‘இவரா... இப்படி எழுதிட்டிருப்பாரே... இவர்தானே’ அப்படின்னு சந்தோஷத்தோட தேடி வந்து கை குடுக்கற மாதிரி இருக்கணும்.

    பகிர்வுக்கு நன்றி சார்

    எனக்கு பிடித்த வரிகள் இவை

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த வரிகளைக் குறிப்பிட்டுப் பாராட்டிய சரவணனுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  15. நேரமின்மை காரணமாய் உரையின் பாதியில் கிளம்பிவிட்டேன்...
    இப்போதுதான் முழுதாய் வாசித்தான்...
    நன்றி சார்,...

    ReplyDelete
    Replies
    1. முழுமையாக ரசித்துப் படித்துக் கருத்திட்ட நண்பர் மயிலனுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  16. பதிவர் திருவிழாவின் முத்தாய்ப்பாக நிகழ்ந்தேறிய திரு.பட்டுக்கோட்டை பிரபாகரின் சொற்பொழிவு, உற்சாகமூட்டுவதாக இருந்தது. மீண்டும் மீண்டும் இப்படியொரு வைபவத்தை நிகழ்த்திக்காட்டிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் கணேஷ்ஜி!

    ReplyDelete
    Replies
    1. பிகேபியின் சொற்பொழிவை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றியண்ணா.

      Delete
  17. அவர் பேசியதை அப்படியே பதிவாக்கியது பெரும் உதவியாக உள்ளது சார் ..
    தேவைப்படும் நேரங்களில் வந்து வாசித்துக்கொள்ளலால்ம் ... நன்றிங்க சர்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி அரசன்.

      Delete
  18. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. படித்து ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு மனமார்ந்த நன்றி.

      Delete
  19. யாராவது அவர் பேசியதை அப்படியே எழுதியிருப்பார்களே என்று தேடிக் கொண்டு இருந்தேன். வரிக்கு வரி படிக்கும் அளவுக்கு பேச்சு மொழியில் எதார்த்தமாகவே பேசியுள்ளார். நல்ல முயற்சி. உங்களுக்கு என் வாழ்த்துகள். வலைபதிவில் எழுதும் முக்கால் வாசி பேர்கள் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களுக்கு நன்றிகடன் பட்டவர்களாகவே இருப்பார்கள். இங்குள்ள வேலைப்பளுவில் வராமல் இந்த முறை வாய்ப்பு தவறிவிட்டது. கூகுள் ப்ளஸ் ல் பகிர்ந்துள்ளேன்.

    ReplyDelete
  20. கணேஷ் சார்,

    உங்கள் தளம் திறக்க மாட்டேன் என அடம்பிடிக்கிறதே ஏன்?

    பி.கே.பி சாரை அழைத்து வந்தது சிறப்பான ஒன்று என சுரேகாஜி பதிவில் உங்களுக்கு நன்றி சொல்லிவிட்டேன்.

    மிக நன்றாக பேசியுள்ளார்,அவரை ஒரு முறை தூரத்தில் இருந்து ஒரு திரைப் படவிழாவில் பார்த்துள்ளேன், இப்போது புகைப்படத்தில் இன்றும் அதே போல மார்க்கண்டேயனாக இருக்கிறார், எழுத்தாளர்களில் ஒரு சிவக்குமார் போல இருக்கு :-))

    என் வயதை விட அவரது எழுத்துலக வயசு கூட என்பதை வைத்துப்பார்த்தால் இதன் பொருள் புரியும்.

    ReplyDelete
    Replies
    1. நண்பா... இன்ட்லி தளத்தில் ஏதோ பிரச்னை என்பதால் தளம் திறக்க நேரம் ஆகியிருக்கிறது. பி.கே.பி. சாரின் பேச்சை ரசித்து அவருக்கு எழுத்துலக மார்க்கண்டேயன் (வெகு பொருத்தம்) என்று பட்டமும் கொடுத்திருக்கீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. மிக்க நன்றி.

      Delete
  21. உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..

    சகோதரர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் இந்த உரை பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும். நிகழ்ச்சிக்கு மகுடமாக அவருடைய உரை அமைந்தது என்றால் அது மிகையாகாது.

    எல்லாவற்றிற்கும் மேலாக இதனை எழுத்து வடிவில் கொண்டு வந்த உங்களின் உழைப்பு அற்புதமானது. புக்மார்க் செய்துக்கொண்டேன். மிக்க நன்றி சகோ.

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பதிவை புக்மார்க் செய்து மதிப்புத் தந்து படிக்கும் அன்பு நண்பரே... உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  22. சிறப்பான பகிர்வு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    குஷ்பாபிஷேகம்- ஓல்ட் ஜோக்ஸ்
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_30.html

    ReplyDelete
  23. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் ..ஆனதால்
    எண்ணியவற்றையெல்லாம் எழுதாது
    ஒவ்வொரு சொல்லினை நினையும்பொழுதும் அதற்கு எழுத்து வடிவம் தரும்பொழுதும்
    "வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொற் பயன் கோடல்
    மாட்சியின் மாசற்றார் கோள்"
    எனும் வள்ளுவனின் வாய்மொழியை நினைவுகொண்டு எழுதல் வேண்டுமென‌
    அவரது சொற்பொழிவு அமைந்திருந்தது
    என் போன்றவருக்கு மன நிறைவினைத் தந்தது எனச்சொன்னால்
    அது மிகையாகாது.

    சுப்பு ரத்தினம்
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. திருக்குறளை மேற்கோள் காட்டிய தங்களின் கருத்து எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. மிக்க நன்றி ஐயா.

      Delete
  24. கம்ப்யூட்டர்ன்னா அது ஏதோ தொட்டா ஷாக் அடிச்சுடும்னு நினைக்கறவங்கல்லாம் இருக்காங்க. வலைப்பதிவர்களாகிய உங்களோட நோக்கம்ங்கறது அவங்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தறதா இருக்கணும்னு நினைக்கிறேன்

    பளிச்சிடும் கருத்துகள்.. பாராட்டுக்கள்!

    ReplyDelete
  25. ஆழமான கருத்துடைய அருமையான
    பதிவர்கள் அனைவரும் எப்போதும் மனதில்
    இருத்துக்கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான
    சொற்பொழிவு பிரபாகர் சார் அவ்ர்களின் சொற்பொழிவு

    எனக்கே மீண்டும் ஒருமுறை கேட்கமுடிந்தால்
    நல்லது என்கிற எண்ணம் இருந்தது
    அனைவருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்
    அனைவரின் எண்ணத்தையும் மிகச் சரியாக் உணர்ந்து
    அந்த அருமையான சொற்பொழிவை பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற பல வகைகளில்
    தாங்கள் காரணமாக இருந்தாலும் சுவையான
    குழம்பில் உப்பு போல வெளிக்காட்டிக் கொள்ளாமல்
    தாங்கள் இருந்தது தங்கள் முதிர்ச்சியைக் காட்டியது
    தங்களுக்குஅனைத்து பதிவர்கள் சார்பாக மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  26. ஆழமான கருத்துடைய அருமையான
    பதிவர்கள் அனைவரும் எப்போதும் மனதில்
    இருத்துக்கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான
    சொற்பொழிவு பிரபாகர் சார் அவ்ர்களின் சொற்பொழிவு

    எனக்கே மீண்டும் ஒருமுறை கேட்கமுடிந்தால்
    நல்லது என்கிற எண்ணம் இருந்தது
    அனைவருக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்
    அனைவரின் எண்ணத்தையும் மிகச் சரியாக் உணர்ந்து
    அந்த அருமையான சொற்பொழிவை பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற பல வகைகளில்
    தாங்கள் காரணமாக இருந்தாலும் சுவையான
    குழம்பில் உப்பு போல வெளிக்காட்டிக் கொள்ளாமல்
    தாங்கள் இருந்தது தங்கள் முதிர்ச்சியைக் காட்டியது
    தங்களுக்குஅனைத்து பதிவர்கள் சார்பாக மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. குழம்பில் உப்பு... எப்படித்தான் வார்த்தைகள் இப்படி உஙகளுக்கு வசப்படுகின்றனவோ... அவரின் பேச்சை ரசித்து என்னையும் வாழ்த்திக் கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  27. அழகான பகிர்வு. கருத்து செறிந்த பி.கே.பி அவர்களின் முழு உரையையும் எங்களுக்குத் தந்ததற்கு மிக்க நன்றி கணேஷ்.

    நண்பர் மோகன் குமாரின் பதிவில் காணொளிகள் மூலம் பேசியதில் சிலவற்றை கேட்க முடிந்தது. இப்போது இங்கே இன்னும் படித்தேன்.

    வாழ்த்துகள் கணேஷ். தொடரட்டும் உங்கள் சுவையான பகிர்வுகள்.

    ReplyDelete
    Replies
    1. என நினைவுகளில் லிங்க் விட்டுப் போன சில இடங்களை நிரப்ப மோகன்குமாரின் காணொளி உதவியது. அவருக்கும் இப்போது இதை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கும் என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  28. அப்பாடி...பொறுமையா வாசிச்சேன் ஃப்ரெண்ட்.எத்தனை ஆசீர்வாதங்களும் பாராட்டுக்களும்.வாழ்த்துகள் !

    ReplyDelete
    Replies
    1. நீஈஈஈஈண்ட இந்தப் பதிவை பொறுமையா வாசிச்சு ரசிச்ச என் ஃப்ரெண்டுக்கு இதயம் நிறை நன்றி.

      Delete
  29. ஹையோ, எப்டிதான் இவ்வளவு பெருசையும் டைப் பண்ணீங்களோ? கை வலிச்சிருக்குமே! ஆனாலும் லைவ்ல கொஞ்சம் விட்டு விட்டுக் கேட்ட விசயத்தை இங்கே முழுமையாக வாசித்துவிட்டேன்! பதிவிட்டமைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  30. உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதிவு வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தேன் நினைத்தபடி மிக அருமையாக கொடுத்துவிட்டீர்கள். இது ஒரு பொக்கிஷம் ஆகும்

    ReplyDelete
    Replies
    1. இந்தப் பகிர்வை பொக்கிஷமாய் மதிக்கும் உங்களின் அன்பிற்கு மகிழ்வான என் நன்றி.

      Delete
  31. //நீ வீட்ல கேக்க வேணாம்டா, லட்சம் பேர் வெளில கேக்கறான், போ... என்னுடைய எண்ணங்களை, என்னுடைய அனுபவங்களை படிக்கறதுக்கும், ரசிக்கறதுக்கும், பின்னூட்டம் போடறதுக்கும் நீ இல்ல... அறிமுகம் இல்லாத எவனெவனோ இருக்கான் -அப்படிங்கற நம்பிக்கையை அவங்களுக்குக் குடுத்திருக்கற இடம் இந்த வலையுலகம். அப்படித்தான அதை நான் பாக்கறேன்.//

    உண்மை, இது மிகவும் உண்மை தான். ;)))))

    ReplyDelete
    Replies
    1. அவரின் கருத்தை ஆமோதித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  32. // ‘‘இது என் பக்கம். இங்க என்ன வேண்டுமானாலும் எழுதுவேன்’’ங்கற ஒரு அலட்சியப் போக்கு வேண்டாம். கூடிய சீக்கிரத்துல உங்களைப் புறக்கணிச்சுடுவாங்க. //

    இதுவும் உண்மை தான்.

    //நீங்க என்ன பதிவு பண்றீங்களோ, அதை வெச்சுத்தான் உங்க மேல மரியாதை இருக்கும். உங்கள் மேல ஒரு மதிப்பு- ஒரு கூட்டத்துல பாக்கறப்ப, ‘இவரா... இப்படி எழுதிட்டிருப்பாரே... இவர்தானே’ அப்படின்னு சந்தோஷத்தோட தேடி வந்து கை குடுக்கற மாதிரி இருக்கணும்.//

    சூப்பரான பேச்சு ! ;)))))

    ’இவரா... இவரைப் பாக்கவே கூடாது’ன்னு முகத்தைத் திருப்பிட்டுப் போகிற மாதிரி உங்க வலைப்பக்கத்தை அமைக்காதீர்கள். //

    மிகச்சரியாகவே சொல்லியிருக்கிறார்.

    பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல கருத்துக்களை ரசித்துக் குறிப்பிட்டு எனக்குத தெம்பளித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி ஐயா.

      Delete
  33. //இங்க சென்சார்ஷிப்ங்கறதை நீங்களே வகுத்துக்கணும். ஏன்னா, இதுக்கு இல்லை. அப்படி இதுக்கு இல்லைங்கறப்ப ஒரு சுய கட்டுப்பாடு, சுய சென்சார்ஷிப் - ஒரு நியாயம் - வேணும்.

    சில தளங்கள்ல அன்பார்லிமென்ட்ரியான வார்த்தைகள் வருது. பெண்கள் எப்படிப் படிக்கறது? சொல்லுங்க...

    நீங்க இதுக்கு ‘யதார்த்தமா பேசறதைதானே எழுதறேன். யதார்த்தமான நிகழ்வுதானே’ன்னு சப்பைக்கட்டு கட்டாதீங்க. டீசன்ஸி லெவல்ன்னு ஒண்ணு இருக்கு.//

    வெகு அழகாகவே சொல்லியிருக்கிறார். நமக்கு வாலிப வயதில் [15 முதல் 30 வயதுக்குள்] உள்ள பெண்குழந்தையோ அல்லது பிள்ளைக்குழந்தையோ இந்தப்பதிவைப் படிக்க முடியுமா? அவ்வாறு படிக்க நாம் அனுமதிக்க முடியுமா? என்று யோசித்துப்பார்த்து, அதற்கு OK என்றால் தாராளமாக அதைப் பதிவாகத்தரலாம். இல்லாவிட்டால் அதை முடிந்தவரை எடிட் செய்தே வெளியிட வேண்டும்.

    இதுதான் நமக்கு நாமே வைத்துக்கொள்ள வேண்டிய உண்மையான சென்சார் அளவுகோள்.

    நன்றி, ஐயா! இதை எல்லோரும் நேர்மறையாகவே எடுத்துக்கொண்டு, அதன்படி, பொறுப்புடன் பதிவு கொடுக்கட்டும்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
    Replies
    1. ஆம். நாம்தான் இதை நேர்மறையாக எடுத்துக் கொள்ள வேண்டும். நற்கருத்துரைத்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  34. அய்யோ எப்படிங்க இதெல்லாம் ரெக்கார்ட் பண்ணி எழுதினிங்களோ? அற்புதம்ங்க. மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. உங்க முன்னாடிதான இருந்தேன்... எங்க ரெக்கார்ட் பண்ணிணேன் தென்றல்? எல்லாம் மனசுலருந்துதான. மிக்க நன்றி.

      Delete
  35. ஒரு வார்த்தை விடாம அப்படியே போட்டிருக்கீங்க. பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் பாராட்டிய நண்பனுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  36. அற்புதமான உரையை அற்புதமா எழுதி இருக்கீங்க சார்... பின்னாடி ரெபர்ரன்ஸ்க்கு கண்டிப்பா யூஸ் ஆகும்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த சீனுவுக்கு மனம் நிறைந்த நன்றி.

      Delete
  37. ஒரு பேச்சாளரின் பேச்சை எந்த அளவுக்கு நுணுக்கமாக உன்னிப்பாக அக்‌ஷரம் பிசகாது கவனித்திருந்தால் இத்தனை அருமையான ஒரு தொகுப்பாக கொடுத்திருப்பீங்கன்னு யோசிக்கிறேன் கணேஷா... கிட்டதட்ட ஒரு ஹ்யூமன் ரிக்கார்டர் போல ஒரு வரி கூட விடாமல் பொறுமையாக மனதில் பதிந்திருந்த வார்த்தை கோர்ப்புகளை அருமையாக வடிவம் கொடுத்து இங்கே எங்களுக்கும் ரசிக்க கொடுத்திருக்கீங்க... அதுக்கு முதல்ல உங்களுக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள் கணேஷா....

    பிகேபி சார் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் உண்மையே.... மூத்த வலைப்பதிவாளர்களுக்கு மரியாதை, கவியரங்கம், வந்தோரை அன்புடன் வரவேற்றதோடு நிற்காமல் அடிக்கடி அவர்களிடம் சென்று ஏதேனும் தேவையா என்ற அன்பு உபசரிப்பு இதெல்லாம் முதல் முறை தான் காண்கிறேன் இப்படி.... அதிலும் பெண் வலைப்பதிவாளர்களுக்கு மதிப்பு கொடுத்து அரங்கத்தில் மது, சிகரெட் கூடாதென்றும், பெண் பதிவர்களின் அனுமதி இன்றி அவர்களை புகைப்படம் எடுக்கக்கூடாதென்றும் அன்பு வேண்டுகோள் விடுத்தது இன்னும் மதிப்பை கூட்டுகிறது....

    பிகேபி சார் உரையில் சொன்னது போல உலகம் முழுதும் நிறைந்த பதிவர்கள் எங்கிருந்தெல்லாமோ வந்து கலந்துக்கொண்டு இந்த மாநாட்டை சிறப்பித்தது பெரிய விஷயம்..... பிகேபி சார் எழுத்துக்கள் மட்டுமல்ல அவர் மனதளவிலும் பண்பு நிறைந்தவர் என்பதை அவரின் உரை சொல்லிவிட்டது.... அவர் வந்து கொஞ்சம் நேரம் இருந்துவிட்டு போய்விட வாய்ப்புகள் எடுத்துக்கொள்ளலாம் என்று சொல்லியும் இறுதிவரை இருந்து கவியரங்கத்தில் கவிதை வாசித்தோர்களைப்பற்றி அவர்கள் கவிதை வரிகளைப்பற்றி சிலாகித்து சொன்னதும்....

    மூத்தோர்கள் ரிட்டையர் ஆகிவிட்டோம் என்று வீட்டில் முடங்கி உட்காராமல் இளையோருக்கு வழிக்காட்டியாக இன்னும் சொன்னால் அதிகப்படி பதிவுகள் அத்தனையும் பொக்கிஷமாக நாம் பாதுகாக்கவேண்டிய பதிவுகள் என்றும் மூத்தோர்களின் அனுபவங்கள் நமக்கு வாழ்வியலை கற்றுத்தரும் வாழ்க்கைப்பாடங்கள் என்றும் பிகேபி சார் சொன்னது அத்தனையும் சத்தியமான வார்த்தைகள்....

    பிகேபி சாரோட அனுபவத்தையும் நம்முடன் பகிர்ந்துக்கொண்டது மிகச்சிறப்பு....

    பிகேபி சார் சொன்னது போல வீட்டில் முதியவர்கள் தன் அனுபவங்களை பேரன் பேத்திகளுடன் பகிர்ந்துக்கொள்ள ஆசையுடன் காத்திருப்பார்கள். மூத்தோர்களிடம் இருந்து நாம் கலாச்சாரம், கூட்டுக்குடும்பம், அன்பு, விட்டுக்கொடுத்தல், தைரியம், நம்பிக்கை, தெய்வபக்தி இப்படி எத்தனையோ விஷயங்களை எளிய வார்த்தைகளில் கதை போல சொல்லும்போது நாம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்... இப்படி வீட்டில் மூத்தோரிடம் நாம் கற்கும் பாடங்களை நம் சந்ததியினருக்கும் பகிரத்தரலாம்.... இப்படியே நம்முடைய ஜெனரேஷன் அன்பு தொடர்ச்சங்கிலியாக நீளும்போது வீட்டில் தொடங்கும் நல்ல சிந்தனைகள் எல்லாம் கல்வியுடனே சேர்ந்து பிள்ளைகள் மனதில் பதியும் கண்டிப்பாக.... பிகேபி சார் உரையை கேட்டப்பின் இனி நிறைய வீட்டில் மூத்தோர்களின் வார்த்தைகளை பொறுமையாக உட்கார்ந்து கேட்பார்கள் என்று தோன்றுகிறது. அவர்களுடன் உட்கார்ந்து பேசும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது...

    நல்லவை எல்லாம் அருமையான விஷயங்களாக தொகுத்துக்கிட்டே வரும்போது அதனுடைய இன்னொரு பக்கத்தையும் சொன்னது மிக அற்புதம்... தனி நபர் தாக்குதல் இருக்கக்கூடாது என்ற அருமையான விஷயம் தான் அது.

    அருமையான ஒரு கதையும் சொன்னார்.. ஒரு கிலோ பட்டர் கேட்டதற்கு அரைகிலோ தான் வேணும்னு அடாவடியாக நிற்கும் கஸ்டமரை கன்னாப்பின்னான்னு மேனேஜர்கிட்ட சொல்லப்போய் பின்னாடியே கஸ்டமர் இதெல்லாம் கேட்க சட்டுனு சாதுர்யமாக பேச்சை திசை திருப்பினது தான் வேடிக்கை... இந்த கதையைச்சொன்னது எழுத்துலகில் அனைவரும் படிப்போர் உள்ளனர். எழுதும்போது கவனமாக எழுதவேண்டும் என்று சொல்லி அதையும் அன்புடன் சொல்லி நிறைவாக முடித்தது மிக அருமை....

    பிகேபி சார் சொன்ன அத்தனையுமே எல்லோருக்குமே பயனுள்ள மிக அற்புதமான விஷயங்கள். பதிவர் மாநாட்டுக்கு வர இயலாதவர்கள் அனைவருமே படித்து ரசித்து பயன்பெற நீங்க இங்கே தந்தது மிக மிக சிறப்பு கணேஷா...

    பிகேபி சார் உரையை கேட்டதுடன் தன் மனதிலும் பதியவைத்து இங்கே எல்லோரும் படிக்கும் வண்ணம் சிறப்பாக தந்தமைக்கு அன்பு நன்றிகள் கணேஷா.. தங்களின் சிரத்தையும் உழைப்பையும் காணமுடிகிறது.....

    ReplyDelete
    Replies
    1. அவர் சொன்ன விஷயங்களில் முதியோர்களுக்காக பரிந்து பேசினதும். முதியோருக்கு நாம் நடத்திய பாராட்டு விழாவை ரசித்ததும் தான் முக்கியமானவை. பொறுமையாகப் படித்து எனக்காய் விரிவான கருத்திட்டு ஒரு பாட்டில் குளூகோஸ் குடிச்ச தெம்பை எனக்குள்ள விதைச்சுட்டீங்க தோழி. என் இதயம் நிறை நன்றி.

      Delete
  38. இன்றுதான் இந்த பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. திரு பி.கே.பி. அவர்களின் உரை மிகவும் ஸ்வாரசியமாக அவர் எழுத்துக்களைப் படிப்பது போலவே இருந்தது. (எழுதுவது ஒரு கலை என்றாலும், எல்லா எழுத்தாளர்களுக்கும் இவ்வளவு நன்றாகப் பேச முடியும் என்று தோன்றவில்லை.) ஒப்புக்கு வந்து இரண்டு வார்த்தை பேசிப் போகாமல், பேசவேண்டியதை நன்கு தயார் செய்து கொண்டு வந்து, தெளிவாக, கோர்வையாக, பாராட்டுகளும் புத்திமதிகளும் எதிர்காலத்திற்கான யோசனைகளும் கலந்து அழகாகப் பேசியிருக்கிறார். கடைசியில் குறிப்பிட்ட கதையும், மேற்கோள் காட்டிய கவிதைகளின் சிறப்புகளும் நன்று. நான் அவர் கதைகளை (எல்லாம் புத்திசாலித்தனமாகவும், லாஜிகலாகவும் இருக்கும்) ரசிப்பது போல், இந்த பேச்சையும் படித்து ரசித்தேன். உங்கள் பகிர்வுக்கு நன்றி. - ஜெ.

    ReplyDelete

தோள்ல தட்டிக் கொடுக்கறதோ... தலையில குட்டுறதோ... உங்க இஷ்டமுங்க! bganesh55@gmail.com க்கு மெயில் அனுப்பியோ... 90030 36166ல கூப்ட்டோ கூட தட்டி/குட்டி கொடுக்கலாங்க...!

  • RSS
  • Delicious
  • Digg
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube